Thursday, December 25, 2008

டியர் தேவ் ...!

டியர் தேவ் ...

இன்றோடு நீங்கள் ஊருக்குக் கிளம்பிப் போய் ஐந்து முழு நாட்கள் முடிந்தே விட்டன,இது வழக்கம் தான் ! ஆனாலும்...என்ன எப்போதுமே மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குள் திரும்பி விடுவீர்கள்,இந்த முறை என்னவோ பத்து நாட்கள் என சற்று நீண்ட பிரயாணமாகி விட்டது?!

கம்பெனி செலவில் டூர் என்ற பெயரில் நீங்கள் "டர்"(காஸ் டிரபிள் தான் வேறென்ன??) ஆகி வருவதை இன்றைக்கு நேற்றா நான் பார்க்கிறேன்?எனக்கு அது ஐந்தரை வருடப் பழங்கதை ஆயிற்றே?!

ஆரம்பத்தில் செல்ல அழுகையில் பிரிவுத் துயரை கண்ணீரில் கரைத்து காணமல் போகவைக்க முயன்றேன் ,அதற்கடுத்த வருடம் பாப்பு பிறந்ததும் அழுகை நின்றது மாறாக நீங்கள் டூர் கிளம்பும் ஒவ்வொரு முறையும் சின்ன சின்ன ஊடல்கள் வந்து வந்து மறைந்தன.மூன்றாம் வருடம் பாப்பு பேச ஆரம்பித்ததும் யாராவது "உங்க அப்பா எங்க பாப்பு என்று கேட்டால் "ஊர் சுத்தப் போயிருக்கார்" என்று பதில் சொல்லத் தொடங்கினாள்.அவள் சொல்வதைக் கேட்டு விட்டு சிரித்தாலும் சின்னக் குரலில் நீங்கள் கிளம்புவதைப் பற்றி ஆட்சேபித்து முணுமுணுப்பதை அந்த வருடம் முழுக்க தொடர்ந்தேன் என்றே நினைக்கிறேன்.

இப்போது நினைத்தால் "சிறுபிள்ளைத்தனமாக" தோன்றினாலும் , அன்றைக்கு அதெல்லாம் தேவையாய் இருந்ததை நீங்களும் நானும் மட்டுமே உணர முடியும் தேவ்.இன்றைய நமது அந்நியோன்யத்தை நிர்ணயித்ததில் அன்றைய அந்தப்பொழுதுகளை நாம் மறந்ததில்லை என்றுமே !

இப்போது அந்த செல்ல அழுகைகளோ...நீளும் முனுமுணுப்புகளோ இல்லாமல் போய் நெடு நாட்களாகின்றன.நானே பெட்டி அடுக்கித் தரும் அளவுக்கு முன்னேறி விட்டேன்.வேறென்ன தான் செய்வதாம் ? "பழகிப் போச்சு " என்று ஒற்றை வார்த்தையில் முடிக்கத் தெரிந்து விட்டது மனதுக்கு.எல்லாம் நம் பாப்புவின் "எதிர்காலத்துக்காக " என்ற சமாதானங்கள் மட்டுமே வியாபித்து நிற்கின்றன இப்போதெல்லாம்;

நான் என்னவோ இயல்புக்கு வந்து விட்டேன் தான் ...;

ஆனால் பாப்பு ...

பாப்பு பற்றி நினைத்தால் தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது . முன்பு மழலையில் சொல்ல முடிந்ததைப் போல இப்போது அவளால் "அப்பா ஊர் சுத்தப் போயிருக்கார்" என்று சொல்ல முடியவில்லை போல ?!வளர்ந்து கொண்டிருக்கிறாள் அல்லவா? முதல் நாளில் இருந்தே கடந்த நான்கு நாட்களாய் விடிந்ததும் படுக்கையில் நீங்கள் இல்லாத வெற்றிடத்தை பார்த்து...பார்த்து முகம் சுணங்குகிறாள்.

அப்பா வேண்டும் என எப்போதும் போல ஒரு பாட்டம் அழுது முடிப்பாள் என்று தான் எப்போதும் போல இன்றைக்கும் அதற்குத் தேவையான கொஞ்சல் கெஞ்சல் சமரசங்களுடன் காத்திருந்தேன் நான் ! என்ன நினைத்தாலோ பாப்பு ?!அப்பாவின் வாசம் (அப்பாவி வாசம் ...என்று வாசித்து விடாதீர்கள்!!!) இன்றி அம்மாவுக்கும் தான் கஷ்டம் என்று விட்டாளோ ? சென்ற நாட்களைப் போல "அப்பா எப்போவருவார்...இன்னைக்கு...இப்போவே...பின்ன எப்போ தான் ? " என்று நச்சரிக்காமல் ;இந்த முறை என் கழுத்தைக் கட்டிக் கொண்டு " சரி வா மம்மி ...ம்ம்...என் டாடி வரும்போது வரட்டும் ...ஒரு ஒன் வீக் நாம போய் உன் டாடியைப் பார்த்துட்டு வரலாம் " என்று குளுகுளு ஆச்சர்யம் தருகிறாள்.

அதெப்படி அத்தனை சீக்கிரத்தில் கண்டு பிடித்தாள் ? என் முகத்தில் இருந்து என் மனதை அறியும் பக்குவம் அதற்குள் அவளுக்கு வந்து விடுமா என்ன ?எப்படிக் கண்டுபிடித்தாள்?அவளைப் போலவே நானும் என் அப்பாவைப் பார்க்க வேண்டும் என நினைத்திருக்கக் கூடும் என்பதை எப்படித்தான் அவள் அறிந்து கொண்டாளோ?

நான்கு வயதுக் குழந்தை இப்படி எல்லாம் சிந்திக்குமா என்ன?(கொஞ்சம் ஓவர் தற்ப்புகழ்ச்சியா இருக்கு இல்ல!!! அது அப்படித்தான் போங்கப்பா ... ) அதென்னவோ அந்தக் கணத்தில் எனக்கு என்னென்னவோ ஞாபகங்கள் வர ஆரம்பித்து விட்டன,

அட நம் மகளா...நம் பாப்புவா...நம் சிட்டுக்குட்டியா...நம் செல்ல புஜ்ஜியா...பட்டுப்பூனைக்குட்டியா இது? இத்தனூண்டு குட்டிப் பஞ்சுப் பொதியலாய் அவளை முதல் முறை உங்களிடம் நான் நீட்டியபோது (அப்போதும் நீங்கள் ஒரு டூரில் இருந்து தான் திரும்பி வந்திருந்தீர்கள் ...ஞாபகமிருக்கிறது தானே...தேவ் ?) ஏதோ ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை வென்ற சக்ரவர்த்தியைப் போல எத்தனை பரவசமாய் அவளை பட்டுப் போல ஏந்திக் கொண்டு கொஞ்சினீர்கள்.

இடை இடையே நான் ஏதோ சாதனை மங்கை போல என்னைப் பார்த்தும் பெருமிதம் கலந்த புன்னகை வேறு .நான் உங்கள் சாயலை அவளிடத்தில் தேடித் தேடி சொல்ல நீங்களோ என் சாயலை தேடித் தேடி சொல்லிக் கொண்டிருந்தீர்கள் .அத்தனை சந்தோசங்களுக்கும் காரணமான அந்த குட்டிப் பாப்புவா இவள்...கொஞ்சம் வளர்ந்து விட்டாள் ...இன்னும் நிறைய வளருவாள் தான்.

எனக்கென்ன ஆச்சர்யம் என்றால் ? அப்படி அன்றைக்கு நம் கையில் சின்ன சத்தம் கேட்டால் கூட குட்டி வாயை அழகாய் கோணிக் கொண்டு சதா அழுது கொண்டிருந்த பாப்புவா இவள்?

"தாங்க்ஸ் பாப்பு ...ஐ லவ் யு டா குட்டிம்மா ..."அந்தப் பஞ்சு மிட்டாயை என்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டபோது என்னை அறியாமல் ஒரு அம்மாவாக ஆனந்தமாய் அழுகை வந்தது .என் கண்கள் பணிப்பதைக் கண்டதும் அவள் "சமாதானப் படுத்துபவல் போல...ஐ லவ் யு மம்மி...டோன்ட் க்ரை "என்றாள் .

பாப்பு இப்படிச் சொன்ன தருணத்தில் தான் நான் உங்கள் மேல் உள்ள அன்பும் காதலும் பல மடங்கு பெருக இப்படி முடிவெடுத்தேன் ....

அதாகப் பட்டது ...;

  1. காலையில் அரக்கப் பரக்க அலுவலகம் கிளம்பும் போது "ஜட்டி...பனியன் தேடி அது கிடைக்காமல் கண்ணாமூச்சு ஆடினாள்...சிவு சிவுக்கும் கோபத்தில் தினம் என்னைத் திட்டுவீர்களே "இதான் நீ வீட்டைப் பார்த்துக்கற லட்சணமா?" இதற்க்கெல்லாம் நான் பதிலுக்கு எகிறியதுண்டு இதுநாள் வரை!!! இனி அப்படி இல்லவே இல்லை தேவ். (கணவனே....கண் கண்ட தெய்வம்)
  2. வெறும் காது குடையும் பட்சுக்கும் ...டைரி மில்க்குக்கும் ...ஏன் அந்த நாசமாய்ப் போன கிங் ஃபிஷருக்காகவும் கூட கூசாமல் ஐந்நூறு ரூபாய் நோட்டை மாற்றுவீர்களே !!!அந்தக் கண்ராவிக்கெல்லாம் முன்பு போல கத்திப் பேசி குத்திக் காட்டாமல் போனால் போகட்டும்(போடா...!!!) என்று தெனாவட்டாக விட்டு விடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.(அதற்காக இனி உங்கள் பர்சில் தினம் வெறும் ஐம்பத்து ரூபாய் மட்டுமே வைத்து அனுப்பப் போவது தனிக்கதை)
  3. மன்த் எண்டு டார்கெட் பிரசரில் நீங்கள் குழம்பிப் போய் ஒரு டவலுக்கு மேல் ஒரு டவலாக நான்கைந்து டவல்களை கட்டிக் கொண்டு வாசிங் மிசினில் குவித்தால் கூட (நோ விவாதம்) இனி நான் ஒன்றும் சொல்லப் போவதே இல்லை. இப்படிப் பல முடிவுகளை எடுத்திருக்கிறேன்.

முக்கிய குறிப்பு:- இந்த முடிவுகளுக்கு ஆயூள் இன்னும் நிர்ணயிக்கவில்லை என்பதையும் தெரிவித்தே ஆக வேண்டும் தேவ் .குறைந்த பட்சம் உங்கள் திருமுகம் காணும் வரை இப்போதைக்கு கட்டாயம் நீடிக்கும் ...அதனால் சீக்கிரம் வாருங்கள்....வந்து விடுங்கள் என்னருமை தேவ்)

Tuesday, December 23, 2008

ஐ லவ் பாரதி ....?!

1

"உன் எண்களைத்
தாங்கி வரும்
அலைபேசி
அழைப்புகளை
உனக்கும்
எனக்குமான
உரையாடலுக்குத் தக்க
என் வீட்டு மனிதர்கள் முன்பு
அமைதியாக
"ம்" கொட்டியோ
உரக்கப் பேசி
சிரித்துக் கொண்டாடியோ
இயல்பாய்
கையாழவே
என்றும் எனக்கு ஆசை !!!
ஆனால் ...
நட்பை
நட்பாய்மட்டுமே நோக்க
யாருக்கு இங்கே ஆசை!!!
ஓசையின்றி
அலைபேசியோடு
தனியிடம் நாடும்
ஒவ்வொரு முறையும்
வலிக்கத்தான் செய்கிறது
எனக்கும்
நம் நட்புக்கும் ?!"

2

இல்லையென்று
மறுப்பதற்கில்லை

ஐ லவ் பாரதி
ஐ லவ் ரஜினி
ஐ லவ் மணிரத்னம்
ஐ லவ் கார்ல்மார்க்ஸ்...,
ஐ லவ் டால்ஸ்டாய்
ஐ லவ் ஆல் !
சொன்ன நிமிடங்களில்
அவள் ஒரு திருமதி ;
மறுக்கப் பட்ட
ஒரு காதலுக்கு ஈடாக
இன்று பல காதல்கள்
இது ஒரு புதுக்(பொது)காதல்!!!

3

காதலைப் போல
காமத்தைப் போல,
நட்பும் ஒரு சுகமே...
எல்லைகள்
நிர்ணயிக்கப்படும் வரை!?

4

அவனுக்குள்
தனியாக
ஓராயிரம்
கனவுகள்
அவளுக்குள்
தனியாக
ஈராயிரம்
கனவுகள்
கனவுகளுடனான
தனித்தனிப் பயணங்களில்
கால் தடுக்கி
குப்புற விழும்
அபாயம் வரும் முன்
கல்யாணமென்ற
ட்ராபிக் ஜாமில்
நின்று
நிதானமானார்கள்
"...? ? ? ? ? ...."
அவர்கள்
தம்பதிகள் !!!


லிப்ஸ்டிக் !!! ஆண்களுக்கா? பெண்களுக்கா? யாருக்காக இந்த லிப்ஸ்டிக் ?



இப்படித்தான் ஆரம்பிக்கணும்!












பெண்கள் லிப்ஸ்டிக் போட்ட இப்படி இருக்குமாம் !?



ஆண்கள் லிப்ஸ்டிக் போட்ட இப்படித்தான் இருக்குமாம் !?
இது எப்படி இருக்கு? இப்படி ஒரு பதிவு போடக் காரணம் நான் இல்லை .
பொம்மலாட்டம் படம் தான் காரணம்.ஆண்கள் லிப்ஸ்டிக் போடக்கூடாதுங்கறார் நானா படேகர் ...வாஸ்தவம் தானே!!
ஆனா நம்ம அந்தக் கால எம்.ஜி.ஆர் ல இருந்து சிவாஜில இருந்து யார் தான் லிப்ஸ்டிக் போடலை ? இதுல எம்.ji.ஆரெல்லாம் கண்மை போடாம நடிச்சதே இல்லை .அசோகன்...நம்ம துக்ளக் சோ எல்லாம் லிப்ஸ்டிக்கும் ...கண்மையும் இல்லனா பாவம் எப்படித் தான் திரைல வந்திருக்க முடியும்?
கண்மை மீசை....கண்மை புருவம் இதான் பல சூபர் ஸ்டார்களை காப்பாற்றி இருக்கு .அதைப் போயி வேணாம்னு ஒரு இயக்குனரு சொல்லிட்ட ஆச்சா?
நாளைல இருந்து எந்த ஹீரோவும் லிப்ஸ்டிக் போட்டு நடிக்கவே மாட்டாரா என்ன?


பாருங்க இவ்ளோ கலர்ல லிப்ஸ்டிக் இருக்கு இதெல்லாம் பின்ன யார் தான் போடரதாம் ? பொண்ணுங்க மட்டுமே போட்ட லிப்ஸ்டிக் பிசினஸ் படுத்துராதா?
சரி இப்ப விசயத்துக்கு வரேன்.
ஆண்கள் லிப்ஸ்டிக் போடக் கூடாத என்ன?
போடலாம்னு சொல்றவங்க எத்தனை பேர்?
போடக்கொடாதுனு சொல்றவங்க எத்தனை பேர் ?
வாங்க வந்து வரிசையா உங்க கருத்துக்களை சொல்லி விவாதத்தை ஆரம்பிச்சு வச்சிட்டுப் போங்க .

Saturday, December 20, 2008

பாப்பு vs பிங்க் கலர் பூதம்

டைணிங் ஹாலில் உட்கார்ந்திருந்த குழந்தை அஷ்விதாவைக் கண்டதும் ஜன்னல் மேல் தாவி ஏறிக்கொண்டது , ஏய் மேல ஏறாத விழுந்து வைக்கப் போற பதட்டமாய் அவள் கத்தினாள் .
சரி ..சரி இரு நீ கிட்ட வராத நானே இறங்கிடறேன் ...குழந்தை அவளே இறங்கி வந்து படுக்கை அறைக்குள் நுழைந்து விட்டாள்,
பாப்பா பப்பு மம்முடா சூப்பர் டேஸ்ட்...ஒரு வாய் சாப்டுப் பார் அப்புறம் நீயா வேணும் ...வேணும்ப, வா வந்து வாங்கிக்கோ என் செல்லக்குட்டி இல்ல !
அஷ்விதா படுக்கை அறைக்கு வந்ததும் குழந்தை அவள் எட்டிப் பிடிக்க முடியாதபடி வழுக்கிக் கொண்டு பின்வாசலுக்கு ஓடினாள்.
ஹை..உங்கைல தான் மம்மு பிளேட் இருக்கே ..என்ன எப்படி நீ பிடிப்ப ? தள்ளி நின்று கொண்டு எக்காளமாய் சிரித்தது.சரி..சரி விளையாண்டது போதும் வா ..வந்து "ஆ " வாங்கிக்கோ அப்போ தான் ஈவினிங் பார்க் கூட்டிட்டுப் போவேனாம் ; உள்ளே வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சிரித்துக் கொண்டு சமாளிப்பாய் கெஞ்சினாள்,
பார்க் எல்லாம் வேண்டாம் "அபிராமிக்குப் போலாம் இன்னைக்கு " அப்போ தான் நான் "ஆ " வாங்கிக்குவேன் ,
அபிராமிக்கா ..!!! OK ..OK பாப்பு என்ன சொல்றாளோ அங்கேயே போலாம் ,நீ பஸ்ட் சாப்பிட்டு முடி அப்புறம் டைம் ஆயிடும்ல மூடிடுவாங்க இல்ல ?
இரு மம்மி வரேன் ..குழந்தை இப்போது பாத்ரூம் பக்கம் போய் விட்டாள் .
பாப்பு பாத்ரூம்குள்ள சும்மா ..சும்மா போக கூடாது நு எவ்ளோ வாட்டி சொல்லிருக்கேன் ,
பேட் ஹாபிட் கால் வாஷ் பண்ணிட்டு வெளிய வா ,கையில் சாதம் ஏந்தியவாறு அஷ்விதா குரலில் லேசாக கடுமை ஏற்றிக் கூறினாள்.அதிகம் கத்தக் கூடாதே ..உள்ளதும் போன கதையாகி விடுமே ,
எப்படியாவது பாப்புவை சாப்பிட வைக்கவேண்டும் , காரியம் ஆக வேண்டுமே .
ஆம் !!!அஷ்விதா குழந்தைக்கு சாதம் பிசைந்து ஊட்டிக்கொண்டிருந்தாள் , சும்மா பத்து நிமிஷ வேலை என்று நினைத்து விடாதீர்கள் ...ஒரு மணி நேரமாக ஊ ...ட்..டிக் கொண் ..டே ..இருக்கிறாள் ,
அவளும் என்னென்னவோ சொல்லி குழந்தையை ஏமாற்றி சேர்ந்தாற்போல ஒரு ரெண்டு பிடி சாதத்தையாவது வாய்க்குள் தள்ளி விடலாமென்று தான் பிரம்மப் பிரயத்தனம் செய்து பார்க்கிறாள் .
பாத்ரூமில் இருந்து வெளியே வந்த குழந்தை இவளது நல்ல நேரமோ என்னவோ அவள் மடியில் வந்து பாசமாய் உட்கார்ந்து கொண்டது ,உச்சி குளிர்ந்து போனவளாய்,
என் தங்கமாச்சே ...என் அம்முக்குட்டியில்ல என் செல்ல புஜ்ஜியில்ல..தங்கக் கட்டியில்ல "ஆ " காட்டும்மா ...ஒரே ஒரு வாய் தான் அப்புறம் மம்மி (சாரி பாஸ் எகிப்த் மம்மி இல்ல இது தமிழ் மம்மி ) உன்ன சாப்பிடச் சொல்லி தொந்திரவே பண்ண மாட்டேனாம் ;
அதுவரை மடியில் உட்கார்ந்திருந்த குழந்தை மெல்ல நழுவி சோபாவுக்குச் சென்றது ; இரு மம்மி சாப்பிடறேன் ...வெயிட் ...வெயிட் கையால் சைகை காட்டிவிட்டு ,ரைஸ் எதுக்கு சாப்பிடனும் ?
நூடுல்ஸ் தா அதான் வேணும் ,
அஷ்விதா முறைத்தாள்;முன்னாடியே சொல்றதுக்கென்ன ஒரு மணி நேரமா உன் பின்னாடி தான அலையறேன் ?
கோச்சுக்காத மம்மி நூடுல்ஸ் தா சாப்பிடறேன் ...என் செல்ல மம்மி இல்ல !!!உள்ளெழுந்த அத்தனைக் கோபத்தையும் காட்டினால் காரியம் சுத்தமாய்க் கேட்டு விடுமே ,ஐந்தே நிமிடத்தில் நூடுல்ஸ் தயாரித்துக் கொண்டு குழந்தையை தேடினால் காணோம் .
பாப்பு வேர் ஆர் யு ? டெல் மீ ...அஷ்விதா வீடு முழுதும் தேடி கடைசியில் பூஜை ரூம் கதவு மூலையில் பாப்புவைக் கண்டுபிடித்து இழுத்து வந்து மறுபடி டைணிங் ஹால் மேஜையில் அமர வைப்பதற்குள் போதும் ..போதும் என்று வந்தது அவளுக்கு ,
நூடுல்ஸ் ரெடி போர்க் வச்சு நீயா சாப்பிடுவயாம் ,மம்மி சும்மா உட்கார்ந்து பாப்பு சாப்பிடறத பார்த்துட்டே இருந்து பினிஷ் பண்ணதும் வெரி குட் சொல்வேனாம் ..ஒ.கே வா ?
என்ன நினைத்தாலோ என்னவோ ஒரே ஒரு வாய் நூடுல்ஸ் எடுத்து போர்க்கால் வாயிலிட்ட பாப்பு "ஓ என்று தனக்குத் தானே உமட்டிக் கொண்டு மறுபடி போர்க்கை கீழே போட்டு விட்டாள் .
மம்மி வாமிட் வருது மம்மி நூடுல்ஸ் இப்போ வேணாம்..அப்புறமா சாப்டுக்கறேன் .என்றாள் . ஏய் என்னடி இது சாதம் தான் வேண்டாம்ன சரி நூடுல்ஸ் கேட்டஎனு செஞ்சு எடுத்துட்டு வந்த இதுவும் வேணாம்கற ...எத தான் சாப்டப் போற நீ ?இப்ப ஏதாவது ஒன்னு சாப்பிடப் போறிய.. இல்ல பூதத்தைக் கூப்பிடவா ?
கேட்ட மாத்திரத்தில் பாப்பு அஷ்விதாவின் சேலை நுனியை இறுகப் பற்றிக் கொண்டு தனது அச்சத்தை காட்ட ;குழந்தை கொஞ்சம் பயந்தமாதிரி இருக்கிறதே ..அது தான் சாக்கென்று ;நிஜமாதான் சொல்றேன் இப்போ நீ மட்டும் சாப்பிடலை , கலர் ..கலர் பூதம் (ஹி...ஹி ஏதாவது ஒரு பேர் வேண்டுமே பூதத்துக்கு ) வந்து உன்னைத் தூக்கி பைல போட்டிக்கிட்டு ஓடியே போய்டும் ,
பாப்பு கொஞ்ச நேரம் அமைதி காத்தாள். ஒரே ஒரு நிமிஷம் தான் . அப்புறம் கேட்டாள். எங்கம்மா போகும் பைல போட்டுத் தூக்கிட்டு ?
ஹ்ம்ம் ...அபிராமிக்கு ..எங்க போகும் எங்கயாச்சும் காட்டுல கொண்டு போய் போட்டுட்டுப் போய்டும் .ஆமாம் ...பேசாம சாப்டுறு ,
அஷ்விதா மேலும் கொஞ்சம் பயம் ஏற்றிப் பார்த்தாள்...எல்லாம் அவளை சாப்பிட வைக்கத் தான் ;
பாப்புவா கொக்கா ?!!!
ம்ம்ம் ...மம்மி கலர் கலர் பூதம் தான சொன்ன ?
ஆமாம் பார்க்க ரொம்ப பயங்கரமா இருக்கும் ...வந்திரப் போகுது சீக்கிரம் சாப்டுறு பாப்பு ;
அதில்லம்மா அந்த பூதம் வரும்போது எந்த கலர் ல வரும் ?
நீ இப்படியே கேட்டுக்கிட்டே இரு பூதம் வந்து சாப்பிடாத பிள்ளை எங்க.. எங்க நு தேடி உன்னைப் பிடிச்சி பைல போட்டுக் கட்டித் தூக்கிட்டுப் போயடட்டும் ;இன்னும் இறுக்கமாக அஷ்விதாவின் சேலையைப் பற்றிக் கொண்டு ஒடுங்கி மடியில் அமர்ந்து கொண்டு சேலை தலைப்பால் தன்னை மூடிக் கொண்ட பாப்பு ;
மம்மி பிங்க் கலர் ... ப்ளூ கலர் கூட அந்த பூதம் வருமா மம்மி ? என்றாள்வரும்..வரும் ;இப்ப வரத்தான் போகுது நீ சாபிடாமலே இருக்க இல்ல இதோ வந்திரும் பாரு .
கேட்டுக்கொண்டிருந்த பாப்புவின் கண்களில் இப்போது பயம் போய் மெல்லக் கண்கள் பளிச்சிட ,
மம்மி ..மம்மி ப்ளீஸ் மம்மி அந்த பூதத்தை பிங்க் கலர்ல வரச் சொல்லு மம்மி;வேற கலர் வேணாம் .பிங்க் இல்லன ப்ளூ ஓ.கே ,வரச் சொல்லு மம்மி .
என்னது ?
ங்ஹே வென்று ஒன்றும் புரியாமல் கொஞ்ச நேரம் வெறித்து விட்டு பாப்புவுக்குப் பிசைந்த சாதத்தை அஷ்விதாவே சாப்பிட்டு முடித்தாள் .
வேறு என்ன தான் செய்வதாம் ? !!! ."
"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றுகுற்றம் குறை காணாத இனத்தால் "ஒன்று ".கே.டிவி யில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது .

"தாங்க்ஸ் டு தனிஷ்க் பார் திஸ் நைஸ் விசுவல் அண்ட் மெலடி"

அசின் வரும் புதிய தனிஷ்க் விளம்பரம் ஒன்று நேற்று விசேசமாய் கவனத்தை ஈர்த்தது .கேரளத் தம்பதிகள் ஒரு ஓடத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள்,பின்னணியில் நமது ராஜாவின் மெலடி ரொமாண்டிக் ஹிட்

"கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே"...

எடுக்கவா...தொடுக்கவா மயங்கினேன் நானே" மென்மையாக ஒலிக்க அவர்களைக் கடந்து செல்லும் ஓடத்தில் சில பெண்கள் தலை நிறைய மல்லிகைப் பூக்களைச் சூடிக் கொண்டு இவர்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே தாண்டிச் செல்கின்றனர்.

இதுவரை இது ஒரு சாதா விளம்பரம் தான் .

அதனை அடுத்து ஒரு ஸ்வீட் ட்விஸ்ட் ....!!!

மல்லிகை சூடிச் செல்லும் இளம் பெண்களைக் கண்டு மனைவியாக வரும் அசின் மலர்கள் எதுவும் சூடாமல் முன்புறம் நீண்டு சாட்டை போலத் தொங்கும் தன் பின்னலை எடுத்து அசட்டையாக கொஞ்சம் சடைவுடன் தன் கணவனைப் பார்த்துக் கொண்டே அலட்சியத்துடன் பின்புறம் தூக்கிப் போடவும் ,கணவனாக வருபவர் அசினை சமாதானப் படுத்த வைரம் பதித்த பிளாட்டின நெக்லசை ஏந்திக் கொண்டு மனைவியின் அருகில் நகர்வார்,

கழுத்துக்குத் தானே நெக்லஸ் என்று கழுத்தைக் காட்டும் மனைவியின் பார்வை கணவனின் கை கழுத்து தாண்டி தலைக்குப் போவதைப் புரியாத பாவனையுடன் பின்தொடரும் .கடைசியில் தேர்ந்தெடுத்த வைரம் பதித்த பிளாட்டின நகைகள் அனைத்துமே அசினின் நீண்ட பின்னல் ஜடையிலும் கொண்டையிலும் ரசனையோடு அலங்கரிக்கப் பட்டு நம் கண்களுக்கு விருந்தாகும் .

இந்த விளம்பரம் என்ன சொல்ல வருகிறது? இனிமேல் பெண்கள் தம் தலையில் மல்லிகைப் பூக்களுக்கு பதிலாக நகைகளைச் சூடிக் கொள்ளுங்கள் என்றா ? நகை விற்கும் விலையில் அதெல்லாம் அனைத்துப் பெண்களுக்கும் சாத்தியமா என்ன?

அப்படியெல்லாம் இருக்காது...மல்லிகையின் மனம் மயக்கும் தன்மை பிளாட்டின நகைகளுக்கும் உண்டு என்று குறிப்பால் உணர்த்துகிறார்கள் போல?!எது எப்படியோ ?விளம்பரம் மிக அருமையான விதத்தில் கண்களோடு கவனத்தையும் கவர்கிறது,

அந்த விளம்பரம் முடிந்து ...

அடுத்த விளம்பரம் போட்டு ...

அதற்கும் பின் நீண்ட நேரம் எல்லா நிகழ்சிகளையும் பார்த்து அலுத்து சலித்து டி.வியை அணைத்து விட்டு இரவு தூங்கப் போகும் போதும் கூட ,கண்ணில் அசின் தலையில் சூடிக் கொண்ட வைர நட்ச்சத்திரங்கள் டாலடிக்கின்றன.

கனவில் கூட ...

"கொடியிலே மல்லிகைப் பூ மணக்குதே மானே...ஒலிக்கிறது...

கூடவே மல்லிகைப்பூ வாசம் வேறு ...

"ராஜா ராஜா தான் !

"தாங்க்ஸ் டு தனிஷ்க் ஃபார் திஸ் நைஸ் விசுவல் அண்ட் மெலடி" குறிப்பு:

ஹார்லிக்ஸ் காம்ப்ளான் விளம்பர யுத்தம் கண்டு விளம்பரங்களின் கிரியேட்டிவிட்டி காணமலே போய்விட்டதோ என்று நினைத்த நேரத்தில் இந்த தனிஷ்க் விளம்பரம் கருத்தைக் கவர்வது நிஜம் கலந்த ஆறுதல் .

நம்ம டவுட் :- ராஜாவோட இந்தப் பாட்டு "கடலோரக் கவிதைகள் "படத்துல இருந்து தான் எடுத்திருக்காங்களா இல்ல வேற படமா?

Friday, December 19, 2008

"மத்தகம்"...ஒரு யானையின் கொம்புகளின் ஊடே கிட்டிய பயண அனுபவம்

ஜெயமோகனின் "மத்தகம்" குறுநாவல் வாசித்தேன் இன்று.

நல்ல ஆழமான அழகான நடை,வாசிக்க...வாசிக்க கதை நீண்டு கொண்டே போவதைப் போல ஒரு பிரமிப்பு எனக்கு."கேசவன்" எனும் யானையை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு கதை நகர்கிறது.யானை இருந்தால் அதற்கு பாகனும் இருந்தாக வேணுமே?கேரளம் திருவட்டாரில் நடைபெறும் இந்தக் கதையில் ;கேசவனைப் பராமரிக்க ஒரு தலைமைப் பாகன் (சீதரன் நாயர்) அவருக்குத் துணையாக இரு துணைப் பாகன்கள்(அருணாச்சலம்,பரமன்) , இவர்கள் மூவருக்கும் எடுபிடியாக சுப்புக்கண்ணு.

இவர்களோடு இன்னும் சில ரசனையான கதாபாத்திரங்களைக் கொண்டு மிக அடர்த்தியாக நகர்கிறது நாவல் .இந்த குறுநாவலை வாசித்து முடித்த பின் அதன் தாக்கம் இன்னும் நீடிக்கிறது.இதே போன்றதோர் உணர்வு ;

நாஞ்சில் நாடனின் "எட்டுத் திக்கும் மத யானை" நாவலை வாசிக்கும் போதும் எழுந்தது .

பொன்னீலனின் "கரிசல் " நாவலை வாசிக்கும் போதும் இதே உணர்வு .

சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த தகழி சிவா சங்கரன் பிள்ளையின் "செம்மீன்" நாவல் முதல் முறை வாசிக்கும் போதும் இதே உணர்வு தான் மேலெழுந்தது .

சொல்லப் போனால் தி.ஜானகிராமனின் "அம்மா வந்தாள் " கூட இந்த அளவு பாதிப்பை ஏற்ப்படுத்தியிருக்கவில்லை. ஏதோ ஒரு இனம் புரியாத சோகம் ...வருத்தம்...வாழ்வின் நிதர்சனம் பற்றிய பயம் இப்படி எந்த வார்த்தை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். ஆனால் சில நாவல்களை வாசிக்கும் போது அவற்றின் செறிவைத் தாங்காமல் ,அவை சொல்ல வரும் விஷயங்களின் கணம் பொறுக்காமல் மனம் அதைப் பற்றியே சில தினங்களாவது எண்ணிக் கொண்டு இருக்க வேண்டிய சூழல் ஏற்ப்பட்டு விடுகிறது...அது மட்டும் நிஜம்.

இயல்பில் இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை.அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்து முடிக்கிறோம்.ஒருவர் வாழ்வை இன்னொருவர் வாழ முடியாது,"சிறைச்சாலையில் அச்சடித்த சோற்றைப் போல விதிக்கப் பட்ட வாழ்வையே நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்".அப்படிப் பட்ட வாழ்க்கையில் தான் எத்தனை இன்பங்கள்..துன்பங்கள்...சுவாரஷ்யங்கள்...அசுவாரஷ்யங்கள் ?!

சில பகிர்ந்து கொள்ளக் கூடியவை .பல விஷயங்கள் யாரோடும் பகிர முடியாத தன்மையுடனும் கடைசி வரை இருந்து விடுவதும் உண்டு. உதாரணம் அடுத்தவர் நமக்குச் செய்யும் துரோகங்களை...ஏமாற்றங்களை நாம் எளிதாக இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்வோம் .அதே சமயம் நாம் யாருக்காவது செய்த துரோகத்தையோ...ஏமாற்றத்தையோ யாரிடம் இதுவரை பகிந்து கொள்ள முடிந்தது?அதை நம் மனசாட்சி மட்டுமே அறியும்.

"மத்தகம்" யானைக் கதை தான்;ஆனால் யானையைப் பற்றிய கதை மட்டும் அல்ல ! யானை என்பது ஒரு அடையாளம் தமிழ்நாட்டில் விவசாயக் குடும்பத்தினர் பசு ,காளை,எருமை மாடுகளை வளர்ப்பதைப் போல கேரளத்தில் வீட்டுக்கு ஒரு யானை வளர்க்கும் பழக்கம் முன்பு உண்டு என்று எங்கோ படித்தேன்,யானை கட்டி தீனி போடுவதைக் காட்டிலும் யானை மேய்ப்பது அதை விடக் கடினம் தான் என்று இதை வாசித்தால் புரியும்.

யானைப் பாகன் பரமன் தான் இதில் கதை சொல்லி .அவன் தனக்குத் தானே பேசிக் கொள்வது போல ,தன் மனசாட்சியிடம் தன் வாழ்வைப் பற்றி பகிர்வதைப் போல கதை நெடுகிலும் அவன் பேசிக் கொண்டே போகிறான் .கதை நிகழ்வது அவிட்டம் திருநாள் உதயமார்த்தாண்ட வர்மா மகாராஜாவின் காலம் .அவரது ஆத்மார்த்தமான அன்பைப் பெற்றதே கேசவன் எனும் யானை,மகாராஜாவின் மீது கேசவன் கொண்ட அன்பும் அத்தகையதேபொதுவில் நாவல் யானைகளைப் பற்றிய நுண்ணிய விவரணைகளோடு நகர்ந்தாலும் கூட ;

அதை ஒட்டியே அன்றைக்கு இருந்த ராஜ குடும்பத்தின் அரசியல் சூழல் ...பாகன்களின் நடைமுறைக் கஷ்டங்கள்,இவற்றோடு அந்தக் காலத்தில் பெண்களின் நிலை,கூடவே கல்கி "பொன்னியின் செல்வனில்" விவரித்ததைப் போலவே வெள்ளம் வந்தால் அந்நாளைய மக்கள் அடைந்த துன்பங்கள் குறித்து இதிலும் சற்று விளக்கமாகவே செய்தி உண்டு.கேசவன் மட்டும் அல்ல அப்போது பட்டத்து யானையாக இருந்த மற்றொரு யானையைப் (நாராயணன்) பற்றியும் சுவாரஷ்யமாக விளக்கும் பகுதி ஒன்று நாவலில் உண்டு .

மொத்தத்தில் யானைகளும் மனிதர்களைப் போலவே தாம் மனதில் நினைத்ததை குறிப்பால் உணர்த்தக் கூடியவை என்று ஐயம் வந்து விடிகிறது சில இடங்களில்.கேசவனின் யானைக் கோபம் பல இடங்களில் பயத்தை ஏற்படுத்தினாலும் அவன் மீது ஒரு மரியாதையும் இழையோடவே செய்கிறது.

//"”ஒம்மாணை அண்ணா, ஒருநாள் இல்லெங்கி ஒருநாள் இந்தச் சவத்தை¨யும் வெஷம் வச்சு கொன்னுட்டு நானும் சாவேன். பாத்துக்கிட்டே இரும்…” என்றான் சுப்புக்கண். "//இந்த இடம் போதும் பாகன்கள் யானைகளைப் பராமரிப்பதில் உள்ள சிக்கல் பற்றி உணர்ந்து கொள்ள .

//நான் அதன் கண்களைப் பார்த்தேன். ஒரு சிறிய சிரிப்பு, மோதிரக் கல்லுக்குள் வெளிச்சம் தெரிவதுபோல, தெரிந்தது போல் உணர்ந்தேன்.//

சின்ன வயதில் ஊர்ப்பக்கம் பேசிக் கொள்வார்கள் "வில்லிக் கண்ணு சொளகுக் காது " என்று யானையின் காது பட சொல்லவே கூடாது அப்படி சொல்லி விட்டால் போச்சு யானை அப்படிச் சொன்னவர்களை விடவே விடாது விரட்டி...விரட்டி அடிக்கும் என்று.உள்ளூர பயம் இருந்தாலும் ...இதெல்லாம் சும்மா சுத்த ஹம்பக் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் !!!இதுநாள்வரை.இப்போது என் எண்ணம் மாறி விட்டது இந்த கதை படித்ததில் இருந்து ,

மோப்ப சக்தியும்,ஞாபக சக்தியும் யானைக்கு அதிகம் தான் போல !இல்லாவிட்டால் தன்னை ஆதரித்த தன் ஆப்த நண்பரான மஹாராஜா இறந்து விட்டதை ஊருக்கு முன்னாள் ஒரு யானையால் ஊகிக்க இயலுமா?மஹாராஜாவின் அன்பைப் பெற்று விட்டோம் என்று கேசவன் அறிந்ததால் தான் அதன் அட்டகாசம் அதிகளவில் இருந்ததோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் வண்ணம் கேசவன் தானும் தன்னை ஒரு மகாராஜாவாகப் பாவிப்பதைப் போல பல இடங்களில் அதன் செயல்பாடுகள் இதில் சித்தரிக்கப் பட்டுள்ளன.

தன்னை ஏசியதால் தலைமைப் பாகன் சீதரன் நாயரை தும்பிக்கையால் சுழற்றி வீசி காலால் மிதித்து ஒரு காலை செயல் பட விடாமல் அடித்து விட்டுப் போகும் இடமாகட்டும்...அதே சீதரன் நாயரை வழிப் பயணத்தின் போது யாரோ ஒரு வண்டிக் காவலன் இழிவாகப் பேசியதைக் கேட்டதும் அக்கணமே அவனை துதிக்கையால் பிய்த்து எறிந்து கொல்லும் போதாகட்டும் கேசவனைப் பார்த்தால் பயம் தான் வருகிறது.

கதையில் நிறைய மலையாள வாடை வீசினாலும் அதன் போக்கில் நம்மை அறியாமல் நாம் ஒன்றித்தான் போய்விட வேண்டும் .ஏதோ ஒரு நல்ல திரைப் படம் பார்த்த எபெக்ட் தான் வருகிறது,அஸ்டமங்கலம்...பற்றிய விளக்கம்...யானையை அலங்கரிக்கும் விதம்...வர்ணனைகள்...யானையைப் பற்றிய உருவ வர்ணனைகள்,எல்லாம் அருமை.

பெண்களின் நிலை தான் அந்நாளில் சகிக்க முடியவில்லை ,பெண்கள் காமத்திற்கு மட்டுமே என்ற எண்ணம் அப்போது இருந்திருக்க வேண்டும்?! நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்கள் சாமர்த்தியமானவர்களாக காட்டப் பட்டாலும்,போகத்திற்கு மட்டுமே அப்போது பெண் பயன்பட்டால் என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது .அம்பிளி எனும் பெண் "பத்துப் பொன் கொண்டு வந்தால் போதும் அவளிடம் ஒரு இரவைக் களிக்கலாம்" எனும் வரிகள் அவள் மீது பரிதாபத்தையே ஏற்படுத்துகிறது . மோகத்தில் தன்னை மறிக்கும் கேசவனின் துணைப் பாகன் பரமனிடம் அவள் சொல்வதாக வரும் வரிகள் "கட்டணுமா?....கெடக்கனுமா? " இதில் அவளின் சாமர்த்தியம் தெரிந்தாலும் ஒரு திடுக்கிடலையும் ஏற்படுத்துகிறது .

தன் உடனிருக்கும் பாகன் அருணாச்சலத்தை மிரட்டி அவனது ஆசைநாயகியை பரமன் அடைவது அவன் மீது பெருத்த கோபத்தை தருகிறது .முடிவில் எந்த நாடாக இருந்தால் என்ன? எந்த ஊராக இருந்தால் என்ன? பெண்ணை காரணமாக வைத்தே பிரச்சினைகள் எழுகின்றன .அதற்கு அவள் எப்படியாவது காரணப் படுத்தப் படுகிறாள் என்ற நிஜம் முகத்தில் அறைகிறது.காமம் கண்ணை மறைக்கையில் நட்பு...சொந்தம்...ஆசான்...அணுக்கன்...என்ற உறவுகளெல்லாம் மரியாதை இழக்கின்றன இதை அருணாச்சலத்தை தந்திரமாக கொன்று விட்டு பரமன் அந்தப் பழியை கேசவன் மீது போடும் போது உணரலாம்.

நாவல் முழுமையிலும் கேசவனே ஆட்சி செய்கிறான் கூடவே பரமனின் வரையறுக்கப் படாத...திட்டமிடப் படாத தன் போக்கில் நடத்தப் படும் துரோகங்களும் காணக் கிடைக்கின்றன .அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒவ்வொரு கட்டமும் கூடவே "இதைத் தவிர வேறு என்ன செய்வது? " என்ற உணர்வையும் ஏற்படுத்தாமல் இல்லை.

கடைசியில் மஹாராஜா இறந்ததும் கேசவன் தன்னைத் தானே ஒடுக்கிக் கொண்டு முந்தைய துணைப் பாகனும் சீதரன் நாயர் படுக்கையில் வீழ்ந்ததும்...அருணாச்சலமும் கொள்ளப் பட்ட பின் தற்ப்போதைய தலைமைப் பாகனான பரமன் முன்னிலையில் ஒரு அறியாக் குழந்தை போல பயந்து சொல் பேச்சு கேட்டு கூனி குறுகி நிற்கும் காட்சியில் நாவலை வாசிப்பவர் நெஞ்சில் துக்கமே மிஞ்சுகிறது .

"மத்தகத்தில் ஏறி அமர்கிறான் பரமன்"

கதையில் ஓரிடத்தில் மஹாராஜா சொல்வதாக ஒரு வரி வரும்.

//”இனி என் கேசவனுடெ மீதெ ஆதிகேசவனும் ஞானும் மாத்ரமே கேறுக பாடுள்ளு. வேறெ ஆரு கேறியாலும் கேறியவனுடைய தல வெட்டான் ஞான் இதா கல்பிக்குந்நு…” //

எப்பேர்ப் பட்ட ராஜகட்டளை ?!!

//இரு கைகளும் மார்புகளை மூடி வாய்பொத்தி, குனிந்து நின்று ஆசான் மிகமெல்லிய குரலில் ”அடியன். உத்தரவு” என்றார். அதன்பிறகு ஆறாட்டு’ எழுந்தருளல் இரண்டுக்கும் ஆதிகேசவனின் உற்சவத்திடம்புடன் குட்டிப்போத்திகள் மட்டும் கேசவன் மீது ஏறிக்கொள்வார்கள். நினைக்கும் போதெல்லாம் திருவனந்தபுரத்தில் இருந்து கேநசவனைப்பார்க்க வரும் இளையதம்புரான் ஏறிக்கொண்டு ஆற்றுப் படுகையில் அலைவார். வேறு யாரும் அவன்மீது ஏறியதே இல்லை//

அதற்குப் பின் அதன் மீது வேறு யாரும் ஏறும் தைரியமே இல்லாதிருந்த நிலையில் இறுதிக் கட்டத்தில் பரமன் தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல சொல்லவான்.

//மெல்ல ஒரு அடி எடுத்து வைத்தேன். அவன் தன் துதிக்கையை சுருட்டிக்கொண்டு உடலைக் குறுக்கிக் கொண்டான்.
நான் சிலகணங்கள் அசையாமல் நின்றேன். பின்பு புன்னகை புரிந்தேன். என் பிரம்பை வீசியபடி கேசவனை நெருங்கினேன். நான் நெருங்க நெருங்க அவனுடைய காதுகள் நிலைத்தன. அருகே போய் அவனுடைய கொம்புகளின் அருகே நின்றேன். பிரம்பால் அவன் காலை அடித்தபடி ”ஆனே, காலெடு ஆனே” என்றேன். கேசவன் மிக மெல்லத் தன் முன்னங்காலைத் தூக்கி மடித்துக் காட்டினான் அதை நம்ப முடியாதவன் போல அவனுடைய கண்களைப் பார்த்தேன். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து நீண்ட தடமாக இறங்கியிருந்தது. மடித்த கால்களில் கால் வைத்து எம்பி கழுத்துக் கயிற்றைப் பிடித்து மேலேறி அவனுடைய உயர்ந்த மத்தகத்தின் மீது அமர்ந்து கொண்டேன்.//
முற்றும்.

இந்த நாவல் எல்லோருக்கும் பிடிக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் புரிந்து வாசித்தால் அருமையான நாவல்.

Friday, December 12, 2008

அம்மாக்களே...அப்பாக்களே தற்கொலை மட்டும் வேண்டவே வேண்டாம் ப்ளீஸ்...!?

ஜெயமோகன் அவர்களின் "தோன்றாத்துணை" கட்டுரை வாசித்தேன் இன்று...தற்கொலை பற்றி அதில் வரும் சம்பாசனைகள் சிந்திக்க வைக்கின்றன,எந்த முறையில் தற்கொலை செய்து கொள்வது வழியின்றி மரிக்க உதவும் என்று அக்கட்டுரை நீள்கிறது, அதைப் படிக்க ஆர்வமுள்ளவர்கள் இந்த லிங்க்கை அழுத்துங்கள் .

தோன்றாத்துணை http://jeyamohan.in/?p=775

என் பெரிய பாட்டியார் என் அம்மாவெல்லாம் பிறக்கும் முன்பே காலமாகி விட்டார்,இயற்க்கை மரணம் அல்ல,வெகு இளம் வயதிலேயே என் தாத்தாவுடன் ஏற்பட்ட மனப் பிணக்கில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இத்தனைக்கும் அந்தக் காலத்தில் அவர்கள் காதல் மணம் புரிந்தவர்கள்,

ஒரு வயதில் விவரமறியா பிள்ளைகுழந்தை பாலுக்கு அழும் பருவம்...அடுத்த கரு வயிற்றில் தாங்கிக் கொண்டிருந்த ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் எப்படி என் பெரிய பாட்டியாரால் தூக்குப் போட்டு தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிந்தது ?! இன்றளவிலும் என்னை யோசிக்க வைக்கும் கேள்வி இது!

கணவன் மனைவி சண்டை தற்கொலை வரை போவது மிகப் பெரிய தவறு என்று என்னை நினைக்க வைத்தது பெரிய பாட்டியாரின் மரணமே!!!எத்தனையோ பிணக்குகள் இருக்கட்டுமே?அதற்க்கு ஒரே தீர்வு உயிரை போக்கிக் கொள்வது என்று ஆகி விடுமா?அது கொஞ்சம் சுயநலமில்லையா?

பார்த்துப் பார்த்து வளர்த்த நம் குழந்தைகளை பிறகு யார் பொறுப்பெடுத்து வளர்ப்பார்கள்?இயற்க்கை மரணம் என்றால் அது வேறு ...கடவுளை...விதியைத் திட்டிக் கொண்டு அடுத்து நடக்க வேண்டியதைப் பார்க்கத்தான் போகிறோம்...அப்படியே எதுவும் நின்று விடப் போவதே இல்லை.

ஆனால் தன் உயிரை தானே மாய்த்துக் கொள்ளுதல் என்பது எப்படிப் பட்ட மன நிம்மதி இன்மை தெரியுமா?ஏதோ ஒரு நிமிடக் கோபத்திலோ மன அழுத்ததிலோ அப்படி மரித்தவர்களை விட அவர்களது குழந்தைகளை எண்ணியே நாம் வருத்தப் பட வேண்டும்.என்ன பாவம் செய்தார்கள் அவர்கள்?அவர்களிடம் ஏன் இப்படி ஒரு அநியாயமான இழப்பை வலுவில் திணிக்க வேண்டும்?

"இழந்தவர்களுக்கே தெரியும் இழப்பின் வலியும் துக்கமும்".

என் அப்பா வழித் தாத்தா அப்பாவுக்கு பத்து வயதிருக்கும் போதே மரணித்து விட்டார்.இளம் வயதிலேயே கடும் ஆஸ்த்துமாவின் தாக்கத்தால் நிகழ்ந்த இயற்க்கை மரணம் தான் அது!!! ஆனாலும் அந்த மரணத்தின் வலியை என்னாலும் உணர முடிகிறது . பள்ளி செல்லும் வயதில் அப்பா இல்லாததின் கொடுமையை எவ்விதம் விளக்க முடியும்? ஏக்கமான பார்வை தருமே ஓராயிரம் விளக்கங்களை.

அப்பா இல்லாமல் தான் பட்ட அவஸ்தைகள் தன் பிள்ளைகளுக்கு வந்து விடக் கூடாதே என்ற முன்னெச்சரிக்கை உணர்வுகளை என் அப்பாவின் ஒவ்வொரு அசைவுமே எங்களுக்கு உணர்த்தியதுண்டு இப்போதும் கூட,எப்போதும் மிதமான வேகத்துடன் கூடிய வாகனப் பயணம் ...அதில் ஒன்று .இந்த உணர்வு எல்லா அப்பாக்களுக்குமே இருக்க வேண்டும் தானே?

நாங்கள் நாற்பது ...நாற்பத்து ஐந்துக்கு மேல் ஸ்பீட் போக அப்பாவுக்கு பயம் என்று விவரம் புரியாமல் கேலி செய்திருக்கிறோம் தான்...பக்கத்து வீட்டு இளைஞன் கிழக்கு கடற்கரைச் சாலையில் துள்ளத் துடிக்க அதி வேகப் பயணத்தின் ஆசையாலும் ஹெல்மெட் போடாத காரணத்தாலும் இரண்டு லாரிகளுக்கிடையில் சிக்கி சின்னா பின்னமாகி பிண வண்டியில் கொண்டு வரப் படுவதைப் பார்க்கும் வரை...!!!

இங்கு நான் சொல்ல வந்தது என் அப்பாவைப் பற்றிய பாராட்டுரை அல்ல ;ஒரு தகப்பனாருக்கு இருக்கும் பொறுப்புணர்வை.இப்படி இருக்கும் அப்பாக்களால் தற்கொலை முடிவு எடுக்க முடியுமா? வாழ்வின் மீது ஒரு பிடிப்பு மட்டும் அல்ல ...நாளை நல்ல நாளாய் விடியும் என்ற நம்பிக்கையும் வேண்டும்.எதை எதையோ காதலிக்கிறோமே? வாழ்வைக் காதலித்தால் என்ன தவறு? என்ன கெட்டுப் போகும்?

என் அப்பா வழிப் பாட்டி கணையத்தில் புற்று நோய் தாக்கி வாழ்வின் கடை நிலையில் மிக்க உடல் வேதனை கண்டு இறந்தார்.அப்போதும் நான் அவரிடத்தில் கண்டது வாழ்வின் மீது வெறுப்பை அல்ல...இன்னும் கொஞ்சம் வாழ்ந்தால் என்ன ? என்ற துடிப்பை மட்டுமே.கால்கள் எல்லாம் வீங்கி வெடித்துப் போவது போன்ற நிலை,நீடித்த தொடர்ந்த வயிற்று வலி,மூச்சுத் திணறல்,மலச்சிக்கல்,உணவுக் கட்டுப்பாடு,ஏன் கடைசி ...கடைசியாய் வெறும் நீர் உணவு மட்டும் தான் என்ற நிலையிலும் என் பாட்டியிடம் வாழ வேண்டும் என்ற ஆசை நிறையவே இருந்தது.

இத்தனைக்கும் இளம் வயதில் கணவரை இழந்து ,தன் சொந்த அண்ணனின் அடாவடித் தனத்தால் இருந்த சொத்துக்களையும் இழந்து தினந்தோறும் கஷ்ட ஜீவனம் என்ற நிலையில் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய இரும்புப் பெண்மணி அவர்...சொகுசான வாழ்க்கை வாழ்ந்த செல்வ சீமாட்டி அல்ல என் பாட்டி .

இப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்...தான்!எனக்கு இதற்க்கு மேல் தற்கொலை வேண்டாம் என்று வாதாட போதுமான வார்த்தைகள் சிக்கவில்லை.எப்படிச் சொன்னாலும் சொல்ல வந்த விஷயம் இது தான் .தற்கொலை தவறு இதை சொல்லத்தான் இவ்வளவு நீளமான பதிவு.

நிச்சயம் ஒருநாள் எல்லாம் மாறும் ...என்று நம்புங்கள் ...நிறையவே கஷ்டம் தான் ...கஷ்டப் பட்டு நம்புங்களேன் ,பொசுக்கென்று உயிரை விட்டு விட்டு உங்களை நம்பி இருப்பவர்களை அனாதைகள் ஆக்குவதை விட "கோபத்தையோ மன அழுத்தத்தையோ கொஞ்சம் ஒத்திப் போட்டால் என்ன?

அப்பாக்களே...அம்மாக்களே தற்கொலை மட்டும் வேண்டவே வேண்டாம் ப்ளீஸ் ...!!!

Wednesday, December 10, 2008

தேவனின் லக்ஷ்மி கடாட்சம்(மலரும் நினைவுகள்)

ஒரு கல்லூரி விடுமுறை நாளில் தான் நான் பழைய எழுத்தாளர் தேவனின் "லக்ஷ்மி கடாட்சம் " நாவலை வாசித்து முடித்தேன் . கல்கியின் "பொன்னியின் செல்வனை " போல மூன்று மிகப் பெரிய புத்தகங்கள்முதலில் கொஞ்சம் போர் அடித்தாலும் போகப் போக கதையின் போக்கு என்னை ஈர்த்துக் கொண்டது .

இரெண்டே நாட்களில் முழு நாவலையும் முடித்து விட்டேன் .

கதை ஒன்றும் புதுமையானதில்லை ...ஆனாலும் கதை சொல்லும் நேர்த்தி இருக்கிறதே அதில் இருக்கிறது ஒவ்வொரு கதாசிரியரின் சாமர்த்தியம் ;

எனக்கு தேவனின் எழுத்து நடை ரொம்பப் பிடித்து போனது எதனாலோ ? ரொம்பப் பேருக்கு பிடிக்குமோ என்னவோ தெரியவில்லை !!! எனக்கு அவரின் பிராமணத் தமிழில் எதோ வசீகரம் தென்பட்டு கவர்ந்து கொண்டது .

சரி நாவலுக்கு வருவோம் .

இந்தக் கதையின் நாயகி "காந்தா மணி "

நாயகன் "துரை சாமி "

அந்தக் கால பழைய பட "ரங்கா ராவ் " போல இங்கேயும் ஒரு charactor உண்டு அவர் " கங்காதர முதலியார்

"அப்புறம் வில்லனின் நல்ல நண்பர் "சிங்காரம் "

கதைச்சுருக்கம் :-

காந்தாமணி தனது சிற்றன்னையின் கொடுமையிலும் நற்பன்புகளோடு வளர்ந்து வந்த ஒரு நல்ல பெண்மணி . அவளது வாழ்வைப் பாழாக்க நினைக்கும் சிற்றன்னையிடமிருந்து முன்னெப்போதோ ஒருமுறை பால்ய காலத்தில் உடன் விளையாடிய நண்பனான துரைசாமியின் மீது ஏற்பட்ட பரிவு கலந்த காதலால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு தனியே வாழத்தொடங்குகின்றனர் .

அப்போது தான் சித்தியின் மூலம் வில்லன் (மன்னிக்கவும் ... பெயர் மறந்து விட்டது ) kandhamani , துரைசாமியின் வாழ்வில் விதி விளையாட ஆரம்பித்து ஒரு பெண் குழந்தை ( மீனாக்ஷி ) பிறந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் பிரிய நேரிடுகிறது ;

துரைசாமி பணப் பற்றாக்குறையால் பர்மா செல்கிறான் , அங்கே " லக்ஷ்மி கடாட்சத்தால் " ஸ்ரீமான் கங்காதர முதலியார் எனும் பெரிய மனிதரை சந்திக்கிறான் , அவரது தயவால் வாழ்கையிலும் முன்னேறுகிறான் ..பலன் என்ன ?

பணம் நிறைய சேர்த்துக் கொள்ள முடிந்தாலும் குடும்பம் இந்தியாவில் என்ன கதி ஆனது எனத்தெரியாமல் கலங்குகிறான் ...இப்போதைப் போல அன்று செல்போன் வசதிகளோ ...இன்டர்நெட் வசதிகளோ கிடையாதே !!!

எனென்றால் கதை நிகழும் காலகட்டம் விடுதலைக்கு முன்பு என நினைக்கிறேன் .இப்படிச் செல்லும் கதையின் போக்கில் துரைசாமி பல்வேறு இன்னல்களையும் தாண்டி மறுபடி தன் குடும்பத்தை அடைந்து சந்தோஷிக்க நினைக்கும்போது மறுபடி வில்லன் வந்து தன் வேலையைக் கட்டுகிறான் ...

பலன்துரைசாமி தன் மனைவி காந்தா மணியை சந்தேகிக்க தொடங்குகிறான் ;கணவன் தன்னோடு இல்லாத காலத்தில் காந்தாமணி பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கிறாள் .பணத்தின் வழியாக அவளை அடைய நினைக்கும் வில்லன் அது முடியாமல் போகவே wherever she goes இடங்களில் எல்லாம் அவளை வாழ விடாமல் தொடர்ந்து துயரங்களுக்கு உட்படுத்துகிறான் .

எல்லாம் முடிந்து இனியாவது நல்வாழ்க்கை கிட்டும் என ஆறுதலடைய விடாமல் கடைசி முயற்சியாககாந்தாமணி யின் நடத்தை பற்றி அவளது கணவனிடம் இல்லாத பொல்லாத நடக்காத விசயங்களைக் கூறி அவனை சஞ்சலத்திற்கு உட்படுத்துகிறான் வில்லன் .

துரைசாமியும் he also a good human ...இங்கே காந்தாமணி கணவன் தன்னை விட்டுப் பிரிந்த பின் வயிற்றுப் பாட்டிற்காக தன் குழந்தை மீனாக்ஷியின் நலனுக்காகவும் தனக்கு இயல்பாகவே she has good voice சாரீர (குரல் ) வளத்தால் பாடகியாகி விடுகிறாள் ;நல்ல நல்ல தெய்வீக பாடல்கள் இவள் பாடி வெளிவந்தவை எல்லாம் நன்றாக விற்பனை ஆனதால் peak of her feild போகிறாள் காந்தாமணி ;

இந்த நேரத்தில் மறுபடி ஒன்று சேர முடியாமல் வில்லன் இருவர் மனதையும் நஞ்சாக்கி விட முயல்கிறான் .இறுதியில் கங்காதர முதலியார் ,சிங்காரம் போன்ற நல்ல மனம் படைத்தவர்களின் உபாதேசத்தின் பின் தம்பதிகள் ஒன்று சேர்வதே "லக்ஷ்மி கடாட்சம் " நாவல் .

இதில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் நாயகி காந்தாமனியை விடவும் கங்காதர முதலியார் தான் ;

அவரது கொள்கை சரியோ...தவறோ ? பணம் பெட்டியில் நிரம்ப நிரம்ப அதை அள்ளி அள்ளி வெளியில் விட்டுவிட வேண்டும் அப்பா ...அது வியாபார நிமித்தமாகவோ ...பிறருக்கு உதவும் நிமித்தமாகவோ இருக்கலாம் ,பணம் பெட்டியில் வெறுமே பொங்கி வழிய...வழிய உள்ளே வைத்துப் பூட்டவே கூடாது .

பெட்டி காலியானால் தான் திரும்பத் திரும்ப நிரம்பும் ...நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும் " இதே அவர் தன்னை அண்டி வருவோருக்கு சொல்லும் உபதேசம் .

நன்றாகத்தான் போகிறது நாவலின் ஓட்டம் !

உங்களுக்கும் இஷ்டமிருந்தால் ஒரு முறை வாசித்து தான் பார்க்கலாமே !!!

குல தெய்வக் கதை (தொடர்கிறது )

அண்ணிகளுக்குள் நடந்து கொண்டிருந்த சம்பாசனை எதுவும் தெரியாத கிச்சம்மாள்எப்போதும் போல வீடு திரும்புகிறாள் கொஞ்சம் சீக்கிரமாகவே ;
ஒட்டுக் கேட்ட அண்ணன் போய் மற்ற அண்ணன்களிடம் என்ன சொன்னானோ?
அத்தனை பெரும் அன்று சீக்கிரமாகவே வீடு திரும்பி விட்டனர்.
மறுநாள் விடிந்தால் வெள்ளிக்கிழமை .
பொழுது விடிந்தது ;
என்றும் இல்லாத அதிசயமாக அன்றைக்குப் போய் பெரிய அண்ணன் கோழி அடித்துக் குழம்பு வைக்கச் சொன்னார்.சரி என்று வீட்டில் தடா புடலாக கோழி அடித்தக் குழம்பு வைத்து எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து தங்கையுடன் சாப்பிட்டனர் .
அண்ணன்கள் ஒவ்வொருவரும் பாசம் மிகுந்து தங்கைக்கு மாறி மாறிப் பரிமாறினர்.கிச்சம்மவுக்கு நெஞ்சடைக்க அழுகை வந்தது அவர்களது பாசத்தைக் கண்டு ;இப்படிப் பட்ட பாசக்கார அண்ணன்களை விட்டு விட்டு யாரோ ஒரு ஆணைக் கல்யாணம் செய்து கொண்டு இன்னொரு வீட்டுக்கு போகப் போகிறோமே!
யாரோ ...எந்த ஊரோ ?
அந்த ஊர் இந்த ஊரிலிருந்து இன்னும் எத்தனை தூரமோ?
நினைத்தால் உடனே புறப்பட்டு வரக்கூடிய தொலைவோ இல்லையோ?
என்ன தான் முகம் கொட்த்துப் பேசா விட்டாலும் அண்ணிகளைப் பிரிவதும் கூட இந்த நேரத்தில் இவ்வளவு துக்கமாக இருக்கிறதே ?
என்று அந்த பேதை பெண் நினைத்து மறுகிக் கொண்டிருந்தாள் .
ஆயிற்று ...எல்லோரும் சாப்பிட்டு முடித்தார்கள் .
கிச்சம்மா ரொம்ப நாட்கள் கழித்து அண்ணிகள் வருவதற்கு முன்பு தன் வீட்டில் எப்படி சுதந்திரமாகப் புழங்கினாலோ அதே போல இருப்பதற்கு தைரியம் உள்ளவளாய் ;பின்வாசலில் தலையணை போட்டு கொஞ்சம் கண்ணயரலாம் என்று ஆசை ஆசையாக பின்வாசலுக்கு நேரே வெறும் பாயில் தலையணை இட்டுக் கொண்டு கோழிக் குழம்பு தந்த தூக்கம் மெதுவாக கண்ணைச் சுழற்ற ஒருக்களித்து படுத்து கண் அயர்ந்தாள்.
ஏதேதோ கனவுகள் சூழ மெல்ல மெல்ல உறங்கிப் போனாள்;ரொம்ப நாட்கள் கழித்து நிம்மதியான உறக்கம் .
தன்னைக் காப்பாற்ற அண்ணன்கள் இருக்கிறார்கள் என்ற நிம்மதியோ என்னவோ?
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே அறிந்துகொள்ள தேவையில்லை எனும்படி ஆழ்ந்த உறக்கம் .
ஆனாலும் மிகப் பயங்கரமான நேரத்தை நாம் உணரா விட்டாலும் நமது புலன்கள் அறிந்து கொள்ளுமாமே ?!அப்படித்தான் தலைமாட்டில் ஏதோ ஆள் அரவம் கேட்டு ; வீட்டுப் பூனையோ ...ஆட்டுக் குட்டியோ ? என்று அரைக்கண் தூக்கமாய் விழிகளை மலர்த்தியவள் அதற்குப் பிறகு அதிர்ச்சியில் பிரமை பிடித்துப் போய் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள தொண்டை வறண்டு போய் மலங்க மலங்க விழித்தாள்.
எதிரே ...அம்மா சீதனமாக கொண்டு வந்த பழைய அம்மிக் குழவியை ஏந்தியவாறு பெரிய அண்ணன் நின்றார்.வெகு உறுதியாக அதை தன் தங்கையின் தலையில் போட்டே தீருவது என்ற முடிவோடு.
கிச்சம்மா ஊமையானாள்...பேச்சு வரவில்லை ...!
திக்கித் திணறி ...அண்ணா என்பதற்குள் அந்த பாசமிக்க அண்ணன் ;தன் அழகான சின்னத் தங்கை ...கடைசியாய் பிறந்தாலும் பாதுகாக்க அண்ணன்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையிலேயே இத்தனை நாட்கள் வாழ்ந்த ,
தூங்குவதற்கு ஒரு நிமிடம் முன்பு கூட தன் அண்ணன்களின் பாசத்தில் உருகிப் போய் திணறிய அந்த அன்பான வெள்ளந்தி தங்கையின்
இளம் தலையில் அந்தப் பழைய பெரிய அம்மிக் குழவியை போட்டே விட்டான் .
தங்கையின் தலை சிதறிய அடுத்த நொடி உயிர்ப்பறவை கதறிக் கொண்டு பறந்தது .அண்ணா நீயா ? என்று கேட்டுக் கொண்டே அந்த உயிர் தெருவில் கதறிக் கொண்டு பறக்க அந்நேரம் மாலை மயங்கும் அந்தி நேரம் பிரம்மா முகூர்த்தம்
"அந்த ஊர் வழக்கப் படி ஊர்க் காவல் தெய்வம் பெரியாண்டவர் வேட்டைக்குப் புறப்படும் நேரம்.
"ஜல் ஜல் என்று சலங்கை ஒலிக்க வேட்டைக்கு தன் பைரவ மூர்த்தியுடன் எதிரே வந்த பெரியாண்டவர் தன் காலடியில் கதறிக் கொண்டு வந்து மோதிய உயிரின் அலறல் கேட்டு ஒரு வினாடி திகைத்து நின்றாராம்.
மறுநிமிடம் நடந்ததை உணர்ந்து "அண்ணா என்று அபயக் குரலோடு என் காலடியில் விழுந்த கன்னியே இன்று முதல் நானே உனக்கு அண்ணன் ...உனக்கு காவல் ...என்று அழைத்துப் போய் தன் கோயிலில் தனி சன்னதி கொடுத்து ஆட்கொண்டாராம் .
தன் சொந்த அண்ணன்களால் மிக மோசமாக நம்பிக்கைத் துரோகம் இழைத்து கொடூரமாக கொல்லப் பட்ட கிச்சம்மா அன்று முதல் "பெரியாண்டவரால் " குலம் காக்கும் குல தெய்வமானாள் .
இதோடு கதை முடிகிறது .
இந்தக் கோவில் கோவில் பட்டிக்கு அருகே இருக்கிறது .
உண்மையில் நடந்த கதை என்று பேசிக் கொள்கிறார்கள் .
கிச்சம்மளுக்கு பூஜை முடிந்ததும் பெரியாண்டவரையும் மறக்காமல் நன்றியோடு நினைத்து பூஜை புனச்காரங்களுடன் வணங்கி விட்டே பக்தர் கூட்டம் கலைகிறது.
வருடா வருடம் மாசி மாதம் பூஜை நடக்கிறது .

Tuesday, December 9, 2008

குலதெய்வக் கதைகள் (ஒன்று)

திருமணமாகி கடந்த ஐந்து வருடங்களில் சென்ற வருடம் தான் குல தெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்புகிட்டியது,எல்லாக் குல தெய்வக் கோயில்களைப் போலவே எங்களது கோயிலும் பஸ் அடிக்கடி வராத...விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் பஸ்சே வராத ஒரு புராதன கிராமத்தின் ஒதுக்குப் புறத்தில் தான் இருந்தது...;

ஒரு வழியாக காரில் போய் இறங்கினோம் .

குல தெய்வங்களுக்கென்றே ஓரு ஸ்பெஷல் கதை இருக்குமே!

அது நிஜமா இல்லை கற்பனையா?

கேட்டால் தெய்வ குத்தமாகி விடுமே?அதனால் கேட்கவில்லை.

ஆனால் கதையைக் கேட்கலாம் தானே?!

கிச்சம்மா :-

இது தான் எங்கள் குல தெய்வத்தின் பெயர். சரி இனி கதைக்கு வருகிறேன்.

ஓரு ஊரில் ஐந்து அண்ணன் தம்பிகள் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தனர்,அவர்களுக்கு ஒரே ஓரு தங்கை அவள் தான் கிச்சம்மா.அண்ணன்களின் செல்லத் தங்கையாக வளர்ந்து அந்த ஊரில் செல்வாக்கான குடும்பத்தின் ஒரே பெண் வாரிசாக இருந்த கிச்சம்மாளுக்கும் வழக்கம் போல அண்ணிகள் கெடு மதி கொண்டவர்களாகவே அமைந்து அவளது வீட்டிற்கு வாழ வருகின்றனர்.

முதலில் சின்ன சின்ன உரசல்கள் மட்டும் தான் .வந்த அன்னிகளில் ஒருத்திக்காவது நாத்தனாரின் மேல் துளி பிரியம் கிடையாது.எப்போதடா இவளை எவன் தலையிலாவது கட்டி வீட்டை விட்டுத் துரத்துவோம் என்று இருந்திருப்பார்கள் போல?!

அண்ணன்கள் மட்டும் தான் ஆதரவு...மற்றபடி பெற்றவர்களும் கிச்சம்மல் பிறந்த சில வருடங்களில் கடமை முடிந்ததென இறந்து விட ,இப்போதைக்கு அண்ணன்கள் வேலைக்கு என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டால் கிச்சம்மாவை சாப்பிடச் சொல்லவோ ...நலம் பேணவோ...சிரித்துப் பேசி கொண்டாடவோ வீட்டில் ஓரு நாதியுமில்லை.

இப்படிப் பட்ட சூழ்நிலையில் தனிமையும்...தனக்கு யார் இருக்கிறார்கள் என்ற கழிவிரக்கமும் அவளை வாட்டத் தொடங்கியது .அப்போது அவர்கள் வீட்டிற்கு பக்கத்தில் ஓரு நாடார் குடி இருந்தார்...அவருக்கும் குடும்பம் உண்டு .கை ராட்டையில் நூல் நூற்று அதை விற்று அன்றாடம் பாடு பார்த்துக் கொண்டு அந்த ஊரில் அவர்களும் கொஞ்ச காலமாக வாழ்ந்து வந்தனர்.

அவரது வீட்டுப் பெண்கள் கிச்சம்மாவுடன் சிறிது அன்பாகப் பழகுவார்கள்.இவளும் எப்போதாவது அங்கே போய் கை ராட்டை சுற்றுவதுண்டு.முன்பு எப்போதாவது என்றிருந்த பழக்கம் பிற்பாடு அண்ணிகள் வந்ததும் அவர்களது உதாசீனத்தை தாங்க முடியாமல்...அதை அண்ணன்களிடமும் சொல்ல முடியாமல் ...மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் ரெண்டும் கெட்டான் நிலையில் இருந்த அந்த அறியாப் பெண் கிச்சம்மா அன்பு கண்ட இடம் இதம் என்று எண்ணி அந்த நாடார் வீட்டுப் பெண்களுடனேயே பகல் பொழுது பெரும்பான்மையும் கழிக்கத் தொடங்கினாள்.

ராட்டையில் பேசிக் கொண்டே நூல் நூற்ப்பது...

ஒருவருக்கொருவர் விடுகதை போட்டு அதை அழிப்பது....

தாயம் ஆடுவது...

பல்லாங்குழி அடுவது...

ஆற்றுக்குத் தண்ணீர் எடுத்து வர ஒன்றாகப் போவது..வருவது

என்று ஓரு தாய் மக்களாகப் பழக ஆரம்பித்து விட்டாள்.இவளோ தெலுங்கு நாயக்கர் குடும்பத்துப் பெண் .அவர்களோ நாடார் குடும்பத்தார் .இதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்த அன்னிகளுக்கு சகிக்கவில்லை.நாம் அவளை நோகடித்து விரட்டலாம் என்று பார்த்தால் அவள் இப்படி சந்தோசமாக இனியும் இருப்பதா என்று நினைத்தார்களோ என்னவோ?

அண்ணன்கள் வீடு திரும்பியதும் தங்கையைப் பற்றி விசாரிக்கும் போதெல்லாம் ...;சாடை மாடையாக அவளது நடத்தை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக சொல்ல ஆரம்பித்தனர்.முதலில் தங்கள் தங்கை அப்படி இல்லை என்று மனைவிகளிடம் சண்டையிட்ட அண்ணன்மார்கள் நாளாக ...நாளாக தங்களது சண்டையில் வலுவிழந்தனர்.

காரணம் இந்த அறியாப் பெண் சில நாட்கள் அண்ணன்கள் வீடு திரும்பிய பிறகும் கூட வெகு நேரம் கழித்து வீடு திரும்பியது தான்.தூங்கவும் ...குளிக்கவும் மட்டுமே அவள் வீட்டில் இருப்பது என்று நிலைமை மாறி விட்டது.பாவம் அந்த அபலைப் பெண் தன்னை ஓரு மனுஷியாக மதித்து நடத்தும் இடத்தை நாடி அவள் ஓடிக் கொண்டிருப்பது வயல் வேலைகளில் அலுத்து சலித்து வீடு திரும்பும் அண்ணன்களுக்குப் புரிந்து விடும் என்று நம்பினாலோ என்னவோ?அவளும் அண்ணிகளின் உதாசீனம் பற்றி அவர்களிடம் எதுவும் இதுநாள் வரை சொன்னாலில்லை.

எங்கே குடும்ப ஒற்றுமை கெட்டு விடுமோ என்று கூட அவள் எண்ணினாலோ என்னவோ?சில நாட்கள் கழிந்ததும் மூத்த அண்ணன் வந்து கிச்சம்மாவிடம் ஒருநாள்;

நீ இனிமேல் அந்த நாடார் வீட்டுக்குப் போகதே ...என்று மட்டும் சொல்லி விட்டுப் போய்விட்டார்.காரணம் புரியாமல் மருகினாலும் அறியாத சின்னப் பெண் தானே ,அண்ணன்கள் வெளியேறியதும் அவள் பாட்டுக்கு நாடார் வீட்டுக்கு எப்போதும் போல் போய்வர இருந்திருக்கிறாள்.

அப்புறம் இளைய அண்ணன் வந்து ஒருநாள் தங்கையிடம்,ஏனம்மா பெரிய அண்ணன் தடுத்தும் கூட நீ அங்கே போய் வந்து கொண்டிருக்கிறாய்?போதும் இனி போகாதே ,என்றிருக்கிறான்.கிச்சம்மாவுக்கு இப்போதும் காரணம் தெரியாவிட்டாலும் எதிர்த்துக் கேள்வி கேட்டுப் பழக்கமில்லாத காரணத்தால் ...ஏதோ ஜாதிக்காகச் சொல்கிறார்கள் போலிருக்கிறது என்று அமைதியாகி விட்டாள்.

அதோடு அன்றைக்கு பெரிய அண்ணன் தங்கைக்கு நல்ல வரன் அமைந்திருப்பதாகவும் கூடிய சீக்கிரம் கல்யாணம் வைத்து விட வேண்டியது தான் என்றும் பேச்சு அடிபடவே;கிச்சம்மா சந்தோசமானாள் ...கூடவே கல்யாணமான பிறகு தான் எந்த ஊரில் வாழப் போகிறோமோ ?

கடைசி கடைச்யாக இன்று ஓரு நாள் மட்டும் அந்த நாடர் வீட்டுக்கு போய் கல்யாண சேதியைச் சொல்லி விட்டு வந்து விடலாம் என்று அண்ணாக்கள் வெளியேறியதும் இவள் அங்கே ஓடி இருக்கிறாள்.

சும்மாவே வாயை மென்று கொண்டிருந்த அண்ணிகளுக்கு அவள் கிடைத்தால் விடுவார்களா என்ன?அவளைப் பற்றி வாயில் வராத வார்த்தைகள் பல சொல்லி தங்களுக்குள் புறம் பேசிக் கொண்டு இருந்தனர்.

அந்நேரம் எதையோ மறந்து போய் வயலுக்குப் போன அண்ணன்களில் ஒருவர் மறந்த பொருளை எடுக்க வீடு வரவும் ஆவறது காதுகளில் மனைவிகளின் நாராசப் பேச்சு விழுகிறது .இப்படியா கல்யாணம் பேசி முடித்த ஓரு வயசு வந்த கௌரவமான குடும்பத்துப் பெண் வெட்கம் கேட்டுப் போய் அந்த வீட்டுக்கு இப்படி ஓடுவாள் .?

இத்தனைக்கும் அவளது அண்ணாக்கள் இத்தனை தூரம் கண்டித்தும் அவள் இப்படி செய்தாளானால் அண்ணன்களின் கௌரவம் என்ன ஆவது?ஊர் என்ன பேசும்?

நாளை பெண் பார்த்து நிச்சயிக்க வருபவர்கள் எப்படிக் குத்திக்காட்டி மட்டம் தட்டுவார்கள்?

இத்தனை திமிரும் ஆணவமும் இன்னொரு குடும்பத்தில் வாழப் போகும் பெண்ணுக்கு தேவையா?

அவளுக்கென்ன ஊரெல்லாம் அவளை வளர்த்த அண்ணன்களைத் தானே குறை சொல்லி நாக்கை பிடுங்கிக் கொள்ளும் படி கேள்வி கேட்கும்?இவளை எல்லாம் நகை நட்டு செலவு செய்து இனொரு இடத்துக்கு வாழ அனுப்பினால் அங்கே போயும் இப்படி நடந்து கொள்ள மாட்டாள் என்று என்ன நிச்சயம்?

இவளால் அவளது அண்ணன்களுக்கு மட்டுமா கெட்ட பெயர்...மொத்தக் குடும்பமும் அல்லவா மானம் கெட்டு நிற்க வேண்டும் ஊரார் முன்பு.இப்படியெல்லாம் ஏதேதோ தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்,இதை கேட்ட அண்ணன் என்ன செய்திருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?

அதை அடுத்த பதிவில் தொடர்கிறேன்...;

Monday, December 8, 2008

இந்த வார ஜூனியர் விகடனில் வெளிவந்த பயனுள்ள தகவல்

இந்த வார ஜூனியர் விகடனில் வந்த பயனுள்ள செய்தி :-

சென்னை அண்ணாநகர் சிந்தாமணியில் கிளினிக் வைத்திருக்கும் பல் டாக்டர் .கோபி கிருஷ்ணன் புதிதாக ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறார்.இதற்காக அவரை மருத்துவக் கழகம் பாராட்டியதோடு அவரது கண்டுபிடிப்பையும் பொது மக்களுக்கு அறிமுகப் படுத்தியுள்ளது .

சிறுவயதில் எல்லோருக்கும் முளைத்த பால் பற்கள் ஆறிலிருந்து ஏழு வயதிற்குள் விழுந்து அதன் பின் மறுமுறை பல் முளைக்கும் ,இது எல்லா மனிதர்களுக்கும் இயற்க்கை .இப்படி இரண்டாவதாக முளைத்த பற்கள் ஏதேனும் விபத்திலோ அல்லது தற்செயலாகவோ உடைந்து விட வாய்ப்பிருக்கும்...அப்படி உடையும் பற்கள் இயற்கையாக மறுபடி முளைக்க வாய்ப்பு இல்லை .

உடைந்த பற்களை எடுத்துக் கொண்டு பல் டாக்டர்களிடம் ஓட வேண்டும்.குறிப்பிட்ட நேரத்துர்க்குள் அந்தப் பற்களை மறுபடி ஈறுகளில் வைத்து பொருத்த இயலாவிடில் செயற்கைப் பல் செட் தான் பொருத்த வேண்டும். முன்பெல்லாம் இப்படி விபத்தில் பல் உடைந்தவர்கள் உடைந்த பற்களை ஐஸ் ...அல்லது பாலிதீன் பைகளில் போட்டு எடுத்துக் கொண்டு மருத்துவரிடம் ஓடுவார்கள் .

குறிப்பிட்ட நேரத்திற்குள் போய் சேர முடியாவிடில் அந்தப் பற்களை மறுபடி பொருத்த முடியாதே...அவற்றின் உயிர் செல்கள் இறந்து விடும்.பிறகு குப்பையில் தான் போட வேண்டும் .ஆனால் இப்போது டாக்டர் கோபி கிருஷ்ணன் கண்டுபிடித்த முறையின் படி குறைந்தது இரண்டிலிருந்து ஆறு மணி நேரம் வரை உடைந்த பற்களின் உயிர் செல்களைப் பாதுகாக்கலாம் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது .

பற்கள் உடைந்ததும் அவற்றை உடனடியாக இளநீரில் போட்டு எடுத்துக் கொண்டு மருத்துவரை அணுகலாம் .இளநீரில் உள்ள உயிர் சத்துக்கள் உடைந்த பற்களின் உயிர் செல்களை இறந்து விடாமல் காக்க உதவுகின்றனவாம் .இது ஆராய்ச்சி மூலம் நிரூபணமாகி உள்ளது .

சுவாமியின் சிநேகிதர்கள் (சுவாமி அண்ட் ஹிஸ் பிரெண்ட்ஸ்-அத்தியாயம் ஒண்ணு)

இந்த திங்கக் கிழமை வரலேன்னு யார் அழுதா?

எப்போ பாருங்க ஞாயிற்றுக் கிழமை முடிஞ்சதும் டாண்ணு திங்கட்கிழமை வந்துடறது!?

பாவம் சுவாமிக்கும் திங்கட்கிழமை பிடிக்கவே இல்லை போல அதான் "கதையோட ஆரம்ப அத்தியாயத்திலேயே கண்ணை இருக்க மூடிண்டு சேர்ல உட்கார்ந்து யோசிச்சுண்டு இருக்கான்.இருக்கறது வெறும் ரெண்டே மணி நேரம் தான் அதுக்குள்ளே எல்லா வீட்டுப் பாடமும் செய்து முடிச்சு பாடசாலைக்கும் (பள்ளிக் கூடம் தான்) கிளம்பியாகணும் .எப்படி முடியும்?

இதப் பத்தி அந்த கணக்கு வாத்தியார் நெருப்புக் கண் வேத நாயகமாச்சும்...இல்லாட்டி அந்த பைபிள் வாத்தியார் எபனேசராச்சும் ஒரு நாளாவது நினைச்சுப் பார்த்திருப்பாங்களா?பையன்களின் கஷ்டத்தை நினைச்சுப் பார்க்காத வாத்தியார்கள்!(இவங்களுக்கு நம்ம மணி ஸ்டைல் ல சேர்ல உட்கார இடத்துல முள்ளோ ...ஆணியோ வச்சாக் கூட தப்பில்லையோ?!)

இதுக்கு சரித்திர வாத்தியார் டி.பிள்ளை எவ்வளவோ தேவலை ...அவரே எல்லாப் பாடத்தையும் எடுத்தா எவ்ளோ நல்லா இருக்கும்?அவர் சரித்திரக் கிளாஸ் எடுக்கறச்சே இந்தக்கிளைவ் ,வாஸ்கோடகாமா,எல்லாரும் நம்ம சொந்தக்காரா போல இல்ல தோண வெச்சிடறார்.ஒரே ஒரு பாட வேலைல ஒன்பது கதை சொல்லிடுவாரே!!!அவரைக் கண்டா மாத்திரம் இந்த "ஆல்பர்ட் மிசன் ஸ்கூல் ஹெட் மாஸ்டருக்கு ஏன் தான் இத்தனை துக்கம் வரணுமோ?மொத்தத்துல ஸ்கூல் பையன்கள் சிரிச்சுகிட்டே சந்தோசமா பாடம் கேட்டா உலகத்து ஹெட் மாஸ்டர்ஸ் யாருக்கும் பிடிக்காதோ என்னவோ?(ஹெட் மாஸ்டர் டவுன்...டவுன்...)

சுவாமி பாவம் ஒரு அப்பாவி பையன் !!!அவன் பாட்டுக்கு தானுண்டு ,தன் சிநேகிதாள் உண்டுன்னு இருந்தவன் தான்...எல்லாம் இந்தக் கணக்கு வாத்தியார் நெருப்புக் கண்ணால வந்தது .அன்னைக்கு வீட்டுப் பாடக் கணக்கு எல்லாமே தப்புன்னு மூஞ்சில நோட்டை வீசி அடிச்சுத் தொரத்தினாரோ இல்லியோ? அன்னைக்கு தான் இன்னொன்னும் நடந்ததுங்கறேன் ,

அடுத்து பைபிள் பாடம் எடுக்க எபனேசர் வாத்தியார் வந்தார்.அவர் எப்பவும் போல பைபிள் கதைகள் சொல்லிட்டு முடிச்சுட்டுப் போரவரே இல்லை ...எப்போ பார்த்தாலும் ஹிந்து கடவுள்களைப் பத்தியும் எதுனாச்சும் விமர்சனம் பண்ணிண்டே இருப்பார் ...!?

அன்னிக்கு நம்ம சுவாமிக்கு என்ன தான் ஆச்சோ?

அவர் பாட்டுக்கு நம்ம ஸ்ரீ கிருஷ்ணனை வம்புக்கு இழுத்துப் பேசினதோட இல்லாம?உங்க கிருஷ்ணர் உண்மைலேயே கடவுளா இருந்தார்னா ஏன் வெண்ணெய் திருடினார்?பல பெண்களோட நாட்டியமாடிக் கூத்தடிச்சார்...?இவரா உங்களை சொர்கத்துக்கு கூட்டிட்டிப் போவார்னு நீங்க நம்பறிங்க?

அதே எங்க இயேசு கிறுஸ்துவைப் பாருங்க...அவர் வியாதியஸ்தர்களை சொஸ்தப் படுத்தறார்.(சுகமாக்குகிறார்)...சொர்கத்துக்குப் போக வழி காட்டறார்!? உங்க ஹிந்து கடவுள்கள் எல்லாம் உண்மையில் சக்தி இருந்தா கஜினி முகம்மது கோயில் சிலைகளை உடைச்சு தன் வீட்டுப் படியா பயன்படுத்தினப்போ ஏன் அவனை ஒண்ணுமே பண்ணலைனு மட்டமா கேட்டுட்டார் .இது சுவாமிக்குத் தாங்கலை...அவனும் பதிலுக்கு ;

இயேசு தான் உண்மையான கடவுள்னா அவரை ஏன் சிலுவைல அறைஞ்சாங்கானு பதிலுக்குக் கேட்டான்.அப்படியே விட்ருந்தா பிரச்சினையே இல்லை .பைபிள் வாத்தியார் சுவாமி அப்படிக் கேட்டதுக்காக அவனைத் திட்டாம நீ தனியா வந்து கேளு நாம் விளக்கமா சொல்றேன் சொன்னதும் அவனுக்கு தைரியம் வந்து இன்னொரு கேள்வியும் கேட்டுட்டன் .

இயேசு கிருஸ்த்து தான் நல்ல கடவுள்னா அவர் ஏன் .மீனும் ,மாமிசமும் சாப்பிட்டார் ? சாராயம் குடித்தார் ? அப்படின்னு கேட்டுட்டான்.இதுக்கும் சாந்தமா பதில் சொல்லியிருந்தார்னா தான் பைபிள் வாத்தியார் நல்ல வாத்தியார்!!!அவரோ அதுக்குப் பதிலா சுவாமியோட (சுவாமி நாதன்) இடது காதைப் பிய்த்துப் போடப் பார்த்தார் ,

இது ஒரு நல்ல உபாத்தியாயர் செய்யற காரியமா என்ன?(இவங்களுக்கு சேர்ல கண்டிப்பா முள்ளு வச்ச என்ன தப்பாம்?!)இது சுவாமியோட அப்பாக்கு தெரிஞ்சதும் அவர் பங்குக்கு அவர் ஆல்பர்ட் மிசன் ஸ்கூல் ஹெட் மாஸ்டருக்கு ஒரு லெட்டர் கொடுத்து விடறார் அந்த பைபிள் வாத்தியாரோட செயலைக் கண்டிச்சு .அப்புறம் ஹெட் மாஸ்டர் சுவாமியை அது பத்தி விசாரிக்க கூப்பிட்டு அனுப்பறார்.

இதுக்கு நடுவுல கொஞ்சம் நாம சுவாமியோட சிநேகிதர்கள் பத்தியும் பாத்துருவோமே?சாதாரண ச்நேகிதர்களா அவங்க எல்லாம் ?

முதல்ல

சட்டாம் பிள்ளை சோமு :-இவன் எந்தக் காரியத்தையும் சாதிக்கக் கூடிய நம்பிக்கையும் ,சாந்தமும் கொண்ட நண்பன்,வாத்தியார்களுக்கேல்லாம் அவனை ரொம்பப் பிடிக்குமாம்,அந்த அளவுக்கு இவன் கெட்டிகாரனும் இல்லை ...ஆனாலும் வகுப்பில் இவனை மட்டும் எந்த வாத்தியாரும் கேள்வியே கேட்டதில்லை இதுவரை .பள்ளிக்கூடப் பையன்கள் எல்லாருக்கும் ஒரு சந்தேகம் இந்த சட்டாம் பிள்ளை சோமுவை அந்த ஸ்கூல்ல கண்டிக்கக் கூடிய ஒரே ஆள் ஹெட் மாஸ்டர் மட்டும் தானோ ? இதான் டவுட் ,ஒவ்வொரு ஸ்கூல்லயும் இப்படிப் பட்ட பையன்கள் கண்டிப்பா இருப்பாங்க போல இருக்கே? நான் ஸ்கூல் படிக்கற காலத்துலயும் இப்படி உண்டு தான் .அந்தப் பசங்க எப்படித் தான் எல்லா வாத்தியாரையும் கைக்குள்ள போட்டுப்பாங்களோ?

அடுத்தவன் ...
நம்ம ஆள் ...உதவாக்கரை மணி :-

மணியைப் பத்தி நாளைக்கு எழுதறேன்...மணி நம்ம கவுண்டமணி ரேஞ்சுக்கு உதார் காட்டற ஆள் ...கொஞ்சம் ஹோம் வொர்க் பண்ணி தான் அவனைப் பத்தி சொல்லணும் .

விரைவில் தொடரும் ...ஸ்கூல் டேய்ஸ்

அதுக்குள்ளே இதைப் படிக்கக் கூடிய பெரும் பேரு கிடைத்த நல்லவர்களும் வல்லவர்களும் இந்தப் பதிவு பத்தி உங்க கருத்துக்களை கொஞ்சம் இங்க குத்திட்டு போனா நல்லாத் தன்இருக்கும் ...உங்க வசதி எப்படி?அதெல்லாம் செய்வீங்க ...இதைக் கூடவா செய்ய மாட்டீங்க?

Friday, December 5, 2008

டி.டி யில் ஒளிபரப்பான சில மெகா மகாத் தொடர்கள் ஒரு பிளாஷ் பேக்

மெகா சீரியல் பார்க்கவே பிடிக்காமல் போய்விட்டது இப்போதெல்லாம்,விளம்பரங்களுக்கு நடுவில் எதை தான் பார்க்கப் பிடிக்கிறது?பல மெகா சீரியல்களை விட அட...ஏன் பல திரைப் படங்களை விடவும் கூட சில விளம்பரங்கள் படு பாந்தமாகவும் அருமையாகவும் தான் இருக்கின்றன .

ஆனாலும் எத்தனை முறை தான் ஒரே விளம்பரத்தை திரும்பத் திரும்ப பார்க்க முடியும்?இத்தனை நாட்கள் தான் என்ற முன் அறிவிப்பு எதுவும் இன்றி இஷ்டம் போல இழுத்து அடிக்கப் படும் மெகா சீரியல்களில் தினப் படி ஒலிபரப்பு நேரம் ஒவ்வொரு தொடருக்கும் அரைமணிநேரம் மட்டுமே,காலையில் சன் தொலைக்காட்சியில் பத்து மணிக்கு

மகள்மெட்டி ஒலி (மறு ஒலிபரப்பு)

பந்தம்மணிக்கூண்டுசெந்தூரப் பூவேஅத்திப் பூக்கள்

பிறகு ஒரு இரண்டரை மணி நேரம் ஏதோ ஒரு திரைப்படம்(போட்டதையே போட்டுக் கொல்லும்!!! போட்டி இதில் எந்த தொலைக்காட்சியும் விதி விலக்கில்லை)

பிறகு மாலை ஆறுமணியிலிருந்துமேகலாகஸ்தூரிஆனந்தம்திருமதி செல்வம்கலசம்கோலங்கள்அரசி(வீட்ல அரிசி இருக்கோ இல்லையோ கட்டாயம் தினசரி அரசி பார்க்கணும்)

சிவசக்தி (யாரையும் காலா காலத்துல தூங்க விடக் கூடாதுன்னு என்ன ஒரு சபதம் பாருங்க !!!(ராத்திரி பதினோரு மணிக்கு தான் இந்த சீரியல் முடியும்)

அதுக்கப்புறம் தூங்கி காலைல எப்போ எழுந்து மத்த வேலைங்களைப் பார்க்கறதாம் ?மறுபடி காலைல பத்து மணிக்குள்ள வீட்டு வேலை எல்லாத்தையும் முடிச்சே ஆகணுமே !பின்ன மகள் சீரியல் போட்ருவாங்க இல்ல?இப்படித் தாங்க போயிட்டு இருக்கு பல இல்லத்தரசிகள் மற்றும் பாட்டிகளோட தினசரி செட்யூல். அவங்களுக்கெல்லாம் ஓய்வே இல்லை ,

நான் சொன்ன சீரியல் பட்டியல் சன் டி.வி மட்டும் தான் .இன்னும் ...

கலைஞர் டி.வி இருக்குஜெயா டி.வி இருக்கு ராஜ் டி.வி இருக்குஸ்டார் விஜய் இருக்குமக்கள் தொலைக்காட்சி இருக்கு...

சில ஆர்வக் கோளாறு அதி மேதாவிகள் பத்தி சொல்லவே வேணாம்,

அவங்கல்லாம் சூர்யா டி.வி பார்ப்பாங்க ...

ஜெமினி டி.வி பார்ப்பாங்க...

கைராளி பார்ப்பாங்க...எல்லாத்துலயும் சீரியல் தாங்க .

அதான் மொழிபெயர்ப்பாளர் இல்லாமலே எட்டாங்க்ளாஸ் மட்டுமே பாஸ் பண்ண எங்க அத்தை எல்லா மொழில வர சீரியல் கதை எல்லாத்தையுமே அட்சரம் பிசகாம சொல்றாங்களே !!!

ஸோ ... மொழி எல்லாம் சீரியல் உலகத்துக்கு ரெண்டாம் பட்சம் தான் போல?என்ன பெரிய கதை வச்சு வாழுது ?ஒரே கதையைத்தான மாத்தி மாத்தி எல்லாத்துலயும் வேற வேற ஹீரோ ...ஹீரோயின்சைப் போட்டு எடுக்கறாங்க?இதுவும் அந்த அத்தை சொன்னது தான்!

அட நான் சொல்ல வந்த விஷயமே வேற!பார்த்தீங்களா...பார்த்தீங்களா?இந்த பாழாப் போன மெகா சீரியல் அதோட புத்தியக் காட்டிடுச்சு இதுல கூட ;எவ்ளோ நேரமா அதப் பத்தியே பேச வச்சிடுச்சு பாருங்க இதான் மெகா சீரியல் !!!

முந்தி எல்லாம் ஒரு இருபது வருஷம் முன்னால டி.டி ல கூட செவ்வாய்க் கிழமை தோறும் மெகா தொடர் ஒலிபரப்பு ஆகும் .அப்போ பொதிகைலாம் இல்லை .அப்போ எல்லாம் தொடர்களுக்கு நடுவுல நோ விளம்பரம் .தொடர் ஆரம்பிக்க முன்னாடி சில விளம்பரங்கள் போடுவாங்க.

"விக்கோ ...டர்மெரிக்...இல்லை காஸ்மெடிக் ...""

விக்கோ வஜ்ரதந்தி ..."

"பாரு பாரு பபூல் வசந்தம்'(இது ப்ராமிஸ் டூத் பேஸ்ட் விளம்பரம் இப்போ வரதில்லை)

ரால்கோ டயர்ஸ் ...

ஸ்ரீ தேவி வரும் "சூர்யா பல்ப்...சூர்யா பல்ப்" விளம்பரம்

சொட்டு நீலம் டோய் ...ரீகல் சொட்டு நீலம் டோய் "

பேஷ்..பேஷ் ரொம்ப நன்னா இருக்கு (நரசூஸ் காப்பி)

லைபாய் , சின்த்தால்,முக்கியமாக லக்ஸ் சோப்பு விளம்பரம்...இதிலயும் ஸ்ரீ தேவி தான் .

இப்படி சில விளம்பரங்கள் தான் முக்கியமா தொடர் ஆரம்பிக்க முன்னாடியும் ...தொடர் முடிஞ்ச பின்னாடியும் போடுவாங்க.இப்போ மாதிரி தொடருக்கு நடுவுல மூணு நாலு விளம்பர இடைவேளை எல்லாம் அப்போ கிடையவே கிடையாது.

அப்படிப் பட்ட அற்புதமான அபூர்வமான காலத்துல டி.டில ஒலி பரப்பான சில மெகாத் தொடர்களைப் பத்தி எழுதணும்னு தான் இன்னைக்கு இதை ஆரம்பிச்சேன் அது கடைசில இவ்ளோ நீளமா ஆயிடுச்சு .பரவாயில்லை பொறுமை இருக்கறவங்க யாராவது ஒருத்தராச்சும் இந்தப் பதிவை முழுமையா படிப்பாங்க தானே!(நம்பிக்கை தானே வாழ்க்கை!!!)

சரி விசயத்துக்கு வரேன்...அப்போ நான் ரசிச்ச இப்பவும் சன் டி.வி லயோ இல்ல ஜெயா டி.வி லயோ மறு ஒலிபரப்பு செய்ய வாய்ப்பு இருந்தா பார்க்க விரும்பற சில செவ்வாய்க் கிழமை சீரியால்களோட பட்டியல் ,

"கரிப்பு மணிகள்":-

(மறைந்த ஆண்பாவம் பாண்டியனும் ,இளவரசியும் நடித்து வெளிவந்த தொடர் )

"குறிஞ்சி மலர்":-

(இப்போதைய தமிழக உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினும்,தேவிலலிதா மற்றும் பலர் நடித்த நா.பார்த்த சாரதி அவர்களின் நாவல் தொடராக வெளிவந்தது )

"வடிவேலு வாத்தியார்":-

கம்பர் ஜெயராமன் வடிவேலு வாத்தியார் எனும் கௌரவமான ஆசிரியர் வேடத்திலும் மாஸ்டர் கணேஷ் மாணவராகவும் ,பீலி சிவம் பண்ணையாராகவும் நடிக்க வெளிவந்த மெகா ஹிட் தொடர்.

"சித்திரப்பாவை":-

அகிலனின் சித்திரப்பாவை நாவல் "சௌகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவி ஹீரோயினாக நடிக்க வெளிவந்த தொடர்.

"அலை ஓசை ":-

கல்கியின் அலை ஓசை நாவல் ,ஜி.ஜெ என்று அரசியில் ஒரு வில்லக் கதாநாயகன் வருகிறார் ,அவரே தான் அந்த வேணு அர்விந்த் ஹீரோவாக நடிக்க அப்போது வெளிவந்த சீரியல் இது .

"மரியாதை ராமன் கதைகள்":-

இப்போது வெளிவந்த "ஜீ பூம்பா,போலில்லாமல் அப்போது எங்களைப் போன்ற சிறுவர் சிறுமிகளைக் கவர்ந்த மெகா ஹிட் தொடர் இது (அத்தனையும் நீதிக் கதைகள் வாரம் ஒன்றாக வெளிவந்தது ஹீரோ நம்ம மாஸ்டர் கணேஷ் தான்)

அப்புறம் பெயர் சரியாக ஞாபகமில்லை "ரயில் சிநேகிதமா...ரயில் பயணங்களா ...இல்லை சகானாவா சரியாகத் தெரியவில்லை "நிழல்கள் ரவி ஹீரோ பாலசந்தர் இயக்கியது ,அதில் வரும் பாடல் படு பிரபலம்;

"இந்த வீணைக்குத் தெரியாது அதை இசைத்தவன் யாரென்று!!!"

இப்படிப் பல தொடர்கள் வந்தன அப்போது .எல்லாமே ஒரு மணி நேரம் விளம்பர இடை வேலை இன்றி வந்த தொடர்கள் .நான் சிலவற்றை மறந்திருக்கலாம் .ஆலது தவறாகக் கூட கூறி இருக்கலாம் .ஆனாலும் நான் மேலே குறிப்பிட்ட எல்லா தொடர்களையும் இப்போது ஒளிபரப்பப் படும் மெகா..மெகா சீரியால்களோடு ஒப்பிட்டால் அவையெல்லாம் மாணிக்கம் போன்றவை .

அவற்றோடு ஒப்பிடக் கூட இப்போதுள்ள சீரியல்கள் தகுதி பெறவில்லை .இந்தப் பதிவை வாசிப்பவர்கள் தங்களுக்குப் பிடித்த அந்தக் கால தொடர்களை இங்கே பின்னூட்டமிடலாம் .

Thursday, December 4, 2008

"சுவாமி அண்ட் ஹிஸ் பிரெண்ட்ஸ்"

ஆர்.கே.நாராயண் அவர்களின் "சுவாமி அண்ட் ஹிஸ் பிரெண்ட்ஸ் " நாவலில் உள்ள சுவாரஸ்யமான பகுதிகளை எனக்குப் பிடித்த முறையில் எனக்குத் தெரிந்த வகையில் விமர்ச்சிக்க விருப்பம்,இந்த நாவலை வாசித்த அனுபவமிருப்பின் அவர்களும் என்னோடு இதில் கலந்து கொள்ளலாம் .நம்மை நமது பள்ளிக் காலத்துக்குள் வெகு எளிதாக கொண்டு போய் சேர்க்கும் வண்ணம் எழுதப் பட்ட அருமையான நாவல் அல்லவா இது?!

சுவாமி...

மணி...

ராஜம்...

சங்கர்...

சுவாமியின் பாட்டி...

இவர்களோடு நாமும் சேர்ந்து கொள்வோமா இன்றிலிருந்து?!ஆர்வமிருப்பவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

Wednesday, December 3, 2008

இப்படித்தான் நியாயம் செய்யுமா இந்திய அரசு?!

ஒலிம்பிக் என்பது உலகளாவிய அளவில் நடத்தப் படும் ஒரு விளையாட்டுப் போட்டி.ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் பெற்றுத் தந்த அபினவ் பிந்த்ராவுக்கு நமது இந்திய அரசு மூன்று கோடி ரூபாய்கள் பரிசுப் பணமும் மற்றும் பல வெகுமதிகளும் கொடுத்துக் கௌரவித்தது .
சென்ற வாரம் மும்பையில் வெறியாட்டம் ஆடித் தீர்த்த தீவிரவாதிகளுக்கு எதிராக நமது இந்திய இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரப் போராட்டத்தில் பலியான ராணுவ வீரர்களின் இழப்புக்கு அவர் தம் குடும்பங்களுக்குத் தலா ஐந்து லட்சம் ரூபாய்கள் இழப்பீடு வழங்குவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது .
விளையாட்டில் வென்ற துப்பாக்கி வீரருக்கு மூன்று கூடி ரூபாய்களோடு வெகுமதிகள் வேறு இன்னும் தொடர்கின்றன.நாட்டையும் மக்களையும் காக்க தமது இன்னுயிரை ஈந்த துப்பாக்கி வீரருக்கோ வெறும் ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு மட்டும்!!! ஏன் இந்தப் பாரபட்சம்?!
அபினவ் பிந்த்ரா ஒரு கோடீஸ்வரரின் மகன் அவருக்கு இந்த மூன்று கோடி ரூபாய் பரிசுப் பணத்தை விட ஒலிம்பிக்கில் வென்ற தங்கப் பதக்கமே பெரியதொரு "கௌரவச் சின்னமாக " இருக்கக் கூடும் .பணம் அவருக்கு ஒரு அத்யாவஸ்யமே அல்ல ! அவருக்கு மூன்று கோடி ரூபாய் வழங்கி ஏன் அரசு கௌரவித்தது என்பது இங்கே முன்வைக்கப் படவில்லை.
விளையாட்டில் ஒருமுறை வென்றால் அதிர்ஷ்டமிருப்பின் மறுமுறையும் வெல்ல வாய்ப்பு இருக்கிறது .ஆனால் நிஜத்தில் போன உயிர்(தேசப் பாதுகாப்புக்காக பறிக்கப் பட்ட உயிர்) மறுபடி திரும்பக் கூடுமா?இறந்த ராணுவ வீரர்களின் கடமை உணர்ச்சிக்கும் தேச பக்திக்கும் இந்திய அரசு இப்படித் தான் நியாயம் செய்கிறதா?
விளையாட்டில் வென்ற துப்பாக்கி வீரரின் பெருமையைக் காட்டிலும் தேசத்துக்காக போராடி உயிரை விட்ட துப்பாக்கி வீரரின் பெருமை எந்த விதத்தில் சோடை போய்விட்டது?அவர்களுக்கும் முக்கியத்துவம் தருவதில் என்ன பாரபட்சம் வேண்டி இருக்கிறது ?
இந்திய அரசு சிந்திக்குமோ ...சிந்திக்காதோ ?
எனது அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி என்னை இப்படி சிந்திக்க வைத்தது.அதனால் இதனை உங்களோடு பகிர்கிறேன் இப்போது .

Monday, December 1, 2008

ஹார்லிக்ஸ் ..காம்ப்ளான் சண்டையா?

ஹார்லிக்சுக்கும் காம்ப்ளானுக்கும் நேரடிப் பகையா என்ன? இப்போது புதிதாக வந்துள்ள ஹார்லிக்ஸ் விளம்பரம் ஒன்று அப்படித் தோன்ற வைக்கிறது.அவர்களுக்குள் பகையோ...போட்டியோ எதுவோ ஒன்று இருந்து விட்டுப் போகட்டும் .
ஆனால் பலகோடிப் பேர் பார்க்கும் விளம்பரங்களில் அதை இப்படிக் காட்டி இருக்க வேண்டியதில்லை.
இப்போது காம்ப்ளான் பருகும் குழந்தைகளிடம் ஒரு சந்தேகம் உருவாகிவிட வாய்ப்பளிக்கும்படி அந்த விளம்பரம் காட்சிப் படுத்தப் பட்டுள்ளது.இரண்டு சிறுவர்களும் அவர்களது அம்மாக்களும் பேசிக் கொள்வதைப் போல அமைந்த அந்த விளம்பரத்தில் ;
காம்ப்ளான் அம்மா ஹார்லிக்ஸ் அம்மாவிடம் சொல்கிறாள்...
இப்ப்படி விலை மலிவான பானங்களை அருந்தினால் பையன் எப்படி அதிக உயரமாக வளருவான் ?(காம்ப்ளான் விளம்பரத்தின் அடிநாதமே உயரத்திற்கு முக்கியத்துவம் தருவது தான்)
அதற்க்கு ஹார்லிக்ஸ் அம்மா சொல்கிறாள்.
ஆரோக்கியத்துக்குத் தேவையான மற்ற ஊட்டச் சத்துகள் எதுவுமே இன்றி பையன் வெறுமே உயரமாக வளர்வதில் என்ன லாபம் என்கிறாள்!!!(சரியான கேள்வி தானே?)
முடிவில் ஹார்லிக்ஸ் அம்மா...வெறும் நூற்று இருபத்திஎட்டே ரூபாயில் ஹார்லிக்ஸில் இதெல்லாம் சாத்தியம் ,ஆனால் நூற்று ஐம்பத்து எட்டு ரூபாய் காம்ப்ளானால் வெறும் உயரம் வளர்ப்பதை தவிர வேறு என்ன சாதிக்க முடிந்தது என்று கேட்பது மாதிரி விளம்பரம் முடிகிறது .
காம்ப்ளான் அம்மா தனது காம்ப்ளான் பாட்டிலின் விலையை மறைக்க முயல்கிறாள்.கேள்வி எல்லாம் சரி தான் .ஆனால் இன்னும் காம்ப்ளான்...ஹார்லிக்ஸ் சண்டை தெருவுக்கு வரவில்லையே என்று நினைக்கையில் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது .இப்படி ஒரு விளம்பரம் வரும் போது காம்ப்ளான்காரர்களுக்கு(காம்ப்ளான் கம்பெனிக்காரர்களைச் சொல்கிறேன்) கோபம் வராதா?

புது ரேசன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு நியாயமாக எத்தனை நாட்களில் கார்டு வழங்கப் படவேண்டும்?

கடந்த ஒரு வருடமாக ரேசன் கார்டு அப்ளை செய்து விட்டு ரேசன் ஆபிசுக்கும் வீட்டுக்கும் நடையாய் நடந்து கொண்டிருக்கிறோம்,இன்னும் கார்டு வந்தபாடில்லை,எங்களுக்குப் பிறகு புது ரேசன் கார்டுக்கென பதிவு செய்து காத்திருந்தவர்களுக்கெல்லாம் புது கார்டு கிடைத்து விட்டதாம் சிலர் தேடி வந்து சொல்லி விட்டுப் போய் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கின்றனர்,

எங்களுக்கு இன்னும் கார்டு வரவே இல்லை .எத்தனை முறை ரேசன் ஆபிசுக்குப் போய் விசாரித்து விட்டு வந்தோம் என்று நாள்...தேதி வாரியாகக் குறித்து வைத்திருக்கிறேன் நான்,அந்த அத்தனை முறைகளுமே அங்கிருந்த ஒரு பெண்மணி அவர் தான் எங்கள் பகுதிக்கு களப் பணியாளராம்,உங்களுக்கு கார்டு வந்து விடும் ,அதற்க்கு முன்பு உங்கள் வீட்டு முகவரிக்கு ஒரு போஸ்ட் கார்டு வரும் அதில் "உங்களுக்கு புது ரேசன் கார்டு வழங்கப் படும் தேதியும்..இடமும் தெரிவிக்கப் பட்டிருக்கும் ,அந்த போஸ்ட் கார்டை எடுத்துக் கொண்டு இங்கே வந்தீர்களானால் புது கார்டு தருவோம் என்கிறார்,அதெல்லாம் சரி தான் .

எங்கள் வீட்டு முகவரிக்கு தான் இன்னும் போஸ்ட் கார்டு வந்தபாடில்லை...இதற்குள் பக்கத்து குடித்தனக் காரர்களில் சிலர் எங்களைப் போல புது கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தவர்கள் சிலருக்கு புது கார்டு வந்து விட்டதாம் .அவர்கள் வேறு அடிக்கடி வந்து இன்னுமா உங்களுக்கு கார்டு வரவில்லை?பாருங்கள் உங்களுக்குப் பிறகு தான் நாங்கள் விண்ணப்பித்தோம் எங்களுக்கெல்லாம் வந்து விட்டது ,உங்களுக்கு ஏன் இன்னும் வரவில்லை இன்னொரு முறை போய் விசாரியுங்கள்...அங்கிருக்கும் உங்கள் பகுதி களப் பணியாளரிடம் கார்டு தாமதமாவதற்கு தெளிவான விளக்கம் கேளுங்கள் என்று தூண்டி விடுகிறார்கள்.அங்கே ரேசன் ஆபிசிலோ என்ன கேட்டாலும் எதோ கடன் கேட்க வந்தவர்களைப் போலவே நம்மைப் போன்ற நுகர்வோர்கள் நடத்தப் படுகிறார்கள் .

எந்த கேள்வி கேட்டாலும் சரியான பதில் இல்லை,மீறி கொஞ்சம் கார சாரமாகக் கேட்டோமானால் உங்கள் வீட்டுக்குப் போஸ்ட் கார்டு வரும் வந்த பிறகு அதை எடுத்துக் கொண்டு வாருங்கள் இப்போது எதற்கு சும்மா வந்து எங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள் என்று நம்மைக் கேள்வி கேட்கிறார்கள் .

நியாயமாக அரசு நுகர்வோர் பாதுகாப்புக்கென்று வகுத்த நடைமுறை விதிமுறைகளின்படி " அனைத்து ஆவணங்களையும் இணைத்து முறைப்படி விண்ணப்பிக்கும் நுகர்வோர்களுக்கு எத்தனை நாட்களில் புது நுகர்வோர் அட்டை(ரேசன் கார்டு) வழங்கப் பட வேண்டும்? அவர்கள் குறிப்பிட்ட அந்த நாட்களுக்குள் குறிப்பிட்ட ஒரு அல்லது பல நுகர்வோர்களுக்கு நுகர்வோர் அட்டை வழங்கப் படாவிட்டால் அதற்கான காரணத்தை அறியும் உரிமை நுகர்வோருக்கு உண்டா இல்லையா? அப்படி தகவல் கேட்கும் நுகர்வோருக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டிய கடமை அந்தப் பகுதி களப் பணியாருக்கு உண்டா இல்லையா?

தேவையற்ற வீணான தாமதம் ஏற்ப்பட்டால் அதற்க்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்? இதனால் நுகர்வோருக்கு ஏற்படும் வேறு பல பணித்தடைகளுக்கு யார் பதில் கூறும் பொறுப்பில் உள்ளார்கள்?நுகர்வோருக்கு ஏற்படும் மனக் கஷ்டங்கள் எவ்வகையில் சமன் செய்யப் படும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் உண்டா இல்லையா? இது நான் மட்டும் இன்று புதிதாக எழுப்பும் கேள்வி அல்ல...!!! பாதிக்கப் பட்ட மக்கள் பலர் இருக்கலாம் .அவர்கள் சார்பாக இன்றைய எனது இந்தப் பதிவை வாசிக்கும் நண்பர்களில் சிலரேனும் தங்களுக்குத் தெரிந்தவரையில் இதற்கான தங்களது பதிலை இங்கே பதிவு செய்வீர்கள் என்று நம்புகிறேன் .

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்கிறார்களே ?இப்படி ரேசன் கடையில் சரியான தகவல்களைச் சொல்லி நுகர்வோரின் சந்தேகங்களைத் தீர்க்காமல் இருப்பதோடு அசட்டையாக மந்த கதியில் பதில் என்ற பெயரில் வெட்டி சாக்கு போக்குகளைச் சொல்லித் தட்டிக் கழிக்கும் பணியாளர்களை என்ன செய்வது?இவர்களைக் கேட்க ஆட்களே இல்லையா? இவர்களைப் பற்றி புகார் புகார் தரும் பட்ச்சத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப் படுமா? அல்லது இதே பகுதியில் தொடர்ந்து வசிக்கும் நிலை ஏற்படின் புது ரேசன் கார்டு வாங்க முடியாத சூழல் இப்படிப் பட்ட பணியாளர்களால் நுகர்வோராகிய மக்களுக்கு ஏற்பட்டு விடுமா?

ஒன்றுமே புரியவில்லை.புது கார்டுக்கு என விண்ணப்பிக்கும் பொது அவர்கள் கெட்ட னைத்து ஆவணங்களையும் இணைத்து தாக்கல் செய்தோம்,பதிலுக்கு அவர்கள் அளித்த பெறப்பட்டது என்ற சான்றிதல் ஆவணம் எங்களிடம் பத்திரமாக உள்ளது .இந்த ஆவணம் நம்மிடம் இருந்தால் போதும் எத்தனை நாட்கள் தாமதம் ஆனாலும் பயமில்லை என்கிறார்கள் சிலர் .எது நிஜம்?

எதை நம்பலாம் ?

எதை நம்பக் கூடாது என்ற குழப்பத்தில் இருக்கிறோம் இப்போது நாங்கள்.

இனி அடுத்ததாக நுகர்வோர் கோர்டுக்குப் போவது ஒன்று தான் தீர்வா?

ஒரு இரண்டு மாதம் ...மூன்று மாதம் ...அட மிஞ்சிப் போனால் ஐந்து அல்லது ஆறு மாதம்...ஏன் ஒன்பது மாதம் அல்லது பிள்ளைப் பெருகாலமான பத்து மாதங்கள் என்று கூட ஒதுக்கித் தள்ளி விடலாம் .ஆனால் யாருக்கேனும் ஒரு வருடம் கழித்து ரேசன் கார்டு வந்திருக்கிறதா? எனக்குப் பெருத்த சந்தேகமாக இருக்கிறது.

இதைப் போன்ற ஒத்த அனுபவம் பதிவர்கள் யாருக்கேனும் இருந்தால் தயவு செய்து எனதுசந்தேகத்தை தீர்த்து வையுங்கள்.

அடுத்து நாங்கள் செய்ய வேண்டியது என்ன?

நுகர்வோர் கோர்ட்டுக்குத் தான் போய் ஆகா வேண்டுமா?

இன்று கூட ரேசன் கடைக்குத்தான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம் எப்போது கார்டு வரும் என்று விசாரிக்க....

Saturday, November 29, 2008

சுட்டி டி.வி வர்ணனையாளர்கள் பிஞ்சில் பழுத்த சக்கரைக்கட்டிகளா? ?

"சக்கரைக்கட்டி" என்றொரு படம்...!!!முருங்கைக்காய் பாக்கியராஜ் என்று ஒதுக்கி விடமுடியாத அற்புதமான திரைகதையாளரின்... மகன் சாந்தனு தான் ஹீரோ .

எந்நாளும் ஞாபாகத்தில் நீடிக்கும் "தாவணிக் கனவுகள்" படத்தில் ஹீரோ பாக்கியராஜ் ஐந்து பைசா நாணயத்தை தியேட்டர் தரையில் வீசி விட்டு தன் வயது வந்த தங்கைகள் படத்தில் காட்டப் படும் விதி மீறிய ஆபாசக் காட்சிகளைக் காண்பதை தடுப்பது போல ஒரு சீன் வருமே!!!அதே பாக்கியராஜ் மகன் தான் ...!!!

இப்போது கூட தன் மகளை வைத்து "பாரிஜாதம்" என்று ஒரு நல்ல படம் கொடுத்தார்.படம் சரியாக ஓடாவிட்டாலும் படம் நல்ல படமே குடும்பத்தோடு பார்க்கலாம் வகை,அவரது மகன் ஹீரோவாக நடித்த முதல் படம் சக்கரைக்கட்டி .

அதில் ஒரு சீன்!!!பத்து ...பன்னிரண்டு வயதில் உள்ள சிறுவர்கள் ஆறு ...ஏழு பேர் (அத்தனையும் சுட்டி டி.வி வர்ணனையாளர்கள் வேறு!!!அந்தச் சிறுவர்கள் ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்து தேடித் தேடி புத்தகம் வாங்குகிறார்கள் ...என்ன புத்தகம்தெரியுமா?

"காமசாஸ்த்திரம்"சாட்சாத் வாத்ஸ்யாயனர் எழுதிய அதே புத்தகம் தான்!வெறும் பத்தே வயது நிறைந்த அந்தப் பையன்கள் அந்தப் புத்தகத்தை வாங்குவதோடு அல்லாமல் ஒரு பூங்காவில் உட்கார்ந்து அதைப் படிக்க வேறு செய்வதைப் போல படத்தில் காட்சி வைத்திருக்கிறார்கள் .

இதைக் கண்ட நொடியில் எனக்கு மிக அதிர்ச்சியாகி விட்டது .மீடியா வளராத எண்பதுகளைப் போல அல்ல இன்றைய சிறுவர்...சிறுமிகளுக்கு அன்றைய சிறுவர்...சிறுமிகளை விடவும் விவரமும் தெளிவும் அதிகம் தான் ;அதற்காக இப்படியா காட்சி வைப்பது?

பள்ளிகளில் பாலியல் கல்வியை ஒரு பாடமாக வைப்பதா ....வேண்டாமா என்பதே இன்னும் குழப்பமாக இருக்கும் பட்ச்சத்தில் இப்படி ஒரு சீன் தேவை இல்லை என்பதே எனது கருத்து.

அதிலும் கடையில் விற்பனையாளராக வரும் கிரேசி மோகன் அந்தப் பையன்களுக்கு அறிவுரை சொல்லத் தக்க ஒரு சிறந்த ஹாஸ்ய எழுத்தாளர் வேறு ?அவருமா இப்படி ஒரு சீனில் நடிக்க ஒத்துக் கொள்ள வேண்டும்?

அப்புறம் அந்தப் பையன்களில் பெரும்பாலோர் சுட்டி டி.வி காம்பியர்கள் வேறு!!!

என்னத்தைச் சொல்ல?

இங்கே இன்னொரு விஷயமும் சொல்லியே ஆக வேண்டும்...சுட்டி டி.வி நிகழ்ச்சிகளில் சில ஆகா ரகம் !!!...சில பரவாயில்லை ரகம்..சில பார்க்கலாம் ரகம் ...சில இது தேவையா இப்போது ரகம்? ...

ஆகா ரகம் !!!:-

"டோரா தி எக்ஸ்ப்ளோரர் "(சின்னஞ்சிறு இதயங்களின் தேடலை ஊக்குவிக்கும் தொடர்)

"குளோரியாவின் வீடு "(சிறுவர்களோடு அவர்களின் பெற்றோர்களுக்கும் அருமையான நட்பின் அவஷியத்தை உணர்த்தும் தொடர் இது )

"அபி அண்ட் எபி"(காட்டு விலங்குகளை...பறவைகளை...பூச்சிகளை அறிமுகப் படுத்தும் இன்னொரு உலகம் இது )

"பாபியின் உலகம் "(இதில் அந்தச் சிறுவனின் விரியும் கற்பனை உலகம் கொஞ்சம் சுவாரஷ்யமானதே)

சில பரவாயில்லை ரகம்:-

"அறிவோம் "ஆயிரம்(சில அறிவியல் ரீதியான விளக்கங்களை தினசரி வாழ்வை ஒட்டி விளக்கும் ஜப்பானியத் தொடர்...இது கூட சில நேரங்களில் தேவையில்லாத கேள்விகளை(அதாவது இப்போதைக்குத் தேவை இல்லாத சில கேள்விகளை என் மகளைக் கேட்க வைக்கிறதோ? என்ற எண்ணம் எனக்கு உண்டு...மற்றபடி பார்க்கலாம் வகை தான் பாதகம் இல்லை)அப்புறம்

"உலகச் சிறுகதைகள்"(பல்வேறு தேசத்து சிறுகதைகள் தொகுக்கப் பட்டு ஒவ்வொன்றாகக் காட்டப் படுகின்றன).

"ஜாக்கி" (ஜாக்கி சானை விரும்பும் குழந்தைகள் இதைப் பார்க்கலாம்...சுமார் ராகம் ...இறுதியில் ஜாக்கி குழந்தைகளுக்க்ச் சொல்லும் அறிவுரைகள் எல்லாம் நலம்...அதற்காக வேண்டுமானால் பார்க்கலாம்)

இவையெல்லாம் ஓகேஇவை தவிர ;

இது தேவையா இப்போது ரகம்?:-

"செட்ரிக்""ஹீமான்"

"மென் இன் ப்ளாக் "

"கடல் இளவரசிகள்"

இதெல்லாம் அத்தனை அவஷியமானது இல்லையோ ? என்ற எண்ணம் வருகிறது.எனென்றால் ஏனைய இந்தத் தொடர்களில் எல்லாம் குழந்தைகள் கற்றுக் கொள்ள எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை .இந்த நிகழிகளைத் தொகுத்து வழங்க மாற்ற டி.விக்களைப் போன்றே இதற்கும் வர்ணனையாளர்கள் உண்டு ...அவர்களில் சிலர் தான் மேலே சொன்ன படத்தில் அந்தக் காட்சியில் நடித்தவர்கள்.

பாவம் அந்தச் சிறுவர்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.அவர்களது பெற்றோர்களுக்கு இல்லாத அக்கறை அவர்களுக்கு மட்டும் எப்படி வர முடியும்?இப்படிப் பட்ட ஒரு காட்ச்சியில் தங்களது மகன் அல்லது மகள் வரலாமா கூடாதா என்ற கவலையே இல்லாத அவர்களை என்னவென்று நொந்துகொள்வதோ புரியவில்லை?

அதிலும் சுட்டி டி.வியில் சில குழந்தைகள் வர்ணனை என்ற பெயரில் தேவை இல்லாத (வயது வந்த மாற்ற டி.வி வர்ணனையாளர்களைப் போன்றே அதிகப் படியான உடல் அசைவுகள் )அலட்டல்களைச் செய்யும் போது மிதமிஞ்சிய வருத்தமே எஞ்சி நிற்கிறது .எப்போது திருந்துவார்கள் இவர்கள்? ஸாரி...ஸாரி எப்போது திருத்தப் படுவார்கள்?

குழந்தைகளிடம் எப்போதுமே "போலச் செய்தல்' என்ற பழக்கம் உண்டு அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை ஏன் இனி எதிர்காலத்திலும் கூட அது தொடரும்.அதாவது அவர்கள் எல்லா விஷயங்களையுமே பெரியவர்களிடமிருந்தே கற்றுக் கொள்கிறார்கள்...தாம் அறிந்த பெரியவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதே போல அதன் தாக்கம் அவர்களைச் சார்ந்த அந்த சிறுவர்களிடமும் படிந்து விடுகிறது...இது கண்கூடான உண்மை.

இப்படி சுட்டி டி.வி குழந்தைகளைப் பார்த்து நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நம் வீட்டுக் குழந்தைகளும் மாறி விட்டால் என்ன செய்வது?ஆதலால் பெற்றோர்களே உங்கள் வீட்டில் குழந்தைகள் டி.வி தானே பார்க்கிறார்கள் என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள்!!! மிதமான கண்காணிப்பு எப்போதுமே எந்த வயதிலும் அவசியம் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள் அது எப்போதுமே நன்மை தரக் கூடும்.

Thursday, November 27, 2008

இங்லாந்து லெட்டர் எங்க போச்சு ?

சென்ற வருடம் இதே போன்றதோர் டிசம்பர் நெருக்கத்தில் தான் நல்ல மழை நாளில் இதை எழுதினேன் என்று ஞாபகம்...!

கரண்ட் வேறு இல்லை அப்போது...;டி.வி யும் பார்க்க முடியவில்லை ...கூடப் பேச என் தம்பியைத் தவிர யாரும் இல்லை.அவனும் நண்பன் அழைத்தான் என்று வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தான்.

சரி என்னத்தையாவது கிறுக்குவோம் என்று எண்ணிக் கொண்டு தான் இதை ஆரம்பித்தேன்.போகும் போது என் நோட் புக்கில் எட்டிப் பார்த்த தம்பி சொன்னான் ;

கவிதை ...கதை நு எழுதறதை விட இப்படியும் ட்ரை பண்ணி பாரேன் , எங்க ஹெச் .ஆர் ஒரு தடவை எங்க கிட்ட இந்தியன் போஸ்டல் சர்வீஸ் விளம்பரத்துக்கு காப்பி ரைட்டிங் பண்ண சொல்லிக் கேட்டார் ...யாரோடது பெஸ்ட்னு பார்க்கலாம்னு ?நாங்க ட்ரை பண்ணலை அதுக்குள்ளே செமெஸ்டர் வந்துடுச்சு ...!!!

நீ சும்மா தான என்னத்தையோ எழுதிட்டு இருக்க ...இத வேணா ட்ரை பண்ணேன் என்றான்."சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதை போல" உங்களுக்குத் தோணினால் நான் பொறுப்பில்லை.

1."DONT ROAR
WE
AT
YOUR DOOR" IPS (INDIAN POSTAL SERVICE)



2. "THINK
WITH
INK
PRESSING BUTTONS
IS NOT EQUAL TO
IMPRESSING THE MINDS
START TO
THINK
WITH
INK " IPS (INDIAN POSTAL SERVICE)


3."DONT TAKE RISK

WE ARE

AT YOUR DESK"
IPS (INDIAN POSTAL SERVICE)


4."CHOOSE INDIAN POSTAL SERVICE
CHAZE INDIAN POLICE SERVICE
WE
BEST
TO PASS YOUR DREAMS"

5. " IPS
IS THE PLACE OF YOUR ESSENCE OF FEELINGS
PROTECTED"

6. "BROWSING CENTRE
CYBER CAFE
DESK TOP
LAP TOP
MOBILE PHONE
CRUSH CRUSH CRUSH
EVERY WHERE CRUSH
JAM JAM JAM
EVERY WHERE JAM
COME TO SEE MY NAME
I AM VERY ... FAME
...IPS(INDIAN POSTAL SERVICE)"

Tuesday, November 25, 2008

தொடர்கிறது...ஷாக்...ஷாக்...ஷாக்...!?

முதலில் சொன்ன பாயிண்டுக்கே வருவோம் என்று முடித்தேன் இல்லையா அன்றைக்கு ...
சரி இனி மேலே தொடர்வோம்,
யாருக்குத்தான் புதிது புதிதாக வீட்டு உபயோகப் பொருட்களை அல்ட்ரா மாடர்னாக வாங்கித் தள்ள வேண்டும் என்று ஆசை இல்லாது போகும்?எல்லாமே தானியங்கி என்று ஆகிவிட்டால் சொல்லவே வேண்டாம்...என்னை வாங்கு...வாங்கு என்று தினம் தினம் நொடிக்கு நொடி டி.வி யில் வந்து வேறு நம் உயிரை வாங்கித் தொலைக்கும் .அதை விட்டுத் தள்ளுங்கள் கையில் பணம் புரளும் போது அதையெல்லாம் வாங்கித் தானே தீருவோம் என்கிறீர்களோ...அதுவும் சரி தான் .
சரி வாங்குவது என்று முடிவெடுத்த பிறகு சில கொள்கைகளை நமக்கு நாமே வகுத்துக் கொண்டால் நமக்கும் பாதுகாப்பு,நமது பர்சுக்கும் பாதுகாப்பு !
என்னென்ன கொள்கைகள் என்று பார்ப்போம் ;
  1. எந்தப் பொருளாக இருந்தாலும் ஐ.எஸ்.ஐ. முத்திரை இடப் பட்டதா என்று சோதித்து தரமானதாகவே வாங்குவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்(கடைக்குள் நுழையும் முன்பு இருக்கும் உறுதி...பொருளின் வெளி அலங்காரத்தில் மயங்கி மாறி விட்டால் நீங்கள் கொள்கை தவறியவர்கள் என்று அறிவிக்கப்படுவீர்கள்).
  2. எந்தக் கடையிலும் பொருளை வாங்குவதற்கு முன்பு கடையின் நம்பகத் தன்மையையும் ஒரு முறைக்கு இருமுறை கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. விழாக்காலங்களில் ஒன்றுக்குப் பத்தாக இலவசமாகத் தரப் படும் லோக்கல் அசெம்பிள்டு பொருட்களை வாங்கி ஏமாறக் கூடாது.
  4. வாரண்டி...கியாரண்டி கார்டுகளை கவனமாகப் பத்திரப் படுத்த வேண்டும் .
  5. வாங்கும் பொருட்களில் ரிப்பேர் வந்தால் சரி செய்ய சர்வீஸ் சென்டர் போன் நம்பர்கள்...அட்ரஸ் போன்றவற்றை மறக்காமல் கேட்டு வாங்கி பத்திரப் படுத்த வேண்டும்.
  6. எல்லாவற்றையும் விட முக்கியம்...கடைகளில் பொருட்களோடு வழங்கப் படும் மேனுவல் கைடுகளையும்,கியாரண்டி கார்டுகளில் "கன்டீசன்ஸ் அப்ளை" என்று போடி எழுத்தில் அச்சிடப் பட்டவற்றையும் கஷ்டப் பட்டாவது படித்துப் பார்த்து கடையிலிருந்து வீட்டுக்குப் பொருட்களை எடுத்து வரும் முன்பாகவே நமது சந்தேகங்களை விற்பனையாளர்களிடம் கேட்டு தீர்த்துக் கொள்வது மிக்க நல்லது.
  7. கட்டக் கடைசியாக "யானைக்கு அங்குசம் போல" விலை ரசீதுகளை (பில்...ரிசிப்ட்) பொக்கிஷம் போல பத்திரப் படுத்த மறக்க வேண்டாம் .(தரமான பொருட்களில் கூட காஸ்டிங்குக்கு ஆசைப் பட்டு குவாலிட்டி தேயும் படி கலப்படம் செய்யப் பட்டால் இது நமக்கு பயன்படும்)
  8. இதெல்லாம் செய்தால் (யு ஆர் டிரபிள் ப்ரீ சார் !) நீங்கள் தான் கிங்!யாரும் உங்களை ஏமாற்ற முடியாது .

இதுவரை சொல்லியாச்சு ...இனி எந்தப் பொருளை எப்படி எப்படி வாங்கனும்னு தெரிஞ்சா நல்ல இருக்குமே என்கிறீர்களா ?

(வெண்டைக்காய உடைச்சிப் பார்த்து வாங்கற மாதிரி உடைச்சா பார்க்க முடியும்?!) கவலையே வேண்டாம்...அதற்கும் பதில் உண்டு .

ஜஸ்ட் வெயிட் ....

ஒன்னு ஒண்ணா பாக்கலாமே...என்ன அவசரம் இப்போ ?

Friday, November 21, 2008

சிரி...சிரி...சிரி...சிரி(அட சும்மா சிரிங்க சார்)

சிரி...சிரி...சிரி...சிரி!!!சிரிக்கத் தெரிந்த மிருகத்துக்கு மனிதன் என்று பெயர் !!!
யாரு சொன்னா? அப்போ நாங்கலாம் யாராம்? எங்களுக்கும் சிரிப்பு வரும்ல ?நாங்களும் சிரிப்போம்ல?

ஏய் பூனைக்குட்டி அக்கா வாய மூடிட்டு சத்தம் போடமா சிரிக்கத் தெரியாதாக்கும்!இந்தா பாரு இங்கன ...ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...இப்பிடித்தான்....இப்பிடித்தான்...சிரி...சிரி...சிரி...சிரி... !!!
அடங்கொக்கா...மக்கா....இன்னாத்துக்கு வாய மூடிக்கனும்? நான் இப்பிடித்தான் சிரிப்பேன்...இன்னான்றீன்ங்க இப்போ?
சிரிக்கிறதுல என்னப்பா பாலிடிக்சு? என்னைய மாதிரி கூட சிரிச்சுட்டு போங்களேன்!
எந்நேரமும் தண்ணியிலேயே இருக்கான்டான்னு திட்ராகளே நாட்டுக்குள்ள? தண்ணில கிடக்கற சுகமே சுகம்...அதான் இந்தச் சிரிப்பு...சும்மா சிரிச்சுப் பழகலாம் வாங்கண்ணா...!!!
புலி புல்லைத்தான் திங்க கூடாதுன்னு சொன்னாங்க,சிரிக்கக் கூடாதுன்னு எல்லாம் யாரும் சொல்லலை!!! எங்கே என் முன்னாடி வந்து யாராச்சும் சிரிக்காதேன்னு சொல்லித்தான் பாருங்களேன் ...ஒரு தடவை மட்டும் ப்ளீஸ் !!!

அந்தப் புலிப்பய சிரிக்கான் பாரு ...நான் சிங்கம்யா...சிங்கம் சிரிக்காட்டிப் போனா வெங்கம் பயனு சொல்லிருவாக அது வேற அசிங்கம் !!! அதான் இந்தச்சிரிப்பு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
டிஸ்கி: இந்தப் புகைப் படத் தொகுப்புக்குச் சொந்தகாரி என் அருமை பாப்பு மட்டுமே!!! இதிலுள்ள உப்புச் சப்பில்லாத கமெண்டுகள் மட்டுமே எனக்குச் சொந்தம் .
எத்தனை நாட்களுக்குத் தான் சீரியஸ் பதிவுகள் மட்டுமே போட்டுக் கொண்டு இருப்பது ?
கொஞ்சம் போர் அடித்தால் இப்படித்தான் ஆகி விடுகிறது சமீப காலங்களாய்...!
பாப்பு வந்து இன்றைக்கு என் போட்டோ கலெக்சனை வைத்து ஒப்பேற்றி விட்டாயே அம்மா !!! என்று சொன்னாலும் பரவாயில்லை !
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால்?
மனிதர்களின் சிரிப்பை விட விலங்குகளின் சிரிப்பு நன்றாகத்தான் இருக்கிறது .
அதென்னவோ முன்பு என் அப்பா...பிறகு என் கணவர் ...வேலையில் சேர்ந்த பிறகு இப்போது என் தம்பியும் கூட (வேலையில் சேருவதற்கு முன் அவன் பாரபட்சமே இல்லாமல் எல்லா சேனல்களிலும் பாட்டு மட்டுமே கேட்பான்) இப்படி என் வீட்டு ஆண்கள் எல்லோருமே காமெடி நிகழ்ச்சிகள் பார்ப்பதில் தான் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் ...சிரிக்க வேண்டும் ...எப்பாடு பட்டாவது சிரித்தே ஆகவேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல என்றே நினைக்கிறேன்,என்றைக்கோ எந்திர மயமாகி விட்ட இந்த உலகில் மூச்சு விடவும்...முழுகிப் போகாமல் மீண்டு எழவும் அந்த நேரம் பயன்படுகிறதோ என்னவோ?உலகம் சுற்றும் வாலிபனில் "வாத்தியார்" பாடுவார் பாருங்கள்"சிரித்து வாழ வேண்டும்பிறர் சிரிக்க வாழ்ந்திடாதேசிக்கு...மங்கு...சிக்கு...மங்கு சிக்க பாப்பா "பாட்டு தான் ஞாபகம் வருகிறது .அதெல்லாம் சரி ;இப்போது டவுட் நேரம்..."பாப்பா சரி ...அதென்ன சிக்கு...மங்கு...சிக்கு...மங்கு ..சிக்க பாப்பா?"யாருக்காவது புரிந்திருந்தால் இங்கு வந்து பின்னூடத்தில் தெரிவியுங்கள்...அந்தப் பாட்டை கேட்கும் போதெல்லாம் இந்த டவுட் வந்து கொண்டே இருக்கிறது .














Thursday, November 20, 2008

ஷாக்...ஷாக்...ஷாக்...அடிச்சிருக்கா எப்போவாச்சும் உங்களுக்கு?




1.ஏற்காட்டில் புதுமணத் தம்பதிகள் வாட்டர் ஹீட்டர் ஷாக் மூலம் உயிரிழப்பு ,


2.கே.கே நகரில் டாக்டர் தம்பதிகள் வாட்டர் ஹீட்டரில் ஏற்ப்பட்ட மின்சாரக்கசிவு மூலம் உயிரிழப்பு ,


3.மழைக்காலத்தில் ஈரமான சுவற்றில் மின்சாரம் பாய்ந்து சுவர் அருகில் இரும்புக் கட்டிலில் படுத்திருந்தவர் மரணம்,


4.கையில் இரண்டுமாதக் குழந்தையை ஏந்திக்கொண்டு பேன் சுவிட்ச் போட்டதில் ஷாக் அடித்து குழந்தை தூக்கி எறியப்பட்டு மரணம் ,தந்தை குற்ற உணர்வில் துடிக்கிறார் .


5.மழைகாலத்தில் செல் போனில் பேசியவாறு சென்ற வாலிபர் மின்னல் தாக்கி மரணம்.


இதெல்லாம் பெரிய விபத்துகள் .இவை தவிர சின்ன அளவிலோ ,பெரிய அளவிலோ உடலுக்கும் மனதிற்கும் காயத்தையும் பயத்தையும் ஏற்படுத்தக் கூடிய சின்னச் சின்ன விபத்துக்களும் உண்டு தான் .ஒருமுறை ஏதாவதொரு மின்சாரப் பொருள் மூலம் ஷாக் அடித்து தூக்கி எறியப் பட்டாலோ காலத்துக்கும் அந்த பயங்கரமான அனுபவத்தை நம்மால் மறக்கவே முடியாது ,உயிரிழப்போடு குற்ற உணர்வு தான் மிஞ்சும் ,ஐயோ இப்படி நடந்து விட்டதே என்று மறுகிக் கொண்டிருப்பதை விட என்ன செய்யலாம் என்று யோசிப்பது நல்லது தானே !!!


பெண் தான் ஒரு குடும்பத்தின் அச்சாணி .அவளைச் சுற்றியே அந்தக் குடும்பச் சக்கரம் சுழல்கிறது ,அதோடு ஆண்களுடன் ஒப்பிடும் போது அதிக நேரம் வீட்டில் இருப்பதும் ,வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் வீட்டு உபயோகப் பொருட்களை பயன்படுத்துவதும் அவளே ...!


இதே போல இன்னொன்றையும் கூறலாம் ,சொந்தமாக வீடு வாங்கும் ஆசை வந்தால் கணவர்கள் தம் மனைவிகளின் விருப்ப்பத்துக்கே முதலிடம் தருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்(!!!) குடும்பத்தலைவி என்பதற்காக மட்டும் அல்ல மனைவி சரியானதைத் தேர்ந்தெடுப்பாள் ,எதையும் ஒன்றுக்குப் பத்தாக யோசித்தே செய்வாள் என்ற நல்ல நம்பிக்கையினாலும் தான் .அந்த நம்பிக்கைக்கு மேலும் வலுச் சேர்க்க வேண்டாமா நாம் ...?


அதனால் வாருங்கள் ஷ்நேகிதிகளே சில விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோமாக ,முதலில் நீங்கள் ஒரு அடிப்படை விஷயத்தை கண்டிப்பாக தெரிந்து கொண்டே ஆக வேண்டும் ,


எல்லா விதமான மின்சார விபத்துகளும் "எர்த்திங்" சரியாகப் பண்ணப் படாததின் காரணமாகவே நிகழ்கின்றன என்பது ஒரு பொதுவான கருத்து .


எர்த்திங்னா இன்னாப்பா ? அதாவது ஒவ்வொரு வீட்டிலும் வீடு கட்டப்படும் போதே எலெக்ட்ரிகல் வேலைகளும் சேர்த்தே செய்யப்படுகின்றன. அப்படி மின் வேலைகள் செய்து முடித்தபின் அதை எர்த்துடன்(பூமி) பூமிக்கு அடியில் இத்தனை ஆழம் (ஆறு -எட்டு அடி ஆழம்)என்ற கணக்கில் கனெக்சன் செய்வதையே எர்த்திங் என்கிறார்கள் ,


இன்னும் விளக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு வீட்டிலும் சரி ,பெரிய இண்டஷ்டரிகளிலும் சரி எர்த்திங் நூறு சதவிகிதம் சரியாகப் பன்னப்பட்டே இருக்க வேண்டும் ,இல்லாவிட்டால் மின்சாரம் ஏதாவது ஒரு ரூபத்தில் அதன் புத்தியை நம்மிடம் காட்டத் துவங்கி விடும் (உசாரா இருந்துக்கோ கண்ணு )


அதெப்படி தெரிந்து கொள்வது என்கிறீர்களா ?(சிம்பில்மா ..ஒண்ணுமேயில்ல )பெரும்பாலும் வீட்டின் உட்பகுதிகளில் அடிக்கடி நடமாடும் தரைப் பகுதிகளில் எர்த்திங் செய்வது நல்லதல்ல என்பதால் மீட்டர் பாக்ஸ் அருகில் தான் எர்த்திங் பாயிண்டுகள் மண்ணுக்குள் புதைக்கப் படுகின்றன .அந்த இடங்களில் வயர் கனெக்சன் வெளியில் தெரியுமாறு தான் இருக்கும் .


அதில் பச்சை நிற வயர் தான் எர்த் வயர் சுருக்கமாக ஆங்கிலத்தில் இ என்ற சிம்பல் இருக்கும் ,இதை வைத்து எர்த்திங் செய்யப்பட்டிருப்பதைத் தெரிந்து கொள்ளலாம் .ஆனால் அது நூறு சதம் சரியாகத் தான் செய்யப் பட்டிருக்கிறதா என்பதையும் நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொண்டேயாக வேண்டும் . இது அதை விடவும் ரொம்பவும் அவஷியம் .


தரமான ஐ எஸ் ஐ முத்திரை உள்ள வயர்களும் ,காயில்களும் வாங்கப்பட்டிருக்கிறதா என்பதும்


எர்த் திங் செய்ய கரெக்ட் சைஸ் வயர்கள் பயன் படுத்தப் பட்டிருக்கிறதா என்பதும் நாம் தெரிந்து கொள்வது நல்லது .


அதோடு அரசாங்க அங்கீகாரம் பெற்ற அனுபவம் வாய்ந்த தரமான எலக்ட்ரீசியன்களை நம்பி மட்டுமே நம் வீட்டின் எலக்ட்ரிகல் வேலைகளை ஒப்படைக்க வேண்டும் .


அதோடு எர்த்திங் பண்ணப்படும் போது முறையான பாதுகாப்புடன்


அ) எர்த் லீக்கேஜ் ப்ரொடெக்சன் பிரேக்கர்ஸ்


ஆ)சர்க்யுட் பிரேக்கர்ஸ் போன்றவை பூமிக்கு அடியில் கனெக்சன் செய்யப்பட்டுள்ளதா என்றும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதும் நல்லதே.


இ)கடைசியாக எர்த்திங் விசயத்தில் மழைக்காலம் தவிர்த்து கோடை காலம் உட்பட மற்ற எல்லாக் காலங்களிலும் மாதம் ஒருமுறை எர்த்திங் செய்யப் பட்டுள்ள இடத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும் ,


மேலும் வருடத்துக்கு ஒருமுறை தேர்ந்த எலக்ட்ரீசியன் வைத்து செக் செய்து கொள்வதும் அவசியமானதே.


அதோடு பத்து வருடங்களுக்கு ஒருமுறை மின்சார இணைப்புகள் சரியாக இருக்கிறதா என சோதித்துப் பார்த்துக் கொள்வதும் நமது பாதுகாப்புக்கு நல்லதே,


ஒ.கே எர்த்திங் சரியாக இருந்தால் பொருட்களில் மின்கசிவு ஏற்ப்பட வாய்ப்பே இல்லை அதுவரைக்கும் சரி தான் .ஆனால் (voltage) வோல்டஜ் பிரச்சினை வருகிறது என்கிறீர்களா?அதற்கும் தீர்வு இருக்கிறது .


"மினியேச்சர் சர்க்யுட் பிரேக்கர்ஸ்" அல்லது "ரெசிடியுயல் கரண்ட் சர்க்யுட் பிரேக்கர்ஸ்" அல்லது "ட்ரிப்பர்ஸ்" என்ற பெயரில் அனைத்து எலெக்ட்ரானிக் கடைகளிலும் ஒரு பாக்ஸ் கிடைக்கும் ,அதை வாங்கி நமது வீட்டில் பொருத்திக் கொண்டால் போதும் .


பவர் சப்ளை விநியோகக் குறைபாடுகள் ஏற்ப்படும் போது இந்த பிரேக்கர்ஸ் தானாகவே மின்சாரத்துக்கான மெயின் லயனை கட் செய்து விடும் ,இதனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் பாதிப்படைவது தடுக்கப் படும் .பெரிய அளவு பொருட்சேதத்தில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம் .


இதிலும் முக்கியமான ஒரு கண்டீசன் என்னவென்றால் ? எர்த்திங் சரியாகச் செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே இந்த பாக்ஸ் தன் வேலையை முழுமையாகச் செய்யும் .(அப்ப நம்ம ஹெல்த்தப் பாக்கறோமோ இல்லையோ எர்த்தப் பார்க்கணும்மா எர்த்து ...எர்த்து ...அதான் நம்ம பெர்த்தக் காப்பாத்தும்!!!).


சரி இனி முதலில் சொன்ன பாயிண்டுக்கே வருவோம் .


இப்போ இல்லை மீதி ஷாக்கை மீண்டும் நாளை தொடரலாம் ...


அதுவரை நீங்க உங்க வேலையை பாருங்க நான் என் வேலையை பார்க்கறேன் .

Wednesday, November 19, 2008

இம்பார்டன்ட் டவுட் எது ஈசி ? சேர்ந்து வாழ்தலா அல்லது விவாகரத்தா?

கடந்த இரண்டு தினங்களாக என் குடியிருப்புபு வளாகத்தில் நான் கேள்விப்பட்ட இரு செய்திகள் என்னை ஒரு சேர மிகவும் வருத்தமடையும்,சிந்திக்கவும் வைத்தன,எல்லாம் இந்த விவாகரத்து கூத்துக்கள் தான் ,கூத்து என்று சொல்வது தவறு தான் ...ஆனாலும் அது இன்று கூத்துப் போலத்தானே ஆகி விட்டது .பக்கத்து வீட்டுப் பெண் மிஞ்சிப் போனால் இருபத்தியொரு வயசு தான் ...இன்னும் பைனல் செமஸ்டர் முடியாமல் இருக்கும் போதே சென்ற வருடம் திருமணம் செய்து வைத்து விட்டார்கள் அவளுக்கு ,இப்போது திடீரென்று கணவன் வீட்டில் நிறையக் கட்டுப்பாடு சுதந்திரமேஇல்லை என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு அம்மா வீட்டுக்கு வந்தாயிற்று .பிறகொரு பெண் என் பாப்புவின் கிளாஸ் மேட் நிம்மியின் அம்மா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐந்து வயதில் பெண் குழந்தை இருந்தும் இன்னமும் அந்தக் குழந்தையை அவளது அப்பா வந்து பார்க்கவே இல்லையாம் ,விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிற்கிறதாம் .மிஞ்சிப் போனால் அந்தப் பெண்ணிற்கு இருபத்தி எழு அல்லது இருபத்து எட்டு வயதே ஆகக் கூடும் .

ஒரு வேலை விவாகரத்து ஆனால் மறுமணம் செய்து கொள்வாரா எனப் புரியவில்லை ,எத்தனை காலத்தை தனிமையில் தள்ள முடியும் ஒரு இளம் பெண்ணால்,அம்மா ...அப்பா காலத்திற்குப் பிறகு? தனிமை போலொரு கொடிய சாத்தானை ஈரேழு உலகிலும் காண முடியாது (தனிமையில் இருப்பவர்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்) இன்னொரு பெண் கல்யாணமான மறுநாளே தன் கணவரால் "மனநிலை சரி இல்லாதவள் என்று முத்திரை குத்தப் பட்டு அம்மா வீட்டில் இருக்கிறாள்,பார்க்க லட்சனமாகப் பதவிசாக இருக்கும் அந்தப் பெண் கொஞ்சம் வெகுளி என்பது தான் நிஜம்,மற்றபடி பைத்தியமேல்லாம் இல்லை,ஆனாலும் இன்று அம்மா வீட்டில் வீட்டை விட்டு எங்கே செல்லவும் பயந்து கொண்டு மாலை ஆறு மணிக்கெல்லாம் கதவடைத்துக் கொண்டு உள்ளேயே கிடப்பார்கள் தாயும் மகளும்,அண்ணன் ஒருவன் வடமாநிலத்தில் பணியிளிருக்கிறான் ,அவன் வரும் விடுமுறை காலங்கள் தவிர மாற்ற நாட்களெல்லாம் அவர்களது வீட்டு ஜன்னல் கதவு கூட சாத்தப்பட்டே இருக்கும்(தனிமை தந்த பயம் அந்த பெண்ணை இன்னும் கொஞ்ச நாளில் பைத்தியமாகவே ஆக்கினாலும் ஆச்சர்யப் படுவதற்க்கில்லை ,

இந்த மூன்று பெண்களின் வாயிலாக நான் அறிந்து கொண்ட உண்மை பெண்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது மட்டும் முக்கியமில்லை...அதற்குப் பின்னான வாழக்கை எப்படிப் பட்டதாகவும் இருக்கலாம் அதையும் சாமர்த்தியமாக அணுகி இடையில் வரும் கஷ்ட நஷ்டங்களையும் புத்திசாலித் தனமாகக் கையாள வேண்டியதின் அவசியத்தையும் வளரும் இளம் பெண்களுக்கு அவரவர் அம்மாக்கள் சொல்லிக் கொடுத்தே ஆகவேண்டும் .இல்லாவிட்டால் பெருகும் விவாகரத்துகளை தவிர்க்கவே முடியாது போகும் .இதனால் பாதிக்கப் படுவது பெரும்பாலும் பெண்களும்(மனைவிகள்) குழந்தைகளும் தான் ,

கல்யாண வயதில் பெண்களை வைத்துக் கொண்டிருக்கும் அம்மாக்களே நீங்கள் மாப்பிள்ளையின் படிப்பையும்...சொத்துக் கணக்கையும் மட்டும் பார்த்தால் இப்போதெல்லாம் போதவே போதாது ,

அந்த அழகான ..வசதியான ...படித்த(படிக்காத மாப்பிள்ளை என்றாலும் கூட இது பொருந்தும் ) மாப்பிள்ளைகள் எப்படி இருந்தாலும் அவர்களை கொஞ்சம் அதாவது அவர்கள் மிகவும் மோசமானவர்கள் இல்லை எனும் பட்சத்தில் அனுசரித்துப் போக கற்றுக் கொடுக்கலாம் . வெறும் வாய் சண்டைகள் ...வேற்று ஊடல்கள் இதற்காகவெல்லாம் விவாகரத்தைப் பற்றி யோசிக்கும் படியான அபிப்ராயங்களை உங்கள் மகள்களின் மனதில் புக விடாமல் தயவு செய்து தடுத்து விடலாமே!!!

இன்னும் சொல்லப் போனால் கணவன் மனைவி என்று ஆனா பிறகு எதற்கு நீ பெரியவன் ...நான் பெரியவள் என்ற ஈகோ ?

ஒரு முறை கணவன் விட்டுக் கொடுத்தால் மறுமுறை மனைவி விட்டுக் கொடுத்துப் போய்விட வேண்டும்(ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டம் தான் ...பழகப் பழக கை வந்து விடும் கலை அது)

முயற்சித்து தான் பாருங்களேன்!

கணவனோ,மனைவியோ

முதலில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்

பிறகு ஒருவருக்கொருவர் ஒருவரைப் பற்றி மற்றவர் தெரிந்து கொள்ளுங்கள் .

கடைசியாக அவர் அப்படித்தான்...அவள் அப்படித்தான் என்று ஒருவருக்கொருவர் தெளிவு அடையுங்கள் .இதைத்தான் புரிதல் என்பார்கள்

சுலபமாகச் சொன்னால்

"அறிதல்

தெரிதல்

புரிதல் "