Friday, April 3, 2009

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க...(நன்றி-பட்டாபி)

"சும்மாவா சொன்னாங்க ...பெரியவங்க -பட்டாபி "சில நாட்களுக்கு முன் இணையத்தில் வாசிக்கக் கிடைத்த புத்தகம் இது ,அருமையான பல விஷயங்கள் அள்ளித் தரப் பட்ட அழகான புத்தகம் .சரி புத்தகத்தை விடுங்கள் அதை நீங்களே இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளுங்கள் .

இதிலிருந்து எனக்கொரு சின்ன பொறி கிடைத்தது,அதைப் பகிந்து கொள்ளவே இந்தப் பதிவு ,

தினம் காலையில் அரிசி அளக்க எவர்சில்வர் உழக்கு வைத்திருக்கிறோம் இல்லையா ?அது முன்பெல்லாம் பித்தளையில் வரும் ...இப்போதெல்லாம் எவர்சில்வர் தான் பார்க்க பெரிய சைஸ் டம்ளர் போலவே இருக்கும் .
அகஸ்மாத்தாக சில நேரங்களில் (பல நேரங்களிலும் தான்... !!! :) ;அதையே டம்ளர் ஆகப் பாவித்து தண்ணீர் பிடித்தோ அல்லது மொண்டு குடித்திருப்போம் .

வீட்டில் பாட்டியோ ...அம்மாவோ...அத்தையோ இருந்து நாம் எவர்சில்வர் உழக்கு டம்ளர்ரில் தண்ணீர் குடிப்பதைப் பார்த்து விட்டால் சட்டென்று சொல்வார்கள் ,
உழக்கில் தண்ணீர் பிடித்துக் குடிக்கவே கூடாது ...படுத்த படுக்கையாக இருப்பவர்கள் சாவை நெருங்கி விட்டால் அவர்களுக்குத் தான் படுக்கையில் படுத்த நிலையில் உழக்கில் தண்ணீர் விடுவார்கள் .நன்றாக இருப்பவர்களெல்லாம் உழக்கில் தண்ணீர் குடிக்கவே கூடாது என்று பயமுறுத்துவார்கள் .

நானும் வெகு நாட்கள் மற்ற டம்ளர்கள் சிங்கில் கழுவாமல் கிடக்கும் போது சோம்பலாக கை எவர்சில்வர் உழக்கு எடுக்கப் போகும் போதெல்லாம் பாட்டியும் அம்மாவும் சொன்னதை எண்ணி மெனக்கெட்டு (!!!) வேறு டம்ளர் கழுவி பிறகு தண்ணீர் பிடித்துக் குடிப்பேன் . ஒரு பயம் தான் என்றே வைத்துக் கொள்ளலாம்.

இப்போது யோசித்ததில் தினம் தினம் அரிசி அளக்க எவர்சில்வர் உழக்கு தான் பயன்படுத்துகிறோம் ,அரிசி மட்டும் அன்றி அந்த உழக்கு அளவு வைத்து தான் 1:2
அளவில் அரிசியும் நீரும் கலந்து குக்கர் வைக்கிறோம் .அதனால் உழக்கு கொஞ்சம் ஈரப் பதமாக இருக்கக் கூடும் ,ஆனாலும் அப்படியே உலர விட்டால் மறுநாள் காலைக்குள் ஈரம் உலர்ந்து விடும் .

இதை விடுத்து டம்ளர் மாதிரி இருக்கிறதென்று அடிக்கடி தண்ணீர் மொண்டு குடிக்க ஆரம்பித்தால் உழக்கில் ஈரம் நிலைத்து விடும் ஈரப் பதம் போக வழியில்லை .இதனால் என்ன ஆகும் ? அரிசி அளக்கும் போது மொத்த அரிசியிலும் அந்த ஈரம் பரவும் ...இதனால் அரிசியில் பூஞ்சை பிடித்து மூட்டை அரிசியும் கெட்டுப் போகக் கூடும் .

விஞ்ஞானப் பூர்வமான இந்த காரணத்தையும் விளக்கத்தையும் சொன்னால் நாம் உடனே சரி என்று ஏற்றுக் கொள்ளப் போகிறோமா என்ன ? அதே சமயம் பயம் தோன்றும் வகையில் எதையேனும் சொல்லி வைத்தால் கிடக்கிறது.அந்த பயத்திலாவது உழக்கில்ஈரம் உலர வழி கிடைத்ததே என்று தான் இப்படி சொன்னார்கள் போல !?

இது நான் நினைத்த காரணம் மட்டுமே ...இதற்க்கு வேறு காரணங்களும் கூட இருக்கலாம்.அப்படி ஏதேனும் இருந்தால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் .