Wednesday, September 16, 2009

கண்ணில் மழை...சூன்யம்...குருவியாய்ப் பிற...லயிப்பு(கவிதைகள்)


1
தங்கக் கடுக்கனும்
தவிட்டு நிற
முண்டா பனியனும்
மஞ்சள் பையும்
மட்டுறுத்தப் படாத கோவணமுமாய்
வாழ்ந்து முடிந்து விட்ட தாத்தாவுக்கு
பாடையில் வைத்துக் கட்டப் பட்டது
வெறும் வாக்கிங் ஸ்டிக் மட்டுமே !!!
பாட்டிக்கும் வருத்தமோ
என்னைப் போலவே!
சாம்பல் ஆற்றிய பொழுதில்
விரல்களில் இடறிய
பித்தளைப் பூண் பார்த்து
கண்ணில் மழை !

2

சாங்கோ பாங்கமாய்
பூரண விளக்கமாய்
சட்டி உடைப்பதாய்
சுட்டிக் காட்டி
விளக்கப் படவேயில்லையோ
எங்கேயும்... எப்போதும் ...
தாம்பத்யம் ?!
யாகாவராயினும் நா காக்க
காவாக்கால்
குடும்பநல கோர்ட்டில்
சொல்லிழுக்குப் பட்டு
சொந்த செலவில் சூனியம் தேடுக ...

3

சிட்டுக் குருவியின்
முறி சிறகேறி
பட்டுத் தலையில்
மெல்லக் குட்டி
விட்டு விடுதலை ஆவதெப்படி?
விளக்கம் கேட்டால்
விருட்டென்று பறந்தது
எம்பி எழுந்து ;
உதறி விழுந்தேன்
உதிர் மணல் போலே ...
உதற முடியுமோ ?
குருவியல்லால் ...
குருவியாய்ப் பிற!

4

நேற்றும்
இன்றும்
நாளையுமான
யோசனைகளைப்
பிய்த்துப் போட்டு விட்டு
கொஞ்சம் இளைப்பாறவே
அண்ணாந்து பார்க்கிறேன்
ஆகாய விமானத்தை ...
என்னை மறந்த நான்
லயித்தல் சுகம் .