Thursday, February 18, 2010

பனி நசுங்கும் புல் கசங்கும் ...சுதேசித்தனிமைகள் வேண்டும்...

அது ஒரு நீள் நெடும் பாதை ; தாரெல்லாம் இல்லை வெறும் செம்மண் ரஸ்தா தான்.கப்பி ரோடு என்றும் சொல்லிக் கொள்ளலாம்.மழை பெய்திருக்கவில்லை.டிசம்பர் மாதக் குளிர் உள்ளங்கால் கூசிச் சிலிர்த்தது பனி நசுங்கும் புல் கசங்கும் ஒவ்வொரு எட்டிலும்

விடியற் கருக்கலில் தூரத்து மலை விளிம்பில் மேகப்புடவைகள் மெல்லத் தழுவி மரகதப் பசும் உடல் வழுக்கும் நீலக் குந்தன் கற்களாய் சிமிட்டிக் கொண்டு கண்ணாமூச்சு ஆட.ஆளற்ற சாலையோரம் அசைவின்றி நடக்கையில் தெய்வீகத் தனிமை சுவாசமெல்லாம் நிரம்பி புகையாகிக் கசிந்து மலை நோக்கி முகடேற,வால் நீண்ட கருங்குருவி பெயர் தெரியாப் பறவையுடன் சோளக்காடு தாண்டி சொல்லொணா உவகையோடு எங்கிருந்தோ... எங்கோ பறக்க அதன் சிறகசைப்பில் உயிரசைய உடன் பறந்தது உள்ளிருக்கும் உல்லாசம்.

யாராலும் கண்காணிக்கப் படாத சுதேசித்தனிமைகள் வேண்டும் தவணை முறையில்.

உங்களுக்கும்...

எனக்கும்...

நமக்கும்...

ஏன்...

எல்லோருக்கும் தான்!

இன்றோடு விடுமுறை சில நாட்கள் இந்த தளத்துக்கு ...நாள் ...நேரம் ... நட்சத்திரம் ...பார்த்துக் கொண்டு இன்னொரு நாளில் வருகிறோம்.

நோட்:

இங்கே சுதேசித்தனிமை என்பது இடவாகு பெயர் (ஆகு பெயர்)
சுதேசி - நம் தேசம்
விதேசம்-அயல் தேசம்

சுதேசித் தனிமைன்னா சுயம் சார்ந்த தனிமைன்னு அர்த்தம் பண்ணிக்கலாம்,இந்தப் பதம் சரியா தவறான்னு மொழி வல்லுனர்கள் தான் சொல்லணும்.
:)