Monday, August 8, 2011

Sharing...




கேணி சந்திப்பில் வரும் ஆகஸ்ட் 14, ஞாயிறு மாலை 4 மணிக்கு எழுத்தாளர் வண்ணநிலவன் (துர்வாசர்) பங்கேற்கிறார். இடம்: 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. வருக நண்பர்களே

Sunday, August 7, 2011

சித்ரா -சிறுகதை

சித்ராவின் கணவனாம் !

இன்று தான் பார்க்கிறேன் இவனை.

எப்போது வந்திருப்பானோ தெரியவில்லை பெரிய மாமா மிகை பாவனையாய் அவனோடு பலகாலம் ரொம்ப சிநேகம் போல அவனது தோளைத் தட்டி கைகளைப் பற்றிக் கொண்டும் விட்டுக் கொண்டும் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார் .

தலை முழுக்க மங்கி நிறமிழந்த பேப்பர் கூழ் பெட்டியை வைத்துக் கவிழ்த்தார் போல ஒரு ஹேர் ஸ்டைல் அவனுக்கு ,அந்த முடி வெட்டும்,முழி வெட்டும் முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போனது எனக்கு . இவனை எப்படித்தான் சகித்துக் கொண்டு இரண்டு வருடங்கள் வாழ்ந்து சித்ரா ஒரு பிள்ளையையும் பெற்றாளோ என்று பற்றிக் கொண்டு வந்தது. காட்டெருமை நடை!

சித்ரா வீட்டிலிருந்து ஒருவரும் இன்னும் சாமி கும்பிடுக்கு வரக்காணோம். கோயிலில் கூட்டம் நெறிபட்டுக் கொண்டிருந்தது .
ஃபேன் உபயம் ராசுக் கொத்தனார் என்ற அடர்நீல எழுத்துக்களோடு தலைக்கு மேலே காற்றாடி ஓடிக் கொண்டிருந்தாலும் அந்தக் காற்றை அந்த அடர் நீல எழுத்துக்களே மொத்தக் குத்தகை எடுத்துக் கொண்டார் போல ராசுக் கொத்தனார் வகையறாக்கள் அந்த ஃபேன் அடியை விட்டு நகர்வேனா என்று நின்று கொண்டிருந்தார்கள் .

ராசுக் கொத்தனார் சம்சாரம் அலமேலு யாரும் பார்க்காத சமயமென்று தான் எண்ணின நேரமெல்லாம் அண்ணாந்து அண்ணாந்து அந்த ஃபேனைப் பார்ப்பதும் உடனே உள்ளே அம்மனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வதுமாய் இருந்தாள்.

பார்க்கப் பார்க்க வேடிக்கை தான் மனித சுபாவங்கள் ,நான் சித்தியின் மணிக்கட்டைக் கிள்ளி ராசுக்கொத்தனார் சம்சாரத்தை காட்டினால் அவளோ போன வருடம் தாத்தா இருக்கும் போது கோயிலுக்கு என்று கோயில் முகப்பில் செய்து நிறுத்தி இருந்த பெரிய வெண்கல மணியையே பெருமை சிந்தி சிதற பார்த்துக் கொண்டிருந்தாள். என்னே அரிய கல்யாண குணங்களடா நம் மக்கள் மனங்களுக்குள் !!

அதற்குள் சித்ரா கணவனைக் காணோம் ,கழுதை கெட்டால் குட்டிச் சுவராம். எங்கே போயிருப்பார்கள் ? பால்வாடியின் முள்காட்டுப் புதர் ஓரம் தள்ளிக் கொண்டு போயிருப்பார்கள் தண்ணிக் கோஷ்டிகள் ,அவனுக்கு இந்த ஊரோடு இழுத்துக் கட்டிய சரடுகள் அறுந்தே போன பின்னும் ஊர்ப் பொங்கலுக்கு வருகிறான் ...வந்து கொண்டே இருக்கிறான் என்றால் வேறென்ன உத்தம உன்மத்தமான பந்தங்கள் கட்டிக் கொண்டு ஆடக் கூடும்!

"]உங்க மாமா தண்ணி அடிக்கறதுக்கோசறமே அவன இங்க அழைச்சிருப்பாரு தெரியுமாடீ ?"

அத்தை சூடத் தட்டை உள்ளங்கை நிறைக்க கருப்பு பூசிக் கொள்ள தொட்டுக் கும்பிட்டுக் கொண்டே எனக்குச் சொன்னாள்.

சூடத் தட்டில் விபூதிக்குள் காசுக் குவியல்களும் பச்சை நோட்டுக்க்களுமாய் பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தது . தட்டுக் காசு நிரம்பி வழிய வழிய பூசாரி வேளார் முகம் ஆறேழு முறை பழனி கந்த விலாஸ் விபூதி தேய்த்து தேய்த்து பள பளப்பாக்கிய செப்புச் சொம்பு போல மினுங்கியது .

சித்ரா வீட்டுக்காரர்கள் பொங்கல் என்றில்லை எப்போதுமே சாமி கும்பிட ஜதையாகத் தான் கோயிலுக்கு வந்து போவார்கள் ,

துலுக்கபட்டியில் கட்டிக்கொடுத்திருக்கும் பெரியக்கா பாமா , போலீஸ்காரனைக் கட்டிக்கொண்டு சிவகாசி ரிசர்வ் லைனில் குடி இருக்கும் சின்னக்கா தனம் ,வெங்கால் நாயக்கன்பட்டியில் வாக்கப் பட்டிருக்கும் கடைசி அக்கா நீலவேணி ,எல்லோருக்கும் மூத்த அண்ணன் ஜெகநாதனின் பெண்டாட்டி ராஜகமலம் எல்லோரும் யூனிபார்ம் மாதிரி ஒரே நிறத்துப் பட்டு கட்டிக் கொண்டு முழ நீல பவுடர் டப்பாவைக் காலி செய்து விட்டு சீவிச் சிங்காரித்து தலைப்பின்னல் நீளத்துக்கு பூ வைத்துக் கொண்டு பெரிய பித்தளைத் தாம்பாளத்தில் சாமி கும்பிடு சாமான்களை நிறைத்துக் கொண்டு அவர்களது அம்மா சாவித்திரி அன்ன நடை போட்டு வர வாத்து நடை,பூனை நடை,எருமைநடையில் அக்காள்கள் எல்லாம் பின்னே பவனி வந்து கோயிலை அடைவார்கள் .

சாமி கும்பிடுவதெல்லாம் வெறுமே சம்பிரதாயம் , பழக்க தோசம் என்பதாகத் தான் இருக்கும் அப்போது யாரைப் பார்த்தாலும் .

மூன்றாம் வருடம் நான் என் அம்மா,சித்தி ,பாட்டி அத்தைகள் புடை சூழ கோயிலுக்குள் நுழைகையில் சித்ரா அண்ட் சிஸ்டர்ஸ் பச்சைப் பட்டு கட்டிக் கொண்டு மல்லிகை மணத்துக் கசங்கி தலை பாரம் தாங்காது கூந்தல் தாண்டி தரை என்பது தொட்டு விடும் தூரம் தான் என்பதாக சரிந்து தொங்கத் தொங்க கோயிலுக்குள் வியர்த்து வழிந்து கொண்டிருந்தார்கள் .

வந்த வரன்களை எல்லாம் அது நொள்ளை ,இது சொள்ளை என்று தட்டிக் கழித்து கொண்டிருந்ததில் பாட்டிக்கு என் மேல் ஏகக் கடுப்பு .

சித்ரா பல லட்சம் சொத்துக்களோடு டிஜிட் ராஜகோபாலை மணக்கப் போகும் பெருமையில் இருந்திருப்பாள் போலும் ! பெரிய கவர்னர் மாலை சங்கிலி பச்சைப் பட்டின் மேல் தாழ்ந்து படிய கழுத்தை இறுக்கிய பச்சைக் கல் அட்டிகை யோடு என்னைப் பார்த்தும் பாராதவள் போல்...என்ன நிம்மி (நிர்மலா) என்ன பண்ணிட்டு இருக்க இப்ப? என்று மிதப்பாய் பெரிய மனுஷி தோரணையில் கேட்டாள் .

" நான் ஓட்டுச் சில்லு வச்சு பாண்டி ஆடிட்டு இருக்கேன்டீ "
வாய்க்கு வந்ததை நக்கலாய் நான் சொல்ல பாட்டிக்கு வந்ததே கோபம் .
"என்ன பண்ணுவா ?எங்க உசுர எடுத்துக்கிட்டு இருக்கா வர்ற மாப்ளை எல்லாம் தட்டிக் கழிச்சிட்டு அவ்வையாராகப் போறாளாம் .."

தர தரவென்று பாட்டியை இழுத்துக் கொண்டு போய் கோயிலுக்கு வெளியில் விட்டு வந்தால் தேவலாம் என்றிருந்தாலும் அடக்கிக் கொண்டேன் அந்த என்னத்தை பிறகு அதற்கொரு பொங்கல் நேரும். எதற்கு வம்பு ?

"உன் சோட்டுப் பொண்ணு தான பாரு எம்மாம் பெருசா படிச்சிருந்தும் அதுக்குத் தக்கன மாப்ள வரணும்னு ரூல்ஸ் பேசாம எத்தன புத்தியா வீட்ல சொன்ன மாப்ளைய வசதி வாய்ப்ப பார்த்து கட்டிக்கிறேன்னு தலையாட்டிடுசுச்சு ,அதாம் பொழைக்கற பொண்ணு ."
பாட்டி எனக்குச் சொல்லிக் கொண்டே அம்மாவையும் சித்தியையும் ,அத்தைகளையும் பார்த்தாள் .

"அதானே?!" என்றன அந்த முகங்கள்.

அதற்கப்புறம் வந்த பொங்கலுக்கு நான் பாட்டி ஊருக்குப் போகவில்லை கல்யாணமாகி புகுந்த வீட்டுப் பொங்கலைப் பார்க்கப் போய் சேர்ந்து விட்டேன் . அம்மாவும் சித்தியும் கூட என்னோடு அங்கேயே பொங்கலைப் பொங்க வைக்க வந்து சேர "அங்கேயும் பொங்கல் பொங்கத்தான் செய்கிறதாம் "என்றான் தம்பி. எல்லோரும் சிரித்தார்கள் , அந்தப் பொங்கலுக்கு சித்ராவின் நினைவே இல்லை எனக்கு .
நான் போகாவிட்டாலும் பாட்டி ஊரிலும் கூட அந்த வருடம் பொங்கல் பொங்கித்தான் வழிந்ததாம் . அட எப்போதும் பொங்கலின் இயல்பு பொங்கி வழிவதன்றி வேறேல்லவே!

சித்ரா கறுப்பி தான் ஆனாலும் அழகுக் கண்கள் அவளுக்கு ;என் தங்கைக்கு தான் அவள் வகுப்புத் தோழி என்றாலும் விளையாடுகையில் நாங்கள் இருவரும் தான் ஒன்றாய் சேருவோம் பல நாட்கள் .

அடர்ந்த கரும்புப் புருவங்கள் அவளுக்கு ...கீழே திராட்சை பழத்தை பாலிடாலில் மிதக்க விட்டது போல பெரிய கண்கள்.ஒருமுறை விளையாட்டில் என்னவோ சண்டை வர ;வந்த கோபத்தில் என்ன செய்வதென்று புரியாமல் தலைமுடியை இழுத்துக் கீழே தள்ளி புடைத்துத் தெரிந்த அவளது இமைகளை ரத்தம் கன்றும் அளவுக்கு கடித்து விட்டேன். அலறி விட்டாள் அலறி ,விஷயம் அவளம்மா வரை போய் சாயந்திரமாய் பஞ்சாயத்துக்கு பாட்டியிடம் வந்தது.

"தேவகிக்கு இப்படியும் ஒரு பிள்ள பிறக்கனுமா? அதென்ன பொம்பளபுள்ள மாதிரியா நடந்துக்கிடுது? என்னத்தே நீங்க கண்டிக்கிறீங்களா இல்ல நானே ரெண்டு சாத்து சாத்தவா ? "

கண் காயத்தில் தேங்காய் எண்ணெய் பூசிய சித்ராவை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறு கையால் திண்ணையில் பாட்டிக்குப் பின்னால் அமர்ந்து பயத்துடன் நடக்கப் போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னை இழுக்க சாவித்திரி அத்தை கை நீட்ட ...ராத்திரி சமையலுக்காய் அவரைக்காய் நறுக்கிக் கொண்டிருந்த பாட்டி சடக் புடக்கென உதறிக் கொண்டு எழுந்தாள்.

இந்தா சாவித்திரி ...என்ன திடு திப்ன்னு பிள்ளைய அடிக்க கை ஓங்கிட்டு வர்ற நீ ?சின்னப்பிள்ளைங்க சண்டைய போய் வீதிக்கு கொண்டு வந்துட்ட ...போ...போ நான் கண்டிக்கறேன் .

சாவித்திரி எனக்கு அத்தை முறை ...பாட்டி இப்படிச் சொன்னதும் என்ன நினைத்தாளோ ?

"அடியேய் உன்ன எம்மருமகளாக்கி என் பையன விட்டு உதைக்கச் சொன்னா தான் திருந்துவ நீ ...என்று அநியாயத்துக்கு என்னை மிரட்டி விட்டுப் போனாள் .

எனக்கு அவள் என்னை அடித்து விட்டுப் போயிருந்தால் கூட அத்தனை பயமிருந்திருக்காது ,அவள் சொல்லி விட்டுப் போன பிறகு ராவெல்லாம் நினைத்து நினைத்து பயந்து கொண்டே இருந்தேன் அந்த குண்டுக் கண்ணன் கோபிக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கொடுத்து விடுவார்களோ என்று .இத்தனைக்கும் அப்போது படித்துக் கொண்டிருந்ததென்னவோ மூன்றாம் வகுப்பில் தான்.

சித்ரா வீட்டில் ரோஸ் நிறப் பெயின்ட் அடித்த மரக்குதிரை ஒன்று இருந்தது ,அந்தக் குதிரையில் மூன்று பேர் உட்கார்ந்து ஆடலாம் .இந்த குண்டுக்கண்ணன் உட்கார்ந்தால் யாருக்குமே இடமிருக்காது அவனுக்கே இடம் பத்தாதே ! அவன் இருக்கும் பொது அந்தக் குதிரையில் யார்ரையும் ஆட விடாமல் அழிச்சாட்டியம் செய்வான் ,அண்ணனும் தங்கையுமே குதிரைக்காக கட்டிக் கொண்டு அடித்துப் புரள்வார்கள்,சாவித்திரி வந்து முதுகில் நான்கு வைத்து எல்லோரையும் தெருவில் விளையாட விரட்டி விடுவாள். இப்படித் தான் இனிதே கழிந்தது எங்கள் பால பிராயம் .

அவனம்மா தான் அப்படி மிரட்டினாலே தவிர அவனுக்கு என்னைக் கண்டால் காந்தாரி மிளகாய்நெடி மூக்கேறிய கதை தான் ...சித்ராவின் சிநேகிதிகளான எங்களில் யாரைக் கண்டாலும் அவன் "ஏய் கொண்டி "என்று தான் கூப்பிடுவான் .

"போடா கோண மூக்கு குதிரைக் கோவாலு "என்று உரக்க கத்தி விட்டு ஓடிப் போய் ஒழிந்து கொள்வோம் நாங்கள் ,ஒருநாளைக்காவது அவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கையில் பாட்டி மிளகாய்ப் பொடி அரைக்க காய வைத்திருக்கும் வர மிளகாய் இரண்டை உடைத்து அவன் மூக்கில் திணித்து விட்டு ஓடியே போய் விட வேண்டும் என்றெனக்கு ஆவல் உந்தித் தள்ளி இருக்கிறது அப்போதெல்லாம் .


எப்படியோ என் வர மிளகாய் உடைப்பிற்கு தப்பி விட்டாலும் பாவம் சித்ராவைக் கட்டிக் கொடுத்த ஆறே மாதத்தில் ராத்திரி fireஆபிஸ் கணக்குப் பிள்ளை வேலையை முடித்து கொண்டு பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கையில் அவன் வைத்திருந்த பணத்துக்காக சாத்தூர் முக்குப் பாலம் ரோட்டில் வைத்து முகமறியாத சிலரால் விருதாவாய் குத்திக் கொல்லப் பட்டான் .
கோபாலின் கதை இப்படி முடிந்தது .
கோபால் உயிரோடு இருக்கும் போதே ... கை நாட்டு கூட ஒழுங்காய் போடா வராத டிஜிட் ராஜகோபால் என்ற திருநாமத்தோடு ஊரெல்லாம் வளைய வந்த தன் சின்ன முதலாளிக்கு சிவகாசி எஸ்.எப்.ஆர்.காலேஜில் எம்.சி.ஏ படித்து முடித்த தன் கடைசித் தங்கை சித்ராவை சொத்துக்காக கல்யாணம் பண்ணி வைத்திருந்தான். எல்லாம் இவன் ஏற்பாடு தான் .சித்ராவும் எதற்கு மண்டையை ஆட்டினாள் என்பது ஒரு எழவும் புரியத்தான் இல்லை , என்ன தான் சொத்து கிடைத்தாலும் அவளுக்கு ரசனை காணாது என்று தான் நினைக்க வேண்டி இருக்கிறது இப்போது அவள் புருசனின் முடி வெட்டைக் காண்கையில் ,

"பேப்பர் கூழ் பெட்டி மண்டையன். " ஓரிருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன். அவனுக்கென்ன தெரியவா போகிறது இப்படியெல்லாம் தனக்கு பெயர் வைக்கப் படுவது .

அவன் இந்நேரம் யார் யாரோடெல்லாம் தண்ணியில் முங்கிப் போய் கிடக்கிறானோ?!

போன வருடப் பொங்கலுக்கு தன் பெண்டாட்டியோடு வந்திருப்பானாய் இருக்கும். இந்த வருடம் தனியே வர என்ன ஒரு திண்ணக்கம் இவனுக்கு ? என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன் .

தேனிப்பக்கம் சருத்துப் பட்டியில் இருந்து எலுமிச்சம் பழச் சிவப்பில் அவனுக்கு மறுகல்யாணத்துக்கு பெண் எடுக்கப் போகிறார்களாம். பாட்டி குசு குசுவென்று சித்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் .

"அவனுக்கென்ன ஆம்பளை ...பொண்டாட்டி செத்தா புது மாப்ள தான் "செவிட்டில் அறைந்தார் போலிருந்தது பாட்டி சொல்வது.
அவன் எக்கேடோ கெட்டு ஒழிகிறான் .

எம்.சி.ஏ படித்து முடித்த பெண்ணை அவன் ஏன் வீட்டு டெலிபோன் வயரால் கழுத்தை நெறித்துக் கொன்றான் ?!

ஊர் என்ன சொன்னது?

உறவுகள் என்ன சொல்லி ஆற்றிக் கொண்டன இந்த துக்கத்தை ?
சித்ரா செத்துப் போகையில் அவளுக்கு ஒரு வயதில் ஒரு மகளிருந்தாள்.
சித்ராவின் அப்பாவுக்கு பேத்தியை விட மகள் செத்ததில் மருமகன் மீது வழக்குப் போடாமல் இருக்க வந்த நஷ்ட ஈட்டுத் தொகையின் மீது தான் அதீத பாசம் மிகுந்து வழிந்தது.

கழுத்து நெறிபட்டு செத்துக் கிடந்த தன் பெண்டாட்டியை ட்ரை சைக்கிளில் போட்டு எடுத்துக் கொண்டு போய் சுடுகாட்டில் எரிக்கச் சொன்னது எது? ஆணாதிக்கமா ? பண ஆதிக்கமா?

என்ன நடந்திருக்கக் கூடும் என பல யூகங்கள் கசிந்தன.அதிலொன்று தன் கம்பெனி ஆர்டர்களுக்காக வடநாட்டு ஏஜெண்டுகளுடன் தன் அழகான பெண்டாட்டியை கம்பெனி கொடுக்கச் சொன்னானாம் இந்த பேப்பர் கூழ் பெட்டி மண்டையன்.

இவளென்ன சொன்னாளோ... நடந்த வாக்கு வாதத்தில் தான் சித்ராவின் கழுத்தை டெலிபோன் வயர் சுற்றிக் கொண்டதாம்.
அப்படிப் பட்ட துணுக்குறாத நுணுக்க குணம் கொண்ட தகப்பனிடத்தில் தான் சித்ராவின் மகள் வளர்ந்து வருகிறாள்.

"எங்க பொண்ணையே கொன்னுட்டாங்க இனி அவன் பொண்ணை நான் ஏன் பார்க்கறேன் ..." - சித்ராவின் மகளைக் குறித்து கேட்பவர்களுக்கெல்லாம் இதே பதில் தான் சித்ராவின் அப்பாவிடமிருந்து .மனிதருக்கு மகளால் வந்த பணம் இன்னொரு வீடு கட்டிக் கொள்ள உதவியது. சம்சாரத்துக்கு வைக்கோற் பிரி சங்கிலி செய்து போட்டுக் கொள்ள உதவியது.பாவம் அந்த சின்னக் குழந்தை பற்றி யோசிக்கத் தான் எவருக்கும் மனமில்லை.
சதா பணம் பேசிக் கொண்டே இருப்பதால் .

யாரும் எவர் மனதிலும் ஆழப் பதிவதில்லையாம் ...சித்ராவின் மகளை நான் பார்த்ததில்லை போலவே என் மகளையும் அவள் பார்க்கவா போகிறாள் ? என்று என்னை நானே ஊமை சமாதானம் செய்து கொண்டு அந்தப் பொங்கலோடு சித்ராவை மறந்து போனதாய் எனக்குள் நானே சொல்லிக் கொள்கிறேன் எப்போதாவது பொங்கலுக்கு பாட்டி ஊருக்குப் போக நேர்கையில் மட்டும்.

சித்திரைப் பொங்கல்கள் எல்லா ஊர்களிலும் வருடா வருடம் பொங்கிக்கொண்டு தான் இருக்கின்றன சித்ரா இல்லாமல்.

அவள் மகளை எப்போதேனும் பார்க்க நேர்ந்தாலும் கூட எனக்கு அவளை அடையாளம் தெரிய வாய்ப்பே இல்லை.

Saturday, August 6, 2011

நல்லதங்காளும் அவளேழு வெள்ளரிப்பிஞ்சுகளும்...

வேழமறுத்து துண்டாடும் கோடைகடுவெயில்
கானக நடுவிற் செவ்வரிமா சிறுமுயல்
காண நாணி கடுகிப் பாய்ந்து தாவி அணைந்தது
பின்னப்பட்ட காசி நகர் சுற்றுக் கோட்டை
கற்சிதைந்த பாழும் கிணற்றில் ;
கிணற்று நீர் சிலும்பிச் சிலும்ப
தழும்பி முகம் காட்டினாள்
நல்லதங்காள் .
தூசு தும்பேஎன்று
அருந்தக் கை குவித்த நீரள்ளி வீசி
மஞ்சள் பூ முகம் மறுத்துத் திரும்பினால்
பசியோ பசியென்று கத்திக் குமிகின்றன
ஆறேழு வெள்ளரிப் பிஞ்சுகள்
மூளி மறுத்த முக்கால் வயிற்றை
உப்பி நிறைத்தது உப்பு நீர் கிணறு ;
கோடைக் கிணறுகள் தோறும்
இன்னுமிருக்கிறார்கள்
நல்ல தங்காளும்
அவளேழு வெள்ளரிப் பிஞ்சுகளும் .