Friday, July 1, 2011

டூ விட்டு டூ விட்டு பழம் விட்ட வாழ்க்கை ...










//The childhood shows the manAs morning shows the day.~John Milton, Paradise Regained//






// If you carry your childhood with you, you never become older. ~Tom Stoppard//

குழந்தையாகவே இருந்திருக்கலாம்
அம்மாவின் முந்தானையை விடாது பற்றிக் கொண்டு
அப்பாவின் தோள் சவாரி எனக்கு தான் முதல் என்று
தம்பி தங்கைகளிடம் போட்டி போட்டுக் கொண்டு
நானும் வருவேன் என்று முந்திரிகொட்டையாய் வயலுக்கு ஓடி
பாட்டியோடு தூக்குப் போணி மூடியில்
பிடிப் பிடியாய் பப்பு புவ்வா சாப்பிட்டுக் கொண்டு
சுண்டு விரல் பிடித்து
மிளகாய் களத்துக்கும் வரப்பு மேட்டுக்குமாய்
தாத்தாவோடு தோட்டம் அளந்து கொண்டு
பெரிய கேரியர் வைத்த சைக்கிளில்
மாமாக்களோடு சர்கஸ் பார்க்கப் போய்க் கொண்டு
சித்தியோடும் அத்தைகளோடும் வாயாடிக் கொண்டு
தாயமும் பல்லாங்குழியும் கலைத்துக் போட்டு
கூட இரண்டு கொட்டுகளை உபரியாய் வாங்கி
திண்ணையில் உட்கார்ந்து அழுது கொண்டு
அழுத கண்ணீர் காயும் முன்னே
ஊர்ப் பிள்ளைகளோடு தெருமுக்கு காலி இடத்தில்
பாண்டி ஆடிக் கொண்டு பட்டம் விட்டுக் கொண்டு
கிட்டிப் புள் கோலால் தெருவளந்து ஊர்அளந்து
உத்தமக் கண்ணன் கோயில் மார்கழி பிரசாத கியூக்களில்
ராஜியோடும் பாமாவோடும் டூ விட்டுக் கொண்டு
டூ விட்டு டூ விட்டு பழம் விட்ட வாழ்க்கை
ருசியாகத்தான் இருந்தது ... இருக்கிறது
இன்னும் நாக்கின் அடியில் இனிக்கும் தேனாய்
மனம் எங்கும் அந்த நாட்கள் .
நூலறுந்த பட்டங்களாய்
வாலறுந்த தும்பிகளாய் ...






//Old age lives minutes slowly, hours quickly; childhood chews hours and swallows minutes. ~Malcolm de Chazal //









ஆண் மனம் (சிறுகதை)

1. ஆண் மனம் :


சிந்தப்புளி பெரியத்தை வந்திருந்தாள்,பாரைப்பட்டியிலிருந்து சின்னத்தை வந்திருந்தாள், ஒத்தயலில் இருந்து விஜியக்கா கூட வந்திருக்கிறாள் .அம்மா கூடத்தில் புளி தட்டிக்கொண்டே அவர்களோடு பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தாள் ,அப்பா இன்னும் மல்லித் தோட்டத்திலிருந்து வரவில்லை,வரும் நேரம் தான், பசி தாங்க மாட்டார் ,பத்து மணியிருக்கும் சூரியன் உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்தான் ,பஸ் ஸ்டாப் கடைகளில் வடை ..கிடை என்று என்னத்தையாவது அரித்துப் போட்டுக் கொண்டிருப்பார் இந்நேரம்.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் காலையில் நீராகாரமும் துவையலும் தான் பெரும்பாலும் ,எங்களுக்கு சோறும் குழம்பும் இருக்கும் தோட்டத்துக் காய்கறிகளில் ஏதோ ஒன்றை அவித்தோ பொரித்தோ வட்டிலில் போடுவாள் பாட்டி , கண் மங்கிப் போனதில் இருந்து புளிக்குழம்பு வைக்கையில் எல்லாம் ஒரு புழுவாவது செத்து மிதக்கும் ரசத்திலோ ,குழம்பிலோ!


பாட்டிக்கு கண் மங்கிப் போச்சு ,நான் நேரம் முச்சூடும் தோட்டமே கதின்னு கெடக்கேன் ,உங்கப்பா தோட்டம் விட்டா பஞ்சாயத்து போர்ட் திடலே கதின்னு கெடக்காரு ,கட்சிக்கார கூட்டாளிக கூட சேர்ந்து அரட்டை அடிக்கவே நேரங்காண மாட்டேங்குது அவருக்கு. இவன் தினோமும் என்னப் போட்டு குடையுறான்.அக்கா தங்கச்சிக இருந்தென்ன அத்தை மாமாக்க இருந்தென்ன காலாகாலத்துல எனக்கொரு பொண்ணப் பார்த்து கட்டி வைக்க யாருக்கும் மனசாகலன்னு ! ஆச்சு வைகாசி பொறந்தா முப்பது முடியப் போகுது அவனுக்கும்.


நம்ம தோட்டத்துல மடை அடிச்சுகிட்டிருந்த பூச்சிப்பய மகன் இவனுக்கு பத்து வயசு இருக்கையில தான் சாத்தூர் கவருமெண்டு ஆஸ்பத்திரில பொறந்தான்,உங்கப்பா இவன தோள்ள தூக்கிட்டு வர நாங்க போயி பார்த்துட்டு சட்டைத்துணி எடுத்துக் கொடுத்திட்டு வந்தோம் , அந்தப் பயலுக்கு கல்யாணம்னு நேத்து வந்து பத்திரிக்க வச்சிட்டுப் போறான் ;
அம்மா சொல்லச் சொல்ல எனக்கு மனசில் ஓரிடத்தில் லேசாக விட்டிருந்த கீறல் கோணல் மாணலாக நீண்டு புயல் நேரத்து மின்னல் கொடி போல விரிந்து கொண்டிருந்தது,அந்தச் சத்தம் என் காதுகளுக்கு மட்டும் தான் இரைச்சல் ,அவர்களுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.


பெரியத்தை இரைச்சலை பேரிரைச்சல் ஆக்கும் முனைப்பில் இருந்தாள் ,


"அட ஏன் அண்ணி பூச்சிப்பய மகனுக்குப் போயிட்ட நீ ! என் நாத்தனார் பையன் ரெண்டு பேத்துக்கும் கல்யாணமாகி இப்ப மூத்தவனுக்கு ரெட்டப் புள்ளைங்க ,முந்தாநேத்து நானும் உங்க தம்பியும் மெட்ராசுக்கு போயிட்டு தான வந்தம், புள்ள செக்கச் செவேல்னு ரோஜாப் பூவாட்டம் அம்புட்டு அழகு .


என்மகள கட்டிக்கடான்னு உங்க தம்பி சண்டை பிடிச்சார் ;அவென்..."போங்க மாமா வளர்த்த புள்ளையப் போயி யாராச்சும் கட்டுவாங்களான்னுட்டு இஞ்சினியரிங் படிச்சு வேலைக்குப் போற பொண்ணாப் பார்த்து கட்டிக்கிட்டான் ,கூட வேலை பார்க்கரவலாம் .லவ் மேரேஜாம் அண்ணி...பொண்ணு கிடைக்காத குத்தத்துக்கு அதுவுஞ் சர்தேன்னுட்டு என் நாத்தனார் கம்முன்னு இருந்துகிட்டா ."


அக்கா சொல்றது சரிதேன் ,பொண்ணுகளுக்கு ரொம்ப டிமாண்ட் தானாம் அண்ணி ,சின்னத்தை தன் பங்குக்கு எதையாவது சொல்ல வேண்டுமே என்பதாக ஒரு வார்த்தையை வெளியே விட்டாள்.


அக்கா இன்னும் ஒன்றுமே சொல்லாமல் தான் உட்கார்ந்திருந்தாள் ,
அவளுக்கு தீபாவளிச் சீராக பிறந்த வீட்டிலிருந்து இந்த வருஷம் அரக்குப் பட்டுச் சேலை எடுத்து நீட்டவில்லை என்ற காந்தள் இன்னுமிருந்திருக்கும் போல ,இந்த வருஷம் மல்லி நல்ல விளைச்சல் ,பட்டுச் சேலை எடுத்துக் கொடுத்தால் என்ன நட்டம் என்று அவள் நினைத்திருப்பாள்,


அவளுக்கென்ன தெரியும் வந்த வருமானத்தில் முக்காலும் கடனை பைசல் செய்து கழிந்தது என்று, மிச்சம் மீதி வைத்து தான் இந்த வருஷம் மேலத் தோட்டத்தில் நித்யகல்யாணி போட்டிருக்கிறார் அப்பா.

வருஷம் திரும்பறதுகுள்ள உம்மக சடங்காகி நிப்பா .அப்பப் பார்த்துக்கிடலாம் பிள்ள பட்டுச் சேலையெல்லாம் ,அதுக்குச் செய்ய பணங்காசு பார்க்க வேண்டாமா ?ஒனக்கே எத்தன நாலு ஒடைக்கிறதாம்? அம்மா அவள் மூஞ்சியைத் தூக்கின ஏதோ ஒரு நேரத்தில் ஆற்றாமையில் இப்படிச் சொல்லி விட்டாள் ...என்ன இருந்தாலும் கட்டிக் கொடுத்து அடுத்த வீட்டுக்குப் போன பெண்ணுக்கு ஆயிரம் தான் அம்மா தானே சொன்னாள் என்றாலும் மனசு தாங்குமா ?


என்னவோ ஒப்புக்கு தான் வந்து உட்கார்ந்திருக்கிறேன் இங்கே ... என்பதாகத் தான் இருந்தது கூடத்தில் அவளது இருப்பு.


பெரியத்தைக்கு மகள்கள் இருக்கிறார்கள் ,என் வயதுக்கு சின்னப் பெண்கள் தான் ,ஆனாலும் மாமன் மகனைக்கட்டினால் என்னவாம்? ஆனால் கட்டிக் கொள்ள மாட்டார்கள் படிக்க வேண்டும் என்று சால்ஜாப்பு சொல்லிக்கொள்கிறார்கள் பெற்றதுகள் முதற்கொண்டு நண்டு சுண்டான் வரை. அம்மா கொஞ்ச நாள் கேட்டுப் பார்த்து விட்டு அப்புறம் இது கதைக்காகாது என்று விட்டு விட்டாள் .


சின்னத்தைக்கு ரெண்டும் மகன்கள் தான் ,மூத்தவன் பிளஸ் டூ முடித்து விட்டு படிப்பில் இஷ்டமில்லாமல் அப்பாவின் அரிசி மண்டியில் உட்கார்ந்து விட்டான் ,சின்னவன் பத்தாவது படிக்கிறான். படிப்பு வராத பயலுகள் தான் இவனுகள் பெண்ணாய்ப் பிறந்து தொலைத்திருக்க கூடாதா என்று வர வர புத்தி பேதலித்து தொலைகிறது எனக்கு.


பெரியக்கா மகளை கட்ட எனக்கு இன்னும் இருபது வயசு குறைய வேண்டும் . ஓரோர் சமயம் அம்மாவின் மீதும் அப்பாவின் மீதும் ஆத்திரம் பற்றிக் கொண்டு வரும் .ஒன்று அக்காவுக்கு சீக்கிரமே கல்யாணம் செய்து வைத்திருக்க வேண்டும் ,இல்லாவிட்டால் என்னையாவது லேட்டாகப் பெத்திருக்க வேண்டும் .இப்படி ரெண்டும் கெட்டான் நிலையில் அக்கா மகள் என்று உரிமையாய் பெண் கேட்டு சட்டமாய் கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் வயது கிடந்தது சீரழிக்கிறதே.


சொந்தத்தில் தான் பெண் கிட்டவில்லை.ஒழிகிறது என்று தெற்குத் தெரு வார வட்டிக்காரன் மகள் மோனியை ரூட் விட்டால் அவள் 'சிரித்துச் சிரித்து சிறையிலிட்டது 'என்னை அல்ல பிரசிடென்ட் மகன் கண்ணனை .அந்த வயிற்று எரிச்சலை ஏன் கேட்கிறீர்கள் ? மூணு வருசமஅய்யா அவள் காலேஜுக்குப் போகையில் எல்லாம் பஸ் ஸ்டாண்டே கதி என்று கிடையாய் கிடந்திருக்கிறேன் .என்னைத் தான் பார்த்துச் சிரிக்கிறாள் என்று எப்படித் தான் நம்பிக் கொண்டிருந்தேனோ!


'அவள் பறந்து போனாளே! ' என்றோ 'எங்கிருந்தாலும் வாழ்க 'என்றோ மன்னித்து சகோதரியாய் ஏற்க முடியவில்லை ,காதலித்த பெண்களுக்கு கல்யாணமாகி விட்டால் அவர்கள் சகோதரிகள் என்று போதிக்கும் தமிழ் படங்களை நான் வெறுக்கிறேன். கனவு காண தமிழ் பட கதாநாயகிகள் யாரும் கிடைக்காவிட்டால் மோனி இப்போதும் என் காதல் தேவதை தான் .அவளுக்கு கல்யாணமானது என் குற்றமா ?

"உன் குற்றமா ...என் குற்றமா ...யாரை நான் குற்றம் சொல்ல?"
இவள்களை விடுங்கள் ஒரு வருஷம் முன்னால் பெரியக்கா கோவில்பட்டியில் வீடு எடுத்துக் கொண்டிருந்தாள் என்று என்னை அங்கே காவல் வைத்தாள்,மாமா சிவகாசியில் பிரிண்டிங் பிரஸ் வைத்திருக்கிறார் ,அவரால் அங்கிருந்து அசையக் கூட முடியாது ,அப்பா தோட்டத்துப் புலி, இவர்கள் எல்லோருக்கும் வேலை கெட்டு விடக் கூடாது என்று வெட்டிப் பயலே என்று சொல்லாமல் சொல்லி என்னை அங்கே மேற்பார்வை பார்க்கப் போட்டார்கள்.

முதலில் வேப்பங்காய் ஜூஸ் குடித்த கதையாகத் தான் வண்டி வண்டியாக அக்கா மாமாவைத் திட்டிக் கொண்டு அங்கே போய் வந்து கொண்டிருந்தேன் ஒரு நாள் விட்டு ஒருநாள். அடித்தது லாட்டரி பிரைஸ் கதையாக புறநகர் பகுதியான அங்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக எழும்பிய புது வீடுகள் ஒன்றில் புவனா வீட்டுக்காரர்கள் குடி வந்தார்கள் .


ஒரே ஜாதி என்ற சலுகையில் குடிக்கத் தண்ணீர் கேட்டும் வீட்டுக்கு phone போடவும் அங்கே போய் வந்ததில்,புவனாவை ரொம்பப் பிடித்துப் போனது .அவளுக்கும் என்னைப் பிடித்திருந்தது ,இல்லாமலா என்னோடு திருச்செந்தூர்,குற்றாலம் என்றெல்லாம் டூர் வந்திருப்பாள். ,அவளுக்கு என்னை கட்டிக் கொள்ள இஷ்டம் தான். அத்தை மகள்கள் அக்கா மகள் விசயத்தில் எல்லாம் விதி தான் சதி செய்தது என்றால் இப்போது அப்பா குறுக்கே விழுந்து கெடுத்தார்.


" அஞ்சு பவுன் கூட போடா மாட்டாங்களாம்டா.அவ அப்பன் கோவில்பட்டி முழுக்க எங்க சீட்டு கச்சேரி நடந்தாலும் அங்க இருப்பானாம் ,அம்மாக்காரி பலகாரம் செஞ்சு தின்னே சொத்த அழிச்சவலாம் ,இப்பிடியாப் பட்ட இடத்துல பொண்ணு கட்டி உன்ன சீரழிக்கச் சொல்றியா ? நான் வேற பொண்ணு பார்க்கறேன் ,இவள விட்ரு "என்று ஒரே போடாகப் போட்டார்.


புவனா அதற்கப்புறமும் கூட ஒருமுறை என்னைப் பார்க்கையில் "என்னை எங்கயாவது கூட்டிட்டுப் போய் கோயில்ல வச்சு தாலி கட்டுங்க ,நீங்க இல்லனா நான் மருந்தக் குடிப்பேன் என்று கெஞ்சியவள் தான் இப்போது சாத்தூர் வெட்டினரி டாக்டர் ஒருவனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு வருஷம் திரும்பும் முன் பிரசவ லேகியம் தின்று கொண்டிருக்கிறாளாம் .


இதை எனக்குச் சொன்ன வேலுத்தேவர் மகன் போண்டா மருதுவை செவிட்டில் அறைந்து விட்டு தோட்டத்து மோட்டார் ரூமில் உட்கார்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதேன் நான் .


அப்பா கூட படித்தவளாம் ராஜ திலகம் டீச்சர். அவளுக்கு மூணும் பெண்கள் ஒவ்வொருத்திக்கும் 25 சவரன் போடுவேன் என்று இரண்டு மகள்களைக் கரை ஏற்றி முடித்து விட்டாளாம்,கடைக்குட்டி செல்வராணி தான் பாக்கி.அவளை எனக்கு கேட்கலாம் என்று அம்மா ஆசை காட்ட அப்பா பஸ் ஏறி ராஜபாளையம் போய் வந்தார்.


ஐந்தாறு முறை பஸ் காசு தான் விரயமானது ,அந்தப் பெண்ணுக்கு அக்கா மாப்பிள்ளைகள் போல சிங்கப்பூர்,மலேசியாவில் பெட்டி தூக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளைகள் தான் வேணுமாம் ,விவசாயம் பார்க்கும் என்னையெல்லாம் தலை தூக்கியே பார்க்கப் போவதில்லை என்று விட்டாளாம் அப்பா முகம் தொங்கிப் போக குரல் இறக்கிச் சொன்னார்.


சத்தியமாய் நான் அந்நேரம் புவனாவைப் பற்றி எல்லாம் அப்பாவிடம் ஒரு வார்த்தையும் கேட்கவில்லை.

ஆனால் அப்பா என்ன நினைத்தாரோ அன்றிலிருந்து என்னை அமட்டுவதே இல்லை .


உத்தியோகம் புருஷ லட்சணம் என்று அன்றைக்கு தான் கண்டுபிடித்தவரைப் போல விளைச்சல் வற்றிப் போன கீழத் தோட்டத்தை விற்று விட்டு இந்தாடா எதுனா தொழில் ஆரம்பி என்று சித்துராஜபுரத்தில் கேபிள் டி.வி இழுக்கும் தொழில் செய்ய முதல் தந்து அனுப்பினார் என்னை.


அப்புறமும் ரெண்டு வருஷம் கழிந்து தான் எனக்கு தனலட்சுமி கிடைத்தாள்.


என் தொழிலில் வேர் பிடிக்க வேண்டுமானால் உள்ளூரில் ஏற்கனவே கேபிள் டி.வி தொழிலில் இருந்த ரங்கனை முடக்க வேண்டி இருந்தது ,அவனை உறவாடித் தான் முடக்குவது என்றானது விதி. அவன் என்னை மடக்கிப் போட அவனது மச்சினியை எனக்குக் கல்யாணம் செய்து வைத்தான்.

இப்போது ரெண்டு பேரும் சேர்ந்து கொண்டு சிவகாசியைச் சுற்றி இருக்கும் தாயில்பட்டி,மடத்துப்பட்டி,சுப்ரமணியபுரம்,சசிநகர்,ராமசாமி நகர் வரைக்கும் கூட எங்கள் கொடியைப் பறக்க விட்டு விட்டோம்.

எப்படியோ தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யனாய் தனத்தைக் கட்டிய பின் முதல் பிரசவத்துக்கு ரங்கலட்சுமி ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தேன் . பிரசவ வார்டில் தனம் ,வராண்டாவில் நான் நின்றேன் ...அப்போது தான் புவனா தன் ஏழு வயது மகனை அழைத்துக் கொண்டு வராண்டா திருப்பத்தில் வரும் போதே என்னைப் பார்த்து விட்டால் போலும் .

என் மனதில் சாரல் அடித்தது .


அவள் முகத்தில் காணாததைக் கண்ட சந்தோசம் .
இத்தனூண்டு நாணத்தோடு கிட்ட வந்தவள் மெதுவாய்க் கேட்டாள்

"எப்டி இருக்கீங்க ராதா? "


"நல்லா இருக்கேன் புவனி ,உம்பையனா ? ஸ்கூல் போறானா? "
லேசாக கலங்கத் தொடங்கிய கண்களை இமைகளை அடித்து நீர் விலக்கம் செய்து அவளை சம்பிரதாயமாய் விசாரித்தேன்.


"ம்ம்...ரெண்டாங் கிளாஸ் படிக்கிறான்.


"பொம்பளப் புள்ளயாமே ... வெராண்டாவுல பார்த்தேன் அக்கா சொன்னாங்க ,மகாலட்சுமி பொறந்திருக்கா. "

புவனா பிரசவ ஆஸ்பத்திரியின் பழக்க தோசமாய் சில வார்த்தைகள் உதிர்த்தாள்.

" ம்ம்..."

எனக்கும் கல்யாணமாகி குழந்தையும் பிறந்திருக்கிறது அதை புவனி வாயால் கேட்டதும் ஒரு பெரிய ஆயாசப் பெருமூச்சு கிளம்பியது எனக்குள் நிம்மதியாய்.

பரம நிம்மதி .

அப்படியே வெராண்டாவில் போட்டிருந்த சிவப்பு வினைல் சேரில் சாய்ந்து கொண்டு தூக்கம் போல கண்களை மூடிக் கொண்டேன் .
புவனி போய் வெகு நேரமான பின் ரங்கனின் அலைபேசி அழைப்பில் தான் துள்ளிக் கொண்டு விழித்தேன் .

"சகள எங்க இருக்க நம்ம பயக எல்லாம் பிரியாணி ட்ரீட் கேட்க்ரானுங்க பாப்பா பொறந்ததுக்கு ,சீக்ராம் வாய்யா பெல்லு ஓட்டலுக்கு. "


"வரேன்ய்யா வரேன் "


என்று சிரித்துக் கொண்டே கிளம்பினேன் நான்.