Wednesday, December 16, 2009

மோகனவள்ளியின் புன்னகை...

பாட்டியை சிவகாசிக்கு பஸ் ஏத்தி விடத்தான் நான் பஸ் ஸ்டாண்டுக்குப் போனது .பத்துமணி தேனீ டு சிவகாசி பஸ்ல ஒன்பதே முக்காலுக்கே கூட்டம் நெறியும்.ஒத்தை சீட் கிடைச்சாக் கூடப் போதும்னு வேக வேகமா ஓடிப் போய் பார்த்தா கண்டக்டர் உட்கார்ற சீட் மட்டும் தான் சும்மாக் கெடக்கு ,மித்ததெல்லாம் கசகசன்னு வகைக்கொரு முகறையா நிறைஞ்சிருச்சு ,

அடச்சே வயசாளியாச்சே !எம்மாந்தொலவு நின்னுக்கிட்டே போவும் பாட்டி!

சுத்துமுத்தும் தெரிஞ்ச மூஞ்சி எதுனா தட்டுப்படுதான்னு துலாவுனா எதுவும் ஆப்படல (அகப்படவில்லை)

மூணு மூன்ற மணி நேரம் நின்டுகிட்டே போற வயசில்லை பாட்டி உனக்கு ...எறங்கு நாளைக்கிப் போலாம்னு சொன்னா கேட்குதா பாட்டி?!

அடியே உம்மாமன் மஞ்சக் காமல கண்டு மதுர லா காலேஜுல இருந்து வந்து வீட்ல கிடக்கான்னு போனு மேல போனு போடுதா உன் சித்தி ,இன்னியும் இங்கன தங்குமா எம்மனசு? உசிலம்பட்டி..பேரையூறு...கல்லுப்பட்டின்னு யாராச்சும் இறங்காமயாப் போயிருவாக ?போய்த்தான் ஆகணும் இன்னைக்கு ,போயி பத்தியக் கஞ்சி வச்சிக் கொடுத்து அவனுக்குப் பண்டுதம் பார்த்தாதேன் எம்மனசு ஆறும் !

கிழவி ரவுசு தாங்கலடா சாமி ...சொன்னாக் கேட்குதா பாரேன் ,ஒருநா பிந்திப் போனா உம்மவனுக்கு சித்தி பத்தியக் கஞ்சி காய்ச்சி ஊத்திக்கிட மாட்டாளா? தொண்டைக் குழி வரைக்கும் வந்த எடக்க (இடக்குப் பேச்சு) மடக்குன்னு முழுங்கிட்டு ;

இங்கன நில்லு பாட்டி ஒத்தை சீட் கெடைக்குமான்னு பார்த்திட்டு வரேன்னு முன்னாலயும் பின்னாலயும் பஸ்சுக்குள்ள அலசுனேன்.

அப்பதேன் "ஏ தமிழு ...தமிழு தான நீங்கன்னு ஒரு பொம்பளக் குரலு காதுல வந்து மோதுச்சு" படக்குன்னு நிமுந்து பார்த்தா அட நம்ம மோகினிப் பிசாசு மோகன வள்ளி .

கைல அவள மாறியே (மாதிரி) கன்னங்கரேர்னு ஒன்னரை...ரெண்டு வயசிருக்கும் ஆம்பளப் புள்ள ஒன்னத் தூக்கிகிட்டு நிக்கறா.கலரு கருப்புத்தேன்னாலும் கிழங்காட்டம் இருப்பா மோகனள்ளி ...இப்பயும் அப்பிடித்தேன் இருக்கா ; அதே மங்குணித்தனமாட்டம் சிரிப்பும் கூட ,மங்குணிதனமாப் பட்டாலும் அவ சிரிக்கிறது நல்லாத்தேன் இருக்கும் அந்தச் சிரிப்புக்குப் பேரு புன்னகையாம்.தமிழ் வாத்தியாரு சொல்லுவாரு.நெனப்ப உதறிட்டு ....

வாய்க்கொள்ளாச் சிரிப்போட "ஆமாண்டி...ஆமாண்டி ...நான் தமிழுதேன்...இதாரு உம்மவனா?எத்தனையாவது? உம்மாறியே இருக்காம்பாரு.சொல்லிகிட்டே அவன் கன்னத்தைக் கிள்ளுனேன் .

ரொம்பநாள் ...இல்ல..இல்ல...ரொம்ப வருஷம் செண்டு மொத மொதோ இன்னைக்கித்தேன் பார்த்துக்குறோம் நாங்க .

என்னடி ...எப்படி இருக்க ?எங்கன வாக்கப் பட்ட?எத்தினி பிள்ளைக ? உங்கம்மை ..தங்கச்சிலாம் எங்கன இருக்காக ?நீ எங்கன இருக்க,உம்புருஷன் என்ன செய்றாரு? இம்புட்டும் கேட்கறதுக்குள்ள டிரைவர்ரு சீட்ல ஏறி உட்கார்ந்துகிட்டு "டுர்றூ..டுர்றூங்க" ஆரம்பிச்சிட்டார்.

பொறவு என்ன செய்வ நீ ?!

மோகனள்ளி( மோகன வள்ளி தான் ...பள்ளிக்கொடத்துல இப்பிடித்தேன் கூப்புடுவோம் அவள) புண்ணியத்துல பாட்டிக்கு அவ கூட வந்த ஆம்பள (புருஷனாத்தேன் இருக்கணும்னு நானாவும் நெனச்சிக்கிட்டேன்!)சீட் கெடைக்கவும் உட்கார வச்சிட்டு பத்திரமா ஊருக்குப் போயிட்டு போனு போடு பாட்டின்னு எறங்கி நின்னு கையாட்டிட்டு வீட்டுக்கு பொறப்டுட்டேன் .

ஆட்டோவுல வீட்டுக்குப் போகையில அவள நினைச்சுக்கிட்டே உட்கார்ந்திருந்தேனா ஒன்னொன்னா நெனப்புக்கு வருது .எம்புட்டு நாளாச்சு அவளக் கண்டு ! ம்...எட்டாப்பு வரைக்கும் எங்கூடப் படிச்சவ...என்ன விட அஞ்சாறு வயசு மூத்தவளும் கூட ,பெயிலாகி பெயிலாகி என்கூட வந்து சேர்ந்துகிட்டா எட்டாப்புல.

மோகனள்ளிய நெனச்சஒடனே கூடவே ரகுபதி வாத்தியாரையும் நெனக்காம இருக்க முடியுமா?

மோகனள்ளி அம்மாதேன் அப்பம் எங்க வீட்டு வண்ணாத்தி ...அழுக்குத் துணி எடுக்க அவளும் வருவா...செல நாலு மவளுகளையும் அனுப்புவா.மோகனள்ளி அழுக்குத் துணி எடுக்க வாரயில அழுக்குக்கு வந்த சீலை எதுனாச்சும் பிடிச்சிப் போச்சுன்னா தொவச்சி அத உடுத்திக் கிட்டு வருவா.ரெண்டொரு தடவ அந்த சீலைக் காரவுகளுக்கு தெரியாம இப்பிடிக் கட்டிப் பார்த்துட்டு மறுக்கா துவச்சு கொடுத்துர்றது தான்.

ரகுபதி வாத்தியாரு பொண்டாட்டியும் எங்கூரு பள்ளிக்கூடத்துல டீச்சருதேன் ,அந்தம்மா அஞ்சாப்பு டீச்சர் ,சாரு எட்டாப்பு வாத்தியாரு. டீச்சர் சீலைய அப்பிடி மோகனள்ளி கட்டிட்டு கண்டமனூர் தியேட்டர்ல ராத்திரி மொதோ ஷோ எம்.ஜி.ஆரூ நடிச்ச "தேடி வந்த மாப்பிள்ளை " படம் பாக்கப் போயிருக்கா ஒருக்கா .

எங்கூருக்கும் கண்டமனூருக்கும் நடுல வைகையாத்துப் பாலம் ,பாலத்த ஒட்டி அம்புட்டும் ரகுபதி வாத்தியாரு தோட்டந்தேன்...ராத்திரி தோட்டத்துக்குப் போயிட்டு புல்லட்டுல வீட்டுக்கு திரும்பி வந்துகிட்டிருந்த வாத்தியாரு கண்ணுல "தம் பொண்டாட்டி சீலையைக் கட்டுன மோகனள்ளி பட்ருக்க கூடாது... விதி...அந்நேரம் நல்லாவே கண்ல பட்டுட்டா...

வைகை ஆத்துப் பாலம் ...மேல நிலா

சிலு சிலுண்டு காத்து...,கீழ சல..சலண்டு ஆத்துத் தண்ணீ ...வாத்தியாருக்கு நெனப்பு என்னமோ பண்ணித் தொலைக்க; புல்லட்ட "உர்ரு..உர்ருன்னு உறும விட்டுட்டு வீட்டுக்குப் போய் சேந்தார்.

மறுநா வாத்தியாரு வகுப்புல சயன்சு வீட்டுப் பாடம் பண்ணாம வந்தவுக எல்லாம் எந்திரிச்சு நின்னாக,மோகனள்ளியுந்தேன்...

வாத்தியாருக்கு முன்னால எந்திரிச்சு நிக்கிறதுக்குன்னு ஒரு முறைமை இருந்துச்சு அப்போ .ரெண்டு கையையும் முன்னால கட்டிக்கிட்டுதேன் நிக்கணும்.ரெண்டு கையையும் தொங்கப் போட்டு நின்னா அது மரியாதைக் குறைச்சல் ,ஒத்தக் கைய தொங்க வுட்டு ஒத்தக் கைய மடிச்சு நின்னாக்க அது திமுர்ருனு நெனைச்சிக்கிட்டு கம்பால விளாசிருவாக .

ஒவ்வொருத்தரா ஏன் வீட்டுப் பாடம் செய்யலன்னு கேட்டுக்கிட்டே காதப் பிடிச்சு திருகறது...கைய நீட்டச் சொல்லி பிரம்பால சுளீர்னு ரெண்டு போடறதுன்னு மோகனள்ளி கிட்ட வந்த வாத்தியாரு. என்ன நெனச்சாரோ?

என்னம்மா மோகனவள்ளி உனக்கு நேத்தெல்லாம் எம்.ஜி.ஆரூ படம் பார்க்கப் போகத்தான நேரமிருந்திருக்கும் ..சொல்லிக்கிட்டே மடிச்சிக் கட்டுன அவ ரெண்டு கையையும் எடது கையாள முன்னால தள்ளிப் பிடிச்சிக்கிட்டு ,வலது கை பிரம்பை கீழ போட்டுட்டு வினயமா சிரிச்சாரு.

அவள அடிக்க மாட்டாரு போலன்னு நாங்கள்லாம் பார்த்துக்கிட்டு இருக்கோம்.

அவள அடிக்கல தான் .ஆனாக்க என்ன செஞ்சாரு தெரியுமா? அவ கைய மடிச்சிக் கட்டினத முன்னால இழுத்தாருன்னு சொன்னேன்ல அந்த இடைவெளில வலது கையாள அவ வயித்தப் பிடிச்சு கிள்ளர மாதிரி எங்கனயோ கிள்ளுனாறு.பாவம் மோகனள்ளி நெளிஞ்சிகிட்டு இருந்தா.

என்ன செய்வா அவ?!

அன்னைக்கு மட்டும் இல்ல? அதுலருந்து வீட்டுப் பாடம் முடிக்காம வாற எல்லா நாளுமே வாத்தியாரு அவள மட்டும் அப்பிடித்தேன் கிள்ளுவாரு.அவ ஒரு வாய் செத்தவ ,வீட்ல போயி அம்மை அப்பன்கிட்டல்லாம் எதுவும் சொல்லலை போலருக்கு .

எங்க செட்டுப் பிள்ளைகளும் ...பயலுகளும் மாத்திரம் வாத்தியாரு மோகனள்ளிய இப்பிடிக் கிள்ளுராருன்னு அவங்கவங்க வீட்ல போயி தோணும் போதெல்லாம் சொல்லிட்டு இருந்தோம்,அரசல் புரசலா டீச்சருக்கும் எல்லாருமே தெரிஞ்சி தான் இருக்கும் போல.

ஊர்க்காரவுக வாத்தியாரு அங்கிட்டு இங்கிட்டுப் போகையில ஒரு மாதிரி குசு குசுன்னு பேசி அவகளுக்குள்ள சிரிச்சாகளே தவிர வாத்தியாரே...என்னனு ஒரு கேள்வி இல்ல,ஒரே சாதி சனம்ன்னு ஒத்துமையாத்தேன் இருந்தாக

வாத்தியாரை யாரும் எதுவும் கேட்ட மாதிரி தெரில.

வாத்தியாருக்கு ஒத்தைப் பொண்ணும் மூணு ஆம்பளைப் புள்ளங்களும் இருந்தாங்க,ஆம்பளைப் புள்ளைங்களை விட ஒத்தைக்கு ஒத்தைப் பொம்பளைப் புள்ளைன்னு பொண்ணு மேல டீச்சருக்கும் வாத்தியாருக்கும் அம்பூட்டுப் பாசம் .

வாத்தியாரு மக நிர்மலாக்காவும் ரொம்ப நல்ல மாதிரித்தேன்.

திருழா (திருவிழா) சமயத்துல ஊருப் பிள்ளைகளுக்கெல்லாம் டான்ஸு சொல்லிக் கொடுத்து மேடைல ஆடலும் பாடலும் ஆட விடறதெல்லாம் நிர்மலாக்கதேன். "பொன்னுமணி படத்துல வர சௌந்தர்யா மாதிரி "நிர்மலாக்கா அழகாவும் இருப்பா பதவிசாவும் இருப்பா.

அவ அதிர்ந்து பேசி கண்டதில்லை நாங்க.

பூப்போல பொண்ணுன்னு நிர்மலாக்காவைப் பார்த்து சொல்லலாம் .

வாத்தியாரு தம்பொண்ணு மேல உசுரையே வச்சிருந்தாரு. அப்பைக்கு நூறு பவுனு போட்டு ஒரு லட்சம் ரொக்கம் கொடுத்து மெட்ராஸ்ல கவருமெண்டு இஞ்சினியருக்கு நிர்மலாக்காவக் கல்யாணம் கட்டி வச்சாருன்னா பார்த்துக்கோங்க மக மேல பாசத்தை.

நிர்மலாக்க புருஷன் ஆளு பாக்க நடிகர் கார்த்திக் மாதிரி (பொன்னுமணி படத்தப் பார்த்த பாதிப்பு ஊர்க்காரவுகளுக்கு) ஜம்முன்னு இருப்பாராம் பாட்டி சொல்லக் கேட்ருக்கேன்.

அக்காவக் கட்டிக் கொடுத்தப்புறம் எட்டாப்பு முடிஞ்சு ஒன்பதாப்புக்கு நான் தேனி டவுன் ஸ்கூல் போயிட்டேன். அப்புறம் மோகனள்ளி ..வாத்தியாரு கதை என்னாச்சுன்னு விவரமேதும் தெரியலை.

இன்னைக்குதேன் பாட்டிய பஸ் ஏத்தி விடப் போகைல பார்க்குறேன் அவள.

ம்...பெருமூச்சோட ஆட்டோவுக்கு காச கொடுத்துட்டு வீட்டுக்குள்ள நுழையறேன்.

அப்பா அவசர அவசரமா எங்கனயோ கெளம்பி கிட்டு இருந்தவரு என்னப்பார்த்த ஒடனே ;

நல்ல வேலை வந்தியா ...வா..வா...

சிலிண்டருக்குப் போன் பண்ணிச் சொல்லி பத்து நாளாச்சு ,இப்ப சிலிண்டர்காரன் வாற நேரம் தான்.பணம் கடுகு டப்பாவுல இருக்கு எடுத்துக் கொடுத்துட்டு வாங்கி வை. உங்கம்மா நம்மூருக்குப் போயிருக்கா சாயந்திரந்தேன் வருவா.

ஏன் என்னாச்சுப்பா திடீர்னு இன்னைக்கு நம்மூருக்குப் போயிருக்காங்க அம்மா?

ஓ ...ஒனக்கு விஷயம் தெரியாதில்ல ...

நம்ம ரகுபதி வாத்தியாரு மருமகனுக்கு ஆக்சிடென்ட் ,ஸ்பாட்லயே உசுரு போயிடுச்சாம்...

பாவம் மெட்ராஸ்ல இருந்து லீவுக்கு ஊருக்கு வந்த மனுஷன் மாமனாரு புல்லட்டை எடுத்துக் கிட்டு பொண்டாட்டியை படத்துக்கு கூட்டிட்டுப் போனானாம். பொணமாதேன் திரும்பி வந்திருக்கான்.

ஒரே ஊரு..சொந்தக் காரவுக வேற...அதான் உங்கம்மா தகவல் சொல்ல வந்த உங்கத்தை கூட முன்னால பஸ்ல போறா.நானும் ஒரு எட்டுப் போயிட்டு வந்துறேன். நம்ம கடைல தான் பலசரக்கு வாங்குவாரு வாத்தியாரு. ரெண்டு பேரும் போகலன்னா தப்பாப் போயிடும் .

ஒரு நிமிஷம் திக்குன்னு ஆயிருச்சு எனக்கு.

கண்ல நிர்மலாக்கா ஊர்ப் பிள்ளைகளுக்கு டான்ஸு சொல்லிக் கொடுத்தது...அவ பேசுனது..சிரிச்சது...திருழாக்கு சுட்ட முறுக்கு எடுத்து பிள்ளைகளுக்கு கொடுத்து திங்கச் சொன்னது எல்லாம் படமா ஓடுது.

பாவம்ப்பா நிர்மலாக்கா ...

ம்...பாவந்தேன் ...அந்தப் புள்ளைக்கும் நல்ல அடியாம் வண்டில இருந்து கீழ விழுந்ததுல.

நல்ல வேலை பிள்ளைய டீச்சர் கிட்ட விட்டுட்டு புருஷனும் ..பொண்டாட்டியுமாதேன் வண்டில சினிமாக்குப் போனாகளாம்,அந்த மட்டுக்கும் அந்தச் சின்ன உசுரு தப்பிசுச்சு. அப்பா நெடுமூச்சாய் சொன்னார்.

ச்சை ...மனசுக்கு ரொம்பவும் பாரமா போயிருச்சு.

அப்பா கெளம்பிப் போன ஒடனே கொஞ்ச நேரம் டி.வியப் போட்டுக்கிட்டு உட்கார்ந்தேன் .

கொஞ்ச நேரத்துல பக்கத்து வீட்டு மணிமேகலை வந்தா ...தயிருக்கு உரை குத்த தயிர் கேட்டு ...

இங்க அவ எனக்கு நல்ல பிரெண்டு ...அவ கிட்ட மோகனள்ளி கதைய ..ரகுபதி வாத்தியாரு கதைய ...நிர்மலாக்க புருஷன் ஆக்சிடெண்ட்ல செத்த கதைய சொல்லிக்கிட்டு இருந்தேன் மறுக்கா ...

அவதேன் திடீர்னு சொன்னா "அந்தப் பொண்ணுக்கு செஞ்ச பாவம் தான் வாத்தியார் மகளுக்கு இப்பிடி ஆகி போச்சோ !?

எனக்கு திக்குன்னு ஆயிருச்சு.

என்ன மணி இப்பிடிச் சொல்லிட்ட நீ ?

என்னவோ தோனுச்சு சொன்னேன் .சரி நான் வரேன் அண்ணன் சாப்பாட்டுக்கு வர நேரம். எந்திரிச்சுப் போயிட்டா அவ.

மணி ஒன்னு ..ஒன்னரை சாப்ட்டு ஒரு தூக்கம் போடலாம்னு பார்த்தா போனு அடிச்சது .

போயி எடுத்தா பாட்டி கொரலு கேட்குது

தமிழு நான் பாட்டி பேசுறேன்.

பஸ்சு பிரேக் டவுனு ஆயிருச்சு சீலுத்தூர் (ஸ்ரீவில்லி புத்தூர் ) கிட்ட மல்லி (இதுவும் ஊர் பேர் தான்)ரோடுல ...வேற பஸ்சுல ஏத்தி விடறேன்னு சொல்லிருக்கா உம் பிரெண்டு மோகன வள்ளி,இங்கன அவ சொந்தகாரவுக வீடு இருக்குன்னு கூட்டிட்டுப் போயி காப்பித் தண்ணீ வச்சிக் கொடுத்தா,அவுக வீட்டுப் போனுல இருந்து தான் பேசுறேன்.

இதென்ன கூத்து ?! என்று பயந்து போய் ...நான் தான் நாளைக்குப் போலாம்னு சொன்னேன்ல பாட்டி ,கேட்டியா நீ ? இப்பம் பாரு என்னாச்சுன்னு ... நான் பதற .

அடி நீ இருடி ...சும்மாப் பதறாத அதான் இந்தப் புள்ள மோகனவள்ளி இருக்கா இல்ல ? அவ திருத்தங்கல் போறவ ..அங்கன தான் புருஷன் வீடாம். என்னைக் கொண்டு சிவகாசி பஸ் ஸ்டாண்டுல இறக்கி விட்டுட்டு அப்புறம் அவ வீட்டுக்குப் போறேன்னு சொல்லியிருக்கா .நீ பயப்படாத. பாட்டி சொல்லச் சொல்ல ...

மோகனவள்ளி கிட்ட போனக் கொடு நான் பேசறேன்னேன் .

அவ புள்ளக்கி கால் கழுவி விடப் போயிருக்கா ,பஸ்சு வருதாம் நான் அப்புறம் பேசறேன் .'டொக்' போனை வச்சிட்டுப் பாட்டி போயிருச்சு.

அப்புறம் அன்னைக்குச் சாயந்திரம் வரை பாட்டி எப்படா...ஊருக்குப் போய் சேர்ந்து "நல்ல படியா வந்து சேந்துட்டேன்னு போனப் போடுமோ நு காத்துக் கிட்டிருந்தேன் நான்.

ஒரு வழியா அஞ்சு அஞ்சரை இருக்கும் போனு அடிச்சுச்சு. எடுத்தேன்

பாட்டிதேன்...

தான் பஸ்சுல ஏறினதுல இருந்து பிரேக் டவுன் ஆன கதை ,கூட வந்த ஆளுங்க கதை ...ஊருக்குப் போயி சேர்ந்த கதைய எல்லாம் சொல்லி முடிச்சிட்டு கடைசில எதோ உம் பிரெண்டு கூட வந்தாளே நல்லதா போச்சு. இல்லாட்டி நடு ரோட்டுல வாய்க்கு ருசியா காப்பி கிடைக்குமா?

பொண்ணுன்னாலும் பொண்ணு இவ தான் பொண்ணு ,எம்புட்டு பொறுமை !ஐயோ அவ மகன் பாவம் படுத்தி எடுத்துட்டான் பஸ்சுல ,எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு மூஞ்சி கூட சுளிக்காம அவ பாட்டுக்கு சிரிப்பு மாறாம வாரா...



சிரிச்சாளா !?



எல்லாத்துக்கும் சிரிப்பு மாறாம இருக்காளா ...இருப்பாளே ...அவ இருப்பா ?!



ரகுபதி வாத்தியார் மருமகன் ஆக்சிடெண்ட்ல செத்ததைக் கேட்டாலும் சிரிப்பு மாறாமத் தான் இருப்பாளோ!

நெனப்ப விரட்டி விட்டுட்டு துஷ்டி கேட்டுட்டு வாரவுகளுக்கு தலை முழுக வெந்நி வைக்க சமயக்கட்டுக்குப் போனேன் நான்.

அவுக வாற நேரமாச்சே.

இன்னிக்குப் பொழுது இப்பிடி முடிஞ்சதாக்கும்.

பிஞ்சுகள் ...

மாய மாயா லோகங்களின்
மடிப்புக் கலையா பிரதியாக
மருட்டும் மிரட்டும் மகோன்னத பூமிப் பந்து
பச்சைக் கிளிகளின் பிய்த்து எறியப்பட்ட
சிறகுகளின் கனமேந்தி உருளுகையில்
துடைத்தெடுத்த பளிங்குத் தரை,
ஏடு படிந்து போன பாசாங்காய்
ஏசுநாதரின் சிலுவையில் தோய்ந்துறைந்த
செம்பட்டை ரத்தம்
நிஜக்குளிர் அலுத்துப் போய்
வெம்மை தேடி அலைகையிலே
இன்னுமொரு பிஞ்சு
சர்ப்ப பிசாசின்
இச்சைகளின் வடிகாலாகுமோ!

Monday, December 14, 2009

சிவசங்கரியின் "தகப்பன்சாமி " குறுநாவல் ஒரு பார்வை

தகப்பன் சாமி படித்து முடித்ததும் இன்னது தான் என்றில்லாமல் ஒரு அனாமத்தான பயமும் கதை முடிவைக் கண்டு சின்னதாய் ஒரு சந்தோஷமும் பூத்து எண்ணங்களை கலவையான முரண்கள் ஆக்கிரமித்தன.

சதானந்தம் ஏன் இறக்க வேண்டும்?

மனைவியிடமும் பிள்ளைகளிடமும் நேசமும் ...பரிவுமான ஒரு கணவன் ,ஒரு தகப்பன் ஏன் சாலை விபத்தில் சடாரென்று இடைவழியில் சாக வேண்டும்?!

"பசித்து பாலருந்தும் ஒரு குழந்தையின் வாயிலிருந்து பால் பாட்டிலை எதிர் பாராமல் வெடுக்கென்று பறிப்பதைப் போல் ஆகாதா இந்த இழப்பு !!!"

"பிள்ளையை பள்ளியில் கொண்டு விட்டான் ,பக்கத்தில் உட்கார்ந்து பொறுமையுடன் பாடம் சொல்லிக் கொடுத்தான்,அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதும் பெண்ணை மடியில் வைத்துக் கொஞ்சினான் ,நாள் தப்பாமல் மனைவிக்குப் பூவும் குழந்தைகளுக்கு தின்பண்டமும் வாங்கிவந்தான் .

ஒருநாள் கொதிக்க கொதிக்க மங்களூர் போண்டா '

அடுத்தநாள் லாலா கடை அல்வா

இன்னும் ஒருநாள் அய்யர் ஓட்டல் தூள் பக்கவடாம்

ஆப்பிள் மலிவா வித்துக்கிட்டு இருந்தான் பசங்களுக்கு வாங்கினேன் '

ரஸ்தாளி இருந்துச்சு குழந்தைகளுக்கு கொடு

மிட்டாய் கடைல சூடா மிக்சர் போட்டுக்கிட்டு இருந்தான் ,சிவாக்கு தயிர் சாதத்துக்கு தொட்டுக்கிடப் பிடிக்குமேன்னு வாங்கி வந்தேன்,பாட்டில்ல கொட்டி வைச்சுகிட்டு தினம் கொஞ்சமா போடு..."

இப்படிப் பட்ட தகப்பனின் பாசத்தில் வளரும் சிவா தகப்பனை இழந்ததும் பெரியப்பா வீட்டில் அனுபவிப்பது ரணம்.வாழ்வின் சில முடிச்சுகளில் சிக்கிக் கொண்டு கனகமும் அவளது சின்னஞ்சிறு குழந்தைகளும் படும் பாடு சாந்தமூர்த்தி மற்றும் தெய்வ நாயகியின் மீது கடும் துவேஷத்தை நாவலைப் படிப்பவர்களுக்கு ஏற்படுத்தக் கூடும் .

கொண்டவன் துணையற்ற ஒரு பெண்ணை "அடிமையாக்கி "தங்களுக்கொரு சம்பளமில்லாத வேலைக்காரி ஆக்கிக் கொள்ளவே பெரும்பாலும் உறவுகள் முயலும் என்பதற்கு கனகமும் அவளது பிள்ளைகளுமே உதாரணம்.இத்தனைக்கும் கனகம் பலகாரம் செய்வதிலும் தையல் கலையிலும் தேர்ந்தவள் ,அப்படி இருந்தும் மூத்தார் குடும்பம் படுத்தி வைக்கும் பாடுகளுக்கு அவள் வாய் மூடி கண்ணீருடன் கரைவது உள்ளதும் போய் விடக் கூடாதே எனும் உள்ளார்ந்த பயத்தினால் தான்.

பெண்கள் தைரியசாலிகளாக முடிவெடுக்க வேண்டுமெனில் அதற்கு அவர்களின் வளர்ப்பு முறையும் முக்கியமே. துள்ளத் துடிக்க இறந்து போன தம்பிக்காக வருந்தாத சாந்த மூர்த்தியா தனக்கொரு நன்மை செய்து விடப் போகிறார்? என கனகத்தால் உணர முடியாமல் போனது அவளது துரதிர்ஷ்டமே!

தாய் தகப்பனை இழந்து அண்ணனின் பரிவில் வளர்ந்து பிறகு அண்ணி வந்ததும் அந்தப் பரிவிற்கும் பங்கம் வர மனைவிக்கு தன் தங்கை வேலைக்காரி ஆவதிலிருந்து அவளை மீட்கவே "பார்வைக்கு அத்தனை லட்சணமாக இல்லாவிட்டாலும்" பரவாயில்லை மாதச் சம்பளம் வாங்கும் மணமகன் பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம் என்று தான் அழகும் பாந்தமுமான தன் தங்கையை மாதவன் சதனந்ததுக்கு திருமணம் செய்து வைக்கிறான். அதற்கும் இப்படி ஒரு பங்கம் வரக்கூடும் என அவன் கண்டானா?

எளியோருக்கு வலியோர் இரங்குதல் என்பதெல்லாம் சினிமாவில் காணலாம் என்பதைப் போல இங்கே கனகத்தை அநியாயமாக ஏமாற்றுகிறார்கள் தெய்வ நாயகியும் சாந்தமூர்த்தியும்.கணவனின் மரணத்திற்கு பின் அவனுக்கு கிடைத்த இன்சூரன்ஸ் இழப்பீட்டுப் பணம் முழுவதையும் சாந்த மூர்த்தி ஏதேதோ கணக்குகள் காட்டி கழித்துக் கொள்ளும் போது கனகத்தின் கேள்விகளற்ற பரிதவிப்பு அவள் மீதே"முதுகெலும்பில்லாத கோழைப் பெண்ணே "எனும் கோபமாகவே வெடிக்கக் கூடும் வாசகர்களுக்கு.


அதனால் தானோ என்னவோ அவள் பெற்ற மகனே அம்மாவையும் தங்கையையும் விட்டு விட்டு பெரியப்பா குடும்பத்தின் அடாவடியைப் பொறுக்க முடியாமல் அடிவாங்கிச் சாக வலுவின்றி வீட்டை விட்டு ஓடிப் போகிறான்.

பஸ்ஸில் காப்பி டீ விற்கும் சிறுவர்களில் ஒருவனாகிறான்.

சாந்தமூர்த்திக்கும் தெய்வ நாயகிக்கும் பத்தோடு பதினொன்றாய் கூட ஒரு காரணம் கிடைத்தது கனகத்தையும் சிவாவையும் ஊசியால் குத்துவதைப் போல வார்த்தைகளால் குத்திக் கிழிக்க,கனகத்தின் மௌனமான கதறலையும் ஆற்றாமையையும் சொல்லில் விளக்கி விட முடியாது தான்...

ஆனாலும் அவள் எங்கெங்கோ விசாரித்து யார் யாரிடமோ தகவல் சொல்லி கடைசியில் மகன் இருக்கும் இடம் தெரிந்து மூத்தாரை நம்பிப் பயனில்லை என இவளே நேரில் போய் அழைத்தும் அவன் திரும்பி வர மறுக்கிறான்.

தன் பிள்ளையை மூத்தார் மகன் வீணில் பலி சுமத்தி அடிவாங்க வைக்கும் போதும் சரி ...அவனை அந்த மனிதர் ஈவு இரக்கமே இன்றி பெல்ட்டால் விளாசும் போது பேச வகையின்றி கண்ணீரில் உருகும் போதும் சரி கனகத்தின் சிவாவுக்கு இருந்த நம்பிக்கை தகர்ந்து போகிறது.தன் அம்மாவை நம்பினால் இனியெப்போதும் அடிமை வாழ்க்கை தான் என அந்த பிஞ்சு மனம் நினைத்திருக்கக் கூடும் !

கனகத்தின் அழைப்பை மறுத்து அவன் சொல்லும் பதில் குழந்தை அப்பாவையோ ..அம்மாவையோ செல்லமாக பெல்ட்டால் அடித்து விளையாடுமே அப்படி ஒரு சாட்டையடி.சிவா தகப்பன்சாமி தான் இங்கே .

"தைரியமா நாம இருக்க முயற்சிக்கலாம்மா ,இந்த உலகத்துல நிமிர்ந்து வாழ நமக்கு உரிமை இருக்கு,யாருக்கும் காரணம் இல்லாம நாம அடங்கி வாழத் தேவை இல்லை,பெரியப்பா கிட்ட தயங்காம உண்மையைச் சொல்லுங்க மீறிக்கிட்டு குடும்பம் மானம்னு கத்தினார்னா சும்மா கேட்டுக்கிட்டு இருக்காதிங்க,நம்ம வாழ்க்கையை நாம தான் வாழனும் எனக்கொரு பெரியவர் இங்க வந்த புதுசுல சொல்லிக் கொடுத்தார் ,நீங்களும் அதை நினைவுல வச்சிக்கோங்க"

இரண்டும்கெட்டான் வயதில் அந்தப் பையனால் எடுக்க முடிந்த ஸ்திரமான திடமான முடிவை இத்தனை வயதில் கனகத்தால் எடுக்க முடியாமல் போனதை விளக்கத் தான் இந்த குறுநாவலுக்கு இப்படி ஒரு தலைப்பு என்றால் அது மிகையில்லை.

சிவசங்கரியின் இந்தக் குறுநாவல் முன்பு தூர்தர்சனில் "செவ்வாய் தோறும் இரவு ஒளிபரப்பப் படும்" ஒருமணி நேர நாடகங்களில் ஒன்றாக மாஸ்டர் கணேஷ் நடிப்பில் பார்த்த ஞாபகம் .மாஸ்டர்
கணேஷ் தான் சிவா.

இதுமட்டுமா பாலகுமாரனின் "தாயுமானவன்" கூட தொடராக வந்து கொண்டிருந்தது அப்போது .

இப்போது மெகா சீரியல்கள் பல வந்து குழப்பக் கும்மி அடித்தாலும் வெகு சொற்பமானவை தவிர நெஞ்சில் நிற்கவில்லை எதுவும். ஏன் கதைகளுக்கா பஞ்சம்? ஏதாவது ஒரு
வெற்றி பெற்ற நாவலை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே!!! என்ன ஒரு கஷ்டம் எனில் கதையின் கருப்பொருளை சிதைத்து தோரணம் கட்டி விடுவார்கள் டி.ஆர்.பி ரேட்டிங் என்ற பெயரில் அப்படி நல்ல நாவல்கள் சிதைந்து திரிந்து போய் மக்கள் மனதில் பதிவதை விட நாவலாகவே வாசிப்பதே உசிதம்.

பாலிமர் டி.வி யில் ஆர்.கே.நாராயணின் "சுவாமி அண்ட் பிரெண்ட்ஸ் " மால்குடி டேஸ் ஆக தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.மதியத்திற்கு மேல் என்று ஞாபகம்,சுவாமியின் அப்பாவாக கிரீஸ் கர்னாட் நடிப்பில் சுவாமியாக நடிக்கும் சிறுவன் பெயர் தெரியவில்லை .பார்க்கலாம் ஆனால் புத்தகமே அபாரமானது நம் கற்பனைகள் சிறகடிக்க. காட்சி ஊடகம் திறக்க முடியாத பலப் பல கதவுகளை திறக்க வல்லது நாவல்கள் என்பதை "தில்லான மோகனாம்பாளையும்" மலைக்கள்ளனையும் " வாசித்தல் தெள்ளத் தெளிய ஒப்புக் கொள்வீர்கள்.

கொத்தமங்கலம் சுப்புவின் தில்லான மோகனாம்பாள் திரையில் ஒரு வகை விருந்து எனில் நாவலாக வாசித்தவர்களை கேளுங்கள் இதை விட அதன் சுவை அளப்பரியது ,அதே தான் நாமக்கல் கவிஞரின் "மலைக்கள்ளன் " நாவலுக்கும். அப்பப்பா அதை படமாக எம்.ஜி.ஆர்...பானுமதி நடிப்பில் காண்பதை விட நாவலாக வாசித்துப் பாருங்கள் .புரியும் எப்பேர்ப்பட்ட புனைவு!

வாசகர்களின் பக்தியை சோதிக்க ஒரு எளிதான கேள்வி

தகப்பன் சாமி யார்?

அ) சிவன் ஆ)திருமால் இ) விநாயகர் ஈ) முருகன்

சரியான விடை சொல்பவர்களுக்கு அந்தக் கடவுளின் பிரசாதம் அனுப்பி வைக்கப் படும் :))))

Sunday, December 13, 2009

சிலேட்டுக் குச்சியும் ...கோபால் பல்பொடியும்...




சிலேட்டுக் குச்சி (பல்பம்) தின்னும் பழக்கம் ஆரம்பப் பள்ளியில் வாசிக்கும் போது என்னையும் சேர்த்து என் நண்பர்கள் பலருக்கும் இருந்தது.அதுமட்டுமா பழனி கந்த விலாஸ் விபூதி என்றாலும் பலருக்கு அதீத இஷ்டம் தான் அப்போது. ஆட்காட்டி விரலும் கட்டை விரலும் சேர்ந்து அமுக்கிக் கொள்ள சிட்டிகை சிட்டிகையாய் தின்பவர்கள் ஒரு சிலர்,என்னவோ ஜீனி தின்பது போல அள்ளி அள்ளி வாயிலிட்டுக் கொள்பவர்கள் சிலர்,நான் முதலாம் வகை.அள்ளித்தின்பது நாகரீகமில்லை என்று அப்போதே தெரிந்திருக்கிறது பாருங்கள்!!! என்னே என் நாகரீகம்!?

இந்தப் பழக்கம் எங்கிருந்து வந்திருக்கக் கூடும் என்பதைப் பற்றி அப்போது சிந்தனை ஏதும் இல்லை.ஒரு வேலை அப்பா வழிப் பாட்டி செங்கல் பொடி கொண்டு பல் விளக்குவதைக் கண்டு வந்திருக்கலாமோ ! இல்லையேல் இட்லிக் கடை அன்னம்மா பாட்டி இட்லி அவித்து முடித்ததும் மூன்று கல் கொண்ட விறகடுப்புச் சாம்பலை நீர் தெளித்து அவித்தபின் அதிலுள்ள சாம்பலை இளஞ்சூடாக எடுத்து பல் விளக்குவதைக் கண்டு வந்திருக்கலாமோ ! அடுத்தவரைக் கண்டு பழகுவதென்றால்... தாத்தா வேப்பங்குச்சியால் பல் விளக்குவதைக் கண்டு அதையல்லவா நான் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்?!முதல் காரணம் அது மகா கசப்பு ,எந்தப் பிள்ளைகள் தான் கசப்பை விரும்பக் கூடும்?!

திருநீறும் ...சாம்பலும் ஏன் சிலேட்டுக் குச்சியும் கூட வாயிலிட்டதும் நடு நாக்கில் சில்லென்று ஒரு விறு விறுப்பைத் தரும் பாருங்கள் கரைவதற்கு முன்பு அதற்க்கு ஈடாகுமோ கசப்பு!அம்மா வழிப் பாட்டி "பயோரியா பல்பொடி வைத்து பல் விளக்குவார் அன்றைய நாட்களில்..." நாட்டு மருந்து போல அந்தப் பல்பொடியும் பிடிக்காது அதன் லேசான கசப்பும் பிடிக்காது ,சுறு சுறுவென எரியும் நாக்கு ,அதே ரோஸும் வெள்ளையும் கலந்த நிறத்தில் "கோபால் பல்பொடி" சின்னப் பிள்ளைகள் எல்லோருக்கும் பிடித்த ஒன்று ,ஏனெனில் அதைக் கொண்டு பல்விலக்குவதா முக்கியம் ? அதன் இனிப்புச் சுவைக்காக அதை தின்று விடும் பல நல்ல பால்ய நண்பர்களை நானறிவேன்.நான் கூட தின்றிருக்கக் கூடும் ..இப்போது ஞாபகமில்லை.

சிலேட்டுக் குச்சியில் இருந்து பிறகு சிலர் சாக்பீசுக்கு மாறி விட்டார்கள் ,என்ன இருந்தாலும் குச்சி போல வராது தான்,குச்சியில் கூட இரண்டு வெரைட்டி உண்டு அப்போது. கல் குச்சி ,இது ஒல்லியாக நீண்டு கருப்பாக இருக்கும் ,இரண்டாவது மாவுக் குச்சி இது நல்ல வெள்ளை நிறத்தில் கொஞ்சம் தடிமனாக இருக்கும் ,இதில் மாவுக் குச்சி தான் பள்ளிப் பிள்ளைகள் எல்லோராலும் விரும்பப் பட்டது. என்ன தான் சொல்லுங்கள் மாவுக் குச்சிக்கு சாக்பீசெல்லாம் ஈடாகவே ஆகாது என்று தான் சொல்வேன் நான்.சப்பென்று இருக்கும் சாக்பீஸ் தூள்.

மண் வெறும் மண் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது ...தெள்ளு மண் என்பார்கள் கிராமப் புறங்களில் அப்படிப் பட்ட நுண்ணிய மண்ணை தின்னும் பழக்கம் கூட சிலருக்கு அப்போது இருந்தது.

எறும்பு சாப்பிட்டால் கண் நன்றாகத் தெரியும் என்று ஒரு பழம் நம்பிக்கை...யார் சொல்லக் கேள்வியென்று இப்போது நினைவில்லை,அப்படி எறும்புத் தின்னி பிள்ளைகளும் சிலர் இருக்கத் தான் செய்தார்கள்.யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் நிஜமாகவே எறும்பைப் பிடித்து தின்றால் கண் பளிச்சென்று தெரியுமா என்ன?!( சுரீர்னு கடிக்கிற எறும்பை சும்மா விட முடியுமா? )

மேலே சொன்ன பழக்கங்களைக் காட்டிலும் "அரிசி " சமைக்காமல் அப்படியே வெறும் அரிசியை வாயிலிட்டு சதா மெல்லும் அபாரப் பழக்கம் அன்றைக்குப் பலரிடமும் இருந்தது.பெண் குழந்தைகள் அப்படி எந்நேரமும் அரிசி மென்றால் அத்தைமார்கள் சொல்வார்கள் "ரொம்ப அரிசி திங்காத உன் கல்யாணத்தன்னைக்கு விடாம மழை வரும் பார் " என்று ,இதென்ன நம்பிக்கையோ?!

சிலருக்கு புளியை சதா நேரமும் வாயிலிட்டு சப்பிக் கொண்டே இருக்கப் பிடிக்கும்,இல்லையேல் புகையிலை போல கன்னங்களுக்கிடையில் அதக்கிக் கொள்வார்கள் ,உமிழ் நீரில் லேசான இனிப்பும் மிகையான புளிப்புமாய் புளி மெல்ல மெல்லக் கரைந்து வர அதை முழுங்கும் ஒவ்வொரு முறையும் அலாதி ஆனந்தமாய் இருக்கும். என்ன ஒரு பொல்லாத பிரச்சினை என்றால் இப்படி புளி தின்றால் நாக்கின் ஓரங்கள் நாளடைவில் கொதித்துப் போய் கொப்புளித்து புண் வரும்.இதற்க்கெல்லாம் அஞ்சினால் எப்படி?!

சொல்ல மறந்து விட்டேன் ...இப்போது தான் ஸ்கூல் பேக் வித விதமாய் வருகிறதே தவிர இருபது இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் பெரும்பாலும் நகைக் கடை ,துணிக் கடைகளில் இலவசமாகத் தரும் மஞ்சள் பை தான் ஸ்கூல் பெக் ,சவாலாகவே சொல்கிறேன் ..அதன் காதுகளையோ அல்லது ஓரங்களையோ அல்லது அடி நுனிகளையோ பற்களால் கடித்து மேல்லாத குழந்தைகள் சொற்பமே.அது ஒரு விநோதப் பழக்கம் ...லேசான உப்புச் சுவையோடு அப்படி மென்று விழுங்குவதை இப்போது நினைத்தால் குமட்டக் கூடும்,அன்றென்னவோ அது பிடித்தமானதாகவே இருந்தது எல்லாக் குழந்தைகளுக்கும்.

இப்பத்திய குழந்தைகள் மட்டும் இளப்பமா என்ன? டூத் பேஸ்ட் திங்காத குழந்தைகள் அரிது. நல்ல வேலை இப்போது சிலேட்டுகள் இல்லை நேரடியாக பென்சிலுக்குப் போய் விடுகிறார்கள் எல்.கே.ஜி யிலேயே.மேஜிக் சிலேடு வந்து விட்டது. அதனால் பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் குச்சி தின்று விடக் கூடுமோ என்ற அபாயம் குறைவே.

மண் தரை இருந்தால் அல்லவா இப்போதைய குழந்தைகள் அதெல்லாம் முயன்று பார்க்க ! எங்கெங்கு காணினும் சிமெண்டுக் காடுகள் தான். அப்படியாக அந்தப் பழக்கமும் இருக்க வாய்ப்பில்லை.திருநீர் கூட அப்படி ஒன்றும் இந்தக் கால குழந்தைகள் சாப்பிட முயல்வதில்லை என்றே நினைக்கிறேன். சாம்பல் சொல்லவே தேவையில்லை ... விறகு அடுப்பு உபயோகித்தால் அல்லவா சாம்பலை குழந்தைகள் கண்ணால் பார்க்க முடியும்?!

இப்படி எல்லாம் பெற்றோர்கள் நிம்மதிப் பட்டுக் கொள்ள முடியாது.இதெல்லாம் என்ன பெரிய சாதனைகள்?!

பிரீசரைத் திறந்து அதில் உறைந்திருக்கும் ஐஸ் துகள்களை சுரண்டித் தின்பது ;

கோரைப் பாயோ ...பிளாஸ்டிக் பாயோ அதன் ஓரங்களை உருவி மென்று துப்புவது .

பென்சில் கரையும் வரை அதை விட்டேனா பார் என துருவோ துருவென்று துருவுவது.

முன்னமே சொன்னபடி டூத் பேஸ்ட் தின்பது.

இப்படி சில மாறாத பழக்கங்கள் இருக்கின்றன தான்.

ஆனாலும் அன்றைய குழந்தைகளை விடவும் இன்றைய குழந்தைகளுக்கு கவனிப்பு கூடுதல் என்பதால் பல விநோதப் பழக்கங்கள் இன்றைக்கு மட்டுப் படுத்தப் பட்டு விட்டன குழந்தைகளிடையே என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். பெரும்பாலும் ஒற்றை குழந்தைகளாய் வளர்வதால் எந்நேரமும் பெற்றோரின் கவனிப்பு வளையத்திலே தான் இருக்க நேர்கிறது.அதனால் தேவையற்ற பல பழக்கங்கள் தடுக்கப் பட்டு விட்டன என்பதை சொல்லித் தான் ஆக வேண்டும்.
நோட்:-
சிலேட்டுப் படம் கூகுளில் தேடி எடுக்கப் பட்டது இங்கிருந்து- nallasudar.blogspot.com/2008_10_01_archive, நன்றி நண்பரே.

Thursday, December 10, 2009

ஹரிணி(பாப்பு) கலெக்சன்ஸ் ...


கணேஷ ஸ்துதி இல்லாமலா ?! முதல் வணக்கம் அவருக்கு தானே...ஜூனியர் சந்தமாமா பாப்புவுக்கு மிகவும் பிடித்த புத்தகம்.நேற்று அதைப் பார்த்து இரண்டே நிமிடத்தில் இந்த பென்சில் டிராயிங் ...பிள்ளையார் கூட என் பொண்ணு கைபட்டு எப்படி ஜொலிக்கிறார் பாருங்க!(தற்பெருமை கொஞ்சம் ஓவராத் தான் போச்சு இல்ல!!!)




மயிலுக்கு வண்ணம் கொடுக்க பாப்புவுக்கு நேரமில்லையாம் ...பரீட்சை நேரமாச்சே ...லீவு விட்டதும் கலர் கொடுக்கலாம் என்றாள் ,அதற்குள் வலையேற்றி விட்டேன் ..கலர் இருந்தாலும் இல்லா விட்டாலும் மயில் அழகு தான் ...ஏன்னா எம் பொண்ணு வரைஞ்சதாச்சே!!! இப்படி சொல்லி சமாளிக்க வேண்டியது தான்.:))



மேலே ஹெலி ஹாப்டர் பறக்கிறதாம்..கீழே சாலையில் ஸ்கூல் வேன்..ஆட்டோ ...பஸ் இப்படி சில ட்ரான்ஸ்போர்ட் வரைந்திருக்கிறாள். பாப்பு ட்ரான்ஸ்போர்ட் லெசன் படிப்பதால் விளைந்த படம் இது. நல்லா தான் இருக்கு இல்ல?!




இது உருளைக் கிழங்கை பாதியாகக் கட் செய்து அதில் வண்ணங்களை ஒற்றி அச்சுப் பதித்து உருவான அழகான மலர்.தண்டு கூட அச்சடித்தது தான். பிரஸ் அல்லது பென்சில் பயன்படுத்தப் படவில்லை. பாப்புவுக்கு இப்படி அச்சுப் பதிப்பது ரொம்பவும் பிடித்திருக்கிறது சும்மா சொன்னதால் இப்படி முயற்சித்துப் பார்க்கச் சொன்னேன். இல்லா விட்டால் வீட்டுச் சுவர் முழுக்க தண்ணீரில் அல்லது எண்ணெயில் கையை முக்கி எடுத்து அச்சுப் பதிப்பதை யார் தான் சகித்துக் கொள்ள முடியும்?! :):(:):( சொல்லுங்கள்!!!!



பாப்பு வரைந்த போட்டோ பிரேம் படம்...உள்ளே படத்தில் இருப்பது செர்ரி மரக் கிளையாம்.இதற்கான செயற்கை இலைகள் மற்றும் சிவப்பு நிற குந்தன் கற்களை வாங்கித் தரச் சொல்லி அதை ஆங்காங்கே ஒட்டி முடித்ததும் படம் அழகாகி விட்டது பாருங்கள்...

Friday, December 4, 2009

உச்சிக்குடுமி முட்டாசுக் கடை







விடுமுறையில் பாட்டி வீட்டுக்குப் போய் சில பல நாட்கள் சீராடுவதெல்லாம் கல்யாணம் ஆன கையோடு கனவு போலத்தான் ஆகி விட்டது ,இப்போதெல்லாம் அப்படிப் போனாலும் கூட எங்கே தங்க முடிகிறது?குழந்தைக்குப் பள்ளி,கணவருக்கு லீவு இல்லை, ஆள் இல்லாம வீட்டைப் போட்டுட்டு அத்தனை நாள் தங்க முடியுமா?இப்படிப் பல காரணங்களைக் காட்டி பாட்டி வீட்டு செல்லச் சீராடல் எல்லாம் கானல் நீரானது தான் மிச்சம் .


அதை ஏன் இங்கே புலம்புவானேன்!,சொல்ல வந்த விஷயம் வேறு ...பாட்டி வீடு என்றதும் சில விஷயங்கள் சட்டென்று நினைவை நிரப்பும் அப்படி ஒரு விஷயம் தான் உச்சிக்குடுமி முட்டாசுக் கடை ,இந்த மனிதருக்கு ஏன் இப்படிப் பெயர் வந்ததென்பது இன்னும் கூட எனக்குப் புரியாத விஷயம் தான்.பெயரா முக்கியம்? தினம் தினம் மாலையானால் போதும் அவர் கடையில் சுடச் சுட போடப் படும் கருப்பட்டி முட்டாசின் சுவை அல்லவோ !(ம்...ம்...ஹூம்)

உச்சிக்குடுமி கடையில் இன்னும் சில பலகாரங்கள் கூட செய்து விற்றுக் கொண்டிருந்தார்கள்,ஆனாலும் இந்தக் கருப்பட்டி முட்டாசுக்கு ஈடு இணை எதுவுமே இல்லை ,

அதுவும் மாலை சரியாக ஒரு ஐந்து அல்லது ஆறு மணிக்கு பெரிய நார் தட்டின் மீது பழைய (பெரும்பாலும் எண்ணெய்க் கரை படிந்த ஒரே அழுக்குத் துண்டு தான்) துண்டை விரித்து அதன் மேல் பழைய தினசரிப் பேப்பரைப் போட்டு அதற்கும் மேல் பொன்னிறமான கருப்பட்டி முட்டாசுகளை அடுக்கி அதற்கும் மேலே இன்னொரு தினசரியை வைத்து மூடி உச்சிகுடுமியின் மகள் பாண்டீஸ்வரி இடுக்கில் இடுக்கிக் கொண்டு வருவாள்,கூட ஒரு பொடியன் காசு வாங்கிப் போடா சுருக்குப் பையுடன் வருவான்.

அவர்கள் தலையை கண்டாலே போதும் தெருவில் மொய்த்துக் கொண்டு கூட்டம் கூடும்.தினம் தினம் வருவதால் எல்லோரும் நூறு கிராம்,இருநூறு கிராம் என்று வாங்கி அங்கேயே தின்றும் விடுவார்கள் ,மாலையானால் தான் கிராமப் புறங்களில் அப்போதெல்லாம் ஒவ்வொரு திண்ணையிலும் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஊர்க் கதை பேசுவது வாடிக்கை ஆயிற்றே.முட்டாசோடு ஊர்க் கதைகளை உலக விசயங்களை(!!!) மெல்வதும் கூட சுகம் தான் போலும்.

என்னவோ தெரியவில்லை சென்ற விடுமுறையில் அம்மா வீடு...மாமியார் வீடு ,சித்தி வீடு அத்தை வீடு என்று சுற்றி விட்டு பாட்டி வீட்டில் எட்டிப் பார்க்கும் போது சேர்ந்தார் போல இரண்டு நாட்கள் தங்கினால் தான் என்ன? என்று தோன்றி விட ...தங்கினோம். வழக்கம் போல உறவுகள் ...நட்புகள் ...தெரிந்தவர் தெரியாதவர் என்று திண்ணையில் ஜமா சேர்ந்ததில் மெல்ல மெல்லப் பேச்சு கருப்பட்டி முட்டாசுக்குப் போய் விட்டது.

மொறு மொறுன்னு பங்காரம் போல (பங்காரம்னா தெலுங்குல தங்கம்) என்னமா இருக்கும் உச்சிக் குடுமி கடை முட்டாசு !

இப்ப ஒருத்தன் முட்டாசு போட்டு விக்கறான் மதினி ,வாயில போட்டா என்னமோ இனிப்பாத்தான் இருக்கு,ஆனாங்காட்டி ஒரு மொறு மொறுப்பு இல்ல ஒண்ணுமில்ல,சும்மா சவ சவன்னு என்னமோ பச்சைப் புல்லைக் காய்ச்சி சீனி போட்டு மென்டாப்புல(மெல்லுதல்) இருக்கு ,அம்புட்டுக்கு ஒன்னும் நல்லா இல்லை. ஹூம்... ஓட்டு வீட்டு தனக்கா சொல்லி அங்கலாய்க்க ,

பாட்டி உச்சிக்குடுமி பெருமையை கொஞ்ச நேரம் சிலாகித்தார்.

எனக்கோ இந்த முட்டாசெல்லாம் சென்னையில் எங்கே கிடைக்கப் போகிறது ,இப்போது யாராவது விற்று வந்தால் சூடாக வாங்கி ஒரு விள்ளல் வாயில் போட்டால் தேவலாம் என்று இருந்தது அந்த மாலை நேரக் கூதல் காற்றுக்கும் கிராமங்களுக்கே உரிய ஒரு வித இதமான வாசனைக்கும் .

அதென்னவோ அன்றைக்கெல்லாம் எதிர்பார்த்தும் முட்டாசு விற்பவனைக் காணோம்.

சிவகாசியில் வேலாயுத நாடார் கடையில் சீனி..கருப்பட்டி முட்டாசு ரெண்டுமே பேமஸ் என்று ஊருக்கு கிளம்பும் போது சித்தியும் பாட்டியும் ஆளுக்கு ஒரு கிலோ வாங்கிக் கொடுத்து அனுப்பினார்கள்,அங்கே பனை ஓலைப் பெட்டியில் முட்டாசு அடுக்கித் தருவார்கள் கேட்டால். அது ஒரு பாரம்பரிய சுவை என்றால் மிக்கி இல்லை. பாலித்தீன் பைகளில் சுற்றித் தரப் படும் எந்தப் பண்டமுமே ஈர்ப்பதில்லை எனக்கு.

இதே போல வாழை இலையில் வைத்து சூடாகக் கட்டித் தரும் சாத்தூர் லாலாக் கடை ஹல்வாவையும் சொல்லாம் .பால்யத்துடன் கலந்து விட்ட இனிமையான நினைவுகள் அவை.இங்கே இனிப்பானவை முட்டசும் ...ஹல்வாவுமா இல்லை பால்ய நினைவுகளா என்பதை பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தாலும் பகுத்துப் பார்த்து விட முடியாது போலும்.

ம்...என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்...ஆமாம் வேலாயுத நாடார் கடை முட்டாசும் கூட எனக்கென்னவோ உச்சிக்குடுமி கடை கருப்பட்டி முட்டாசுக்கு ஈடாகத் தோன்றவில்லை என்பது தான்.

உச்சிக்குடுமியோடு போய் விட்டது அவரது மொறு மொறுப்பான முட்டாசுகளும் .

அவர் இறந்து விட்டார்.

Thursday, December 3, 2009

கல்கி வெறும் கவர்ச்சி

நேற்றைய ஜூனியர் விகடனில் வெளியான செய்தி ஒன்று "கல்கி பகவானும் அவரது மகன் கிருஷ்ணா ஜியும் பிரிகிறார்கள் " கிருஷ்ணா ஜி கல்கி மற்றும் அம்மா பகவானின் (!!!)அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்து தனியானதொரு அமைப்பு தொடங்கவிருக்கிறார் என்பது. மிகவும்

கசப்பான உணர்வைத் தந்த செய்தி இதுவாகத் தான் இருக்க வேண்டும் .
தந்தையின் "ஒன்னெஸ் " அமைப்பு மூலம் திரட்டிய மக்கள் நிதி பற்றாக் குறை ஆகி விட்டதா என்ன ?என்ற ஆயாசமே மிகுதியானது. விஸ்வநாத் என்பவர் கல்கியின் (விஜயகுமார்) நண்பர் இவர் இன்று நேற்றல்ல ஆரம்பம் முதலே கல்கி மீது குற்றச் சாட்டை எழுப்பியே வருகிறார்,ஆனால் நமது மீடியாக்கள் பரபரப்பிற்காக ஓரிரு நாட்கள் செய்திகளைப் பிரசுரிப்பதோடு ஓய்ந்து விடுகின்றன. காரணம் கல்கியை நம்பும் மிகுதியான வி.ஐ.பி பக்தர்களாகக் கூட இருக்கலாம். சந்திர பாபு நாயுடு ஆந்திராவில் கல்கியை ஆதரித்துக் கொண்டு இருப்பதாகவும் செய்திகள் உலவுகின்றன.

குங்குமம் மற்றும் அவள் விகடனில் கல்கி பகவானின் அற்புதங்கள் குறித்து விளம்பரம் கூட வெளியாகிறது ,யோசியாமல் நம்புவதற்கு தான் ஏராளம் பேர் இருக்கிறார்களே. அனுபவ ரீதியாக எனக்குத் தெரிந்த சில விசயங்களை இங்கே பகிர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியதால் தான் இப்பதிவை வெளியிடுகிறேன்.

மனிதர்களுக்குப் பட்டால் தான் புத்தி வரும் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் ?! ஐந்தாயிரம் ரூபாய்கள் செலவழித்து கல்கி பகவன் மற்றும் அவரது மனைவியான அம்மா பகவான் தரிசனம் செய்து வந்தவர்களில் நாங்களும் உண்டு என்பதால் அனுபவ சான்றுகளுடன் தெரிய வந்த விஷயம் .
அங்கே பணமே பிரதானம்.
வரயக்யம் என்று ஒரு பூஜை
மகா வரயக்யம்
முக்தி யக்யம்
யூத் வரயக்யம்
கலச பூஜை
அம்மா பகவான் திருக்கல்யாணம்

நானறிந்த வரையில் இப்படிப் பல பூஜைகள் நடத்துவார்கள் .இதற்க்கு தேவைப் படும் நிதி எல்லாம் அங்கே "கல்கி டிவோட்டிகள் "(கல்கி பக்தர்கள்) தலையில் சுமத்தப் படும். பூஜைக்குத் தேவையான அழைப்பிதழ்கள் அச்சிடுவது வாகனச் செலவுகள்,பூக்கள்,பழங்கள் முதற்கொண்டு இன்ன பிற எல்லா செலவுகளையும் இன்னின்னவர் என்று ஸ்பான்சர் பிடித்து சாதிக்க வேண்டும்,இந்த பூஜைகளை நடத்துவதற்கென்று "தாசா ஜிக்கள் "(கல்கி அடியார்கள்) இருப்பார்கள் ,அவர்கள் இப்படி இப்படி செய்யுங்கள் என்று ஆணை இடுவதோன் சரி பணம் சார்ந்த விஷயங்கள் எல்லாமே பக்தர்கள் தான் திரட்டித் தந்தாக வேண்டும்.

சத்சங்கம் செய்வது ...எனக்கு இன்ன குறை என்று மனம் விட்டுப் பேச விரும்பும் பக்தர்களுக்கு தனக்குத் தெரிந்த வகையில் சில தத்துவங்களைக் கூறி அவர்களது மனம் சமாதானம் அடைய வைப்பது ,திரட்டிய நிதிகளை பகவானிடம் கொண்டு சேர்ப்பது இது மட்டுமே கல்கி தாசாக்களின் வேலை.

இப்படி தமிழகம் முழுக்கவே இவர்கள் பரவி இருந்தனர் 2000 ஆம் ஆண்டு வாக்கில் ,இப்படி திரட்டிய நிதிகளை இவர்கள் எப்படிப் பயன் படுத்தினார்கள் என்பதற்கு கல்கிக்கே வெளிச்சம்.அவரது மகனின் நிர்வாகத்தில் கட்டுமான நிறுவனம் ஒன்றும் ,காஸ்மிக் எனும் ஆடியோ நிறுவனம் ஒன்றும் இருப்பது பக்தர்களுக்கு தெரியும் .

கல்கி என்ன பரம்பரை பணக்காரரா? படி நிலை வளர்ச்சி என்பது அம்பானியில் இருந்து லக்ஷ்மி மிட்டல் வரை கண் கூடாக செய்திகள் மூலம் நமக்குத் தெரிந்தவை,ஒன்னெஸ் மையம் என்ற பெயரில் சகல நவீன வசதிகளுடன் வெளி நாட்டினரை ஈர்க்கும் வகையில் ஒரு பெரிய வழிபாட்டு தியான மண்டபம் கட்டி இருக்கிறார்கள்.

கொசுறு :

அம்மா பகவான் தரிசனம் செய்ய ஏழு வருடங்களுக்கு முன்பு ஒரு குடும்பத்துக்கு ரூபாய் 5000 வாங்கினார்கள் ,நேற்று ஜூ.வி யில் 50 ,000 என்று படித்த ஞாபகம் ,அடடா...என்ன ஒரு படி நிலை வளர்ச்சி .

பிரபலங்களை எல்லாம் வளைத்துப் போட்டுக் கொண்டு இவர்கள் எல்லாம் எங்கள் பக்தர்கள் என்று பெரிய அளவில் விளம்பரம் செய்து கொள்கிறார்கள். உதாரணம்...மனீஷா கொய்ராலா,ஷில்பா ஷெட்டி,எஸ்.ஏ .சந்திர சேகர் தம்பதி,தாமு,எழுத்தாளர் இந்துமதி( இவர் நான் கல்கி பக்தை இல்லை என்று முன்பே பேட்டி கொடுத்து விட்டார்.) இப்படிப் பலர் உண்டு.

சில வருடங்களுக்கு முன் தேனிக்கு அருகில் வீரபாண்டித் திருவிழாவுக்கு வருகை தந்த நகைசுவை நடிகர் தாமு "கல்கி தர்மம் (!!!) பரப்ப என்று போடப் பட்டிருந்த ஒரு ஸ்டாலுக்கு வருகை தந்திருந்தார். அப்போது அவர் அ.தி.மு. கா வுக்கு ஓட்டுப் போடுமாறு ஸ்டாலுக்கு வந்தவர்களிடம் கேட்டுக் கொண்டாராம். அ.தி.மு.கா என்றால் இனி "அம்மா தர்ம முன்னேற்றக் கழகமாம் " அங்கிருந்த பக்தர்கள் சொல்லக் கேள்வி .

இந்த ஸ்டாலும் வீர பாண்டித் திருவிழா காலங்களில் பக்தர்களின் நிதியால் மட்டுமே போடப் படும் ,ஏறத்தாழ எல்லா ஆன்மீக இயக்கங்களும் இப்படித் தான் என்றாலும் இது கொஞ்சம் அதிகப் படி என்று தோன்றக் காரணம் நானும் சில வருடங்கள் நேரில் கண்ட பங்கு கொண்ட நிகழ்ச்சிகள் சில உண்டு என்பதால் மட்டுமே .

கல்கி பகவான் ரூரல் சர்வீஸ் என்ற பெயரில் பக்தர்களே அரிசி பருப்பு எல்லாம் சேகரம் செய்து கொண்டு பின் தங்கிய கிராமங்களுக்குச் சென்று அவர்களே சமையல் செய்து கிராமத்தோரை அன்போடு அழைத்து இலை போட்டு உணவிட்டு அவர்கள் சாப்பிட்டு முடித்த் பின் அந்த எச்சில் இலைகளையும் எடுக்க வேண்டும் அப்போது தான் பகவானின் முழு பலன் கிட்டுமாம். நிஜம் என்றே ஒத்துக் கொள்ளத் தோன்றினாலும் கல்கி அடியார்கள் ஒரு போதும் என்றேனும் ஒருநாள் மட்டும் கூட அப்படி இலை எடுத்து நான் கண்டதில்லை. இதுவல்லவோ பக்திப் பெருக்கு!!!

முக்தி யக்யம்
என்ற பெயரில் வலுக்கட்டாயமாக பணம் கட்டி சென்னைக்கு அருகில் நேமத்தில் நடக்கும் ஒரு பூஜைக்கு பக்தர்களை போகச் சொன்னதை பல முறை நான் கண்டிருக்கிறேன்,மறுக்கும் பக்தர்கள் நாளடைவில் பூஜை நடவடிக்கைகளில் இருந்து ஓரம் கட்டப் படுவார்கள்.ஆனால் அவர்கள் நடத்தும் ..நடத்தப் போகும் பூஜைகளில் பணம் செலுத்தி கலந்து கொள்ள மட்டும் மறக்காமல் அழைப்பு மீண்டும் மீண்டும் அனுப்பப் படும்.

இதை விட பக்தர்களின் வாரிசுகளை தாசாஜிக்கலாக அனுப்பச் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?! எனும் கேள்வி அடியார்களால் கேட்கப் பட்டதும் அங்கே உண்டு.அதில் மிரண்டு வெளியேறிய பல பக்தர்களை நான் அறிவேன்.

எதற்கு நீட்டி முழக்குவானேன். "கல்கி வெறும் கவர்ச்சி மட்டுமே " அவர் தெய்வம் கடவுள் விஷ்ணுவின் பத்தாது அவதாரம் என்பதெல்லாம் வெறும் கப்ஸா என் போன்றவர்களுக்கு,இன்னும் கல்கியை நம்பக் கூடியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர குறைந்த பாடில்லை .

ஆன்மீகம் வியாபாரம் தான் என்பதை யாராவது தெள்ளத் தெளிவாக அறிய விரும்பினால் கல்கி பூஜைகளில் தொடர்ந்து பங்கெடுத்துப் பாருங்கள்.பிறகே உங்களுக்கே தெரியும் எல்லாம்.