Thursday, March 12, 2009

கோபால் தாத்தாவும் ...மழைக் கஞ்சியும்

நீங்கள் பார்த்திருக்கிறீர்களா கட்டை விரலில் பல் துலக்குபர்களை ?!

நான் பார்த்திருக்கிறேன் என் பால்ய வயதில் கிட்டத் தட்ட தினமும் ,கோபால் தாத்தா அப்படித்தான் பல் துலக்குவார். என் தாத்தா வீடு அந்தத் தெருவில் இருபுறமும் நீளமான திண்ணைகளுடன் சற்றே உயரமான வாசல் படிகளுடன் இருந்ததில் எதிர் வீட்டு பாத்ரூமில் கட்டை விரலில் பல் தேய்த்துக் கொண்டிருக்கும் கோபால் தாத்தாவுடன் இங்கிருந்தே சர்வ சகஜமாக உரையாடலாம் .பெரும்பாலும் என் தாத்தா அவருடன் அப்படித் தான் பேசிக் கொண்டிருப்பார் எல்லா காலை நேரங்களிலும்.

பெயருக்குத் தான் அது பாத் ரூமே தவிர யதார்த்தத்தில் அது ஒரு திறந்த மேற்கூரைகளுடன் அரைகுறையாகக் கட்டப் பட்ட ஒரு வெளிப்புற அறை .அங்கே தண்ணீர் தொட்டி,கழுநீர்ப் பானை ,அடிப்பாகம் உடைக்கப் பட்டு கவிழ்க்கப் பட்டிருக்கும் ஒன்றிரண்டு மண்பானைகள் (முளைப்பாரி போடும் காலங்களில் இதற்க்கு டிமாண்ட் ஜாஸ்தி. ஊரெல்லாம் இந்த உடைந்த மண் பானையின் மேற்புரத்திற்காக அலைவார்கள். சரி கோபால் தாத்தாவைப் பற்றி சொல்கிறேன்.

அப்போதெல்லாம் ஊரில் ரொம்ப நாட்கள் மழை வரத்து இல்லை என்றால் உடனே இளசுகளும் பெருஷுகளும் ஒன்றாகச் சேர்ந்து "மழைக் கஞ்சி" எடுப்பார்கள் . இதை தெலுங்கில் "வான கெஞ்சி" என்பது வழக்கம்.

"வானா லேது...வர்ஷா லேது

வான கெஞ்சி பொய்யண்டி;

புழுவா லேது புல்லா லேது

புல்லா கெஞ்சி பொய்யண்டி "

இதற்கான தமிழ் வடிவம் ...

"மேகம் இல்லை மழை இல்லை

மழைக் கஞ்சி ஊற்றுங்கள்

புழுக்கள் இல்லை புல்லும் இல்லை

புளித்த கஞ்சியாவது ஊற்றுங்கள் "என்பதாகும் .இந்த வரிகளை

கேலியும் கிண்டலுமாகப் பாடிக் கொண்டே கிராமம் முழுக்க வலம் வந்து ஜாதி வித்யாசம் பாராமல் எல்லா வீடுகளிலும் இருக்கும் பதார்த்தங்களை (கம்பு சோறு,கேழ்வரகுக் கூழ் ,அரிசி சோறு ,புளித்த தண்ணீர் ஊற்றி ஊற வைத்த பழைய சாதம் முதற்க் கொண்டு உப்புக் கருவாடு ...கத்தரிக்காய் புளிக் கூட்டு ,பச்சை வெங்காயம் ...பருப்பு ,பாசிப் பருப்பு துவையல்,கானத் துவையல் (குதிரை சாப்பிடுமே கொல்லு அது தான் கானப் பயிர் ...கொல்லுத் துவையல் சாப்பிட்டால் எடை குறையும் என்று எதிலோ படித்தேன்).இப்படி சகல வீடுகளிலும் போடப் படும் எல்லா உணவுகளையும் ஒரு பெரிய பாத்திரத்தில் சேகரம் பண்ணிக் கொண்டு ஊரின் எல்லாத் தெருக்களையும் பாட்டுப் பாடிக் கொண்டே கொண்டாட்டமாக சுற்றி வருவார்கள்.

கடைசியில் இந்தக் கூட்டம் ஒரு வழியாக கம்மாய்கரையை அடைந்ததும் சேகரித்த உணவுகளை எல்லாம் கைகளால் அள்ளி அள்ளி எல்லாரும் உண்பார்கள் ,சில ஊர்களில் தேங்காய் சிரட்டை ,அரச இலைகளில் கூட பங்கிட்டு உண்பார்கள் .சாப்பிட்டு முடித்ததும் இயற்கை குளியலை கம்மாய் நீரில் நன்றாய் துழாவிக் குளித்து விட்டு சரியாகக் காய்ந்தும் காயாத ஈர உடைகள் மற்றும் ஈரத் தலைமுடிகள் சிலும்பிக் கொண்டு காற்றில் ஆட சாயங்கால வேளைகளில் வீடு திரும்புவார்கள் .

இதற்கும் கோபால் தாத்தாவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? மழைக் கஞ்சி எடுக்கும் போதெல்லாம் எங்கள் ஊரில் கோபால் தாத்தா தான் தலைமை தாங்குவார். (ஹா..ஹா...ஹா ...இந்த மழைக் கஞ்சி கூட்டத்தில் தலைமை தாங்குவது என்பது கூட்டத்தில் பேசுவதைப் போல அல்ல ...வீடு வீடாகப் போய் ;

"வான கெஞ்சி பொய்யண்டி "என்று கெத்து பாராமல் கேட்க வேண்டும் .அது தான் இந்த விழாவின் தலைவர் ஏற்க்க வேண்டிய அதிமுக்கியமான பொறுப்பு .கோபால் தாத்தா அந்தப் பொறுப்பை செவ்வனே செய்வார் மூன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை.வானம் பார்த்த பூமி அந்தக் கிராமாம் .நல்ல வெயில் காலங்களில் பொழுது போகவில்லை என்றால் இப்படி குழு குழுவென மழைக் கஞ்சி எடுத்து விடுவார்கள் அப்போதெல்லாம்.

வருண பகவான் உடனே மனமிரங்கி மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விடும் என்ற நம்பிக்கை ...இது ஊர் ஐதீகம் அந்நாட்களில் .அகஸ்மாத்தாக மழை கொட்டியும் இருக்கிறது சில மழைக் கஞ்சி கொண்டாட்டங்கள் முடிந்ததும் .

இன்றைக்கு "மழைக் கஞ்சி" என்ற சொல்லே பலருக்கு மறந்திருக்கலாம்.

சும்மா ஒரு பகிர்வு . வாசித்து விட்டு பின்னூட்டமிடுங்கள்.