Friday, June 10, 2011

பஷீர்,பெருமாள் முருகன்.ஸ்ட்ராபெர்ரி : (சில புத்தகங்கள்)

வாசிப்பின் ஊடே சில புத்தகங்கள் (நிழல் முற்றம் ,மதில்கள்,ஸ்ட்ராபெர்ரி)

பெருமாள் முருகனின் நிழல் முற்றம் :

வாழ்வின் எல்லாக் கசடுகளையும் அள்ளிப் போட்டுக் கொண்ட ஒரு தியேட்டருக்குள் ஒடுங்கி உட்கார வைக்கப் பட்டு உலக நடப்பின் ஒவ்வொரு கோணல் பக்கத்தையும் அந்த இற்றுப் போன தியேட்டரின் சோடாக் கம்பெனி தண்ணீர் தொட்டிக்குள்ளும் ,டிக்கெட் கிழிக்கும் கியூ வரிசையிலும்,கட்டில் கடையிலுமாய் நான்லினீயர் காட்சிகளாக நிர்பந்தப் படுத்தப்பட்டு மூன்று மணி நேரப் படமாய் பார்க்க நேர்ந்தால் என்ன நேரும்?! தினமும் பரோட்டா சாப்பிடுவது ஒன்றே அந்தப் பையன்களின் வாழ்வில் ஷன நேர விமோஷனமாயிருக்கக் கூடும். அந்த நிலையிலும் சக்தி வேலின் அகஉலகில் உடைபடும் மனித வாழ்வின் அகோரப் பக்கங்கள் வாசிக்கும் நமக்கே பிரமை தட்டச் செய்கின்றன எனில் அனுபவப் படும் அந்த ஜீவன்களின் மீதெழும் பரிதாப உணர்வை தாண்டிச் செல்லத் தான் வேண்டி இருக்கிறது.

சக்திவேலின் தகப்பன் குஷ்டரோகி ,நடேசனின் அம்மா ஓடிப் போனவள்,படக்காரன் வாழ்வின் நிர்பந்தம் காரணமாய் கல்யாணம் கட்டியும் பிரம்மச்சாரி , நாவலில் வரும் ஒவ்வொருவரின் வாழ்வும் பல கோணங்களில் கோணல் மாணலாய் விலகிப் பல்லிளிக்கையில் கலைடாஸ்கோப்பில் தாறுமாறாய் உருளும் உடைந்த வளையல் துண்டுகளின் ஞாபகம் வருகிறது. திக்குத் தெரியாத வாழ்வே தான் எனினும் இவர்களுக்கும் சின்னச் சின்னதாய் வாழ்வு ருசிக்கத் தான் செய்கிறது .இல்லா விட்டால் வாழ முடியாதே. இரண்டும்கெட்டான் வயதில் வேறு போக்கிடம் அற்றுப் போன பையன்களின் வாழ்க்கை என்னாகும் ? நிழல் முற்றம் வாசித்தால் தெரிந்து கொள்ளலாம். அவர்கள் வாழக் கற்றுக் கொள்கிறார்கள் எப்படியாயினும்.

பஷீரின் "மதில்கள் " :அம்மாடியோவ் ... பஷீரை வாசிக்கும் போதெல்லாம் எழுத்திலும் வாசிப்பிலும் இன்னும் கடக்க வேண்டிய தூரம் கண்ணைக் கட்டுகிறது .

என்னய்யா கதை இது ?!

கட்டக் கடைசியில் ;

"மங்களம் ... நாராயணீ சர்வ மங்களம் "

என முடிக்கையில் சிறை வாசலின் சிறு கேட்டின் முன் நமக்கும் மூளை ஸ்தம்பித்து நின்று விடத்தான் வேண்டும் ஒரு நொடியேனும். அந்தப் பெண் நாராயணீ அதற்கு பிறகு பஷீரை தேடி இருக்க மாட்டாளா ?! அதையெல்லாம் நமக்கு நாமே கண்டபடிக்கு கற்பனை செய்து கொள்ள வேண்டியது தான் ,பஷீர் தான் ஒரு இரக்கமற்ற படைப்பாளி என்பதை தனது ஒவ்வொரு படைப்பின் வழியும் நிரூபித்துச் சென்றிருக்கிறார்.

"உங்க உப்புப்பா கொம்பானை குழியானையாம் புள்ளே " எங்க உப்பப்பாவுக்கொரு யானை இருந்தது நாவலில் வரும் குஞ்ஞுதாச்சும்மா வின் அரற்றலுக்கும் , இங்கு பஷீர் விடுதலைக்குப் பின் சிறை மதில்களைத் தாண்டி வந்து தெருவோடு நின்று கொண்டு மனதிற்குள் சொல்லும் ;

"மங்களம்...நாராயணீ சர்வ மங்களம் "

முடித்துக் கொள்ளும் முறித்துக் கொள்ளும் தன்மை கொண்ட என்ன ஒரு இரக்கம் கெட்ட வார்த்தைகள் ! ஸ்தம்பிப்பது மூளை அல்ல இங்கே கதை தான்.பஷீர் அளவில் ஒரு குன்றி மணி அளவுக்காவது எழுத முடியுமா என யோசிக்கையில் நமக்கும் மூளை ஸ்தம்பித்துப் போகலாம்.

எதற்கு அந்த விஷப் பரீட்சை எல்லாம் அடுத்த புத்தகத்தைப் பற்றி பேசுவதே அதை விட உத்தமாமாய் இருக்க கூடும்! ;))

ஜி.முருகனின் "காண்டாமிருகம் " சிறுகதை தொகுப்பு இந்த வாரம் விகடன் வரவேற்பறையில் நூல் அறிமுகமாக பகிர்ந்து கொள்ளப் பட்டிருந்தது .

ஸ்ரீ.ஷங்கர் தொகுத்து அளித்த "ஸ்ட்ராபெர்ரி" தொகுப்பில் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட மனவியல் , உளவியல், பாலியல் சார்ந்த சிறுகதைகள் வாசிக்க கிடைத்தது.

தமிழ்நதியின் 'உடல் ' சிறுகதையை முன்னமே அவரது வலைப்பூவிலேயே வாசித்திருந்தேன் . இந்த தொகுப்பை முதன்முறை வாசிப்பவர்களுக்கு ஜீரணம் ஆகக் கூடிய சற்றே மென்மையான கதையென இதை மட்டுமே கூறலாம்.

லக்ஷ்மி சரவணக் குமாரின் "இருள்,மூத்திரம் மற்றும் கடவுளின் பட்டுக் கௌபீகத்துணி" சிறுகதையை வாசித்து முடிக்கையில் நமக்குள் நாமே சிரித்துக் கொள்வதை தவிர்க்க இயலாது. சிறுகதை ,

குமார் அம்பாயிரத்தின் "மண்யோனி" சிறுகதை கி.ரா வின் "பெண்மணம்" தொகுப்பில் இருந்த கதைகளை நினைவூட்டிச் சென்றது. வாசித்துக் கொண்டிருக்கும் போதே கதையின் சில பகடிகள் சிரிப்பு மூட்டிச் சென்றது. என்ன ஒரு அசாத்திய கற்பனை வளம் ...ஐயோடா ... வாசிக்கத் தான் கொஞ்சம் லஜ்ஜையாய் இருக்கிறது . கெவி டோஸ்.


ஜி.முருகனின் "கிழத்தி " தேர்ந்த நடை. அட்சர சுத்தமாய் கதையில் வருபவர்களின் மனநிலை சித்தரிக்கப் பட்டிருக்கிறது. ஒரு சின்ன நெருடல் " கிழத்தி " என்ற தலைப்பு பெண்ணை கிழத்தி என்றால் அதே விதமாய் நடந்து கொள்ளும் ஆணை என்னவேன்பார்கள்? அதைப் பற்றி இதுவரை எந்த எழுத்தாளரும் நினைத்துப் பார்க்கவில்லையோ? எம்.கோபால கிருஷ்ணனின் "முனி மேடு" தொகுப்பிலும் இதே போலொரு சிறுகதை "நிலைக் கண்ணாடி " சரி பெண்ணுக்கு இப்படி எல்லாம் நேரக் கூடும் ,அவளை இவிதமாகவேல்லாம் இசைக்கேடாக நினைத்துக் கொள்ளலாம் சரியே ...அதே சமயத்தில் அந்த ஆணை என்னவென்பது , பாதிப்பு பெண்ணுக்கு மட்டுமே தானா ,ஆண் என்ன நடந்தாலும் ஒரு பாதிப்பும் இன்றி கால் சராயில் ஒட்டிய மண்ணை உதறிச் செல்வது போல ஒன்றுமே நடக்கவில்லை எனும் பாவனையில் எல்லாவற்றையும் துடைத்து உதறி விட்டு போய் கொண்டே இருக்கலாமோ?குறைந்த பட்சம் கிழத்தி என்று அசிங்கமாய் பெண்ணை விளிப்பதற்கு ஒப்ப ஆணுக்கும் இதே விதமாய் ஒரு பொருத்தமான பெயரை மட்டுமேனும் வைத்து கதைகளிலேனும் விளிக்கலாம். யாராவது எழுதுங்களேன் எழுத்தாள மகா ஜனங்களே!


சு.தமிழ் செல்வியின் "சாமுண்டி " சிறுகதை கணவனை இழந்த மகனுக்கு கல்யாணம் செய்து வைத்து வாழ்வின் கடமைகளை முடித்து விட்ட முதிரிளம் பெண்களின் மனப் போராட்டத்தை பற்றி பகர்கிறது. மூட நம்பிக்கைகள் ஊடுருவ பெரும்பாலும் கூட்டத்தின் நடுவில் இருக்கையிலும் கூட உள்ளுக்குள் தனிமையாய் உணர்தலே முக்ய காரணமாகி விடுகிறது.


//வாசிக்காத ... வாசிக்காதன்னு சொன்னா கேட்டியா ? இப்ப பார் எழுத வேண்டியாத போய்டுச்சு...

//எனக்கு நானே சொல்லிக்கறேன் //

Saturday, June 4, 2011

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது(பஷீர்-நாவல்))













இன்றைய கோட்டா ;







பஷீரின் நாவல்களோ சிறுகதைகளோ எதுவாக இருந்தாலும் வாசிக்கும் முன்பு பெரும் தயக்கம் இருக்கும் எனக்கு.படைப்புகளில் இம்மியளவு கூட கதாபாத்திரங்களின் மீதான இரக்கமே இருக்காது பஷீரின் எழுத்துக்களில்.இவர்கள் இப்படித்தான் என்ற ரீதியில் நாம் பாத்திரங்களின் இயல்புகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த சிறுநாவலில் குஞ்ஞு ஃபாத்துமாவைப் படைத்து அவளுக்காக நாவலை வாசிப்பவர்களை எல்லாம் வருத்தப் பட வைத்து கடைசியில் ஒரு வழியாக அவளை நிஸார் அகமதுவிடம் சேர்த்து வைத்து விட்டார் என்று நினைத்து ஆசுவாசம் கொள்ள வகையில்லை,







// "ஒனக்கே உப்பப்பாக்கே ...பெரீய கொம்பானே ...குழியானேயாம்புள்ளே.குழியானேயாம்!" //







கடைசியில் குஞ்ஞுதாச்சும்மா தன்னைக் கேலி செய்யும் அண்டை அயல் குழந்தைகளின் பேச்சில் பெரிதும் காயப்பட்டுப் போய் ஃபாத்துமாவிடம் இப்படிக் கண்ணீருடன் புலம்புகையில் நாவலின் இடையில் அவள் மீது ஏற்பட்டுப் போன எரிச்சலும் அசூயையும் அவள் மீதான கருணையாக மாறிப் போகிறது.

பாவம் பழம் பெருமை பேசியே செத்துப் போகப் படைக்கப் பட்ட பிறவி இவளாக்கும்!




குஞ்ஞு ஃபாத்துமாவின் உம்மா குஞ்ஞுதாச்சும்மா எப்போதும் பழம் பெருமையில் உழலும் கிரகம் பிடித்த பிறவி .







அவளது அப்பாவிடம் ஒரு கொம்பானை இருந்ததாம் அதைத்தான் அவள் கதை முழுதும் சொல்லிக் கொண்டு திரிகிறாள். வாட்டனடிமை என்று கம்பீரமாய் ஊரை வலம் வந்த பிரமுகரான தன் கணவர் ஒரு கட்டத்தில் நிலை தாழ்ந்து செம்மீனடிமையாக சொத்துக்களை எல்லாம் இழந்து பெரிய வீட்டை நீங்கி ஊரை விட்டு ஒதுக்குப்புறமாய் ஓலைக் கீற்றுக் கொட்டகையில் தம்மை வாழக் கொணர்ந்த வாழ்வின் இறக்கம் அவளைப் படாத பாடு பட்த்துகிறது. பிறகு குஞ்ஞுதாச்சம்மை சதா தன் ஒரே செல்ல மகள் ஃபாத்துமாவையும் கணவரான வாட்டனடிமையையும் பெருங்குரலில் திட்டித் தீர்க்கிறாள் .







முல்லீம் பெண்கள் தமது மார்கத்தில் சொல்லித் தரப்பட்ட ஐதீகங்களை எப்படி ஒரு கேள்வியுமின்றி அட கேள்வி கேட்க வேண்டுமென்ற எண்ணம் கூட இன்றி ஏற்றுக் கொள்ள நேரிடுகிறது என்பதை பஷீரை விட வேறு யாராலும் இத்தனை எளிதாக விளக்கி விட முடியாது .பாவம் ஃபாத்துமாவுக்கு கூந்தலை சீப்பு கொண்டு வாறிப் பின்னலிடக் கூட கூட உரிமை இல்லையெனில் பார்த்துக் கொள்ளுங்கள்.







வாழ்வின் எல்லாத் தாழ்வுகளுக்கும் , எல்லாக் கஷ்டங்களுக்கும் காரணம் இபிலீஸ் எனும் பகைவன் தானே தவிர வேறெந்த காரணமும் இல்லை என நம்புமிடத்தில் குஞ்ஞு ஃபாத்துமா மீது தாங்கவொண்ணாத இரக்கம் பொங்கி வழிகிறது .அப்படி இரக்கப் பட்டு தான் நிஸார் அவளை மணந்து கொள்கிறானோ என்னவோ?!







தன்னை உறிஞ்சி ரத்தம் குடித்த அட்டைக்கும்,அட்டையை விழுங்கிய விரால் மீனுக்கும் இரக்கப் படும் எளியவள் தான் பாத்துமா,அவளது உம்மாவுக்கு மட்டுமே இருந்த "எங்க உப்பாவுக்கொரு ஆனை இருந்தது போன்ற பிரத்யேக லைசன்ஸ் எதுவும் பாத்துமாவுக்கு இல்லை போலும். அவள் தனக்குள் மறுகிக் கொள்ளும் பிறவியாக அடையாளம் காட்டப் படுகிறாள்.




எது எப்படியோ ஃ பாத்துமாவுக்கு கல்யாணம் ஆனதும் வாசகர்களுக்கு அதுவரை நீடித்த அவள் மீதான இரக்கம் சற்றே குறைந்து அது அவளது உம்மாவின் பக்கம் சாய்ந்து விடுகிறது







யானையைப் பற்றிய பெருமை சரியுமிடத்தில் குஞ்ஞுதாச்சும்மா இருந்தும் மரித்தவள் ஆகிறாள். சுத்த இஸ்லாமியர்கள் இறந்தால் மரித்து என்று தான் சொல்ல வேண்டும் என்பதும் ஃபாத்துமாவிற்க்கான குஞ்ஞு தாச்சும்மாவின் கட்டளை தான்.






செத்துப் போவது காபிர்கள் மட்டும் தானாம்.







இன்றும் கூட ஊர்ப்பக்கம் போனால் சில சங்கதிகளை காதாறக் கேட்கலாம்,சில பழம் பெருமைகளை கண்ணாறக் காணலாம் .







"இந்தா இருக்கே இந்த பங்களா எங்க தாத்தா 1953 ல கட்டினதாக்கும் ,தம் பேர்ல எழுதி வைக்கலைன்னு செத்த அப்பனுக்கு கொள்ளி போட மாட்டேன்னு சொல்லி எங்க ஊதாரி மாமா இத்தாம் பெரிய பங்களாவ எங்கம்மா கிட்ட இருந்து எழுதி வாங்கிட்டார். இதான் எங்க பழைய வீடு,நாம் பொறந்து எஸ்.எஸ்.எல்.சி படிக்கற வர இங்க தான் இருந்தோம். இது எங்க வீடு ...இதான் எங்க வீடு - கண்களில் நீர் மின்ன சொல்லும் அப்பாக்கள்,அம்மாக்கள் ,அத்தைகள் ,மாமாக்களை கண்டிருக்கிறேன். //

யாருக்குத் தான் இல்லை பழம் பெருமை?!







அதொன்றும் பஷீர் சொல்வதைப் போல அத்தானாம் பெரிய குற்றம் இல்லை தான்.

ஆனால் பின்னாட்களில் கேலிக்கு இலக்காகி பெருமைக்குரியவரை ஏளனத்தில் தள்ளி வேடிக்கை பார்க்கும் சகல திறமையும் இந்த பழம் பேச்சுக்கு உண்டு.




//எங்க வீட்ல இந்த மூலைக்கும் அந்த மூலைக்கும் வீசி வீசி ஆட அம்மாம் பெரிய தேக்கு ஊஞ்சல் இருந்தது தெரியுமா?


பாட்டி கிட்ட தான் இந்த ஊர்லையே முத முதல்ல பத்துப்பிடி காசு மாலை இருந்ததாம் தெரியுமா?




எங்க வீடு தான் இந்த ஊருக்கே முத கார வீடு தெரியுமா?
எங்கப்பா தான் இந்த ஊருக்கே முத முதல்ல பெரிய பத்து படிச்சவராம் தெரியுமா?


எங்க கல்யாணம்னாலும் எங்கம்மா கிட்ட தான் இந்த ஊரே பட்டுச் சேலை வாங்கி கட்டிகிட்டுப் போகுமாம் தெரியுமா? ...


எங்கண்ணன் தான் இந்த ஊர்லயே முத முதல்ல பிளசர் கார் வாங்கினார் தெரியுமா? ...//

எத்தனை எத்தனை பழம் பெருமைகள் !

பஷீரின் இந்த நாவல் எல்லோரும் படிக்கலாம். வாசித்து முடித்ததும் உள்ளுக்குள் பொங்கும் சிரிப்பில் சன்னமாய் ஒரு வேதனை இலவசம்.


Friday, June 3, 2011

தி.ஜா.வின் அமிர்தம் நாவல் :









போன வாரமெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தேன் ?




தி.ஜா வின் 'அமிர்தம் ' நாவல் வாசித்தேன் .அவருடைய முதல் நாவலாமே இது? வாசிப்பிற்கு குந்தகமில்லை,ஆனால் முடிவு தான் எனக்கென்னவோ மெகா சீரியலை ஞாபகப்படுத்தியது ,அந்த நாவலை அப்படித் தான் முடிக்க வேண்டும் போல! தி.ஜா வுக்குத் தெரியாததா? அமிர்தத்தை காட்டிலும் துளசி மற்றும் குசலம் இருவரும் ரசிக்க வைக்கிறார்கள் தங்களின் குண இயல்புகளால். சபேச முதலியார் நடப்புலக பிரதிநிதி .அவருக்கு அமிர்தத்தின் மீது இருக்கும் ஆசையை காட்டிலும் சமூகத்தில் தன் கௌரவத்தின் மீதான பிரேமை மிக அதிகமாய் இருக்கின்றது.





சபேச முதலியார் நல்லவர் தான்,அவருக்கு அமிர்தத்தின் தகப்பனார் வயது கூட இருந்து விட்டுப் போகட்டுமே! ஆனாலும் அவரால் அமிர்தத்தை இரண்டாம் தாரமாக்கி மனைவியாகவெல்லாம் நினைத்துப் பார்க்க இயலாது தாசி என்றால் அவளை பணத்தை கூட்டிக் கொடுத்து அரங்கேற்றம் செய்து தனக்கே தனக்கென்று வைத்துக் கொள்ளத் தான் வேண்டும்,தாலி கொடுத்து கல்யாணம் செய்து கொள்வதெல்லாம் அதிகப் படி என்ற எண்ணம் தான் முதலியாருக்கு .இறந்து போன முதல் தாரத்தின் மகன் சித்தப்பாவுடன் ரங்கூனுக்குப் போனவன் திரும்பி வரும் வரை எல்லாம் நாவல் சீராகத் தான் போகின்றது.





அப்பாவுக்கும் மகனுக்கும் ஒரே பெண் மீது காதல் உண்டானால் என்ன ஆகும் ?





அமிர்தம் தான் ஒரு கணிகை என்று அடையாளம் காணப் படுவதை வெறுக்கிறாள். அவளை கட்டாயப் படுத்தி சபேச முதலியாரின் சிநேகத்தை ஏற்படுத்தி வைத்த அவளது அம்மா குசலமும் கூட இறந்து போன பின் அவள் பாவம் என்ன செய்வாள்.முதலியாரிடத்திலும் தனது விருப்பமின்மையைச் சொல்லி அவரையும் தூர நிறுத்திய பின் தான் முதலியாரின் மகனைக் கண்டு காதல் கொண்டாள் அவள். அமிர்தம் களங்கமற்றவள் என்பது முதலியாரும் அறிந்ததே .அப்படி இருந்தும் ஒரு கணிகை தன் வீட்டு மருமகள் ஆவதா ?என்ற அடக்க முடியாத சீற்றம் ...தான் ஆசைப் பட்ட பெண்ணை தன் மகனை விரும்புவதா என்ற பொறாமை ,எல்லாம் கலந்து நேசம் கொண்ட இருவரின் காதலைப் பிரித்து தூரப் போடும் வேலையை முதலியாரின் கடிதம் செய்கிறது.






தன்னை அபாண்டமாக விமர்சித்து எழுதப் பட்ட அந்தக் கடிதம் கண்டதும் அமிர்தம் அந்த ஊரை விட்டு பொய் விடுகிறாள். முதலியாரின் மகன் அமிர்தம் இல்லாமல் தனக்கு இங்கே வேலை இல்லை என்று மீண்டும் ரங்கூன் போய் விடுகிறான்.





மீண்டும் தனித்தவர் ஆகிறார் முதலியார். நிச்சயம் அவர் அதற்காக வருத்தப்பட்டிருக்க மாட்டார் என்றே நம்ப வேண்டியதாய் இருக்கிறது. அவருக்கு தன் மருமகள் ஒரு கணிகை என்பதைக் காட்டிலும் தன் மகனுக்கு கல்யாணமே ஆகாமல் போனாலும் தேவலாம் என்ற மனநிலை தான் நாவலில் தெளிவாய் காட்டப்பட்டிருக்கிறதே.





நாவலைப் பொறுத்தவரை அன்றைய காலகட்டத்தில் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினையின் தீவிரம் குறித்த கவலை எல்லாம் காணப் படவில்லை. ஒரு சமூகப் பிரமை பிடித்த ஒரு பணக்கார நடுத்தர வயது ஆணின் மனநிலை,தான் வளர்ந்த விதம் மற்றும் தனித்தியங்க பயிற்றுவிக்கப்படாத நிலையில் வளரும் ஒரு தாசிப்பெண்ணின் மனநிலை, இவர்களுக்கிடையில் அகஸ்மாத்தாய் வந்து மாட்டிக் கொண்டு அலைக்கழியும் ஒரு இளைஞன் . குலத்தொழில் என்ற பெருமை பேசுமிடத்து குசலத்தை நினைக்கையில் பரிதாபமாய் இருக்கிறது .வேலைக்காரியானாலும் துளசியும் அவள் கணவன் வேலுவையும் மறக்க முடியாது இந்நாவலில் .



கொஞ்ச நேரமே வந்தாலும் புது வேலைக்காரி மீனி (என்ன பெயரோ சீனி...சாணி என்று!!!) ஆடி வெள்ளி படத்தின் வெள்ளிக் கிழமை ராமசாமி போல சிரிப்பு மூட்டி விட்டு குசலம் கிணற்றடியில் வழுக்கி விழக் காரணமாகி ஒரு வழியாய் அவளை கொன்று விட்டே வேலையை விட்டு நிற்கிறாள்.



அமிர்தம் என்ன முடிவெடுத்தாள் ?



அதை நாவலை வாங்கி வாசித்து விட்டு தெரிந்து கொள்ளலாம். கட்டாயம் வாசித்தே ஆக வேண்டும் என்றில்லை ,மனம் ஒரு சிக்கல் விழுந்த நூல் கண்டு தான். என்று தி.ஜா வழக்கம் போல நிரூபித்திருக்கிறார் இந்நாவலிலும்.