Wednesday, January 6, 2010

மணலும்...கல்லும் (சிறுவர்களுக்கான கதைகள் 1)

இரண்டு நண்பர்கள் பாலைவனத்தின் நடுவே நடந்து போய்க் கொண்டு இருந்தார்களாம். பயணத்தின் இடையில் சிறிது நேரத்தில் அந்த இரண்டு நண்பர்களுக்கிடையே எதையோ குறித்து விவாதம் எழுந்தது,விவாதத்தின் முடிவில் ஒரு நண்பன் கோப மிகுதியில் மற்றவனின் கன்னத்தில் அறைந்து விடுகிறான்.அறை வாங்கிய நண்பன் அதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் பாலைவன மணலில் இப்படி எழுதினானாம்.
"இன்று என்னுடைய சிறந்த நண்பன் என் கன்னத்தில் அறைந்து விட்டான்"
பிறகும் அவர்களது பயணம் தொடர்ந்தது,குளிப்பதற்காக ஓரிடத்தில் சிறிது நேரம் தங்க நினைக்கையில் புதைமணலில் சிக்கி அதே அறை வாங்கிய நண்பன் உள்ளே மூழ்கத் தொடங்க அடித்த நண்பன் அடி வாங்கியவனை புதை மணலில் இருந்து கஷ்டப் பட்டு காப்பாற்றி விடுகிறான்.
இப்போதும் காப்பாற்றப் பட்ட நண்பன்எதுவும் சொல்லாமல் ஒரு நீளமான கல்லை எடுத்து அதில் கீழ்க்காணும் வாக்கியத்தைப் பொறித்து வைத்தானாம்.
"இன்று என்னுடைய சிறந்த நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான் "
என்று.
முதல் தடவை அடித்து விட்டு இப்போது காப்பாற்றிய அந்த நண்பனுக்கு மிகவும் குழப்பமாகி விட்டது.

என்ன இவன் எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் எதையாவது எழுதி வைத்துக் கொண்டே இருக்கிறானே என்று. அதிலும் முன்பு மணலில் எழுதினான்,இப்போது கல்லில் பொறித்து வைக்கிறானே என்று வேறு சந்தேகம் குடைய.
அதை அவனிடமே ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று கேட்கிறான்.

அதற்கு அந்த நண்பன் அளித்த பதில்.

நம் காயங்களை நாம் மணலில் எழுதவேண்டும் அப்போது தான் மன்னிப்பு எனும் காற்று அடிக்கையில் அவை கலைந்து மறையும்,அதே சமயம் நமது லாபங்களை நாம் பெற்ற உதவிகளை நான் கல்லில் தான் பொறித்து வைக்க வேண்டும்,எந்தக் காற்றும் வந்து கலைத்து விடாமல் இருக்க. இதுவே இக்கதையின் நீதி.

நோட்:
பாப்புவுக்கு ஸ்டோரி டெல்லிங் காம்பெடிசனுக்கு கதை தேடும் போது கிடைச்ச சிம்பிள் கதைங்க இது.நல்ல இருக்கு இல்ல!!!

ரமணிசந்திரனும் பஞ்சவன்மாதேவியும்( 2 கேள்விகள் )








கேள்வி நம்பர் 1 :

பஞ்சவன் மாதேவி யார் ?

அவள் ராஜராஜனின் மனைவியா ?இல்லை அவரது மகன் ராஜேந்திரனின் மனைவியா ? பொன்னியின் செல்வனில் பஞ்சவன் மாதேவி இல்லை. உடையாரில் ராஜராஜனின் மனைவி என்றே வாசித்தேன். வரலாற்றுச் சான்றுகளோடு எழுதப் பட்ட ஒரு கட்டுரையில் பஞ்சவன் மாதேவிக்கென்று பள்ளிப்படை கோயில் பழையாறையில் இருப்பதாக படித்த ஞாபகமும் உண்டு அதை எழுப்பியது ராஜேந்திரன் என்றும் தன சிற்றன்னைக்காக அவன் எழுப்பினான் என்றும் கண்டிருந்தேன்.

இப்போது கேள்வி என்னவென்றால் "உளியின் ஓசை திரைப் படத்தில் பஞ்சவன் மாதேவி ராஜேந்திரனின் மனைவியாக காட்டப் படுகிறார். படம் வரலாற்றுப் படங்களுக்கு வந்த கேடு என்பதை விட்டுத் தள்ளி விடலாம்,என்னவோ நாடகத்தனத்துடன் அபத்தமாகத் தோன்றியது(நிஜ நாடகங்களை நான் குறை சொல்லவரவில்லை,நாடகம் வேறு திரைப் படம் வேறு இல்லையா?அதற்கு பேசாமல் தென்பாண்டி சிங்கம் போல இதையும் நாடகமாகவே எடுத்து விட்டுப் போயிருக்கலாம்!!!) .அதல்ல விஷயம் அத்திரைப்படத்தின் சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு வழங்கப் பட்டதை டி.வியில் பார்த்ததால் இப்போதாவது இந்த கேள்விக்கான விடையைத் தெரிந்து கொண்டால் என்ன ?எனும் வெட்டி வேலை தான் இது. யாருக்காவது தெரிஞ்சா வரலாற்று ஆதாரத்தோட சொல்லுங்கப்பா .




கேள்வி நம்பர் 2 :

ரமணிச்சந்திரன் எழுத்து மலம் என்று விமர்சிக்கப் பட்டால் அவரது வாசகிகளுக்கு கோபம் வருவதில்லையே ஏன்?

நான் ரமணி சந்திரனை வாசித்திருக்கிறேன்... இனியும் வாசிப்பேன் என்பதால் இந்தக் கேள்வி வந்தது.

இதுவே சாரு.ஜெயமோகன் என்றால் வரிந்து கட்டிக் கொண்டு இலக்கியச் சண்டைகள் போட்டுக் கொள்கிறார்கள் (கொல்கிறார்கள்)

அதென்ன சாருவிலிருந்து நண்பர் அதுசரி வரையிலும் ரமணிசந்திரன் என்றால் அத்தனை இளப்பமா?
பெண்களிடையே பிரபலமான எழுத்தாளர் ,எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதுபவர்.அரைத்த மாவையே அரைப்பவர் etc ...etc . ம் ...வாசித்தவரை எனக்கொன்றும் சாரு சொன்னதைப் போல மலம் போல தெரியவில்லை அவரது எழுத்து. பொதுவான பெண்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வணிகமயமாக அவர் எழுதுவதை இத்தனை மோசமாக விமர்சிக்க என்ன நிர்பந்தமோ இவர்களுக்கு?!
காஞ்சனா ஜெயதிலகர் ரமணிசந்திரனின் சாயலில் ஆனால் கூடுதல் துறை சார்ந்த தகவல்களோடு எழுதுவதால் அவர் மீது விமர்சனக் கத்தி பாயவில்லை போலும்!

வாழ்கை என்பது வெறும் தீவிர இலக்கியத்தை மட்டுமே வாசிப்பது அல்ல,அன்பே வா படம் அடையாத வெற்றியா? விஜயின் பிரியமானவளே ...சிவாஜியின் புதிய பறவை...இவையெல்லாம் வெற்றிப் படங்களே, அந்தப் படங்களை ரசிப்பவர்களும் மனிதர்கள் தான்,சுப்பிரமணிய புரத்தை ரசிப்பவர்கள் பிரியமானவளே படத்தையும் ரசிப்பார்கள் தான் .ரசனை என்பது மனம் சார்ந்தது,ஒரு நாவல் என்பது மக்களின் வாழ்க்கை என்றால் ரமணி சந்திரன் எழுதுவதும் மக்களின் வாழ்க்கையை தான். ஒரு கணவன் தன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறானோ ஒரு மனைவி தன் கணவன் எப்படி தன்னை ஆராதிக்க வேண்டும் என விரும்புகிறாளோ அதைத் தான் அந்தம்மா எழுதுகிறார்கள். இதை இத்தனை கடுமையான பதத்தில் விமர்சிப்பது என் வரையில் கண்டனத்திற்குரியதே,குறை நிறைகள் இல்லாத இடங்களே இல்லை,அப்படிப் பார்த்ததால் ரமணி சந்திரன் படித்து யாரும் வாழ்வைக் கெடுத்துக் கொண்டதாக செய்தித் தாட்களில் பார்த்த ஞாபகம் இல்லை.)

நாவல்கள் ...தீவிர இலக்கியம் என்பதெல்லாம் சரி தான் உண்மை வாழ்க்கை அதை விட்டு வெகு தூரத்திற்கு அப்பால் இருக்கிறது,எழுதுபவர்களும் சரி படிப்பவர்களும் சரி இதை கொஞ்சம் புரிந்து கொண்டால் தேவலாம்.

சிலர் நினைத்துக் கொள்ளக் கூடும் அடடா. ரமணிச்சந்திரன் எழுத்தை இப்படிச் சொல்லி விட்டார்களே இனி அதை வாசிப்பதை ரகசியமாகத் தான் செய்ய வேண்டும்,இல்லா விட்டால் நம்மை இலக்கியவாதி என்று ஒத்துக் கொள்ள மாட்டார்களே என்று !!! உலகம் இப்படியானதே!!!

வற்புறுத்தல்கள் இல்லாத எல்லா எழுத்தும் என் வரையில் வாசிக்கத் தக்கதே.
எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் :
ஆரம்பம் முதலாய் வரிசைப் படுத்தலாம் ..வாண்டு மாமா (அஞ்சாம் கிளாஸ்ல )...தமிழ் வாணன் (சங்கர்லால்) எட்டாங்கிளாஸ்ல) சிவசங்கரி ..அனுராதாரமணன்...( ஒன்பதாம் கிளாஸ்ல இருந்து) ராஜேஷ் குமார்(விவேக் ரூபலா),சுஜாதா(கணேஷ்,வசந்த்),பட்டுக் கோட்டை பிரபாகரின் (பரத் சுசீலா வரிசை கதைகள்) ,சுபா வின் நரேன்..வைஜூ சீரிஸ் ,
அப்புறம் காலேஜ் லீவ்ல தேவன்,கல்கி,சாவி,நா.பார்த்தசாரதி ,பொன்னீலன்,கந்தர்வன்,இப்படிக் கொஞ்சம் ...காலேஜ் இரண்டாம் வருட ஆரம்பத்தில் இருந்து ரமணி சந்திரன் ,காஞ்சனா ஜெயடிலகர்
பி.ஜி படிக்கும்போது எஸ்ரா,நாஞ்சில்நாடன்,ஜெயமோகன்,கி.ராஜநாராயணன்,வண்ணதாசன் .அசோக மித்திரன்,தி.ஜா,
கல்யாணத்திற்குப் பின் உமா மகேஸ்வரி ,கண்மணி குணசேகரன்,வா.மு.கோமு,வேல ராம மூர்த்தி ,ஜெயந்தன் ,சாரு இப்படி எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் பட்டியல் இன்னும் கூட நிறைய இருக்கலாம் .ஆனால் யாருடைய எழுத்தும் எனக்கு ரசனைக்குறைவானதாகத் தோன்றவில்லை.அவரவர் பாணியில் அவரவர் எழுத்து வாசிக்க உகந்ததே.