Wednesday, November 24, 2010

பண்டைய இந்தியா பகுதி -4 (தி லைன் ஃஆப் ப்ரைம் காட்ஸ் (The Line of Prime Gods -Pages from History))


The line of Prime gods : ( Pages from History )  (பண்டைய இந்தியா பகுதி - 4 )

இன்றைக்கு சென்னை மியூசியம் போயிருந்தேன் ,
எனக்கென்னவோ புத்தர் சிலைகள் தான் விஷ்ணு அனந்த சயன சிலைகள் தோன்ற மூலமாக இருந்திருக்க கூடுமோ என்றொரு ஐயம். எந்த மதத்தையும் சார்ந்து பேசும் முயற்சி அல்ல இது, இந்தோ கிரேக்க சிற்ப முறைப்படி வடிவமைக்கப் பட்ட சிற்பங்களில் பெரும்பாலும் காலத்தால் முந்தியவை புத்தர் சிலைகலாகவே இருக்கின்றன. இங்கு மட்டும் அல்ல கி.மு .300 க்குப் பின் அலெக்சாண்டர் பாக்டிரியாவிலிருந்து இந்தியாவுக்கு படையெடுத்து வந்த வழிகள் (வடக்கு ஆப்கன் ,பஞ்சாப் - இந்துஸ்தானம் )எங்கும் காணக் கிடைக்கும் புத்த சிலைகள் ,அப்படி இருக்கலாம் என்ற எண்ணத்தை அளிக்க வல்லவை.


இவை மட்டுமல்ல யானைகள் இருபுறமும் ஆசிர்வதிக்க நடுவில் புத்தரின் தாயார் மாயா தேவி அமர்ந்திருக்கும் சிற்ப வடிவமே பின்னாட்களில் வைணவ கஜலக்ஷ்மி என்றாகி இருக்க கூடும் என யூகிக்க தோன்றுகிறது.


க்ரீக் இந்தோ வகை சிற்பங்களை வெகு எளிதாக அடையாளம் காண முடியும் என மியூசியக் குறிப்புகளில் வாசித்தேன் ,கிரேக்க சிற்பங்கள் உடல் பலத்தை காட்டும் வகையில் இருப்பனவேன்றும்,நமது நாட்டு சிற்பங்கள் முக சௌந்தர்ய பாவங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவை என்றும் கூறப் பட்டிருந்தது,ஒப்பிட்டுப் பார்த்ததில் விளங்கியது.


சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இருந்த முத்திரை மாதிரிகளின் அடிப்படையில் அந்த மக்கள் பசுபதி வழிபாடும்(காலை -சிவன்- நந்தி வழிபாடு) ,விசிறி போன்ற கூந்தல் அலங்காரம் செய்துள்ள பெண் தெய்வம் ஒன்றையும் வணங்கி வந்திருக்க கூடும் என தெரிகிறது.

இது புத்தருக்கு முற்பட்ட காலம் அப்படியானால் புத்தருக்கு முன்பே பல ஆன்மிகத் தலைவர்கள் அன்றைய மக்களை பண்பட்ட நிலைக்கு கொண்டு செல்ல வழிநடத்திக் கொண்டே தான் வந்திருக்கின்றனர் எனக் கொள்ளலாம். மேலும் புத்தரும் கூட தமது கோட்பாடுகளில் எழுதி வைக்கப் படாத முந்தைய தலைவர்களின் அல்லது குருக்களின் கோட்பாடுகளை இணைத்துக் கொண்டிருக்கலாம் எனவும் நினைக்கத் தோன்றுகிறது. மேலும் புத்தரின் கோட்பாடுகளும் கூட புத்தர் முக்தி அடைந்த பின்பே அவரது அந்திமக் காலங்களில் உடனிருந்து சேவை செய்த அவரது சீடர்களில் ஒருவரான ஆனந்தரால் அவருக்குத் தெரிந்த வகையில் பதிவு செய்யப் பட்டது தான் என வரலாறு காட்டுகிறது.

முன்பே கூறியபடி புத்தர் சார்ந்திருந்த சாக்கிய குளத்தில் சாலமர வழிபாடு இருந்தது (தாய் தெய்வ வழிபாடு)என்பதைக் கண்டோம் இல்லையா?
மெசபடோமிய சிற்பங்களில் காணக் கிடைக்காத சிறப்பம்சமாக சிந்து சமவெளி நாகரிக அகழ்வுகளில் கிடைத்த முத்திரை மாதிரிகள் மற்றும் சிற்பங்களில் ...

அப்படியானால் இந்திய கடவுள்கள் வரிசை இப்படித் தான் இருக்கக் கூடும்.

1.தாய் தெய்வ வழிபாடு
2.காளை மனிதன் (பாசுபத -சிவ வழிபாடு)
3.சிவ வழிபாட்டோடு லிங்க யோனி வழிபாடு

சிந்து வெளி காலத்திற்கு பல நூறு ஆண்டுகள் கழித்தே வேத காலம் வருகிறது ,

வேத காலத்தில் ;

இந்திர வழிபாடு

இந்திரன், வருணன்,மித்திரன்(சூரியன்), யக்ஷன், வழிபாடுகள் தோன்றின, தாய் தெய்வ வழிபாட்டை இந்த தெய்வங்களின் வழிபாடுகள் பின்னுக்குத் தள்ளி இருக்கலாம் . ரிக் வேதத்தில் பாடப்படும் முதன்மை தெய்வங்கள் இவை .

கிருஷ்ணன் ரிக் வேத காலத்தல் ஒரு யக்ஷனாகவே அடையாளம் காணப் படுகிறான்.

ரிக் வேத கால ( இந்திர வழிபாடு )வழிபாடுகளில் பெருமளவில் யாகங்கள் நடத்தப் பட்டன,யாக பலிகள் மக்களை பீதியில் ஆழ்த்தும் அளவுக்கு கால்நடைகளும் பிற உயிர்களும் கணக்கின்றி கடத்திச் செல்லப் பட்டு யஞ்ஜங்களில் பலி இடப் பட்டன. பழங்குடி உணவு சேகரிப்பு(வேட்டை மற்றும் ஆநிரை மேய்த்தல் நிலையில் இருந்து பழங்குடி விவசாய (உணவு உற்பத்தி)முறைக்கு பரிணாம வளர்ச்சி பெற்ற ஆதி காலத்து மக்கள் தங்களது செல்வ வளங்கள் எனக் கருதிய கால்நடைகள் யாகங்களுக்காக பலியிடப் படுவதை விரும்பாமல் உயிர் பலியை எதிர்ப்பவர்களாக மாறினார்.
இது இட்டுச் செல்லும் பாதை கிருஷ்ண வழிபாடு எனும் நிலைக்கு.

கிருஷ்ணன் கால்நடைகளின் காவலனாகக் கருதப் படுகிறான்.
ஆநிரைகளை மீட்பதற்காக கிருஷ்ணன் இந்திரனோடு நடத்திய போர்களைப் பற்றி ரிக் வேத பாடல்கள் உள்ளன. இப்படித் தான் மானுட கிருஷ்ணன் அரை தெய்வ நிலைக்கு மாறினான்.

பிற்பாடு பஞ்சாப் பகுதிகளில் அதிப்படி விளைச்சல் மற்றும் வளமைப் பெருக்கத்துக்காக பெருமளவில் இந்திர வழிபாட்டை ஓரம்கட்டி விட்டு அந்த இடத்தை கிருஷ்ணா வழிபாடு ஆக்கிரமித்தது. கிருஷ்ணா விக்ரஹங்களின் மூலங்கள் இந்துஸ்தானத்தின்


இந்த வழியில் போனால் முதலில் சமணம் (உயிர்பலியை எதிர்த்தல்)


அதனையொட்டி (பௌத்தம் )


வரலாற்றுக்கு மிகப் பிந்தைய காலமாகிய தென்னிந்திய பல்லவர்கள் மற்றும் பிற்கால சோழர் கால திருமால் விக்கிரகங்களுக்கு பௌத்த விக்ரங்கங்களில் இருந்து மாதிரிகள் எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கலாம் ,//படித்தவற்றில் இருந்து கிடைத்த யூகமே //

படித்த விசயங்களைக் கொண்டும் திரட்டிய விவரங்களைக் கொண்டும் இப்படித் தான் எண்ண முடிகிறது.

காளியும் கல்மரங்களும் ...


திருவக்கிரை ஊர் எனக்கு முன்பே பரிச்சயமானது தான், பாலகுமாரனின் நாவல் ஒன்றில் இந்த ஸ்தலத்தில் இருக்கும் வக்கிர காளியம்மன் ஆலயத்தை தரிசித்து வந்தால் சேமம் என்றிருந்தது கண்டு 6 வருடங்களுக்கு முன்பு என் மகளின் பிறந்த நாளன்று சென்னையில் இருந்து திருவக்கரைக்கு சென்று வந்தோம்.

காளியைப் பற்றி பேசுவதற்காக இதை எழுதவில்லை , முதலாவதாக இந்த ஊர் காளிக்கும்,சந்திர மௌலீஸ்வரருக்கும் அப்பாற்பட்டு மற்றொரு விசயத்திற்கும் கவனிக்கப் பட வேண்டிய ஊர். இந்த ஊரில் கல்மரங்கள் ஏராளமாகக் காணக்கிடைக்கின்றன என்று சென்னை மியூசியத்தில் வாசித்திருந்தேன்.

கல்மரம் :

நிஜமாகவே மரமாக இருந்து கல்லாக மாறிய மரம் கல்மரம். அதாகப் பட்டது 2 00 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள் முறிந்து மழையால் சாய்ந்து ஆற்றோடு இழுத்துச் செல்லப் பட்டு ஆற்றின் ஆழங்களில் பல அடுக்குகளில் பன்னெடுங்காலமாக மூழ்கி பின் வெளிப்படும் போது கல்லாக மாறி விடுகின்றன. இத்தகைய கல் மரங்கள் விழுப்புரத்தில் உள்ள திருவக்கரை கிராமத்தில் அதிகம் இருக்கின்றன. அங்கிருந்து மாதிரிக்கு ஒரு கல் மரத்தை நம் இந்திய புவியியல் துறையினர் சென்னை மியூசியத்திற்கு அன்பளிப்பாக வழங்கி இருந்க்கின்றனர்.

சென்னை மியூசியம் சென்று வந்தவர்களுக்கு தெரிந்திருக்கும், சிற்பக்காட்சி சாலையை அடுத்து உட்கார்ந்து சாப்பிட வசதியாக சிமென்ட் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும் இடத்தில் நடுவாந்திரமாக இந்தக் கல் மரம் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது .

மரங்களின் வயதைக் கணக்கிட ரேடியோ கார்பன் முறை பயன்படுத்தி மரத்தின் தண்டுப் பகுதியில் உள்ள வளையங்களின் எண்ணிக்கை அடிப்படையில் வயது கணக்கிடப் படும். அப்படியானால் 200 லட்சம் வருடங்களுக்கு முந்தைய மரங்கள் இவை என்பதை எப்படிக் கண்டுபிடித்திருப்பார்கள் ௯எத்தநை வளையங்கள் இருக்குமோ!!! ??? இந்த கல்மரத்தை பார்த்ததில் இருந்து எப்படி மரங்களின் வயதை கண்டுபிடிக்கிறார்கள் என்பதை கற்றுக் கொண்டால் என்ன? என்ற லூசுத்தனமான ஆசையெல்லாம் வந்து போகிறது,
(நல்ல சமையல் கத்துக்கற ஆசையைத் தவிர மற்ற எல்லாம் ஆசைகளும் வருமே உனக்கு ! //தேவ் வாய்ஸ்//)

கோயிலைப் பற்றி :

வக்கிராசுரனைக் கொன்றதால் அங்கிருந்த காளிக்கு வக்கிர காளி என்று பெயர் வந்ததாம் ,இங்குள்ள காளி காதில் குழந்தை ஒன்றை குண்டலமாக அணிந்திருக்கிறாள்.(இதற்கு ஏதாவது கதை விளக்கம் இருக்கலாம்- எனக்குத் தெரியவில்லை) முதன் முறையாகப் பார்க்கும்போது சற்றே அச்சமூட்டும் சிலை இது. இதன் காரணமாக இதை குண்டலி வனம் என்றும் முன்பு அழைப்பார்களாம்.

காளி கோயில் தவிர்த்து மும்முக சந்திரமௌலீஸ்வரர் ஆலயமும் இங்குள்ளது ,திருஞான சம்பந்தரால் பாடப் பட்டதால் பழம்பெருமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க கோயில் இது .இங்குள்ள அம்பிகையின் பெயர் வடிவாம்பிகை

ஆலய முகவரி :

அருள்மிகுசந்திரசேகரர்
வக்ரகாளியம்மன் திருக்கோவில்திருவக்கரைவானூர் வட்டம்விழுப்புரம் மாவட்டம்PIN - 604304

இந்த ஊரைப் பற்றி நான் தெரிந்து கொண்ட செய்தியை பகிர்ந்து கொள்ளத் தோன்றியது ...வாசிப்பவர்கள் காளிக்காகப் போனாலும் சரி கல்மரத்திற்காகப் போனாலும் சரி,இந்த ஊர் பார்க்கப் பட வேண்டிய ஊரே. ஆற்று வெள்ளத்தில் இழுத்து வரப் பட்டு கரை சேர்ந்த லட்சக் கணக்கான வருடங்களுக்கு முந்தைய கல் மரங்களைப் பார்க்கும் ஆர்வம் எனக்கு உண்டு. நாங்கள் அங்கே சென்ற தினத்தில் கல்மரன்களைப் பற்றிய செய்தி அறிந்திராத காரணத்தால் அப்போது வெறுமே கோயிலுக்கு மட்டுமே போய் வந்தோம். இனியொரு முறை செல்லும் எண்ணம் இருக்கிறது. கல்மரங்களுக்காக .அந்த கிராமத்தில் மியூசியம் உண்டா எனத் தெரியவில்லை? கல்மரங்கள் நிறைந்த்திருக்கின்றன திருவக்கரை அருங்காட்சியகத்தில் என்று தான் வாசித்த ஞாபகம்.யாரேனும் போய் வந்தவர்கள் இந்தப் பதிவை வாசித்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்