Tuesday, February 8, 2011

நடுச்சமுத்திரத்துல டுமுக்குனுச்சாம் - ஒரு நாட்டுப்புறத்துக் கதை






ஒரு ஊரில் ஒரு காக்கை தம்பதிகள் இருந்தார்களாம் ,அவர்களுக்கு ஆண் ஒன்றும்பெண் ஒன்றுமாய் இரண்டு காக்கைக் குஞ்சுகளும் உண்டு , நேராநேரத்துக்கு இரைகள் கிடைக்க நல்ல நிறைவான பறவை வாழ்க்கையாம்.காகங்களுக்கும் ஆசைகள் ,பேராசைகள் உண்டு போலும் ,வடக்குத் தெருவில்குடி இருந்த இந்த காகத் தம்பதிகளில் ஆண் காக்கா தெற்குத் தெருவில் தன்வசதி வாய்ப்புக்கு ஏற்ப மற்றொரு பெண் காக்காவை வைப்பாட்டியாகவைத்துக் கொண்டதாம் .


( 'காக்கை குருவி எங்கள் ஜாதி '...என்றெல்லாம் பாரதியார் பாடி வைக்கும்முன்பே கிராமப் புறங்களில் வழக்கிலிருந்த கதையாம் இது! ஆதலால் பாரதியைஇங்கே சம்பந்தப் படுத்தாமல் விலக்கி விடலாம்.



கணவனான ஆண் காக்கா இப்படி தெற்குத் தெருவில் தனிக் குடும்பம் வைத்துக்கொண்டு பராமரிப்பது நாளடைவில் மனைவியான பெண் காக்காவுக்குத் தெரிய வரஅதற்கு வந்த ஆற்றாமையும் ஆத்திரமும் சொல்லி மாளாது .ஆண் காக்காவின்செயல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அதனிடம் இந்த விஷயம் குறித்துசண்டையிடவும் விரும்பாமல் பெண் காக்கா தனக்குள் இந்த விசயத்தைப்போட்டுக் குழப்பிக் கொண்டு நெடு நாட்களாகப் போராடிக் கொண்டிருந்தது .


அக்கம் பக்கம் வேறெந்த காகங்களிடமும் ஆலோசனை கேட்டால் அது தன் குடும்பசமாதானத்திற்கும் நிம்மதிக்கும் தான் இழுக்கு என்றெண்ணியோ என்னவோயாரிடமும் சொல்லாமல் தானாக ஒரு முடிவுக்கு வந்ததாம் .



அந்த முடிவின்படி ஒருநாள் நன்றாக சீவி சிங்காரித்து பூ முடித்து (காக்காபூ வைக்குமா என்றெல்லாம் கேள்வி கேட்க கூடாது இது கதை கதைக்கு காலுண்டா?! ) மதியம் கூட்டுக்கு வந்த ஆண் காக்காவிடம் சிரித்த முகத்துடன் மதியஇரையாக சில பல புழுக்களை உண்ணக் கொடுத்து பேசிக் கொண்டிருந்ததாம்....முடிவில் ...


"நாம் குடும்பத்தோடு கோயில் குலமென்று போய் வந்து பல நாட்கள்ஆகின்றன ,நாமெல்லோரும் சேர்ந்து ஒரு முறை சமுத்திரம் தாண்டியுள்ளசேத்திரங்கள் எதற்காவது போய் வந்தால் சந்தோசமாக இருக்கும் ...போகலாமாமாமா "என்று வெகு சாமர்த்த்யமாகக் கேட்டதாம் .


மனைவியின் சிரித்த முகமும் திருப்தியான இரையுண்ட சந்தோசத்தில் ஆண்காக்காவும் பெரிதாக யோசித்துக் கொண்டிருக்காமல் ;



"அதற்கென்ன போய் விட்டு வந்தால் ஆச்சு...இந்த வாரம் வெள்ளிக் கிழமையேபோகலாம் என்று வாக்கு கொடுத்து விட்டதாம் மனைவியான பெண் காக்காவுக்கு ;


வாக்குக் கொடுத்த கையோடு வைப்பாட்டி வீட்டுக்குப் பறந்த ஆண்காக்கா அங்கிருந்தவளிடமும் "வெள்ளிக் கிழமை "கோயிலுக்குப் போகிறோம்நீயும் கிளம்பத் தயாராக இரு " என்று சொல்லி வைத்ததாம்.



இதை முன்னமே எதிர் பார்த்திருந்த மனைவியான பெண் காக்கா எதேச்சையாகவருவது போல தெற்குத் தெருவில் அந்த வைப்பாட்டிக் காக்காவின் கூட்டின்வழி போனதாம் .அப்படிப் போகையில் வாசலில் இருந்த வைப்பாட்டிக் காகத்தைப்பார்த்து ரொம்பவும் சகோதர வாஞ்சை தவழ ;



"தங்கச்சி நீயும் கோயிலுக்கு வரியாமே ? " என்று போகிற போக்கில்கேட்பதைப் போல கேட்டு வைத்தது.



இந்தப் பக்கம் வைப்பாட்டிக் காக்கா சும்மாஇருந்திருக்கலாம் ...அது அதன் பாட்டில் பெருமைக்கு மாவு இடிப்பதைப் போல ;


"ஆமாக்கா ...நானும் வரேனில்ல ...மாமா தான் என்னையும் வரச் சொல்லி நேத்தேவந்து சொல்லிட்டுப் போயிருக்காங்கல்ல " நானும்தேன் வாரேன் உங்களோடமாமாவோட பிள்ளைகளோட என்றதாம் .



பொசு பொசுவென்று கருகல் நாற்றத்தில் வயிறு புகைந்தாலும் மேலுக்குசிரித்துக் கொண்டு மணவவியான பெண் காக்கா அவளிடம்;



"நீ வாரது சரி...ஆனா கோயிலுக்குப் போகைல இப்படியே வந்திராத ... உன் றெக்கை எல்லாம் உறிச்சுக் கழிச்சுட்டு மஞ்சத் தேச்சு நல்லாக் குளிச்சு,மொழுகி, நெத்தி நிறைய செந்தூரம் வச்சுகிட்டு தான் கோயில் கொலத்துக்குவரணும் " அப்டி வாரதா இருந்தா தான் தாலி பாக்கியம் நிலைக்கும் என்றதாம்.



அடடா...தன் மேல் தான் முதல் மனைவியான மனைவியான இந்த காக்கா அக்காளுக்கு எத்தனை அக்கறை ,எத்தனை விலாவரியாக கோயிலுக்குப் புறப்பட வேண்டியமுறைகளை எடுத்துச் சொல்கிறாள் என்று சந்தோசத்தில் மூழ்கிப் போனவைப்பாட்டிக் காக்கா ;



வெள்ளிக்கிழமை வந்ததும் ;



புருஷன் வருவதற்குள் தன் அலகால் இறக்கைகள் எல்லாவற்றையும் பிய்த்துபோட்டு விட்டு பரக்க மஞ்சள் தேய்த்து குளித்து செந்தூரம் வைத்துக்கொண்டு ஆண் காக்கா வருகைக்காக வழி மேல் விழி வைத்து அதிகாலைக்குளிரில் வெட வெடக்க கூட்டின் வாசலில் காத்துக் கொண்டிருந்ததாம்.



தன் பெண்டாட்டி பிள்ளைகளை



"நீங்க நடந்துகிட்டு இருங்க நான் போய் முக்கியமான ஒருத்தரை கோயிலுக்குகூட்டிகிட்டு வாரேன்."



என்று சொல்லி விட்டு வைப்பாட்டிக் காக்கா இருக்கும் தெற்குத்தெரு கூட்டைநோக்கி பறந்ததாம் .



"அப்பா எங்கே போகிறார் ? "
என்று கேட்ட தன் குஞ்சுகளை சமாதானப் படுத்திவிட்டு


"அவ வீட்டுக்கா போற...போ..போ...இன்னும் எத்தனை நாளைக்கு உன்ஜம்பம் ?! என்று கறுவிக் கொண்ட மனைவியான பெண் காக்கா ;தனக்குள் விஷமத்தனமாக சிரித்துக் கொண்டு தன் குஞ்சுப் பறவைகளோடு நிதானமாக வானில்பறந்து கொண்டிருந்ததாம் .



தெற்குத் தெருவில் வைப்பாட்டிக் காக்காவைக் கண்ட கணவனான ஆண் காக்காஅதிர்ச்சியில் மூர்ச்சை ஆகாத குறை !



"என்னடி இது ? இப்படி ஒரு அவதாரம் போல றெக்கை எல்லாம் உறிச்சிப்போட்டுட்டு நிக்கிற...என்ன கேடு காலம் " என்று சத்தமிட்டதாம்.



"எல்லாம் என் தாலி பாக்கியத்துக்காகத் தான் ,நீங்க பேசிக்கிட்டு நிக்கவேண்டாம் ,உங்க பெண்டாட்டி பிள்ளைக முன்னாடி போயிரப் போறாக ,வாங்கநாமளும் போயி அவுகளைப் பிடிச்சிடலாம்" என்று பறக்கத் துணிந்ததாம் .



றெக்கை முழுக்க தான் உறித்தாயிற்றே ...எங்கிருந்து பறக்க?!


தத்தித் தத்தி கீழே விழுந்து கொண்டிருந்த வைப்பாட்டிக் காக்கா படும்துன்பம் கண்டு அந்த ஆண் காக்கா "நமக்காகத் தானே இவள் இறக்கை எல்லாம்உரித்துப் போட்டுவிட்டு இப்படி கோயிலுக்குக் கிளம்பி வருகிறாள் என்று ஆதூரம் மிக தன்அலகால் வைப்பாட்டிக் காகத்தை கவ்விக் கொண்டு வானில் பறந்ததாம் .



வேகமாகப் பறந்ததில் சமுத்திரத்தின் மேலாகப் பறந்து கொண்டிருந்த தனதுகுடும்பத்தினரை எட்டி விட்டது ஆண் காக்கா அதன் அலகில் இருந்தவைப்பாட்டிக் காக்காவும் தான்.



இவர்கள் வந்த கோலம் கண்டு பொங்கி புழுங்கிய மனைவியான பெண் காக்கா சும்மாஇருக்க வகையின்றி ;



"நானும் எம் பிள்ளைகளும் நடையில ...வைப்பாட்டிக் காக்கா வாயில "
என்றுஅங்கிருந்து புலம்பிக் கொண்டே பறக்க ஆரம்பித்ததாம் நீண்ட சமுத்திரத்துவான வீதி நெடுகிலும் ;



கணவனுக்கோ மனைவியை அடக்கி ஒன்றும் சொல்ல வகையில்லை ,வாயைத் திறக்கத்தான் வழியில்லையே!



இப்போது நிறுத்துவாள் அப்போது நிறுத்துவாள் என்று பொறுத்துக் கொண்டு பறந்துகொண்டிருந்தது.



ஆனால் பெண் காக்கா நிறுத்தக் காணோம் ;



தனது அம்மாக் காகம் புலம்புவதைக் கண்ட குஞ்சுக் காகங்களும் தங்கள் போக்கில் ;



"நாங்களும் எங்கம்மாளும் நடையில...வைப்பாட்டிக் காக்கா வாயில "
என்று நெடுக புலம்ப ஆரம்பிக்க ;



இப்போது வைப்பாட்டிக் காக்காவுக்கு வந்ததே கோபம் ;



பொறுத்துப் பொறுத்து பொறுக்க முடியாமல் ; ஒரு நொடியில் ;



"ஆமா...ஓமா ...அப்படித் தான்னு சொல்லுங்களேன் மாமா "என்றதாம் "



முதலில் அதன் முட்டாள் தனத்திற்கு காது கொடுக்காமல் இருந்த ஆண் காக்காஅதன் கரைச்சல் தொல்லை தாங்காமல் ஒரு நொடியில் ;



"ஆமா ஓமா அப்படித் தான் என்று கரைந்தே விட்டது "



அவ்வளவு தான் நடுச் சமுத்திரத்தில் பறந்து கொண்டிருக்கையில் இப்படிச்சொன்னதால் வைப்பாட்டிக் காக்கா அப்படியே 'தொப்' பென சமுத்திரத் தண்ணீரில்விழுந்து முங்கி போனது .


ஒரு நிமிஷத்தில் தன் வாழ்வில் விடிந்து விட்டதே என்று சந்தோசத்தில்திக்கு முக்காடிய மனைவியான பெண் காக்காவோ ;



"நடுச் சமுத்திரத்தில் டுமுக்குனுச்சாம் ...நானும் எம் பிள்ளைகளும்சுகம் பெத்தோம் "



"நடுச் சமுத்திரத்தில் டுமுக்குனுச்சாம் ...நானும் எம் பிள்ளைகளும் சுகம்பெத்தோம் "



"நடுச் சமுத்திரத்தில் டுமுக்குனுச்சாம் ...நானும் எம் பிள்ளைகளும் சுகம்பெத்தோம் "



என்று பாடிக் கொண்டே வைப்பாட்டிக் காக்கை ஒழிந்த சந்தோசத்தில்சேத்திராடனம் முடித்து கூடு வந்து சேர்ந்ததாம் தன் புருஷன் பிள்ளைகளோடு.



இது ஒரு கிராமியக் கதை.



என் பாட்டி என் சிறு வயதில் எங்களைத் தூங்க வைக்க இந்தக் கதையைஎங்களுக்கு பல நாட்கள் சொல்லி இருக்கிறார்.

முன்பு கீற்று தளத்தில் கி.ரா வின் பக்கங்களில் இதே வாசிக்கக்கிடைத்தது ,இப்போது அங்கே இதைக் காணோம். எனக்குத் தெரிந்த வகையில் அந்தக்கதையை இங்கே பகிர்ந்திருக்கிறேன்.