Friday, September 3, 2010

எஸ்ராவின் தளத்தில் காணக்கிடைத்த மற்றவள் குறும்படம் குறித்த ஒரு பகிர்வு :


http://www.youtube.com/watch?v=_Al94vZlxHs   


எஸ்ரா வின் தளத்தில் "மற்றவள்" என்ற இந்த குறும்படம் பார்க்கக் கிடைத்தது. பள்ளிக்குப் புறப்பட்டு விட்ட தனது எஜமானியின் குழந்தைகளின் யூனிபார்ம் தோற்றம் கண்டு சுய பட்சாதாபத்தில் உறையும்அந்தச் சிறுமியின் ஏக்கம் கலந்த முக பாவனைகள் மிகப் பொருத்தம்,அவளது எஜமானிக்கு அவள் மீது இரக்கமில்லை எல்லா எஜமானிகளைப் போலவே! 


குடும்பச் சுமைகளுக்காக குழந்தைகள் எடுபிடிகளாகவும் வேலைக்காரர்களாகவும் ஆக்கப் படுவதற்கு பதிலாக அங்கீகரிக்கப் பட்ட அனாதை ஆசிரமங்களில் சேர்த்து விடுவது தேவலாம் ,குறைந்த பட்சம் தடையற்ற கல்வி கிடைக்கும் உத்திரவாதம் உண்டு. கிறிஸ்தவ மிசினரிகள் பல இருக்கின்றன.மதம் மாற போதிக்கப் படுகிறார்கள் என்ற குற்றச் சாட்டு இருந்தாலும் இந்த நிலைக்கு அது தேவலை, சுயமரியாதை என்ற ஒன்று குழந்தைகளுக்கும் இருக்க வேண்டும் தானே!

மேலும் தொண்டு நிறுவனங்கள் ,அனாதை ஆசிரமங்கள் குறித்தும் தெளிவான நம்பகத் தன்மை உறுதி செய்யப் பட வேண்டும்,வாணலிக்குத் தப்பி அடுப்பில் குதித்த கதையாக குடும்பக் கஷ்டம் என்று ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்க்கப் படும் குழந்தைகள் நிர்வாகிகள் என்ற போர்வையில் நடமாடும் சில வக்கிர புத்திக்காரர்களின் விபரீத ஆசைகளுக்கு வடிகால்களாகி விடக் கூடாது .

நிராதவரான குழந்தைகள் நலன் பேண அமைப்புகள் பல இருந்தும் கூட சிறுவர் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் எப்போதும் குறைந்த சுவடே இல்லை .

முதல் காரணம் பெரியவர்களின் அசட்டை என்றே சொல்ல வேண்டும். குழந்தைகளின் மன நலனுக்கு எதிரான இத்தனை செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்த்தும் பத்திரிகைகளில் படித்தும் என்ன பலன்?மீண்டும் அந்த தவறுகளும் குற்றங்களும் குறைந்த பாடில்லை,ஒவ்வொரு தனி மனிதனும் இவ்விசயத்தில் குறைந்த பட்ச மனிதத் தன்மையுடன் பிற மனிதர்க்கு இரங்கும் சுபாவங்களை வளர்த்துக் கொண்டு விழிப்புணர்வோடு செயல்பட்டால் அன்றி குழந்தைகள் நலன் பற்றிப் பேசுவதில் அர்த்தமே இல்லை.

இதை நிகர்த்த மற்றொரு குறும்படம் " குட்டி "

அதற்கான youtube சுட்டி கிடைக்குமென்று தேடித் பார்த்தேன் ,கிடைக்கவில்லை. சன் தொலைக்காட்சியில் முன்பு ஏதோ ஒரு சனிக்கிழமை அந்தப் படம் திரையிட்டார்கள்.நல்ல படம் ,பார்க்க வாய்த்தவர்கள் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.