Sunday, November 28, 2010

ஹம்பியின் நறுமணம்...(சரித்திரச் சிறுகதை)

ஹம்பி ( வரலாற்றுப் புனைவு )

கதையின் கதை :-

ஹம்பி என்று அழைக்கப்படும் விஜயநகரத்தை கி.பி 1357 இல் தொடங்கி கி.பி 1485 வரை சங்காமா வம்சத்து மன்னர்கள் ஆண்டனர் .இவர்களில் கி.பி 1422 முதல் 1426 வரை ஆண்ட இரண்டாம் தேவராயன் காலத்தில் விருபாசர் கோயிலுக்கென ஒரு தேர்வீதி அமைக்கப்பட்டது .அவனே அந்தத் தேர்வீதியில் முதன் முதலாக தேர்த்திருவிழாவையும் தொடங்கி வைத்தான் .

அப்போது நிக்கோலா கேன்டி என்ற ஐரோப்பியப் பயணி ஹம்பியின் திருவிழாவுக்கு முதன் முதலாக வந்து கலந்து கொண்டார் என்பது வரலாறு .

அதே சமயம் கி.பி 1485 இல் சங்காமா வம்சத்தின் மூன்றாம் விருபாசனை அவனது கீழிருந்த சாளுவ நரசிம்மன் எனும் சிற்றரசன் பதவி இறக்கம் செய்தான் , பின் ஹம்பி சாளுவர்களின் வசமானது ...ஆக தேர்த்திருவிழாவையும் சங்காமர் ..சாளுவர்களுக்கிடையிலான பகைமையையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கற்ப்பனைக் கதையே இது ...

ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் கி.பி 15 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட அந்தத் தேர்த் திருவிழா இன்றும் கூட ஹம்பியில் மார்ச் ...ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது என்பது தான் .

இடம் - ஹம்பி அல்லது விஜயநகரம்

வருடம் -கி.பி. ௧௪௨௩

மாதம் - மார்ச்

நேரம் -அந்தி மாலைப் பொழுது

நிகோலாவுக்கு நகரெங்கும் ஒருவித நறுமணம் நிறைந்த கோலாகலம் நிரம்பி வழிவதைப் போல பிரமை ஏற்ப்பட்டது ,கூட நடந்து வந்து கொண்டிருந்த நண்பன் ஹரிஹரனிடம் மெல்லத் திரும்பினான் .

"நண்பா இதென்ன வாசனை ? என் மனம் இங்கு வந்த நாள் முதல் இதில் மிகவும் லயித்து போகிறது, நீ மட்டும் உடனில்லா விட்டால் நான் இதன் ஏகாந்தத்தில் மயங்கிப் போய் இங்கேயே இரவு முழுவதும் நின்றாலும் ஆச்சர்யப்படுவதர்க்கில்லை ! இத்தனை சுகந்தமாய் இருக்கிறதே இதென்ன ஹரிஹரா ?

நிகோலாவின் ஆச்சர்யத்தைக் கண்டு மெல்ல நகைத்தஹரிஹரன் ,வேடிக்கையாக நண்பனின் முதுகில் ஓங்கிக்குத்தினான் ;

"நிகோலா நீ ஐரோப்பாவிலிருந்து யாத்ரிகனாக இங்கே வந்தாலும் வந்தாய் ; எங்கள் ஹம்பியில் வான் மழை பொழிகிறதோ இல்லையோ உன்னிடமிருந்து ஒரே கேள்வி மழை பொழிந்து கொண்டே தான் இருக்கிறது போ என்றான் .

ஹரிஹரன் கி.பி 1422 லிருந்து 26வரை ஹம்பியை ஆண்டு வந்த சங்காமா வம்சத்து மன்னன் இரண்டாம் தேவராயானின் சேனாதிபதி அப்பண்ணாவின் கடை இளவல் ,

நாளந்தா பல்கலைக்கழகத்தில் அரசியல் பாடம் பயிலபோன நேரத்தில் நிகோலா எனும் வெள்ளை நண்பன் கிடைத்தான் .நிகோலா வேற்று தேசத்தவன் ஆனாலும் பாரதத்தின் தென்பகுதியில் சில காலம் தங்கி அங்குள்ள மக்களுடன் அளவளாவி அவர்களது வாழ்வுமுறைகளை தெரிந்து கொள்வதில் மிக்க ஆவலுடநிருந்தான் .

அந்த ஆவலே அவனை ஹரிஹரனின் நண்பனாக்கி இன்று ஹம்பிக்கும் அழைத்து வந்து அதன் அழகான தேர்வீதியில் லயித்துப் போய் நடக்க வைத்திருக்கிறது .நகரில் தென்படும் சிறு சிறு விஷயங்களைக் கூட கண்டு அதிசயப்பட்டு கேள்வி மேல் கேள்வியை துளைத்தெடுக்கும் நிகோலாவை புன்னகையுடன் பார்த்து விட்டு நடையைத் தொடர்ந்தான் ஹரிஹரன் ,

"என்ன நண்பா , என் கேள்விக்கு நீ இன்னும் பதில் அளிக்கவேயில்லையே ; சொல் ஹரிஹரா ...இதென்ன மணம் ...மனதைக் கிறக்கும் நறுமணம் ? எங்கிருந்து வருகிறது ? அதிலும் ஒவ்வொரு அந்தி மாலையிலும் என்னை ஏதோ செய்து அடிமையாக்கும் இந்த சுகந்தம் எதற்காகவேன்றேனும் சொல்லி விடேன் "

நிகோலா விழி மூடி நாசி நிரம்ப காற்றை உள்ளிழுத்து அனுபவித்துச் சொன்னான் .

சற்றே விஷமம் கலந்த குறும்போடு நிகோலாவை ஏறிட்டு நோக்கிய ஹரிஹரன் ,அதே குறும்பான நகைப்புடன்

"சரி நான் ஒன்று கேட்கிறேன் , பட்டென்று பதில் சொல் பார்போம் ,இந்த நறுமணத்தை நுகர்ந்தவுடன் உனக்கு என்னென்ன ஞாபகங்கள் வந்தனவோ உண்மை சொல் நிகோலா "
என்று கண்களைச் சிமிட்டினான் .

இன்னும்...இன்னும் ...இன்னும் நன்றாக அந்தப் புகை போன்ற வாசம் நிறைந்த காற்றை மூக்கால் முடிந்தவரை நுரையீரல் முழுக்க நிரப்பி சுகானுபவமாய் கண்களை மூடியவாறு மெய் மறந்தவன் போல நிகோலா மென்குரலில் ரகசியம் போல ;

"சொல்லட்டுமா ஹரிஹரா ...

வேறு என்ன ஞாபகம் ஹரிஹரா அங்கே கண்ணுக்கு எட்டாத தொலைவில் லண்டனில் எனக்காக ஒவ்வொரு விடியலிலும் எங்களது மூன்று குழந்தைகளுடனும் ...இன்னும் சற்றேனும் குறையாத காதலுடனும் காத்திருக்கும் எனது இனிய மனைவி மார்கரெட்டின் நினைவு தான் சட்டென்று மனதை இறுக்குகிறது ... பின் இதமாய் தளர்ந்து பறக்கிறது ...! இது சுகமா ? சோகமா ? பிடிபடவில்லை ஆனாலும் ஏதோ ஒரு இனம் புரியா சந்தோசம் உள்ளுக்குள் ததும்பி வழிந்து என்னை மூழ்கடிப்பதென்னவோ முற்றிலும் நிஜம் ."

எங்கேயோ பார்வை நிலைக்க நிகோலா லண்டனுக்கே போய் விட்டான் தன் நினைவுகளின் பின்னே ...

"அதே தான் நிகோலா ;கடல் கடந்தும் இந்த நறுமணம் உன் மனைவியை உனக்கு ஞாபகப்படுத்துகிறதே , அப்படித் தான் எம் நாட்டு வாலிபர்களுக்கு தம் மனைவிகளின் காதல் நிறைந்த காத்திருப்புகளை இந்த மனோகரமான சுகந்தம் மீண்டும் ...மீண்டும் மீள முடியாமல் நினைவுபடுத்தி ...

"மடையர்களே போதும் உங்கள் பொருள் தேடல் ; வாருங்கள் உங்கள் இல்லாளைத் தேடி " இந்நேரம் உங்கள் மனைவிமார்கள் உங்கள் மனைகளிலெல்லாம் அரிசியும் நெல்லும் பரத்தி அகல் விளக்குகளை ஏற்றி வைத்து இல்லுறை தெய்வங்களை வணங்கி விட்டு உங்கள் வருகையை எதிர்கொண்டு உள்ளுக்கும் வாசலுக்கும் நிலையின்றி கண் பதித்துக் காத்திருப்பார் ;

அன்னம் ...நாரை ...புறக்களால் தான் பறந்து வந்து தூது சொல்ல முடியுமா என்ன?நான் கூட பறந்து வருவேன் தூது செல்ல " என்று இந்த பொல்லாத நறுமணம் அவர்களை பரிகசித்து தழுவி தாண்டி செல்லும் ,மொத்தத்தில் இங்கு மாலைப் பொழுதுகளில் இனிமை கூட்ட "நறுமண விடு தூது " என்று கூட நீ எண்ணிக் கொள்ளலாம் நிகோலா ... "

இப்படிச் சொல்லி விட்டு ஹரிஹரன் தனக்குள் நகைத்துக் கொண்டான் .

நிகோலா தான் இப்போது லண்டனுக்குப் போய்விட்டானே ;

"ஓ மை டியர் மார்கரெட் ...! இன்னும் ... இன்னும் ...எத்தனை ... எத்தனை நாட்களோ ; இல்லையில்லை மாதங்களோ என் அன்பே ! "
மனைவியைப் பற்றிய தாபத்தால் நீண்ட நெடிய ஏக்கப் பெருமூச்சு விட்ட நண்பனை ஆதரவாய் தோளோடு அணைத்து;

"ஆயிற்று நிகோலா ; இதோ நீ ஆவலோடு எதிர்பார்த்த எங்கள் ஹம்பியின் விருபாசா ஆலயத் தேர்த்திருவிழா இன்னும் இரு தினங்களில் துவங்குகிறது ,பிறகென்ன அது முடிந்ததும் நீ உன் பயணத்தை முடித்துக் கொண்டு ஐரோப்பா சென்று விடப் போகிறாய் ,

அதுவரை இதோ "இந்த நறுமணம் உன்னோடு வாழட்டுமே நண்பா " என்றான் .

நண்பனின் ஆறுதல் வார்த்தைகள் நிகோலாவை மீண்டும் ஹம்பிக்கு அழைத்து வரவே சிலிர்ப்புடன் தலையை உலுக்கி கொண்டு கண்கள் விரிய சொன்னான் .

"ஹரிஹரா நான் எனது தேசம் செல்லும் போது மறவாமல் இந்த நறுமணத்தையும் என்னுடன் அழைத்துச் செல்வேன் .அதை எனக்காக நீ பரிசாகத் தருவாயா என் அருமை நண்பனே ! "என்றான் .

அவனது அளவற்ற ஆர்வம் கண்டு கேலி இழையோட உரக்கச் சிரித்த ஹரிஹரன்.

"நிச்சயமாக நிகோலா ...ஆனால் முழுதாக நறுமணத்தைப் பரிசளிக்க யாராலும் முடியாது அப்பனே ! வேண்டுமானால் அந்த வாசனையை எழுப்பும் வேர்கள் , பட்டைகள் , (அகில் ,சந்தனக் கட்டைகள் ,கற்பூர மரவில்லைகள் , தைல மரப்பட்டைகள் ) இவற்றை எல்லாம் நான் உனக்கு எனது அன்புப் பரிசாகத் தருகிறேன் , உன் ஊரை அடைந்ததும் அதை நெருப்பிலிட்டு எரித்தால் நீ மாய்ந்து மாய்ந்து ரசிக்கும் நறுமணம் உன்னோடு உன் வீட்டையும் நிறைத்திடலாம் ;

"ஓ நன்றி ஹரிஹரா ...அப்படியே செய் " என நிகோலா முடிக்கவும் ஹரிஹரனின் மாளிகை வரவும் சரியாக இருந்தது .
இவர்கள் மாளிகையை அடைந்த நேரம் சேனாதிபதி அப்பண்ணா மனையிலிருந்தார்,

"வா நிகோலா ;எப்படியிருக்கிறது எங்கள் ஹம்பி ? அயல் தேசத்திலிருந்து இங்கே வந்திருக்கும் நீ ஹம்பியின் விருந்தினன் ;உன்னை உபசரிப்பதும் உன் தேசத்தைக் கௌரவிப்பதும் வேறு வேறல்ல ...உனக்கான சௌகர்யங்களில் குறைவேதுமில்லையே இளைஞனே ... எதுவானாலும் சொல் நிகோலா "
என்றபடி தம் கனமான பார்வையை பார்வையை அவ்விரு இளைஞர்களிடம் படர விட்டார் .

"மிக்க நன்றி மதிப்பிற்குரிய சேனாதிபதி அவர்களே;ஹரிஹரன் இருக்கும் போது எனக்கென்ன குறை இருந்து விடும் ? அதோடு நீங்கள் மேன்மை வாய்ந்த பதவியில் இருப்பவர் உங்களது இந்த அன்பான விசரிப்பே போதும் , எனக்கு இங்கே ஒரு சௌகர்யக் குறைவும் இல்லை ,என் மனம் மகிழும் வண்ணமே எல்லாம் நடக்கிறது ."

நிகோலாவின் பதிலால் திருப்தி அடைந்த அப்பண்ணா ;

"நல்லது நிகோலா , சரி உணவருந்திவிட்டு விரைவாகவே உறங்கச் செல்லுங்கள் ,அடுத்து வரும் பத்து தினங்களும் நமது மன்னர் இரண்டாம் தேவராயர் கோலாகலமாய் நடத்தும் விருபாசா ஆலயத் திருவிழவால் குதூகலமும் கொண்டாட்டமுமாய் ஹம்பியே திணறிப் போய் அமளிப் படும் , இளைஞர்களான நீங்களும் அதில் ஆழ்ந்து விடுவீர்கள் ; அதனால் இப்போதே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் "

சரி தானே என்றார் .

நல்ல சுவையான இரவு உணவு முடிந்ததும் திறந்திருந்த சாளரங்களின் வழியே உட்புகுந்த மென்காற்றால் கண்களை சுழற்றிக் கொண்டு தூக்கம் வர சயனஅறைகள் பேச்சு மூச்சின்றி நிசப்தத்தில் ஆழ்ந்தன.

மறுநாள் எப்போதும் போல் கழிந்தது ,

அதற்கடுத்த நாள் தேர்த் திருவிழா கனஜோராய் ஆரம்பமானது .

சாதாரண நாட்களில் நிகோலாவின் கருத்தில் அவ்வளவாகப் பதியாத தேர்வீதியின் பிரமாண்டம் அன்று அவனை வெகுவாக வியப்பில் ஆழ்த்தியது

ஒற்றையாய் அகலமான நீண்ட பெரிய நேர்கோடாக அமைந்த தேர்வீதி கிட்டத் தட்ட ஒரு கிலோமீட்ட்ர் நீளமும் 50௦அடி அகலமும் கொண்டதாகப் பறந்து விரிந்திருந்தது . விருபாசா ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் ஆரம்பிக்கும் வீதி மதங்கா மலையின் வடமேற்கு அடிவாரம் வரை நீண்டு கொண்டே செல்வதைக் கண்டு நிகோலா பெரிதும் ஆச்சர்யப்பட்டுப் போனான் .

உலகில் தான் கண்ட எல்லா சாம்ராஜ்யங்களிலும் கூட இப்படி ஒரு வெகு பிரமாண்டமான தேர்வீதியைக் கண்டதில்லையோ ! என்று அதிசயித்துகொண்டு மீண்டும் அங்கேயே பார்வையை சுழல விட்டான் .

தேர்வீதியின் இருபுறங்களிலும் அழகழகான மாடங்களுடன் கூடிய இரட்டைத் தள வீடுகளும் ; திருவிழாவுக்கென முளைத்த சிறப்பு அங்காடிகளும் , விழாவைக் காண வருவோருக்கென நிறைய சத்திரங்களுமாய் நிரம்பி அந்தத் தேர்வீதியே ஜெகஜோதியாய் ஜொலித்து ஹம்பிக்கு கூடுதல் அழகூட்டிக் கொண்டிருந்தது .

இன்று நிகோலா தனியாகத்தான் ஊர் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான் . கூடவே புறப்பட்ட ஹரிஹரனுக்கு;

" வெகு அவசரம்... உடனே வா " என அப்பண்ணாவிடம் இருந்து அவரது பணியாளன் ஒருவன் அழைப்பு கொண்டுவர அவன் அங்கே போக வேண்டியதாகி விட்டது.

என்ன தான் படைத்தளபதியின் தம்பியானாலும் ஹரிஹரன் படிப்படியான முன்னேற்றத்தையே விரும்பி ஒரு சாதாரண ஒற்றர் படை வீரனாகவே "சங்காமா " அரசில் பணியில் இருந்தான் . வெகு விரைவாகவே அரசர் இரண்டாம் தேவராயரின் அன்பையும், நன்மதிப்பையும் கூட சம்பாதித்து விட்டான் .

'நண்பன் நல்ல திறமைசாலி தான் ' என்று எண்ணமிட்டவாறு நடந்து கொண்டிருந்த நிகோலாவை ;

அந்தக் குரல் பிடித்து இழுத்து நிறுத்தியது .

"ஐயோ ...காப்பாற்றுங்களேன் ...யாராவது வந்து உதவுங்களேன் ...யாரவது வாருங்களேன் ... யாருமே இல்லையா என்னைக் காப்பாற்ற !!! "

ஒரு இளம்பெண்ணின் அவலக்குரல் அங்கிருந்த ஆடைகளுக்கான அங்காடிப் பகுதியில் இருந்து வலிந்து வெளியேறி வீதியில் போவோர் வருவோரை கட்டி இழுத்து நிறுத்தியது .

நறுமணம் தொடரும்...

Saturday, November 27, 2010

அயோத்தி தீர்ப்பு சர்ச்சைகளும் சாமான்யர்களின் சில சந்தேகங்களும் :



அயோத்தி தீர்ப்பு மூன்று தரப்பினருக்கும் சர்ச்சைக்குரிய 2 1 /2 ஏக்கர் நிலத்தைப் பங்கிட்டுக் கொடுத்துள்ளது ,இந்த தீர்ப்பு நேர்மையான தீர்ப்பில்லை என பலரும் விமர்சிக்கிறார்கள். பத்தரிகைகளில் வாசிக்கிறோம். எனக்கொரு சந்தேகம்

மொத்தமுள்ள நிலமும் பாபர் மசூதி இருந்த காரணத்தால் முஸ்லீம்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வந்திருந்தால் அப்போதும் அது நேர்மையான தீர்ப்பென்று யாரும் ஒத்துக் கொண்டிருக்கப் போவதில்லை.
அல்லது இது பாபர் மசூதிக்கும் முன்பே ராமர் கோயில் இருந்த இடம் ,முஸ்லீம்கள் ஆக்ரமித்த இந்துப் பகுதி இது எனக்கூறி இந்துக்களுக்கே மொத்தமுள்ள நிலத்தையும் சொந்தம் என தீர்ப்பு வழங்கி இருந்தால் அதையும் நேர்மையான தீர்ப்பென்று யாரும் ஒப்புக் கொண்டிருக்கப் போவதில்லை.


மூன்று தரப்பையும் சாந்தப் படுத்தலாம் என்று நிலத்தை மூன்றாகப் பிரித்து தீர்ப்பு வழங்கினால் அதுவும் நேர்மையான தீர்ப்பில்லை .
அந்த நிலம் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் புனித பூமி என்ற புனித பிம்பத்தை அலட்சியப் படுத்தி அரசாங்கமே அந்த நிலத்தை கையகப்படுத்திக் கொண்டு தன் பொறுப்பில் அரசு பொது சொத்தாக அறிவித்து தீர்ப்பளித்தால் என்ன நிகழும்?


"அயோத்தி மியூசியம் " என்று தகர போர்ட் மாட்டி அந்த நிலத்தை புராதன அடையாளங்களில் ஒன்றாய் அறிவித்து யாருக்கும் சொந்தமில்லை என்று ஆக்கி விட்டால் அப்போது இந்த தீர்ப்பைக் குறித்து என்ன பேசிக் கொள்வார்கள் எல்லோரும்!!!

சரி அப்படியானால் இந்த வழக்கில் மூன்று தரப்பினரையும் மனமொத்து ஏற்றுக் கொள்ள வைக்கும் படி நேர்மையான தீர்ப்பை எப்படி வழங்கலாம் என்று யாராவது இதுவரை பரிந்துரைத்திருக்கிரார்களா?அப்படி ஒரு பரிபூரணமான தீர்ப்பை யாராவது வைத்துக் கொண்டு அதை கொண்டு சேர்க்க ஆளின்றி தவிக்கிறார்களா?


இந்த வழக்கில் இன்னும் எந்த விதமான தீர்ப்பை எதிர்பார்க்கிறார்கள் ?
ராமாயணம் கற்பனை ஆனால் அயோத்தி கற்பனை அல்ல ...வரலாறும் கற்பனைக் கதை அல்ல, ராமன் கடவுள் அல்ல ,ஆனால் ராமன் என்ற இளவரசன் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. அசோகரை ஒப்புக் கொண்டால் ராமனையும் கொஞ்சம் கன்சிடர் செய்தாக வேண்டும் . எழுதி வைக்கப் படாத வரலாறு பல கற்பனைகளைத் திறந்து விடுகிறது.


இந்து மதத்தின் வேதங்கள்,உபநிசத்துகள்,வெறும் கற்பனைகள் மட்டுமாக இருக்க முடியாது,யாகங்கள்,பலிகள்,வர்ணாசிரம முறைகள்,கடவுள் கொள்கைகள்,வழிபாட்டு முறைகள். இதையெல்லாம் புறம் தள்ளி தெளிவான கண்ணோட்டத்தில் வரலாற்றை விளக்கும் நூல்கள் இருக்கக் கூடும்.
வரலாற்று நூல்கள் ராமர் பிறந்த இடம் அயோத்தி என்றே உறுதி செய்திருக்கின்றன. ராமனை கடவுளாக எண்ணி அல்ல. பூர்வ பழங்குடி தலைவனின் மகனாக ராமன் இருந்திருக்கலாம். ராமன் இருந்த பொது அதே காலத்தில் எழுதப் பட்டதல்ல ராமாயணம், மகாபாரதமும் நிகழ்ந்த அதே காலத்தல் எழுதப் பட்டதல்ல. மனிதன் நாகரிக வளர்ச்சி அடையும் தோறும் சிறிது சிறிதாக பல பிற் சேர்க்கைகளுடன் இந்த இரண்டு காவியங்களும் படைக்கப் பட்டிருக்கலாம்.

அசோகர் மரம் நட்டார்,குளம் வெட்டினார், கலிங்கப் போருக்குப் பின் புத்த மதத்தில் ஈடுபாடு கொண்டு இந்தியாவில் சாந்தி நிலவ நிறைய கட்டளைகள் பிறப்பித்தார் என்று தான் நம் பள்ளிகால வரலாற்றுப் பாடம் சொல்கிறது. அசோகர் ஒரு கொடுங்கோல் மன்னராகவும் இருந்திருக்கிறார் என்றால் அதை உடனே மறுக்க ஒரு கூட்டம் இருக்கும்.

இப்படித்தான் நடந்த நிஜ சம்பவங்களில் எவை தமக்கு சாதகமாக இருக்க கூடுமோ அவற்றை மட்டுமே மிகைப்படுத்தி எழுதி இருக்கிறார்கள் அன்றைய வரலாற்று ஆசிரியர்கள். ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் புறம் தள்ளி விட்டு ராமன் கடவுள் என்ற எண்ணத்தையும் புறம் தள்ளி விட்டு வெறுமே பண்டைய இந்திய வரலாற்றை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டால் .


இந்தியாவில் பலம் பொருந்திய பேரரசு நிலையில் ஆட்சி செலுத்திய மௌரியர்களுக்கு முன்பு மகதர்களே சொல்லிக் கொள்ளும் படியான அரசாட்சியை வழங்கி இருக்கிறார்கள். மகதர்களுக்கு இணையான அன்றைய மற்றொரு அரசு கோசலம் .

மகதர்களும் கோசலர்களும் மட்டுமே அரசுகள் என்றிருந்த நிலையில் கோசலம் மகதத்தைக் காட்டிலும் செல்வாக்குடன் இருந்ததற்கு சான்றுகள் உள்ளன பண்டைய சரித்திரத்தில்.

நினைவல் கொள்ளுங்கள் ;

மௌரியர்களுக்கு முன்பே இந்தியாவில் மனித பெருக்கம் சில லட்சங்களில் மட்டுமே இருந்திருக்க வாய்ப்பிருந்த அந்த நாட்களில் வடக்கில் இருந்த இரண்டே ராஜ்யங்கள் மகதமும் கோசலமும் மட்டுமே. இதற்கான சான்று ;

//Stone age To Modern age ...( Population -A Look )

இங்கிலாந்திலும் வேல்ஸிலும் பழைய கற்காலத்தில் சுமார் 250 மனிதர்கள் தான் இருந்தனர் ,அவர்களும் 10 சிறு சிறு கூட்டங்களாகப் பிரிந்திருந்தனர் என புதை பொருள் ஆராய்ச்சியாளர் கிரஹாம் க்ளெர்க் கூறுகிறார்.

இங்கிலாந்து ,ஸ்காட்லாந்து ,அயர்லாந்து ஆகிய பகுதிகளில் இடைக்கற்காலத்தில் மனித சமூகத்தில் 4500 நபர்களும் ;

புதிய கற்காலத்தில் 20,000 நபர்களுமே வாழ்ந்திருக்க சாத்தியமிருப்பதாக மேற்படி தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன.

வரலாற்றுக்கு முந்தைய கற்காலங்களில் வாழ்ந்த பூர்வகுடியினர் வேட்டைத்தொழில் செய்தே வாழ்ந்து வந்தனர்.அந்த மனிதர்களுக்கு உணவை சேகரிக்க மட்டுமே தெரிந்திருந்தது.

உணவு உற்பத்தி பற்றி அம்மக்கள் அறிய நேர்ந்த பல ஆயிரம் ஆண்டுகளின் பின் கி.மு 2000 ஆண்டுக் காலத்தில் புதிய கற்காலத்தில் இருந்த மனிதர்களின் எண்ணிக்கையைப் போல இரு மடங்கு எண்ணிக்கை கொண்ட மனிதர்கள் மட்டுமே வாழ்ந்திருக்க சாத்தியம் உண்டு.

இதற்கு சம காலத்தில் இந்தியாவிலும் இதைப் போல ஒரு மதிப்பீடு சாத்தியமில்லை ,இந்திய துணைக் கண்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் கற்காலத்தில் பத்து சதுர மைல்களுக்கு ஒருவருக்கு மேல் இருந்திருந்தால் அதுவே மிகவும் வியப்புள்ளது.

ஆதார நூல்கள் :

பண்டைய இந்தியா -D .D .KOSAMBI
மித் அண்ட் ரியாலிட்டி -D .D .KOSAMBI
பதினோராம் வகுப்பு -வரலாறு புத்தகம்
THE HISTORY OF ARYAN RULE IN INDIA - E .B .HAWELL //


மற்றவை எல்லாம் சிந்திச் சிதறிக் கிடந்த பழங்குடி வம்சங்கள் .பழங்குடி வம்சங்களில் இருந்து வந்தவையே இவ்விரு ராஜயங்களும்,

கோசலத்தின் தலைநகரமாக அயோத்தி இருந்திருக்கிறது ,அன்றைய காலத்தில் மன்னருக்கு வயது வந்த மகன்கள் இருப்பின் அதிகாரப் போட்டியில் இளவரசர்களே தந்தையை கொள்ளும் அபாயம் இருந்ததால் சில மன்னர்கள் வயது வந்த மகன்களை நாடு கடத்தும் தண்டனை வழங்கி நாட்டை விட்டு அனுப்பி இருக்கிறார்கள்.

இத்தகு பல உதாரணங்கள்;

மகதத்தின் இளவரசன் அஜாத சத்ரு இப்படி நாடு கடத்தப் பட்டவனே

கலிங்க இளவரசன் விஜயன் நாடுகடத்தப் பட்டு இலங்கைத் தீவில் வந்திறங்கிய கதை மகாயானத்தில் உண்டு .

இப்படித் தான் ராமன் நாடு கடத்தப் படும் தண்டனை அடைந்த இளவரசனாக தென்னிந்தியாவுக்கு வந்திருக்க கூடும் ,

சீதையைப் பற்றி சரித்திரத்தில் சான்றுகள் காணோம்.

ஆனால் ராமன் வடக்கில் (கோசலத்தில்)இருந்து தக்காணம் கடந்து கோதாவரி நதி தாண்டி தென்னிந்தியக் காடுகளை கடந்ததற்கு சான்றுகளாகக் காட்டப் படுபவை உத்திரா பத வணிகப் பாதைகள். ராமன் அயோத்தியில் இருந்து தென்னிந்தியாவுக்கு வந்த பாதையே பிற்பாடு மிகப் பயனுள்ள உத்திரா பத வர்த்தகப் பாதைகலாயின என வரலாற்று ஆசிரியர்கள் உறுதிப் படுத்துகின்றனர்.

ராமர் கோயிலைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை ஆனால் ராமர் பிறந்த இடம் அயோத்தியின் அந்த சர்ச்சைக்குரிய நிலமாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்பது ஏற்றுக் கொள்ளத் தக்க வாதமே.


மகதத்தில் பிம்பிசாரரை அறிவோம் ,கோசலத்தில் பசேனாதி என்றொரு மன்னர் இருந்து ஆண்டிருக்கிறார். மகத கோசல போர்களில் கோசலத்தை பின்னுக்குத் தள்ளி விட்டு மகதம் நிலைபெற்றது. மகதர்களுக்குப் பின்பு மௌரியர்கள் வந்தனர்.


பெரும்பாலான நமது வரலாற்றுப் பாடங்கள் மௌரியர்களில் இருந்து தான் விரிவாகத் தொடங்குகிறது. புறக்கணிக்கப் பட்ட அதற்கு முந்தைய காலங்களை தூசி தட்டி கொஞ்சம் சேர்க்கலாம். அப்படிச் சேர்த்தால் இந்துமத கடவுள் நம்பிக்கை எனும் அடிப்படையே ஆட்டம் காணும் வாய்ப்பிருக்க கூடும் என்பதால் அந்த முயற்சி எதையும் யாரும் செய்யவில்லையோ என்னவோ !

நாகபட்டினத்து புத்த விகாரத்தை இடித்து சூரையாடி அதை வைத்தே ஸ்ரீ ரங்கம் கோயில் கட்டப் பட்டது என்று வினவில் வாசித்தேன் , நாகபட்டினத்தில் மட்டுமல்ல இந்தியாவில் பல இடங்களில் செல்வாக்கோடு இருந்த பல கோயில்களும் பௌத்த ஸ்தூபங்கள்,மடாலயங்களும் இடித்து நிர்மூலப் படுத்தப் பட்டு அங்கிருந்து கிடைத்த அறிய பொருட்களைக் கொண்டே தாங்கள் சார்ந்திருக்கும் அல்லது ஆதரவளிக்கும் மதங்களின் கடவுளர்களுக்கு இந்திய மன்னர்கள் கோயில்கள் கட்டினர். சோழர்கள்,பல்லவர்கள்,விஜய நகர மன்னர்கள்,முகலாயர்கள், என்று விளக்கில்லை இந்தப் புராதன வழக்கத்திற்கு.

வரலாற்றில் ஜெயித்தவர் ...தோற்றவர் என்றே பேதம் பிரித்துப் பார்க்க முடிகிறது,ஆனால் இயல்பான குணநலன்கள் எந்த மன்னர்களுக்கும் சாம்ராஜ்யங்களுக்கும் மாற்றில்லை, ஜெயித்தவர்கள் சூறையாடினர் தோற்றவர்களின் செல்வங்களை,(இந்த செல்வங்கள் என்பதன் கீழ் பெண்கள்,அஃறிணை உயிர்கள்,பொருட்கள்,அரண்மனைகள்,கோயில்கள் எல்லாமே அடங்குகின்றன)

அவர்கள் அன்று இடித்தார்கள் நாங்கள் இன்று இடிக்கிறோம் இந்த நிலை எப்போதும் மாறுவதில்லை.

இதில் எங்கே நிற்கிறது மனித உரிமைகளும் மனித நீதிகளும்?!!!

Wednesday, November 24, 2010

பண்டைய இந்தியா பகுதி -4 (தி லைன் ஃஆப் ப்ரைம் காட்ஸ் (The Line of Prime Gods -Pages from History))


The line of Prime gods : ( Pages from History )  (பண்டைய இந்தியா பகுதி - 4 )

இன்றைக்கு சென்னை மியூசியம் போயிருந்தேன் ,
எனக்கென்னவோ புத்தர் சிலைகள் தான் விஷ்ணு அனந்த சயன சிலைகள் தோன்ற மூலமாக இருந்திருக்க கூடுமோ என்றொரு ஐயம். எந்த மதத்தையும் சார்ந்து பேசும் முயற்சி அல்ல இது, இந்தோ கிரேக்க சிற்ப முறைப்படி வடிவமைக்கப் பட்ட சிற்பங்களில் பெரும்பாலும் காலத்தால் முந்தியவை புத்தர் சிலைகலாகவே இருக்கின்றன. இங்கு மட்டும் அல்ல கி.மு .300 க்குப் பின் அலெக்சாண்டர் பாக்டிரியாவிலிருந்து இந்தியாவுக்கு படையெடுத்து வந்த வழிகள் (வடக்கு ஆப்கன் ,பஞ்சாப் - இந்துஸ்தானம் )எங்கும் காணக் கிடைக்கும் புத்த சிலைகள் ,அப்படி இருக்கலாம் என்ற எண்ணத்தை அளிக்க வல்லவை.


இவை மட்டுமல்ல யானைகள் இருபுறமும் ஆசிர்வதிக்க நடுவில் புத்தரின் தாயார் மாயா தேவி அமர்ந்திருக்கும் சிற்ப வடிவமே பின்னாட்களில் வைணவ கஜலக்ஷ்மி என்றாகி இருக்க கூடும் என யூகிக்க தோன்றுகிறது.


க்ரீக் இந்தோ வகை சிற்பங்களை வெகு எளிதாக அடையாளம் காண முடியும் என மியூசியக் குறிப்புகளில் வாசித்தேன் ,கிரேக்க சிற்பங்கள் உடல் பலத்தை காட்டும் வகையில் இருப்பனவேன்றும்,நமது நாட்டு சிற்பங்கள் முக சௌந்தர்ய பாவங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவை என்றும் கூறப் பட்டிருந்தது,ஒப்பிட்டுப் பார்த்ததில் விளங்கியது.


சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இருந்த முத்திரை மாதிரிகளின் அடிப்படையில் அந்த மக்கள் பசுபதி வழிபாடும்(காலை -சிவன்- நந்தி வழிபாடு) ,விசிறி போன்ற கூந்தல் அலங்காரம் செய்துள்ள பெண் தெய்வம் ஒன்றையும் வணங்கி வந்திருக்க கூடும் என தெரிகிறது.

இது புத்தருக்கு முற்பட்ட காலம் அப்படியானால் புத்தருக்கு முன்பே பல ஆன்மிகத் தலைவர்கள் அன்றைய மக்களை பண்பட்ட நிலைக்கு கொண்டு செல்ல வழிநடத்திக் கொண்டே தான் வந்திருக்கின்றனர் எனக் கொள்ளலாம். மேலும் புத்தரும் கூட தமது கோட்பாடுகளில் எழுதி வைக்கப் படாத முந்தைய தலைவர்களின் அல்லது குருக்களின் கோட்பாடுகளை இணைத்துக் கொண்டிருக்கலாம் எனவும் நினைக்கத் தோன்றுகிறது. மேலும் புத்தரின் கோட்பாடுகளும் கூட புத்தர் முக்தி அடைந்த பின்பே அவரது அந்திமக் காலங்களில் உடனிருந்து சேவை செய்த அவரது சீடர்களில் ஒருவரான ஆனந்தரால் அவருக்குத் தெரிந்த வகையில் பதிவு செய்யப் பட்டது தான் என வரலாறு காட்டுகிறது.

முன்பே கூறியபடி புத்தர் சார்ந்திருந்த சாக்கிய குளத்தில் சாலமர வழிபாடு இருந்தது (தாய் தெய்வ வழிபாடு)என்பதைக் கண்டோம் இல்லையா?
மெசபடோமிய சிற்பங்களில் காணக் கிடைக்காத சிறப்பம்சமாக சிந்து சமவெளி நாகரிக அகழ்வுகளில் கிடைத்த முத்திரை மாதிரிகள் மற்றும் சிற்பங்களில் ...

அப்படியானால் இந்திய கடவுள்கள் வரிசை இப்படித் தான் இருக்கக் கூடும்.

1.தாய் தெய்வ வழிபாடு
2.காளை மனிதன் (பாசுபத -சிவ வழிபாடு)
3.சிவ வழிபாட்டோடு லிங்க யோனி வழிபாடு

சிந்து வெளி காலத்திற்கு பல நூறு ஆண்டுகள் கழித்தே வேத காலம் வருகிறது ,

வேத காலத்தில் ;

இந்திர வழிபாடு

இந்திரன், வருணன்,மித்திரன்(சூரியன்), யக்ஷன், வழிபாடுகள் தோன்றின, தாய் தெய்வ வழிபாட்டை இந்த தெய்வங்களின் வழிபாடுகள் பின்னுக்குத் தள்ளி இருக்கலாம் . ரிக் வேதத்தில் பாடப்படும் முதன்மை தெய்வங்கள் இவை .

கிருஷ்ணன் ரிக் வேத காலத்தல் ஒரு யக்ஷனாகவே அடையாளம் காணப் படுகிறான்.

ரிக் வேத கால ( இந்திர வழிபாடு )வழிபாடுகளில் பெருமளவில் யாகங்கள் நடத்தப் பட்டன,யாக பலிகள் மக்களை பீதியில் ஆழ்த்தும் அளவுக்கு கால்நடைகளும் பிற உயிர்களும் கணக்கின்றி கடத்திச் செல்லப் பட்டு யஞ்ஜங்களில் பலி இடப் பட்டன. பழங்குடி உணவு சேகரிப்பு(வேட்டை மற்றும் ஆநிரை மேய்த்தல் நிலையில் இருந்து பழங்குடி விவசாய (உணவு உற்பத்தி)முறைக்கு பரிணாம வளர்ச்சி பெற்ற ஆதி காலத்து மக்கள் தங்களது செல்வ வளங்கள் எனக் கருதிய கால்நடைகள் யாகங்களுக்காக பலியிடப் படுவதை விரும்பாமல் உயிர் பலியை எதிர்ப்பவர்களாக மாறினார்.
இது இட்டுச் செல்லும் பாதை கிருஷ்ண வழிபாடு எனும் நிலைக்கு.

கிருஷ்ணன் கால்நடைகளின் காவலனாகக் கருதப் படுகிறான்.
ஆநிரைகளை மீட்பதற்காக கிருஷ்ணன் இந்திரனோடு நடத்திய போர்களைப் பற்றி ரிக் வேத பாடல்கள் உள்ளன. இப்படித் தான் மானுட கிருஷ்ணன் அரை தெய்வ நிலைக்கு மாறினான்.

பிற்பாடு பஞ்சாப் பகுதிகளில் அதிப்படி விளைச்சல் மற்றும் வளமைப் பெருக்கத்துக்காக பெருமளவில் இந்திர வழிபாட்டை ஓரம்கட்டி விட்டு அந்த இடத்தை கிருஷ்ணா வழிபாடு ஆக்கிரமித்தது. கிருஷ்ணா விக்ரஹங்களின் மூலங்கள் இந்துஸ்தானத்தின்


இந்த வழியில் போனால் முதலில் சமணம் (உயிர்பலியை எதிர்த்தல்)


அதனையொட்டி (பௌத்தம் )


வரலாற்றுக்கு மிகப் பிந்தைய காலமாகிய தென்னிந்திய பல்லவர்கள் மற்றும் பிற்கால சோழர் கால திருமால் விக்கிரகங்களுக்கு பௌத்த விக்ரங்கங்களில் இருந்து மாதிரிகள் எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கலாம் ,//படித்தவற்றில் இருந்து கிடைத்த யூகமே //

படித்த விசயங்களைக் கொண்டும் திரட்டிய விவரங்களைக் கொண்டும் இப்படித் தான் எண்ண முடிகிறது.

காளியும் கல்மரங்களும் ...


திருவக்கிரை ஊர் எனக்கு முன்பே பரிச்சயமானது தான், பாலகுமாரனின் நாவல் ஒன்றில் இந்த ஸ்தலத்தில் இருக்கும் வக்கிர காளியம்மன் ஆலயத்தை தரிசித்து வந்தால் சேமம் என்றிருந்தது கண்டு 6 வருடங்களுக்கு முன்பு என் மகளின் பிறந்த நாளன்று சென்னையில் இருந்து திருவக்கரைக்கு சென்று வந்தோம்.

காளியைப் பற்றி பேசுவதற்காக இதை எழுதவில்லை , முதலாவதாக இந்த ஊர் காளிக்கும்,சந்திர மௌலீஸ்வரருக்கும் அப்பாற்பட்டு மற்றொரு விசயத்திற்கும் கவனிக்கப் பட வேண்டிய ஊர். இந்த ஊரில் கல்மரங்கள் ஏராளமாகக் காணக்கிடைக்கின்றன என்று சென்னை மியூசியத்தில் வாசித்திருந்தேன்.

கல்மரம் :

நிஜமாகவே மரமாக இருந்து கல்லாக மாறிய மரம் கல்மரம். அதாகப் பட்டது 2 00 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள் முறிந்து மழையால் சாய்ந்து ஆற்றோடு இழுத்துச் செல்லப் பட்டு ஆற்றின் ஆழங்களில் பல அடுக்குகளில் பன்னெடுங்காலமாக மூழ்கி பின் வெளிப்படும் போது கல்லாக மாறி விடுகின்றன. இத்தகைய கல் மரங்கள் விழுப்புரத்தில் உள்ள திருவக்கரை கிராமத்தில் அதிகம் இருக்கின்றன. அங்கிருந்து மாதிரிக்கு ஒரு கல் மரத்தை நம் இந்திய புவியியல் துறையினர் சென்னை மியூசியத்திற்கு அன்பளிப்பாக வழங்கி இருந்க்கின்றனர்.

சென்னை மியூசியம் சென்று வந்தவர்களுக்கு தெரிந்திருக்கும், சிற்பக்காட்சி சாலையை அடுத்து உட்கார்ந்து சாப்பிட வசதியாக சிமென்ட் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும் இடத்தில் நடுவாந்திரமாக இந்தக் கல் மரம் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது .

மரங்களின் வயதைக் கணக்கிட ரேடியோ கார்பன் முறை பயன்படுத்தி மரத்தின் தண்டுப் பகுதியில் உள்ள வளையங்களின் எண்ணிக்கை அடிப்படையில் வயது கணக்கிடப் படும். அப்படியானால் 200 லட்சம் வருடங்களுக்கு முந்தைய மரங்கள் இவை என்பதை எப்படிக் கண்டுபிடித்திருப்பார்கள் ௯எத்தநை வளையங்கள் இருக்குமோ!!! ??? இந்த கல்மரத்தை பார்த்ததில் இருந்து எப்படி மரங்களின் வயதை கண்டுபிடிக்கிறார்கள் என்பதை கற்றுக் கொண்டால் என்ன? என்ற லூசுத்தனமான ஆசையெல்லாம் வந்து போகிறது,
(நல்ல சமையல் கத்துக்கற ஆசையைத் தவிர மற்ற எல்லாம் ஆசைகளும் வருமே உனக்கு ! //தேவ் வாய்ஸ்//)

கோயிலைப் பற்றி :

வக்கிராசுரனைக் கொன்றதால் அங்கிருந்த காளிக்கு வக்கிர காளி என்று பெயர் வந்ததாம் ,இங்குள்ள காளி காதில் குழந்தை ஒன்றை குண்டலமாக அணிந்திருக்கிறாள்.(இதற்கு ஏதாவது கதை விளக்கம் இருக்கலாம்- எனக்குத் தெரியவில்லை) முதன் முறையாகப் பார்க்கும்போது சற்றே அச்சமூட்டும் சிலை இது. இதன் காரணமாக இதை குண்டலி வனம் என்றும் முன்பு அழைப்பார்களாம்.

காளி கோயில் தவிர்த்து மும்முக சந்திரமௌலீஸ்வரர் ஆலயமும் இங்குள்ளது ,திருஞான சம்பந்தரால் பாடப் பட்டதால் பழம்பெருமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க கோயில் இது .இங்குள்ள அம்பிகையின் பெயர் வடிவாம்பிகை

ஆலய முகவரி :

அருள்மிகுசந்திரசேகரர்
வக்ரகாளியம்மன் திருக்கோவில்திருவக்கரைவானூர் வட்டம்விழுப்புரம் மாவட்டம்PIN - 604304

இந்த ஊரைப் பற்றி நான் தெரிந்து கொண்ட செய்தியை பகிர்ந்து கொள்ளத் தோன்றியது ...வாசிப்பவர்கள் காளிக்காகப் போனாலும் சரி கல்மரத்திற்காகப் போனாலும் சரி,இந்த ஊர் பார்க்கப் பட வேண்டிய ஊரே. ஆற்று வெள்ளத்தில் இழுத்து வரப் பட்டு கரை சேர்ந்த லட்சக் கணக்கான வருடங்களுக்கு முந்தைய கல் மரங்களைப் பார்க்கும் ஆர்வம் எனக்கு உண்டு. நாங்கள் அங்கே சென்ற தினத்தில் கல்மரன்களைப் பற்றிய செய்தி அறிந்திராத காரணத்தால் அப்போது வெறுமே கோயிலுக்கு மட்டுமே போய் வந்தோம். இனியொரு முறை செல்லும் எண்ணம் இருக்கிறது. கல்மரங்களுக்காக .அந்த கிராமத்தில் மியூசியம் உண்டா எனத் தெரியவில்லை? கல்மரங்கள் நிறைந்த்திருக்கின்றன திருவக்கரை அருங்காட்சியகத்தில் என்று தான் வாசித்த ஞாபகம்.யாரேனும் போய் வந்தவர்கள் இந்தப் பதிவை வாசித்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Sunday, November 21, 2010

Perfect couple ... (find out whom )




இவர்கள் யார் ? கண்டுபிடிங்க பார்க்கலாம் !

:)

Saturday, November 20, 2010

இராமாயண மகாபாரத காவியங்கள் வெறும் கப்ஸா மட்டுமே அல்ல அல்ல...



ராமாயணமும் மகாபாரதமும் முற்றிலுமாய் புனையப் பட்ட கற்பனைகள் அல்லவே அல்ல. கடலில் கரைந்த உப்பாய் அன்றியும் உப்பைக் கரைத்த கடலாய் நடந்த நிஜங்களின் மீது அதீத கற்பனைகளை ஏற்றி புனையப் பட்ட காவியங்கள் ,பாரத ஆதி அந்தம் காண இவற்றை விட்டால் வேறு உகந்த வழிகள் இல.

பார்க்கலாம் ...மகத ராஜ்யங்கள் சீர்ப்படும்முன்பாக இந்துஸ்தானத்தில் மிகுந்த பெருமையோடிருந்தது கோசலமே. கோசல ராமனுக்காய் பாபர் மசூதி இடித்தார்கள் ,தீர்ப்பு சில வாரங்களுக்கு முன் கண்டோமே. நீதிபதிகள் ஒப்புக் கொண்டார்கள் ராமன் பிறந்த இடம் அதுவென்று. சீதையின் சமையலறை இதுவென்று t.v யில் காட்டினார்கள். இது கற்பனை அல்ல . சிந்து சமவெளி நாகரிக காலத்து ஹரப்பா ,மொஹஞ்சதாரோ .டோலவிரா நகரங்களையே அகழ்ந்தெடுக்கும் போது அதற்கும் பிற்பட்ட காலத்து ராமன் வாழ்ந்த இடமாக அயோத்தி ஏன் இருக்க முடியாது ?!

வேத காலத்துக்கு சற்றே பிந்தைய கோசல ஆர்யப் பழங்குடி வம்சங்களில் ஒன்றே கோசலம். கோசலம் வெற்றிக் கோலோச்சிய நாட்களில் மகதம் சற்று பின்தங்கிய நிலையில் இருந்தது,மகதர்கள் தாழ்ந்த குடிகளாகக் கருதப் பட்டனர். மகத மன்னன் அஜாத சத்ரு காலத்துக்குப் பின்பே கோசலம் வீழ்ந்தது ,வீழ்த்தப்பட்டது. கோசல மன்னன் பேசேனாதியும் மகத பிம்பி சாரரும் புத்தரின் சமகாலத்தவர் என சரித்திரம் குறிப்பிடுகிறது.

இந்தியாவில் சைவம் ,வைணவம் பிரபலமடைவதற்கு முன்பே பௌத்தம் இருந்தது ,அதற்கும் முற்பட்ட வரலாறுடையதாக ஜைனமும் இருந்தது . வேத காலப் பழங்குடி வம்சங்களில் ஒன்றான லிச்சாவி குலத்தில் பிறந்த மகாவீரர் ஜைன மதத்தின் தீர்த்தாங்கரராக இருந்தாலும் அவருக்கும் முன்பே பல தீர்த்தாங்கரர்கள் இருந்தனர் என வாசிக்கையில் ஆச்சரியமாக இருந்தது.
இதே போல இந்தோ ஆரியப் பழங்குடி வம்சமான சாக்கிய குலத்தில் தோன்றியவர் கௌதமர் .புத்தர். அதனால் தான் அவர் சாக்கிய முனி.

இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒரு மேலான விஷயம் புத்தர் பிறப்பதற்கு முன்பு அவரது அன்னை மாயா தேவி புத்தர் பிறந்த இடமான லும்பினியில் உள்ள புனித புஷ்கரணியில் நீராடி அங்கிருந்த ரும்மினி தேவி எனும் தாய் தெய்வத்திற்கு அந்தக் காலப் பழங்குடி மகளிர் வழி வழியாகக் கடைப்பிடித்து வந்த சடங்குகளைச் செய்து முடித்து விட்டு அப்படியே கௌதமரைப் பெற்றார் என்று புத்தரது வாழ்க்கை வரலாறு கூறுகிறது.

இதிலிருந்து நாம அறிய நேர்வது பௌத்தம் தோன்றுவதற்கு முன்பே இந்துஸ்தானத்தில் நிலை பெற்றிருந்தது தாய் தெய்வ வழிபாடுகள். இதை சாக்தம் என்று சொன்னால் (சக்தி வழிபாடு ) மறுக்கப் படக் கூடுமா என தெரியவில்லை. ஆனால் பாரத்தத்தின் பல மாநிலங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழவாராய்ச்சிகளின் பின் நாம் அறிந்து கொள்ள முடிவது,எருமை புராதன இந்தியப் பழங்குடி மக்களுக்கு பெரும் சவாலாய் இருந்திருக்க கூடும்.

எருமைகளை அடக்கி பழக்கத்திற்கு கொண்டு வருவது மிகப் பெரும் சவாலாய் இருந்திருக்கலாம்.

குகைச் சித்திரங்களில் பெரும்பாலும் காணப் படும் சித்திரங்கள் பசுபதி உருவங்களும் (காளை கடவுள் -சிவன்) மகிஷாசுர மர்த்தினி சித்திரங்கலுமே ,இதில் நாம் சிந்திக்க உகந்த ஒரு விஷயம் காளை உருவ சித்திரங்களில் காளை மாடுகள் கொல்லப்படவில்லை காளை வீரன் அவற்றை வெற்றி கொண்டு பழக்கப் படுத்திக் கொள்வதாகவே சித்திரங்கள் காட்டுகின்றன. ஆனால் மகிஷம் ஒரு பெண் தெய்வத்தால் கொல்லப் படுவதாக சித்திரங்கள் காட்டுகின்றன. மேலும் சில வீரர்களை எருமைகள் தம் கொம்புகளால் கொத்தி எறிவதாகக் கூட சில சித்திரங்கள் காணக் கிடைப்பதால். அடக்குவதற்கும் பழக்குவதற்கும் அதிக சிரமம் கொடுத்த எருமைகள் தீய சக்திகளாக சித்தரிக்க பட்டிருக்கலாம். அவற்றை அடக்கிய பழங்குடி பெண் மகிஷாசுர மர்த்தினி எனும் தெய்வமாக்கப் பட்டிருக்கலாம்.


தொடரும் ...

தகன மித்ரா ...




எப்போதுமே இப்படியல்ல 
எங்கோ நழுவிக் கொண்டிருக்கும் 
நினைவுகளைத் தகனம் செய்ய முடியா 
கோபங்கள்  ...பெண்டுலமாய்
ஆடிச் சலிக்கையில்
ஆட்படுத்தும் ஆகச் சிறந்த சோர்வுகள்
எண்ணிக் கணக்கிட
இன்னொரு ஜென்மமோ  ?
விட்டும் விடாமல்
தூறும் சேய் மழையாய்
சஞ்சலத்தில் ஆழ்ந்து விடும்
பொழுதெலாம் பெரும்பாலும்
கடற்கரையில் நட்சத்திரங்கள் பொறுக்கிக் கொண்டிருந்தேன்  
எலுமிச்சை அளவு குண்டு குண்டு நட்சத்திரங்கள்
கோர்த்து வைத்த நிஜம் சொன்னால்
யாரும் நம்பவில்லை
இன்றும் எடுக்கிறேன் கோர்க்கிறேன்
நம்புதியோ !


Friday, November 19, 2010

அருந்ததிராயும் சில கவிதைகளும் ...



அருந்ததி ராயின் "God of small things " தரவிறக்கி வைத்து நெடுநாட்கள் ஆகின்றன.இன்னும் ஒரு பக்கத்தைக் கூட புரட்டவே இல்லை. இந்த வாரம் விகடன் 25 இல் அருந்ததி . சில மாதங்களுக்கு முன்பு அவரது பேட்டி விகடனில் பிரசுரமானது,அவ்வப்போது இப்படி அருந்ததி ராய் பற்றி எங்கேனும் செய்திகளைக் காணும் போது மட்டுமே தலை தூக்கி மறையும் ஆர்வம் மறுபடியும் இன்று வந்தது எப்படியாவது அந்த நாவலைப் படித்து முடியேன் என்பதாக.


அருந்ததி 2006 ஆம் வருடம் தனது "The Algebra of infinite justice " எனும் கட்டுரைத் தொகுப்புக்காக இந்திய அரசு வழங்கிய சாகித்ய அகாடமியைப் புறக்கணித்தவர்.இந்த கட்டுரைத் தொகுப்பை இணையத்தில் தேடித் பார்க்கலாம் என்றிருக்கிறேன்...கிடைக்குமோ! தெரியாது.


புக்கர் பரிசு பெற்ற ஒரே இந்திய எழுத்தாளர்
,இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருதைப் புறக்கணித்தவர். நாவல் எழுதிப் புகழ் பெறுவதற்கு முன்பு டெல்லி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஏரோபிக்ஸ் பயிற்சியாளர்,பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் சமூகப் போராளி.


I like Arundhathi Rai .


சபிதா இப்ராகிம் என்பவரது இந்தக் கவிதைகளை விகடனில் வாசித்தேன் ,கவிதைகளின் எளிமை மிகப் பிடித்திருந்தது.



சேமிப்பு :

கீரை விற்ற கிழவியிடம்

பேரம் பேசி சேமித்தேன்

ஒரு ரூபாய் பணமும்

ஒரு மூட்டை பாவமும் !



குரூர நிம்மதி :

மரணித்த மழலைகளின்

பெயர்ப்பட்டியலி

தன பிள்ளை இல்லையெனும்

நிம்மதி ,

நொடிப் பொழுதாயினும்

எத்தனை குரூரமானது ?



கனவுப் பயணம் :


ஆறு வயது மகளின்

கனவுக்குள் பிரவேசிக்க

நேரிட்டது ஒருநாள்

பட்டாம் பூச்சி மீது பயணம்

சித்திரக்குள்ளன் சிநேகம்

சாக்லேட் வீடு

ஐஸ்க்ரீம் சாலை

கனவிலிருந்து வெளியேற

வழி தேடினேன்

இல்லாமலிருந்தால்

நல்லது !



யதுகுல கரிய வீரன் : ( Pages from History )

பண்டைய இந்தியா  ( part -2 )


For  part - 1  click this link ; 

http://karthigavasudev.blogspot.com/2010/11/view.html 



யதுகுல கரிய வீரன் : ( Pages from History )

குரு வம்சத்து இளவரசர்கள் பாண்டவர்கள் மற்றும் கௌவரவர்களைப் போல யது குல தலைவனாக இருந்த மானிடனே கிருஷ்ணன் (கரிய நிறத்தவன்) ,இந்த கிருஷ்ணன் மகாபாரதத்தில் தெய்வ அந்தஸ்தைப் பெற்றது எங்கனம் என்ற விவரிப்பு சரித்திரத்தில் எங்கும் காணோம். ஆனால் கிருஷ்ணன் கோரஸ் ஆங்கிரச எனும் முனிவரின் மானுட சீடனாக இருந்தான் என வரலாறு சான்று காட்டுகிறது

ஆரிய மன்னர் குடும்பத்து இளவரசர்கள் இந்த குருக்களில் எவராவது ஒருவரிடம் 12 ஆண்டுகள் குருகுல வாசம் செய்து கலைகளைக் கற்க வேண்டும் என்பது வேத கால நியதி. அங்கே குருகுலத்தில் அவர்களுக்கு கற்பிக்கப் பட்டவை வேதங்களோடு முக்கியமாகப் போர் தந்திரங்கள்,போரிடும் முறைகள் ,யானை,குதிரை முதலான விலங்குகளை கையாளும் ,பழக்கும் முறைகள் ,ஒவ்வொரு இளவரசனும் தான் சார்ந்த குலத்தின் சிறப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் தினமும் தத்தமது முன்னோர்களின் புகழைப் பாடும் பாடல்கள் போன்றவையே.
யது குல கிருஷ்ணன் வாழ்ந்த காலமாகக் கருதப் படுவது வேத காலம் ,ஆனால் அதற்கும் முன்பே வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய தாங்கர்கள் எனும் பழங்குடியினர் ,இவர்களது தொழிலும் மேய்ச்சல் தொழிலே ,ஆயர்களைப் போலவே தான் அப்படியெனில் யது குல ஆயர்களும் தாங்கார் குல மக்களும் ஒருவரே தானா என்ற ஐயம் வர நேர்கிறது, இருக்கும் பட்சத்தில் யது குல ஆயர்களைத் தான் இந்தியாவின் மிகப் பூர்வ பழங்குடிகளாகக் கருத முடியும்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு பிரத்யேக ஆயுதம் உண்டென்பது தெரியும் தானே?!

கிருஷ்ணனின் ஆயுதம் என்ன? சக்ராயுதம்

பலராமனின் ஆயுதம் என்ன? ஏர் கலப்பை

கிருஷ்ணனின் சக்ராயுதம் வந்த கதை :

வேத காலத்திற்கு முன்பிருந்த காலத்தில் சக்கரப் படை எறிதல் என்பது போர்முறைகளில் ஒன்றாக இருந்தது ,தட்டையான கனத்த சக்கரம் போன்ற இந்த ஆயுதத்தை விட்டெறிந்தால் பகைவர்களின் தலையை அறுத்து வீழ்த்தும் அளவுக்கு அது கூர்மையானது ,இது வேத காலத்திற்கு உரியதல்ல,புத்தர் தொன்றுவதகு வெகு காலம் முன்பே ,இது வழக்கொழிந்து போய்விட்டது .

ஆனால் மீர்சாப்பூர் மாவட்டத்தில் காணப்ப்படும்குகைச்சித்திரம் ஒன்றில் ஒரு தேரோட்டி அது போன்றதோர் சக்ராயுதத்தால் பூர்விக குடிமக்களைத் தாக்கும் காட்சி உள்ளது.இது கிருஷ்ணனைப் பற்றி அறிவதற்கான மிகச் சிறந்த தொல்பொருள் சான்றென நம்பப்படுகிறது.


பலராமனின் ஏர் கலப்பை :


சேகரித்துக் கொண்டு காடுகளில் அலைந்து திரிந்து ஆநிரைகளை (கால்நடைகளை மேய்த்துக் கொண்டு) நாடோடிகளாக வாழ்ந்த பூர்வ குடிமக்கள் காடுகளைத் திருத்தி விவசாய நிலங்களாக மாற்றுகையில் ஏர்கலப்பை முக்கியத்துவம் பெறுகிறது,பூர்வ பழங்குடியினர் நாடோடி வாழ்வு முறையை விட்டு பழங்குடி விவசாய முறைகளைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்த காலம் என இதைக் கணக்கில் எடுத்தால் பலராமனுக்கு ஏர்கலப்பை ஆயுதம் பொருந்தி வருகிறது தானே!

கிருஷ்ணன் மதுராவை ஒட்டிய கோகுலத்தை விட்டு தன் கூட்டத்தாரோடு பூலி பெயர்சிக்காக (இதற்கு தனியே விளக்கம் தர வேண்டும் )

பூலி பெயர்ச்சி :

கால்நடைகளை மேய்த்துக் கொண்டு காடுகளில் வேட்டையாடியும் இயற்கையாய் கிடைத்த பழங்களை உண்டும் வாழ்ந்த மனித கூட்டம் அல்லது குழுக்கள் மாரிக் காலத்தின் போது முன்னர் இருந்த இடங்களை விட்டு அதிகமாக ஈரம் தங்காத தரைப் பகுதிகளை நோக்கி இடம் பெயர்வதையே பூலி பெயர்ச்சி என்கிறார்கள்) இந்த பூலித் தடங்கள் பின்னாட்களில் மிகச் சிறந்த வர்த்தகப் பாதைகளாக மாறினவாம். மிகச் சிறந்த உதாரணங்கள் ;
தட்சிணா பாதம் (தெற்கு நோக்கிய காலடித் தடங்கள் அல்லது பாதைகள்) ராமனின் தெற்கு நோக்கிய பயண வழிகளைக் கூறலாம் .
உத்திரா பதம் (மேற்கு நோக்கிய காலடித் தடங்கள்)

வடக்கே மௌரிய சாம்ராஜ்யம் நிலை பெற்ற போது தெற்கில் அத்தகைய சாம்ராஜ்யங்கள் அமையாமல் போனதற்கு தெற்கை (தீப கற்பத்தை ) அடைய வடக்கில் இருந்து வருபவர்கள் கோதாவரி நதியை ஒட்டிய அடர் வனங்களையும் கர்னாடக குடகு மலைக் காடுகளையும் தாண்டி வர வேண்டிய சூழல் இருந்தது .காடுகளை அழிப்பது அத்தனை லேசுப் பட்ட காரியமில்லை அதனால் தெற்கில் நிலையான அரசுகள் தோன்ற சற்றே காலங்கள் நீண்டிருக்கலாம்.

கிருஷ்ணனைப் பற்றி பேசவாரம்பித்து விட்டு எங்கோ போய்விட்டேன்.
கிருஷ்ணன் கோகுலத்தை விட்டு இப்படி பூலி பெயர்ச்சியாக அடுத்து சென்ற இடத்தின் பெயர் பிருந்தா வனம் (விருந்தா வனம் ) விருந்தா தான் பிருந்தா என்றானது. பிருந்தா அல்லது விருந்தா என்பவள் ஒரு தெய்வீக கன்னி.அல்லது எதோ ஒரு தாய் தெய்வத்தின் மனித வாரிசு எனக் கொள்க . இந்தப் பெண்ணை கிருஷ்ணன் மணந்து கொண்டு பிருந்தாவனத்தை அடைகிறான். இந்த பிருந்தாவின் பிரதிநிதியாக தெய்வீக துளசி செடி குறிப்பிடப் படுகிறது. ஆண்டு தோறும் தவறாது கிருஷ்ணன் இந்த துளசி செடியை மணக்கும் சம்ரதாயம் இப்போதும் வழக்கத்தில் இருக்கிறதாம்.
இந்த கதைக்கான பூர்வ மூலம் பண்டைய மனிதர்கள் பின்பற்றிய பலி சடங்குகளில் இருந்து ஆரம்பமாகிறது. அதைப் பற்றி பிறகு பேசலாம்.



ஜாதி வந்த கதை : (Pages From History ...)

பூர்வ இந்தியப் பழங்குடி வம்சங்கள் :

மோர் ஓரான் சந்தால் வஜ்ஜா தாங்கர்கள் லிச்சாவிகள்
மேற்சொன்ன மோர் வம்சத்தில் மோர் என்ற சொல் மயிலைக் குறிக்கிறது. மேலும் இந்த மோர் பூர்வ பழங்குடியினர் தான் மகதத்தில் முதல் விஸ்தீரணமான நிலையான இந்தியப் பேரரசை அமைத்த மௌரியர்கள் .இவர்கள் மூர் வம்சத்தார் என்றும் அழைக்கப் பட்டார்கள். பூர்வ இந்தியப் பழங்குடி மன்னன் சந்திர குப்த மௌரியர் இந்தோ ஆரியப் பழங்குடி வம்சமான லிச்சாவி இளவரசி குமார தேவியை மணக்கிறார். இந்த சந்திரகுப்தரின் அவையில் இருந்த மதியூக பிராமண அமைச்சர் கௌடில்யர். இவர் எழுதியதே " அர்த்தசாஸ்திரம் ".

மகத ராஜ்யத்தைப் பற்றி பிறகு பேசலாம்.

" மூர் " பழங்குடி சார்ந்து மேலும் சில செய்திகள் ;
அதாவது இந்தப் பழங்குடிப் பெயர்கள் அனைத்துமே முதன் முதலில் மனிதன் வேட்டையாடி உணவைச் சேகரித்து காட்டுக்குள் அலைந்து திரிந்து வாழ்ந்த காலத்தே ஒரு குழு பிற குழுக்களிடம் இருந்து வேறுபடுத்த தங்களது வேட்டைப் பொருளை அல்லது பிராணியை வைத்து குலச் சின்னங்களை உருவாக்கிக் கொண்டார்கள் என்பது தான் வர்ணாசிரம முறைக்கு அடிப்படை.
அப்படியானால் மேற்கண்ட தகவல்களை வைத்துப் பார்த்தால் மோர் வம்சத்தை அல்லது குலத்தை சார்ந்த பழங்குடிகள் ஆதியில் மயில் வேட்டையில் பிரசித்தி பெற்றவர்களாக இருந்திருக்கலாம்.

மோர் வம்சத்தினர் ஆண்ட பகுதி மகதம் தற்கால பீகார் மாநிலம் ,இதன் தலைநகர் பாட்னா தான் அப்போதும் பிரதான தலைநகராக இருந்துள்ளது, இது தவிர தட்ச சீலம் மற்றும் உஜ்ஜயினி எனும் இரண்டு துணை தலைநகரங்களும் இருந்தன மௌரியர்களுக்கு .சந்திர குப்த மௌரியரின் மூன்றாம் தலைமுறையாக அசோகர் வருகிறார். இவரது தந்தை பிந்து சாரர்.
சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவுக்கு படை எடுத்து வந்த அலெக்சாண்டர் தாம் வென்ற இந்தியப் பகுதிகளின் பிரதிநிதியாக செல்யூகஸ் நிகேடரை நியமித்து விட்டு அவர் மாசிடோநியாவுக்குப் பயணித்து இடையில் பாபிலோனியாவில் நோய் வாய்ப்பட்டு மலேரியாவில் இறந்து போகிறார்.
அந்த செல்யூகஸ் நிகேடரின் மகளை பிந்து சாரர்(சந்திர குப்தரின் மகன்) மணந்து கொள்கிறார். இதனால் கிரேக்க மௌரிய உறவு பலபடுகிறது. ஆனால் சக்ரவர்த்தி அசோகரின் தாய் ஒரு கிரேக்கப் பெண்ணாய் இருக்க வாய்ப்பில்லை என சரித்திரம் குறிப்பிடுகிறது .
மகதர்கள் பெரிதாய் ஜாதிகளை மதிக்கிறவர்களாக இல்லை ,அவர்கள் தங்களது ராஜீய விஸ்தீரனத்திற்காக பழங்குடிகளிலும் திருமண உறவு வைத்துக் கொண்டார்கள் .குப்தர்களும் அப்படியே உதாரணம் பிந்துசாரரின் கிரேக்க மனைவி .பண்டைய கிரேக்கர்களைப் போல அல்லாது எல்லைப் புறத்து மாசிடோனியர்கள்(அலெக்சாண்டர் ) கூட பெரிதான ஜாதிப் பற்றுடையவர்கள் அல்லர்.

அகழ்வாராய்ச்சி ...



உதிரும் கால் நெருடும் சறல்மண்
தகடாய் இறுகிக் கெட்டிக்கும்
அடுக்கடுக்காய் ஏடுகள் படிய
அழுந்த மூடிக் கொண்ட சூலி; 
விரியத் திறக்கும் மாதுளை முத்துக்கள் 
இனிப்பும் புளிப்புமாய்
ஈயமும் பித்தளையும்
உப்பிடக் கடல் காய்ந்து பாலை நிலம்;
நெடுக நெடுகவே கண்கொத்தும் ராஜாளிகள் 
சருகிலை சர சரக்க சதா ஊறும்  சர்ப்ப ராஜாக்கள் ;
தோண்டத் தோண்டவே  கால்சியமும் பாஸ்பரசுமாய்
கண் மறைக்கும் பழுப்பு வெள்ளைகள்
அஃ தன்றோ ...
அகழ்வாராய்ச்சி !



Wednesday, November 17, 2010

பண்டைய இந்தியா ... (A View - Part 1 ,2,3,4 )


Part -2


http://karthigavasudev.blogspot.com/2010/11/pages-from-history.html


Part -3


http://karthigavasudev.blogspot.com/2010/11/blog-post_1698.html


Part -4


http://karthigavasudev.blogspot.com/2010/11/line-of-prime-gods-pages-from-history.html


Part - 1 

படிக்கப் படிக்க     வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது  பண்டைய இந்திய வரலாறு.நான் இது வரையிலும்  நினைத்திருந்தது  

 மாரியம்மன் ,கருப்ப சாமி, ஐயனார் ,காளியம்மன் இன்னும் பல பல பெயர்களில் எல்லா கிராமங்களிலும    வணங்கப் பட்டுக் கொண்டுள்ள  சிறு தெய்வங்கள் மட்டுமே இறந்து போன மூதாதையர்கள் அதாவது அவர்களது மரணத்தின் பல ஆண்டுகளுக்குப் பிறகு தெய்வ நிலைக்கு உயர்த்தப் பட்ட கிராம தெய்வங்கள் 
என்பதே...

ஆனால்  சரித்திரம் கூறுவது என்னவென்றால் நம்  பிரதான தெய்வங்களான ராமன்,கிருஷ்ணன் ,மகிசாசுர மர்த்தினி ,பசுபதி (சிவன்), ஏன் பலராமன் ,இந்திரன் ,இந்திரன் மனைவி உஷா ,எமன் (கிரேக்க புராணங்களில் இமா) எல்லோருமே பழங்குடி மக்களின் மூதாதையர்கள்   , அதாவது இந்தியப் பூர்வ பழங்குடி மக்கள் வணங்கி  வந்த தாய் தெய்வங்கள்  மற்றும் இந்தோ ஆரியக் கலப்பின தலைவர்களில் பல வெற்றிகளை பெற்ற ஆரிய  குல வீராதி வீரர்கள்     போன்றவர்கள் வேதங்களை இயற்றிய ஆரிய புரோகிதர்களால் தெய்வ நிலைக்கு புகழ்ந்து  ரிக் வேத பாசுரங்களில் பாடப்பட்டனர்.

என்று   சான்றுகளின் அடிப்படையில் விளக்கம்  தருகிறது .


நம் கிருஷ்ணன் தான் கிரேக்க புராணங்களில் வரும் ஹெர்குலிஸ் என்பதை சில உதாரணங்கள் மூலமா பார்க்கலாம்.

அரை மனித அரை தெய்வ உருவகம் இருவருக்கும் பொருந்தும்
மேலும் கிருஷ்ணன் யமுனை நதிக்கு செல்லும் பாதையை அடைத்துக் கொண்டு படுத்து மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்த  

காளியா (காளியமர்த்தனம் )என்கிற ஐந்து தலை சர்பத்தை அடக்கி அதன் தலை மீது நர்த்தனம் ஆடுகிறான். இதே விதமாக பல தலைகளைக் கொண்ட நாக சர்ப்பம் ஒன்றை ஹெர்குலிஸ் அடக்குவதாக கிரக்கே புராணம் கூறுகிறது.


அதோடு கிருஷ்ணனின் இறப்பும் ஹெர்குலிஸின் இறப்பும் ஒரே விதமாகத் தான் நிகழ்கின்றன. வேடன் ஒருவன் எய்த அம்பு குதிகாலில் பாய்ந்ததால் கிருஷ்ணன் இறப்பதாக இதிகாசமும் வேதமும் கூறுகிறது. ஹெர்குலிஸ் அவ்வாறே இறக்கிறான். இந்த இறப்பின் மறுபக்கமிருப்பது பண்டைய பலி சம்பிரதாயமே . விஷம் தோய்ந்த அம்பினால் கிருஷ்ணன் தனது மாற்றாந்தாயின் மகனால் வீழ்த்தப் படுகிறான் என்கிறது வேதம்.

இன்னொரு அபூர்வ ஆச்சர்யமான உதாரணம்;

ராமன் ஆரண்யம் செல்லுதல்.

இதற்கொரு காரணமாகக் கூறப்படுவது அன்றைய காலத்தே தொடக்க நிலை முடியரசில் எழுதப் படாத சட்டமாகப் பின்பற்றப் பட்டு வந்த ஒரு பழக்கம் ஒன்று அரசன் சிறையிலடைக்கப் படுவான் அல்லது இளவரசன் நாடு கடத்தப் படுவான். இதற்கு ராமாயணம் மட்டுமல்ல மகாபாரதத்திலும் உதாரணங்களைக் கூறலாம்.

பரதன் அரசுரிமை பெற வேண்டி கைகேயியால் ராமாயணத்தில் ராமன் நாடு கடத்தப் படும் தண்டனையை வலிந்து ஏற்கிறான்.


மகாபாரதத்தில் கிருஷ்ணனின் மாமன் ஹம்சன் அரசுரிமைக்காக தன் தந்தை உக்கிர சேனரை சிறையில் அடைக்கிறான். மேலும் தன் தங்கை தேவகியையும் அவள் கணவர் வசுதேவரையும் சிறையில் தள்ளுகிறான். ஹம்சன் தன் தங்கையை  சிறையில் தள்ளக் காரணம் கதையில் சொல்லப்பட்டது போல அவளது வயிற்றில் பிறக்கும் மகன் இவனைக் கொல்லப் போவதால் என்பதைக் காட்டிலும் உண்மையை ஒட்டிய காரணம் அந்தக் காலத்தில் மதுராவை ஆண்டை உக்கிர சேனர் வம்சாவளிப் பழங்குடியினரின் முறைப்படி பெண் மக்களின் வாரிசுகளே அடுத்த வாரிசு உரிமையைப் பெற்று நாட்டை ஆள முடியும் என்பதால் எனக் கொள்ளலாம்.

அப்படியே நோக்கினால் ஹம்சன் கிருஷ்ணனை அழிக்க நினைததர்கான காரணம் அவன் அடுத்த மன்னனாகக் கூடும் என்பதால் மட்டுமே எனக் கொள்ளலாம். இந்த நிஜக் காரணத்தையே கிருஷ்ணனுக்கு தெய்வ அம்சம் தர எண்ணிய பிற்கால வைதீக பிராமணர்கள் தமதுகற்பனைகளுக்கு ஏற்ப அதீத திறமைகளை கிருஷ்ணனிடம் ஏற்றி வைத்து மகாபாரதக் கதை புனையப் பட்டிருக்கலாம் என்பது யூகம்.

நதிக்கரை நாகரிகங்கள் தோன்றி வளர்ந்த இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சரியாகச் சொல்லப் போனால் கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கி.மு.2000 ஆண்டெனக் கணக்கிடப் படும் சிந்து சமவெளி நாகரிக காலம் தொட்டே இந்தியாவுக்கும் அல்லது மெசபடோமியாவுக்கும் இடையே வர்த்தகம் நடந்து வந்திருந்தது.

சிந்து வெளி நாகரிக காலத்தில் இங்கிருந்து மயில்கள்,முத்துகள் (மீன் கண்கள்) ,தந்தங்கள்,போன்றவை ரோமுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டன. அங்கிருந்து இங்கு இறக்குமதி ஆனவை என்னென்னவென்று குறிப்புகள் ஏதும் காணோம் . இந்த வர்த்தகம் நடைபெற முக்கிய வியாபார கேந்திரமாக இருந்த இடம் பாரசீக வளைகுடாவில் உள்ள பஹ்ரைன் தீவு .இந்த பஹ்ரைன் தீவு தான் பைபிளில் காட்டப் படும் டில்மூன் .

இந்த வர்த்தகத்தின் பெருமளவு லாபம் பஹ்ரைன் மன்னருக்கே எனினும் இந்த வர்த்தகத்தின் மிகப் பெரிய வாடிக்கையாளராகவும் அந்த மன்னரே இருந்திருக்கிறார் என்பதும் வரலாறு கூறும் செய்தி. மேலும் இந்த டில்மூனில் தான் ஊழிப் பிரளயம் நடந்த காலத்தே நமது ஆலிலைக்  கிருஷ்ணரைப் போல பைபிளில் காவிய நாயகனாகக் காட்டப் படும் சையசுதாஸ் இருந்ததாக பைபிள் கூறுகிறது. மேலும் இவனிடம் இருந்து சஞ்சீவினி ரகசியத்தை அறிந்து கொள்ள கிரேக்க காவிய நாயகன் கில் காமேஷ் அப்போது இவனைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் என்பதும் பைபிள் கதை.

இதிலிருந்து சொல்ல விரும்புவது யாதெனில் தெய்வங்கள் யாவும் மனிதர்களால் சரியாகச் சொல்லப் போனால் ஆதிப் பழங்குடி மனிதன் நாகரிகம் பெற்று வளர வளர இந்நாள் வரையில் அவனது வளர்ச்சிக்கு தக்கவாறே தெய்வங்களும் வளர்த்தெடுக்கப் பட்டுக் கொண்டே வந்திருப்பதன் வடிவங்களைக் காணலாம்.

புத்தகம் இப்படி நிறைய அருமையான சிந்திக்க வைக்கத் தக்க வரலாற்று உண்மைகளைச் சொல்லிக் கொண்டே விரிகிறது.

இந்தியாவில் நிலையான அரசுமுறையாக மலர்ந்த பெரிய சாம்ராஜ்யம் மௌரிய சாம்ராஜ்யமே

மௌரியர்கள் சாம்ராஜ்ய நிலையை அடையும் முன்பு பண்டைய இந்தியாவில் திக்குக்கு ஒன்றாக சிந்து நதிப் பகுதிகளில் சிதறிக் கிடந்த பத்துக்கும் மேற்பட்ட பல்வேறுபட்ட ஆதிப் பழங்குடியினரை ஜெயிக்க வேண்டிய அவசியம் இருந்தது. மௌரிய சாம்ராஜ்யத்திற்கு முன்பே மகத ராஜ்ஜியம் இருந்தது . மகதமும் கோசலமும் புராதன இந்திய ராஜ்யங்கள் .

இந்த ராஜ்யங்கள் தவிர்த்து முரட்டு வனங்களாக இருந்த கங்கைப் புறத்துக் காடுகளை அழித்து அவற்றை தேர்ந்த விவசாய பூமியாக மாற்ற அந்த மக்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. முன்பே கூறியதன் படி ;

இங்கிலாந்திலும் வேல்ஸிலும் பழைய கற்காலத்தில் சுமார் 250 மனிதர்கள் தான் இருந்தனர் ,அவர்களும் 10 சிறு சிறு கூட்டங்களாகப் பிரிந்திருந்தனர் என

புதை பொருள் ஆராய்ச்சியாளர் கிரஹாம் க்ளெர்க் கூறுகிறார்.

இங்கிலாந்து ,ஸ்காட்லாந்து ,அயர்லாந்து ஆகிய பகுதிகளில் இடைக்கற்காலத்தில் மனித சமூகத்தில் 4500 நபர்களும் ;
புதிய கற்காலத்தில் 20,000 நபர்களுமே வாழ்ந்திருக்க சாத்தியமிருப்பதாக மேற்படி தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன.
வரலாற்றுக்கு முந்தைய கற்காலங்களில் வாழ்ந்த பூர்வகுடியினர் வேட்டைத்தொழில் செய்தே வாழ்ந்து வந்தனர்.அந்த மனிதர்களுக்கு உணவை சேகரிக்க மட்டுமே தெரிந்திருந்தது.
உணவு உற்பத்தி பற்றி அம்மக்கள் அறிய நேர்ந்த பல ஆயிரம் ஆண்டுகளின் பின் கி.மு 2000 ஆண்டுக் காலத்தில் புதிய கற்காலத்தில் இருந்த மனிதர்களின் எண்ணிக்கையைப் போல இரு மடங்கு எண்ணிக்கை கொண்ட மனிதர்கள் மட்டுமே வாழ்ந்திருக்க சாத்தியம் உண்டு.
இதற்கு சம காலத்தில் இந்தியாவிலும் இதைப் போல ஒரு மதிப்பீடு சாத்தியமில்லை ,இந்திய துணைக் கண்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் கற்காலத்தில் பத்து சதுர மைல்களுக்கு ஒருவருக்கு மேல் இருந்திருந்தால் அதுவே மிகவும் வியப்புள்ளது.

இப்படி இருந்த காலத்தல் இருந்து மீண்டு சிந்துவெளி நாகரிகத்தில் வெண்கலத்தின் பயனை அறிந்தது மனித சமுதாயம்.

அதன் பிறகு துருக்கியரின் படையெடுப்பின் பின் இரும்பை இரும்பின் பயனை அறிந்தார்கள் ,அதையே ஹிட்டைடு காலம் என அறிகிறோம்.

உலோகங்களின் பயன்களை ஒவ்வொன்றாய் அறிந்த பின்பே மனிதனின் நாகரிக வளர்ச்சி படிப்படியாக நிகழ்கிறது.

வடக்கே மௌரிய சாம்ராஜ்யம் நிலை பெற்று விட்ட போதிலும்தென்னிந்தியாவில் குறிப்பிட்டுச் சொல்லும் படியான எந்த ஒரு பேரரசுகளும் தோன்றி இருக்க காணோம்.

கி,மு மூன்றாம் நூற்றாண்டில் வடக்கே பெரிய சாம்ராஜ்யங்கள் தோன்றி விட்டன. ஆயினும் தெற்கில் முற்கால சோழர்கள் நலங்கிள்ளி,நெடுங்கிள்ளி , கல்லணை கட்டிய கரிகால் சோழன் ஆட்சியெல்லாம் கி.மு ஒன்றாம் நூன்றாண்டில் தான் இங்கே நிகழ்ந்தது .கரிகாலனுக்கு முன்பு சொல்லிக் கொள்ளும் படியான பேரருசுகள் எதுவும் தென்னிந்தியாவில் இல்லை எனலாம் .

கி.மு இரண்டாம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவனின் இளவல் இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் படைத்தார் .சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இன்னுமுள்ள பதினெண் கீழ்கணக்கு நூல்களும்,பத்துப் பாட்டு,எட்டுத் தொகை நூல்களும் இல்லா விடில் நாம் தென்னிந்திய வரலாற்றை கிஞ்சித்தும் அறிந்திருக்க வழி வகை இல்லை.


மதுரையைப் பொறுத்தவரை கோவலனைக் கொன்றவனாக கண்ணகியால் குற்றம் சாட்டப் பட்ட பாண்டியன் நெடுஞ்செழியனை அறிய முடிகிறது .இவர்களே அன்றைய தென்னிந்திய அரசுகள்.

நமது கண்ணகி தான் சேர நாட்டில் பகவதி என்ற பெயரில் உக்கிர தேவியாக வணங்கப் படுகிறாளாம்.


சமீபத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பில் அயோத்தியில் ராமர் பிறந்த செய்தி ஊர்ஜிதம் செய்யப் பட்டது .அது உண்மை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தன்ர். ராமன் பிறந்த அயோத்தி பண்டைய இந்தியாவில் முதன் முதலில் நிலவிய இரு அரசுகளான மகதம் மற்றும் கோசலத்தில் கோசல நாட்டின் பிற்காலத்திய தலைநகராக விளங்கியது.

சரித்திரப் படி ராமன் நாடு கடத்தப் படும் தண்டனையை வலிந்து ஏற்றுக் கொண்ட பின் அவன் தெற்கு நோக்கி கடந்து வந்த பாதையே தட்சினாபதம் எனும் தெற்கு நோக்கிய பிரபல வியாபார கேந்திரப் பாதையானது ,அதாவது வர்த்தகப் பாதை. அப்படி எனில் ராமன் எனும் இளவரசன் நாடுகடத்தப் பட்டு காடுகளில் புகுந்து புறப்பட்டு தென்னிந்தியாவை நோக்கி வந்த இதிகாசக் கதை உண்மையாக்கப் படுகிறது. மேலும் இன்னும் பற்பல தொடர்புபடுத்தப் தக்க உதாரணங்கள் அநேகம் விதேகர்கள் அல்லது வைதேகர்கள் என்போர் மிதிலையை ஆண்டனர். வைதேகர்கள் என்போர் வணிகர்கள் என்கிறது வேதம். அந்த மிதிலை மன்னனின் மகளே வைதேஹி என்றும் அழைக்கப் படும் ஜானகி என்ற சீதா பிராட்டி .


இப்படி இதிகாசக் கதைகள் மற்றும் வேதங்களில் உள்ள குறிப்புகளின் துணை கொண்டு நாம் நமது பண்டைய இந்தியா குறித்த சித்திரத்தைப் பெற முடிகிறது. பிற்காலப் பிராமணர்கள் செய்த பயனுள்ள காரியம் புராதனப் இந்தியப் பழங்குடிகள்(ஓரண,சந்தால்,புரூக்கள்,அலினார்கள்,மத்சியர்கள்,மோர்கள்(மௌரியர்கள்),லிச்ச்சாவிகள் , வணங்கிய தாய் தெய்வங்கள் மற்றும் ஆரியப் படையெடுப்பின் பின் வணக்கத்திற்கு ஆளான இந்திரன்,வருணன் ,மித்திரன், கிருஷ்ணன் ( கிருஷ்ணன் ஆரியன் அல்லன் ...ஆரியர்களுக்கு எதிரான தஸ்யூக்கள் குலப் பிரிவான யதுக்களின் தலைவன்) அவனையும் பிற்காலத்திய பிராமணர்கள் ஒன்றிணைத்து ஒருங்கிணைத்து எல்லோரும் பொதுவில் வணங்கும்  பெரு (பெரும் தெய்வங்கள்)தெய்வங்கள் ஆக்கினர். அதோடு அந்த தேவன்கள் அனைத்திற்கும் அவர்களே உரிமையாளர்கள் என்பதாய் பிரகடனம் செய்து கொண்டனர். இப்படி விரிந்து செல்கிறது இந்திய சரித்திரம்.

ஒவ்வொரு பக்கத்தையும் இரண்டு மூன்று முறை வாசிக்க வேண்டி இருக்கிறது. வருடங்கள் ,மன்னர்கள்,பழங்குடிப் பிரிவுகள்,நதிக்கரை நாகரிகம் என்ற நிலை தாண்டி உட்புறத்து அடர் கானகங்கள் அழிக்கப் பட்டு பழங்குடி விவசாயம் பலப் பட்ட நிலை( இந்த நிலை வர உலோகங்களின் கண்டுபிடிப்பும் அவற்றின் பயனை அறிதும் முக்கியமானது) காடுகளை அழிக்க கடினமான இரும்பின் பயன் அத்தியாவசியமானது. இப்படி இரும்பு கண்டு பிடிக்க பட்ட பின்பே நிலையான வேகமான முன்னேற்றம் நிகழ்ந்தது எனக் கொள்ளலாம்.


இன்னுமிருக்கிறது   அடுத்த பதிவில் தொடரும்.


ஆதார நூல்கள் :

 

பண்டைய இந்தியா -D .D .KOSAMBI

மித் அண்ட் ரியாலிட்டி  -D .D .KOSAMBI

பதினோராம் வகுப்பு -வரலாறு புத்தகம்

THE  HISTORY  OF  ARYAN  RULE  IN  INDIA - E .B .HAWELL  






Wednesday, November 10, 2010

யாருக்கு தருவீர்கள் மனநல சிகிச்சை ?!



கோவை சிறுவர்கள் இரட்டைக் கொலை சம்பந்தமாகவும் குற்றம் சாட்டப் பட்ட மோகன் ராஜ் என்கவுண்டர் தொடர்பாகவும் பல்வேறு கருத்துகள் நிலவும் இந்த வேளையில் பலரது முக்கியமான ஆச்சரியம் என்னவேனில் நாடெங்கும் பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவதும் குற்றம் வெளித் தெரியாமல் இருக்க கொலை செய்யப் படுவதும் தொடர்ந்து பத்திரிகைகள் தொலைகாட்சி ஊடகங்கள் வாயிலாக பரவலாக தினசரி நிகழ்வாக ஆகி விட்ட இன்றைய நிலையில் இந்த கொலைகளுக்கு இத்தனை முக்கியத்துவம் ஏன் என்பது பெருவாரியானவர்களின் சந்தேகமாக ஆகி விட்டிருக்கிறது. 

     

உலகில் எங்கெலாம்  குழந்தைகள்   மனிதத்தன்மையற்ற மிருகங்களால் துன்புறுத்தப் படுகிறார்களோ அங்கெலாம் உடனே மகாப் பெரிய கடவுள் பிரத்யட்சமாகி அவர்களை தண்டிப்பானே எனில் இந்தச் சந்தேகம் அவர்களுக்கு வந்திருக்காது.


கடவுள் கூட பாரபட்சம் பார்ப்பாரென்றே நினைக்க வழி இருக்கிறது பாருங்கள்


சொல்ல வந்த விஷயம் அதுவல்ல;

அந்த இரு குழந்தைகளும் கொலை செய்யப் பட்ட விதம் ,அவர்களுக்கு நன்கு அறிமுகம் ஆன பள்ளி வேன் டிரைவரால் ,உங்களுக்குத் தெரியாதா தமிழகத்தில் முக்கால்வாசிப் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தனியார் வேன்களையும் ஆட்டோக்களையும் நம்பி இருக்கின்றனர் என்பது. அப்படிப் பட்ட நிலையில் ஒரு கால்டாக்சி டிரைவரால் திட்டமிட்டு நடத்தப் பட்டதாக ஒப்புக் கொள்ளப் பட்ட இந்த கொடூரச் செயல் அதீத மிரட்சியுடன் தான் பலராலும் கவனிக்கபட்டுள்ளது என்பதில் என்ன பெரிய ஆச்சர்யம் இருக்கக் கூடும்?

அந்தக் குழந்தைகளின் பாட்டி அவர்கள் இருவரும் வேனில் ஏறும் போது உடனிருந்து கண்காணித்திருக்கிறார். மீண்டும் மோகன்ராஜ் வேலையில் இருந்து நின்று விட்டார் என்ற செய்தியும் மற்றொரு டிரைவரால் உடனே தெரிவிக்கப் பட்டிருக்கிறது. உடனுக்குடன் பள்ளியில் குழந்தைகள் இருக்கிறார்களா என்பதை அறிந்து கொண்டு உடனே சந்தேகித்து தேடத் துவங்கி இருந்தால் ஒரு வேளை அந்தக் குழந்தைகள் அட்லீஸ்ட் உயிர் சேதம் இல்லாமல் மீட்கப் பட்டிருக்கக் கூடும் என்ற பரிதவிப்பெல்லாம் இப்போது வருகிறது .


யாருடைய மெத்தனம் இந்த இரட்டைக் கொலைகளுக்கு காரணம்?

பள்ளிக்கு குழந்தைகளை வேனில் அனுப்பும் பெற்றோர்களுக்கு எல்லாம் இது மிக அதிர்ச்சிகரமான மட்டுமல்ல உள்ளுக்குள் நடுக்கத்தை ஏற்படுத்திய செய்தி அந்த வகையில் கூட இந்த செய்தி வழக்கத்தை விட அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கலாம் .

மோகன் ராஜ் மட்டுமே குற்றவாளி என்பதை அவனது என்கவுன்டருக்குப் பின் முழுவதுமாக நம்ப இயலவில்லை. இந்த கொடூரச் செயலுக்கு நிஜ காரண கர்த்தாவாக அதிகார பலமிக்க அந்தக் குழந்தைகளின் தகப்பனாரின் தொழில் முறை எதிர்கள் அல்லது வேறு எதோ ஒரு காரணத்திற்காக எதிரிகள் ஆனவர்கள் (இந்த நாட்டில் ஒருவருக்கொருவர் எதிரிகள் ஆவதற்கு காரணங்களுக்கா பஞ்சம்! ) இப்படி வேறு எவரேனுமாக இருந்து மோகன்ராஜ் போன்றோரை எய்து விட்டிருக்கக் கூடும் எனவும் சந்தேகிக்க இடமிருக்கிறது. சாட்சியங்கள் அற்ற நிலையில் இன்னும் சந்தேகங்கள் வலுப்பெறவே செய்கின்றன. போலீஸ் அவனை கொன்றது சரி தான் அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இத்தனை அவசரம் ஏன் என்னுமிடத்தில் எதையோ அல்லது யாரையோ மறைக்க இப்படி என்கவுண்டர் செய்தார்களோ என்ற பலத்த சந்தேகம் தோன்றுவது தவிர்க்க முடியாதது.

நண்பர் சென்ஷியின் buzz செய்தி

//கடந்த ஏழாம்தேதி திருக்காட்டுப்பள்ளி அருகே கீர்த்திகா எனும் பத்து வயது சிறுமி பாலியல்  உங்களுக்கு தேவையில்லாமல் போகலாம். ஆனால் எட்டாம் தேதி இந்த செய்தியை படித்தவர்கள், கோவை சம்பவத்துக்கு நிகராக இந்த செய்திக்கும் கொந்தளித்தவர்கள், அதை அக்கறையோடு பின்தொடர்ந்தவர்களின் வசவுகளை நான் முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன். இந்த பட்டியலில் வராதோர் கொஞ்சம் சிந்தியுங்கள், உங்கள் புறக்கணிப்பைப் பற்றியும் உங்கள் ஊடகங்களின் பாராமுகத்தைப் பற்றியும்.//

இது மட்டுமல்ல சென்ஷி இப்படி பட்டியலிட ஏராளமான செய்திகள் இருக்கின்றன. சொல்லப் போனால் அந்த செய்திகளை பின்தொடர்ந்தால் நாம் ஒரு நிமிடமேனும் நிம்மதியாய் இருக்க முடியாது. தினம் தினம் அத்தனை அநியாயங்கள் கண்ணில் படும் செய்திகள் அப்படி.

பெயர் ஊர் ஞாபகத்தில் இல்லை ,நான் வாசிக்க நேர்ந்த சில சில சம்பவங்களை இங்கே தருகிறேன் ,படித்துப் பாருங்கள் ;

கொடைக்கானலில் என்று நினைவு ஒரு பாதிரியார் அனாதைக் குழந்தைகளுக்கு என ஆசிரமம் நடத்தி அதற்கு அயல்நாட்டு கிறிஸ்தவ அமைப்புகளிடம் இருந்து நிதி வசூல் செய்து வந்திருக்கிறார் ,அந்தப் பாதிரியாரின் தினசரி நடவடிக்கை என்ன தெரியுமா? சொல்லித் தான் தீர வேண்டும் பருவம் அடைந்த அடையாத என்ற பாரபட்சமே இல்லாமல் பெண் குழந்தைகள் அத்தனை போரையும் தனது வரைமுறையற்ற காமத்திற்கு பலியாடுகள் ஆக்கி இருக்கிறான் . செய்தி எப்படியோ கசிந்து அந்தக் குழந்தைகள் காப்பற்றப் பட்டதாக நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது. இப்போது அந்தக் குழந்தைகள் என்ன ஆனார்கள் ? அந்தப் போலி பாதிரியார் சிறையில் தள்ளப் பட்டானா சுட்டுக் கொள்ளப் பட்டானா என்பதெல்லாம் வெறுமே பரபர செய்திகளுக்காக பத்திரிக்கை வாசிக்கும் நேயர்களுக்கு அனாவசியம் .

மற்றொன்றும் கொடைக்கானல் செய்தி தான் அங்கே ஒரு பள்ளியின் தாளாளர் பள்ளி ஹாஸ்ட்டலில் தங்க படித்து வந்த பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக காவல் துறை விசாரணைக்குட்படுத்தப் பட்டார் என்பதும் சமீபத்திய பத்திரிக்கை செய்தி தான்.



இவர்களை விடுங்கள் அரசு டாஸ்மாக்கில் அள்ளும் லாபம் எவ்வளவோ எனக்குத் தெரியாது ,ஆனால் மனதை திடப் படுத்திக் கொள்ளுங்கள் எவனோ ஒரு மொடாக் குடி நிர்மூடத் தகப்பன் தன மனைவியிடம் கொண்ட சந்தேகம் அளவற்றுப் போய் தான் பெற்ற பெண் குழந்தையையே பாலியல் வன்முறை செய்திருக்கிறானாம். இவ்விடத்தில் பெண் குழந்தை அவனுக்குப் பிறந்ததா இல்லையா என்று ஆராய்தலை காட்டிலும் அதிர்வைத் தந்த விஷயம் அந்தக் குழந்தையின் மீது தொடர்ந்து நடத்தப் பட்ட இந்த கொடூரத்தை பெற்ற தாயே பல நாட்கள் மறைத்து வந்திருக்கிறாள் என்பது தான்.

யாருக்குப் பிறந்திருந்தாலும் குழந்தைகள் குழந்தைகளாக மட்டுமே நடத்தப் பட வேண்டும் என்பதில் யாருக்கேனும் இங்கே மாற்றுக் கருத்து உண்டா?!

குழந்தைகள் என்ன தான் செய்வார்கள்?! கணவன் மனைவிக்குள் சந்தேகம் மிஞ்சிப் போனால் இப்படிப் பட்ட வக்கிரங்களை கண்ணாரப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதை விட அரசு அல்லது தனியார் அநாதை ஆசிரமங்களில் அல்லது தொண்டு நிறுவனங்களில் சேர்த்து விட்டுப் போவதற்கென்ன ?

அங்கேயும் நம்பகத் தன்மை கேள்விக்குறி என்றால் !

இந்த ஒரு செய்தி மட்டுமல்ல இதே ரீதியில் பாதிக்கப் பட்ட இன்னும் சில பெண் குழந்தைகள் மற்றும் அவர்களது அம்மாக்கள் அப்பாக்களின் புகைப்படங்களோடு ஜூ.வி யோ குமுதம் ரிப்போர்ட்டரோ எதுவோ செய்தி வெளியிட்டிருந்தது. பெயரளவில் அப்பாக்களாகி விட்டால் போதுமா ,அந்த உறவைக் கொச்சைப் படுத்தும் இவர்களை என்ன செய்வது

முன்னெப்போதோ சில ஆண்டுகளுக்கு முன் ஜூ.வி யில் ஒரு தொடர்கதை (ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப் பட்டது ) வாசித்த நினைவு வருகிறது.

சிந்தியா என்ற பெண் தான் கதையின் மூலம் அவள் காவல் துறையில் உயர் பதவி வகித்த தன் தகப்பனால் இதே ரீதியில் பலாத்காரம் செய்யப் பட்டதால் மனசிதைவுக்கு ஆளாகி முடிவில் தானும் திட்டமிட்டு காவல் துறையில் இணைந்து தன் தந்தையையும் தந்தையின் தகாத நடவடிக்கைகள் தெரிந்தும் பேச்சற்று கோழையாய் இருந்த தாயையும் கொடூரமாக கொலை செய்கிறாள். இந்தக் கதை வாசித்த அந்நாளில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது .

இன்னொரு செய்தி இரண்டரை வயதுக் குழந்தையை மில் வேலைக்கென்று ஓசூரில் பஞ்சம் பிழைக்க பீகாரில் இருந்து தமிழகம் வந்த மூடன் ஒருவன் அதைத் தூக்கிக் கொண்டு போய் அநியாயம் செய்திருக்கிறான்.குழந்தையை கொல்லவும் செய்திருக்கிறான்.

இன்னும் பல செய்திகள் இப்படி , ஆக ஊடகங்களில் குழந்தைகளுக்கு எதிரான பலதரப் பட்ட அநீதிகளை தினமும் நம்மில் பலரும் வாசித்துக் கொண்டு தான் இருக்கிறோம் ;ஒவ்வொன்றாய் பட்டியிலிட்டால் ஒட்டு மொத்தமாய் வாசிப்பவர்களுக்கு பைத்தியம் பிடிக்கும் .

சிலர் சில செய்திகளை வாசிக்காமல் தவற விட்டிருக்கலாம் .செய்தி ஒன்று தான் நாட்டில் எத்தனை சட்டங்கள் போட்டாலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறையவில்லை. பெற்றோர்கள் இன்னும் தங்களது ஜாக்கிரதை உணர்வை அதிகப் படுத்திக் கொண்டு சதா தங்களது குழந்தைகளின் மீதான கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது .

இங்கே பலரது கேள்வியும் ...சுடப்பட்டவனுக்கு பின்புலத்தில் அதிகார பலமோ ,பணபலமோ இருந்திருப்பின் இந்த என்கவுண்டர் நடந்திருக்காது என்பதாக இருப்பதால் ஒன்றை மறந்து விடக் கூடாது , நாம் அறிந்தவை அனைத்துமே ஊடகச் செய்திகள் மட்டுமே.

உண்மையில் நடந்தது என்ன என்பதைக் குறித்து முழுமையான நிஜங்கள் நமக்குத் தெரியாது.மோகன்ராஜ் தன் வாய்மொழியாக குற்றத்தை ஒத்துக் கொண்டான் என்பது நிஜம் எனில் (அந்தக் குழந்தைகளை எப்படியெல்லாம் கடத்தி எப்படியெல்லாம் சித்திரவதை செய்து எப்படி ஓடையில் மூழ்க விட்டுக் கொன்றோம் என மோகன் ராஜும் அவனது கூட்டாளியும் காவல் துறையினரிடம் விவரித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன,உண்மையில் கொலை செய்யாதவன் இப்படியெல்லாம் விவரிக்க வேண்டிய அவசியம் என்ன? !)அவனை சுட்டுக் கொன்றதில் மேலே பேசவோ விவாதிக்கவோ என்ன இருக்கிறது.

கன்னட பிரசாத் குறித்த பர பரப்பு செய்திகளின் போதென்று நினைக்கிறேன், எந்தப் பத்திரிகை என்று நினைவில்லை பழுத்த அரசியல் பெரும் புள்ளி ஒருவருக்கு பள்ளிச்சிறுமிகள் என்றால் அத்தனை விருப்பமாம்! மகாநதி திரைப்படக் கதை தான். படத்தை போல எந்த ஒரு அப்பாவும் இப்படிப் பட்ட பெரும் புள்ளிகளை கொன்று மாடியில் இருந்து வீசியதாக ஊடகச் செய்திகள் எதுவும் காணோம் .

இந்த நாட்டின் சாபக்கேடு இது. எளியவர்கள் என்ற நிலை இருக்கும் வரை வலியவர்கள் எனும் நிலையும் இருந்து கொண்டிருக்கும் தானே!

இதே கொலைகளை அதிகார பலமிக்க ஒருவன் செய்திருந்தால் அவனையும் என்கவுண்டர் செய்வார்களா என்று விவாதித்து தயவு செய்து செய்தியை திசை திருப்பாதிர்கள். யார் செய்திருந்தாலும் அவர்கள் கொல்லப் பட வேண்டியவர்கள் தான். ஆனால் எத்தனை பேர் அப்படிக் கொல்லப் பட்டார்கள் என்று பதில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள் ...பூனைக்கு மணி கட்டுவது யார்? ! 

அதிஷாவின் தளத்தில் வாசித்தது ...

//சமூக குற்றங்களுக்கு மரணதண்டனைகள் எப்போதும் தீர்வாகாது. அதற்கான வேரை கண்டறிந்து அதை களைவதே சிறந்தது. உண்மையில் மோகன்ராஜிற்கு தேவை நல்ல மனநல மருத்துவர். அவனை இந்த குற்றத்திற்கு தூண்டியது எது என்பதை கண்டறிந்து இன்னொரு முறை இப்படி ஒரு வக்கிரம் நடக்காமலிருக்க வேரிலேயே பிரச்சனைகளை தீர்க்க முனையவேண்டும். ஆனால் மக்களுடைய மனதில் ஒரு இன்ஸ்டன்ட் மகிழ்ச்சியை அளிப்பதன் மூலம் எதை மறைக்க முயல்கிறது தமிழக அரசு. இங்கே ஒவ்வொரு நாளும் இதுமாதிரியான ஆட்கடத்தல்களும் கொலைகளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதில் மாட்டிக்கொண்ட ஒருவனை கொன்றாகிவிட்டது. மற்றவர்கள்?//


இந்தக் கொலைகள் மற்றும் தொடர்ந்த என்கவுண்டர் மூலம் ஒரு விஷயம் தெளிவாகிறது.அது  மக்களின் மாறுபட்ட மனநிலைகள். மோகன்ராஜுக்கு அளிக்கப் பட்டிருக்க வேண்டியது என்கவுண்டர் அல்லது மன நல சிகிச்சை என்போருக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது ;
 
ஈழத்தை ஏன் மறந்தீர்கள் ?
 
அங்கே நிகழ்த்தப் பட்ட இன்னும் நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைகளின் பொறுப்பாளர்களுக்கு  எல்லாம் மன நல சிகிச்சை தான் தரப்பட்டாக வேண்டுமா? முடியுமா அது? ஏன் வீரப்பனைத் தேடுகிறோம் என்று பழங்குடிப் பெண்களை பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினார்களே தமிழக ,கர்னாடக காவல் துறையினர் அவர்களுக்கும்  மன நல சிகிச்சை தர முடியுமா? சதாம் உசேனை ஏன் தூக்கில் போட்டார்கள் ? அவருக்கு மன நல சிகிச்சை தந்திருக்கலாம் தானே? இன்னும் ஹிட்லர் ,இடி அமீன் இப்படி பட்டியலை நீட்டிக் கொண்டே போனால் நம் பெயரும் கூட கடைசியில் வரும் அபாயமிருக்கலாம்.யாருக்கு மனநல சிகிச்சை அளிப்பது? 
 
எந்த படம் என்று நினைவில்லை,
 
"  பதினோரு வயசுப் பொண்ணு ,கையில் ஒரு மிட்டாயை வச்சு அழுத்தி காரியத்தை முடிச்சிட்டேன் "  என்று சிரிப்பான் ஒரு சிறுமியைக் கொன்றவன் ;; கேள்வியே கேட்காமல் சுட்டுக் கொல்வார் அவனிட பேசிக் கொண்டிருக்கும் காவல் துறை அதிகாரி. இதே ட்ரீட்மென்ட் தான் இவ்விதமாக குற்றத்தில் ஈடுபடும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் என்ன சந்தேகம்? .
 
மக்களின் உணர்வு எதிர்பார்ப்பு இது தான்.
 
 
சிலர் இந்த என்கவுன்டரை மட்டுமே பெரிதாக்கி சமுதாயத்தின் மீதான தங்களது தார்மீகக் கோபங்களை வெளிக்காட்டுகின்றனர்.
 
சிலர் அதிஷா  சொன்னது போல இன்ஸ்டன்ட் மகிழ்ச்சி பரவாயில்லை என்று நிம்மதி  அடைந்து விடுகிறார்கள்.


பூனைக்கு மணி கட்டுவது யார்? விவாதங்களால் ஆகப் போவது என்ன?

இறந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

இறந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தி அடையட்டும்.



Monday, November 8, 2010

அவஸ்தைகள் இலவசம் ...( கவிதை )






பின்னலில் இட்ட பூ கொதித்துக் கசங்க

ஜன்னல்  வழி பாயும் வெருகாய் 

தாவிப் பறந்திட்ட துன்பக் கேணி; 

இட்டமிலா தெய்வச் சடங்காய்

இன்னமும் உச்சித் திலகம் 

பட்டுத் தெறிக்கும் விழியெலாம் 

கானல் நீர் அமிலக் கரைசல் ;

மின்னட்டாம் பூச்சியாய் தூரத்தே

சிணுங்கும் கொலுசொலி ...

சிந்தூர சந்தன வாசம் 

ஊடற்பொழுதாயினும்,

கூடற்பொழுதாயினும், 

யாதொன்றும் பிடிபடா திக்கில்

செப்பிடு வித்தையாய்
 
செவ்வாய்க்குப் பின் சங்கில் 

அடைக்குமோர் மென்பந்து

அவஸ்தைகள் இலவசம் ;

பொருள் வழிப்  பிரியினும்

பகை வழிப் பிரியினும்

விதி வழிப் பிரியினும்

பிரிவு பிரிந்தோர் மாட்டே ... 









Wednesday, November 3, 2010

ஈசி சைட் டிஷ் ரெஸிபி ...(தீபாவளியை முன்னிட்டு!?)




பல நாட்கள் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள என்ன செய்யலாம் என்ற குழப்பம் தலைமுடியைப் பிய்த்துக் கொள்ள வைத்திருக்கிறதா யாருக்கேனும்? !


கவலை வேண்டாம் இதோ உங்களுக்கு சில நல்ல தீர்வுகள் ;))

வெறும் சப்பாத்தியை எண்ணெய் இல்லாமலோ எண்ணெய் விட்டோ தோசைக் கல்லில் போட்டு எடுத்துக் கொள்ளவும். அதற்கான சைடு டிஷ்கள் பின்வருமாறு;

(சப்பாத்திக்கு திட்டமாக அல்லது வயணமாக மாவு பிசைவது எப்படி என்ற கஷ்ட்டமான கேள்வியெல்லாம் கேட்பவர்கள் மேலே படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் ,அதெல்லாம் நேரத்திற்கு ,மனநிலைக்குத் தக்க மாறுபடும் கலை,ஸ்பெசல் கோச்சிங் கிளாஸ் தான் போக வேண்டும் )

தேவையான பொருட்கள்:

ஏதாவது ஒரு காய் - எந்தெந்த காய்கறிகள் என்பதை கீழே பட்டியல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
பெரிய வெங்காயம் - ஒன்று அல்லது இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு அல்லது நான்கு
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பூண்டு - உரித்தது மூன்று அல்லது நான்கு பல் (பூண்டு பிடிக்காதவர்கள் தவிர்த்து விடலாம்)

முட்டை ரெஸிபி :

செய்முறை ரொம்ப சிம்பிள் ,ஒன்றோ இரண்டோ ஆட்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு முட்டைகளை உடைத்து அதில் கொஞ்சம் மிளகு அல்லது மிளகாய்த் தூள் அல்லது பச்சை மிளகாய் பிளஸ் சால்ட் கலந்து நன்றாக அடித்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்,வாணலியில் ஒரு டி ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்த கலவையை ஊற்றி வாணலியில் ஒட்டாத பக்குவத்தில் கிளறி ஸ்டவ்வை அனைத்து விடவும்.

இந்த முட்டை வறுவலை ஏற்கனவே சுட்டு வைத்த சப்பாத்திக்கு நடுவில் கொட்டி சுருட்டி சாப்பிடலாம். ஒரு ரெசிபி முடிந்தது .(எவ்ளோ சிம்பிள் ரெஸிபி !)

முட்டை போலவே தான் காய்கறிகளுக்கும் ஒரே செய்முற தான்.

வெஜிடபிள் ரெஸிபிக்கள் :

இதே போலத் தான் வெண்டைக்காய்,கத்தரிக்காய்,முருங்கைகாய் தவிர மற்ற காய்கறிகள் கேரட்,பீட்ரூட்,முட்டைகோஸ்,சுரைக்காய்,பூசணிக்காய்,ஹைபிரிட் புடலை,குடை மிளகாய் ,சவ் சவ்,அவரைக்காய்,பீன்ஸ்,பீர்க்கை,முள்ளங்கி,வாழைத்தண்டு ,வாழைக்காய் சிலர் விரும்ப மாட்டார்கள் ,இல்லா விட்டால் அதையும் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

இப்படி எல்லாக் காய்களையும் முறையே தனித்தனியே வெங்காயம்,பச்சை மிளகாய் மட்டும் நறுக்கிக் கலந்து பச்சை வாசம் போகும் மட்டும் வதக்கி ஈசியாக சப்பாத்தி மட்டும் செய்து வைத்துக் கொண்டு அதன் நடுவில் இந்தக் காய்கறிகளைக் கொட்டி சுருட்டி டைனிங் டேபிளில் வைத்து விட்டு வெகு எளிதாக சமையலை முடித்து விடலாம்.

காலை நேர பரபரப்பில் இது ரொம்ப எளிதான ரெஸிபி தான் இல்லையா?

சப்பாத்தி செய்யத் தெரியாது ...ஆனால் ஹெல்த் கான்சியஸ் மக்கள் எனில் ப்ரெட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் ,எப்போதும் ஜாம் அல்லது ,சீஸ் ,பட்டர் போரடிக்கும், சும்மா இப்படி பொரியல் செய்வதைப் போல காய்கறிகளை வதக்கி , ப்ரெட் சூடு செய்து நடுவில் வைத்து சாப்பிடுங்கள் . சுவையாக இருக்கும்.

ஒரு நாளைக்கு ஒரு காய் என்ற கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம், எல்லாக் காய்கறிகளையும் கலந்து விடாதீர்கள்.அப்புறம் திரும்பவும் காய்கறிகள் வாங்க கடைக்கு அலையை வேண்டும். கூடவே நாட்டுக் காய்களோடு இங்கிலீஷ் காய்கள் கலந்து செய்தால் கண்றாவியாக இருக்கும் டேஸ்ட் :((

உதாரணம் :

பீட்ரூட்டையும் வாழைகாயையும் கலந்து விடாதீர்கள் . எல்லாக் காய்களுக்கும் தனித்தனியே மட்டுமே சுவை,சிறப்பு உண்டென்பதை இந்த ரெசிபி மூலம் நிரூபிக்கலாம் .

கேரட் பீட்ரூட் கூட கலந்து விட்டால் கலர் குழைந்து பயங்கர எபெக்டில் இருக்கும் பார்வைக்கு :(

கேரட்டையும் முள்ளங்கியையும் கலக்கலாம் (சிலருக்குப் பிடிப்பதில்லை)

முட்டைகோசையும்,கேரட்டையும் கூட கலக்கலாம்

பீன்ஸில் முட்டை கலக்கலாம் .

புடலங்காயில் முட்டை கலந்து வதக்கலாம் .

அவரைகாய் மற்றும் சுரைக்காயில் முட்டை கலந்தால் வாயில் வைக்க விளங்காது. :(

பூசணிக்காய் செய்யும் போது ஒரு ஸ்பூன் சர்க்கரை அல்லது ஒரு கியூப் வெல்லம் கூடவே மிளகாய்க்கு பதில் மிளகாய்த் தூள் சேர்த்துச் செய்யலாம் .

முழு கட்டுரையும் படித்து விட்டு(யாராவது ஒருத்தராச்சும் படிக்காமலா போய்ட போறாங்க ) யோசனை இல்லாமல் எல்லாக் காய்கறிகளையும் போட்டு வாயில் வைக்க சகிக்காமல் சைட் டிஷ் செய்து விட்டு ரெஸிபி எழுதியவர்களை கோபித்துக் கொள்ளுதல் மிக மிக அநியாயமான செயல் என்பதை மட்டும் கடைசியாகச் சொல்லிக் கொள்கிறேன் .

டிஸ்க்கி :

கொஞ்சம் காமெடியாக எழுதி இருந்தாலும் இது ஒரு சீரியஸ் பதிவே என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க கூடாது .


Tuesday, November 2, 2010

சம்பவாமி யுகே யுகேவும் மனம் நடுங்க வைத்த சம்பவங்களும் ...



மனம் நடுங்க வைத்த சம்பவம் 1  :


அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் பள்ளி முடிந்து வந்ததும் மாலையில் தினமும் பூ விற்றுக் கொண்டிருந்த  சிறுவன் காளீஸ்வரன் லிப்ட் கதவில் சிக்கி காலில் தொடங்கி உடல் இரண்டாகப் பிளக்கும் வண்ணம் துடிக்க துடிக்க ரணப்பட்டு இறந்துள்ளான் ,இது விபத்தா ? இது விபத்தில் சேர்த்தியா? அலட்சியம் தானே முதல்  காரணம் , லிப்ட் ஆப்பரேட்டர்கள் என்ன ஆனார்கள்? மெயிண்டனன்ஸ் என்ற பெயரில் வீடு ஒன்றிற்கு ரூ 1000  இல் இருந்து 2000  வரை வசூலிக்கும் அபார்ட்மென்ட் அசோசியேசன் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
 
 
சென்னை முழுக்கவும் இப்போதும் பேப்பர் போடுவது, அடுக்குமாடிக் குடிஇருப்புகளில்  பூ விற்பது ,பால் பாக்கெட் போடுவது ,இஸ்திரிக்கு துணிகள் வாங்கிப் போவது, போன்ற வேளைகளில் பெரும்பான்மையும் சிறுவர்களும் சிறுமிகளும் தான் ஈடுபடுத்தப் படுகின்றனர். பீச்சில் ,பார்க்கில் சுண்டல் விற்கும் சிறுவர்களே இல்லை எனும் நிலையை  முற்றிலுமாக ஏற்படுத்த  முடியவில்லையே அரசின் குழந்தைத் தொழிலாளர் தடுப்பு மற்றும் சிறுவர் நல மேம்பாட்டுத் துறையினரால்.


 மனம்நடுங்க வைத்த  சம்பவம் 2  :

 
கோவை ஜெயின் சமூகத்து குழந்தைகள் இருவர் வழக்கமாகப் பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருந்த கால் டாக்சி டிரைவரால் கடத்தப்பட்டு கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். பிசாசு பிடித்த மிருகங்கள் அந்தப் பெண் குழந்தையை  பலாத்காரம் செய்திருக்கின்றனர் .விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ள  குற்றவாளிகளுக்கு மேல் விசாரணை தேவையா கல்லால் அடித்தே கொன்றால் என்ன?
 
"பரித்ராணாய ஸாதூனாம்  விநாசாய ஷதுஸ்க்ருதாம் 
தர்ம  சம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே "-
 
எங்கே போனார்கள் நம் கடவுளர்கள்?!
 
அந்தச் செய்தியை வாசித்ததில் இருந்து மனம் ஒரு நிலையில் இல்லை.  இயலாமை மிகுந்த கோபத்தில்  உலகில் எங்கெலாம் விவரம் அறியா சிறுவர்கள், சிறுமிகள் பலவந்தப் படுத்தப் படுகிறார்களோ ,அட்லீஸ்ட் அப்போதேனும் அங்கேனும் கிருஷ்ணா பரமாத்மா ஏன் வந்து காப்பாற்றாமல் போனார்?! என்று லூசுத்தனமான சிந்தனை எல்லாம் வந்து போனது.
 
அவசியமோ இல்லையோ தினமும் வேனிலும் பள்ளிப்பேருந்திலும் பள்ளிக்குப் போய்வரும் குழந்தைகளிடம் இரவில்  தூங்கப்  போகும் முன் பள்ளியிலும் வேனிலும் நிகழ்ந்த  அன்றைய சம்பவங்களை பேச்சு வாக்கில் விசாரித்து வைப்பதே ஆரோக்கியமானது,சில நேரங்களில் பெற்றோர் குழந்தைகள் தாமாக சொல்ல வருவதைக் கூட கேட்டுக் கொள்ள விரும்பாமல் அவர்களை சாப்பிட வைப்பதிலும் தூங்க வைப்பதிலும் வீட்டுபாடம் முடிக்க வைப்பதிலும் தான் முனைப்பாக இருக்கிறோம்.சிறுவர்களுக்கெதிரான பல அநீதிகளின் ஆணி வேர்  இது தான். இங்கிருந்தே ஆரம்பமாகிறது நம் குழந்தைகளுக்கு எதிரான செயற்பாடுகள். குழந்தைகள் தமது சந்தேகங்களையும் கவலைகளையும் பகிர்ந்து கொள்வதற்கு பெற்றவர்களைக் காட்டிலும் நம்பிக்கைக்குரிய நபர்கள் வேறு யாராகவும் இருக்க முடியாது.
 
இந்த அவசர யுகத்தில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நிகழலாம்,எல்லாம் ஒரு வினாடி செய்தியாக ப்ளாஷ் நியூசில் மின்னி மறைந்து விடும். பாதிக்கப் பட்டவர்கள் காலத்திற்கும் அழுது கரைய வேண்டியது தான்.அதனால் எங்கும் எப்போதும்  குழந்தைகளைப் பொறுத்தவரை  அதிக பட்சம் ஜாக்கிரதையாக இருப்பது ஒன்றே நம்மால் ஆகக் கூடிய காரியம். வேறு என்ன சொல்வதாக இருந்தாலும் அதில் அர்த்தமிருக்கப் போவதில்லை.
 
:((


டிஸ்கோ பாவாடை...



தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமிருக்கிறது .கன்னிசேரி செட்டியார் சைக்கிளில் துணி மூட்டை கட்டிக் கொண்டு ஊரை வலம் வரத்தொடங்கி விட்டார்.


செட்டியார் நல்ல தாட்டியான மனிதர் கன்னங்கரேல் சதுர முகத்தில் பழுப்பு
விழிகள் பல்லாங்குழியாட சைக்கிளின் இரண்டு ஹேன்ட் பார்களிலும் வாயகன்ற
பெரிய சீட்டிப் பைகளில் ரகவாரியாக நிறவாரியாக ஜாக்கெட் பிட்கள் அடுக்கிக்
கொண்டு பின்புற கேரியரில் மிலிட்டரிக் கம்பளியில் சுற்றிய துணி மூட்டை.

கன்னிசேரி செட்டியாருக்கு இந்த ஊரில் வளப்பமான வியாபாரம் இருந்து வந்தது
,அவரிடம் எடுக்கும் துணிமணிகள் புது மோஸ்தர் என்று அந்த ஊர் மக்கள்
நம்பினர் ,டி. வி பரவலாக எல்லா வீடுகளுக்கும் வரும் வரையிலும் அந்த
நம்பிக்கை நீடித்ததெனலாம் .

பத்மாவுக்கு இந்த தீபாவளிக்காவது டிஸ்கோ பாவாடை வாங்கி கட்டிக் கொள்ள
வேண்டும் என்று ரொம்பத் தான் ஆசை. முந்தைய தீபாவளிக்கே ருக்குவும்
,ஜெயாவும் டிஸ்கோ பாவாடை கட்டிக் கொண்டார்கள். டிஸ்கோ பாவாடை என்ன சாதாரண
சீட்டிப் பாவடையா ? போனால் போகிறதென்று விட்டு விட.

தெருக் கூத்து நாடகங்களில் ராஜா ராணி வேஷம் கட்டுபவர்கள் உடுத்திக்
கொள்ளும் துணிகளைப் போல அந்தப் பாவடைத் துணி மெத்து மெத்தென்று
இருக்கும். ,பாவாடையின் பார்டரில் செய்திருக்கும் பூ வேலைப்பாடுகளில்
உள்ளே ஸ்பாஞ் வைத்திருப்பார்களாய் இருக்கும்,அப்படி ஒரு மெது
மெதுப்பு,ருக்குவின் பாவாடையை அடிக்கடி தொட்டுத் தொட்டு பார்த்ததில்
தெரிந்து கொண்ட சேதி இது.

ஜெயாவின் டிஸ்கோ பாவாடையில் அதிசயமாக சலங்கை கூட வைத்திருக்கும் ,அவள்
நடக்கும் போதும் அசையும்

போதும் ஏன் விளையாட்டுப் பீரியடில் குடை ராட்டினம் சுற்றும் போதும் கூட
சலங் சலங் என ஓசை எழுப்பி ஓயும்,சலங்கைமணி வைத்து தைத்த டிஸ்கோ பாவாடை
கட்டிக் கொண்டிருப்பதால் ஜெயா ரொம்பத் தான் பீற்றிக் கொள்வாள்.


காவியம்,மணிக் காவியம் சொல்லி பச்சைக் குதிரை தாண்டும் போது
குனிந்திருப்பவளின் முதுகில் தாண்டுபவளின் கால் படக்கூடாது, ஜெயா தான்
சலங்கை வைத்த டிஸ்கோ பாவாடைக்காரி ஆயிற்றே அவளுக்கு மட்டும் மூன்று தடவை
மாப்பு உண்டு. அவள் நடுவிரலைப் பிடித்து நறுக்கென்று கடித்து வைத்தால்
என்ன என்று பத்துவுக்கு(பத்மா) ஆங்காரமாய் வரும். எல்லாம் இந்த டிஸ்கோ
பாவாடையால் தான்.

போன வருஷ பொங்கலுக்கே டிஸ்கோ பாவாடை வாங்கிக் கொடுத்திருக்கலாம் ,இந்த
அம்மாவுக்கு அதில் என்ன நஷ்டமோ?தாத்தாவுக்குப் பிடிக்காது ...வைவார்
பத்துக்குட்டி என்று பாசிப்பயறு நிறத்தில் பாலிஸ்டர்(பாலிஎஸ்டர் )
பட்டுப் பாவாடை தான் எடுத்து தைத்தார்கள்.

பத்துவுக்காவது பரவாயில்லை அவளது தங்கை சத்யாவுக்கு நட்சத்திரக் கழுத்து
வெட்டிய வாடாமல்லிக் கலர் பாலிஸ்டர் பட்டுப் பாவாடை.நட்சத்திரக்
கழுத்தின் அறு முனைகளை கத்தி போல வைத்து வெட்டி விட்டார் போலும் குண்டுச்
செட்டியார் அந்தப் பாவாடைக்கு பொருத்தமான சட்டையை சத்யாவை போட
வைப்பதற்குள் அம்மாவுக்கும் அவளுக்கும் மச்சு வீட்டுத் துணி பீரோ முன்
மாமியார் மருமகள் சண்டை தான்.

ங்கே விட்டேன் ?



ம்ம்..டிஸ்கோ பாவாடை;


பத்துவுக்கு டிஸ்கோ பாவாடை ரொம்பப் பிடித்திருந்தது, தோழிகளின்
கூட்டத்திற்குள் தன் அந்தஸ்தின் அடையாளமாய் அந்தப் பாவாடையை அவள்
எண்ணிக் கொண்டிருந்தாள்.



தீபாவளி வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பாட்டியை நச்சரிக்க
ஆரம்பித்திருந்தாள். அம்மாவிடம் கேட்டுப் புண்ணியமில்லை. கணவரை விட்டுப்
பிரிந்து தாய் வீட்டில் வசிக்கும் சூழலில் தாத்தா வீட்டில் அம்மா
பேச்சுக்கு அத்தனை எடுப்பில்லை என்பது பொங்கலுக்குப் பின் பத்துவுக்கு
எப்படியோ புரிந்து விட்டிருந்தது.



சித்தியிடம் கூட சொல்லி வைத்திருந்தாள். சித்தப்பா என்ன சொல்வாரோ?!
அதெல்லாம் யோசிக்கத் தெரியவில்லை இன்னும்!

தேவகோட்டை மில்லில் சூப்பர் வைசராய் இருந்த சின்ன மாமா கண்டிப்பாய தீபாவளிக்கு
ஊருக்கு வருவாரே...அவரிடமும் போன லீவுக்கு வந்திருந்த போதே அப்ளிகேசன்
போட்டு வைத்திருந்தாள்.

"சனிக்கிழம,புதங்கிழம மறக்காம எண்ணெய் தேய்ச்சுக் குளிடா "

"கத்தரிக்கா திங்காத அரிப்பு வரும் "

"ஒண்ணாந்தேதி மறக்காம மணியார்டர் அனுப்பிரு இல்லன அப்பா உரம் வாங்க திண்டாடுவார்."

அம்மாவும் அக்காக்களும் இப்படி ராகம் பாடுகையில் .
சம்பிரதாயமாய் தலை குழுக்கி வைக்கையில்,போனால் போகிறதென்று கழுத்தை
கட்டிக் கொண்டு


"ஊடே ஊடே ...மாமா தீவாளிக்கு பாவாட வேணும்...மாமா...தீவாளிக்கு டிஸ்கோ
பாவாட ...கன்னி சேரி செட்டியார் ...டிஸ்கோ பாவாட வாங்கித் தருவெல்ல "

என்று காதில் தொண தொணத்துக் கொண்டிருந்த பதினோரு வயது பத்துவின்
விண்ணப்பத்துக்கும் தலையை குலுக்கி விட்டுப் போயிருந்தான்.

மாமா கூட டிஸ்கோ பாவாடை வாங்கித் தரலாம்.

பெரிய மாமா கல்யாணத்துக்கு இதே டிஸ்கோ பாவாடை கேட்டு அழுது பெரிதாய்
ஆகாத்தியம் பண்ணிக் கூட பார்த்திருந்தாள். இப்பிடி அழுதா உன்ன வச்சு
போட்டோ எடுக்க மாட்டாங்க ,என்று பயம் காட்டி அம்மா அந்த ஆகாதியத்துக்கு
அரைமணி நேரம் கூட ஆயுசில்லாமல் பண்ணி விட்டாள். (துரோகி அம்மா !)

நடுமாமா கல்யாணத்துக்கு கேட்கும் போதும் இப்படித் தான் எதோ ஒரு சாக்கு
,குடும்பத்தில் எல்லார்க்கும் ஜவுளி எடுக்க மதுரை வரை போன
பாட்டி,அம்மா,சித்தி,பெரியத்தை கும்பல் பத்துவுக்கும் சத்யாவுக்கும் சைனா
சில்க் பாவாடை தான் எடுத்து வந்திருந்தார்கள் ,பார்த்ததுமே பத்துவுக்கு
கண்கள் உடைப்பெடுத்துக் கொண்டன.

"போடி அழுகுணி ,இந்தத் துணிக்கென்ன? இதான் இப்ப ஸ்டைலாம் பெரியத்தை
கண்களை சிமிட்டிக் கொண்டு சொன்னாள். " (துரோகி நம்பர் 2 !)

தாத்தா பெரிய ஆளாம்..பெரிய ஆள்!!!

அவரெல்லாம் ஒரு ஆளாம் ஆள் ! பத்துவுக்கு தாத்தாவை நினைக்கையில் கோபம்
கட்டு மீறிக் கொண்டு விடும்,அதனால் நினைப்பதில்லை். வேறு வழி? அவரை என்ன தான் செய்து விட முடியும்?!

தாத்தாவுக்கு பெண் குழந்தைகள் நதியாக் கொண்டை போட்டு கண்ணில் குளிரக்
குளிர மை பூசி காது வரை நீட்டி விட்டால் பிடிக்காது,கலர் கலராய் சாந்துப்
பொட்டு வைத்துக் கொண்டால் பிடிக்காது ,பள பளா ஜிகினா பாவாடை சட்டை
பிடிக்காது,சிவப்பு,பச்சை,வாடாமல்லி,மஞ்சள் தவிர வேறு நிறங்களே அவரது
அகராதியில் கிடையாது. இப்படி ஒரு தாத்தாவை வைத்துக் கொண்டு அவளெங்கே
கூட்டாளிகள் முன் அம்பாரி ஏறுவதாம்?!

இப்படியாக டிஸ்கோ பாவாடை தாண்டியும் பல வழிகளில் பத்துவுக்கு தாத்தா
பெரும் சோதனையாகத் தான் இருந்தார்.

தாத்தா எப்படியோ இருந்து தொலைக்கட்டும் ,

இப்போது தீபாவளிக்கு டிஸ்கோ பாவாடை எடுத்துத் தரப் போவது யார்? அது
மட்டும் தான் பத்துவின் பிஞ்சு மனதில் பெரிய பாரமாய்ப் படிந்து போனது .


தீபாவளிக்கு பத்து நாட்கள் முன்பே அம்மாவும் பாட்டியும் பத்து அழ அழ
கன்னிசேரி செட்டியாரிடம் டிஸ்கோ பாவாடை துணி தவிர வேறு என்னென்னவோ
துணிகளை எடுத்து குண்டு செட்டியாரிடம் தைக்கப் போட்டார்கள் .

தீபாவளிக்கு நான்கைந்து நாட்கள் இருக்கையில் ராஜபாளையத்து பெரியத்தை ரோஸ்
கலர் நெய்ல் பாலிஷ் வாங்கிக் கொண்டு வந்து தந்தாள் பத்துவுக்கும்
சத்யாவுக்கும்.



தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சித்தி வந்து இறங்கி விட்டாள்,

தீபாவளிக்கு முதல் நாள் சின்ன மாமா வந்து இறங்கினான்.



தீபாவளி அன்று இல்லாத அதிசயமாய் மாமனாருடன் ஏற்பட்டு விட்ட
மனஸ்தாபத்தில் மூன்று வருடங்களாய் எட்டியும் பாராமல் இருந்த பத்துவின்
அப்பா கூட ஏகமனதாய் பிள்ளைகளுக்காய் பெண்டாட்டி ஊருக்கு வந்து இறங்கி
விட்டார் .



யார் வந்தாலும் தான் என்ன? பத்துவுக்கு சந்தோசம் வந்து விடுமா?

வராத டிஸ்கோ பாவாடைக்காய் பத்து துக்கம் காத்துக் கொண்டிருப்பது
அவர்களுக்கு என்றைக்குப் புரியும் ?!

அவர்களுக்குப் புரிவதற்குள் பத்து பருவம் தப்பிப் போனவள் ஆனாள்.


கடந்து போகின்றன வருடம் தோறும் பருவம் தப்பா தீபாவளிகள் .



டிஸ்கோ பாவாடை ...



தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமிருக்கிறது .கன்னிசேரி செட்டியார் சைக்கிளில் துணி மூட்டை கட்டிக் கொண்டு ஊரை வலம் வரத்தொடங்கி விட்டார்.


செட்டியார் நல்ல தாட்டியான மனிதர் கன்னங்கரேல் சதுர முகத்தில் பழுப்பு
விழிகள் பல்லாங்குழியாட சைக்கிளின் இரண்டு ஹேன்ட் பார்களிலும் வாயகன்ற
பெரிய சீட்டிப் பைகளில் ரகவாரியாக நிறவாரியாக ஜாக்கெட் பிட்கள் அடுக்கிக்
கொண்டு பின்புற கேரியரில் மிலிட்டரிக் கம்பளியில் சுற்றிய துணி மூட்டை.

கன்னிசேரி செட்டியாருக்கு இந்த ஊரில் வளப்பமான வியாபாரம் இருந்து வந்தது
,அவரிடம் எடுக்கும் துணிமணிகள் புது மோஸ்தர் என்று அந்த ஊர் மக்கள்
நம்பினர் ,டி. வி பரவலாக எல்லா வீடுகளுக்கும் வரும் வரையிலும் அந்த
நம்பிக்கை நீடித்ததெனலாம் .

பத்மாவுக்கு இந்த தீபாவளிக்காவது டிஸ்கோ பாவாடை வாங்கி கட்டிக் கொள்ள
வேண்டும் என்று ரொம்பத் தான் ஆசை. முந்தைய தீபாவளிக்கே ருக்குவும்
,ஜெயாவும் டிஸ்கோ பாவாடை கட்டிக் கொண்டார்கள். டிஸ்கோ பாவாடை என்ன சாதாரண
சீட்டிப் பாவடையா ? போனால் போகிறதென்று விட்டு விட.

தெருக் கூத்து நாடகங்களில் ராஜா ராணி வேஷம் கட்டுபவர்கள் உடுத்திக்
கொள்ளும் துணிகளைப் போல அந்தப் பாவடைத் துணி மெத்து மெத்தென்று
இருக்கும். ,பாவாடையின் பார்டரில் செய்திருக்கும் பூ வேலைப்பாடுகளில்
உள்ளே ஸ்பாஞ் வைத்திருப்பார்களாய் இருக்கும்,அப்படி ஒரு மெது
மெதுப்பு,ருக்குவின் பாவாடையை அடிக்கடி தொட்டுத் தொட்டு பார்த்ததில்
தெரிந்து கொண்ட சேதி இது.

ஜெயாவின் டிஸ்கோ பாவாடையில் அதிசயமாக சலங்கை கூட வைத்திருக்கும் ,அவள்
நடக்கும் போதும் அசையும்

போதும் ஏன் விளையாட்டுப் பீரியடில் குடை ராட்டினம் சுற்றும் போதும் கூட
சலங் சலங் என ஓசை எழுப்பி ஓயும்,சலங்கைமணி வைத்து தைத்த டிஸ்கோ பாவாடை
கட்டிக் கொண்டிருப்பதால் ஜெயா ரொம்பத் தான் பீற்றிக் கொள்வாள்.


காவியம்,மணிக் காவியம் சொல்லி பச்சைக் குதிரை தாண்டும் போது
குனிந்திருப்பவளின் முதுகில் தாண்டுபவளின் கால் படக்கூடாது, ஜெயா தான்
சலங்கை வைத்த டிஸ்கோ பாவாடைக்காரி ஆயிற்றே அவளுக்கு மட்டும் மூன்று தடவை
மாப்பு உண்டு. அவள் நடுவிரலைப் பிடித்து நறுக்கென்று கடித்து வைத்தால்
என்ன என்று பத்துவுக்கு(பத்மா) ஆங்காரமாய் வரும். எல்லாம் இந்த டிஸ்கோ
பாவாடையால் தான்.

போன வருஷ பொங்கலுக்கே டிஸ்கோ பாவாடை வாங்கிக் கொடுத்திருக்கலாம் ,இந்த
அம்மாவுக்கு அதில் என்ன நஷ்டமோ?தாத்தாவுக்குப் பிடிக்காது ...வைவார்
பத்துக்குட்டி என்று பாசிப்பயறு நிறத்தில் பாலிஸ்டர்(பாலிஎஸ்டர் )
பட்டுப் பாவாடை தான் எடுத்து தைத்தார்கள்.

பத்துவுக்காவது பரவாயில்லை அவளது தங்கை சத்யாவுக்கு நட்சத்திரக் கழுத்து
வெட்டிய வாடாமல்லிக் கலர் பாலிஸ்டர் பட்டுப் பாவாடை.நட்சத்திரக்
கழுத்தின் அறு முனைகளை கத்தி போல வைத்து வெட்டி விட்டார் போலும் குண்டுச்
செட்டியார் அந்தப் பாவாடைக்கு பொருத்தமான சட்டையை சத்யாவை போட
வைப்பதற்குள் அம்மாவுக்கும் அவளுக்கும் மச்சு வீட்டுத் துணி பீரோ முன்
மாமியார் மருமகள் சண்டை தான்.

ங்கே விட்டேன் ?



ம்ம்..டிஸ்கோ பாவாடை;


பத்துவுக்கு டிஸ்கோ பாவாடை ரொம்பப் பிடித்திருந்தது, தோழிகளின்
கூட்டத்திற்குள் தன் அந்தஸ்தின் அடையாளமாய் அந்தப் பாவாடையை அவள்
எண்ணிக் கொண்டிருந்தாள்.



தீபாவளி வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பாட்டியை நச்சரிக்க
ஆரம்பித்திருந்தாள். அம்மாவிடம் கேட்டுப் புண்ணியமில்லை. கணவரை விட்டுப்
பிரிந்து தாய் வீட்டில் வசிக்கும் சூழலில் தாத்தா வீட்டில் அம்மா
பேச்சுக்கு அத்தனை எடுப்பில்லை என்பது பொங்கலுக்குப் பின் பத்துவுக்கு
எப்படியோ புரிந்து விட்டிருந்தது.



சித்தியிடம் கூட சொல்லி வைத்திருந்தாள். சித்தப்பா என்ன சொல்வாரோ?!
அதெல்லாம் யோசிக்கத் தெரியவில்லை இன்னும்!

தேவகோட்டை மில்லில் சூப்பர் வைசராய் இருந்த சின்ன மாமா கண்டிப்பாய தீபாவளிக்கு
ஊருக்கு வருவாரே...அவரிடமும் போன லீவுக்கு வந்திருந்த போதே அப்ளிகேசன்
போட்டு வைத்திருந்தாள்.

"சனிக்கிழம,புதங்கிழம மறக்காம எண்ணெய் தேய்ச்சுக் குளிடா "

"கத்தரிக்கா திங்காத அரிப்பு வரும் "

"ஒண்ணாந்தேதி மறக்காம மணியார்டர் அனுப்பிரு இல்லன அப்பா உரம் வாங்க திண்டாடுவார்."

அம்மாவும் அக்காக்களும் இப்படி ராகம் பாடுகையில் .
சம்பிரதாயமாய் தலை குழுக்கி வைக்கையில்,போனால் போகிறதென்று கழுத்தை
கட்டிக் கொண்டு


"ஊடே ஊடே ...மாமா தீவாளிக்கு பாவாட வேணும்...மாமா...தீவாளிக்கு டிஸ்கோ
பாவாட ...கன்னி சேரி செட்டியார் ...டிஸ்கோ பாவாட வாங்கித் தருவெல்ல "

என்று காதில் தொண தொணத்துக் கொண்டிருந்த பதினோரு வயது பத்துவின்
விண்ணப்பத்துக்கும் தலையை குலுக்கி விட்டுப் போயிருந்தான்.

மாமா கூட டிஸ்கோ பாவாடை வாங்கித் தரலாம்.

பெரிய மாமா கல்யாணத்துக்கு இதே டிஸ்கோ பாவாடை கேட்டு அழுது பெரிதாய்
ஆகாத்தியம் பண்ணிக் கூட பார்த்திருந்தாள். இப்பிடி அழுதா உன்ன வச்சு
போட்டோ எடுக்க மாட்டாங்க ,என்று பயம் காட்டி அம்மா அந்த ஆகாதியத்துக்கு
அரைமணி நேரம் கூட ஆயுசில்லாமல் பண்ணி விட்டாள். (துரோகி அம்மா !)

நடுமாமா கல்யாணத்துக்கு கேட்கும் போதும் இப்படித் தான் எதோ ஒரு சாக்கு
,குடும்பத்தில் எல்லார்க்கும் ஜவுளி எடுக்க மதுரை வரை போன
பாட்டி,அம்மா,சித்தி,பெரியத்தை கும்பல் பத்துவுக்கும் சத்யாவுக்கும் சைனா
சில்க் பாவாடை தான் எடுத்து வந்திருந்தார்கள் ,பார்த்ததுமே பத்துவுக்கு
கண்கள் உடைப்பெடுத்துக் கொண்டன.

"போடி அழுகுணி ,இந்தத் துணிக்கென்ன? இதான் இப்ப ஸ்டைலாம் பெரியத்தை
கண்களை சிமிட்டிக் கொண்டு சொன்னாள். " (துரோகி நம்பர் 2 !)

தாத்தா பெரிய ஆளாம்..பெரிய ஆள்!!!

அவரெல்லாம் ஒரு ஆளாம் ஆள் ! பத்துவுக்கு தாத்தாவை நினைக்கையில் கோபம்
கட்டு மீறிக் கொண்டு விடும்,அதனால் நினைப்பதில்லை். வேறு வழி? அவரை என்ன தான் செய்து விட முடியும்?!

தாத்தாவுக்கு பெண் குழந்தைகள் நதியாக் கொண்டை போட்டு கண்ணில் குளிரக்
குளிர மை பூசி காது வரை நீட்டி விட்டால் பிடிக்காது,கலர் கலராய் சாந்துப்
பொட்டு வைத்துக் கொண்டால் பிடிக்காது ,பள பளா ஜிகினா பாவாடை சட்டை
பிடிக்காது,சிவப்பு,பச்சை,வாடாமல்லி,மஞ்சள் தவிர வேறு நிறங்களே அவரது
அகராதியில் கிடையாது. இப்படி ஒரு தாத்தாவை வைத்துக் கொண்டு அவளெங்கே
கூட்டாளிகள் முன் அம்பாரி ஏறுவதாம்?!

இப்படியாக டிஸ்கோ பாவாடை தாண்டியும் பல வழிகளில் பத்துவுக்கு தாத்தா
பெரும் சோதனையாகத் தான் இருந்தார்.

தாத்தா எப்படியோ இருந்து தொலைக்கட்டும் ,

இப்போது தீபாவளிக்கு டிஸ்கோ பாவாடை எடுத்துத் தரப் போவது யார்? அது
மட்டும் தான் பத்துவின் பிஞ்சு மனதில் பெரிய பாரமாய்ப் படிந்து போனது .


தீபாவளிக்கு பத்து நாட்கள் முன்பே அம்மாவும் பாட்டியும் பத்து அழ அழ
கன்னிசேரி செட்டியாரிடம் டிஸ்கோ பாவாடை துணி தவிர வேறு என்னென்னவோ
துணிகளை எடுத்து குண்டு செட்டியாரிடம் தைக்கப் போட்டார்கள் .

தீபாவளிக்கு நான்கைந்து நாட்கள் இருக்கையில் ராஜபாளையத்து பெரியத்தை ரோஸ்
கலர் நெய்ல் பாலிஷ் வாங்கிக் கொண்டு வந்து தந்தாள் பத்துவுக்கும்
சத்யாவுக்கும்.



தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சித்தி வந்து இறங்கி விட்டாள்,

தீபாவளிக்கு முதல் நாள் சின்ன மாமா வந்து இறங்கினான்.



தீபாவளி அன்று இல்லாத அதிசயமாய் மாமனாருடன் ஏற்பட்டு விட்ட
மனஸ்தாபத்தில் மூன்று வருடங்களாய் எட்டியும் பாராமல் இருந்த பத்துவின்
அப்பா கூட ஏகமனதாய் பிள்ளைகளுக்காய் பெண்டாட்டி ஊருக்கு வந்து இறங்கி
விட்டார் .



யார் வந்தாலும் தான் என்ன? பத்துவுக்கு சந்தோசம் வந்து விடுமா?

வராத டிஸ்கோ பாவாடைக்காய் பத்து துக்கம் காத்துக் கொண்டிருப்பது
அவர்களுக்கு என்றைக்குப் புரியும் ?!

அவர்களுக்குப் புரிவதற்குள் பத்து பருவம் தப்பிப் போனவள் ஆனாள்.

கடந்து போகின்றன வருடம் தோறும் பருவம் தப்பா தீபாவளிகள் .




டிஸ்கோ பாவாடை ...



தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமிருக்கிறது .கன்னிசேரி செட்டியார் சைக்கிளில் துணி மூட்டை கட்டிக் கொண்டு ஊரை வலம் வரத்தொடங்கி விட்டார்.


செட்டியார் நல்ல தாட்டியான மனிதர் கன்னங்கரேல் சதுர முகத்தில் பழுப்பு
விழிகள் பல்லாங்குழியாட சைக்கிளின் இரண்டு ஹேன்ட் பார்களிலும் வாயகன்ற
பெரிய சீட்டிப் பைகளில் ரகவாரியாக நிறவாரியாக ஜாக்கெட் பிட்கள் அடுக்கிக்
கொண்டு பின்புற கேரியரில் மிலிட்டரிக் கம்பளியில் சுற்றிய துணி மூட்டை.

கன்னிசேரி செட்டியாருக்கு இந்த ஊரில் வளப்பமான வியாபாரம் இருந்து வந்தது
,அவரிடம் எடுக்கும் துணிமணிகள் புது மோஸ்தர் என்று அந்த ஊர் மக்கள்
நம்பினர் ,டி. வி பரவலாக எல்லா வீடுகளுக்கும் வரும் வரையிலும் அந்த
நம்பிக்கை நீடித்ததெனலாம் .

பத்மாவுக்கு இந்த தீபாவளிக்காவது டிஸ்கோ பாவாடை வாங்கி கட்டிக் கொள்ள
வேண்டும் என்று ரொம்பத் தான் ஆசை. முந்தைய தீபாவளிக்கே ருக்குவும்
,ஜெயாவும் டிஸ்கோ பாவாடை கட்டிக் கொண்டார்கள். டிஸ்கோ பாவாடை என்ன சாதாரண
சீட்டிப் பாவடையா ? போனால் போகிறதென்று விட்டு விட.

தெருக் கூத்து நாடகங்களில் ராஜா ராணி வேஷம் கட்டுபவர்கள் உடுத்திக்
கொள்ளும் துணிகளைப் போல அந்தப் பாவடைத் துணி மெத்து மெத்தென்று
இருக்கும். ,பாவாடையின் பார்டரில் செய்திருக்கும் பூ வேலைப்பாடுகளில்
உள்ளே ஸ்பாஞ் வைத்திருப்பார்களாய் இருக்கும்,அப்படி ஒரு மெது
மெதுப்பு,ருக்குவின் பாவாடையை அடிக்கடி தொட்டுத் தொட்டு பார்த்ததில்
தெரிந்து கொண்ட சேதி இது.

ஜெயாவின் டிஸ்கோ பாவாடையில் அதிசயமாக சலங்கை கூட வைத்திருக்கும் ,அவள்
நடக்கும் போதும் அசையும்

போதும் ஏன் விளையாட்டுப் பீரியடில் குடை ராட்டினம் சுற்றும் போதும் கூட
சலங் சலங் என ஓசை எழுப்பி ஓயும்,சலங்கைமணி வைத்து தைத்த டிஸ்கோ பாவாடை
கட்டிக் கொண்டிருப்பதால் ஜெயா ரொம்பத் தான் பீற்றிக் கொள்வாள்.


காவியம்,மணிக் காவியம் சொல்லி பச்சைக் குதிரை தாண்டும் போது
குனிந்திருப்பவளின் முதுகில் தாண்டுபவளின் கால் படக்கூடாது, ஜெயா தான்
சலங்கை வைத்த டிஸ்கோ பாவாடைக்காரி ஆயிற்றே அவளுக்கு மட்டும் மூன்று தடவை
மாப்பு உண்டு. அவள் நடுவிரலைப் பிடித்து நறுக்கென்று கடித்து வைத்தால்
என்ன என்று பத்துவுக்கு(பத்மா) ஆங்காரமாய் வரும். எல்லாம் இந்த டிஸ்கோ
பாவாடையால் தான்.

போன வருஷ பொங்கலுக்கே டிஸ்கோ பாவாடை வாங்கிக் கொடுத்திருக்கலாம் ,இந்த
அம்மாவுக்கு அதில் என்ன நஷ்டமோ?தாத்தாவுக்குப் பிடிக்காது ...வைவார்
பத்துக்குட்டி என்று பாசிப்பயறு நிறத்தில் பாலிஸ்டர்(பாலிஎஸ்டர் )
பட்டுப் பாவாடை தான் எடுத்து தைத்தார்கள்.

பத்துவுக்காவது பரவாயில்லை அவளது தங்கை சத்யாவுக்கு நட்சத்திரக் கழுத்து
வெட்டிய வாடாமல்லிக் கலர் பாலிஸ்டர் பட்டுப் பாவாடை.நட்சத்திரக்
கழுத்தின் அறு முனைகளை கத்தி போல வைத்து வெட்டி விட்டார் போலும் குண்டுச்
செட்டியார் அந்தப் பாவாடைக்கு பொருத்தமான சட்டையை சத்யாவை போட
வைப்பதற்குள் அம்மாவுக்கும் அவளுக்கும் மச்சு வீட்டுத் துணி பீரோ முன்
மாமியார் மருமகள் சண்டை தான்.

ங்கே விட்டேன் ?



ம்ம்..டிஸ்கோ பாவாடை;


பத்துவுக்கு டிஸ்கோ பாவாடை ரொம்பப் பிடித்திருந்தது, தோழிகளின்
கூட்டத்திற்குள் தன் அந்தஸ்தின் அடையாளமாய் அந்தப் பாவாடையை அவள்
எண்ணிக் கொண்டிருந்தாள்.



தீபாவளி வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பாட்டியை நச்சரிக்க
ஆரம்பித்திருந்தாள். அம்மாவிடம் கேட்டுப் புண்ணியமில்லை. கணவரை விட்டுப்
பிரிந்து தாய் வீட்டில் வசிக்கும் சூழலில் தாத்தா வீட்டில் அம்மா
பேச்சுக்கு அத்தனை எடுப்பில்லை என்பது பொங்கலுக்குப் பின் பத்துவுக்கு
எப்படியோ புரிந்து விட்டிருந்தது.



சித்தியிடம் கூட சொல்லி வைத்திருந்தாள். சித்தப்பா என்ன சொல்வாரோ?!
அதெல்லாம் யோசிக்கத் தெரியவில்லை இன்னும்!

தேவகோட்டை மில்லில் சூப்பர் வைசராய் இருந்த சின்ன மாமா கண்டிப்பாய தீபாவளிக்கு
ஊருக்கு வருவாரே...அவரிடமும் போன லீவுக்கு வந்திருந்த போதே அப்ளிகேசன்
போட்டு வைத்திருந்தாள்.

"சனிக்கிழம,புதங்கிழம மறக்காம எண்ணெய் தேய்ச்சுக் குளிடா "

"கத்தரிக்கா திங்காத அரிப்பு வரும் "

"ஒண்ணாந்தேதி மறக்காம மணியார்டர் அனுப்பிரு இல்லன அப்பா உரம் வாங்க திண்டாடுவார்."

அம்மாவும் அக்காக்களும் இப்படி ராகம் பாடுகையில் .
சம்பிரதாயமாய் தலை குழுக்கி வைக்கையில்,போனால் போகிறதென்று கழுத்தை
கட்டிக் கொண்டு


"ஊடே ஊடே ...மாமா தீவாளிக்கு பாவாட வேணும்...மாமா...தீவாளிக்கு டிஸ்கோ
பாவாட ...கன்னி சேரி செட்டியார் ...டிஸ்கோ பாவாட வாங்கித் தருவெல்ல "

என்று காதில் தொண தொணத்துக் கொண்டிருந்த பதினோரு வயது பத்துவின்
விண்ணப்பத்துக்கும் தலையை குலுக்கி விட்டுப் போயிருந்தான்.

மாமா கூட டிஸ்கோ பாவாடை வாங்கித் தரலாம்.

பெரிய மாமா கல்யாணத்துக்கு இதே டிஸ்கோ பாவாடை கேட்டு அழுது பெரிதாய்
ஆகாத்தியம் பண்ணிக் கூட பார்த்திருந்தாள். இப்பிடி அழுதா உன்ன வச்சு
போட்டோ எடுக்க மாட்டாங்க ,என்று பயம் காட்டி அம்மா அந்த ஆகாதியத்துக்கு
அரைமணி நேரம் கூட ஆயுசில்லாமல் பண்ணி விட்டாள். (துரோகி அம்மா !)

நடுமாமா கல்யாணத்துக்கு கேட்கும் போதும் இப்படித் தான் எதோ ஒரு சாக்கு
,குடும்பத்தில் எல்லார்க்கும் ஜவுளி எடுக்க மதுரை வரை போன
பாட்டி,அம்மா,சித்தி,பெரியத்தை கும்பல் பத்துவுக்கும் சத்யாவுக்கும் சைனா
சில்க் பாவாடை தான் எடுத்து வந்திருந்தார்கள் ,பார்த்ததுமே பத்துவுக்கு
கண்கள் உடைப்பெடுத்துக் கொண்டன.

"போடி அழுகுணி ,இந்தத் துணிக்கென்ன? இதான் இப்ப ஸ்டைலாம் பெரியத்தை
கண்களை சிமிட்டிக் கொண்டு சொன்னாள். " (துரோகி நம்பர் 2 !)

தாத்தா பெரிய ஆளாம்..பெரிய ஆள்!!!

அவரெல்லாம் ஒரு ஆளாம் ஆள் ! பத்துவுக்கு தாத்தாவை நினைக்கையில் கோபம்
கட்டு மீறிக் கொண்டு விடும்,அதனால் நினைப்பதில்லை். வேறு வழி? அவரை என்ன தான் செய்து விட முடியும்?!

தாத்தாவுக்கு பெண் குழந்தைகள் நதியாக் கொண்டை போட்டு கண்ணில் குளிரக்
குளிர மை பூசி காது வரை நீட்டி விட்டால் பிடிக்காது,கலர் கலராய் சாந்துப்
பொட்டு வைத்துக் கொண்டால் பிடிக்காது ,பள பளா ஜிகினா பாவாடை சட்டை
பிடிக்காது,சிவப்பு,பச்சை,வாடாமல்லி,மஞ்சள் தவிர வேறு நிறங்களே அவரது
அகராதியில் கிடையாது. இப்படி ஒரு தாத்தாவை வைத்துக் கொண்டு அவளெங்கே
கூட்டாளிகள் முன் அம்பாரி ஏறுவதாம்?!

இப்படியாக டிஸ்கோ பாவாடை தாண்டியும் பல வழிகளில் பத்துவுக்கு தாத்தா
பெரும் சோதனையாகத் தான் இருந்தார்.

தாத்தா எப்படியோ இருந்து தொலைக்கட்டும் ,

இப்போது தீபாவளிக்கு டிஸ்கோ பாவாடை எடுத்துத் தரப் போவது யார்? அது
மட்டும் தான் பத்துவின் பிஞ்சு மனதில் பெரிய பாரமாய்ப் படிந்து போனது .


தீபாவளிக்கு பத்து நாட்கள் முன்பே அம்மாவும் பாட்டியும் பத்து அழ அழ
கன்னிசேரி செட்டியாரிடம் டிஸ்கோ பாவாடை துணி தவிர வேறு என்னென்னவோ
துணிகளை எடுத்து குண்டு செட்டியாரிடம் தைக்கப் போட்டார்கள் .

தீபாவளிக்கு நான்கைந்து நாட்கள் இருக்கையில் ராஜபாளையத்து பெரியத்தை ரோஸ்
கலர் நெய்ல் பாலிஷ் வாங்கிக் கொண்டு வந்து தந்தாள் பத்துவுக்கும்
சத்யாவுக்கும்.



தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சித்தி வந்து இறங்கி விட்டாள்,

தீபாவளிக்கு முதல் நாள் சின்ன மாமா வந்து இறங்கினான்.



தீபாவளி அன்று இல்லாத அதிசயமாய் மாமனாருடன் ஏற்பட்டு விட்ட
மனஸ்தாபத்தில் மூன்று வருடங்களாய் எட்டியும் பாராமல் இருந்த பத்துவின்
அப்பா கூட ஏகமனதாய் பிள்ளைகளுக்காய் பெண்டாட்டி ஊருக்கு வந்து இறங்கி
விட்டார் .



யார் வந்தாலும் தான் என்ன? பத்துவுக்கு சந்தோசம் வந்து விடுமா?

வராத டிஸ்கோ பாவாடைக்காய் பத்து துக்கம் காத்துக் கொண்டிருப்பது
அவர்களுக்கு என்றைக்குப் புரியும் ?!

அவர்களுக்குப் புரிவதற்குள் பத்து பருவம் தப்பிப் போனவள் ஆனாள்.

கடந்து போகின்றன வருடம் தோறும் பருவம் தப்பா தீபாவளிகள் .




Hand made in india - (நூல் அறிமுகம்)




ஓவியர் பெனிட்டா  -    தனது நண்பர் வீட்டில்  பார்த்த  "Handmade  in  india " என்ற புத்தகம் பற்றி சென்ற வார விகனில் 'வாங்கிய பொருள்' எனும் தலைப்பில் கூறி இருந்தார்.
 
சிலைக்கு சுவாமி மலை பிரசித்தி என்பது போல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பூர்வீகம் இருக்கும்,அப்படி இந்தியா முழுதும் பாரம்பரிய முக்கியத்துவம் உள்ள பொருட்களை,அந்தப் பொருட்களுக்கான பூர்வீக இடங்களில் எப்படித் தயாரிக்கிறார்கள்,அவை எங்கெங்கே கிடைக்கும் என்ற வரைபடங்களுடன் அந்தப் புத்தகத்தில் இருக்கிறதாம் .
 
புத்தகத்தின் விலை  ரூ 3 ,700 .
 
அந்தப் புத்தகத்தை தேடிப் பிடித்து வாங்கிப் படித்த பிறகு தான் தன்னால் அடுத்த வேலையைப் பார்க்க முடிந்ததென்று பெனிட்டா கூறி இருந்தார், அவர் கூறி இருந்ததைப் படித்ததில் இருந்து எனக்கும் கூட அந்தப் புத்தகத்தை உடனே வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகமிருக்கிறது தான். ஆனால் புத்தகக் கண்காட்சிக்கு வாங்கப் போகும் மொத்தப் புத்தகங்களின் அடக்க விலையே 1500  க்கு மேல் தாண்டக் கூடாதென்று கடந்த பல நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்ன செய்யலாம்?!
 
"சொல்வதைக் கேள் மனமே கேள்.  வேண்டாம் இந்தப் புத்தக ஆசை " என்று எஸ்கேப் ஆக வேண்டியது தான்.
 
முதலில் இந்தப் புத்தகம் எந்தப் பதிப்பகத்தில் கிடைக்கும் எனத் தெரியவில்லை. விருப்பமிருப்பவர்கள் வாங்கிப் படிக்கலாம் . மிகப் பயனுள்ள சுவாரஸ்யமான புத்தகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.