Friday, December 31, 2010

சால்னாக்கடை சாமுண்டீஸ்வரி ...


என் கிளாஸ்மெட் சாமுண்டீஸ்வரியின் அப்பா தான் புரோட்டா மாஸ்டர்.அவரே தான் செல்லேரியம்மன்கோயில் பூசாரியும் கூட. புரோட்டாவும் நானே பூசாரியும் நானே கதையாகரெட்டைக் குதிரை சவாரி அவருக்கு .கோயில் பொங்கலுக்கு கிடா வெட்டுபிரசித்தம் என்பதால் ஒரு சால்னாக் கடை ஆள் பூசாரியாய் இருப்பதில்அம்மனுக்கு எந்தக் கோப தாபங்களும் இல்லாமலிருந்து வந்தது .

சாமுண்டீஸ்வரி அந்தக் கால பாப் கட் பேரழகி ,முடியை ஏன் சினிமாவில் குட்டைபாவாடை கட்டி ஆடும் விஜய லலிதா போல கட்டையாக அப்படி வெட்டிக் கொள்கிறாள்என்று நாங்கள் கேட்டால் அவள் பதில் ஏதும் சொன்னதே இல்லை.கூச்சமாய்சிரித்து வைப்பாள். எப்போதேனும் ரீசஸ் பீரியடில் தண்ணீர் குடிக்கபோகிறோம் என்ற பெயரில் நாங்கள் வடக்குத் தெருவை சுற்றி வந்தால் அங்கேஅவளது வீடு கம் புரோட்டாக் கடை பனை ஓலைக் கூரையில் செருகி வைத்திருக்கும்பழைய ராணி புத்தக அட்டையைக் காட்டுவாள் .

நூற்றுக்கு நூறு படத்தில்விஜயலலிதா டான்ஸ் போஸ் இருக்கும் அதில் ,.அந்தப் பாடத்தில் தான்விஜயலலிதாவுக்கு என்ன ஒரு அழகு கூந்தல் ! இப்படி நினைத்துக் கொண்டு தான்அந்தப் புத்தகப் படத்தைக் காட்டி அவளது அப்பா ஒவ்வொரு முறையும் தனமகளுக்கு ஊர் நாவிதரிடம் முடி வெட்டி விடுவார் போல என்று நினைத்துக்கொண்டோம் நாங்கள் .அது நிஜமும் கூட. பூசாரி விஜயலலிதாவின் மிகப் பெரியரசிகராக இருந்தார் என்பது ஊரறியும் .

அம்மாவுக்கு சாத்தூர் வெங்கடாசலபுரத்தில் சத்துணவு டீச்சர் வேலை,அப்பாவுக்கோ உத்தியோகம் மதுரைக்கு அந்தப் பக்கம் அதனால் வாரம் ஒரு முறைவந்து போவார் .அப்பா வரும் போதெல்லாம் மதியம் சாமுண்டீஸ்வரி புரோட்டாஸ்டால் சால்னா மணக்கும் எங்கள் வீட்டு வட்டில்கள் தோறும் .சால்னாவில்மருந்துக்கும் ஒரு சின்ன கோழித் துண்டோ ...கறித் துண்டோ இருக்கவேஇருக்காது,வெறும் சுடு தண்ணீரில் தேங்காயை மசால் கரைத்து அறைத்து விட்டதினுசில் இருந்தாலும் அப்படியோர் ருசி .


மத்யான வாக்கில் பெரும்பாலும் நான் தான் புரோட்டா வாங்கப் போவேன் .எண்ணெய் கசிந்த தினத் தந்தி பேப்பரில் கசங்கிய வாழை இலையை பரத்திஏழெட்டு பத்து புரோட்டாக்களை அடுக்கி நீட்டாக மடித்துச் சுற்றி மேலே சரடு கட்டி முறுக்கி எடுத்து பெரிய தேக்சா மூடி மேலே வைத்து தள்ளி விடுவார். " இந்தா எடுத்துக்கோ " என்பதாக;


சால்னா வாங்க வீட்டிலிருந்து திருக்கு செம்பு எடுத்துப் போவேன் நான்.முக்கால் சொம்பு நிறைக்க சால்னா கொதிக்கும் .
சூடான எண்ணெய் புரோட்டாவும் கருவேப்பிலை மிதக்கும் சால்னா வாடையுமாக ஒருகுதூகல மனநிலை வாய்க்கும் அப்போது .

புரோட்டா சாப்பிடும் ஆசை ஒரு பக்கம்இருந்தாலும் பெரிதும் ஈர்த்த ஒரு விஷயம் ;

புரோட்டா மாஸ்டர் புரோட்டா தட்டும் லாவகம் தான் .

"இந்த வெயிலில் நான் வடக்குத் தெரு வரை எல்லாம் போக மாட்டேன். தினமும்நானே தான் போகனுமா இன்னைக்கு தம்பி இல்லன தங்கச்சிய அனுப்புங்கம்மா "

என்றெல்லாம் போட்டி போட்டுக் கொள்ள அவசியமில்லாமல் ,அல்லது தோன்றக் கூடஇல்லாமல் நானே ஒரு பழைய வயர் கூடையும் திருக்குச் செம்பும் எடுத்துக்கொண்டு குசியாக கிளம்பி விடுவேன்.


நீள் சதுரமான பெரிய இரும்புத் தோசைக் கல் ,என்ன தான் புரோட்டாவும் அதில்போட்டாலும் கூட அதை தோசைக் கல் என்றே சொல்லிக் கொள்கிறோம்,ஏனென்றால்தோசையும் அதில் தான் ஊற்றப் படுகிறதென்பதால்! அந்தக் கல்லை பொசுங்கிச்சுடும் அளவுக்கு காய வைத்து நன்றாக காய்ந்திருக்கிறதா என்று பார்க்க தன்நெற்றி வியர்வையை புறங்கையால் வழித்து ஒரு சுண்டு சுண்டி விடுவார்புரோட்டா மாஸ்டர். கல் எறும்பு கடித்த பச்சிளம் குழந்தை போல சுரீரென்றுவீறிடும். இது நல்ல பதம் போல .


என்னென்னவோ வித்தையெல்லாம் காட்டி உருட்டி வைத்த மைதா உருண்டைகளைஇஷ்டத்துக்கும் நாளா பக்கமும் வீசி வீசி தட்டி கொட்டி சற்றேறக் குறையவட்டம் எனும் ஒரு வடிவத்தில் புரோட்டாவாக்கி அந்தக் கல்லில் சாதாரணமாகஅன்றி வீசி வீசிப் போடுவார். ஒரு பத்து பதினோரு புரோட்டாக்களை ஒரே தடவைஇப்படி வீசி முடித்ததும் அதில் ஒரு அகப்பை பாமாயிலை விட்டு திருப்பிப்போடுவார் .பாமாயில் மனம் நாசி நிறைத்து திகட்டினாலும் கூட இந்த வேடிக்கைசலித்ததில்லை எனக்கு.


முதல் சுற்று புரோட்டாக்களை எடுத்ததும் அடுத்த ஈடு புரோட்டாக்களை கல்லில்வீசும் முன்பாக படு சுத்தக்கார பெருமாளாக எரவாணத்தில் செருகி வைத்த ஒருபக்கம் மட்டுமே குறிப்பிடத் தக்க வகையில் தேய்ந்து போன கட்டை விளக்குமாற்றை எடுத்து "சரக் ...புருக்கென்று " கல்லில் இட வலமாக விட்டுபரத்தி உள்ளிருக்கும் தீய்ந்த புரோட்டாத் துணுக்குகளை பெருக்கித்தள்ளுவார்.இந்தக் காட்சி காணக் காணத் தெவிட்டாது. அப்படியோர் லாவகம்மாஸ்டரின் கைகளுக்கு ,ஒரு முறை கூட அதிக பட்ச நேரம் எடுத்ததில்லை, ஒரேநொடி தான். பிச்சு பிசிறுகள் இன்றி கல் எண்ணெய் மினுங்க சுத்தமாகி சூடுதணியாமல் புகை மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் , கல்லின் சூட்டைத்தணிக்கவே பிறவி எடுத்ததைப் போல அடுத்த ஈடு மைதா உருண்டைகள்புரோட்டாவாகத் தயாராய் தேக்சா மூடி மேல் நிற்கும்.


இதெல்லாம் ஓரிரண்டு வருடங்களில் முடிவுக்கு வந்தது.

நாங்கள் அப்பாவின் ஊருக்கே மறுபடி போக வேண்டியவர்களானோம் .

அங்கே புரோட்டாக் கடைகளைக் காணோம் ,ஆனால் நான்கைந்து மிக்சர் கடைகளும்காபிக்கடைகளும் இருந்தன. எழுபத்தி ஐந்து பைசாவுக்கு நூறு கிராம் மிக்சர்.வெறும் ஐம்பதே பைசாவுக்கு சுமாரான காபி ,முப்பது பைசாவுக்கு வடையும்போண்டாவும் கூட கிடைத்தது. சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் அதே பழைய வயர்கூடையும் திருக்கு செம்பும் இப்போது மிக்சருக்கும் காபிக்கும் என்றானது.


புரோட்டா மாஸ்டருக்குப் பதிலாக இப்போது ஜம்பலிபுத்தூர் டீ மாஸ்டர் ஒருவர்வாய்த்தார். டீ மாஸ்டர் தான் காப்பியும் ஆற்றுவார் என்றாலும் அவருக்குபெயரென்னவோ டீ மாஸ்டர் தான்.இந்த டீ மாஸ்டர் காபி ஆற்றும் அழகே அழகு.நல்ல உயரமான மனிதர் தன் முழு உயரத்துக்குமாக காபியை கண்ணாடி தம்ளர்நிறைக்க நிறைக்க நுரை பறக்க விட்டு சர்...சர் என்று ஆற்றினால் அது ஒருகண் கொள்ளாக் கட்சியாகாதோ!


ஜீரா தோசை என்றொரு வஸ்து கூட இந்த மாஸ்டரால் தான் எங்களது ஊரில் அன்றையநாட்களில் பிரபலமானது. இந்த மாஸ்டருக்கும் கடை உரிமையாளரானஜம்பலிபுத்தூர் நாயக்கருக்கும் சம்பள விசயமாக ஏதோ வாக்கு வாதம் வந்துசில பல மாதங்களில் மாஸ்டர் வாக் அவுட் ஆனார்.

பேக் டு தி புரோட்டா மாஸ்டர் ...

புரோட்டா மாஸ்டருக்கு வயசாகிப் போனதால் இப்போதெல்லாம் முழு நேரப்பூசாரியாகி விட்டார்.நோ புரோட்டா அட் ஆல் . புரோட்டாவுக்கு பாமாயிலைஅகப்பை நிறைய அள்ளி ஊற்றும் பாவனையில் கை நிறைய திருநீறை அள்ளி அள்ளிபக்த கோடிகளின் முகமெல்லாம் வீசிக் கொண்டிருக்கிறார் இப்போது.

சாமுண்டீஸ்வரி பாப் கட் தலைமுடியை இப்போது தன் மகளின் தலைக்கு இடம்மாற்றி விட்டிருந்தால் போலும் .விஜயலலிதா ஹேர் ஸ்டைல் இப்போது அடுத்ததலைமுறையின் தலைக்கு ட்ரான்ஸ்பர் ஆகியிருந்தது .

பொங்கலுக்கு கோயிலுக்குசாமி கும்பிடப் போன போது பாப் கட் முடி சிலும்பி எழ அந்தக் குட்டிவெட்கமாய் என்னைப் பார்த்து சிரித்தது அதன் அம்மாவைப் போலவே .

டீ மாஸ்டரை மறந்தே போய்விட்ட பல வருடங்களின் பின் ஒருநாள் நள்ளிரவில்தேனீ டூ சென்னை பேருந்துப் பயண தேநீர் நிறுத்தத்தில் தேமேவெனவிக்கிரவாண்டியில் ஒரு காபிக் கடையில் டீ ஆற்றிக் கொண்டிருந்தார்.

புரோட்டா மாஸ்டர் பூசாரியாகலாம் டீ மாஸ்டர் கடைசி வரை டீ மாஸ்டர் தான்போல ! என்று நினைத்துக் கொண்டே பஸ்ஸில் ஏறி என் இருக்கையில் அமர்ந்துவிட்டுப் போன தூக்கத்தை தொடர ஆரம்பித்தேன்.

மழை வரப் போவதற்கு அறிகுறியாய் ஈர காற்றில் நீர்த் துளிகள் மிதந்துவந்து கன்னம் தீண்டிப் பறந்தன ஜன்னல் வழியே...


எங்கும் மிதந்து பறக்கின்றன நீர்த் துளி மேகங்கள் . பழைய பிஸ்கட் கலர்வயர் கூடை ,திருக்கு செம்பு,புரோட்டா மாஸ்டர்,டீ மாஸ்டர்...சாமுண்டீஸ்வரி அவளது பெண் குழந்தையின் வடிவில் .

Friday, December 24, 2010

உருளை சிப்ஸும் சில கவிதைகளும் ...

1
ஜன விசேஷங்கள் ...

அகமுடிப்பில் அணுக்கியாகி
சேகரித்த மாயபிம்பகள் யாவும்
நிறமிழக்கையில் உதிரும் சோகம்
மௌனப் பெருமழை ;
சகடமுருட்டிக் கொண்டோடும்
வழி நெடுக ஜன விசேஷங்கள்
சங்கதியற்று சந்ததிஈன்று
எம்மை உம்மைப்
பெற்றுப் போட்டு
இற்றுப் போன வழித்தடங்கள்
பார்வைக்கப்பால் பரவச காந்தரூபமாய்
பழம்பெருமை பேசிக் கொண்டாடும்
பேராண்மை பெருங்குடிகள்.
இருப்பினும்கவிதை கவிஞர்களுக்கல்ல அல்லவே!

2
குணவிசேஷங்கள் ...

நிமிர்ந்து நடந்து
நேர்கொண்டு பார்த்து
திமிர்ந்த ஞானச் செருக்கோடு திரிந்தாலும்
எப்போதுமிருக்கும் குணவிசேஷங்கள்
அடுத்துக் கெடுத்து குட்டிச் சுவராக்கலாம் ...
பொதுவில் யார்க்கும் ;
சொல்லாடலோ ,மல்லாடலோ
பிரயோகப் புதிர்கள் விடுத்து
ஆண் ஆணெனவும்
பெண் பெண்ெனவும் கொண்டாடப் படுதலில்
நிறை கொள்ளும் பூமி !
3
உப்பு நீரே...
நீர்த் தளும்பல்களில் சுணக்கமின்றி
கசியும் கண்களை இழுத்துப் போர்த்தும்
துப்பட்டி ரெப்பைகள்
தினமுண்ணக் கூடும் சோழி வடிவ மக்ரோனி ;
இமைக்குள்ளும் புறமும் நோக்கிக் கதைத்தேன்
விரித்துச் சலும்பித் தெறித்து
குழிந்தவிடத்தும் குவிந்தவிடத்தும்
கசியும் நீர் உப்பு நீரே...
4
திசைகளை வெறுக்கும் தேசாந்திரி மனம் ...

ஒரு போது நினைத்திருந்தது ...
கொடும்பாளூர் கன்னியின் பின் சென்று
கல்வெட்டு படிப்பதென்றால் கற்கண்டு தானோவென்று
ராணா பிரதாப்பின் சேடக் காலிடரினும்
வந்தியத் தேவனின் சாம்பல் நிறப் புரவி
இடறியும் இடறா இடக்கரடக்கல் என்றிருந்தேன்
இத்தனை நக்கல் ஆகாதோவென்றுஇத்தாலியின்
வெசூவியஸ் வெது வெதுப்பில்ஜப்பானின்
வெந்நீர் ஊற்றுக்கள் எல்லாம்
சொல்லியும் சொல்லாமல் மடை திறந்து கொண்டன.
ஆல்பாவும் பீட்டாவும் செமத்தியாய் போர் என்றேன்
மத்திக் கிணறோ அந்தரமன்றோ...
வேதியியல் ...உயிர்வேதியியல்...நுண்ணியிரியல்
கடந்து போன ஸ்டேசன்களில்
உத்தேசமாய் மூன்றாண்டுகள்
தங்கிப் பெற்றதொரு பட்டம்
நூலில்லாக் காத்தாடி.
பின்னும் வாடிச் சருகாகினும்
மணமிழக்கா மனோரஞ்சிதமாய்
மலர்மிசை மானடி சேர்ந்தார் மாட்டு
நிலமிசை ஏகிச் சுழன்றது
திசைகளை வெறுக்கும் தேசாந்திரி மனம் .

5
குன்று குளிர் கூதிர் காலம் தொட்டு மீளா நெடுநல் வாடை
விஷம் போல ஊடுருவும் வன்பனிக் காற்று
மசங்கி மறப்பின் வறண்டு முகம் காட்டும் ஆப்பிள் சருமங்கள்
குப்புறக் கவிழ்த்தினும் சொட்டு விடாதுரைந்த எண்ணெய் ஜாடிகள்
கசங்கி நசுங்கிக் கிழியும் அப்பளங்கள்
கால் பாவா தரை மேலே
அடைகாக்கும் போர்வைக்குள் மொத்த தேகம்
சுட்டும் சுடாது கத கதக்கும்
பிஞ்சின் ஸ்பரிசமோ ?!
மித வெப்பம் தேடி அலையும் ஜாதி மானிடர் !

Friday, December 10, 2010

ஜெயமோகனின் கன்யாகுமரி ( புத்தக விமர்சனம் )



ஒரு வேலை அதீதமாய் தன்னில் மூழ்கிப் போனவர்களுக்கு மட்டுமேனும் இந்தநாவலை வாசித்து முடித்ததும் காதோரமாய் கடலின் இரைச்சலைக் காட்டிலும்அதிகமாய் மனதின் இரைச்சல் கேட்கத் துவங்கலாம். இந்த நாவலுக்குரியவெற்றியென கூறலாம் அதை.

சதா தன்னியல்பற்று தனக்குள் பேசிக் கொண்டே இருக்கும் ஒரு மனிதன் (ரவி)கதையை நகர்த்திக் கொண்டு போகிறான். இங்கு கதை என்பதை விட அவன் தனக்குள்பேசிக் கொண்டே கடக்க முடியாமல் கனத்துச் சுமக்கும் சம்பவங்களின் கோர்வைஎன்பது பொருந்திப் போகலாம்.

விமலாவை,பிரவீனாவை,ரமணியை,ஷை லஜாவைப் புரிந்து கொள்ள முடிவதை வாசிப்பின்ஆழம் என்று சப்பைக் கட்டு கட்டினாலும் இந்தப் பெண்கள் புனிதம்,தெய்வீகம், செண்டிமெண்ட் etc ..etc கான்செப்டில் சிக்கிக் கொள்ளாமல்நழுவிச் செல்வதை எந்த ஆட்சேபமுமின்றி நீடித்த புன்னகையுடன் கடக்கமுடிகிறது.

இவர்களில் கன்யாகுமாரி யார்?

கன்யாகுமரியின் ஐதீகக் கதையை பின்புலமாக வைத்துக் கொண்டு இந்தக் கதையைஎழுதியதாக ஜெயமோகன் தன் குறிப்பில் கூறி இருந்தாலும் கூட இது ஒட்டுமொத்தமாய் பெண்களின் அக மனதை எப்படியேனும் வென்று விட எத்தனிக்கும் ஒருமனிதனின் தனிப்பட்ட துக்கமாகவே மனதில் பதிகிறது.

பெண் சதை தாண்டி யோசிக்கப் பட்டிருக்கிறாள் இங்கு.

ஆனாலும் வெற்றி கொள்ளப்படவில்லை, அவளை வெல்ல முடியாத ஆணின் இயலாமை அவனைதன்னியல்பாய் சுழலுக்குள் தள்ளி சுளித்து மறையுமிடத்தில் முடிகிறது கதை.

கன்யாகுமாரி அவள் ஒரு போதும் எந்த ஆணாலும் வெற்றி கொள்ளப்படப் போவதும்இல்லை ,அவளது தடைகள் மறுப்புகள்...ஏதுமின்றியே படைப்பின் மாயாஜாலம் ஆடும்கண்ணாமூச்சு இது.
ஒரு ஆண் வெறுமே ஆணாக மட்டுமே இருக்கும் போது பெண் குறித்த அவனதுகண்ணோட்டம் படு இழிவானதாகவும் இருக்க முடிந்திருக்கிறது,அவனே தந்தை எனும்நிலையில் பெண்ணைக் குறித்து யோசிக்கையில் அவர்களைப் பாதுகாக்கும்கடமையினால் சதா பருந்திடம் இருந்து குஞ்சுகளைக் காக்கும் தாய்க்கோழிநிலைக்கு துரத்தப் பட்டு விடுகிறான். தலை கீழ் மாற்றம் தான்,ஆனாலும் இதுசில கால இடைவெளிகளில் நிகழ்ந்து விடுகிறது என்பதே நிஜம் .இதற்கொருஉதாரணம் இந்த நாவலில் வரும் பெத்தேல்புரம் ஸ்டீபன் .

ரவியை ஒரு சாதாரண மனிதனாக மதிக்கத் தோன்றவில்லை,படு ஆபத்தான சூழ்நிலைப்பிராணியாகவே சித்தரிக்கப் பட்டிருக்கிறான். எந்நேரமும் அதென்ன மனஉளைச்சலோ?! அறிவு ஜீவியாகவும் இருக்க வேண்டும் ,அழகாகவும் இருக்கவேண்டும் மனைவி என்ற எதிர்பார்ப்பு பொதுப் புத்தி என்று தவிர்த்துவிட்டாலும் கூட கதைப் படி என்ன தான் சாதனையாள இயக்குனராக இருந்தாலும்இத்தனை துஷ்ட சிந்தனை தேவை இல்லை என்றே எண்ண முடிகிறது.அடுத்தொரு இமாலயவெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டிய நிர்பந்தம் என்று அவனது சலனங்களைசமாளிக்கத் தேவை இல்லை. இந்த நாவல் முழுக்கவுமே அவன் தன்னைப் பெரியஇவனாகத் தான் நினைத்துக் கொண்டு உலவிக் கொண்டிருக்கிறான்.

//இது கன்யாகுமரி தானா ? கன்யாகுமரி தான் ஆனால் அவனுடன் சேர்ந்துஅந்நகரையே கை விட்டு விட்டு மற்ற அத்தனை பெரும் சென்றுவிட்டிருந்தார்கள்,வெளியேறிவிட வேண்டும் என்ற வேகம் எழுந்த போது தான்பாதைகளோ வண்டிகளோ இல்லாமல் அங்கு அகப் பட்டுக் கொண்டு விட்டதை அறிந்தான்//

இப்படி அவன் அகப்பட்டுக் கொண்டு திணறுவதாகக் கதை முடிகையில்எதிர்பார்த்தது போலவே சந்தோசம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

நாவலில் ஜெய மோகனின் சில வார்த்தைப் பிரயோகங்களும் அவற்றின்பயன்பாடுகளும் மிக்க ஆழமானவை. தன் கல்லூரிக் கால தோழியும்,காதலியுமானவிமலாவின் பாதங்களைப் பற்றி ரவி நினைத்துப் பார்க்கையில் இப்படி ஒருவாக்கியம் ;

//ஆழத்து வேர் போன்ற அசாதாரமான வெண்ணிறம் //

அவளைப் பற்றியகற்பனைகளில் எல்லாம் நர்கீஸ் போல அவளை எண்ணிக் கொள்வது. அப்படியானால்ஆரம்பத்தில் இருந்தே ரவி விமலாவின் தோற்றத்தில் நர்கீஸை தான்காதலித்திருக்கிறான். என்ன ஒரு ஏமாற்றுத் தனம் ! தன்னைத் தானேஏமாற்றிக் கொள்வதின் உச்சம் இது. ஆனால் எல்லோருக்கும் அப்படித் தான்வாய்க்கிறது. இது உலகநியதி.

நாவல் சொல்ல விரும்பியது பெண்ணின் களங்கமற்ற தன்மையாக இருக்குமென்றுநினைக்கிறன். ஒரு சிறுமியாக ,சகோதரியாக ,காதலியாக,மகளாக காலத்திற்கு தகபெண்கள் கொள்ளும் வேஷங்களில் எதோ ஒரு பொழுதில் அவளது நிஷ்களங்கம்தரிசிக்கப் படுகிறது,அந்த மகா தரிசனத்தை ஆண் அவன் எந்த உறவு முறைகொண்டவனாக இருந்த போதிலும் அவனால் அந்த நிஷ்களங்கத்தின் பரிசுத்தத்தின்முன் இயல்பாய் இருக்க முடிவதில்லை, அந்தப் பெண்ணை அவன் வெற்றி கொள்ளநினைக்கிறான். ,முடியாத பட்சத்தில் அவள் மீது அதீத வெறுப்பை அடைகிறான்.மீண்டும் அன்பைத் தேக்கி குழந்தையாகி அவளிடமே சரணாகதி ஆகிறான்,இந்தசக்கரத்தின் சுழற்சியில் சிக்கிக் கொண்டு வெளி வரத் தெரியாமல்பைத்தியமாகிறான் .

இந்து புராணங்களில் இதனால் தான் சிவனை "பித்தா பிறை சூடி " என்றெல்லாம்பாடி வைத்தார்களோ என்னவோ ?!

தேவியை மணந்து கொள்ள ஸ்தாணுமாலயன் வந்து கொண்டிருக்கிறார்!யுகம் யுகமாய் நீண்டு கொண்டிருக்கும் பயணம் அது...இன்னும் முடியக்காணோம்...தேவி ஸ்தானுமாலயனை எதிர் நோக்கி ஒற்றைக் கல் மூக்குத்தி மினுங்க கடற்கரை மொட்டைப் பாறையில் அர்த்த ராத்திரிகள் தோறும் தவமிருக்கிராளாம்.

ஸ்தாணுமாலயன் சிவன்,விஷ்ணு,பிரம்மா மூன்றும் கலந்த திரி சக்தி ரூபம்.ஆக்கல்,அழித்தல்,காத்தல் மூன்றையும் உள்ளடக்கிக் கொண்ட க்ரியா சக்தி அவன்என்கிறார் ஜெயமோகன் . எத்தனை திறமைகள் இருந்தும் பாவம் இன்னும் தேவியைஆட்கொள்ளக் காணோம்.


காமம் ...யாமம் நாவலின் ஓரிடத்தில் எஸ்ரா இப்படி எழுதி இருக்கிறார்,முசாபர் அலி அத்தர் யாமம் தயாரிக்கும் கலையை தனக்கடுத்த சந்ததிக்கும்கடத்தும் நோக்கத்தில் ஒரு ஆண் குழந்தையைப் பெறுவதற்காக தன்னிலும் மிகஇளைய சுரையா என்ற பெண்ணை மூன்றாம் தாரமாக மணந்து அழைத்துவருமிடத்தில்...
அவளோடான கூடலில் சுரையா அந்த நிகழ்வை கணவனுடனான காமம் தனக்கு மூக்குசிந்தி போடுவதைப் போல தான் என்று நினைத்துக் கொள்வதாக ஒரு வரி.சுரையாவுக்கு வயிற்றுப் பாடே பிரதானமாக இருத்தலைப் போல இங்கு கன்யாகுமரியில் பிரவீனாவுக்கு தான் விருது வாங்கும் நடிகையாவதே பிரதானம்.அதற்காக ரவியைப் புறம் தள்ளி வேணு கோபாலனுடன் சென்று விடுகிறாள் அவள்.

காமம் பெண்களின் கன்னிமையை பாதிப்பதில்லை ,அவள் எதற்காகவோ நீண்டகாத்திருப்பில் தன்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறாள். இதை மிகஅந்தரங்கமான ஓரிடத்தில் அவள் பாதுகாத்து வைத்திருக்க கூடும் ,அந்தஅந்தரங்கத்தை அறிந்து கொள்ள முடியாமல் சதா தோற்றுப் போகும் நிலையில் தான்ஆண் மிக்க குழப்பத்திற்கு ஆளாகிறான். பெண்ணின் மீதான அவனின் வெறுப்பும்விருப்பும் மாறி மாறி இங்கிருந்து தொடங்கி சதா இளைப்பாறுதல் இன்றிசுழன்றடிக்க ஆரம்பிக்கிறது.

இந்த நாவலை கி.ரா வின் கன்னிமை சிறுகதையின் பாதிப்பில் எழுதியதாகஜெயமோகன் கூறி இருக்கிறார் தன் முன்னுரையில். ஒப்பிட்டுப் பார்த்துஏற்றுக் கொள்ள முடிகிறது. கி.ரா வின் நாச்சியாருக்கும் ஜெயமோகனின்விமலாவுக்கும் ...ஏன் பிரவீனாவுக்கும் பெரிதாய் ஒன்றும் வித்யாசங்கள்இல்லை மனதளவில் அவர்கள் எடுத்துக் கொள்ளும் தீர்மானங்களின் அடிப்படையில்.


இந்த நாவலில் ஆட்சேபிக்கத் தகுந்த ஒரே ஒரு இடமென்றால் அது இது தான்.


// அழகில்லாத பெண்கள் ஆண்களை குரூரமானவர்களாக ,அற்பமானவர்களாக,நீதியுணர்வே இல்லாதவர்களாக ஆக்கும் விதத்திற்கு இணையான ஒன்றைக் கூறவேண்டுமெனில் மான் குட்டியை அடித்துக் கிழித்துத் தின்னும் சிங்கத்தின்இயற்கையான குரூரத்தை தான் //

கூடவே கன்யாகுமரியின் ஐதீகம் தேவி ஸ்தானுமலயனுக்காக கடற்கரையில்காத்திருப்பதாகச் சொல்லப் பட்டிருப்பது சரி தான்,ஆனால் ஸ்தாணுமாலயன் ஏன்அவளைக் காக்க வைத்தார்? இன்னும் வராமல் போனதற்கு காரணக் கதைகள்ஏதுமில்லையா? அது சொல்லப் படவில்லை இங்கே ,அதனால் ஒரு முற்றுப் பெறாததன்மை ...ஒரு வேளை எனக்கு மட்டும் தான் அந்த ஐதீகக் கதை முழுமையாகத்தெரியாம்லிருக்கிறதோ என்னவோ! கதை தெரிந்தவர்கள் யாரேனும் ஜெயமோகன் இந்தநாவலில் சொல்லாமல் விட்டதை வந்து முடித்து வையுங்கள்


நாவல் - கன்யாகுமாரி
ஆசிரியர் - ஜெயமோகன்
பதிப்பகம் - கவிதா பப்ளிகேசன் வெளியீடு
விலை - ரூ 90