Thursday, November 19, 2009

நிசப்தம் ...(வெறுமே ஒரு கற்பனை வரையறை)



தலைக்கு மேலே மேகங்கள் மிதப்பதே அறியாமல் மிதந்து கடக்க அறிந்தும் அறியா பாவனையற்ற பார்வையுடன் லயமில்லா லயத்துடன் லஜ்ஜையின்றி ஒரு பறவையின் அலட்டல் அல்லாத வெது வெதுப்பான மிதமான சிறகசைப்பின் லாவகம் தப்பாமல் பறப்பதே தெரியாமல் பறப்பதைப் போல ரசிப்பில்லா ரசனையுடன் ஆளற்ற குளக்கரையின் அசட்டையான படித்துறையின் அசைந்தும் அசையா ஆலமரத்துக் கிளை நுனியின் கட்டக் கடைசி நிழல் தொட்டும் தொடாமல் உச்சந்தலையில் பட்டும் படாமல் அசைந்தும் அசையாமல் தொட்டுத் தடவ தலைக்கு மேலே மேகங்கள் மிதப்பதே அறியாமல் மிதந்து கடக்க அறிந்தும் அறியா பாவனையற்ற பார்வையுடன் ................


இது வெறுமே ஒரு கற்பனை வரையறையே ...நிசப்தம் இந்த சொல்லை எப்படி வரையறுக்க இயலும் ?!,அது புரிதல் சார்ந்ததே.எனக்குத் தோன்றியதை வெறுமே பதியத் தோன்றியது .

அவியல் செய்முறை




தேவையான பொருட்கள் :

அவரைக்காய்- நூறு கிராம்
கத்தரிக்காய் -நூறு கிராம்
பீன்ஸ் -நூறு கிராம்
சேப்பங்கிழங்கு -நூறு கிராம்
உருளைக் கிழங்கு - ஒன்று
முருங்கை காய் -ஒன்று
வாழைக்காய் -ஒன்று
புடலங்காய் - நூறு கிராம்
தேங்காய்- அரை மூடி
கெட்டித் தயிர் -ஒரு கப்
பச்சை மிளகாய் - பத்து
சீரகம்- இரண்டு டீ ஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
தேங்காய் எண்ணெய் - கால் கப்

அவிக்க :

முதலில் சொல்லப் பட்ட காய்கறிகளையும்,கிழங்கு வகைகளையும் அளவில் சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் ,பிறகு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து தேவையான உப்பு சேர்த்து காய்கள் முங்கும் அளவு தண்ணீர் ஊற்றி மேலாக ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும் .வேக வைக்கப் பட்ட காய்கறிகளை எடுத்து அதிலிருக்கும் நீரை வடிகட்டி பிரிக்கவும்.

அரைக்க :

அரை மூடி தேங்காயை துருவி அல்லது நறுக்கி அதனோடு இரண்டு டீ ஸ்பூன் சீரகம் பத்துப் பச்சை மிளகாய்கள் சேர்த்து மையாக அரைத்து எடுத்து ஒரு கப் கெட்டித் தயிரில் கலந்து வைத்துக் கொள்ளவும் .

அவியல்:

அரைத்து எடுத்த தேங்காய் தயிர் கலவையில் முன்பே வேக வைத்து எடுத்துக் கொண்ட காய்கறிகளைப் போட்டு நன்றாகக் கொதிக்க விட்டு இறுதியாக தேங்காய் எண்ணெய் விட்டு ஒரு கைப்பிடி கருவேப்பிலையும் தூவி கிளறி விட்டு இறக்கிப் பரிமாறலாம் .இதற்க்கு தாளிதம் அவசியமில்லை.

அடைக்கு மிகப் பிரமாதமான சைடு டிஷ் அவியல் தான்,முன்பே அடை பதிவு போடும்போதே அவியல் செய்முறையும் போட்டிருக்கலாம்,ஆனால் அப்போது அவியல் செய்து பார்த்திராத காரணத்தால் எழுதவில்லை. அருமையான காலை டிபனுக்கு அடை அட்டகாசமாய்
பொருந்தும்,நிறையகாய்கறிகளும் பருப்புகளும் கலப்பதால் நல்ல சத்து மிக்க உணவும் கூட.

குறிப்பு :-

இன்னும் நிறைய காய்கள் சேர்த்துச் செய்ய விரும்பினால் அப்படியும் சேர்க்கலாம். என்னென்ன காய்கள் சேர்க்க வேண்டும் என்பது சாப்பிடுபவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது.

நன்றிகள்:

அவியலுக்கான பொருத்தமான படத்தை கூகிளில் தேடியதில் இந்தப் படம் நன்றாக இருந்தது, படம் உதவிக்கு நன்றி mykitchenpitch