Monday, January 31, 2011

‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை' -என் பார்வையில்..' - கார்த்திகாவாசுதேவன்.






‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை' -என் பார்வையில்'


‘‘சன்டேன்னா ரெண்டு“ இந்த விளம்பரத்துக்கு சற்றும் சளைக்காத ஆர்வம் தரவல்ல "ஞாயிற்றுக்கிழமை மதியப் பூனை " எனும் தலைப்பை தனது கவிதைத் தொகுப்பிற்கு தேர்ந்தெடுத்திருக்கிறார் நண்பர் கவிஞர் பொன்.வாசுதேவன். கவிதைகளின்பால் ஈர்ப்போ, கவிதைப் புத்தகம் வாசிக்கும் முனைப்போ இல்லாதிருப்போரையும் கூட அப்படி என்னதான் இருக்கிறது புத்தகத்துக்குள் என ரகசியமாய் எட்டிப் பார்க்கச் செய்யும் தலைப்பு.


தன்னைத்தானே பின் தொடரும் நிழலசைவாய் பின்புற அட்டை வாசகங்களுக்கொப்ப ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி..


"வாதையே உணராமல்தன்னுடலில் விசையூட்டிமெத்தென்றுமதில் சுவருக்கும் தரைக்குமிடையேபறந்தது போல் வந்தமரும் வித்தை கற்றுக்கொண்ட பூனைகளாய்"


சப்தங்கள் அடங்கியதும் சலனங்கள் மட்டுப்பட்டு உறங்கும் நதியைப் போல, அசைந்தும் அசையா அசைவில் தன்னகத்தே கேள்விகளைக் கேட்டும் கேளாமல் பதில் தெரிந்த மெத்தனத்தில் அலட்சியமாய் மிதந்து நழுவும் கவிதைகள்.


தொகுப்பின் ஈற்றுக் கவிதையாய் அவரே பகர்ந்தபடி,


குரல்களற்ற மனவெளியில்மீண்டும் மீண்டும் வாசித்துஉறுதிப்படுத்திக் கொள்ளத்தக்க விசேஷங்கள் அற்ற விசேசமான கவிதைகள்.


வாழ்வின் பிரத்யேக தருணங்கள் அத்தனையையும் கனவுகள், ப்ரியங்கள், ஆசைகள், நிராசைகள், வாதைகள் எனும் வகைப்பாட்டில் அடக்க முயன்று தனித்தொரு வெளியில் மிதந்து கொண்டே நகரும் கவிதைகள். மொத்தம் 87 கவிதைகளில், முதல் வாசிப்பில் என்னைக் கவர்ந்தவற்றை மட்டும் இந்தக் கட்டுரையின் ஊடே தந்து செல்கிறேன்.


இருப்பு :


"உண்மை தான்வேறு வழியில்லை

என்று தான்விட்டு விடவும்வெட்டித் தள்ளவும்

வேண்டியிருக்கிறதுநகங்களை"


தமதிருப்பை ஸ்திரப்படுத்திக் கொள்ள முடியாமல் வெட்டுப் பட்டும், கடித்து துப்பப்பட்டும் அப்புறப்படுத்தப்படும் நகங்களுக்கும், தானே உதிரும் கூந்தல் இழைகளுக்கும் கூட இருப்பென்ற ஒரு ஸ்தானம் சில காலம் உண்டுதான். நானுமிருக்கிறேன் என்பதைக் காட்டுவதான ஞாபகப்படுத்தலுக்கு ஒப்பாக கூராகவும், வளைந்தும் வளர்ந்து காட்டி வெட்டுப்படும் நகங்கள், உதிர்ந்து காட்டும் மயிர்கற்றைகள் போல மனிதர்களிலும் பலர் இருப்பைக் காட்டிக் கொள்ள ஏதாவதொன்றை செய்துதான் தீர வேண்டியிருக்கிறது.


பிரயாணம் எனும் தலைப்பில்,


"கவிழ்த்துக் கொட்டிய தவளை

மூட்டையெனரயிலை விட்டு

அவசரமாய்வெளியேறியும்

உள்நுழைந்த படியும்இருக்கின்றனர்

மனிதர்கள்"


மக்கள் நெரிசல் நேரக்காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சார ரயில்களில் பயணிக்கும் பெரும்பேறு பெற்ற ஆத்மாக்களின் அள்ளித் தெளித்த அவசர அவஸ்தை நகர்வுகளை வீடியோவில் ஃபாஸ்ட் பார்வர்ட் செய்தால், அவிழ்த்து விட்ட தவளை மூட்டைகள் தான், இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே தொடராதா? என்றெல்லாம் பாட்டுக் கேட்டுக் கொண்டு பயணிக்கும் ஆசைகளை பழித்துச் சுளுக்கி நசுக்கிப் பிழியும் நகரத்து இடப்பெயர்ச்சிகள் நெரிசல் நேரத்து ரயில் பயணங்கள். அந்த நிமிடங்களை கற்பனை செய்ய இந்த வரிகள் வெகு பொருத்தம்.


மனமொளிர் தருணங்கள் எனும் தலைப்பில் ஒரு கவிதை.


"தளர்ந்து இறுகும்சிறகுகள்

அசைத்துக்கால் புதைய காற்றில்நடக்கிறது

ஒரு பறவைஎன்னை

நானேஅருந்தி ரசிக்கும் தருணம் அது
காற்று உதிர்த்தபறவைச் சிறகின் கதகதப்பைக்கைப்பற்றிகன்னம் வைத்து அகமகிழ்கிறேன்
தூரத்தில் சென்று கொண்டிருக்கிறதுபறவைஉதிர்ந்த சிறகு குறித்தகவலையேதுமற்று"


மொத்தமுள்ள அத்தனைக் கவிதைகளிலும் மிகப் பிடித்து போன கவிதை இது. நீளும் பாலைவனத்தில் துடுப்பாய் சிறகசைத்துத் தடுமாறிக் கால் பதித்து எதிர் காற்றில் தத்தி நடக்கும் சிறு பறவையின் காட்சி வெகு உற்சாகம் அளிக்க வல்லது, கிட்டத் தட்ட வாழ்வில் எதிர் நீச்சலிட சலிக்காத மனித எத்தனங்களும் பிரயத்தனங்களும் பறவையின் ஒற்றை அசைவில் உணர்ந்து கொள்ளப்படுதல் இதில் சாத்தியமே. வெகு அழகான அர்த்தம் தரும் கவிதை இது.


சொல்ல இருக்கிறது காதல் எனும் தலைப்பில் :


நூற்கண்டின் முனை எனப் பற்றிசூரியக்

கதிர்களைஇழுத்தோடும் ரயிலொன்றின்ஜன்னலோர

இருக்கையில்என்னோடு

பயணப் படுகிறதுஉன்

நினைவுகள்

இருட்டத் தொடங்கியதன்

அவதானிப்பில்வேகமாய் கூடடையும்பறவையின்

அவசரத்துடன்எனக்கு

நானேசொல்லிக் கொள்கிறேன்
எனக்கும் காதல்இருந்ததுஇருக்கிறதுஇருக்கும்இவ்வாறெல்லாம் "


இந்தக் கவிதையில் தொனிப்பது யதார்த்த குப்பையில் காதலித்து மறந்தவன் அல்லது மறக்கடிக்கப்பட்டவனின் மீள் நினைவுகள், வீட்டுக்குள் அல்லது கூட்டுக்குள் நுழையும் முன் அவசர அவசரமாய் தனக்கே தனக்கென மட்டுமாய் ஆழ் குளத்தில் உறங்கிக் கிடக்கும் பிரதிக்காதல் ஒவ்வொன்றையும் ஒருமுறையேனும் சன்னமான குற்ற உணர்வோடு மீளப் பார்த்து நானும்தான் காதலித்திருக்கிறேன், காதலிக்கிறேன், என்னுள்ளும் காதலுண்டே எனக் காட்டிக் கொள்ளும், சமரசம் செய்து கொள்ளும் முயற்சி.


‘இறைமையின் மொழி‘ எனும் தலைப்பில்:


“இதழ்களின் இறுக்கம் தளர்த்தியதடங்களேதுமின்றிவனப்பாய்பூத்துக் கொண்டிருக்கிறதுஒரு மலர்
உள் மூழ்கி லயித்துவான் நோக்கிப் பார்க்கையில்முகத்தில் தெறிக்கிறதோர்ஒற்றை மழைத்துளி"


என்ன ஒரு அழகான வார்த்தைப் பிரயோகம். இறைவன் என ஒருவன் இருந்தான் எனில், அவன் கருணையை இதழ்களின் இறுக்கம் தளர்த்திய தடங்களேதுமின்றி பூத்துக் கொண்டிருக்கும் இந்த மலரோடு ஒப்பிடலாம். அவன் கருணையில் வழிந்து கசியும் ஏகாந்தத்தை இந்த மலரின் வனப்போடு ஒப்பிடலாம். பாளம் பாளமாய் வெடித்துக் கிடக்கும் உலர் மண்ணில் ஒற்றை மழைத்துளி பதங்கமாவதைப் போல விளம்பரப்படுத்திக் கொள்ள அவகாசமில்லாமலோ அல்லது அவசியமில்லாமலோ கொட்டிக் கிடக்கும் பிரபஞ்சப் பேரழகுகள் எல்லாவற்றையும் ரசிக்கத் தான் தெரிந்திருக்க வேண்டும்.


‘என்னிடம் வந்த இந்த நாள்‘ எனும் தலைப்பில் ஒரு கவிதை ;


“தாழப் பறந்தும் கையில்

சிக்காதவிருப்பப் பறவையாய்கொஞ்சமும்

இரக்கமில்லாதுகடந்து செல்கிறது இந்த நாள்
பிரிவுத் துயரின் நீர்த்தாரை வழியஇன்றிருந்த

நாளேதொடர வேண்டுமென இறைஞ்சுமென்னிடம்"


அனுமதிக்கப்பட்ட அளவுகளையும் கடந்து எல்லையில்லா உவகையையும், உல்லாசத்தையும் ஒருங்கே ஊட்டிய கணங்களைக் கொண்ட ப்ரியத்துக்குகந்த ஒருநாளின் அந்தி நேரம் மிகுந்த ஏக்கம் தரவல்லது, பிரியப் போகும் நண்பனுக்காய், விடை பெற்றுக் கொள்ளப் போகும் காதலிக்காய், கூடிப் பேசி சிரித்துக் கலையும் தோழமைகளின் பிரிய விரும்பாத கையசைப்பிற்காய் அந்த நாள் முடியாமல் நீளக் கூடாதோ! பிரியப்பட்ட ஜனங்களின் ப்ரியம் சுமந்த மனதின் ஏக்கம் வரிகளில் தெறிக்கும் பரல்கள் நீக்கப்பட்ட ஊமைச் சலங்கையின் தனித்த கீதங்கள்.



‘பிரியத்தில் விளைந்த கனி‘ எனும் கவிதை :


"பிரியத்தின் பொருட்டேஉனக்குள்

என் வாழ்வுபூரணமடைந்திருக்கிறது "


தாமாக வலிந்து செய்து கொண்ட சமாதானங்களின் பின்னே உறைந்து போன மனைவி எனும் முகமூடிகளுக்குள் சுயம் மறக்கடித்துக்கொண்டு சிரித்தால், சிரித்து அழுதால், அழுது கட்டுப்பாட்டில் இயங்கக் கற்றுக் கொண்ட மனைவிக்கு அவளை உணர்ந்தாலும் ஏதும் செய்யவியலாத அல்லது செய்ய விரும்பாத கணவனின் வெற்றுச் சமாளிப்பாகத்தான் வார்த்தைகளாக இந்த வரிகளை எடுத்துக் கொள்ளலாம், ப்ரியம் எனும் புழுவில் மாட்டிக்கொண்ட மீன்கள் தான் மனைவிகளும் கணவர்களும்.


வாதையின் கணங்கள் :


"நீர்களற்ற கிணற்றின்உள்சுவற்றில்

படர்ந்து கிளைத்திருக்கும்சிறு மரத்தில்

தனித்துக் கூடு கட்டிஆனந்தமாய்

அங்கு மின்குமாய்குறு குறுவென

சுற்றித் திரிகிறதுகுருவி


திசை தொலைத்தது போல்சுற்றித்

திரிகிறது வண்ணத்துப் பூச்சிபூத்துதிராமல்

தேன் சுமக்கின்ற மலர்அடையாளம் தனித்துக்

கண்டுமென்மையாய் அமர்ந்து

முன்காம்பு நீலச் செய்துஉறுஞ்சுகிறது

மலருக்கு வலிக்காமல்


வாதையின் கணங்களில்

எழும் வார்த்தைகள்விழிகளில்

திரண்டுஉருக்கொண்டு வழிகிறதுஎழுத்துத் திரவமாய் "


இந்தக் கவிதை வெறும் வார்த்தை எல்லைகளைக் கடந்து இதமான குறும்படத்தை பார்த்துக் களித்த திருத்தி அளிக்கவல்லது. கற்பனையில் ஓட்டிப் பார்த்தால் விரியும் நிழற் படங்களில் அத்தனை மென்மை. அவஸ்தை என்ற சொல்லுக்கினையான வாதை மிக்க கணங்களை இதை விட அருமையாக சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை.


அடை எனும் தலைப்பில் ஒரு கவிதை :


அருகில் திரும்பிப் படுத்தணைத்துஉன் இறால் குஞ்சு விரல்களைக்கைகளுக்குள்

அணிந்துபதுங்கிப் பதுங்கிஅழைத்துச் செல்கிறேன்
புட்டம் உயர்த்தி கால்கள்

மடிந்துகுப்புறப் படுத்துநீதூங்கும்

திசையெலாம்பரவியபடி கசிகிறதென் அன்புவெளிதனிமை உமிழ்ந்தயோசனையின் எச்சமாய்இன்னும் வெகு தூரம்செல்ல வேண்டியிருக்கிறதுஉன்னைப் பாதுகாக்க "


வாசு எதைக் குறிப்பிட்டு இந்தக் கவிதையை எழுதினாரோ இதை வாசித்ததும் நான் உணர்ந்தது இதைத்தான். யாருமற்ற வீட்டில் தனித்திருக்கும் தாயும் அவளது பால்மணம் மாறாக் குழந்தையும். அடைகாக்கும் பொறுப்பு தந்தைக்கும் உண்டெனினும் அடைகாக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுக்க மனமுவந்து ஏற்றுக் கொண்டவளாகிறாள் அம்மா. பிறந்த குழந்தைக்கு அருகில் படுத்துக்கொண்டு மெல்ல அதன் கை தடவி கால் தடவி மாம் பிஞ்சு விரல் நீவி பூனைக் கதகதப்பாய் வலிக்குமோ வலிக்காதோ என்றேந்திக் கொண்டிருக்கையில் உள்ளூர எப்போதுமிருக்கும் இந்த அடை காக்கும் தவிப்பு. பிறந்து மண்ணில் விழுந்த கணம் தொட்டே பெற்றவள் முன்வந்து வாங்கிய தீட்சை போல் அன்பு வெளியெங்கும் கசியும் யோசனைகளில் நீள்வதென்னவோ யுகம் தோறும் பெற்றுக் கொண்டதை பாதுகாக்கும் பயணங்கள்தாம்..


‘தொடங்கி இருக்கிறோம்‘ எனும் கவிதை:


"எனக்குள் பூத்த ஆண்டாளைபறித்தெடுத்து சூடிக் கொண்டிருக்கிறேன்எதற்கெனத் தெரியாமல் "


எதற்கென்றே தெரியாமல் சில வரிகள் பிடித்துப்போகலாம் அப்படி ஒரு வரி இது..போலவே மறக்கயியலாத ஒரு வாழ்வனுபவத்தை இந்தத் தொகுப்பெங்கும் வரைந்திருக்கும் பொன்.வாசுதேவனுக்கு நன்றியும், வாழ்த்துகளும்.


ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை (கவிதைகள்) - பொன்.வாசுதேவன்

112 பக்கங்கள்

விலை : ரூ.70/-

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.


இணையத்தில் வாங்கிட ;