Friday, March 6, 2009

எங்கள் சரஸ்வதிகள் ...

எங்கள் சரஸ்வதிகள் ...
மார்ச் -8 மகளிர் தினம் .
என்ன எழுதுவது ?
ஏதாவது எழுதி ஆக வேண்டுமே என்றதும் சட்டென்று நினைவில் நிழலாடியவர்கள் எனக்கு பால்வாடியில் இருந்து கல்லூரிக் காலம் வரை கல்வி கற்பித்த சரஸ்வதிகளே!
பால்வாடியில் இருந்து ஆரம்பிக்கிறேன் ...அது தான் சரியான முறை.
"நவநீதம் என்றொரு ஆசிரியை "...இன்னும் நன்றாக ஞாபகத்தில் இருக்கிறார்.மிஞ்சிப் போனால் 4 வயதிருக்கும் எனக்கு.இன்னும் மறக்கவில்லை அவர் முகம்.ஒடிசலாய் கமலா காமேஷ் போலிருக்கும் அந்த டீச்சரை அங்கு அப்போது படித்து வந்த எங்கள் எல்லோருக்குமே ரொம்ம்பவே பிடிக்கும்.
அம்மா
ஆடு
இலை

...இதெல்லாம் அவர் தான் அறிமுகப் படுத்தினார் .இப்போது என் மகளுக்கு தமிழ் கற்பிக்க உட்காரும் போதெல்லாம் தவறாமல் நவநீதம் டீச்சரும் ஞாபகத்தில் நிழலாடுகிறார்.
அடுத்து "ஒன்றாம் வகுப்பு ...இங்கே கனகவல்லி டீச்சர் "...டீச்சருக்கு அநேகம் பேரை பிடிக்காது ...டீச்சரையும் எல்லா மாணவர்களுக்கும் எல்லாம் பிடிக்காது .காரணம் கனகவல்லி டீச்சர் எப்போதுமே சரியாக வீட்டுப் பாடம் செய்யாதவர்களை வயிற்றைப் பிடித்துக் கொண்டு கிள்ளுவார். வலிக்கும்.அந்த வலி தான் அவர்களை எப்போதும் மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொள்ள உதவுகிறது.
என்றாலும் இப்போதெல்லாம் டீச்சரை எங்கேனும் காண நேர்ந்தால் முன்பு போல கிள்ளுவாரோ என்று சற்று ஓரம் ஒதுங்கியே மரியாக்தை நிமித்தம் "நல்லா இருக்கீங்களா டீச்சர்?!" என்று கேட்டு விட்டால் போதும் டீச்சர் கண் கலங்கி விடுவார். அப்போது பிடிக்காத டீச்சர் இப்போது எல்லோருக்கும் பிடித்தவராகி விட்டார்.வயோதிகத்தில் அவரைப் பார்க்க நெஞ்சில் எதோ கலக்கம் நிழலாடவே செய்கிறது(பின்னே நமக்கும் வயதாவதை டீச்சரின் மரியாதை பன்மை உணர்த்துவதைஎப்படி விளக்க?)
இரண்டாம் வகுப்பில் பாஞ்சாலி டீச்சர் ...சுருள்...சுருளான கேசம்...குவைத் சேலை என்று அப்போது ஒரு சேலை ரகம் படு பிரபலம் ...டீச்சரின் தம்பியோ ,அண்ணனோ அப்போது குவைத்தில் இருந்தார்கள் போல?! டீச்சர் விதம் விதமாய் கலர்..கலராய் பூக்களும் கோடுகளும் விரவிய அந்தச் சேலைகளைப் படு பாந்தமாக உடுத்திக் கொண்டு வருவார்.அதோடு கண்டிப்பான டீச்சரும் கூட .அவரது சின்சியாரிட்டியைப் பார்த்து இப்போது கூட வியப்பு வரும்.ரொம்பவும் பெர்பெக்சன் அவர் அவரது பணியில்.திட்டுவதோ ...கில்லுவதோ அன்றி ஒரே உருட்டுப் பார்வையில் எங்கள் எல்லோரையுமே சமாளிக்கும் கலையை அவர் எங்கு கற்றிருப்பாரோ அப்போது ஆச்சரியப் பட்டிருக்கிறோம்.அவரிடம் பயின்ற ஓராண்டு முழுக்கவே நாங்கள் வீட்டுப் பாடத்தை தவற விட்டதே இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அவரது திறமையை . இரண்டாம் வகுப்பில் இரண்டு செக்சன்கள் இருந்ததால் அவரது வகுப்பில் பயில நீ...நான் என்று போட்டி கூட உண்டு அப்போது.
மூன்றாம் வகுப்பில் ...அம்மாவின் பணி மாறுதல் காரணமாக வேறு ஒரு ஊரில் ஒரு கிருஸ்தவ நடுநிலைப் பள்ளியில் படித்தேன்.அங்கே எனக்கு மூன்றாம் வகுப்பு எடுத்தவர் எஸ்தர் ராணி டீச்சர் ...முக்கால் வருடம் மட்டுமே அங்கு படித்ததால் பள்ளியின் அட்மாஸ்பியர் பழகவே எனக்கு முக்கால் வருடத்தில் பாதி வருடம் ஓடி விட..மிஞ்சியத்தில் அந்த வருடம் எனக்கு ஞாபகம் இருப்பது ,எஸ்தர் டீச்சர் எப்போதும் தவறாது வலது கையில் அணியும் சிவப்பு நிற பிளாஸ்டிக் மோதிரம் தான்.அதன் முகப்பில்"அன்னை மேரியின் படம் இருக்கும்.,குழந்தை ஏசுவைக் காட்டிக் கொண்டு) இந்த மோதிரம் வாங்கி டீச்சர் போலவே வலது கையில் அணிந்து கொண்டு கரும் பலகையில் எழுதுவதாக நாங்கள் அப்போது பாவனை செய்ததெல்லாம் இன்றைக்கு இனிக்கும் நினைவுகள் .
நான்காம் வகுப்பில் ...கிருஷ்ண வேணி டீச்சர்
ஐந்தாம் வகுப்பில் ....சரோஜினி டீச்சர்
இவர்கள் இருவருமே ரொம்ப ஒற்றுமையான டீச்சர்கள் ...பாடம் எடுத்த நேரம் போக மீதி இடைவேளை நேரங்களில் எல்லாம் அவரவர் வாங்கிய புது சேலைகள் ...நகைகள்...பள்ளியில் மாற்ற டீச்சர்களைப் பற்றிய பொது விஷயங்கள்(!!!) இப்படி எதையேனும் பேசிக் கொண்டிருப்பார்கள் ...அவ்வப்போது ஆபிஸ் ரூமில் இருந்து ஜில்லென்று மண் பானைத் தண்ணீர் சொம்பில் நிரப்பி வர எங்கள் பக்கம் திரும்புவார்கள். "டீச்சர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து தர...எங்களுக்குள் நீ...நான் என்று ஓட்டப் பந்தயமே நடக்கும்!" அப்போது அதிலொரு சுவாரஷ்யம் இருக்கத்தான் செய்தது?! இப்போதும்" சோழர் காலம் இந்தியாவின் பொற்காலம்" என்று எங்கேனும் காதில் கேட்க நேர்ந்தால் எனக்கு சரோஜினி டீச்சர் ஞாபகம் வரும். "நான்கு திசைகள் பாடம் கேட்க நேரும் போது கிருஷ்ணவேணி டீச்சர் நிழலாடுவார் .அதென்னவோ அவர்களைப் பற்றி நினைத்துக் கொள்ள எத்தனையோ சம்பவங்கள் இருந்த போதிலும் இப்படிச் சில குறியீடுகள் தானாகவே அமைந்து விடுகின்றன அதன்பாட்டில் .
ஆறிலிருந்து எட்டுவகுப்பு வரையிலும் சார்களே கோலோச்சினர் ...நோ டீச்சர்ஸ் அந்த காலகட்டங்களில்.
மறுபடியும் ஒன்பதாம் வகுப்பில் "சந்திர பாய் டீச்சர் " என் கல்விக் காலங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியை என்றால் அது இவர் தான் .அதென்னவோ டீச்சருக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும்...நான் எப்போதுமே முதல் மூண்டு ரேங்க் மட்டுமே வாங்குவேன் என்று நம்பிய அப்பாவி டீச்சர் அவர் !நான் அவரிடம் பயிலும் போது டீச்சர் நடுத்தர வர்க்கத்தில் இருந்தார்...அவருக்கு மூன்று மகன்கள் ...ஒரே ஒரு செல்ல மகள்...டீச்சர் பல சமயங்களில் தன் மகளை அழைக்கும் செல்லப் பெயரில் என்னையும் எதோ நினைவில் அழைத்து விட்டு பிறகு ஒரு அசட்டுச் சிரிப்பை உதிர்ப்பார் ...எனகென்னவோ அப்போது அந்தச் சிரிப்பை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல இருக்கும்.
"பத்தாம் வகுப்பு ...அனுராதா டீச்சர் "...இவர் அடிப்படையில் கணித ஆசிரியை ...எனக்கோ கணக்கு பெரும் பிணக்கு ...அதனால் பத்தாம் வகுப்பில் காலாண்டுத் தேர்வுக்கு முந்தைய காலம் வரை டீச்சரின் வெறுக்கப் படும் மாணவிகள் லிஸ்டில் நான் இருந்திருக்கக் கூடும்...ஆனாள் எப்படியோ காலாண்டில் டியுசன் எல்லாம் வைத்துப் படித்து கணிதத்தில் 95 மார்க் எடுத்து கொஞ்சமாக டீச்சரின் அன்பைப் பெற்றாயிற்று ...ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்தது ...டீச்சரின் அபிமானம் அல்ல ...கணிதப் பாடம்!
"பதினோராம் வகுப்பு...கலாமணி டீச்சர்" இவர் என் உறவுக்காரர் ...ஆனாலும் டீச்சர் அதை எல்லாம் பள்ளியில் பார்ப்பதே இல்லை. இவரது தனிச் சிறப்பு "கரும் பலகையில் எழுத ஆரம்பித்து விட்டார் என்றால் அவரது வகுப்பு (இவர் வேதியியல் பாடம் எடுப்பார்) முடியும் வரை எங்கள் பக்கம் திரும்பவே மாட்டார். அப்படி என்ன விரதமோ?! என்ன தான் உறவென்றாலும் கேட்கத் துணிந்ததில்லை .நிறைய தேர்வு டிப்ஸ் தருவார் .அழகான தோற்றம் இருந்தாலும் பெரும்பாலும் கைத்தறி சேலைகள் அணிவதை விரும்புவார். நகைகள் அணிவதிலோ...நிறைய பூக்கள் சூடிக் கொள்வதிலோ கலாமணி டீச்சருக்கு எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை நாங்கள் அறிய ...புத்தகமும் கையுமாகவே இருப்பார்.சக டீச்சர்களிடமும் அளவான "நறுக்" பேச்சு தான்.இவர் ஓர் அபூர்வப் பிறவியென்று தோன்றும் எங்களுக்கு.
"பன்னிரெண்டாம் வகுப்பு ...பாண்டியம்மாள் டீச்சர் " இவரை இப்போதும் கூட எங்காவது சந்திக்க நேரும். மிக தோழமையான டீச்சர் .எனக்கு கணித பாடம் எடுத்தார் 12 ஆம் வகுப்பில் ...டீச்சர் எங்கள் வீட்டு மாடியில் குடியிருந்த காரணத்தால் எப்போது வேண்டுமானாலும் டவுட் கேட்கலாம் நான். சுணங்காமல் ...முகம் கோணாமல் எனக்கு கணித சூத்திரங்களைப் புரிய வைப்பார்.என் அம்மாவும் டீச்சரும் நல்ல தோழிகள் என்பதும் ஒரு காரணம். டீச்சரின் ஐந்து வயது (அப்போது...இப்போது அந்த சின்னப் பெண் பள்ளி இறுதி வகுப்பு )மகள் எந்நேரமும் எங்கள் வீட்டில் தான் இருப்பாள் .
அடுத்து கல்லூரிக் காலம் ...
இங்கு எத்தனையோ ஆசிரியைகள் ...
யாரை சொல்வது...யாரை மறக்க இயலும்?
எங்கள் துறை தலைவரான "ஸ்ரீ லதா மேடம்...ஆன்சிலரி கெமிஸ்ட்ரி பாடம் எடுத்த "ஜெய சித்ரா மேடம்...தமிழ் பாடம் கற்பித்த "அருளமுதம் மேடம் ...சங்கீதா மேடம் ...ஆங்கில இலக்கியம் கற்பித்த " அருள் தெரேசா மேடம்...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ....!ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தனிச் சிறப்பு மிக்கவர்கள். "ஸ்ரீ லதா மேடம் கண்டிப்பானவர்கள் என்றால் ...ஜெய சித்ரா மேடம் ரொம்ப பிரெண்ட்லி ...அருளமுதம் மேடம் ..."கல்சுரல்ஸ் " போவதென்றால் எங்களுக்கு அருளமுதம் மேடம் தான் வர வேண்டும் என்று ஒரே போட்டா போட்டியாக இருக்கும்."அருள் தெரேசா மேடம் ரொம்ப சாப்ட் ..இப்படி இவர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம் .
மகளிர் தினம் என்ற ஒரு தினம் வந்தது நல்லதைப் போயிற்று இவர்களை எல்லாம் மீண்டுமொருமுறை நினைத்துப் பார்க்க...
தேங்க்ஸ் டு மகளிர் தினம் .