Sunday, November 1, 2009

கணவர்களின் வாயை அடைப்பது எப்படி?!

யாரோ சொன்னார்கள் கணவனது வயிற்றின் வழியாக அவனது மனதைச் சென்றடையலாம் என்று,சில நாட்கள் இந்த வரிகளுக்கான அர்த்தம் அத்தனை தெளிவாகப் புரிந்திருக்கவில்லை,ஒரு வார்த்தையின் அர்தத்தம் புரிதல் என்பது வெறுமே அதற்கான பொருளை அறிதல் அல்லவே, உணரப் படல் என்பது தானே சரியாக இருக்கும் .

அப்படித் தான் அஷ்விதாவுக்கு கல்யாணம் ஆகி ஆறேழு வருடங்கள் கழிந்த பின் தான் மேற்சொன்ன வார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்கியதாம்,எப்படித் தெரியுமா?

வீட்டுக்கு வீடு வாசப்படி கதை தான் .

அஷ்விதாவுக்கும் அவளது கணவருக்கும் தலைவலி காய்ச்சல் போல எல்லாம் அல்ல நேர நேரத்துக்குப் பசி எப்படி வருமோ அதே போல வாக்கு வாதமும் அவ்வப்போது வந்து வந்து போகும்...வரும் ...அப்புறம் போகும் !!!

அஷ்வியின் கணவர் எத்தனை நல்லவராய் இருந்தும் ஒரு மனஸ்தாபம் அல்லது சண்டை என்று வந்து விட்டால் பேசி பேசியே கொன்று விடுவாராம் மனிதர்.அவர் வாயை அடைக்க வேறெந்த யுக்தியும் இன்றி அஷ்வி ரொம்பவே இன்னல் பட்டிருக்கக் கூடுமோ என்னவோ?!

எல்லாம் கொஞ்ச நேர மனஸ்தாபம் தான்...காலையில் பணிக்குக் கிளம்பும் போது ஆரம்பிக்கும் வாக்குவாதம் சாப்பாட்டுத் தட்டுக்குப் பக்கத்தில் வந்ததும் சட்டென முறியும் ,மதியம் மறுபடி வரும்...வராமலும் போகலாம் அது வேறு விஷயம்;

அப்போதெல்லாம் அவள் கண்களை குளமாக்கி கன்னங்களை வாய்க்காலாக்கிக் கொண்டு அழுகையில் கரைவதை அவர்களது மூன்று வயது குட்டி சுட்டிப் பெண் சம்யூ (சம்யுக்தா) பார்த்துக் கொண்டே இருந்திருக்கக் கூடும் போல!?

காலங்கள் உருண்டன அஷ்வி எதையும் உணர்ந்தாலோ இல்லையோ ?

சம்யூ எதையோ உணர்ந்திருக்கக் கூடும் போல?!

சம்யூவுக்கும் ஐந்து வயது ...

வழக்கம் போல அம்மாவும் அப்பாவும் எதற்கோ கத்திப் பேசிக் கொண்டு வாக்குவாதம் பண்ணிக் கொண்டு இருக்கையில் மெல்ல அம்மாவின் கையைப் பற்றி இழுத்து அவளைக் குனிய வைத்து காதருகே கிசு கிசுப்பாய் ரகஷியம் போல ஒரு விஷயம் சொல்லி விட்டு வெளியில் விளையாட ஓடி விட்டாள்.

இந்தியா ...பாகிஸ்தான் யுத்தம் போல வெகு உக்கிரமாய் நடந்து கொண்டிருந்த சண்டையின் நடுவே அஷ்வி பக்கென்று சிரித்து விட அவளது கணவரும் இதென்னடா ..பைத்தியம் என்பது போல அவளைப் பார்க்க ,

அஷ்வி தீபாவளிக்கு செய்து வைத்திருந்த ரவா லட்டு ஒன்றை எடுத்து வந்து அவளது கணவரின் வாய்க்குள் திணித்தாள்.

கடு கடுப்பாய் மேலே எதோ பேச வந்த கணவனும் வாய்க்குள் இருந்த லட்டின் சுவையால் உடனே பேச வழியின்றி அதை துப்பவும் மனமின்றி அதை ரசித்து உண்பதில் முனைய அஷ்விக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது .

"சம்யூ சொன்னா சாமி சொன்ன மாதிரி " எப்போதோ ஒரு ஜோசியக் காரன் ஜாதகம் பார்க்கப் போன போது கொளுத்திப் போட்ட புகழ் வார்த்தை ஒன்றை அஷ்வியின் கணவர் அடிக்கடி சொல்வாராம் ...பெண்ணின் மேல் தகப்பனுக்கு அத்தனைப் பிரியம் போலும்!

அதுவே தான் நடந்ததாம் ...

சம்யூ என்ன சொல்லியிருப்பாளாய் இருக்கும்.

"அப்பா வாயை அடைக்கனும்னா ரவா லட்டு எடுத்து வாய்க்குள்ள திணிச்சுடும்மா " அப்புறம் பேச முடியாது பார்...

குழந்தை உணர்ந்து சொன்னாலோ விளையாட்டாய் சொன்னாலோ எது எப்படியோ மனைவியின் சுவை மிகுந்த கை மணம் சண்டை சச்சரவுகளின் போது மனைவிக்கு ஒரு வரப் பிரசாதம் தான் என்பதில் ஐயமில்லை .

இப்போது புரிகிறதல்லவா பதிவின் முதல் வரியில் சொல்லப் பட்ட வாக்கியத்தின் அர்த்தம்?!

சுபம்

அடைதோசை



அடைதோசை :


தேவையான பொருட்கள் :
அரிசி - ஒரு கப்
கடலைப் பருப்பு -அரை கப்

பாசி பருப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்

உளுந்தம் பருப்பு - ஒரு டீ ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 10 உரித்தது

தக்காளி - ஒன்று (பெரியது)

காய்ந்த மிளகாய் வற்றல் - 5 அல்லது ஆறு

சீரகம் - ஒரு டீ ஸ்பூன்

கருவேப்பிலை &கொத்து மல்லித் தளை - கைப்பிடி அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

அரிசி மற்றும் தேவையான பருப்பு வகைகளை மேற்சொன்ன அளவுகளில் எடுத்துக் கொண்டு ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும் , இட்லிக்கு அரைப்பதைப் போலவே ஆனால் கொஞ்சம் கரகரப்பாக அரைத்து கடைசியாக வெங்காயம் ,தக்காளி (பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் ),காய்ந்த மிளகாய்,சீரகம் போன்ற பொருட்களையும் சேர்த்து அரைத்த பின் மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து பிரிஜ்ஜில் ஒரு மணி நேரம் வைத்து பின்பு எடுத்து அடையாக ஊற்றி சாப்பிடலாம் ,அடைக்கு சாதா தோசையைக் காட்டிலும் தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் அதிகம் விட்டு திருப்பிப் போட்டு வேக வைத்தால் சுவை அருமையாக இருக்கும் .

அடைக்கு அவியல் பிரமாதமான சைடு டிஷ் ,அதைத் தவிர்த்து அவசரத்திற்கு காரச் சட்னியோ அல்லது தேங்காய் சட்னியோ கூட செய்து சாப்பிடலாம் நன்றாகவே இருக்கும். காலை டிஃபனுக்கு அருமையான உணவு .

அடை பதிவுக்குத் தோதான படம் கூகுளில் தேடியதில் கிடைத்தது ,
நன்றி கதம்பம்.ப்ளாக்ஸ்பாட்.காம்