Thursday, September 16, 2010

வேடிக்கை பிரியங்களும் சலூன் கடை சாய்ந்த நாற்காலிகளும் ...


மக்கள் வாழ்வும் ...மரியாதை நிமித்தங்களும் :

ஒன்றும் பிரமாதமில்லை ;
அம்மாவுக்கு உருப்போட கிடைத்த வார்த்தை
"அப்பாவை எதிர்த்து வாயாடாதே "
அத்தையின் ஜெபமோ
மாமாவின் எதிரில் சேரில் உட்காராதே !
இதென்ன பிரமாதம்?
கல்யாணமென்றால் காத தூரம் ஓடிய
அக்கா மசக்கைக்கு பின் அடிக்கடி சொல்கிறாள்
மாற்றுக் கருத்தே கிடையாதாம்
மாமா சொன்னால் சரியாய் இருக்குமாம்;
ம்ம்...
சரி தான் ;
நான் என்ன சொல்லப் போகிறேனோ ?
வருங்காலக் கனவுகளில்
நிகழ்காலம் கரைத்து
ஆணும் பெண்ணும் சமமென கொடி பிடித்த
முற்கால ஞாபகங்கள்
இத்துப் போன பழம் புடவையாய் ...
சில நூறு பொத்தல்கள்.


சலூன்கடை சாய்ந்த நாற்காலி...


பாம்புகள் சட்டை உறிப்பதை நிகர்த்ததா
பறவைகள் சிறகு உதிர்ப்பது ?
நகம் வெட்டிக் கொண்டோ
முடி திருத்திக் கொண்டோ ;
யோசிக்க
நல்லதொரு சந்தேகம் கிடைத்தது
குடும்பத் தலைவர்களுக்கு ;
பாத்ரூம் குழாய் லீக் ஆவதை சரி செய்வதோ !
மளிகை சாமான்கள் வாங்க ஸ்டோர்களுக்குப் போவதோ !
குழந்தையை பார்க்குக்கு அழைத்துப் போய் விளையாடுவதோ
பின்னதெல்லாம் வெறும் தொல்லைகள் தான் .
இருக்கவே இருக்கிறது
சலூன்கடை சாய்ந்த நாற்காலி
சிந்தனை சிற்பிகள் ஆகும்
போட்டிக்கு
இன்று எத்தனை பேர்!



வேடிக்கை் ப்ரியங்கள் ... 


அப்பாவைப் பொறுத்தவரை
தொலைக்காட்சிப் பெட்டியின் சேனல்கள் ஒவ்வொன்றாய்
தாவித் தாவிப் போவதும்
ஜான்சன் பட்ஸ் எடுத்து காதைக் குடைவதும்
பற்குச்சியால் கோழித் துணுக்குகள் அகற்ற
பல்லிடுக்குகளை நோண்டிக் கொள்வதுமாய்
காரியங்கள் யாவும் நிறைவேறிக் கொண்டிருந்தன;
அம்மாவைப் பொறுத்தவரை
புத்தக அலமாரியில்
ஒவ்வொரு புத்தகமாய் எடுப்பதும் வைப்பதுமாய்
குழாயில் தண்ணீர் வருகிறதா பார்ப்பவள் போல
குமிழைத் திருகுவதும் மூடுவதுமாய்
கர்ம சிரத்தையாய் காரியங்கள் யாவும்
நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.
விடுமுறை நாளின் காலை முதலே
வெடித்து விடக் கூடுமென்று நம்பிய
ஒரு சிறு சண்டையை திசை மாற்றி ஏமாற்றும் பொருட்டு ;
என் பங்குக்கு நான் கூட
சாயமேற்றிய நகங்களுக்கு
மறுபடி மறுபடி சாயமேற்றிக் கொண்டும்
பின்னிய கூந்தலை
பிரித்துப் பிரித்து பின்னிக் கொண்டும் ;
காரியங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்
எப்போது வெடிக்குமந்த சண்டை என வேடிக்கை பார்க்க ;


Note :

பஸ்ஸில் எழுதிய கவிதைகள்.சேமிப்பிற்காக இங்கே.



இச்சைகளும் இடாகினிப் பேய்களும் ...




இச்சையில் ஆடும் இடாகினிப் பேய்களுடன்
விடாது கதைக்கத் தொடங்கி
இன்றோடு நாட்கள் எட்டு
எட்டி விடும் தூரம் தான்
சுவாதீனமாய் சப்பணமிட்டு
அவள் ஆடிக் கொண்டிருந்தாள்;

சுளீர் சுளீரென 
அகல விசிறிச் சுழன்று தாழ்ந்து ஓயும்
நீளக் கூந்தல் குத்தூசிகளாய் விரிந்து பரவ
உறுத்து விழிக்கும் ஆங்கார கண்கள்
என்னைப் பிய்த்து தின்று விடும் கோரப் பசியில் ;
பேய்கள் அவளை ஆட்டுவிக்கின்றனவாம்
பேசிப் பேசி கலைகிறார்கள் ;
வேடிக்கை மனிதர்கள்;

பெருந்தீனியிட்டு பேய் வளர்க்கும் கலை அறியாதவர்கள்...


நோட்: படம் கூகுளில்  எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.உரிமைக்காரர்கள் ஆட்சேபித்தால் நீக்கப் படும்