Monday, April 6, 2009

ஈசல் சாப்பிட்டு இருக்கிங்களா ?!

மழை பெய்து முடித்த மறுநாள் காலை என்று தான் நினைக்கிறேன்! பெருவாரியான ஈசல்கள் கூட்டமாக மொய்த்துக் கொண்டிருக்கும் காட்சியை எங்கள் கிராமத்தில் சகஜமாகக் காணலாம் .அழுக்கான கண்ணாடித் தாள் போன்ற மெல்லிய றெக்கைகள் அதற்கு .வாசிப்பவர்கள் ஈசலைத் தட்டான் பூச்சி என்று நினைத்துக் கொண்டு விடாதீர்கள் .அது வேறு ,இது வேறு

"தட்டான் தாழப் பறந்தால் மழை வரும்" என்பார்கள் ஊர்ப் பக்கத்தில் ,ஆனால் ஈசல் எப்போதும் மழை ஊற்றி முடித்த மறுநாள் காலையில் தான் வண்டல் மண் சேகரித்துக் கொட்டி வைக்கப் பட்டிருக்கும் திட்டுக்களின் மேலே கூரை போல கூட்டமாக மொய்த்துக் கொண்டிருக்கும் .

ஆர்வமிருக்கும் சில சிறுவர்...சிறுமிகள் கையேடு கொண்டு போயிருக்கும் பித்தளைத் தூக்குகளிலோ அல்லது எவர்சில்வர் தூக்குகளிலோ அந்த ஈசல்களைப் ஓடி ஓடி பிடித்து அடைத்து வைத்துக் கொள்வார்கள் .உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் ஈசல்களின் வாழ்நாள் காலம் ஒரே ஒரு நாள் மட்டுமே !

மழை பெய்த மறுநாள் காலையில் கண்களில் படும் ஈசல்கள் அன்றைய தினமே வெயில் ஏற ஏற ஆற்று மணல் ...அல்லது களத்து மணல் மேடு போன்ற இடங்களில் வெயிலில் சுருண்டு விழுந்து கொஞ்ச நேரத்தில் உயிரை விட்டு விடும். அந்த ஈசலகளையும் விட்டு வைக்க மாட்டார்கள் சிலர் .

அதென்ன டேஸ்ட்டோ ?! இப்போது யோசித்தால் ஒன்றும் புரியவில்லை! என் தாத்தாவின் வத்தல் களத்தில் சோடை வத்தல் பொறுக்கி நல்ல வத்தல்களை மூட்டை கட்டி கொடுத்து விட்டுப் போக பக்கத்து ஊரிலிருந்து வரும் தினக் கூலிகளில் சரசக்கா இந்த ஈசல்களை மகா ஆசையோடு பாலீதீன் பைகளில் சேகரித்து வைத்து நன்றாக வெயில் ஏறியதும் களத்து சுடுமணலில் காய வைப்பார் .

ஈசல்கள் மொரு மொறுவென்று காய்ந்ததும் அங்கேயே கற்களை வைத்து அடுப்பு மூட்டி பொரிகடலை ...காய்ந்த வத்தல் கொஞ்சம் உப்பு கூட அந்த ஈசல் என்று கலந்து போட்டு வறுத்து உண்பார். வேடிக்கை பார்க்கும் எனக்கும் தருவார். வயிற்றைப் புரட்டிக் கொண்டு வாந்தி வரும் எனக்கு .

இப்படி அல்லாது வெறுமே காய்ந்த ஈசல்களை உன்பவர்களையும் பார்த்திருக்கிறேன் அப்போது நான்!!! இப்போது நினைத்துப் பார்த்தால் வித்யாசமான மனிதர்கள் ...வித்யாசமான பழக்க வழக்கங்கள் என்று தோன்றினாலும் அந்த நாள் ஞாபகங்கள் என்றுமே இனிக்கவே செய்கின்றன. ஈசல்களைப் போலவே தான் அதற்குப் பின் நான் சரசக்காவையும் காண நேரவில்லை .