Friday, May 28, 2010

கசாகூளம் "கி.ரா " வின் சொல்லாடலுக்கான அர்த்தம்



கி.ரா வின் அந்தமான் நாயக்கர் நாவலில் சில இடங்களில் கி.ரா "கசாகூளம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருந்தார்,அந்த நாவல் வாசித்ததில் இருந்து யோசித்துக் கொண்டே இருந்தேன் ,இதென்ன புது வார்த்தை இதற்கென்ன அர்த்தம் என்று ! இன்று நெட்டில் அ .மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் நாவலைப் பற்றி ஏதேனும் படிக்க கிடைக்கிறதா என கூகுளில் தேடிக் கொண்டிருக்கையில் எதேச்சையாய் கண்ணில் விழுந்தது இந்த கசாகூளம் வார்த்தைக்கான அர்த்தம்.

அர்த்தம் வேண்டுவோர் கீழே வாசியுங்கள் ;

//திருச்சியில், மண்டல பொறியியல் கல்லூரி என்று முன்பு அழைக்கப்பட்ட National Institute of Technology, Trichyயில் ஆண்டு தோறும் நடக்கும் விழா "ஃபெஸ்டம்பர்". அதில் ஒருமுறை நடத்தப்பட்ட ஒரு பல்சுவை நிகழ்ச்சிக்கு கசாகூளம் என்று பெயர் வைத்திருந்தினர் . கேட்பதற்கு வினோதமாகவும், எனக்கு விசித்திரமாகவும் இருந்தது கசாகூளம் என்ற சொல்.ஆங்கிலத்தில், ரிச்சர்ட் க்ளோவர் தொகுத்துள்ள Dag's dictionary பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம் (இல்லையென்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள் :) ). மொழியினால் வெளிப்படுத்த முடியாத சில செயல்களுக்கு, ஒரு சொல்லை தேர்ந்தெடுத்து அதற்கு ஒரு தத்துபித்து விளக்கமும் கொடுத்தால் அது ஒரு dagword. உதாரணத்திற்கு, Batbiter என்ற சொல்லினை எடுத்துக் கொள்வோம். Batbiter என்றால் சூப்பராக விசப்பட்ட பந்தில், டூபாக்கூர் மாதிரி விளையாடி, beaten ஆன பிறகு, பேட்டில் தான் ஏதோ பிரச்சினை இருப்பது போல் பார்ப்பவர். சுருங்கக்கூறின் நம்ம சவுரவ் கங்குலி மாதிரி.அதே போல என்னுடைய dagword தான், இந்த கசாகூளம். ரொம்ப சுற்றி வளைக்காமல் கூற வேண்டும் என்றால் Potpourri, Collage, Medley மாதிரி என்று கூறலாம்.//

மேலே குறிப்பிட்டுள்ள விளக்கம் எனக்குப் படிக்க கிடைத்தது இங்கே தான் http://santhoshguru.blogspot.com/2005/04/blog-post.html அந்த வகையில் இந்த வலைப்பதிவாளருக்கு எனது நன்றிகள்.
எப்படியோ கசாகூளம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரிந்ததால் அந்த வார்த்தையைப் படிக்கும் போதெல்லாம் உண்டான மண்டைக் குடைச்சல் இன்றோடு தீர்ந்தது.
:)

Thursday, May 27, 2010

சாமரப் பெண்டிர் ...

கற்கண்டுக்கு நேற்றிரவில் சரியான தூக்கமில்லை ,மூன்றாம் சாமத்தில் உளைந்து உபாதை கொடுத்துக் கொண்டே இருந்த வலது தோள்பட்டை கொஞ்சம் கழற்றி வைத்தால் தேவலாம் போல பின்னிப் பின்னி வழியில் துவண்டு கொண்டிருந்தது.கிழக்குச் சூரியன் மேற்கில் ஏறி வரத் தொடங்கியதைக் கண்டதும் உபாதைகளைப் புறம் தள்ளி வலி விழுங்கி அரண்மனைக்குப் புறப்பட ஆயத்தமானாள்.மன்னருக்கு சாமரம் வீசும் பெண் மன்னருக்கு முன் அங்கிருக்க வேண்டாமோ!சாமரம் வீச ஒருத்தி போதுமோ? இடப் பக்கம் கற்கண்டு என்றால் வலப் பக்கம் சாமரம் வீச பொன்வண்டு வருவாள்.

கற்கண்டு பொன்வண்டின் வீட்டை அடைகையில் பொன்வண்டு தன் வீட்டு கல் கூரையின் திண்டில் சாய்ந்து காற்றுக்கு ஆடிக் கொண்டிருந்த தென்னம் பாளைகளை சுய இரக்கம் கவிந்து போன பார்வையால் ரசனையே அற்றுப் போனவளாய் பார்த்துக் கொண்டிருந்தாள். கற்கண்டும் பொன்வண்டும் புன்னகை மறந்தவர்களாய் அரண்மனைக்குப் பறந்தார்கள்.

மயிலிறகுகளை விசிறி போலப் பிணைத்துக் கட்டிய முறம் போன்ற மென் சாமரங்களை ஆளுக்கு ஒன்றாய் கைகளில் ஏந்திக் கொண்டு ராஜாவின் தர்பார் மண்டபத்துக்கு வந்து சிம்மாசனத்தின் இரு புறமும் தயாராய் நின்று கொண்டார்கள் ,கட்டியக்காரன் பராக் பராக் சொன்னதும் உள்ளே வந்த ராஜா இந்தப் பெண்களை ஏறிட்டும் பார்த்தாரில்லை .

அப்போது ஆரம்பித்த விசிறல் ராஜாசபை களைந்து அந்தப்புரம் போகும் வரை தொடர்ந்தது.இடையில் கை மாற்றிக் கொடுக்க ஒரு ஆளை போடக் கூடாதா இந்த பாழாய்ப் போன ராஜாக்கள்!!! தோள் பட்டையிலும் மணிக்கட்டு மூட்டிலும் வலி விண் விண்ணென்று தெறிக்க பொன்வண்டின் முகம் பொலிவிழந்து வாடிப் போனது, கற்கண்டு சாமரம் வீசும் பெண்கள் தான் உலகில் சபிக்கப் பட்டவர்கள் எனும் ரீதியில் துக்கப் பட்டு வேதனையில் ஆழ்ந்து போயினள்.பாவம் இந்தப் பெண்கள்! என்று நினைக்க ஆட்கள் எவரையும் காணோம் அத்தனை பெரிய அரண்மனையில் !

Wednesday, May 19, 2010

பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அலட்சியப் படுத்துவது தான் மத நம்பிக்கையா?

இந்து மத நம்பிக்கைகளுக்கும் அறிவியலுக்கும் இருக்கும் தொடர்பு அல்லது தொடர்பற்ற நிலை குறித்து சென்னை பிர்லா பிளானெட்டோரியத்தில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறதாம்.இந்த பயிற்சி முகாமை உடனடியாக நிறுத்தக் கூறி பி.ஜே.பி தமிழக மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணனும் இந்து முன்னணி ராமகோபாலனும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.

இந்த பயிற்சி முகாம் இந்து மதத்தின் பாரம்பர்ய நம்பிக்கைகள் மீது சேற்றை வாரி இறைக்கும் முயற்சி எனவும் இப்படி ஒரு பயிற்சி முகாமை நடத்துவதில் அரசியல் ரீதியான காரணங்கள் இருப்பதாக தாம் நம்புவதாகவும் அவர்கள் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

கீழே உள்ள அறிவிப்பைப் பாருங்கள் ;

சென்னை, மே 7_ சென்னை பிர்லா கோள-ரங்கத்தில் உள்ள அறி-வியல் தொழில்நுட்ப மய்யத்தில் பல்வேறு பயிற்சிகளும், தொழில்-நுட்ப நிகழ்ச்சிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மே 15ஆ-ம் தேதி நடைபெற உள்ள ஒரு நாள் பயிற்சியில் நவீன தொலைநோக்கிகளைக் கொண்டு, விண்வெ-ளியைக் கண்காணித்தல், 3டி அறிவியல் காட்சிகள், சூரிய ஒளிக்கதிர்களின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் நிகழ்ச்சிகள் நடத்-தப்பட உள்ளன. இதில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோருடன் பங்கேற்-கலாம். முதலில் வருபவர்-களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், 50 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்படுவர். மே 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை மூன்று நாள் கோடைகால முகாம் நடத்தப்படுகிறது. சூரிய ஒளிக்கதிர் முறை, சந்திரன் குறித்த ஆய்வு-கள், நட்சத்திரங்களின் பிறப்பு, அண்டைவெளி, தொலைநோக்கு கருவிகள் ஆகியவை குறித்த விவ-ரங்கள் கற்றுத் தரப்படும். இதில் 7, 8 மற்றும் 9ஆ-ம் வகுப்பு மாணவ, மாண-விகள் பங்கேற்கலாம்.மே 20ஆ-ம் தேதி முதல் 28ஆ-ம் தேதி வரை ஓவியம் மற்றும் களிமண் சிற்பங்-கள் செய்வது குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இப்பயிற்சியில் 8-ஆம் வகுப்பு முதல் 11ஆ-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பயிற்சி-களில் பங்கேற்க விரும்பு-பவர்கள் 044_24410025 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு-கொண்டு, பதிவு செய்து-கொள்ள வேண்டும்.

பயிற்சி முகாம் பற்றிய இந்த அறிவிப்பில் எங்கேயாவது இந்து மதத்தின் நம்பிக்கைகள் குறித்தான அவதூறுகளைக் காண முடிகின்றதா? நட்சத்திரங்களை ,வான மண்டலத்தைப் பற்றிப் படிப்பதோ தெரிந்து கொள்வதோ எப்படி இந்து மத நம்பிக்கைகளில் சேற்றை வாரி இறைப்பதாக இருக்க முடியும்?! இந்து மதத்தைப் பற்றியோ அதன் கடவுள்களைப் பற்றியோ இந்த அறிவிப்பில் எதுவும் தவறாக இல்லை. பிறகெதற்கு இந்தப் பயிற்சி முகாமை உடனடியாக நிறுத்தச் சொல்லி இவர்கள் இருவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்?

தமிழக அரசியல் வாதிகளுக்கும் மதத் தலைவர்களுக்கும் எங்கு?...எதற்கு ?... எப்படி? எதிர்ப்பு தெரிவிப்பது என்பதில் பயங்கரக் குழப்பம் நிலவி வருவது புரிந்திருக்க வேண்டுமே!!!

மாணவர்கள் அறிவியல் அறிவைப் பெறுவதால் அவர்கள் சார்ந்துள்ள இந்து மதத்தின் மீதான நம்பிக்கை குலையும் என எப்படி இவர்கள் இருவராக முடிவு செய்து கொண்டார்கள்.இப்படியே போனால் வானியல் என்றொரு பாடமே இருக்கக் கூடாது என்று கூட சொல்லக் கூடும் நாளடைவில்.வான மண்டலம்..நட்சத்திரம் ....அண்ட வெளியில் சிதறிப் பரவியுள்ள எண்ணற்ற கோள்களைப் பற்றிய விரிவான விளக்கங்கள் இவைகளை எல்லாம் பள்ளி மாணவர்கள் கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பாக இதைக் கருதுவதால் இவர்களுக்கு என்ன நஷ்டம்?

சூரியனை பாம்பு விழுங்குவது சூரிய கிரகணம் என்றும்,சந்திரனை பாம்பு விழுங்கினால் அது சந்திர கிரகணம் என்றும் இனி வரும் தலைமுறைகளும் நம்ப வேண்டுமா? சந்திரன் (நிலா) இந்த நட்சத்திரத்தின் மனைவி ரோஹிணி எனும் நட்சத்திரமாம் சந்திரன் ரோஹிணியோடு இருக்கும் காலங்கள் வளர்பிறை என்றும் ரோகினியை விடுத்து இன்னொரு மனைவி(பெயர் தெரியவில்லை) யோடு இருக்கும் காலங்கள் தேய்பிறை என்றும் தான் எப்போதும் நம்பிக் கொண்டிருக்க வேண்டுமா?

மத நம்பிக்கைகள் என்ற பெயரில் எதையும் ஆராயாமல் ஏற்றுக் கொள்ளும் மடத்தனம் இன்னும் எத்தனை காலத்துக்கு நீடிக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள்,இதெல்லாம் மதத்தின் பெயரால் ஏமாற்று வேலைகள் ஆகாதா?

முதலில் திரைப்படங்களுக்கு இப்படித்தான் பெயர் வைக்க வேண்டும் ...இப்படி எல்லாம் பெயர் வைக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள்,அப்புறம் இரவு எட்டு மணிக்கு மேல் திரையரங்குகள் மூடப்பட வேண்டும் என்று ஒரு கட்சி கண்டித்தது...இப்போது மாணவர்களுக்கு நடத்தப் படும் பயிற்சி வகுப்புகளில் கை வைத்திருக்கிறார்கள்.

யார் எதைப் படித்தால் இவர்களுக்கென்ன ? பள்ளி மாணவர்கள் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும் எதை கற்றுக் கொள்ளக் கூடாது என்பதை அவரவர் பெற்றோர்களும் அந்தந்த மாணவர்களும் அல்லவா முடிவு செய்து கொள்ள வேண்டும்.இவர்கள் யார் நடுவில் கருத்துச் சொல்ல!குட்டையைக் குழப்புவதில் மீன் கிடைக்குமா ?

கட்சிகளும் மதங்களும் அவரவர்களுக்குரிய இடங்களை விட்டு விட்டு சுய சார்புடைய சுயமாய் சிந்திக்க கற்றுத் தரப் படும் சில விசயங்களில் மூக்கை நுழைப்பானேன்.

Tuesday, May 18, 2010

மாரிக்கும்...காளிக்கும்...தாத்தனுக்கும் சமர்ப்பணம்

மாரியின் முழுப்பெயர் எனக்குத் தெரியாது.என் பாட்டியின் வயதிருக்கும் ,பின் கொசுவம் வைத்து தான் சேலை கட்டுவாள்,கொப்பு வைத்து அள்ளி சொருகிய தலைமுடி ,லேசாக கண்கள் சொருகினார்போல சிரித்தபடி தான் எப்போதுமே இருப்பாள்,நான் கூட மாரியைப் போல கண்ணாடி முன் நின்று கொண்டு சிரித்துப் பார்த்ததுண்டு ,அதென்னவோ அந்த ஸ்டைல் பிடிபட்டதே இல்லை,அவளென்னவோ கண்ணாடி முன் நின்று சிரித்துப் பார்த்து ப்ராக்டிஸ் செய்பவளேல்லாம் இல்லை,அதற்கெல்லாம் அவளுக்கு நேரமும் இருக்காது.

மாரிக்கு காளி என்றொரு புருஷன் ;காலங்காலையில் சம்சாரி வீடுகளிருக்கும் தெருக்கள் வழியாகப் புருஷனும் பெண்டாட்டியுமாய் ஒரு ரவுண்டு வருவார்கள்.மாரியின் இடுப்பில் பெரிய எவர்சில்வர் குண்டான் இருக்கும்,காளி சட்டையில்லாத மேலுடம்பில் ஒற்றி உலர்ந்த வயிற்றில் ஏகப்பட்ட சுருக்கங்களுடன் சாயம் போன துண்டு ஒன்றை இடுப்பில் கட்டிக் கொண்டு வருவான்,மாரி வீடுகளில் சோறு வாங்கும் வேலையை செய்தாளானால் காளி அழுக்குத் துணி எடுக்கும் வேலையைச் செய்வான், ஒவ்வொரு வீடாய் மலை போல சேர்ந்து போன அழுக்கு மூட்டைகளை இரண்டு மூன்று சிறு சிறு குன்றுகள் போல கட்டிக் கொண்டு போய் தெரு முக்கில் வைத்து விட்டுப் போவான்,ஒரு வழியாய் சோறெடுக்கும் வேலை முடிந்து அவர்களின் குடிசைக்குப் போய் உண்டு முடித்தார்களானால் காளியின் மகன் ரெண்டு கழுதைகளைப் பத்திக் கொண்டு வந்து காளி தெருமுக்குகளில் கட்டி வைத்த துணி மூட்டைகளை அவற்றின் முதுகில் ஏற்றிக் கொண்டு குடும்பமாய் ஊர் கம்மாய்க்குப் போவார்கள்.

அடிப்பதும் துவைப்பதுமாய் ஜோராய் வேலை ஆரம்பமாகும்.

பளிச் பச்சைக் கரை சாரதி வேட்டி கண்ணில் பட்டதும் காளி ரவுத்திரமாவான்.அதற்கு இணையான கதர் சட்டையை தேடித்துழாவிஎடுப்பான் ;

கோழிப்பண்ணை நாயக்கன் வீட்டு வேட்டியும் சட்டையும் தான் அது ?

டேய் முட்டா நாயக்கா அன்னைக்கு அஞ்சு ரூபா பணம் கடனாக் கேட்டதுக்கு என்னா சொன்ன எம்பொண்டாட்டிய அடகு வைன்னா சொன்னா இந்தாடி வாங்கிக்கோ உன்ன இப்ப என்னா தொவை தொவைக்கப் போறேன் பாரு,மவனே செத்தடி நீ, துணைக்கு மகனையும் அழைத்துக் கொள்வான் ,

"டேய் சோலை இந்தா இந்தக் கையப் பிடிச்சி முறிடா " கல்லில் படீர் படீர் என கோபம் வடியுமட்டும் அடித்து முடிப்பார்கள் ,அத்தனை கோபத்துக்கும் சட்டை சேதமாகி விடக் கூடாதென்பதில் அதீத கவனமிருக்கும்.

செட்டி வீட்டுப் பெண் சரளாவின் பாலியஸ்டர் பட்டுச் சேலையைக் கண்டதும் சோலைக்கு கண் மண் தெரியாமல் கோபம் மூளும்,

" ஏய் அப்பே இந்தா இருக்காளே இந்த மூதேவி பொம்பள போன தபா எம்பொண்டாட்டி இந்த பட்டுச் சேலையக் கட்டிட்டு சோலைக் கருப்பன் கோயில் கொடைக்குப் போய்ட்டா ,மறுக்கா பஸ்ல வரைல பாத்துப்புட்டாளாம் இந்த சேலைக்காரப் பொம்பள ;அத்தினி பேரு நிக்காங்களே பஸ்லன்னு கூட காங்காம மானங்கெட்ட சிறுக்கி எஞ்சேலைய எதுக்குடி எடுத்துக் கட்டிக்கிட்டு ஊர் மேயுறன்னு கேட்டுப்புட்டாளாம் ,உம்மருமவ "என்னிய இப்படிக் கேட்டுப்புட்டாலே அந்தப் பாதகத்திப் பொம்பளன்னு " மூணு நாளா சோறு தண்ணி இல்லாம கெடந்தா . அவள நாலு மிதி மிதிச்சாதான் எம் மனசாறும் "

அந்தச் சேலை... இந்த வேட்டி ...அந்த ஜாக்கெட்...இந்த தாவணி ...பட்டாளத்துக்காரன் டவுசர் ,நாட்டாமைக்காரர் லங்கோடு என்று அப்பனும் மகனும் மடார் மடார் படீர் படீர் என அடங்காக் கோபத்தை அடித்து அடித்து வடித்து முடித்த பின் அழுக்கு போய் துணிகள் மட்டுமா சுத்தமாகும் அந்த ஏழைகளின் ஊமைக் கோபங்களும் சுத்தமாய் வடிந்து போய் மறுபடி அந்தி கருக்கலில் ஒவ்வொரு வீடாய் துவைத்த துணிகளைக் கொண்டு போய் கொடுத்து விட்டு வருவார்கள்.

ராச்சோறு வாங்கமாரியும் வருவாள் .

மாரியை நான் பாட்டி என்று அழைத்திருக்கலாம்.அழைக்காமல் தடுத்தது எது! அழைக்க வேண்டும் என்று தோன்றக் கூட இல்லை அப்போது.அந்த நாள் அப்படிப் பட்டது.என் பாட்டி வயதில் இருப்பவர்களைக் கூட சம்சாரி வீட்டுக் குழந்தை எனும் அகம்பாவத்தில் வா போ...வாடா போடா என அழைக்க வைத்தது எது! இந்த பாரபட்சங்கள் இன்றைக்கு பெருமளவில் குறைந்து விட்ட போதிலும் மாரியின் சிரித்த முகம் ஞாபகம் வரும் போதெல்லாம் அவளை என் வயதொத்த பிள்ளைகள் பாட்டி என்று அழைத்திருந்தால் அவள் சந்தோசப் பட்டிருக்கக் கூடுமோ என்று தோன்றும்.

மாரியின் எவர்சில்வர் குண்டானில் இருக்கும் பல வீட்டுச் சோற்றை கேளிக்கேனும் அள்ளி எடுத்து ஒரு வாய் உண்பதிலும் ,கனத்துத் தொங்கும் அவளது தண்டட்டியை தொட்டு இழுத்து விளையாடுவதிலும் காட்டப் பட்ட எல்லையற்ற ஆர்வம் அவளை ஒரு முறையேனும் பாட்டி என்று அழைப்பதில் காட்டப்படவே இல்லை. பாட்டி என்ற அழைப்பை அவள் எதிர்பார்த்திருக்க முடியாது ஆனாலும் தலையில் அடித்ததைப் போல அத்தனை பெரிய மனுஷியை பெயர் சொல்லி அழைத்த விதத்தை அவள் ரசித்திருக்க மாட்டாள்,

விருப்பும் வெறுப்பும் அற்றுப் போன நிலையில் தான் அன்றைய குடியானவர்களை இந்த சமூகம் வைத்திருந்தது .மனித உழைப்பை மலினமாக்கி அவர்களது சுயமரியாதையையும் முடக்கி வைத்த அந்த நாட்களை நினைக்கையில் இன்றைக்கு மாரியின் பேரன் கவர்ன்மென்ட் வேலை பார்த்து கால் காசு சம்பாதித்தாலும் கவுரவமாய் சம்பாதிப்பது ஆறுதலாய் இருக்கிறது .


மாரியின் கதை இப்படி என்றால் ;

தாத்தன் என்றொரு வயதான வெட்டியான் இருந்தார் எங்கள் ஊரில் ,யார் செத்தாலும் எரிப்பதும் புதைப்பதும் அவரே, ஊர் கட்டு செட்டான ஊர் அதோடு சம்சாரி வீட்டுக் குடும்பத் தலைவிகள் இருக்கிறார்களே பெரும்பாலும் கண்ணில் விளக்கெண்ணெய் விடாத குறை தான். அழுக்குத் துணி எடுக்க காளி வந்தாலும் சரி ,தொழுவத்தில் சாணி அள்ள குப்ப மாதாரி வந்தாலும் சரி .வீட்டுப் பிள்ளைகளுக்கு முடி வெட்ட முனுசாமி நாவிதன் வந்தாலும் சரி அவர்களுக்கு சம்பளம் அளப்பதில் ரொம்பத்தான் பெரிய மனசு .ஒனக்கும்...நீ செஞ்ச வேலைக்கும் இம்புட்டுப் போதாதாடா என்று ஒரே மிரட்டு மிரட்டி எத்தனை வயதானவர்கள் என்றாலும் அடா...புடா போட்டு சாதிப்பார்கள்.அதில் பட்சி நாயக்கர் வீட்டம்மாள் ஊருக்கு முதல்வி .அந்தம்மாள் சம்பளம் அளக்க வருகிறாள் என்றால் குடியானவர்களுக்கு வயிறு எரியும்.

ஒரு கோடை நாளில் அந்தம்மாள் செத்துப் போனாள், ஊரோடு சுடுகாடு வரை சொந்தம் பந்தம் எல்லாம் போய் அழுது குமித்தாலும் எரிந்து முடியும் வரை பிணத்துக்கு காவல் வெட்டியான் மட்டும் தானே! ஏற்கனவே சாயங்காலத்தில் எடுத்ததால் பிணத்தை எரிக்க இரவாகி விட்டது.எல்லோரும் போய் விட்டார்கள் .வெட்டியான் தாத்தன் பிணத்தை எரித்துக் கொண்டிருந்தார்.பட்சி வீட்டம்மாள் திகு திகுவென எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அழுது கொண்டே சொந்தம் கலைந்தது.பட்சியின் அக்கா பேரன் வெங்கடரமணி வயிற்றை கலக்குகிறது என்று ஒதுங்கப் போனவன் அங்கே கூட நாலைந்து இளவட்ட நண்பர்களைப் பார்த்ததும் ஊர் கதை உலகக் கதை பேசிக் கொண்டு நின்று விட்டு அந்த நால்வரும் பிணம் எரிக்கத் தொடங்கிய ஒரு மணி நேரம் கடந்து அந்தப் பக்கம் வந்திருக்கிறார்கள் சுடுகாட்டைக் கடந்து வீட்டுக்குப் போக.

தாத்தன் ரத்தமும் சதையுமாய் எரியும் பிணம் சிதையில் இருந்து வெடித்து சிதறி தரைக்கு வந்தால் மறுபடி சிதைக்குள் தள்ள என்று வைத்திருக்கும் ஒரு கம்பால் பிணத்தைப் போட்டு அடி சவட்டி எடுத்துக் கொண்டிருந்தான்.

இதேதடா தாத்தன் பிணத்தை இப்படிப் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறானே என்று அதிர்ச்சியாகிப் போன இளவட்ட கோஷ்ட்டி அருவமில்லாமல் நெருங்கி வந்து தாத்தன் அறியாமல் அவன் செய்வதை பக்கத்தில் வந்து வேடிக்கை பார்க்க.

தாத்தன்...

"பண்ணை வீட்டு நாயக்கரம்மா நீயெல்லாம் ...உசிரோட இருந்த வரைக்கும் ஒரு நாள் கூலிய ஒழுங்கா கொடுத்திருப்பியா எங்களுக்கு ,இந்தா வாங்கிக்கோ ...இந்தா வாங்கிக்கோ :

கம்பால் மொத்து மொத்தென்று ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டே ;

"இந்த அடியெல்லாம் ஒனக்கு எம்மாத்திரம் நீ பண்ண அக்குறும்புக்கு ஒன்னைய எம தர்மன் எண்ணெய் சட்டில வறுக்கணும்...போ ...போ அங்க எமன் காத்திருப்பான்."

பார்த்துக் கொண்டிருந்த கோஷ்ட்டி மூச்சுக் காட்டாமல் சுடுகாட்டை விட்டு ஊருக்குள் ஓடி வந்தது.அங்கே பிடித்த ஓட்டம் ஊர் மந்தை வேப்ப மரத்தடியில் மூச்சு வாங்க நின்றது.திக்கித்துப் போனவனாய் சிரிப்பை அடக்க மாட்டாமல் வேங்கட ரமணி சொல்கிறான்.

ஏன்டா டோய் மாப்ள நாளைக்கி நாஞ் செத்தாலும் தாத்தன் இப்டித்தான் அடிப்பான் போலடா.

நீ செத்தா...நம்ம கோவாலு செத்தா ...

"எங்க அவ்வா நாரம்மா செத்தா இப்பிடித்தான் சொல்லி சொல்லி அடிப்பான் போலருக்கேடா.எங்கவ்வா அருந்த வெரலுக்கு சுண்ணாம்பு தராதுடா.அதுக்கு என்ன கதியோ தாத்தன்ட்ட" ,அந்த இளவட்ட கோஷ்ட்டி அன்றைய இரவு மட்டுமல்ல நெடுநாட்கள் சொல்லிச் சொல்லி சிரித்தது தாத்தனின் இந்த செய்கையை.

மேலோட்டமாய் பார்த்தால் இந்த செய்கைகள் கேளியானவை தான்.உள்ளிருக்கும் வேதனைகள் அந்தந்த நபர்களுக்கு மட்டுமே புரியக் கூடும்.

இந்த இடுகை மாரிக்கும் காளிக்கும் தாத்தனுக்கும் சமர்ப்பணம் .

Monday, May 17, 2010

கல்திண்ணை...



அந்த வீடு பழமையான வீடு.கல் கட்டிடம் .. எண்ணெயில் கழுவி விட்டதைப் போன்ற அதன் பள பள கருங்கல் திண்ணைகளில் உண்டு உறங்கி விளையாடிக் களித்திருக்கிறோம் நானும் என் தம்பி தங்கைகளும் ,சின்ன மாமா ஆறடி நீள கனக்கும் இலவம் பஞ்சு மெத்தை தையல் விட்டுப் போனால் படரக் கிடத்தி அதை தைப்பது இந்தத் திண்ணையில் வைத்து தான்.பெரிய மாமா தண்டால் எடுக்கும் போது பிள்ளைகள் நாங்கள் ஆள் மாற்றி ஆள் அவர் முதுகில் ஏறி கும்மாளமாய் சிரித்துப் புரண்டது இந்தத் திண்ணையில் தான்.

அம்மாவும் சித்தியும் அத்தையும் ஈர்விளியும் பேன் சீப்புமாய் குழந்தைகளை இழுத்துப் பிடித்து உட்கார வைத்து சீவி சிணுக்கெடுத்து அலங்கரித்து சிங்காரம் பண்ணிக் கொள்வதும் இந்தத் திண்ணையில் தான்.எதேச்சையாய் பொங்கல் தீபாவளிகளில் உறவுகளும் நட்புகளும் ஒன்று சேர்ந்தால் சீட்டுக் கச்சேரி களை கட்டும் இதே கல் திண்ணையில் தான்.இந்த வீடு யாருக்குச் சொந்தமென்று அதுவரை பேதம் காண தோன்றவில்லை.வளர்ந்தோம் திண்ணையோடு திண்ணையில்.

ஒருநாள் அம்மாவைப் பெற்ற பாட்டியின் அண்ணனுக்குச் சொந்தம் என்றார்கள் அந்த திண்ணை வீட்டை.பாட்டியோ வாரிசில்லாத அண்ணன் சொத்து மூன்று அக்கா தங்கைகளுக்கும் பொதுவென்று எண்ணிய தன் மடத்தனத்தை எண்ணிக் கொண்டு பேச்சிழந்து நிற்க திண்ணையோடு வீடு மொத்தமும் அந்த தாத்தாவுக்கும் அவர் மனைவிக்கும் என்றாக ,திண்ணைகள் வெறிச்சோடின.

பிள்ளைகளின் அரவமின்றி திண்ணை அழுததோ!

அதற்குப் பின் அப்படி ஓர் திண்ணை வைத்த வீட்டை வாடகைக்கு குடி இருக்க கூட கண்டுபிடிக்க முடியாமலே போனது,எத்தனையோ வீடுகளில் வாழ்ந்து இன்று சொந்த வீட்டில் வாழும் போதும் அந்த வீட்டுத் திண்ணையில் ஆடிய நினைவுகள் ஆழ்ந்து கனக்கும் மனசின் ஓரம்,அது ஒரு சுகமான சுமை.மூடி வைத்த முதல் காதலைப் போல இது திண்ணைக் காதல்,மனிதர்களை மனிதர்கள் நேசிப்பது மட்டும் தான் காதலாக முடியுமா என்ன! ? அம்மா இல்லாத நேரங்களில் அம்மா வரும் வரை அந்தத் திண்ணையை அம்மாவாய் உணர்ந்த காலங்களும் உண்டு.கூடடைந்த பறவையின் நிம்மதியென்றும் கொள்ளலாம் .அது ஒருநாள் மீளாமலே போனது.

இன்றும் திண்ணை இருக்கிறது ...தாத்தாவுடையதாய் அல்ல .

வாரிசில்லை ... சொத்துக்களை விற்றுத் தின்னும் நிலை வந்த பின் திண்ணை வைத்த வீடு மிஞ்சவில்லை.ஊரில் யாருக்கோ அதை விற்று விட்டார்கள்,வாங்கியவர்கள் இன்னும் அந்த வீட்டையும் திண்ணையையும் இடித்துப் புது மோஸ்தரில் கட்டிக் கொள்ளவில்லை,வீடும் திண்ணையும் அப்படியே தான்இருக்கின்றன.எப்போதாவது விடுமுறையில் அகஸ்மாத்தாய் அந்த ஊருக்குப் போகையில் கண்ணில் படும் கல் திண்ணை .

என்றோ ஜெக ஜோதியாய் எரிந்து முடிந்த தீப்பந்தத்தில் எஞ்சி உதிர்ந்த சாம்பலைப் போல போல வெளுத்த முகமும் வெறித்த பார்வையுமாய் உறவுகளைத் தொலைத்த தாத்தாவை அந்த திண்ணையில் காணும் போது மனம் ஒரு நொடி நின்று துடிக்கிறது.

"வீட்டை வாங்கிய கடங்காரன் அதை இடிச்சுத் தொலைச்சா என்ன? "

பாட்டி துக்கம் அதிகரிக்கையில் கத்தி ஓய்வது திண்ணை கடக்கையில் செவியில் அறைகிறது !சொல்ல மறந்தது இப்போது தாத்தாவும் பாட்டியும் வசிக்கும் வீடு அவர்களுக்கு உரிமையானதல்ல.

தேவி...புவனாக்களின் டாஸ்மாக் கணவர்கள்

மீள் உறக்கங்களுக்கு
தயாராகி நிற்கும் ஓராசிரியர் பள்ளிகள்.
மத்யானச் சோற்றுக்கு மாணவப் போர்வையில்
காலை முதல் காத்திருக்கும் பசித்த கோழிக் குஞ்சுகள் ;
பருந்துப் பார்வையில் எங்கேனும் தட்டுப்படத்தான் செய்கின்றன
இன்றும் கூட ;
ஒரு ரூபாய் அரிசி பாலீஸ் போடப்பட்டு
மறுபடி மளிகைக் கடை சாக்குகளில்
ஏழைகள் வாங்க இயலா விலையில் ;
உலை கொதித்தடங்கும்
நீர்க்குமிழிகளாய்
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
உரக்கக் கத்துகிறது காலமயக்கங்களின்றி
"டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை "
மான் ஆடி...மயில் ஆடி குடும்பம் குழந்தை குட்டிகள் ஆடி
குட்டையில் வீழ்ந்த இனமான தமிழ் சமுதாயம்.
அடுத்தென்ன ...!
கேஸ் அடுப்பாமே ?!
வாங்க விற்க என்னை அணுகுங்கள்
அறிவிப்பு பலகை தொங்காத குறை;
இங்கிட்டு வாங்கி
அங்கிட்டு வித்துருவோம்ல
எல்லோரும் வியாபார காந்தங்களே அன்றேனும் .
பணம்
பத்திரிகை
சேனல்
அதிகாரம்
இவை போதும் அரசமைக்க .
மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் ஆளும்
மக்களாட்சி இது மக்களாட்சி
வாழ்க குடிமக்கள் ,
யார் எக்கேடு கெட்டால் யாருக்கென்ன?!
டாஸ்மாக் இருக்கும் வரை
தடையின்றி தாக சாந்தி,
எடுக்கலாம் எப்போதும் வாந்தி
மற்றதெல்லாம் வெறும் காராபூந்தி .

NOTE :

வீட்டு வேலைக்கென்று தேவி என்ற பெண் என் வீட்டுக்கு கடந்த ஒரு வருடமாய் வந்து போகிறாள்,வேலை சுத்தமாக இருக்கும்,கையும் படு சுத்தம்,அளவான பேச்சு.,மொத்தத்தில் நல்லவள்,இரண்டு மகன்கள் மற்றும் கணவரோடு எங்கள் தெருவில் தான் அவளும் வசிக்கிறாள்.கணவர் ஒரு மருத்துவரிடம் டிரைவர் ஆக வேலையில் இருப்பதாகக் கூறி இருக்கிறாள். விடிகாலையில் முறைவாசல் செய்வதில் தொடங்கும் அவளது வேலை நேரம் என் வீடு உட்பட இன்னும் நான்கைந்து வீடுகளில் முடிய எப்படியும் பிற்பகல் மூன்று மணி ஆகி விடும்.இந்த வேலைகளை செய்வதால் அவளுக்கு கிடைக்கும் மாத சம்பளம் நான்காயிரம் ,அவளது கணவருக்கு ஐந்தாயிரம் மாத சம்பளமாம்.ஆனால் அவர் அதை அப்படியே வீட்டுக்குத் தருவதில்லையாம்,தினமும் டாஸ்மாக் போகா விட்டால் அந்த ஆளுக்கு பைத்தியம் பிடிக்குமாம்,அப்படிக் கரைத்தது போக மிஞ்சும் சொற்ப பணம் மகன்களின் அரசுப் பள்ளி கட்டணம் கட்டக் கூட போதவில்லை என்று தேவி பலமுறை சொல்வதுண்டு,கணவரிடம் எதிர்த்து வாதாடியதில் ஒரு முறை அந்த மனிதன் இடுப்பில் எட்டி உதைக்க பாவம் இவள் மூன்று நாட்கள் லீவு எடுத்துக் கொண்டு அடுத்த நாள் அழுது வீங்கிப் போன முகத்தோடு வேலைக்கு வந்தாள்.

இவள் மட்டும் அல்ல சென்ற வருடம் என் வீட்டில் வேலை செய்து பாதியில் காணாமல் போன புவனாவுக்கும் இதே தான் பிரச்சினை,புவனாவின் கணவன் குடிக்க காசு கேட்டு அவளை அடிப்பதாக அவள் ஒருநாளும் சொன்னதில்லை கடைசியில் ஒருநாள் ஒரு வாரம் லீவெடுத்து வலது பக்க காதறுந்து மறுநாள் வேலைக்கு வரும் வரை,குடிக்க காசில்லை என்று மனைவியின் காதில் இருந்த கம்மலை அந்த ஆள் பிடுங்கிய வேகத்தில் அறுந்த காது அது.

ஒரு தேவி...ஒரு புவனாவின் கதை மட்டும் தானா இது!

இலவசங்களால் இவர்களின் துயரம் குறைந்ததாய் காணோம்.

Saturday, May 15, 2010

ஆற்றில் இறங்கிய அழகரும் குதிரையும் ...கூடவே நானும் என் செல்ல மகளும்



விடுமுறையில் சொந்த ஊருக்குப் போவதென்பது என்னைப் பொறுத்தவரை வருடம் ஒருமுறை நான் கொண்டாடும் மிகச்சிறந்த விசயங்களில் ஒன்று.வருடம் முழுமைக்கும் தேவையான புத்துணர்வை அந்த ஓரிரு நாட்கள் மீட்டுக் கொடுத்து விடக்கூடும்.அதுவும் நாம் செல்லும் நாட்கள் திருவிழாக் காலங்களாக இருந்து விட்டால் விட்டுப் போன நட்புகளை சொந்தங்களை மெனக்கெட்டு தேடி அலையும் சிரமம் இன்றி ஒரே இடத்தில் பார்த்து விடும் வாய்ப்பும் கூட.அப்படித் தான் சென்ற மாதம் நான் பிறந்த ஊரில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா என்று போயிருந்தோம் .
சித்திரையில் மதுரையில் அழகர் எப்போது ஆற்றில் இறங்குகிராரோ அதே நாள் அதே நேரம் தான் எங்கள் ஊர் வைகையிலும் அழகர் பச்சைப் பட்டுக் கட்டி குதிரையோடு ஆற்றில் இறங்கி எங்களைக் காண வந்தார்.எப்போதும் அழகர் ஆற்றில் இறங்கியதும் எங்களுக்கென்று காட்சி தருவது ஆற்றங்கரை பிரம்மாண்டமான அரச மரத்தடியில் தான். அரசின் நிழல் குறுக்கு வாட்டில் பாதி ஆற்றுக்கு கிளை விரித்திருக்கும்.சென்ற வருடம் கூட அந்த நிழலைக் கண்டேன்.இந்த வருடம் அரச மரத்தை காணோம் ,அதன் தூர் மட்டும் அனாதையாய் சில பசும் துளிர்களோடு ...அரசின் நிழலின்றி அழகரை பார்க்க பகீரென்று இருந்தது.

சிவப்பு நாக்கைத் துருத்திக் கொண்டு உருட்டி விழித்த கண்களோடு பச்சைக் குதிரையில் வெள்ளை சம்பங்கியும் பசுந்துளசியும் கலந்து கட்டிய அலங்கார மாலையில் சிங்காரமாய் பொன்னும் மணியுமாய் கல்நகைகளோடு அழகர் பவனி வருவதை காணும் போது பெற்று வளர்த்து ஐந்தாறு வயது நிரம்பிய சின்னஞ்சிறு மகனை அலங்கரித்து தெரு வழியே பெருமிதமாய் அழைத்துச் செல்கையில் கிடைக்கும் உற்சாகமும் சந்தோசமுமாய் மனம் நிறைந்து போனது.

தேனிப்பக்கம் கோடையில் கூட முன்னெல்லாம் வெயில் அத்தனை வாட்டி வதைக்கவில்லை என்றே நம்பியிருந்தேன் ,அந்த எண்ணத்தை மறக்கடிக்கும் வண்ணம் இந்த ஆண்டு வெயிலோ வெயில் கொள்ளையாய் வாட்டி எடுத்து புண்ணியம் கட்டிக் கொண்டது.ஊரைச் சுற்றிலும் நிறைய காற்றாலைகள் புதிது புதிதாய் ...முன்னைப் போல தண்ணீர் வசதி காணோம் ,தேனியில் தண்ணீர் பஞ்சம் என்பது நான் எதிர் பாராதது.ஆனால் நிஜம் அது தான்,தேனி நகருக்குள் லாரிகளில் தண்ணீர் விலைக்கு வாங்கி வாரம் ஒருமுறை டேங்கை நிரப்பிக் கொள்ளும் நிலை வந்து விட்டது. நிலத்தடி நீர் வற்றிப் போகும் அளவுக்கு தேனி இன்னும் அத்தனை வளர்ந்து விடவில்லை தான்.இன்னும் மாசு கலக்காத ஊர் என்றே அதை எண்ணிக் கொண்டிருக்கிறேன் நான்.ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்கின்றன சமீபத்திய அதன் மாற்றங்கள்.புதிதாய் வந்த காற்றாலைகளுக்கும் தேனியின் தண்ணீர் பஞ்சத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கக் கூடுமோ ?யாரோ சொன்னார்கள் தூத்துக்குடி திருசெந்தூர் பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் வர அங்கு ஏராளமாய் பெருகிப் போன காற்றாலைகளும் காரணம் என்று. காளியா பிள்ளையின் இயற்கை காற்றாலைகள் அமைத்தால் இப்படி பஞ்சம் வராமல் தடுக்கக் கூடுமோ என்றெல்லாம் சும்மா யோசித்துக் கொண்டிருந்தேன் கொஞ்ச நேரம்.நமது வருத்தங்கள் எல்லாம் ஏட்டளவில் தானே ,அதை விட என்ன செய்து விட முடியும் என்று தெரியாத காரணத்தால் இங்கே பதிவதோடு விடுபடுகின்றன அந்தக் கவலைகள்.

வெயில் காலமென்றால் அப்பாவைப் பெற்ற பாட்டி உயிரோடு இருக்கும் வரை வீட்டுக்கு வெளியே தெரு வாசலில் மண் தரையில் பாய் விரித்து படுக்கையைப் போடுவது கிராமங்களில் சர்வ சகஜம் ,பல நாட்கள் நிலாவையும் நட்சத்திரங்களையும் எண்ணிக் கொண்டு கண்ணை அசத்தும் காற்றில் தெருப்பிள்ளைகளோடு விளையாடிக் களைத்த மேனி வியர்வை மெல்ல காய பாட்டி சொன்ன சுண்டெலி இளவரசி கதை கேட்டுக் கொண்டே கண்ணயர்ந்தது உண்டு.அந்த மண் தரை இப்போது எங்கேயும் இல்லை கிராமங்களில் .தெருவுக்குத் தெரு சிமென்ட் தரை ,தெரு முக்கு முடுக்குகளைக் கூட விட்டு வைக்கவில்லை.வீடுகள் இருக்கும் இடமெல்லாம் மண்ணின் மூச்சை இறுக்கி சிமென்ட் பூசி இருந்தார்கள்.மூச்சடக்கிய மண்ணின் சமாதி போல வெள்ளை சிமென்ட் தெருக்கள் இருந்தன.சுத்தம் பராமரிக்க எளிமை என்ற பெயரில் இன்னும் என்னவெல்லாம் செய்யக் கூடுமோ!

எது எப்படி இருந்தாலும் திருவிழாவுக்காக சிறுவர்களுக்கென்று நடத்தும் விளையாட்டுப் போட்டிகள் எல்லாம் அப்படி அப்படியே தான் இருந்தன இன்று வரையிலும் அதில் ஒரு சின்ன சந்தோசம்.பாப்பு கண்கள் மின்ன அம்மா நான் கலந்துக்கறேன்மா எல்லா போட்டியிலயும் என்று என்னைக் கேட்கையில் உடனே சரி சொல்லி விட்டேன்.எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டாள்...கலந்து கொண்ட அதே வேகத்தில் எல்லா போட்டிகளிலும் இருந்தும் முதல் ரவுண்டிலேயே வெளியில் வந்தாள் முகம் கொள்ளா சிரிப்போடு.அம்மா நான் தோத்துப் போயிட்டேன் என்று சிரித்தவளை நானும் சிரிப்போடு இழுத்து அணைத்துக் கொண்டேன். போட்டியில ஜெயிக்கறதும் தோக்கறதும் முக்கியமே இல்லை,சந்தோசமா கலந்துகிட்டியா ...என்ஜாய் பண்ணியா அவ்ளோ தான் அம்மா தன் பேத்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.இன்னொரு முறை சிரித்தேன் நான்.ஜெயிக்கறதா தோக்கனுமானு அவ தான் முடிவு பண்ணனும்டா ...நாம இல்லை அம்மா போகிற போக்கில் சொல்லிப் போக எந்த சிரமத்தையும் இலகுவாக எடுத்துக் கொண்டு அடுத்தது என்ன என ப்ராக்டிகலாக இருக்கும் என் தம்பி தங்கையின் ஞாபகம் வந்தது எனக்கு .நானும் அப்படித் தானோ! அம்மா எங்களை நன்றாகத் தான் வளர்த்திருக்கிறார்,நான் கூட பாப்புவை நன்றாகவே வளர்ப்பேன் எனக்குள் சொல்லிக் கொள்கிறேன். :)))

எப்போதையும் போல பட்டுக் குஞ்சலக் குடை வரிசை ,தமிழ் நாட்டு மேளத்துக்குப் பதில் இப்போதெல்லாம் கேரள செண்டை தான் முழங்குகிறதாம் ஊர் திருவிழாக்களில் ,செண்டை மேளம் கேட்க கேட்க காதுக்கு இதமாகத் தான் இருந்தது.கேரளாக் காரன் பெரியார் அணையை திறந்து விட்டு தண்ணீர் தரா விட்டால் போகிறான் செண்டை மேலமாவது காதாரக் கேட்டுக் களிக்கலாம் என்று முடிவு செய்து கொண்டவர்களைப் போல எடுத்ததற்கெல்லாம் செண்டை தான்.சென்ற வருடம் பாப்புவின் பள்ளியில் நடந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம் அங்கேயும் சக்கைப் போடு போட்டது இந்த செண்டை வாத்தியம் தான்.என்னமாய் உயிரைக் கொடுத்து வாசிக்கிறார்கள் அந்த இளைஞர்கள் ! எப்படியெல்லாம் லாவகமாய் வளைந்து ஆடுகிறார்கள்! வாசிப்புக்கும் ஆட்டத்துக்கும் இடையில் என்னவெல்லாமோ வித்தைகள் வேறு ஓணம் படகுப் போட்டியை செண்டை மேளத்தோடு மேடையில் ஆட்டத்தோடு நடத்திக் காட்டுகிறார்கள்,மகாராஜா யானையில் பவனி வருவதையும் இதே ஸ்டைல் ஆட்டமாய் மேடையில் செய்து காட்டுகிறார்கள்.பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு செண்டை ஓசையில் சன்னதம் வந்து ஆடாத குறை தான்.

வாத்திய இசையில் மயங்கிக் கிறங்கிப் போன சிலர் ஆடவும் செய்தார்கள், பொது இடங்களில் மக்கள் இப்படி தங்கள் சந்தோசங்களை மீட்டெடுக்கும் வகையில் சங்கமம் நிகழ்ச்சியை நடத்திய கனிமொழி அவர்களின் முயற்சி நிச்சயம் வரவேற்கப்படவேண்டியதே.திருவனதபுரம் பத்மனாபருக்கு மட்டும் தான் செண்டை முழங்க வேண்டுமா எனக்கில்லையா என்பதைப் போல ...இப்போதெல்லாம் எங்கள் ஊர் வைகையில் இறங்கும் அழகரும் செண்டை மேளம் தான் கேட்கிறார் போலும்!இரண்டு நாள் திருவிழா முழுக்க செண்டை அதிர்ந்து நாடி நரம்புகளை முறுக்கி பிறகு தளர வைத்தது.

பிறகென்ன என்கிறீர்களா? நல்ல கோடையில் ஆற்றில் வந்திறங்கும் அழகரின் பிரசாதமாக நாட்டுச் சர்க்கரையும் துளசி தீர்த்தமும் தான் ஊர் பொதுவில் வழங்குவது வழக்கம்,இம்முறை யாரோ ஜமாய் ஐஸ் க்ரீம் இலவசமாக வழங்கினார்கள்,அந்த இடம் முழுக்க கூட்டம் குறையவே இல்லை.ஆளாளுக்கு நான்கு ஐந்து என்று வாங்கி வாங்கி வெயிலுக்கு வகையாய் முழுங்கிக் கொண்டிருந்தார்கள்(தோம்). "பாப்பு நீ கூட்டத்துல இடிச்சிட்டு போய் ஐஸ் கிரீம் வாங்காத..யாராவது தள்ளி விட்ரப் போறாங்க ..." நான் அவசரமாய் சொல்லச் சொல்ல கேட்காமல் கூட்டத்துக்குள் புகுந்து பயத்தோடு நான் பார்த்துக் கொண்டிருக்க எனக்கொன்றும் அவளுக்கொன்றுமாக இரண்டு ஐஸ் க்ரீம் வாங்கி கொண்டு வந்தாள் பாப்பு. "ஏண்டா மம்மி உனக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தந்ததே இல்லையா ? ஏன் இப்டி கூட்டத்துல போய் அவதிப் படனும்."

" இல்லம்மா ...இப்டி கூட்டத்துல போய் வாங்கறது புதுசா த்ரில்லா இருக்கு "

சிரிப்புடன் கைகளில் ஐஸ்க்ரீம் வழியச் சொல்லி விட்டு அவள் வயதுப் பிள்ளைகளோடு ஆற்றுக்குள் இறங்கி விளையாட கிளம்பி விட்டாள் என் செல்லப் பாப்பு . அவளுக்கு கிடைத்த அதே குதுகலத்துடன் திருவிழா இனிதே நிறைவடைந்தது.

காத்திருக்கிறோம் ...எதிர்பார்த்திருக்கிறோம் அடுத்த வருடமும் ஆற்றில் இறங்கப் போகும் அழகரையும் அவரது குதிரையையும் எண்ணிக் கொண்டு.

Friday, May 14, 2010

மரம்


விரையும் பேருந்தின் ஜன்னலில் ஓடி கடக்கும்
பெயர் தெரியா பசு மரங்கள்
யார் நட்டனவோ !
அம்மாவும் இல்லை
அப்பாவும் இல்லை
ஓயாது விறு விறுக்கும் காற்றின் பேரோசையில்
துண்டால் இறுக்கிய தொண்டைக்குழிக்குள் நசுங்கித்
திணறும் குரல்வளையாய்
எங்களுக்கோர் சொந்தமென்று எவருமில்லையே !
ஆர்ப்பரித்துப் புலம்பின காண் ;
வீட்டுக்கோர் மரம் வளர்ப்போம் !