Wednesday, June 30, 2010

தேவதை சொல்லும் கதைகள் - 1



நானே எவ்ளோ நாளைக்கு உனக்கு கதை சொல்லிட்டிருப்பேன் ,இனிமே நீயும் அம்மாக்கு கதை சொல்லணும் .

ம்ம்...நானா ...ம்ம்...சரி இப்ப புதூ...சா பெரீசாஒரு கத சொல்லப் போறேனே ...நீ கேட்கறயா? (ஓரக்கண்ணால் என்னைக் கொஞ்சம் கீழ்ப் பார்வை பார்த்துக் கொண்டே ரோஜாப் பூக்கள் குவிந்து (அதாங்க உதடுன்னு சொல்வாங்க இல்ல அதான் :))) சிரிப்பதைப் போன்ற பாவனையில் ;

ஒன்ன விட நான் சூப்பரா கத சொல்வேன் தெரிமா ...ஒனக்கு தெரியாதில்ல !

ம்ம்...சரி நீ கதய சொல்லுக்கா மொதல்ல...

நான் ஒனக்கு அக்காவா?

இல்ல..இல்ல தப்பாச் சொல்லிட்டேன் பார்...சொல்லுங்க மாமியாரே ....

ஏய் அம்மா ...நான் அப்புறம் பாட்டிகிட்ட சொல்லிக் கொடுத்துருவேன் ஒன்ன ...

சின்னதாய் கோபித்துக் கொண்டவளைப் போல முகத்தை வைத்துக் கொண்டு ...போ நீ கதை சொல்லாம என்ன ஏமாத்தப் பாக்கற. நான் உன் பேச்சு கா. எங்கே மறுபடி என்னையே கதை சொல்லச் சொல்லி அடம் பண்ணப் போகிறாளோ என்று கிச்சனுக்குள் எஸ்கேப் ஆகப் பார்த்தால் ...

விடுவேனா என்று பின்னோடு வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டு ;

பழம் விடு...அப்போ தான் கதை இல்லனா உதை தான் என்று ரைமிங்காய் சிரித்தாள்.
ஒருவழியாய் இலை விட்டு...காய் விட்டு பழம் விட்டு கதை ஆரம்பமானது.

ஒரு ஊர்ல ஒரு பெரீ.....ய அடர்ந்.......த கா.........டு இருந்துச்சாம் ,அந்தக் காட்டுக்குள்ளா ஒரு பெரிய சூனியக்காரி இருந்தாளாம்.அவ ரொம்பக் கெட்ட பொண்ணாம்

சூனியக்காரிய அந்தக் காட்டுல்ல இருந்த நல்லவங்க எல்லாம் சாபம் போட்டு கொன்னுட்டாங்களாம்.
அப்போ என்ன ஆச்சு தெரிமா ?!

என்ன ஆச்சுடா...குட்டி ?

அந்த சூனியக்காரி இருக்கா இல்ல ..அவளோட மூதாதேவிங்க (ங்ஹே !!! மூதாதேவிங்களா !!!)

மூதாதேவிங்களா ?! அவங்க யாருடா ?

இது கூடத் தெரிலையா ஒனக்கு. அவங்க தான் அந்த சூனியக் காரியோட மூதாதேவிங்க அவங்க வந்து ஒரு நல்ல பையன் இறந்து போகப் போவானா அப்போ அந்த நல்ல பையனோட உயிரை எடுத்து இந்த சூனியக் காரிக்குள்ள வச்சு மூடிடுவாங்க ,அப்புறம் அவளுக்கு அந்த பையனோட உயிர் வந்துடுமாம்.

ம்ம் ...அதெல்லாம் சரி...இந்த மூதாதேவிங்கன்னா ...!!!

இரும்மா கதைய சொல்ல விடு ...சும்மா...சும்மா கொஸ்டீன் கேட்டுட்டே இருக்க நீ?

கொஞ்சம் போல சிடுசிடுப்பாய் முகத்தை வைத்துக் கொண்டு அவள் சிணுங்க கோபத்தில் கூட என் மகள் அழகு தான் என்று நான் மயங்கிப் போய் சரி சரி விடு ஆப்டர் ஆல் ஒரு மூதாதேவிங்க இதுக்கு போய் குறுக்க குறுக்க கேள்வி கேட்டுகிட்டு என்று பேசாமல் ம்ம்..கொட்டினேன் .

அப்புறம் என்ன ஆச்சு சொல்லு ...

அப்ப்புறமா அந்த சூனியக்காரிக்கு உயிர் வந்தோட்ன்னே ...அவ அந்தக் காட்டையே கட்டி ராஜ்ஜியம் பண்ண ஆரம்பிச்சிட்டா. கொஞ்ச நாள் கழிச்சு அவளுக்கு அந்த புல்லு வீடு வேர்த்து போச்சு .

வேர்த்துப் போச்சா ஏன் புல்லு வீடு குளு குளுன்னு இருக்காதா !? மறுபடியும் நமக்கு வாய் சும்மா இருக்குமா !?

ம்மா ...நீ சும்மா கதைக் கேளேன் ..தொல்லை பண்ணாத கத சொல்லும் போது...

"அது வந்து வேர்த்து இல்ல வெர்த்து (வெறுத்து)போச்சு புல்லு வீடு அந்த சூனியக்காரிக்கு ."

இரு...இரு புல்லு வீடுன்னா ?!

புல்லு தெரியாதா அது வந்து கோல் வீடு ! (மறுபடியும் "ங்ஹே " கோல் வீடா ...அப்படிலாம் வீடிருக்கா ! நான் குழம்ப !

கோல்னா வைக்கோல் ... வைக்கோல் வீடு ...இது கூட தெரியாதா ! போம்மா

ஓ...அப்டியா ...சரி சரி கோச்சிக்காதடா...நீ மேலே சொல்லு கதைய ;

அந்த புல்லு வீடு அவளுக்கு வெர்த்து போச்சா ....அப்பறமா அவளுக்கு ராஜ்யத்தையே கட்டி ஆளனும்னு ஒரு ஆச வந்துச்சாம் .

இப்ப காட்டையே கட்டி ராஜ்ஜியம் பண்ணிட்டு இருக்கானு தான மொதல்ல சொன்ன !

அய்யோ...அது வேற ராஜ்ஜியம்...இது வேற ராஜ்ஜியம் ...இங்க ராஜா ,ராணி...நம்மள மாதிரி மனுசங்க எல்லாம் இருப்பாங்க .

ஓ ...

ராஜ்யம்னா பெரீ...ய கோபுரம் மாதிரிலாம் இருக்கும் ,தங்க கலர்ல பெயின்ட்லாம் அடிச்சிருக்கும் ,பாத்துருக்க இல்ல நீ ?

ம்ம்...பார்த்திருக்கேன். ஆனா ...எங்க ...எப்போ !

ம்ம்...ராஜா..ராணிலாம் இருப்பாங்க இல்ல அங்க அந்த கோபுரம் (ஓ ..அரண்மனையாக்கும் மனசுக்குள் நினைத்துக் கொண்டேன் )

அந்த ராஜ்யத்தை கட்டி ஆளனும்னு அவளுக்கு ஆசை வந்துச்சாம்.

ம்ம்...

அப்போ அவளுக்கு மூளையே இருக்காதில்ல !

திடீரென்று இந்தக் கேள்வி வந்து விழவே ஆமாம் என்று சொல்வதா இல்லை என்று சொல்வதா என்று நான் குழம்ப. அவளே தொடர்ந்தாள். அதற்குள் அவளுக்கு தூக்கம் வந்து விட்டிருந்தது கண்கள் மெல்லச் சொருக ...

சூனியக்.........காரிக்கு..........எல்லாம் மூ.........ளை.......யே இருக்காது..அவங்க எல்..........லாம் முட்டாள்........களாம் சுட்டி டி.வி ல சொன்னாங்க (அப்டியா...நிஜமா அப்டி சொன்னாங்கலாங்க?!)

நம்மள மாதிரி மனுசங்க தான் புத்திசாலிங்களா........ம்ம் .

சூனியக்காரிக்குள்ள நல்ல பையனோட உயிர் ஆவிய உள்ள வச்சு மூடிட்டாங்க இல்ல அவளோட மூதாதேவிங்க !!! (மறுபடியும் மூதாதேவிங்க!!!) அதனால அவ புத்திசாலி ஆயிட்டா.

ம்ம்...ஆமா இந்த மூதாதேவிங்கனா !

தூ...க்கம்வருது...

கழுத்தைச் சுற்றி பிஞ்சுக் கை மாலையாக ;

இடுப்பை வளைத்து கால்கள் ஒட்டியாணமாய் இறுக்கிக் கொள்ள ;

சரி ...சரி தூங்குடா ... இரு ..இரு ...ஆமாம் ...இந்த மூதாதேவிங்கன்னா யாரு?

தூக்கம் ..தூக்கமா வருது ... இந்தா பார் அம்மா நீ என் தூக்கத்தை கலைக்காதா .

கப் சிப் ...பேச்சில்லை .(அதற்கு மேலும் தூங்கும் சிங்கத்தை தட்டி எழுப்ப நான் என்ன லூசா ?!)

ஆனாலும் இந்த மூதாதேவி ரொம்பவே குழப்ப கிட்டத் தட்ட அரைமணி பலவாறாக யோசித்த பின் ஒருவாறாக புரிந்தது .

அட மூதாதையர்கள் என்று சொல்லத் தெரியாமல் தான் குழந்தை அதை மூதாதேவிகள் என்று சொல்கிறாள் போலும் என்று நினைத்துக் கொண்டே தூங்கிப் போனேன் நானும்.


ஏய்...நீ என்ன அத்தனை அழகா ?!





வெயில் அடித்துக் கொண்டே மழை பெய்தால் அழகு, தங்கக் கண்ணாடி குழாய்களில் நீரடைத்து பீய்ச்சி அடிப்பதைப் போல தரை தொட்டுப் புரளும் வெயில் நேரத்து மழைநீரை முகமேந்தி தாங்கிக் கொண்டு பளிங்காய் முகத்திலிருந்து சிதறிப் பரவி தெறித்து விழும் பிரவாகத்தை இரு கை அள்ளி நீர் குவித்து மீண்டும் வான்நோக்கி சிதறடித்தால் விசிறிப் பறக்கும் வைரச் சிதறல்கலாம் ஒவ்வொரு மழைத் துளியும் மின்னிடும் ...மின்னிடும்;

ஏய் ...மழையே நீ என்ன அத்தனை அழகா?

அந்த மழையில் நனைவது ஆனந்தம்,நனைந்து கரைவது பரமானந்தம்...கரைந்து காணாமல் போவது தெய்வீகம்.

ஒற்றைச் செம்மண் சாலையில் தொலைவிலாடும் மாமாரக்கிளைகள் கண்ணுக்கு இதம்,ஆளற்ற வெளியில் சில்லென மிதந்து முகம் தொடும் காற்றில் தயங்கி தயங்கி சட...சடக்கும் சல்லாத்துணி துப்பட்டா முனைகள் சிலும்பி நெற்றி தொட்டு தோளில் புரளும் பட்டுக் கூந்தல் குறுகுறுப்பில் மனம் லேசாகி லேசாகி மேகத்தில் மென்துகிலாக கண்ணோடு மனம் காணும் காட்சியெங்கும் இதமான இனிமை.

காற்றோடு கரைந்து போவது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை காண்.

சாணமிட்டு மெழுகிய தரை கோமேதகப் பழுப்பு ,சிவந்த சிமென்ட் தரை ரத்தினக் கவர்ச்சி ,வெள்ளை மார்பிளில் பச்சைக் கரை கட்டிய தரை மரகதக் குளுமை எல்லாம் இருக்கலாம் ஆனாலும் வீட்டுக்கு வெளியே பளீரிடும் பச்சைக் கற்களை வெட்டி பதித்ததைப் போல விரிந்த பசும்புல்லில் தரை சரிந்து தலை சாய்த்து மண்ணோடு முகம் உரசினால் கத கதப்பாய் சில்லிடும் குளிர் பிஞ்சுப் பாதத்தை கன்னம் பாதிக்கும் உயிர் மணக்கும் உன்னதம் .

இன்னும் இருக்கலாம் உலகத்தின் உன்னதங்கள். சொல்வதற்கு வார்த்தைகள் கிடைத்த பின் ஒவ்வொன்றாய் பார்க்கலாம்.


மண்,மழை,காற்றோடு பேசுதல் சட்டென வாய்ப்பதில்லை.

Wednesday, June 23, 2010

கனகாம்பரம்

அம்பாரமாய் கனத்துக் கிடந்தது
முப்பது கடந்த கன்னி மனது
கல்யாணம் இல்லை தேவை
கல் கரைக்கும் மனிதர்கள்
பேச்சு கேளாத தூரம் செல்ல
நடக்கத் தொடங்கும் போதே
கடந்து நகர்கின்றன கல்யாண மண்டபங்களும்
மல்லி முல்லை சம்பங்கியுடன் கலந்த
கனகாம்பாரக் கடைகளும் ;
அப்போதும்
இப்போதும்
அம்பாரமாய் கனத்து கிடந்தது
எதையும்
கடக்கவியலா கன்னி மனது ;

Monday, June 21, 2010

மௌனிக்கப்பட்ட பதில்களின் அணிவகுப்பு




இரைந்து கிடக்கும் கேள்விகளை
உரசிப் பற்ற வைக்க
சதா முயன்று கொண்டிருக்கும்
சலனக் காட்டின்
சபை நடுவே
மௌனிக்கப்பட்ட பதில்களின்
அணிவகுப்பு ;
பார்க்க விசித்திரமென்ன
நின்று நிதானித்து நிமிர்ந்து
என்றோ ஒரு கணத்திலும்
பதில் சொல்ல விருப்பமில்லை ;
கேள்விகளும் பதில்களுமற்ற
நிசப்தத்தில் கரைந்தாலென்ன
நஷ்டம்!

Saturday, June 19, 2010

பள்ளி கழிப்பறையில் குழந்தை பெற்ற 14 வயதுச் சிறுமி - உடனடித்தேவை கல்வியா மனநல சிகிச்சையா?!

ராமநாதபுரம் புனித ஆந்த்ரேயா பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி பள்ளி டாய்லட்டில் குழந்தை பெற்றுக் கொண்டது நேற்றை விட இன்றைக்குப் பழைய செய்தி,பலரும் அதை பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள் .சம்பந்தப் பட்ட மாணவி அந்தப் பள்ளியில் இருந்து நீக்கப் பட்டிருக்கிறாள்.பள்ளி அந்த மாணவியை நீக்கியது தவறு என்று சில அமைப்புகள் கூறி வருகின்றன.

குற்றம் நடந்தது என்ன? என்ற ரீதியில் இதை அணுகும் முன் ;

அந்த மாணவிக்கு ஏன் மனநலப் பரிசோதனை செய்வதைப் பற்றி பரிசீலிக்கக் கூடாது.

யாருக்கும் எந்த சந்தேகமும் எழும்பாத வகையில் கருவை வயிற்றில் சுமக்கத் தெரிந்திருக்கிறது,ஏன் இத்தனை குண்டாக இருக்கிறாய் என்று கேட்டவர்களிடம் எல்லாம் தவறான மாத்திரை உண்டதால் உடல் பருமனில் ஏற்பட்ட கோளாறு என்று சமாளிக்கத் தெரிந்திருக்கிறது ,அத்தனைக்கும் மேல் பெற்ற குழந்தையை கழிவறைப் பீங்கான் கோப்பையில் அமுக்கி கொல்லவும் முயற்சி செய்திருக்கிறாள்.உயிருக்குப் போராடிய நிலையில் தான் அந்த குழந்தை மீட்கப் பட்டிருக்கிறது .இதெல்லாம் அறியாமையில் அச்சத்தில்...இயலாமையில் செய்த தவறுகளாக கருதிக் கொள்ள இடமிருந்தாலும் பிரசவ வலியை யாருக்கும் தெரியாமல் எப்படி அவளால் பொறுத்துக் கொள்ள முடிந்தது.பெண்களுக்கு மறுஜென்மம் என்பார்களே பிள்ளைபேற்றை.மிகக் கடுமையான வலி அதை ஒரு சிறுமி பொறுத்துக் கொண்டு சத்தமே இன்றி குழந்தை பெற்றிருக்கிறாள் என்றால் அவள் சாதாரண மனநிலையில் இருப்பதாக எப்படி ஒத்துக் கொள்ள முடியும்.

ஆகவே பிறந்த குழந்தைக்கு தகப்பனைக் கண்டுபிடிக்கும் முன்பு;

அந்தச் சிறுமியை மீண்டும் அதே பள்ளியில் சேர்த்தே ஆக வேண்டும் என அமைப்பு ரீதியாகப் போராடும் முன்பு ;

அந்த சிறுமிக்கும் அவளது அம்மாவுக்கும் (ஒரு தாய்க்கு தன் மகள் வயிற்றில் கருவைச் சுமக்கும் விஷயம் பிரசவம் வரை தெரியாது என்பது நம்பத் தகுந்ததாக இல்லை) மனநலப் பரிசோதனை செய்து அவர்களிடம் இருந்து நடந்த விவரங்களைக் கண்டறிவது முதல் தேவை என்று தோன்றுகிறது.

மீட்கப் பட்ட குழந்தை அரசின் தொட்டில் குழந்தை காப்பகத்தில் பராமரிக்கப் பட்டு வருகிறது.அந்தக் குழந்தையின் எதிர்காலம் என்ன!

இவளே சிறுமி எனும் போது இனி இவளது எதிர்காலம் என்ன?

இந்தக் கேள்விகளுக்கு ஒரே பதில் செய்தியைப் படித்தவர்கள் அனைவரும் இன்னொமொரு செய்தி எனும் ரீதியில் அப்படியே கடந்து போவதாக மட்டுமே இருந்து விடுதல் சரியா!

ஒரு பெண்ணின் மனநிலையில் நான் இந்தக் கருத்தை கூறுகிறேன்.வாசிப்பவர்கள் விருப்பமிருப்பின் உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Friday, June 18, 2010

தண்டகாரண்யமும் ராவண நீதிகளும் :



ராவணன் பட விமர்சனம் படிக்க கிடைத்தது.அதை ராமாயணக் கதை என்கிறார்கள்.

சென்ற வார விகடனில் அருந்ததி ராயின் பேட்டி , தண்டகாரண்யம் பழங்குடி இன மக்களின் வாழ்வுரிமைக்காக போராடும் அவரை இந்திய அரசு மாவோயிஸ்ட் என முத்திரை குத்தும் அபாயம் இருக்கிறதாம்!வாசித்தவுடன் மிக்க வருத்தமாக இருந்தது.

தண்டகாரண்யம் வனப் பகுதி ராமாயணத்தோடு தொடர்புடையது ,இந்த வனத்தில் வைத்து தான் மாயமானுக்கு மயங்கிய சீதையை ராவணன் லங்கைக்கு கடத்திக் கொண்டு போகிறான் என்பது ராமாயணக் கதை.இதிகாசம் உண்மையோ கற்பனையோ! ஆனால் 10 சதவீத உண்மையில் 90 சதவீத கற்பனை கலக்கப் பட்டிருக்க கூடுமே தவிர முற்றிலும் கற்பனை என்று சொல்ல வாய்ப்பில்லை .ஆரிய திராவிட ஆதிக்க சண்டையின் வரலாற்று தடயங்கள் தான் ராமாயணமும் மகாபாரதமும் என்பதாக நேரு தமது "டிஸ்கவரி ஆப் இந்தியாவில்" இந்திராவுக்கு கூறுகிறார்.

இப்போது அருந்ததி ராய்க்கு வருவோம்,

ஆந்திரா,ஒரிஸ்ஸா எல்லைப்பகுதியில் உள்ள மிகப் பரந்த வனப்பகுதி இந்த தண்டகாரண்யம்,இங்கிருக்கும் பழங்குடிகள் இந்தியா தனி நாடாக உருவாகும் முன்பே இங்கே வாழ்ந்தவர்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ள நிலையில் அந்த பூமி அவர்களுக்கு உரிமையானது ; அந்த மக்கள் தமது வாழ்வாதாரத்துக்காக போராடுகிறார்கள்.அவர்களது போராட்டத்தை மாவோயிஸ்டுகள் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறார்கள்,ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்திட்ட சிங்கள அரசாங்கம் போலத் தான் இப்போது இந்திய அரசு தன் சொந்த நாட்டு பழங்குடி இன மக்களை அந்த வனங்களில் இருந்து அப்புறப் படுத்த "சலுவா ஜூடும்" என்ற பெயரில் கூலிப் படைகளை அமர்த்தி உள்ளதாம் .

அத்தனைக்கும் காரணம் பணம். அந்தப் பணத்தை கொள்ளை கொள்ளையாய் கொட்டித் தர தண்டகாரண்யம் காடுகளில் கொட்டிக் கிடக்கும் பாக்சைட் தாதுக்கள் ,அலுமினியத்தில் இருந்து பிரித்தெடுக்கப் படும் இந்த பாக்சைட் தாதுக்கள் விமான தயாரிப்பில் முக்கிய மூலப் பொருட்கள்.இந்த பாக்சைட் தாதுக்களை தண்டகாரண்யத்தில் இருந்து வெட்டி எடுக்க உலக பணக்கார நிறுவனங்கள் அனைத்தும் இந்திய அரசிடம் ஒப்பந்தம் போட்டிருக்கின்றதாம்.அப்படி ஒப்பந்தம் போட்டிருப்பதால் அந்த வனப் பகுதியில் காலம் காலமாய் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களை இருந்த சுவடே தெரியாமல் அங்கிருந்து அப்புறப் படுத்த வேண்டும்,இல்லையேல் உரிமை பிரச்சினை கோரிக் கொண்டு காலத்துக்கும் அங்கே தமது தொழிற்சாலைகளை நிறுவப் போகும் அந்நிய மற்றும் உள்நாட்டு பணக்கார நிறுவனங்களுக்கு அந்த மக்கள் தொடர்ந்து பிரச்சினை தரும் அபாயம் இருக்கிறது என அரசு நினைக்கிறது.

அதிகார வர்கத்தின் ஆணவ ஆட்டத்தில் உலகெங்கும் இப்படி எளிய மக்கள் பலியாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள் இதைப் பற்றி மேலும் பேசத் தேவை இல்லை.பேசி ஒன்றும் ஆகப் போவதும் இல்லை. நான் சொல்ல வந்தது வேறு .

ராமாயணக் கதைக்கு வருவோம் இப்போது;

ராவணனை ஏன் நல்லவன் என்று ஒப்புக் கொள்ளக் கூடாது நாம் ?! அவனது ஆளுகையின் கீழ் வரும் தண்டகாரண்யம் வனத்தில் அன்னியனான ராமனின் நுழைவு அவனை அச்சம் கொள்ள வைத்திருக்கலாம்,அதன் அடிப்படையில் அவன் ராமனை அச்சுறுத்த சீதையை கவர்ந்து சென்றிருக்கலாம்.இதை வால்மீகி தன் அரசனை உத்தமனாகக் காட்ட வேண்டி சூர்பனகை மாயமான் எனும் பின் இணைப்புகளால் சுவாரஸ்யமான கதையாக்கி ராவணன் தான் கெட்டவன் என்பதாய் சித்தரித்திருக்கவும் கூடும். இப்படி ஒரு கோணமும் உண்டெனக் கொள்ளலாம்.

"ராவணன் " படம் மூலம் மணிரத்னம் அப்படி ஒரு கோணத்தில் சிந்திக்க வைத்திருப்பது நிஜம் .இந்தப் படம் மட்டுமல்ல " கோஷம்பியின் "பண்டைய இந்தியா" புத்தகம் இதற்கு மிகச் சிறப்பான வரலாற்று ஆதாரம்.

அப்படி ராவணன் தனது எல்லையில் அந்நிய ஊடுருவலை எதிர்த்தது அதற்காகப் போராடியது நியாயம் எனில் ராம ராவண யுத்தத்தில் எவர் பக்கம் நியாயம்? பெண்ணைக் கவர்ந்ததால் ராவணன் கெட்டவன் என்றால் இன்றைக்கு லட்சக் கணக்கில் எங்கெல்லாம் அரசின் நியாயமற்ற அதிகாரத்துக்கு எல்லைப்புற மக்கள் பணிய மறுக்கிறார்களோ அங்கெல்லாம் ராணுவமும் ,காவல்துறையும் விசாரணை என்ற பெயரில் பெண்களை மானபங்கம் செய்து வல்லுறவில் சிதைக்கிறதே இதெல்லாம் நியாயம் ஆகுமா?சீதை என்ற புனித பிம்பத்தை கவர்ந்து சென்றதால் மட்டுமே ராவணன் கெட்டவனாக்கப் பட்டான் என்றால் ;

வீரப்பவதத்தில் சத்யமங்கல வனப் பகுதிகளில் பழங்குடிப் பெண்களுக்கு நிகழ்த்தப் பட்ட சொல்லக் கூசும் பல கொடுமைகளைச் செய்தவர்களான கர்நாடக வனத்துறை போலீசாரும் தமிழக வனத்துறை போலீசாரும் நல்லவர்களா? வீரப்பன் கொள்ளப் பட்டதால் அவர்கள் செய்தது எல்லாமே நியாயம் என்றாகுமா? அந்தப் பழங்குடிப் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கும் அநியாயங்களுக்கும் விசாரணை இல்லை.விசாரணை இல்லாததை விட அவர்களுக்கெல்லாம் அரசு செலவில் பதக்கம் என்ன,பட்டயங்கள் என்ன ,வீட்டு மனைகள் என்ன!?அப்படியானால் எது நியாயம்! அந்தப் பெண்கள் சீதைகளாய் பிறவாமல் போனது தான் அவர்களது குற்றமா? ஒரு பெண்ணுக்கு இழைக்கப் படும் அநீதி அவள் சீதை எனும் பட்சத்தில் தான் உலகின் கண்களில் நியாயப் படுத்தப் படுமா?

ஈழத்தில் நிகழ்த்தப் படும் கொடுமைகளுக்கு சற்றும் சளைத்தவை அல்ல சத்யமங்கல வனப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களுக்கும் ,இப்போது தண்டகாரண்யம் வனங்களில் தமது உணவுக்கும் உறைவிடத்துக்கும் போராடும் பழங்குடி இன மக்களுக்கும் நிகழ்த்தப் பட்டிருக்கும் கொடுமைகள்.இந்த மக்கள் தமது உரிமைக்காக போராடுவது எப்படி தீவிரவாதமாகும் ?! அதெப்படி அரசு விரோத செயலாகும்!

உலகின் பணக்கார நிறுவனங்கள் பாக்சைடுக்காக இந்திய அரசிடம் இருந்து தண்டகாரன்யத்தை விலை பேசி கூறு போட்டுக் கொள்ளப் போகின்றன.அந்நிய முதலீடுகள் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தலாம்,மக்களாட்சியில் பொருளாதாரம் யாருக்காக வலுப்படுத்தப் பட வேண்டும் மக்களுக்காகத் தானே ? அந்தப் பழங்குடி மக்களும் இந்தியர்கள் தானே,இந்தியாவுக்குள் தானே இருக்கிறார்கள் ?அதிகமாய் எதிர்ப்பு காட்டினால் மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தப் படும் அபாயம் இருக்கையில் அவர்கள் எந்த வழியில் தான் தமது எதிர்ப்பை காண்பிக்க முடியும்? தனது செயல்களே சரியானவை மக்கள் அதை மீறினால் அடக்கி ஒடுக்கப் பட வேண்டியவர்கள் எனும் ரீதியில் நடத்தப் படும் ஆட்சி எப்படி மக்களாட்சியாகும்?

அப்படியானால் இந்தியாவில் நடப்பது மக்களாட்சியா ?

தொழிலதிபர்களுக்கும் ,அந்நிய நாட்டு அதிபர்களுக்கும் தான் இந்த அரசு செவி சாய்க்கும் என்றால் அப்படி ஒரு அரசு தன்னை சர்வாதிகார அரசு என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டால் என்ன?

உண்மையில் மக்களுக்காக என்ற பெயரில் இங்கே அரசியல் செல்வாக்குள்ள தொழிலதிபர்கள் தான் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்படி ஒரு சிலர் தான் இந்தியாவை கட்டி ஆள்கிறார்கள் என்றால்,இங்கே இருப்பது மக்களாட்சி அல்ல.

மன்னராட்சியின் நவீன வடிவமே இது.

Wednesday, June 16, 2010

ஆட்டோக்களும் ஆட்டோ டிரைவர்களும் அவரவர் நியாயங்களும் .




நேற்று கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்ட் செல்ல ஒரு ஆட்டோவை அழைத்திருந்தோம்.எங்கள் தெரு முனையில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் வழக்கமாக வரும் டிரைவர் இல்லாததால் வேறு டிரைவர் வந்தார்.இங்கிருந்து கோயம்பேடு போக 100 ரூபாய் கேட்டார்,அடப்பாவமே அப்படியென்றால் போக வர 200 ரூபாய் செலவழிப்பதா என்ற ஆதங்கத்தில் ;

"வழக்கமா ஆம்னி பஸ் ஸ்டாண்ட் போயிட்டு வர 120 ரூபாய் தான் வாங்குவாங்க நீங்க என்ன இவ்ளோ அதிகமா சொல்றிங்க ?நாங்க வேற ஆட்டோல போயிக்கறோம் என்று அங்கிருந்து நகரத் தொடங்கினோம்,"அதற்குள் வண்டியை கிளப்பிக் கொண்டு எங்களருகில் வந்த டிரைவர்.

"மேடம் நீங்க சொல்றது வாஸ்தவம் தான் நார்மலா இங்கருந்து கோயம்பேடு போக 60 ரூபாய் தான்,ஆனா இடைல ரெண்டு சிக்னல் இருக்கு அங்க மட்டுமில்லாம பஸ் ஸ்டாண்ட் முன்னாலயும் இப்பலாம் ரொம்ப ட்ராபிக் ஜாம் ஆகுது அது கிளியர் ஆகி பேசஞ்சர் பிக் அப் அண்ட் டிராப் பண்ணிட்டு வர குறைஞ்சது 1 மணி நேரமாயிடுது. அப்போலாம் பெட்ரோல் வேஸ்ட் ஆகுதே அதனால தான் 80 ல இருந்து 100௦௦ ரூபாய் வரை கேட்கறோம் நாங்க,வேறொன்னுமில்லை ,உட்காருங்க பிக் அப் அண்ட் ட்ராப்க்கு 160 ரூபாய் கொடுங்க வெயிட்டிங்னாலும் பரவாயில்லை என்று இறங்கி வந்தார்.

இன்னும் பேசி கூட ஒரு பத்து அல்லது இருபது ரூபாய் குறைத்திருக்கலாம் ஆனால் பஸ்சுக்கு லேட் ஆகி விடும் என்பதால் அந்த தொகைக்கே சரி என்று அந்த ஆட்டோவில் அமர்ந்தோம்,அந்த டிரைவர் அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டே வந்தார்.

"முன்னாடி எல்லாம் ஆட்டோ வாங்கணும்னா சேட் கிட்ட தான் பெர்மிட் வாங்கணும் அதுக்கு ஒரு 70 ,000௦௦௦ ரூபாய் ஆகும் ,ஆட்டோ விலை 1 ,20 ,000 ரூபாய்,மொத்தமா வண்டி எடுக்க பெர்மிட்டோட சேர்த்து 2 ௦௦௦௦௦௦௦00000 ரூபாய்க்குள்ள ஆகும்,ஆனா பெர்மிட் சேட் கிட்ட வாங்கினா காலத்துக்கும் அந்த ஆட்டோ கடனை அடைக்கவே முடியாது, கடைசில சவாரியே இல்லனா கடனும் கட்ட முடியாம ஆட்டோவையும் சேட் கிட்ட கொடுத்துட்டு அம்போன்னு நிக்கணும்,

இப்போ அப்படி இல்லை சேட் கிட்ட இருந்த பெர்மிட் உரிமையை அரசாங்கம் ரத்து பண்ணிட்டு இப்போ ஓபன் பர்மிட் தராங்க ,வெறும் 250 ரூபாய் இருந்தா யார் வேணா பெர்மிட் வாங்கலாம்.ஆனா ஆட்டோ விலை கம்பெனிக்கு தகுந்து 2 ல இருந்து 2 ,50௦,000 வரை செலவாகும் ,அரசாங்கம் கேட்ட தொகைக்கு சேட்கள் ஒத்து வரலைன்னு அவங்க கிட்ட பெர்மிட் உரிமையை பிடுங்கிட்டாலும் விலை என்னவோ அதே தான்.

இதெல்லாத்தையும் விட சவாரி கிடைக்குதோ இல்லையோ அந்தந்த ரூட்ல டெய்லி ட்ராபிக் போலீஸ்க்கு ஆட்டோ டிரைவர்ஸ் ஒவ்வொருத்தரும் 100 ரூபாய் கொடுத்தே ஆகணும் ,இல்லனா 4 +1 ,3 +1 இந்த ரூல்ஸ் பாலோ பண்ணலை அதிகமான ஆட்களை ஏத்திட்டு போறாங்க அப்படி இப்படின்னு ஏதாவது ஒரு சாக்குல பைன் போடுவாங்க, சார்ஜென்ட் ஷீட்னு எல்லா ஆட்டோ டிரைவரும் ஒரு பேப்பரை கண்ணாடிக்கு முன்னாடி சுருட்டி வச்சிருப்பாங்க பார்த்திருக்கிங்களா. அந்த சீட் இருந்தா அவங்க பணம் கொடுத்துட்டாங்கன்னு அர்த்தம்,அவங்களை போலீஸ் செக் பண்ணாது பைன் போடாது.

இதுக்காகவே பல ஆட்டோ டிரைவர்ஸ் இங்கலாம் ட்ராபிக் போலீஸ்கிட்ட மாட்டிக்காம அவங்களே வாலண்டியரா டி.நகர் ட்ராபிக் போலீஸ் செக்கிங்ல போய் 50 ரூபாய் கட்டி சார்ஜென்ட் சீட் வாங்கி வண்டில சொருகிப்பாங்க,50 ரூபாய் குறையுது பாருங்க.மத்த ஏரியான்னா 100 ரூபாய் கண்டிப்பா கொடுத்தே ஆகணும்."
இப்படி எல்லாம் அந்த டிரைவர் தன்பாட்டில் சொல்லிக் கொண்டே வந்தார்.

"இங்க ஏன் யாரும் ஆட்டோல மீட்டர் போடவே மாட்டேங்கறிங்க ,அரசாங்கமோ ட்ராபிக் போலீசோ அதுக்கெல்லாம் உங்களை வார்ன் பண்ண மாட்டாங்களா? " தேவை இல்லாமல் நான் இப்படி ஒரு கேள்வியை கேட்டு வைத்தேன் .

மீட்டர்லாம் வச்சா எங்களால ஆட்டோ வாங்கின கடனை கட்ட முடியாது மேடம், ஆட்டோ வாங்கின கடனை விடுங்க டெய்லி பொழப்பையே ஓட்ட முடியாது .பெட்ரோல் விலை ஏறி போச்சு ,அதுல தினமும் போலீஸ்க்கு வேற துட்டு அழனும்.மீட்டர் போட்டா எப்படிங்க கட்டும்,வேலைக்கே ஆகாது." சில கஸ்டமர்ஸ் லேண்ட் மார்க் சொல்றதோட சரி அங்க எறக்கி விட்டா சும்மா ஒரு அடையாளத்துக்கு தான் இதை சொன்னோம் நாங்க போக வேண்டிய இடம் இன்னும் கொஞ்சம் உள்ள போகணும்னு கழுத்தறுப்பாங்க.அந்த இன்னும் கொஞ்சம் உள்ள கிட்டத்தட்ட 1 கிலோ மீட்டர் 2 கிலோ மீட்டர் தூரமா கூட இருக்கும்.அதுக்கெல்லாம் பெட்ரோல் செலவாகுமேங்க.

இதுல லேடிஸ்னா நாங்க ரொம்ப அழுத்தி கூட ஒரு பத்து இருபது கேட்க பயமா இருக்கும்.எதுனா வம்பு பிடிச்ச லேடிஸ் அஞ்சு ரூபா பத்து ரூபாய்க்கு ரொம்ப தகராறு பண்ணுவாங்க ,சுத்தி இருக்கற ஜனங்க தப்பு அந்த லேடிஸ் மேல இருந்தாலும் கூட அவங்களை ஒன்னும் சொல்ல மாட்டாங்க இந்த ஆட்டோக்காரன் ஏதாவது வம்பு பண்ணிருப்பான் தான் நினைப்பாங்க.

இப்படி இருக்கு எங்க பொழப்பு. என்று முடித்தார்.

இது இப்படி இருக்க ;

தம்பியின் அலுவலகம் ஈகாட்டுத்தாங்கல் ஒலிம்பியா டவர்ஸில் இருக்கிறது,லூகாஸில் இருந்து அங்கே ஆட்டோவில் செல்ல ஒருமுறை 150 ரூபாய்கள் ,இன்னொரு நாள் 200௦௦ ரூபாய் அதிசயமாய் ஒருநாள் 120 ரூபாய் என்று விதம் விதமான சார்ஜ்.இதில் ரன்னிங் ஆட்டோ ,ஸ்டாண்டுகளில் உள்ள ஆட்டோக்களுக்கென ஒரு வழாக்கம்.ஸ்டாண்ட் ஆட்டோக்கள் என்றால் அதிக தொகை,ஒரே இடத்திற்கு போக விதம் விதமான கட்டணங்களைப் பாருங்கள் .ரன்னிங் ஆட்டோ என்றால் ஒரு சார்ஜ்.சென்னைக்குள் புதிதாக நுழையும் நபர்கள் நிச்சயமாக ஆட்டோக்காரர்களிடம் ஏமாந்தே ஆக வேண்டும்,


இவை தவிர ஷேர் ஆட்டோக்கள் வேறு,

"ஷேர் ஆட்டோக்கள் பற்றி முக்கியமாக சொல்லியாக வேண்டிய குறிப்பு ஒன்று உள்ளது ;ஒரு முறை போரூரில் இருந்து வடபழனி வரை ஷேர் ஆட்டோ ஒன்றில் அம்மா நான் என் மகள் ஹரிணி மூவரும் பயணிக்க வேண்டியதாயிற்று,இரவு நேரம் பேருந்துகள் எல்லாம் அடைசலாய் புழுங்கிக் கொண்டு போனதால் ஹரிணியை வைத்துக் கொண்டு அதில் இடிபட்டுக் கொண்டு இங்கே வந்து சேர முடியாது என்பது ஒரு புறம் ,கூடவே அந்த நேரத்தில் போரூரில் இருந்து லூகாஸ் வரை லாங் டிரைவ் வருவதற்கு வேறு ஆட்டோக்கள் கிடைக்காத சூழலில் வேறு வழியின்றி ஷேர் ஆட்டோவில் பயணம்.

அந்த ஷேர் ஆட்டோவுக்கு இரண்டு டிரைவர்கலாம்.முன்புற சைடு மிர்ரர்கள் ஒன்று கூடக் காணோம் ,ஆரன் இல்லை,அட... ப்ரேக் கூட இல்லை ,சிக்னலில் வண்டி நிற்க வேண்டுமானால் முன்புற வாகனத்தை உரசினார்போல முட்டிக் கொண்டு தான் அந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தித் தொலைக்க வேண்டிய நிர்பந்தம்.இத்தனைக்கும் அந்த டிரைவர்கள் கலங்கினார் போல தெரியவில்லை ,அவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து நாங்களாக தெரிந்து கொண்ட விஷயங்கள்.

தங்களது ஆட்டோவில் சைடு மிரர்கள் இல்லாததும் ஆரன் இல்லாததும் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.அது ஒரு பெருமைக்கு உரிய விஷயம் போல அவர்கள் பேசிக் கொண்டார்கள்.

" நாமலாம் எந்தக் காலத்துல சைடு மிரர்,ஆரன்லாம் வச்சினு ஆட்டோ ஒட்னோம் " அத்தெல்லாம் இல்லாது ஆட்டோ ஓடாத இன்னா !!! காலங்காலமா ஆட்டோ ஓட்டினு இருக்கம் இந்த மேக் அப்லாம் இல்லாங்காட்டி இன்னா இப்போ! "

சொல்லிக் கொண்டே இருவரில் ஒரு டிரைவர் வடபழனி நெருக்கத்தில் ஏதோ ஒரு இடத்தில் நிறுத்தி ஒன்லி 5 மின்ஸ் என்று கூறிக் கொண்டு அருகாமை கடையில் என்னவோ வாங்கிக் கொண்டு மறுபடி வண்டியை எடுத்து எப்படியோ ஒருவழியாக வடபழனி சிக்னலில் இறக்கி விட்டார்கள். அந்த டிரைவர் ஒன்லி 5 மினிட்சில் போய் வாங்கிக் கொண்டு வந்தது டாஸ்மாக் சரக்கு தான் என்றார் பக்கத்தில் இருந்த மனிதர். என்ன ஒரு அனுமானம் பாருங்கள்!

நானாக நினைத்துக் கொண்டது டிரைவர்கள் குடிப்பதற்கும் சேர்த்தே தான் பயணிகளின் தோற்றத்தைப் பொறுத்து (இவன் ஏமாளியா விவரமானவனா?!) ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப் படுமோ என்னவோ!!!

ஷேர் ஆட்டோக்களில் கட்டணம் கொஞ்சம் குறைவு என்று அதில் பயணிக்கிறோம் ,அதில் பல ஆட்டோக்கள் தட தட பயணங்கள் தான் ,உயிருக்கு உத்திரவாதமெல்லாம் கேட்கவே கூடாது.வண்டிக்கு ஆரன் இல்லை சரி ஆனால் பிரேக்கே இல்லாமல் இத்தாம் பெரிய நகரில் ஷேர் ஆட்டோக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.இதை என்னவென்று சொல்ல!

இதே மாநகராட்சிப் பேருந்தில் என்றால் சாதாரணப் பேருந்தில் 5 ரூபாய் கட்டணம்.
டீலக்ஸ் பேருந்தில் 9 ரூபாய் கட்டணம்.
குளிர்சாதன வசதி கொண்ட பேருந்தில் இதை எல்லாம் விட கொஞ்சம் அதிகம் ஆனால் ஆட்டோவை விட குறைவு.

இதிலிருந்து என்ன சொல்ல வருகிறேன் என்கிறிர்களா?! ஒன்றுமே இல்லை .
அவரவர் நியாயங்கள் அவரவர்க்கு. ஏனென்றால் இங்கு எதுவுமே முறைப்படுத்தப் படவில்லை.உனக்கு ஒரு பங்கு ,எனக்கு ஒரு பங்கு என்று லஞ்சம் மலிந்து எல்லாமே மேம்போக்காய் இருப்பதால் யாரையுமே கட்டுப்படுத்த முடியாமல் போனது வாஸ்தவமாகி விட்டது.

100௦௦ ரூபாய் கொடுத்து சார்ஜன்ட் சீட் போட்டுக் கொண்ட டிரைவர் ஒரே ஆட்டோவில் 7 எட்டு பேரை ஏற்றிக் கொண்டு போக வழி இருக்கையில் ,ஷேர் ஆட்டோக்கள் ட்ராபிக் போலீஸ் கண்காணிக்கும் என்று தெரிந்தும் கூட தைரியமாய் ப்ரேக் இல்லாமல் பயணிகளை ஏற்றிக் கொண்டு போக வழி இருக்கையில், வேறு எதற்குத் தான் வழி இருக்காது. குடித்து விட்டு ஆட்டோ ஓட்டக் கூட வழி இருக்கையில் யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது தான்.

அநியாய ஆட்டோ கட்டணங்கள் என்று புலம்புவதைக் காட்டிலும் குறித்த நேரத்திற்கு முன்பே கிளம்பி மாநகராட்சிப் பேருந்தில் பயணிக்கலாம் ,இல்லாவிட்டால் சொந்தமாய் கார் அல்லது பைக் வாங்கிக் கொள்ளலாம். அப்படியும் கூட சமயத்தில் ஆட்டோக்களை தவிர்க்க வழியில்லை என்பதே நிஜம்.
நோட் :
புகைப்படம் தி ஹிண்டு பத்திரிகை தளத்தில் இருந்து எடுக்கப் பட்டது.கூகுளில் தேடும் போது கிடைத்தது.நன்றி .

Monday, June 7, 2010

எக்ஸ்கியூஸ்மீ ...உங்களுக்கு சொந்த வீடா? வாடகை வீடாங்க!?

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கென்று சட்ட உரிமைகள் எதுவும் இருக்கிறதா? எத்தனை அதிக வாடகை கொடுத்து ஒரு வீட்டில் குடி இருந்தாலும் யாருக்கோ பயந்து கொண்டு வாழ்வதைப் போலான ஒரு நிலைமையை ஏற்படுத்தும் வீட்டு உரிமையாளர்களின் சர்வாதிகாரப் போக்கை கட்டுப்படுத்த சட்ட உரிமைகள் தேவையா இல்லையா? 20௦ ௦ ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வீட்டில் வாடகை கொடுத்து குடியிருக்கும் நபருக்கே அந்த வீடு சொந்தம் என்ற சட்டம் இன்னும் நடைமுறையில் இருக்கிறதா!

நடுத்தர குடும்பஸ்தர்களுக்கு தமது ஒட்டு மொத்த வாழ்நாளுக்கும் சேர்த்து தமக்கென்று ஒரே ஒரு சொந்த வீடு என்பது வாழ்நாள் லட்சியம் ...கனவு என்று சொல்லலாம்,அப்படி கட்டிய வீட்டை விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப் பட்டு மீண்டும் வாடகை வீட்டுக்கு குடியேறும் நிலை வந்தால் அந்த வாழ்வின் அர்த்தம் என்ன?!

வீட்டு உரிமையாளர்கள் ,வாடகைக்கு குடி இருப்பவர்கள் என்பதை தாண்டி இடைத்தரகர்கள் என்றொரு பிரிவு வாடகை வீடு தேடுபவர்களின் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறதே,இதை எல்லாம் முறைப்படுத்த சட்ட ரீதியாக எதுவும் செய்ய இயலாதா? அகஸ்மாத்தாக மனிதத் தன்மையும் கொஞ்சம் நேர்மையும் கலந்த வீட்டு உரிமையாளர்கள் அல்லது சட்ட நிபுணர்கள் இதற்கு பதில் அளிக்க முயற்சிக்கலாம்.

800 சதுர அடி வீட்டுக்கு ஏழாயிரம் ரூபாய் வாடகை அட்வான்ஸ் வீட்டு உரிமையாளர்களின் நோக்கம் போல அவர்களது மனநிலைக்குத் தக்க தீர்மானிக்கப் படும் போல,முகப்பேரில் உறவினர் ஒருவர் வீடு தேடிக் கொண்டிருந்தார் நகர சந்தடி அற்ற புற நகரப்பகுதி வீடு ஒன்றிற்கே 900 சதுர அடி வீட்டுக்கு 8000 ரூ வாடகை 80 ,000 ரூ அட்வான்ஸ் கேட்கப் பட்டது ,இந்த அட்வான்ஸ் தொகையை எந்த அடிப்படையில் நிர்ணயிக்கிறார்கள் என்று தெரியவில்லை,ரொம்பத் தெரிந்தவர்கள் என்றால் தொகை குறையுமாம்,அறிமுகமற்றவர்கள் என்றால் 10 மாத வாடகையை அட்வான்ஸ் தொகையாகத் தர வேண்டியதாய் இருக்கும்.வாடகைக்கு வீடு தேடும் பலரும் இந்த அட்வான்ஸ் தொகையையே பெர்சனல் லோனில் தான் வாங்க வேண்டிய நிலையிலிருப்பவர்கள்,ஆக மொத்தம் வீட்டு வாடகையோடு இந்த பெர்சனல் லோன் டியூவும் மாதாந்திர செலவில் சேர்ந்து கொள்ளும்,

இன்னொரு சகிக்க முடியாத கஷ்டம் ,இடைத் தரகர்கள் இல்லாமல் வீடு வாடகைக்குக் கிடைத்தால் சரி இல்லையேல் அவர்களுக்கு ஒரு மாத வாடகைத் தொகையை கமிஷனாகத் தர வேண்டும்.சரி இப்படி கமிஷன் அடிக்கிறார்களே அதில் ஒரு நேர்மை குறைந்த பட்ச நியாயம் இருக்குமா என்றால் அதுவும் இல்லை,வீட்டு உரிமையாளர் நிர்ணயித்திருக்கும் வாடகைத் தொகையைக் காட்டிலும் இந்த இடைத் தரகர்கள் 500௦௦ அல்லது 1000 ரூ அதிகமாக சொல்லித் தான் வீட்டையே கண்ணில் காட்டுவார்கள்,


எங்களது காம்ப்ளக்சில் 400 சதுர அடிகள் கொண்ட சிங்கிள் பெட் ரூம் பிளாட் ஒன்று சென்ற மாதம் காலி ஆனது ,முன்பு இருந்தவர்கள் அந்த வீட்டுக்கு கொடுத்து வந்த வாடகை 3 ,500 ரூ ,வீட்டுக்கு வெள்ளை அடித்து புதுபித்து இருக்கும் அதன் உரிமையாளர் இப்போது அந்த வீட்டுக்கு நிர்ணயித்த வாடகைத் தொகை 4000 ரூ ஆனால் உரிமையாளர் இந்தப் பணியை ஒப்டைத்திருக்கும் இடைத்தரகர் அந்த வீட்டுக்கு நிர்ணயித்திருக்கும் வாடகைத் தொகை 5000௦௦௦ ரூ

இது தவிர குடிநீருக்கு மாதம் 350 ரூபாய் ,கரண்ட் யூனிட் ஒன்றிற்கு வாடகைக்கு குடி இருப்பவர்கள் மாத்திரம் 4 .50 ரூ கொடுத்தாக வேண்டும்,இதில் வீட்டு உரிமையாளர்கள் வைத்தது தான் சட்டம் ,சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தது யூனிட்டிற்கு 3 ரூ கீழ் வாங்குவதே இல்லை.இதற்கெல்லாம் கேள்விமுறைகளே இல்லை.அப்படிக் கேள்வி கேட்பவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதும் இல்லை.

இந்த இடைத் தரகர்களின் சாகசப் பேச்சு வலையில் சிக்காமல் ஒரு வீட்டுக்கு இத்தனை வாடகை தான் தகும் என நியாயமான வாடகைக்கு குடி போக மக்களுக்கு ஆலோசனை தரும் மையங்கள் எதுவும் தமிழகத்தில் இது வரை உருவானதுண்டா!?அரசு நிர்ணயித்துள்ள மின்சார கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 .50௦ ரூ,அதை பொருட்படுத்தாமல் அல்லது அரசை மதிக்காமல் தான் யூனிடிற்கு 3 .50௦ ரூ அல்லது 4 .50௦ ரூ கூடுதல் தொகை வசூலிக்கப் படுகிறது எனும் போது இது தண்டனைக்குரிய குற்றம் ஆகாதா?அரசாங்கத்தை அவமதிக்கும் செயல் ஆகாதா? இதற்கெல்லாம் என்ன வரைமுறைகள்!

இந்தத் தொல்லைகளில் அலைக்கழிக்கப் பட்டு நொந்து போய் கட்டக் கடைசியாய் சொந்த வீடு இல்லை பிளாட் வாங்குவது என்று முடிவெடுத்தால் சிரமம் குறைந்து விடப் போவதில்லை ,அதிகக் குடியிருப்புகள் கொண்ட ப்ளாட்களில் தான் பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பிச் செல்வோம் அங்கே மாதாந்திர மெயிண்டனன்ஸ் தொகை கண்டிப்பாக 1000 க்கு குறையாது,லோனில் வீடு வாங்கியிருந்தால அந்தத் தொகையோடு செலவுக் கணக்கில் இந்த மெயிண்டனன்ஸ் தொகையையும் சேர்த்து தான் கணக்கிட வேண்டியதாய் இருக்கும்.

ஆக மொத்தம் சொந்த வீடு என்று ஆகி விட்டால் செலவு குறையும் என்று ஆசுவாசப் பட்டுக் கொள்ள முடியாது.முன்பு வாடகை வீட்டில் முறைவாசல் செய்பவர்களுக்கும் துவைக்க பெருக்க வருகிறவர்களுக்கும் கொடுக்கும் தொகை போக இப்போது atm ,ஜிம்,பார்க்,மெடிக்கல் சாப் வசதிகள் என்று பிளாட்டில் அழ வேண்டியதாய் இருக்கும்.இத்தனைக்கும் கூரை நமக்கில்லை கீழே தரை தளமும் நமக்கில்லை,பாண்டி விளையாட்டில் கோடு கிழிப்பதைப் போல துண்டு துண்டாய் கோடு கிழித்து வைத்திருப்பார்கள் கார் பார்கிங் என்று அதற்கும் லட்சக் கணக்கில் அழுது விட்டு மூச்சுக் காட்டாமல் இருக்க வேண்டும்.அப்போது தான் நீங்கள் ஒரு தேர்ந்த சொந்த பிளாட்வாசி .


இதைக்காட்டிலும் சிரமம் ஒன்றுள்ளது,வாடகை வீட்டில் குடி இருப்பவர்களுக்கு இடையிலான நட்புறவு, நீ யாரோ நான் யாரோ என்பதெல்லாம் சாதாரணம், பழைய குடித்தனக் காரர்கள் புதிதாகக் குடி வருபவர்களை எதிரிகளைப் போல அல்லது நாங்கள் இங்கே பல வருடங்களாய் இருக்கிறோம் நீ முந்தா நாள் மழையில் நேற்று முளைத்த காளான் ரீதியில் எல்லாம் தெரிந்த ஏகாம்பர தொனியில் தான் கண்ணெடுத்துப் பார்க்கிறார்கள்,இவர்களுக்கிடையே நல்ல நட்பு நீடிக்க அல்லது முளைக்கத் தான் முடியுமா?

பழகும் முறை ரொம்பத் தான் பாழ்பட்டுக் கிடக்கிறது,எப்போதும் நம்மை யாராவது ஏமாற்றி விடுவார்களோ என்ற பயம் ,ஜாக்கிரதை உணர்வு நொடிக்கொரு முறை மண்டையில் அலாரம் அடிக்குமோ என்னவோ! யாரும் யாரோடும் சுமுகமாய் பழகுவதே இல்லை,வெளிப் பகட்டுப் பேச்சுக்கள் எத்தனை நிமிடங்களுக்கு!

ஒரே மாதிரியான ஒரே அளவான வீடுகள் வீட்டு உரிமையாளரின் தனிப்பட்ட விருப்பங்களின் அல்லது மனநிலைக்கு ஏற்ப வெவ்வேறு தொகைகளில் வாடகைக்கு விடப் படுகிறது. சுமார் 600௦௦ சதுர அடிகள் கொண்ட நான்கு பிளாட் என்று வைத்துக் கொள்வோம்,ஒரே அளவான பிளாட் என்றால் எல்லாமே ஒரே வாடகைக்குத் தானே விடப் பட வேண்டும்,அப்படி இல்லை,முதல் வீடு 4000 ரூ,அடுத்த வீடு 4,500 ரூ அதற்கடுத்த வீடு 5000 ரூ ,இதற்கான கரண்ட் சார்ஜ் மற்றும் மெட்ரோ வாட்டர் மாதாந்திர தொகையிலும் நோக்கம் போல பாரபட்சம்,குடியிருக்கும் வாடகை வீட்டுக்காரர்களிடையே ஒற்றுமையோ நட்போ இருந்தால் இந்தக் குட்டு வெளிப்பட்டு என்றைக்கோ நீர்த்துப் போயிருக்கலாம்,இப்போது உண்மை தெரிந்தும் கேட்டுக் கொள்ள முடியாத மனக்குமைச்சல் ,நம்பிக்கையின்மை தான் மிஞ்சக்கூடும்.

இதை எல்லாம் தாண்டி வந்தாச்சா? உட்கார்ந்து மூச்சு வாங்கிகிட கூடாது, மாச செலவுன்னா அது ஹவுசிங் லோன் கட்றதும் வீட்டு வாடகை,தண்ணி பில்,கரண்ட் பில் கற்றதோட முடிஞ்சுடுத்தா என்ன? இல்லையே, நைட் தூங்கிட்டு இருக்கீங்க,உங்க குழந்தைக்கு படுத்திருக்கற பொசிசன் மாறினதுல எதோ ஒரு செகண்ட்ல திடீர்னு கழுத்து சுழுக்கிடுது இதென்ன கிராமமா சுழுக்கு எடுத்து விடறவங்களைத் தேட...இல்லனா வீட்டுக்கு வீடு பாட்டிகள் இருக்காங்களா என்ன? தனிக் குடும்ப அவஸ்தைகளை கேளுங்க, வேற வழியே இல்லை குழந்தை வலியில போடற கூப்பாடு பெத்தவங்க நம்மள டாக்டர் கிட்ட ஓட வைக்கும் ,டாக்டர் சும்மா தொட்டுக் கூடப் பார்க்க மாட்டார், கன்சல்டிங் fee 300௦௦ ரூ க்கு குறையா வாங்கினா அவர் திறமையான டாக்டர் இல்லையாம்!ஹாஸ்பிடலும் சும்மா சொல்லக் கூடாது இன்டீரியர் டெகரேசன் கூடக் குறைய ஸ்டார் ஹோட்டல் ரேஞ்க்கு மெயிண்டன் பண்ணிருப்பாங்க.அதுக்கெல்லாம் சேர்த்து தான் கன்சல்டிங் fee வாங்கறாங்களோ என்னவோ!மாசம் ஒரு தடவை யாருக்காக டாக்டரை பார்க்கப் போனாலும் சர் பர்ஸ் ஊசி குத்தின பலூன் தான்.

என்னத்தை சொல்ல இதோட நிறுத்திக்கிறேன்,

முடிவு பெறாத அல்லது ஒரு ஒழுங்கான வடிவமற்ற இந்தக் கட்டுரை போலவே தான் நான் மேலே சொன்ன விசயங்களும் எப்போதுமே வரையரைப் படுத்தப் படுவதே இல்லை எனும் தார்மீக வருத்தத்தோடு இந்த பதிவை முடித்துக் கொள்கிறேன்.