Thursday, September 22, 2011

ஒரே கடல் (மூவி ரெவ்யூ)

Movie link :

http://www.bharatmovies.com/tamil/watch/ore-kadal-movie-online.htm

படம் - ஒரே கடல்
காஸ்டிங் -மம்முட்டி(நாதன்) மீரா ஜாஸ்மின் (தீப்தி ) பெல்லா (ரம்யா)நரேன் (தீப்தியின் கணவன் )
வெளிவந்த ஆண்டு -2007

Over to the movie ...

அந்தக் குழந்தைகள் பதைபதைக்க வைக்கிறார்கள் .
அம்மாவின் காதல் அவர்களுக்குப் புரியும் காலம் வரலாம் வராமலும் போகலாம்.

படத்தில் பெல்லா இப்படி ஆனதற்கு காரணங்கள் ,தீப்தி இப்படியானதற்குகாரணங்கள் ,நாதன் இப்படியானதற்கு காரணங்கள் இன்னின்ன சம்பவங்களாலும்வசனங்களாலும் விளக்கப்படுகின்றன,இவர்களது வாழ்க்கை நியாயங்களை உணரமுடிந்தும் குழந்தைகள் நெருடிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்குப் பெயர்செண்டிமெண்ட் என்றால் ,அதைத் தாண்டி வர முடியாமை தான் மிடில் கிளாஸ்மனநிலை.//மிடில் கிளாஸ் ஃபனிஷ்மென்ட் என்றும் சொல்லிக் கொள்ளலாம்//

உள்ளுணர்வின் உந்துதலாய் நாதன் தீப்திக்கு ஒருமுறை உதவுகிறான், தொடர்ந்துதீப்தி தன் கணவனுக்கு வேலை வேண்டுமென்பதற்காக நாதனிடம் உதவி கேட்டுச்செல்கிறாள்,கவனியுங்கள் இதற்குப் பெயர் யாசிப்பில்லை,உதவி மட்டுமே.அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது ,அவளுக்கும் அவனிடத்தில் பெற்றுக்கொண்ட உதவிக்கான நல்லெண்ணத்தினால் ஏற்படும் நன்றியுணர்வு பிரமிப்பாகி,பிரமிப்பே காதலாக மாறுகிறது ,அவனால் தன் குடும்பத்தின் தற்போதைய சூழலைமாற்றி அமைக்க முடியும் எனும் நம்பிக்கை அவளை வீழ்த்துகிறது ,அவள்வீழ்கிறாள்.

வீழ்ந்தாலும் தனக்கென ஒரு தாங்கு கட்டையை இடைவிடாது கோரிக் கொண்டேஇருக்கும் ஊனமுற்ற மனம் அவளை நிம்மதி இழக்கச் செய்து கொண்டே இருக்கிறது .நாதனுடனான உறவை நியாயப் படுத்திக் கொள்ள அவள் தன்னோடு தானே போராடும்நிலை ,அவனுடனான அவளது பொழுதுகள் அவள் மனதிற்கு மிக நெருக்கமானவையாகிகணவனைத் தூர நிறுத்தத் துணிகிறது. இந்நிலை அவளை குற்ற உணர்வில்தள்ளுகிறது .

எல்லாமும் மனைவி பார்த்துக் கொள்வாள் ,எந்தச் சூழலையும் அவள் பொறுத்துக்கொள்வாள்,அது அவளது கடமையும் கூட என்றென்னும் கணவனாக நரேன் .பார்க்கப்பரிதாபமாக இருக்கிறது திரையில் .அவன் எதையும் அறிந்தவனில்லை .கடமையுணர்வுமிக்க கணவனாக தன் கேரக்டரை சரியாகச் செய்து முடித்து விட்டு ஒதுங்கும்அளவுக்கே முக்கியத்துவம் அளிக்கப் பட்டிருக்கிறது.அப்பாவி என்றுதீப்தியால் சொல்லப் படக் காரணம் அவன் தன் மனைவியின் காதலை அறிய நேரவில்லைஎன்பதனால் மட்டுமே என்பதை இங்கு கவனத்தில் கொள்தல் நலம் .

அவன் தன் மனைவி மனநல விடுதியில் இருந்து மீண்டு வந்தால் போதும் எனஏற்றுக் கொள்ளும் அளவில் பெருந்தன்மை கொண்டவனாகவே இருக்கிறான். மனைவியின்காதலையும் அவ்விதம் ஏற்றுக் கொள்வான் என நம்ப முடியாதே. தீப்தி நாதனோடுஇணைவதாக படம் முடிகிறது .அவளது கணவன் என்னவானான் என்னவாகிறான்?! எனும்யோசனையை எளிதில் கடக்க முடியவில்லை ,இவனது நிலை என்ன ? தன் மனைவியின்தேடலை உணர்ந்து கொண்டு இவன் அவர்களை அணுசரித்துப் போவான் என நம்புவதுபேதமை .போகலாம் போகாமலும் இருக்கலாம்,நெருங்கி முட்கள் தூவப் பட்டஎப்படியும் இருக்கலாம் நிகழ்வுகள் .தீப்திக்கு இவனைப் பிரிவதற்கோதவிர்பதற்கோ எவ்வித நியாயங்களும் காட்சிப் படுத்தப் படவில்லை படத்தில்.ஒரு மனைவி தன் கணவனைப் பிரிவதற்கு அவன் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் கணவன்எனும் சொத்தைக் காரணம் மட்டுமே போதாது தானே !

படத்தை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.உறவுகளால்,பந்தங்களால் பாதிக்கப்படாதவன் என படம் முழுக்க சதா தன்னைபிரகடனப் படுத்திக் கொண்டே இருக்கும் நாதனுக்கும் தனக்கே தனக்கான பேரன்புதேவைப் பட்டிருக்கிறது,தீப்திக்கும் தேவைப்பட்டிருக்கிறது ,சந்தர்பங்கள்அவர்களை இணைக்கிறது ...அவர்கள் இணைகிறார்கள் .தடைகள் எனக் கருதப்படும்(கணவன்,குழந்தைகள் இத்யாதி இத்யாதி )மற்றெல்லா காரணங்களும் இந்தபேரன்பின் பின்னணியில் நீர்த்துப் போகின்றன.

பல கடல்களைக் கடந்து பல நாடுகளுக்கும் பயணப்பட்ட நாதன் கடைசியில் ஒரேகடலில் சங்கமித்து உறைவதாய் கதை முடிகிறது .அதற்குப் பிறகு தான் கதைதொடங்குகிறதோ என்ற கேள்வி எழத்தான் செய்யும் .கேள்விகளை சேமித்து நாமும்அந்த ஒரே கடலில் விட்டெறியலாம்.அதிகம் சிந்திப்பது ஆத்மாவுக்கு நல்லதல்லஎன்பதால் :)))

தீப்தியை புரிந்து கொள்ள முடிகிறது ...
நாதனைப் புரிந்து கொள்ள முடிகிறது ...
தீப்தியின் கணவனைப் புரிந்து கொள்ளலாம் ;
பெல்லாவையும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும் .

ஆனால் இந்தக் குழந்தைகளை என்ன செய்வது !

அவர்களுக்கு என்று கேள்விகள் விருப்பங்கள் ,வெறுப்புகள்,ஆட்சேபங்கள் இருக்காதோ ?!!!

ஒரே கடல் தீப்தியைக் காட்டிலும் வாடிக் கசங்கிய முகத்துடன் தேம்பலோடு தன்அம்மாவைத் தேடி மாடிப்படிகளை கடந்து வரும் அந்த குட்டிப் பெண் அதிகமும்பாதிக்கிறாள்.

//எனக்கு யாருமே இல்ல //

என்ற குற்றச்சாட்டோடு இன்னொரு தீப்தி உருவாக்கப் படுகிறாளோ என்ற மெல்லியஅச்சம் உண்டாவதை தவிர்க்க இயலவில்லை.

ஒரு மனைவி இரு கணவர்கள் என்பதை வீம்புக்கேனும் //ஆம் வீம்புக்கு தான்//இந்தியக் கலாச்சாரம் வெளிப்படையாய் ஏற்காதே .

உளவியல் சிக்கல்களை புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வதென்பதுமகானுபாவர்களுக்கே சாத்தியம் .

என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் படத்தில் உணர்த்தப் பட்ட நீதி"கணவனேன்றாலும் மனைவிஎன்றாலும் யாருக்கு எப்போது என்ன தேவை ?! என்பதைபுரிந்து கொள்ளும் முயற்சி கணவன் மனைவி உறவில் முதல் பாடம்.

கவனக் குறைவானால் எவருடைய சிந்தனை எல்லைக்கு அப்பாலும் எதுவும்நிகழலாம்.சதா அன்பை இரந்து அன்பில் கரையும் உலகம் இது.
படத்தின் பாடல்கள் நம்மை வாரிச் சுருட்டி மூழ்கடித்துநினைவிழக்கச் செய்ய வல்லவை.அத்தனை உருக்கம்அத்தனை பரிதவிப்பு ,அத்தனை இதம் ! பாடும் குரலின் ஆழ்ந்த மென்சோகம்வலித்தாலும் அதிலொரு சுகம் பேரானந்தம் .
பாம்பே ஜெயஸ்ரீ குரலில் கடலாழத்து சங்கிலிருந்து மீட்கப்பட்ட புராதனஇசையின் கணிக்க இயலா தொன்மையில் கசியும் கனத்த வேதனையை அவதானிக்கமுடிகிறது .

தொடக்கத்தில் இருந்து இறுதி வரை ஒளசபச்சனின் இசை படத்தின் மிகப்பெரிய பலம்

Sunday, September 11, 2011

பாத்துமாவின் ஆடு ( பஷீர் )

பாத்துமாவின் ஆடு ... (பஷீர்)

மதிலுகள் கடந்தே இன்னும் வர முடியலையாம் .இங்க என்னடான்னா இந்த பாத்துமாவோட ஆடு பாஷீரோட பால்யகால சகியையும் உலகப் புகழ் பெற்ற மூக்கையும் ஒரே நேரத்துல தின்னு செரிச்சிட்டுதாம் .ஏன்னா அது பாத்துமாவோட ஆடாச்சே ! என்ன ஒரு நையாண்டி ! குடும்பத்தின் மூத்த மகள்களுக்கென்றே இருக்கும் சில பிரத்யேக உரிமைகளை இதை விட யாரும் நையாண்டி செய்து விட முடியாது .

பெரியதொரு கூட்டுக் குடும்பத்தின் மூத்தமகனாக இருப்பதின் சங்கடங்கள் .அதிலும் பஷீர் போல காடாறு வருடம் வீடாறு மாதம் என இலக்கியக் கடலில் மூழ்கி முத்தெடுக்க விழைந்த ஊர் சுற்றிகளுக்கு ரொம்பக் கஷ்டம் தான் .மூன்று தம்பிகள் இரண்டு தங்கைகள் ,தம்பிமார் மனைவிகள் ,தங்கைமார் கணவர்கள் அவர் தம் பெற்றெடுத்த சந்தான செல்வங்கள் இத்தனை பேருக்கும் சமர்த்தாக நடந்து கொண்டாக வேண்டிய உறவுச் சிடுக்காட்டமான குடும்ப நிலை .

இத்தனூண்டு ஒலைக்குடிசையினுள் உறவுகளோடும் ,உம்மா வளர்க்கும் கோழிகளோடும்,தங்கைகள் வளர்க்கும் ஆடுகளோடும் ,தாங்கலை வேண்டி விரும்பி உறவாட வந்த பூனைகளோடும் பஷீரின் வாழ்வில் சில காலங்கள் கழிகின்றன .அன்றைய நாட்களை அப்படியே நமக்குக் காணத் தருகிறார் பஷீர்.

பஷீரைப் படிக்கும் போதெல்லாம் என்னவோ ஒரு வேதனையை அடக்கிக் கொண்டு வாசிப்பதான உணர்வு மேலெழும் .

காசு காசென்று பிய்த்தெடுக்கும் உம்மாவும் தம்பிமார்களும் ,தங்கைமார்களும்.
பஷீர் காடாறு வருஷம் போகையில் எல்லாம் வீட்டைக் கவனிப்பவன் தான் தானே என்று அசந்தால் அண்ணனாகி விடும் மூத்த தம்பி அப்துல்காதர் .

கொடுத்த காசுக்கு கணக்குக் கேட்கும் போதெல்லாம் "நான் பட்டாளத்திற்கே போகிறேன் என்று சவடால் அடிக்கும் இளைய தம்பி ஹனீபா "

வீட்டுப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏன் ஆடு கோழிகளுக்கும் பூனைகளுக்கும் கூட அதட்டல் உருட்டல் மிரட்டல் தான் எப்போதும் செல்லுபடியாகும் என்று நினைத்துக் கொண்டு எந்நேரமும் கம்பெடுத்துக் கொண்டு அதட்டிக் கொண்டு திரியும் கடைக்குட்டி அத்துலு . அவனிடம் அறுபது ஜோடு செருப்புகள் உண்டாம் .


பிறந்த வீட்டில் தனக்கு மட்டுமல்ல தன் ஆட்டுக்கும் ஏகபோக உரிமை கேட்கும் பாத்துமா .

இவர்களது வாரிசுகள் கதீஜா ,ஆரிபா,செய்து முகம்மது,லைலா ,அபி மற்றும் சிலர் .

இத்தனை களேபரத்துக்கு நடுவிலும் பிரசவிக்கும் பாத்துமாவின் ஆடு .

பிரசவத்தை பின் மத்யானப் பேன் பார்த்தல் போல சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் பஷீர் குடும்பத்துப் பெண்ணரசிகள் .

ஆனால் பஷீர் அவர்களைப் போல அல்லவே ! பஷீருக்கு பிரசவித்த ஆட்டுக்கு பக்குவம் பார்க்காமல் அப்படியே விட்டு விட்ட தன் வீட்டுப் பெண்கள் மீது பெரும் மனத்தாங்கல் ஏற்படுகிறது,ஆனாலும் ஒன்றும் கேட்டு விட முடியாது ,ஏதாவது கேட்டு வைத்தால் பஷீர் இல்லாத நேரமாகப் பார்த்து கேலி பேசிச் சிரிப்பார்கள் .

இதெல்லாம் ஒரு புறம் இருக்க ,தினம் தெரு வழியே பஷீரைப் பார்த்துக் கொண்டே போகும் பள்ளி மாணவிகள் அத்தனை ஆசை கொண்டு பார்த்துச் சென்றது தன்னை அல்ல தன் வீட்டு சாம்ப மரத்தின் சாம்பக் காய்களைத் தான் என்ற உண்மை தெரியுமிடத்து பஷீரின் தற்பெருமை டமால் என்று உடைபடுகிறது. அதற்காக அவர் அந்தப் பெண்கள் மறுபடி சாம்பக்காய்கள் வாங்க வரும் போது நோஞ்சான் காய்களாக கொஞ்சம் பறித்துக் கொடுத்து காசு வாங்கிக் கொண்டு பழி தீர்த்துக் கொள்வது ஏக தமாஷ் .

அதே சமயம் பஷீரின் பெருமை உணர்ந்து வீட்டுக்கு அவரைத் தேடி வந்து ஆட்டோகிராப் வாங்கும் தொழிலாளியின் மகள் சுஹாசினிக்கு பஷீர் பார்த்துப் பார்த்து சிவந்த பழங்களாக நிறையப் பறித்து பொட்டலம் கட்டிக் கொடுத்து அனுப்பும் இடம் ரசனை .

//உலகமகா மூத்த எழுத்தாளரே உமக்கு எமது வந்தனங்கள் //

சப்பைக்காலன் அப்துல் காதர் சாகித்ய வித்வப் புகழ் பஷீரைப் பார்த்து இலக்கணம் படித்துக் கொண்டு அப்புறம் நீ இலக்கியம் படைக்கலாம் காக்கா (அண்ணன்) எனச் சொல்லுமிடத்து பஷீரின் ஆற்றாமை வெகுண்டேழுகிறது.

உம்மா பஷீரைக் கல்யாணம் செய்து கொள்ள சொல்லிக் கேட்டு வெறுப்பேற்றுகிறார்.

பாத்துமாவுக்கோ பஷீர் அவள் மகள் கதீஜாவுக்கு ஒரு ஜோடி தங்கக் கம்மல் செய்து தர வேண்டுமென பேராவல்.

பஷீரிடம் இருந்த காசெல்லாம் கரைந்து இனி தம்பிடிக் காசில்லை .

என்ன செய்தார் பஷீர் ?!

புத்தகம் வாங்கிப் படித்து அப்புறம் தெரிந்து கொள்ளுங்கள் .

புத்தகம் -பாத்துமாவின் ஆடு
ஆசிரியர் -பஷீர்
வெளியீடு -காலச்சுவடுவிலை - 80 ரூ

Monday, August 8, 2011

Sharing...




கேணி சந்திப்பில் வரும் ஆகஸ்ட் 14, ஞாயிறு மாலை 4 மணிக்கு எழுத்தாளர் வண்ணநிலவன் (துர்வாசர்) பங்கேற்கிறார். இடம்: 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. வருக நண்பர்களே

Sunday, August 7, 2011

சித்ரா -சிறுகதை

சித்ராவின் கணவனாம் !

இன்று தான் பார்க்கிறேன் இவனை.

எப்போது வந்திருப்பானோ தெரியவில்லை பெரிய மாமா மிகை பாவனையாய் அவனோடு பலகாலம் ரொம்ப சிநேகம் போல அவனது தோளைத் தட்டி கைகளைப் பற்றிக் கொண்டும் விட்டுக் கொண்டும் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார் .

தலை முழுக்க மங்கி நிறமிழந்த பேப்பர் கூழ் பெட்டியை வைத்துக் கவிழ்த்தார் போல ஒரு ஹேர் ஸ்டைல் அவனுக்கு ,அந்த முடி வெட்டும்,முழி வெட்டும் முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போனது எனக்கு . இவனை எப்படித்தான் சகித்துக் கொண்டு இரண்டு வருடங்கள் வாழ்ந்து சித்ரா ஒரு பிள்ளையையும் பெற்றாளோ என்று பற்றிக் கொண்டு வந்தது. காட்டெருமை நடை!

சித்ரா வீட்டிலிருந்து ஒருவரும் இன்னும் சாமி கும்பிடுக்கு வரக்காணோம். கோயிலில் கூட்டம் நெறிபட்டுக் கொண்டிருந்தது .
ஃபேன் உபயம் ராசுக் கொத்தனார் என்ற அடர்நீல எழுத்துக்களோடு தலைக்கு மேலே காற்றாடி ஓடிக் கொண்டிருந்தாலும் அந்தக் காற்றை அந்த அடர் நீல எழுத்துக்களே மொத்தக் குத்தகை எடுத்துக் கொண்டார் போல ராசுக் கொத்தனார் வகையறாக்கள் அந்த ஃபேன் அடியை விட்டு நகர்வேனா என்று நின்று கொண்டிருந்தார்கள் .

ராசுக் கொத்தனார் சம்சாரம் அலமேலு யாரும் பார்க்காத சமயமென்று தான் எண்ணின நேரமெல்லாம் அண்ணாந்து அண்ணாந்து அந்த ஃபேனைப் பார்ப்பதும் உடனே உள்ளே அம்மனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வதுமாய் இருந்தாள்.

பார்க்கப் பார்க்க வேடிக்கை தான் மனித சுபாவங்கள் ,நான் சித்தியின் மணிக்கட்டைக் கிள்ளி ராசுக்கொத்தனார் சம்சாரத்தை காட்டினால் அவளோ போன வருடம் தாத்தா இருக்கும் போது கோயிலுக்கு என்று கோயில் முகப்பில் செய்து நிறுத்தி இருந்த பெரிய வெண்கல மணியையே பெருமை சிந்தி சிதற பார்த்துக் கொண்டிருந்தாள். என்னே அரிய கல்யாண குணங்களடா நம் மக்கள் மனங்களுக்குள் !!

அதற்குள் சித்ரா கணவனைக் காணோம் ,கழுதை கெட்டால் குட்டிச் சுவராம். எங்கே போயிருப்பார்கள் ? பால்வாடியின் முள்காட்டுப் புதர் ஓரம் தள்ளிக் கொண்டு போயிருப்பார்கள் தண்ணிக் கோஷ்டிகள் ,அவனுக்கு இந்த ஊரோடு இழுத்துக் கட்டிய சரடுகள் அறுந்தே போன பின்னும் ஊர்ப் பொங்கலுக்கு வருகிறான் ...வந்து கொண்டே இருக்கிறான் என்றால் வேறென்ன உத்தம உன்மத்தமான பந்தங்கள் கட்டிக் கொண்டு ஆடக் கூடும்!

"]உங்க மாமா தண்ணி அடிக்கறதுக்கோசறமே அவன இங்க அழைச்சிருப்பாரு தெரியுமாடீ ?"

அத்தை சூடத் தட்டை உள்ளங்கை நிறைக்க கருப்பு பூசிக் கொள்ள தொட்டுக் கும்பிட்டுக் கொண்டே எனக்குச் சொன்னாள்.

சூடத் தட்டில் விபூதிக்குள் காசுக் குவியல்களும் பச்சை நோட்டுக்க்களுமாய் பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தது . தட்டுக் காசு நிரம்பி வழிய வழிய பூசாரி வேளார் முகம் ஆறேழு முறை பழனி கந்த விலாஸ் விபூதி தேய்த்து தேய்த்து பள பளப்பாக்கிய செப்புச் சொம்பு போல மினுங்கியது .

சித்ரா வீட்டுக்காரர்கள் பொங்கல் என்றில்லை எப்போதுமே சாமி கும்பிட ஜதையாகத் தான் கோயிலுக்கு வந்து போவார்கள் ,

துலுக்கபட்டியில் கட்டிக்கொடுத்திருக்கும் பெரியக்கா பாமா , போலீஸ்காரனைக் கட்டிக்கொண்டு சிவகாசி ரிசர்வ் லைனில் குடி இருக்கும் சின்னக்கா தனம் ,வெங்கால் நாயக்கன்பட்டியில் வாக்கப் பட்டிருக்கும் கடைசி அக்கா நீலவேணி ,எல்லோருக்கும் மூத்த அண்ணன் ஜெகநாதனின் பெண்டாட்டி ராஜகமலம் எல்லோரும் யூனிபார்ம் மாதிரி ஒரே நிறத்துப் பட்டு கட்டிக் கொண்டு முழ நீல பவுடர் டப்பாவைக் காலி செய்து விட்டு சீவிச் சிங்காரித்து தலைப்பின்னல் நீளத்துக்கு பூ வைத்துக் கொண்டு பெரிய பித்தளைத் தாம்பாளத்தில் சாமி கும்பிடு சாமான்களை நிறைத்துக் கொண்டு அவர்களது அம்மா சாவித்திரி அன்ன நடை போட்டு வர வாத்து நடை,பூனை நடை,எருமைநடையில் அக்காள்கள் எல்லாம் பின்னே பவனி வந்து கோயிலை அடைவார்கள் .

சாமி கும்பிடுவதெல்லாம் வெறுமே சம்பிரதாயம் , பழக்க தோசம் என்பதாகத் தான் இருக்கும் அப்போது யாரைப் பார்த்தாலும் .

மூன்றாம் வருடம் நான் என் அம்மா,சித்தி ,பாட்டி அத்தைகள் புடை சூழ கோயிலுக்குள் நுழைகையில் சித்ரா அண்ட் சிஸ்டர்ஸ் பச்சைப் பட்டு கட்டிக் கொண்டு மல்லிகை மணத்துக் கசங்கி தலை பாரம் தாங்காது கூந்தல் தாண்டி தரை என்பது தொட்டு விடும் தூரம் தான் என்பதாக சரிந்து தொங்கத் தொங்க கோயிலுக்குள் வியர்த்து வழிந்து கொண்டிருந்தார்கள் .

வந்த வரன்களை எல்லாம் அது நொள்ளை ,இது சொள்ளை என்று தட்டிக் கழித்து கொண்டிருந்ததில் பாட்டிக்கு என் மேல் ஏகக் கடுப்பு .

சித்ரா பல லட்சம் சொத்துக்களோடு டிஜிட் ராஜகோபாலை மணக்கப் போகும் பெருமையில் இருந்திருப்பாள் போலும் ! பெரிய கவர்னர் மாலை சங்கிலி பச்சைப் பட்டின் மேல் தாழ்ந்து படிய கழுத்தை இறுக்கிய பச்சைக் கல் அட்டிகை யோடு என்னைப் பார்த்தும் பாராதவள் போல்...என்ன நிம்மி (நிர்மலா) என்ன பண்ணிட்டு இருக்க இப்ப? என்று மிதப்பாய் பெரிய மனுஷி தோரணையில் கேட்டாள் .

" நான் ஓட்டுச் சில்லு வச்சு பாண்டி ஆடிட்டு இருக்கேன்டீ "
வாய்க்கு வந்ததை நக்கலாய் நான் சொல்ல பாட்டிக்கு வந்ததே கோபம் .
"என்ன பண்ணுவா ?எங்க உசுர எடுத்துக்கிட்டு இருக்கா வர்ற மாப்ளை எல்லாம் தட்டிக் கழிச்சிட்டு அவ்வையாராகப் போறாளாம் .."

தர தரவென்று பாட்டியை இழுத்துக் கொண்டு போய் கோயிலுக்கு வெளியில் விட்டு வந்தால் தேவலாம் என்றிருந்தாலும் அடக்கிக் கொண்டேன் அந்த என்னத்தை பிறகு அதற்கொரு பொங்கல் நேரும். எதற்கு வம்பு ?

"உன் சோட்டுப் பொண்ணு தான பாரு எம்மாம் பெருசா படிச்சிருந்தும் அதுக்குத் தக்கன மாப்ள வரணும்னு ரூல்ஸ் பேசாம எத்தன புத்தியா வீட்ல சொன்ன மாப்ளைய வசதி வாய்ப்ப பார்த்து கட்டிக்கிறேன்னு தலையாட்டிடுசுச்சு ,அதாம் பொழைக்கற பொண்ணு ."
பாட்டி எனக்குச் சொல்லிக் கொண்டே அம்மாவையும் சித்தியையும் ,அத்தைகளையும் பார்த்தாள் .

"அதானே?!" என்றன அந்த முகங்கள்.

அதற்கப்புறம் வந்த பொங்கலுக்கு நான் பாட்டி ஊருக்குப் போகவில்லை கல்யாணமாகி புகுந்த வீட்டுப் பொங்கலைப் பார்க்கப் போய் சேர்ந்து விட்டேன் . அம்மாவும் சித்தியும் கூட என்னோடு அங்கேயே பொங்கலைப் பொங்க வைக்க வந்து சேர "அங்கேயும் பொங்கல் பொங்கத்தான் செய்கிறதாம் "என்றான் தம்பி. எல்லோரும் சிரித்தார்கள் , அந்தப் பொங்கலுக்கு சித்ராவின் நினைவே இல்லை எனக்கு .
நான் போகாவிட்டாலும் பாட்டி ஊரிலும் கூட அந்த வருடம் பொங்கல் பொங்கித்தான் வழிந்ததாம் . அட எப்போதும் பொங்கலின் இயல்பு பொங்கி வழிவதன்றி வேறேல்லவே!

சித்ரா கறுப்பி தான் ஆனாலும் அழகுக் கண்கள் அவளுக்கு ;என் தங்கைக்கு தான் அவள் வகுப்புத் தோழி என்றாலும் விளையாடுகையில் நாங்கள் இருவரும் தான் ஒன்றாய் சேருவோம் பல நாட்கள் .

அடர்ந்த கரும்புப் புருவங்கள் அவளுக்கு ...கீழே திராட்சை பழத்தை பாலிடாலில் மிதக்க விட்டது போல பெரிய கண்கள்.ஒருமுறை விளையாட்டில் என்னவோ சண்டை வர ;வந்த கோபத்தில் என்ன செய்வதென்று புரியாமல் தலைமுடியை இழுத்துக் கீழே தள்ளி புடைத்துத் தெரிந்த அவளது இமைகளை ரத்தம் கன்றும் அளவுக்கு கடித்து விட்டேன். அலறி விட்டாள் அலறி ,விஷயம் அவளம்மா வரை போய் சாயந்திரமாய் பஞ்சாயத்துக்கு பாட்டியிடம் வந்தது.

"தேவகிக்கு இப்படியும் ஒரு பிள்ள பிறக்கனுமா? அதென்ன பொம்பளபுள்ள மாதிரியா நடந்துக்கிடுது? என்னத்தே நீங்க கண்டிக்கிறீங்களா இல்ல நானே ரெண்டு சாத்து சாத்தவா ? "

கண் காயத்தில் தேங்காய் எண்ணெய் பூசிய சித்ராவை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறு கையால் திண்ணையில் பாட்டிக்குப் பின்னால் அமர்ந்து பயத்துடன் நடக்கப் போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னை இழுக்க சாவித்திரி அத்தை கை நீட்ட ...ராத்திரி சமையலுக்காய் அவரைக்காய் நறுக்கிக் கொண்டிருந்த பாட்டி சடக் புடக்கென உதறிக் கொண்டு எழுந்தாள்.

இந்தா சாவித்திரி ...என்ன திடு திப்ன்னு பிள்ளைய அடிக்க கை ஓங்கிட்டு வர்ற நீ ?சின்னப்பிள்ளைங்க சண்டைய போய் வீதிக்கு கொண்டு வந்துட்ட ...போ...போ நான் கண்டிக்கறேன் .

சாவித்திரி எனக்கு அத்தை முறை ...பாட்டி இப்படிச் சொன்னதும் என்ன நினைத்தாளோ ?

"அடியேய் உன்ன எம்மருமகளாக்கி என் பையன விட்டு உதைக்கச் சொன்னா தான் திருந்துவ நீ ...என்று அநியாயத்துக்கு என்னை மிரட்டி விட்டுப் போனாள் .

எனக்கு அவள் என்னை அடித்து விட்டுப் போயிருந்தால் கூட அத்தனை பயமிருந்திருக்காது ,அவள் சொல்லி விட்டுப் போன பிறகு ராவெல்லாம் நினைத்து நினைத்து பயந்து கொண்டே இருந்தேன் அந்த குண்டுக் கண்ணன் கோபிக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கொடுத்து விடுவார்களோ என்று .இத்தனைக்கும் அப்போது படித்துக் கொண்டிருந்ததென்னவோ மூன்றாம் வகுப்பில் தான்.

சித்ரா வீட்டில் ரோஸ் நிறப் பெயின்ட் அடித்த மரக்குதிரை ஒன்று இருந்தது ,அந்தக் குதிரையில் மூன்று பேர் உட்கார்ந்து ஆடலாம் .இந்த குண்டுக்கண்ணன் உட்கார்ந்தால் யாருக்குமே இடமிருக்காது அவனுக்கே இடம் பத்தாதே ! அவன் இருக்கும் பொது அந்தக் குதிரையில் யார்ரையும் ஆட விடாமல் அழிச்சாட்டியம் செய்வான் ,அண்ணனும் தங்கையுமே குதிரைக்காக கட்டிக் கொண்டு அடித்துப் புரள்வார்கள்,சாவித்திரி வந்து முதுகில் நான்கு வைத்து எல்லோரையும் தெருவில் விளையாட விரட்டி விடுவாள். இப்படித் தான் இனிதே கழிந்தது எங்கள் பால பிராயம் .

அவனம்மா தான் அப்படி மிரட்டினாலே தவிர அவனுக்கு என்னைக் கண்டால் காந்தாரி மிளகாய்நெடி மூக்கேறிய கதை தான் ...சித்ராவின் சிநேகிதிகளான எங்களில் யாரைக் கண்டாலும் அவன் "ஏய் கொண்டி "என்று தான் கூப்பிடுவான் .

"போடா கோண மூக்கு குதிரைக் கோவாலு "என்று உரக்க கத்தி விட்டு ஓடிப் போய் ஒழிந்து கொள்வோம் நாங்கள் ,ஒருநாளைக்காவது அவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கையில் பாட்டி மிளகாய்ப் பொடி அரைக்க காய வைத்திருக்கும் வர மிளகாய் இரண்டை உடைத்து அவன் மூக்கில் திணித்து விட்டு ஓடியே போய் விட வேண்டும் என்றெனக்கு ஆவல் உந்தித் தள்ளி இருக்கிறது அப்போதெல்லாம் .


எப்படியோ என் வர மிளகாய் உடைப்பிற்கு தப்பி விட்டாலும் பாவம் சித்ராவைக் கட்டிக் கொடுத்த ஆறே மாதத்தில் ராத்திரி fireஆபிஸ் கணக்குப் பிள்ளை வேலையை முடித்து கொண்டு பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கையில் அவன் வைத்திருந்த பணத்துக்காக சாத்தூர் முக்குப் பாலம் ரோட்டில் வைத்து முகமறியாத சிலரால் விருதாவாய் குத்திக் கொல்லப் பட்டான் .
கோபாலின் கதை இப்படி முடிந்தது .
கோபால் உயிரோடு இருக்கும் போதே ... கை நாட்டு கூட ஒழுங்காய் போடா வராத டிஜிட் ராஜகோபால் என்ற திருநாமத்தோடு ஊரெல்லாம் வளைய வந்த தன் சின்ன முதலாளிக்கு சிவகாசி எஸ்.எப்.ஆர்.காலேஜில் எம்.சி.ஏ படித்து முடித்த தன் கடைசித் தங்கை சித்ராவை சொத்துக்காக கல்யாணம் பண்ணி வைத்திருந்தான். எல்லாம் இவன் ஏற்பாடு தான் .சித்ராவும் எதற்கு மண்டையை ஆட்டினாள் என்பது ஒரு எழவும் புரியத்தான் இல்லை , என்ன தான் சொத்து கிடைத்தாலும் அவளுக்கு ரசனை காணாது என்று தான் நினைக்க வேண்டி இருக்கிறது இப்போது அவள் புருசனின் முடி வெட்டைக் காண்கையில் ,

"பேப்பர் கூழ் பெட்டி மண்டையன். " ஓரிருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன். அவனுக்கென்ன தெரியவா போகிறது இப்படியெல்லாம் தனக்கு பெயர் வைக்கப் படுவது .

அவன் இந்நேரம் யார் யாரோடெல்லாம் தண்ணியில் முங்கிப் போய் கிடக்கிறானோ?!

போன வருடப் பொங்கலுக்கு தன் பெண்டாட்டியோடு வந்திருப்பானாய் இருக்கும். இந்த வருடம் தனியே வர என்ன ஒரு திண்ணக்கம் இவனுக்கு ? என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன் .

தேனிப்பக்கம் சருத்துப் பட்டியில் இருந்து எலுமிச்சம் பழச் சிவப்பில் அவனுக்கு மறுகல்யாணத்துக்கு பெண் எடுக்கப் போகிறார்களாம். பாட்டி குசு குசுவென்று சித்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் .

"அவனுக்கென்ன ஆம்பளை ...பொண்டாட்டி செத்தா புது மாப்ள தான் "செவிட்டில் அறைந்தார் போலிருந்தது பாட்டி சொல்வது.
அவன் எக்கேடோ கெட்டு ஒழிகிறான் .

எம்.சி.ஏ படித்து முடித்த பெண்ணை அவன் ஏன் வீட்டு டெலிபோன் வயரால் கழுத்தை நெறித்துக் கொன்றான் ?!

ஊர் என்ன சொன்னது?

உறவுகள் என்ன சொல்லி ஆற்றிக் கொண்டன இந்த துக்கத்தை ?
சித்ரா செத்துப் போகையில் அவளுக்கு ஒரு வயதில் ஒரு மகளிருந்தாள்.
சித்ராவின் அப்பாவுக்கு பேத்தியை விட மகள் செத்ததில் மருமகன் மீது வழக்குப் போடாமல் இருக்க வந்த நஷ்ட ஈட்டுத் தொகையின் மீது தான் அதீத பாசம் மிகுந்து வழிந்தது.

கழுத்து நெறிபட்டு செத்துக் கிடந்த தன் பெண்டாட்டியை ட்ரை சைக்கிளில் போட்டு எடுத்துக் கொண்டு போய் சுடுகாட்டில் எரிக்கச் சொன்னது எது? ஆணாதிக்கமா ? பண ஆதிக்கமா?

என்ன நடந்திருக்கக் கூடும் என பல யூகங்கள் கசிந்தன.அதிலொன்று தன் கம்பெனி ஆர்டர்களுக்காக வடநாட்டு ஏஜெண்டுகளுடன் தன் அழகான பெண்டாட்டியை கம்பெனி கொடுக்கச் சொன்னானாம் இந்த பேப்பர் கூழ் பெட்டி மண்டையன்.

இவளென்ன சொன்னாளோ... நடந்த வாக்கு வாதத்தில் தான் சித்ராவின் கழுத்தை டெலிபோன் வயர் சுற்றிக் கொண்டதாம்.
அப்படிப் பட்ட துணுக்குறாத நுணுக்க குணம் கொண்ட தகப்பனிடத்தில் தான் சித்ராவின் மகள் வளர்ந்து வருகிறாள்.

"எங்க பொண்ணையே கொன்னுட்டாங்க இனி அவன் பொண்ணை நான் ஏன் பார்க்கறேன் ..." - சித்ராவின் மகளைக் குறித்து கேட்பவர்களுக்கெல்லாம் இதே பதில் தான் சித்ராவின் அப்பாவிடமிருந்து .மனிதருக்கு மகளால் வந்த பணம் இன்னொரு வீடு கட்டிக் கொள்ள உதவியது. சம்சாரத்துக்கு வைக்கோற் பிரி சங்கிலி செய்து போட்டுக் கொள்ள உதவியது.பாவம் அந்த சின்னக் குழந்தை பற்றி யோசிக்கத் தான் எவருக்கும் மனமில்லை.
சதா பணம் பேசிக் கொண்டே இருப்பதால் .

யாரும் எவர் மனதிலும் ஆழப் பதிவதில்லையாம் ...சித்ராவின் மகளை நான் பார்த்ததில்லை போலவே என் மகளையும் அவள் பார்க்கவா போகிறாள் ? என்று என்னை நானே ஊமை சமாதானம் செய்து கொண்டு அந்தப் பொங்கலோடு சித்ராவை மறந்து போனதாய் எனக்குள் நானே சொல்லிக் கொள்கிறேன் எப்போதாவது பொங்கலுக்கு பாட்டி ஊருக்குப் போக நேர்கையில் மட்டும்.

சித்திரைப் பொங்கல்கள் எல்லா ஊர்களிலும் வருடா வருடம் பொங்கிக்கொண்டு தான் இருக்கின்றன சித்ரா இல்லாமல்.

அவள் மகளை எப்போதேனும் பார்க்க நேர்ந்தாலும் கூட எனக்கு அவளை அடையாளம் தெரிய வாய்ப்பே இல்லை.

Saturday, August 6, 2011

நல்லதங்காளும் அவளேழு வெள்ளரிப்பிஞ்சுகளும்...

வேழமறுத்து துண்டாடும் கோடைகடுவெயில்
கானக நடுவிற் செவ்வரிமா சிறுமுயல்
காண நாணி கடுகிப் பாய்ந்து தாவி அணைந்தது
பின்னப்பட்ட காசி நகர் சுற்றுக் கோட்டை
கற்சிதைந்த பாழும் கிணற்றில் ;
கிணற்று நீர் சிலும்பிச் சிலும்ப
தழும்பி முகம் காட்டினாள்
நல்லதங்காள் .
தூசு தும்பேஎன்று
அருந்தக் கை குவித்த நீரள்ளி வீசி
மஞ்சள் பூ முகம் மறுத்துத் திரும்பினால்
பசியோ பசியென்று கத்திக் குமிகின்றன
ஆறேழு வெள்ளரிப் பிஞ்சுகள்
மூளி மறுத்த முக்கால் வயிற்றை
உப்பி நிறைத்தது உப்பு நீர் கிணறு ;
கோடைக் கிணறுகள் தோறும்
இன்னுமிருக்கிறார்கள்
நல்ல தங்காளும்
அவளேழு வெள்ளரிப் பிஞ்சுகளும் .

Friday, July 29, 2011

எல்லாம் கிருஷ்ணனுக்கே சமர்ப்பயாமி ...



மரண பரியந்தம் தொடரும்
என நினைத்திருந்த பந்தம் ஒன்று
இடைவழி போயின் உள்நிறைக்கும்
ஏமாற்றம் இன்னதென விவரணை காணாது
புறத்தாடும் கண்ணாமூச்சு ஆட்டம் ;
எதை நான் பரிகசித்தேனோ
அதுவே நானாகி நானே அதுவாகி
எனக்கே எனக்கென்று
தலைவலியும் காய்ச்சலும்
வந்து மெய்ப்பிக்கும் சோதனையின்
கால் தடங்கள்;
எப்போதும் நமக்கென்று
எதுவும் மிஞ்சி இருப்பதில்லை
இருக்கப்போவதுமில்லை !
எப்போது வேண்டுமானாலும்
தூக்கி எறிந்து விடலாம்;
ஆனாலும் இட்டமுடன் தூக்கிச் சுமக்கும்
அகத்தொருமித்த ஜீவாதாரப் பாம்பு
முற்ற முழுதாய் எனைத்தின்னும் முன்பே ...
உள்ளங்கை நீர் குவித்து
உவந்தளிக்கிறேன் தானம்
எல்லாம் கிருஷ்ணனுக்கே
சமர்ப்பயாமி!

Thursday, July 21, 2011

Wednesday, July 20, 2011

யூமா வாசுகியின் ரத்தஉறவும் இல்லத்தரசிகளின் கிச்சன் கேபினெட்டும் .

கிச்சன் கேபினெட் :


யூமா வாசுகியோட ரத்த உறவு புஸ்தகம் தான் விடிஞ்சு எழுந்ததும் கண்ல பட்டுச்சு ,அது ஒரு குறியீடுன்னு எலக்கிய மூளை கூக்குரலிட அதை தட்டி அடக்க முடியாம கொஞ்ச நேரம் மூளை ஸ்தம்பிக்க , so அங்க இருந்து இன்றைய சுளுக்கு வியாதிக்கு மருத்துவம் ஆரம்பிக்கலாம்ன்னு லேப் டாப்பை திறந்தேன் .நான் லேப் டாப்ல எழுத உட்காரும் போதெல்லாம் பழைய ஹாக்கின்ஸ் குக்கர் விளம்பர கணவர் மாதிரி ;

"என் மனைவி கார் ஓட்டினால் எனக்கு பயமில்லை .

என் மனைவி பார்க்கில் வாக்கிங் போனால் எனக்குப் பயமில்லை .

என் மனைவி சமைக்கத் தொடங்கினால் மட்டுமே எனக்குப் பயம் ரேஞ்சுல

என் மனைவி எழுதத் தொடங்கினால் மட்டுமே எனக்குப் பயம்ன்னு "

தேவ் கொஞ்சம் பீதியானார் தான் ;அதையெல்லாம் பார்த்தா எலக்கிய சேவை ஆற்ற முடியுமா ?

எலக்கிய சேவை என்ற இந்த வரிகளை எழுதும் போது இந்த நிமிடம் எனக்கு விதூஷ் ஞாபகம் வந்தது என்பதை கட்டாயம் இங்கே பதிவு செய்கிறேன்.

சரி இனி கிச்சனுக்குள்ள போகலாமா !

Ready

Start ...

1

2

3...

கிச்சனுக்குள்ள போக கஷ்ட்டமா இருந்தா ஹால் சோபால உட்கார்ந்து கொஞ்ச நேரம் என்ன சமைக்கலாம்னு யோசிச்சிக்கலாம் ,ஆனா அதுக்குள்ள இருட்டிடக் கூடாது ஜாக்ரதை .

//meantime வசந்த பவன்,சரவணபவன்,அஞ்சப்பர்,வேலு மிலிட்டரி பொன்னுச்சாமி ஹோட்டல் இருக்க பயமேன்னு மூளைக்குள்ள பல்ப் எரியும் ப்ளீஸ் ஆப் பண்ணிடாதிங்க //

நல்லா எரிய விட்டு பெண்ணியக் கருத்துகளை வளர்த்தெடுக்க ஒரு வாய்ப்பா இந்த நேரத்தை பயன்படுத்திக்கணும் .
//டைம் மேனேஜ்மென்ட்//

கிச்சனுக்குள்ள போகாமலே கிச்சனைப் பற்றிய யோசனைகளின் விஸ்தீரணம் ஒரு நூறு கஜம் இருக்கலாம் ,அப்ப தான் ஒரு ரெண்டு பக்கமாச்சும் "கிச்சன் கேபினெட்"கட்டுரை தேறும் . ரொம்ப முக்யமான பாயின்ட் இது நோட் பண்ணிக்கோங்க .

இனி கட்டுரைக்கு ;

அதாகப் பட்டது ;

இந்தப் பெண்களுக்கு விடிஞ்சு எழுந்தா இருக்கற மகாப்பெரிய தலைவலி மண்டையிடி இன்னைக்கு என்ன சமைக்கலாம்னு தான் ஆரம்பமாகும் ,அதாகப் பட்டது வெறுமே பழைய சோறு தான்னாலும் கூட அப்டியே திங்க முடியாது பாருங்க பிரிஜ் ன்னு ஒன்னை வாங்கி வச்சுட்டு யூஸ் பண்ணாம இருக்க முடியுமா அதுல ராத்திரியே மிச்சம் மீதி எல்லாம் வச்சு அடைச்சுட்டு கார்த்தால எடுக்கறதால ஒரே ஜில்லிப்பு ,அதை சூடு பண்ணனும் ,சூடு பண்ண ஸ்டவ் பத்த வெச்சப்புறம் அதை உடனே அணைக்க மனசு வராம ஏதோ ஒரு அப்பளமோ கத்தரிக்கா வெண்டைக்கா வத்தலோ இல்ல கருவாடோ எதையோ பொரிக்கத் தான் வேணும்,

இதே சன்டே ,சாட்டர்டே ன்னா விசேசமா அசைவம் ஏதானும் சமைச்சே ஆக வேண்டிய கட்டாய மனச்சிக்கல் வேற .சமைக்கலன்னா அது குடும்பத் தலைவிகளுக்கு எவ்ளோ பெரிய மன உளைச்சலைத் தருதுன்னு சில பல இல்லத்தரசிகளிடம் விசாரித்து கள ஆய்வில் கண்டறிந்தோம் ,

அவர்களது ஒப்புதல் வாக்குமூலம் அவர்கள் மொழியில் கீழே வாசியுங்கள் ;

//சன்டே மட்டன் சிக்கன்,ரத்தப் பொரியல் ,மூளைப் பொரியல், ரொம்ப விசேசமான நாட்கள்ன்னா குடல் குழம்பு ,தலைக்கறி, எலும்பு சூப்,நெஞ்செலும்பு ஈரல் குழம்பு இப்டி எதுனா செய்யலையான்னு எஸ்.டி.டி எம்மாத்திரம் இப்பலாம் வாரா வாரம் ஐ.எஸ்.டி கால் போட்டெல்லாம் விசாரணை பண்ணி கொல்றாங்க சொந்தக்காரங்க,விடாம செல் போன் வேற அடிச்சிட்டே இருக்கும் ,எடுக்கவே மாட்டோமே நாங்க ,எங்களுக்குத் தெரியும் எல்லாம் மெனு விசாரனையாத் தான் இருக்கும்னு ,நாங்க சமைச்சு முடிச்சதும் ,நாங்களும் எல்லாரையும் விசாரிக்க ஆரம்பிச்சிடுவோம்,எங்களால வார இறுதியில் மட்டும் பல செல்போன் கம்பெனிகளின் லாபம் விண்ணைத் தாண்டிப் போயிட்டு இருக்கு தெரியுமா ?! , //


"பெண்கள் பத்திரிக்கை உலகத்துல இந்த ஆய்வை இதுவரை யாருமே செய்யலை ,நீங்க ஏன் அப்டி ஒரு ஆர்டிகிள் கூட பண்ண முயற்சிக்க கூடாது ?! "


//எவ்வளவோ பண்ணிட்டோம் இதப் பண்ண மாட்டோமா! சரிங்க பண்ணிடலாங்க //


. //இந்த இடத்துல நம்ம குடுகுடுப்பையார் ஞாபகம் வரதை தவிர்க்கவே முடியலை,அன்னாருக்கு எல்லா நாட்களும் விசேச தினங்கள் தான்..பாவப்பட்ட ஆடு கோழிகள் பேசும் சக்தியைப் பெற்று அவரை மிருகங்களுக்கான தனி கோர்ட்டில் கூண்டில் ஏற்றி கேள்வி கேட்கா விட்டால் தினம் தினம் அவரது மெனு buzz களால் பீதிக்கு உள்ளாகும் buzz உலகம் இனியும் ஜீவித்து இருக்காது //


//Back to the Field work Report //

கேள்வி :நான்வெஜ் ல என்ன வெரைட்டி சமைப்பிங்க வீக் எண்ட்ல ?

பதில் : 1 .வெஜிடேரியன் குடும்பத் தலைவி : சரவண பவன்ல தாங்க கேட்கணும்
2 . நான்வெஜிடேரியன் குடும்பத் தலைவி : அஞ்சப்பர்ல தாங்க கேட்கணும் .

கேள்வி : வீட்ல சமைக்காம எப்டி கிச்சன் கேபினெட் நடத்தறிங்க ? உங்க பேமிலி மெம்பெர்ஸ் ஐ மீன் உங்க கணவர்கள் கேள்வி கேட்க மாட்டாங்களா ?

பதில் : அவங்களுக்கு தெரிஞ்சா தான! ;

கேள்வி :அவங்களுக்கு தெரியாம ஹோட்டல்ல வாங்கி வச்சு serveபண்ணுவீங்களா?

பதில் :

ச்சே ச்சே இல்லைங்க ...குடும்ப விவகாரங்களை பேசிட்டே சாப்டா எங்க சாப்டறோம்னே மறந்துடும், நல்லா டைம் பார்த்து தூங்கி எழுந்த உடனே காலைலேயே வழக்கு விவகாரங்களை ஆரம்பிச்சிடணும் அப்டியே எங்க போறோம் , என்ன சாப்பிடறோம்ன்னு எல்லாம் அவங்க யோசிக்க முன்னால கூட்டிட்டு போய் சாப்டுட்டு பில் பே பண்ண வச்சு மறுபடியும் வீட்டுக்கு வந்துடுவோம் .

//மந்திரிச்சு விட்ட கோழி கதை ஞாபகம் வந்தா நான் பொறுப்பில்லை//

கேள்வி : இப்படித் தான் வெகு காலமா கிச்சன் கேபினெட் நடத்தப் படுதா?

பதில் :

அதைப் பத்தி எல்லாம் சங்க இலக்கியத்துல குறிப்புகள் இருக்கலாம்,இல்லனா யுவான் சுவாங்,பாஹியான் பயணக் குறிப்புகள்ல ஏதாவது சொல்லப் பட்டிருக்கலாம் ,சரியா தெரியலைங்க ஆனா எங்களுக்கு பாட்டிகளும் அம்மாக்களும் கொஞ்சம் கொஞ்சம் சொல்லி தந்தாங்க ,மீதி எல்லாம் அனுபவப்பாடம் தாங்க . கிச்சன் கேபினெட் ஒரு சாகரம் ,அதுல இன்னும் யாரும் முத்து எடுத்தாங்கலான்னு கூகுள்ள தேடிப் பார்க்கணும் .இது சம்மந்தமா உங்களுக்கு நிறைய விடைகள் கிடைக்கலாம் .

கேள்வி : சரிங்க கிச்சன் கேபினெட்ன்னா என்னங்க?

பதில் : சின்னப் புள்ளத்தனமால்லாம் கேள்வி கேட்க கூடாது ,

இப்படித் தாங்க எதை எழுத ஆரம்பிச்சாலும் அது இப்டி வெண்டைக்காய் மாதிரி முடியுது . // நோ கமெண்ட்ஸ்//

ஒரு துறை பற்றி எழுதும் முன்பு அந்தத் துறை பற்றிய ஞானம் கொஞ்சமேனும் அறிந்து கொண்டு பிறகு இந்தக் கட்டுரையை தொடர்வதே உசிதம் என்றெண்ணியதால் ஆறுதலுக்கு ஒரே ஒரு சமையல் குறிப்போடு இந்தக் கட்டுரை முடிகிறது.

ரத்தப் பொரியல் :


தேவையான பொருட்கள் :

ரத்தம் - ஒரு ஆட்டு ரத்தம் என்று கறிக் கடைகளில் கேட்டால் கட்டியாக உறைந்த ரத்தத்தை எடுத்துத் தருவார்கள் வாங்கிக்கொள்ளவும்.
கடலைப் பருப்பு - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 6
எண்ணெய் - 3 டீ ஸ்பூன்
தேங்காய் - 1/4 மூடி துருவியது
உப்பு - தேவையான அளவு

தாளிக்க :
எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
கடுகு உளுந்தம்பருப்பு - 1 டீ ஸ்பூன்
கருவேப்பிலை - 1 ஆர்க்

செய்முறை :

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதித்ததும் ரத்தக் கட்டிகளைப் போட்டு ௧௦ நிமிடம் வேக வைக்கவும் ,நன்றாக வெந்திருக்கிறதா என இடையிடையே கூர்மையான ஃபோர்க்கால் வெந்து கொண்டிருக்கும் ரத்தக் கட்டிகளை குத்தி சரி பார்த்துக் கொள்ள வேண்டும்,இல்லையேல் மேற்புறமாக நன்றாக வந்திருப்பதாக கண்ணுக்குத் தெரிந்தாலும் உள்ளே சரியாக வேகாமல் பச்சையாக இருக்கலாம். நன்றாக வெந்த ரத்தக் கட்டிகளை நீரை வடிகட்டி விட்டு ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும் ,ஆறிய பின் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் ,நறுக்கிய ரத்தக் கட்டிகளை நீர் விட்டு அலசிப் பிழிந்து நீர்ப் பற்று இல்லாமல் சுத்தமாக வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
கேரட்,முள்ளங்கி,வாழைத்தண்டு பொரியல் செய்வதற்கு வேக வைப்பதைப் போல கடலைப் பருப்பை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் .
வாணலியை அடுப்பில் ஏற்றி 3 டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு ,உளுந்தம் பருப்பு ,கருவேப்பிலை,காய்ந்த மிளகாய் தாளித்து அதனோடு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதங்கியதும் முன்பே வேக வைத்து எடுத்த கடலைப் பருப்பை போட்டு பிரட்டிக் கொள்ளவும் இதனோடு பொடிப் பொடியாக நறுக்கிய ரத்தத்தை போட்டு நன்றாகக் கலந்து தேவையான அளவு தூள் உப்பு சேர்த்து சில நிமிடங்கள் எண்ணெயில் வதங்க விட்டு அடுப்பை அணைத்து விட்டு ஒரு கீற்று தேங்காய் துருவல் சேர்த்து நன்றாகக் கலந்து பிறகு இறக்கிப் பரிமாறலாம்.

வேக வைத்த ரத்தம் சாப்பிட மண் போல ருசி இல்லாமல் இருக்கும் ,சுவைக்காக தான் கடலைப் பருப்பு ,தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்வார்கள் .

ரத்தப் பொரியல் சாப்பிடுவதன் பயன் :

வளரும் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை ரத்தப் பொரியல் செய்து தரலாம்,ஸ்நாக்ஸ் போல விரும்பி சாப்பிடுவார்கள்,அசைவம் சாப்பிட விரும்பாத குழந்தைகள் உடல் வலுவற்று இருந்தால் இப்படி ரத்தப் பொரியலில் இருந்து ஆரம்பிக்கலாம் . ரத்தத்தில் ஆக்சிஜன் ,ஹீமோகுளோபின்,ப்ளேட் லெட்டுகள் இருப்பதால் ரத்த சோகை வராமல் தடுக்கும் . நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் .

//வேக வச்ச ரத்தத்துல ஹீமோ குளோபின் செத்துப் போயிடும்லன்னு புத்திசாலித் தனமால்லாம் கேள்வி கேட்கக் கூடாது ,ரத்தப் பொரியல் மூளை வளர்ச்சிக்கு இல்லை..இல்லை...இல்லை இந்த கட்டுரை போலவே . //
இன்றைய கோட்டா ப்லாக் , buzz சேவை முடிஞ்சது .

நன்றி .வணக்கம்

இனி நாளை தொடரும்

Monday, July 18, 2011

Sweet Moments 4 : ( எம்பொண்ணாக்கும் ...)

Sweet Moments 4 : ( எம்பொண்ணாக்கும் ...)

இன்னைக்கு எம் பொண்ணுக்கு செகண்ட் யூனிட் டெஸ்ட் ஆரம்பம் ,முதல் நாள் மேத்ஸ் டெஸ்ட் ,நேத்து நல்லா Revisionபண்ணிட்டா ,டெஸ்ட் எழுத சொல்லி கரெக்சன் பண்ணி முடிச்சதும் எனக்கு திருப்தியா இருந்தது,எல்லாத்தையும் விட காலைல குளிச்சு கிளம்பினதும் வேன் க்கு போறதுக்கு முன்னால அம்மா ,அப்பா இங்க வாங்கன்னு கூப்ட்டா . "டைம் ஆச்சு ஹரிணி வேன் வந்துடும் சீக்ரம் வா "ன்னு கத்திட்டு இருந்தேன் நான்.காலை நேர டென்சன் !

"இரும்மா வரேன் ..அப்பா ப்ளீஸ் சீக்கரம் வந்து அம்மா கிட்ட நில்லுங்களேன்ப்பா"

"என்னடி குட்டி இது இந்நேரம் விளையாடிட்டு இருக்க ,இங்க வா நான் கீழ போறேன் TIME ஆச்சு ."

"இரேன்ம்மா ..."

அவளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும் முகத்தை சுருக்கிக் கொண்டு தேவ் இடம் போய் அவரது கையைப் பிடித்து எழுப்பி அழைத்துக் கொண்டு வந்து என் அருகில் நிற்க வைத்தாள். தேவ் என்னவோ ரிபோர்ட் அனுப்பிக் கொண்டிருந்தார் அவரது ஹெட் ஆபிசுக்கு .அந்த டென்சன் அவருக்கு .

"என்னடா இப்டி பண்ற ஸ்கூல் க்கு கிளம்பற நேரத்துல என்ன விளையாட்டு இது? " - மனமில்லாமல் சொல்லிக் கொண்டே எழுந்து வந்தார் .

ஒருவழியாக நாங்கள் சேர்ந்து வந்து அவள் முன் நின்றதும் ;

ஹரிணியின் முகத்தில் சிரிப்பு குமிழியிட்டது .

எங்க தீபா மிஸ் EXAM DAY அன்னைக்கு பேரன்ட்ஸ் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொன்னாங்க , என்ன Bless பண்ணுங்கம்மா ,Bless பண்ணுங்க டாடி .

ஹேய் ...குட்டி என்னடா இது ! எனக்கு உச்சந்தலையில் ஒரு கூடை ஐஸ் கொட்டியது போல அத்தனை சந்தோசம் அப்பிக் கொண்டது. தேவ் பற்றி சொல்லவே வேண்டாம்.

"ஹே குட்டி இதெல்லாமா உங்க மிஸ் சொல்லித் தராங்க ,நல்ல மிஸ் தாண்டா .... " சிரித்துக் கொண்டே மகளிடம் சொல்லி விட்டு என்னைப் பார்த்த பார்வை சொன்னது ,

"எம்பொண்ணாக்கும்! "

ஐயே ...நல்ல அப்பா நல்ல பொண்ணு ரொம்பத் தான் அலம்பல். :)))

என் ப்ரிய சோபி ( சிநேகிதிக்கு )

சோபி (சோபனா ) யிடம் பேச வேண்டும் என்று தினமும் நினைத்துக் கொள்வேன் ,ஆனால் நிரந்தரமாக அது முடியாமலே போய் விடுமோ என்றிருக்கிறது இப்போதெல்லாம் . மதி கடந்த வாரம் என்னிடம் பேசுகையில் பகிர்ந்து கொண்ட விசயங்களில் மனம் கனத்துப் போனது .

"கார்த்தி ரொம்ப நாள் கழிச்சு போன வாரம் ஒரு வெள்ளிகிழமை சோபி எனக்கு போன் பண்ணி பேசினா "

"சோபியா உனக்குப் பேசினாளா ! என்கிட்டே அவ பேசி வருசக் கணக்காகுதே மதி !

"ம்ம் ...ப்ளீஸ் உன்கிட்ட பேசலன்னு அவள கோச்சுக்காத கார்த்தி "

"கோச்சுக்கலாம் இல்ல ..ஆனா ஏன் மதி ? அவ ஏன் என்கிட்டே பேசாமலே இருக்கா ?"

"சோபி ரொம்பப் பாவம் கார்த்தி "

" ஏன் என்னாச்சு ?"

"அவ போன் எடுத்ததும் என்கிட்டே என்ன சொன்னா தெரியுமா? "

"...................."

"எப்டி இருக்க சோபின்னு மட்டும் என்கிட்டே கேட்டுடாத மதி ...நான் தாங்க மாட்டேன் இந்த வார்த்தைய -இதான் சொன்னா போன் எடுத்து நான் ஹலோ சொன்னதும்"

"எப்டி இருக்கன்னு கேட்கக் கூடாதா !!! ஏன் சோபிக்கு அப்டி என்ன ஆச்சு ?

"அவ ஹஸ்பண்ட்க்கு ப்ளட் கேன்சராம் கார்த்தி ,இங்க தான் அடையார் கேன்சர் இன்ஸ்ட்யூட்ல ட்ரீட்மென்ட் எடுக்கறாங்களாம். "

"என்ன சொல்ற மதி , ஷாக்கிங்கா இருக்கு எனக்கு . "

"ஆமாம் கார்த்தி ...கல்யாணம் ஆகி முதல் குழந்தை டெலிவரி ஆகா ரெண்டுமாசம் முன்னவே தெரிஞ்சிடுச்சாம் கேன்சர் இருக்கறது ,அப்போல இருந்து அவ நாம் பிரெண்ட்ஸ் யார்கிட்டயும் பேசறதே இல்லையாம்... பினான்சியலா வசதி இருந்தும் கூட மனசளவுல அவள ரொம்பக் கஷ்டப்படுத்தறாங்க போல கார்த்தி அவ ஹஸ்பண்ட் வீட்ல "

"கஷ்டப்படுத்தறாங்களா சோபியவா ? சோபி ன்னா நம்ம காலேஜ் ,ஜூனியர் ஸ்டூடண்ட்ஸ் லெக்சரர்ஸ் ,பிரெண்ட்ஸ் வீடுகள் இப்டி எல்லாருக்கும் பிடிக்குமே மதி ,அவ எவ்ளோ அருமையான பொண்ணு ,அவள ஏன் கஷ்டப்படுத்தனும் ! அவ பொண்ணுக்கு எத்தனை வயசாகறது இப்போ ,குழந்தை எங்க இருக்காளாம்?"

"அது ஒரு பெரிய கொடுமை கார்த்தி ,குழந்தை பிறந்த நேரம் தான் அது அப்பாக்கு இப்டி ஆயிடுச்சுன்னு கரிச்சு கொட்டினதுல குழந்தைய சோபி அம்மா வீட்ல கேரளால வளர்க்கறாங்கலாம். அது அவங்க அப்பா முகத்தையே பார்க்க கூடாதாம் ,ஜாதகம் அப்டி இருக்குன்னு நம்பறாங்க அவ ஹஸ்பண்ட் வீட்ல "

"ஏன் இப்டி ஆயிடுச்சு சோபிக்கு ?"

"எனக்கு ஒரு வாரமா தூக்கமே வரலை கார்த்தி ,நம்ம சோபிக்கு இப்டி ஆயிருக்க கூடாதுன்னு தினம் நான் இவர்கிட்ட சொல்லிட்டே இருக்கேன்,வேணும்னா ஒரு தடவ சென்னைக்கு போய் அவளை பார்த்துட்டு வேணா வாயேன் இங்கருந்தே சும்மா புலம்பிட்டே இருந்தா என்ன புண்யம்கறார் எங்க பாவா "

"ம்ம்...அவர் சொல்றதும் சரி தான் ,ஆனா நீ இரு ,நான் சென்னைல தான இருக்கேன் அவ நம்பர் தா ,நான் போய் பார்க்கறேன் அவள ,அப்றமா வீக் எண்ட்ல நீ வா"

"நோட் பண்ணிக்கோ கார்த்தி **********"

"சரி மதி நான் அவகிட்ட பேசிட்டு போய் பார்க்கறேன் ,அப்றமா உனக்கு சொல்றேன்"

"சரி ...குழந்தைங்க ஸ்கூல் வேன் வர டைம் நான் அப்றமா பேசறேன் கார்த்தி "

"எனக்கும் தான் ....சரி மதி "

நாங்கள் இருவரும் இப்படிப் பேசிக் கொண்டு மூன்று மாதங்கள் ஆகின்றன .

அதற்குப் பிறகும் நான்கைந்து முறை சோபி விசயமாகப் பேசிக் கொண்டோம் தான்.

ஆனால் இன்று வரை சோபியை நாங்கள் போய் பார்த்திருக்க வாய்க்கவே இல்லை ,அவளோ அவளது கணவரோ அடையாறு கேன்சர் இன்ஸ்ட்யூட்டில் இல்லை. அவளது ஊருக்கு தொலை பேசலாம் என்றால் பழைய எண்கள் எதுவும் இப்போது வேலைக்காகவில்லை.எல்லாம் மாறி இருந்தன. அவளை எப்படித் தொடர்பு கொள்வதென்று புரியவில்லை.வீட்டில் கம்பியூட்டர் இருக்குமா என்பதை விட அப்படியே இருந்தாலும் அவளுக்கு அதைப் பயன்படுத்தும் உரிமைகளும் சுதந்திரமும் இருக்குமாவென்பது கேள்விக்குறி.

சோபி ,நான்,மதி,சுபா,பரிமளா , நான்கு பெரும் காலேஜ் நாட்களில் நாங்க நாலு பேர் கணக்காக சுற்றிக் கொண்டிருப்போம் .ஒரே டிபன் பாக்ஸில் நான்கு பேருக்கும் லஞ்ச்,கேம்ப் பில் கலந்து கொண்டாலும் டூர் போனாலும் ஏன் சில சமயம் லீவ் எடுப்பதென்றாலும் கூட சொல்லி வைத்து கூட்டாகச் செய்வது . செமஸ்டர் விடுமுறைகளில் ஒருவர் மாற்றி ஒருவர் வீடுகளில் மொத்தமாய் டேரா போட்டு மொத்தக் கல்லூரிக் கதைகளையும் விடாது பேசி பிழிந்து காய வைப்பது இப்படி இருந்தவர்கள் தான் .இப்போது திசைக்கொருவராய் இருந்தாலும் மற்றவர்களுடன் எப்போதாவது அலைபேசி விட முடிகிறது .


என் பிரியா சோபி உன்னுடன் கல்லூரி நாட்களின் பின் எனக்கும் உனக்கும் குழந்தை பிறக்கும் முன் எண்ணி இரண்டே முறை தான் பேச முடிந்தது.இதற்கு நானும் காரணம் அல்ல ,நீயும் காரணம் அல்ல .எனக்கது புரிந்தே இருக்கிறது.நீயாக தொடர்பு கொண்டால் தவிர உன்னைப் பற்றி அறிந்து கொள்ள முடியாத இந்த வாழ்வியல் சூழலை என்னவென்பது?


கனத்துப் பெயர்கின்றன நிமிடங்கள் .

Monday, July 4, 2011

நகுலன் - நேர்காணல் (பௌத்த அய்யனார்)



சொல்லில் இருந்து மௌனத்துக்கு ' எனும் பௌத்த அய்யனாரின் நேர்காணல்கள் தொகுப்பு ஒன்று வாசிக்கக் கிடைத்தது ,தமிழின் சிறந்த படைப்பாளிகளுடனான அவரது நேர்காணல்கள் இந்த தொகுப்பில் பதியப் பட்டுள்ளன ,புத்தகத்தை புரட்டியதில் நகுலனின் நேர்காணல் தட்டுப் பட என்னைக் கவர்ந்த கேள்வி பதில்களை மட்டும் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

ஏமாற்றம் ,ஏமாற்றம்,ஏமாற்றம் தான் மிச்சம் - நகுலன் .


திருவனந்தபுரம் Marivanious ' கல்லூரியில் முப்பது ஆண்டுகள் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்று ,திருவனந்தபுரத்தில் வசிக்கும் டி.கே.துரைசாமியின் இலக்கியப் பெயர் நகுலன் .


உங்களோட கதை ,கவிதை ,நாவல் எதை எடுத்தாலும் "சுசிலா" என்ற பெயர் தொடர்ந்து வருகிறதே ?

இதப்பத்தி அசோகமித்திரன் ரொம்பப் பிரமாதமா எழுதிஇருக்கார் ,'சுசிலாங்கறது ' ஒரு அய்க்கண்,ஐக்கண்டா உங்களுக்குத் தெரியுமோ ? ஐக்கண்ணு சொன்னா நாம சரஸ்வதி தேவியை தெய்வமா பூஜிக்கறோம்,அந்த தெய்வாம்சம் தவிர்த்து,அவளோட Body Relation வச்சுண்டா நாம் தொலைஞ்சோம்.ஒவ்வொரு பொண்ணும் ஒரு தெய்வாம்சம்,அதா நான் மறுக்கல,மதிக்கறேன். 'சுசிலா இருக்கான்னு சொன்னா ,அந்த அம்மா மனசு எவ்வளவு வருத்தப் படும் ,இது தெய்வீகமான உறவாக்கும்,அதனால 'சுசிலா இருக்கா இல்ல' 'சுசிலாவின் சிறப்பு சுசிலாவிடம் இல்லை ' இப்படி ஞானக்கூத்தன் எழுதினர்.

எழுத்து பத்திரிகையில் எப்படி எழுத ஆரம்பிச்சிங்க ?

அவாளுக்கு எழுத ஆள் கிடைக்கலை,எழுத்துக்கு நானாத்தான் எழுத ஆரம்பிச்சேன் ,வேற ஒருத்தரும் என்னோட எழுத்த போடா மாட்டா ,அப்போ ஆனந்த விகடனும் போடா மாட்டா .

ஆனந்த விகடனும் போடறதா இருந்தா அனுப்பி இருப்பிங்க இல்ல ?

ஆமா ,ஒன்னும் பிரச்சினை இல்லை,எழுத்துக்கு கதை அனுப்பினேன் ,போட்டா .அதனால தொடர்ந்து எழுதினேன் ,அப்புறம் கா.நா.சு க்கு என்கிட்டே பெரிய மதிப்பு,அவரது 'இலக்கிய வட்டம்' பத்திர்கையில எது எழுதினாலும் போடுவா .'செல்லப்பா'க்கு தான் பெரிய குரு ,தான் சொன்ன படி தான் நடக்கனும்னுட்டு நெனப்பார்.க.நா.சு கிட்ட இது கிடையாது ,அதுக்கப்புறம் 'நடையில் ' கொஞ்சம் எழுதி இருக்கேன் .

அந்தக் காலத்துல உங்களோட எழுத ஆரம்பிச்சவங்க யார் யார்?

ராஜகோபாலன் ,முத்துச்சாமி சிறுகதை எழுதி இருக்கார் ,அப்புறம் தெரு நாடகம் எழுதினர் ,என்ன காரணம் தெரியுமோ ? Board Foundation -லேர்ந்து அனுமத் கொடுத்தா ,அதிலேர்ந்து அவர் திசை மாறினார் .'நீர்மை'ன்னு நல்ல சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கு ,அதிலேர்ந்து விட்டுட்டார் ,பசுவய்யா எழுதினர் .பசுவய்யா திறமைசாலி.

பிரமிள் ?

Gifted Fellow .அவர் நல்ல திறமையான எழுத்தாளர்,என்னைப் பத்தி சிறப்பா எழுதி இருக்கார்,என்னைப் பத்தி மகா மோசமாகவும் எழுதி இருக்கார் ,நல்ல கவிஞர் , 'கண்ணாடியுள்ளிருந்து ' 'கைப்பிடியளவு கடல்' - இதெல்லான் நேக்குப் பிடிச்சது ,அவருக்கு ரத்த அழுத்தம் கூடி பக்கவாதம் வந்து செத்துட்டார் ,என்ன செய்யிறது.

உங்களை பாதிச்ச தமிழ் எழுத்தாளர்கள் ?

புதுமைப் பித்தன்,மௌனி,லா.ச.ரா,அழகிரி சாமி ,அப்புறம் ஒரு கட்டம் வரை ஜெய காந்தன் .

முதல்ல உங்கள எழுதத் தூண்டியது யார்?

க.நா.சு

ஜெயமோகன் ,தமிழில் நாவல் என்ற வடிவத்தை சரியாகப் பயன்படுத்தவில்லை என்கிறாரே ?

அவர்,தமிழின் முதல் நாவல் 'பிரதாப முதலியார் சரித்திரம்' 'பத்மாவதி சரித்திரம்','கமலாம்பாள் சரித்த்திரம் ' இதை எல்லாம் சரியான முறையில் படித்தாரா? மகாபாரதத்தில் கதை,உப கதை,மிருகங்கள் எல்லாம் வருகின்றன,மகாபாரதத்தை முழுசாகப் படிச்சிருக்காரா? தமிழில் நாவலுக்கென்று தனி உருவம் இருக்கிறதுன்னு அவருக்குத் தெரியுமா? ஆங்கில இலக்கியத்தை முறையாகப் படித்திருக்கிறாரா? எதையும் ஓங்கி அடித்துச் சொல்வது காலப் போக்கில் எடுபடாது .

உங்களுக்குப் பிடித்த இந்திய எழுத்தாளர் ?

மலையாளம் நிறைய வாசிச்சிருக்கேன் ,பஷீர் தான் எனக்குப் பிடிச்ச எழுத்தாளர் ,அவர மாதிரி தமிழ்ல எழுத யாரும் இல்ல,கன்னடத்துல மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் ,வங்காளத்தில் "ஆரோக்கிய நிகேதனம் " மிகவும் விருப்பமான நாவல்.



Friday, July 1, 2011

டூ விட்டு டூ விட்டு பழம் விட்ட வாழ்க்கை ...










//The childhood shows the manAs morning shows the day.~John Milton, Paradise Regained//






// If you carry your childhood with you, you never become older. ~Tom Stoppard//

குழந்தையாகவே இருந்திருக்கலாம்
அம்மாவின் முந்தானையை விடாது பற்றிக் கொண்டு
அப்பாவின் தோள் சவாரி எனக்கு தான் முதல் என்று
தம்பி தங்கைகளிடம் போட்டி போட்டுக் கொண்டு
நானும் வருவேன் என்று முந்திரிகொட்டையாய் வயலுக்கு ஓடி
பாட்டியோடு தூக்குப் போணி மூடியில்
பிடிப் பிடியாய் பப்பு புவ்வா சாப்பிட்டுக் கொண்டு
சுண்டு விரல் பிடித்து
மிளகாய் களத்துக்கும் வரப்பு மேட்டுக்குமாய்
தாத்தாவோடு தோட்டம் அளந்து கொண்டு
பெரிய கேரியர் வைத்த சைக்கிளில்
மாமாக்களோடு சர்கஸ் பார்க்கப் போய்க் கொண்டு
சித்தியோடும் அத்தைகளோடும் வாயாடிக் கொண்டு
தாயமும் பல்லாங்குழியும் கலைத்துக் போட்டு
கூட இரண்டு கொட்டுகளை உபரியாய் வாங்கி
திண்ணையில் உட்கார்ந்து அழுது கொண்டு
அழுத கண்ணீர் காயும் முன்னே
ஊர்ப் பிள்ளைகளோடு தெருமுக்கு காலி இடத்தில்
பாண்டி ஆடிக் கொண்டு பட்டம் விட்டுக் கொண்டு
கிட்டிப் புள் கோலால் தெருவளந்து ஊர்அளந்து
உத்தமக் கண்ணன் கோயில் மார்கழி பிரசாத கியூக்களில்
ராஜியோடும் பாமாவோடும் டூ விட்டுக் கொண்டு
டூ விட்டு டூ விட்டு பழம் விட்ட வாழ்க்கை
ருசியாகத்தான் இருந்தது ... இருக்கிறது
இன்னும் நாக்கின் அடியில் இனிக்கும் தேனாய்
மனம் எங்கும் அந்த நாட்கள் .
நூலறுந்த பட்டங்களாய்
வாலறுந்த தும்பிகளாய் ...






//Old age lives minutes slowly, hours quickly; childhood chews hours and swallows minutes. ~Malcolm de Chazal //









ஆண் மனம் (சிறுகதை)

1. ஆண் மனம் :


சிந்தப்புளி பெரியத்தை வந்திருந்தாள்,பாரைப்பட்டியிலிருந்து சின்னத்தை வந்திருந்தாள், ஒத்தயலில் இருந்து விஜியக்கா கூட வந்திருக்கிறாள் .அம்மா கூடத்தில் புளி தட்டிக்கொண்டே அவர்களோடு பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தாள் ,அப்பா இன்னும் மல்லித் தோட்டத்திலிருந்து வரவில்லை,வரும் நேரம் தான், பசி தாங்க மாட்டார் ,பத்து மணியிருக்கும் சூரியன் உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்தான் ,பஸ் ஸ்டாப் கடைகளில் வடை ..கிடை என்று என்னத்தையாவது அரித்துப் போட்டுக் கொண்டிருப்பார் இந்நேரம்.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் காலையில் நீராகாரமும் துவையலும் தான் பெரும்பாலும் ,எங்களுக்கு சோறும் குழம்பும் இருக்கும் தோட்டத்துக் காய்கறிகளில் ஏதோ ஒன்றை அவித்தோ பொரித்தோ வட்டிலில் போடுவாள் பாட்டி , கண் மங்கிப் போனதில் இருந்து புளிக்குழம்பு வைக்கையில் எல்லாம் ஒரு புழுவாவது செத்து மிதக்கும் ரசத்திலோ ,குழம்பிலோ!


பாட்டிக்கு கண் மங்கிப் போச்சு ,நான் நேரம் முச்சூடும் தோட்டமே கதின்னு கெடக்கேன் ,உங்கப்பா தோட்டம் விட்டா பஞ்சாயத்து போர்ட் திடலே கதின்னு கெடக்காரு ,கட்சிக்கார கூட்டாளிக கூட சேர்ந்து அரட்டை அடிக்கவே நேரங்காண மாட்டேங்குது அவருக்கு. இவன் தினோமும் என்னப் போட்டு குடையுறான்.அக்கா தங்கச்சிக இருந்தென்ன அத்தை மாமாக்க இருந்தென்ன காலாகாலத்துல எனக்கொரு பொண்ணப் பார்த்து கட்டி வைக்க யாருக்கும் மனசாகலன்னு ! ஆச்சு வைகாசி பொறந்தா முப்பது முடியப் போகுது அவனுக்கும்.


நம்ம தோட்டத்துல மடை அடிச்சுகிட்டிருந்த பூச்சிப்பய மகன் இவனுக்கு பத்து வயசு இருக்கையில தான் சாத்தூர் கவருமெண்டு ஆஸ்பத்திரில பொறந்தான்,உங்கப்பா இவன தோள்ள தூக்கிட்டு வர நாங்க போயி பார்த்துட்டு சட்டைத்துணி எடுத்துக் கொடுத்திட்டு வந்தோம் , அந்தப் பயலுக்கு கல்யாணம்னு நேத்து வந்து பத்திரிக்க வச்சிட்டுப் போறான் ;
அம்மா சொல்லச் சொல்ல எனக்கு மனசில் ஓரிடத்தில் லேசாக விட்டிருந்த கீறல் கோணல் மாணலாக நீண்டு புயல் நேரத்து மின்னல் கொடி போல விரிந்து கொண்டிருந்தது,அந்தச் சத்தம் என் காதுகளுக்கு மட்டும் தான் இரைச்சல் ,அவர்களுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.


பெரியத்தை இரைச்சலை பேரிரைச்சல் ஆக்கும் முனைப்பில் இருந்தாள் ,


"அட ஏன் அண்ணி பூச்சிப்பய மகனுக்குப் போயிட்ட நீ ! என் நாத்தனார் பையன் ரெண்டு பேத்துக்கும் கல்யாணமாகி இப்ப மூத்தவனுக்கு ரெட்டப் புள்ளைங்க ,முந்தாநேத்து நானும் உங்க தம்பியும் மெட்ராசுக்கு போயிட்டு தான வந்தம், புள்ள செக்கச் செவேல்னு ரோஜாப் பூவாட்டம் அம்புட்டு அழகு .


என்மகள கட்டிக்கடான்னு உங்க தம்பி சண்டை பிடிச்சார் ;அவென்..."போங்க மாமா வளர்த்த புள்ளையப் போயி யாராச்சும் கட்டுவாங்களான்னுட்டு இஞ்சினியரிங் படிச்சு வேலைக்குப் போற பொண்ணாப் பார்த்து கட்டிக்கிட்டான் ,கூட வேலை பார்க்கரவலாம் .லவ் மேரேஜாம் அண்ணி...பொண்ணு கிடைக்காத குத்தத்துக்கு அதுவுஞ் சர்தேன்னுட்டு என் நாத்தனார் கம்முன்னு இருந்துகிட்டா ."


அக்கா சொல்றது சரிதேன் ,பொண்ணுகளுக்கு ரொம்ப டிமாண்ட் தானாம் அண்ணி ,சின்னத்தை தன் பங்குக்கு எதையாவது சொல்ல வேண்டுமே என்பதாக ஒரு வார்த்தையை வெளியே விட்டாள்.


அக்கா இன்னும் ஒன்றுமே சொல்லாமல் தான் உட்கார்ந்திருந்தாள் ,
அவளுக்கு தீபாவளிச் சீராக பிறந்த வீட்டிலிருந்து இந்த வருஷம் அரக்குப் பட்டுச் சேலை எடுத்து நீட்டவில்லை என்ற காந்தள் இன்னுமிருந்திருக்கும் போல ,இந்த வருஷம் மல்லி நல்ல விளைச்சல் ,பட்டுச் சேலை எடுத்துக் கொடுத்தால் என்ன நட்டம் என்று அவள் நினைத்திருப்பாள்,


அவளுக்கென்ன தெரியும் வந்த வருமானத்தில் முக்காலும் கடனை பைசல் செய்து கழிந்தது என்று, மிச்சம் மீதி வைத்து தான் இந்த வருஷம் மேலத் தோட்டத்தில் நித்யகல்யாணி போட்டிருக்கிறார் அப்பா.

வருஷம் திரும்பறதுகுள்ள உம்மக சடங்காகி நிப்பா .அப்பப் பார்த்துக்கிடலாம் பிள்ள பட்டுச் சேலையெல்லாம் ,அதுக்குச் செய்ய பணங்காசு பார்க்க வேண்டாமா ?ஒனக்கே எத்தன நாலு ஒடைக்கிறதாம்? அம்மா அவள் மூஞ்சியைத் தூக்கின ஏதோ ஒரு நேரத்தில் ஆற்றாமையில் இப்படிச் சொல்லி விட்டாள் ...என்ன இருந்தாலும் கட்டிக் கொடுத்து அடுத்த வீட்டுக்குப் போன பெண்ணுக்கு ஆயிரம் தான் அம்மா தானே சொன்னாள் என்றாலும் மனசு தாங்குமா ?


என்னவோ ஒப்புக்கு தான் வந்து உட்கார்ந்திருக்கிறேன் இங்கே ... என்பதாகத் தான் இருந்தது கூடத்தில் அவளது இருப்பு.


பெரியத்தைக்கு மகள்கள் இருக்கிறார்கள் ,என் வயதுக்கு சின்னப் பெண்கள் தான் ,ஆனாலும் மாமன் மகனைக்கட்டினால் என்னவாம்? ஆனால் கட்டிக் கொள்ள மாட்டார்கள் படிக்க வேண்டும் என்று சால்ஜாப்பு சொல்லிக்கொள்கிறார்கள் பெற்றதுகள் முதற்கொண்டு நண்டு சுண்டான் வரை. அம்மா கொஞ்ச நாள் கேட்டுப் பார்த்து விட்டு அப்புறம் இது கதைக்காகாது என்று விட்டு விட்டாள் .


சின்னத்தைக்கு ரெண்டும் மகன்கள் தான் ,மூத்தவன் பிளஸ் டூ முடித்து விட்டு படிப்பில் இஷ்டமில்லாமல் அப்பாவின் அரிசி மண்டியில் உட்கார்ந்து விட்டான் ,சின்னவன் பத்தாவது படிக்கிறான். படிப்பு வராத பயலுகள் தான் இவனுகள் பெண்ணாய்ப் பிறந்து தொலைத்திருக்க கூடாதா என்று வர வர புத்தி பேதலித்து தொலைகிறது எனக்கு.


பெரியக்கா மகளை கட்ட எனக்கு இன்னும் இருபது வயசு குறைய வேண்டும் . ஓரோர் சமயம் அம்மாவின் மீதும் அப்பாவின் மீதும் ஆத்திரம் பற்றிக் கொண்டு வரும் .ஒன்று அக்காவுக்கு சீக்கிரமே கல்யாணம் செய்து வைத்திருக்க வேண்டும் ,இல்லாவிட்டால் என்னையாவது லேட்டாகப் பெத்திருக்க வேண்டும் .இப்படி ரெண்டும் கெட்டான் நிலையில் அக்கா மகள் என்று உரிமையாய் பெண் கேட்டு சட்டமாய் கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் வயது கிடந்தது சீரழிக்கிறதே.


சொந்தத்தில் தான் பெண் கிட்டவில்லை.ஒழிகிறது என்று தெற்குத் தெரு வார வட்டிக்காரன் மகள் மோனியை ரூட் விட்டால் அவள் 'சிரித்துச் சிரித்து சிறையிலிட்டது 'என்னை அல்ல பிரசிடென்ட் மகன் கண்ணனை .அந்த வயிற்று எரிச்சலை ஏன் கேட்கிறீர்கள் ? மூணு வருசமஅய்யா அவள் காலேஜுக்குப் போகையில் எல்லாம் பஸ் ஸ்டாண்டே கதி என்று கிடையாய் கிடந்திருக்கிறேன் .என்னைத் தான் பார்த்துச் சிரிக்கிறாள் என்று எப்படித் தான் நம்பிக் கொண்டிருந்தேனோ!


'அவள் பறந்து போனாளே! ' என்றோ 'எங்கிருந்தாலும் வாழ்க 'என்றோ மன்னித்து சகோதரியாய் ஏற்க முடியவில்லை ,காதலித்த பெண்களுக்கு கல்யாணமாகி விட்டால் அவர்கள் சகோதரிகள் என்று போதிக்கும் தமிழ் படங்களை நான் வெறுக்கிறேன். கனவு காண தமிழ் பட கதாநாயகிகள் யாரும் கிடைக்காவிட்டால் மோனி இப்போதும் என் காதல் தேவதை தான் .அவளுக்கு கல்யாணமானது என் குற்றமா ?

"உன் குற்றமா ...என் குற்றமா ...யாரை நான் குற்றம் சொல்ல?"
இவள்களை விடுங்கள் ஒரு வருஷம் முன்னால் பெரியக்கா கோவில்பட்டியில் வீடு எடுத்துக் கொண்டிருந்தாள் என்று என்னை அங்கே காவல் வைத்தாள்,மாமா சிவகாசியில் பிரிண்டிங் பிரஸ் வைத்திருக்கிறார் ,அவரால் அங்கிருந்து அசையக் கூட முடியாது ,அப்பா தோட்டத்துப் புலி, இவர்கள் எல்லோருக்கும் வேலை கெட்டு விடக் கூடாது என்று வெட்டிப் பயலே என்று சொல்லாமல் சொல்லி என்னை அங்கே மேற்பார்வை பார்க்கப் போட்டார்கள்.

முதலில் வேப்பங்காய் ஜூஸ் குடித்த கதையாகத் தான் வண்டி வண்டியாக அக்கா மாமாவைத் திட்டிக் கொண்டு அங்கே போய் வந்து கொண்டிருந்தேன் ஒரு நாள் விட்டு ஒருநாள். அடித்தது லாட்டரி பிரைஸ் கதையாக புறநகர் பகுதியான அங்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக எழும்பிய புது வீடுகள் ஒன்றில் புவனா வீட்டுக்காரர்கள் குடி வந்தார்கள் .


ஒரே ஜாதி என்ற சலுகையில் குடிக்கத் தண்ணீர் கேட்டும் வீட்டுக்கு phone போடவும் அங்கே போய் வந்ததில்,புவனாவை ரொம்பப் பிடித்துப் போனது .அவளுக்கும் என்னைப் பிடித்திருந்தது ,இல்லாமலா என்னோடு திருச்செந்தூர்,குற்றாலம் என்றெல்லாம் டூர் வந்திருப்பாள். ,அவளுக்கு என்னை கட்டிக் கொள்ள இஷ்டம் தான். அத்தை மகள்கள் அக்கா மகள் விசயத்தில் எல்லாம் விதி தான் சதி செய்தது என்றால் இப்போது அப்பா குறுக்கே விழுந்து கெடுத்தார்.


" அஞ்சு பவுன் கூட போடா மாட்டாங்களாம்டா.அவ அப்பன் கோவில்பட்டி முழுக்க எங்க சீட்டு கச்சேரி நடந்தாலும் அங்க இருப்பானாம் ,அம்மாக்காரி பலகாரம் செஞ்சு தின்னே சொத்த அழிச்சவலாம் ,இப்பிடியாப் பட்ட இடத்துல பொண்ணு கட்டி உன்ன சீரழிக்கச் சொல்றியா ? நான் வேற பொண்ணு பார்க்கறேன் ,இவள விட்ரு "என்று ஒரே போடாகப் போட்டார்.


புவனா அதற்கப்புறமும் கூட ஒருமுறை என்னைப் பார்க்கையில் "என்னை எங்கயாவது கூட்டிட்டுப் போய் கோயில்ல வச்சு தாலி கட்டுங்க ,நீங்க இல்லனா நான் மருந்தக் குடிப்பேன் என்று கெஞ்சியவள் தான் இப்போது சாத்தூர் வெட்டினரி டாக்டர் ஒருவனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு வருஷம் திரும்பும் முன் பிரசவ லேகியம் தின்று கொண்டிருக்கிறாளாம் .


இதை எனக்குச் சொன்ன வேலுத்தேவர் மகன் போண்டா மருதுவை செவிட்டில் அறைந்து விட்டு தோட்டத்து மோட்டார் ரூமில் உட்கார்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதேன் நான் .


அப்பா கூட படித்தவளாம் ராஜ திலகம் டீச்சர். அவளுக்கு மூணும் பெண்கள் ஒவ்வொருத்திக்கும் 25 சவரன் போடுவேன் என்று இரண்டு மகள்களைக் கரை ஏற்றி முடித்து விட்டாளாம்,கடைக்குட்டி செல்வராணி தான் பாக்கி.அவளை எனக்கு கேட்கலாம் என்று அம்மா ஆசை காட்ட அப்பா பஸ் ஏறி ராஜபாளையம் போய் வந்தார்.


ஐந்தாறு முறை பஸ் காசு தான் விரயமானது ,அந்தப் பெண்ணுக்கு அக்கா மாப்பிள்ளைகள் போல சிங்கப்பூர்,மலேசியாவில் பெட்டி தூக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளைகள் தான் வேணுமாம் ,விவசாயம் பார்க்கும் என்னையெல்லாம் தலை தூக்கியே பார்க்கப் போவதில்லை என்று விட்டாளாம் அப்பா முகம் தொங்கிப் போக குரல் இறக்கிச் சொன்னார்.


சத்தியமாய் நான் அந்நேரம் புவனாவைப் பற்றி எல்லாம் அப்பாவிடம் ஒரு வார்த்தையும் கேட்கவில்லை.

ஆனால் அப்பா என்ன நினைத்தாரோ அன்றிலிருந்து என்னை அமட்டுவதே இல்லை .


உத்தியோகம் புருஷ லட்சணம் என்று அன்றைக்கு தான் கண்டுபிடித்தவரைப் போல விளைச்சல் வற்றிப் போன கீழத் தோட்டத்தை விற்று விட்டு இந்தாடா எதுனா தொழில் ஆரம்பி என்று சித்துராஜபுரத்தில் கேபிள் டி.வி இழுக்கும் தொழில் செய்ய முதல் தந்து அனுப்பினார் என்னை.


அப்புறமும் ரெண்டு வருஷம் கழிந்து தான் எனக்கு தனலட்சுமி கிடைத்தாள்.


என் தொழிலில் வேர் பிடிக்க வேண்டுமானால் உள்ளூரில் ஏற்கனவே கேபிள் டி.வி தொழிலில் இருந்த ரங்கனை முடக்க வேண்டி இருந்தது ,அவனை உறவாடித் தான் முடக்குவது என்றானது விதி. அவன் என்னை மடக்கிப் போட அவனது மச்சினியை எனக்குக் கல்யாணம் செய்து வைத்தான்.

இப்போது ரெண்டு பேரும் சேர்ந்து கொண்டு சிவகாசியைச் சுற்றி இருக்கும் தாயில்பட்டி,மடத்துப்பட்டி,சுப்ரமணியபுரம்,சசிநகர்,ராமசாமி நகர் வரைக்கும் கூட எங்கள் கொடியைப் பறக்க விட்டு விட்டோம்.

எப்படியோ தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யனாய் தனத்தைக் கட்டிய பின் முதல் பிரசவத்துக்கு ரங்கலட்சுமி ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தேன் . பிரசவ வார்டில் தனம் ,வராண்டாவில் நான் நின்றேன் ...அப்போது தான் புவனா தன் ஏழு வயது மகனை அழைத்துக் கொண்டு வராண்டா திருப்பத்தில் வரும் போதே என்னைப் பார்த்து விட்டால் போலும் .

என் மனதில் சாரல் அடித்தது .


அவள் முகத்தில் காணாததைக் கண்ட சந்தோசம் .
இத்தனூண்டு நாணத்தோடு கிட்ட வந்தவள் மெதுவாய்க் கேட்டாள்

"எப்டி இருக்கீங்க ராதா? "


"நல்லா இருக்கேன் புவனி ,உம்பையனா ? ஸ்கூல் போறானா? "
லேசாக கலங்கத் தொடங்கிய கண்களை இமைகளை அடித்து நீர் விலக்கம் செய்து அவளை சம்பிரதாயமாய் விசாரித்தேன்.


"ம்ம்...ரெண்டாங் கிளாஸ் படிக்கிறான்.


"பொம்பளப் புள்ளயாமே ... வெராண்டாவுல பார்த்தேன் அக்கா சொன்னாங்க ,மகாலட்சுமி பொறந்திருக்கா. "

புவனா பிரசவ ஆஸ்பத்திரியின் பழக்க தோசமாய் சில வார்த்தைகள் உதிர்த்தாள்.

" ம்ம்..."

எனக்கும் கல்யாணமாகி குழந்தையும் பிறந்திருக்கிறது அதை புவனி வாயால் கேட்டதும் ஒரு பெரிய ஆயாசப் பெருமூச்சு கிளம்பியது எனக்குள் நிம்மதியாய்.

பரம நிம்மதி .

அப்படியே வெராண்டாவில் போட்டிருந்த சிவப்பு வினைல் சேரில் சாய்ந்து கொண்டு தூக்கம் போல கண்களை மூடிக் கொண்டேன் .
புவனி போய் வெகு நேரமான பின் ரங்கனின் அலைபேசி அழைப்பில் தான் துள்ளிக் கொண்டு விழித்தேன் .

"சகள எங்க இருக்க நம்ம பயக எல்லாம் பிரியாணி ட்ரீட் கேட்க்ரானுங்க பாப்பா பொறந்ததுக்கு ,சீக்ராம் வாய்யா பெல்லு ஓட்டலுக்கு. "


"வரேன்ய்யா வரேன் "


என்று சிரித்துக் கொண்டே கிளம்பினேன் நான்.

Friday, June 10, 2011

பஷீர்,பெருமாள் முருகன்.ஸ்ட்ராபெர்ரி : (சில புத்தகங்கள்)

வாசிப்பின் ஊடே சில புத்தகங்கள் (நிழல் முற்றம் ,மதில்கள்,ஸ்ட்ராபெர்ரி)

பெருமாள் முருகனின் நிழல் முற்றம் :

வாழ்வின் எல்லாக் கசடுகளையும் அள்ளிப் போட்டுக் கொண்ட ஒரு தியேட்டருக்குள் ஒடுங்கி உட்கார வைக்கப் பட்டு உலக நடப்பின் ஒவ்வொரு கோணல் பக்கத்தையும் அந்த இற்றுப் போன தியேட்டரின் சோடாக் கம்பெனி தண்ணீர் தொட்டிக்குள்ளும் ,டிக்கெட் கிழிக்கும் கியூ வரிசையிலும்,கட்டில் கடையிலுமாய் நான்லினீயர் காட்சிகளாக நிர்பந்தப் படுத்தப்பட்டு மூன்று மணி நேரப் படமாய் பார்க்க நேர்ந்தால் என்ன நேரும்?! தினமும் பரோட்டா சாப்பிடுவது ஒன்றே அந்தப் பையன்களின் வாழ்வில் ஷன நேர விமோஷனமாயிருக்கக் கூடும். அந்த நிலையிலும் சக்தி வேலின் அகஉலகில் உடைபடும் மனித வாழ்வின் அகோரப் பக்கங்கள் வாசிக்கும் நமக்கே பிரமை தட்டச் செய்கின்றன எனில் அனுபவப் படும் அந்த ஜீவன்களின் மீதெழும் பரிதாப உணர்வை தாண்டிச் செல்லத் தான் வேண்டி இருக்கிறது.

சக்திவேலின் தகப்பன் குஷ்டரோகி ,நடேசனின் அம்மா ஓடிப் போனவள்,படக்காரன் வாழ்வின் நிர்பந்தம் காரணமாய் கல்யாணம் கட்டியும் பிரம்மச்சாரி , நாவலில் வரும் ஒவ்வொருவரின் வாழ்வும் பல கோணங்களில் கோணல் மாணலாய் விலகிப் பல்லிளிக்கையில் கலைடாஸ்கோப்பில் தாறுமாறாய் உருளும் உடைந்த வளையல் துண்டுகளின் ஞாபகம் வருகிறது. திக்குத் தெரியாத வாழ்வே தான் எனினும் இவர்களுக்கும் சின்னச் சின்னதாய் வாழ்வு ருசிக்கத் தான் செய்கிறது .இல்லா விட்டால் வாழ முடியாதே. இரண்டும்கெட்டான் வயதில் வேறு போக்கிடம் அற்றுப் போன பையன்களின் வாழ்க்கை என்னாகும் ? நிழல் முற்றம் வாசித்தால் தெரிந்து கொள்ளலாம். அவர்கள் வாழக் கற்றுக் கொள்கிறார்கள் எப்படியாயினும்.

பஷீரின் "மதில்கள் " :அம்மாடியோவ் ... பஷீரை வாசிக்கும் போதெல்லாம் எழுத்திலும் வாசிப்பிலும் இன்னும் கடக்க வேண்டிய தூரம் கண்ணைக் கட்டுகிறது .

என்னய்யா கதை இது ?!

கட்டக் கடைசியில் ;

"மங்களம் ... நாராயணீ சர்வ மங்களம் "

என முடிக்கையில் சிறை வாசலின் சிறு கேட்டின் முன் நமக்கும் மூளை ஸ்தம்பித்து நின்று விடத்தான் வேண்டும் ஒரு நொடியேனும். அந்தப் பெண் நாராயணீ அதற்கு பிறகு பஷீரை தேடி இருக்க மாட்டாளா ?! அதையெல்லாம் நமக்கு நாமே கண்டபடிக்கு கற்பனை செய்து கொள்ள வேண்டியது தான் ,பஷீர் தான் ஒரு இரக்கமற்ற படைப்பாளி என்பதை தனது ஒவ்வொரு படைப்பின் வழியும் நிரூபித்துச் சென்றிருக்கிறார்.

"உங்க உப்புப்பா கொம்பானை குழியானையாம் புள்ளே " எங்க உப்பப்பாவுக்கொரு யானை இருந்தது நாவலில் வரும் குஞ்ஞுதாச்சும்மா வின் அரற்றலுக்கும் , இங்கு பஷீர் விடுதலைக்குப் பின் சிறை மதில்களைத் தாண்டி வந்து தெருவோடு நின்று கொண்டு மனதிற்குள் சொல்லும் ;

"மங்களம்...நாராயணீ சர்வ மங்களம் "

முடித்துக் கொள்ளும் முறித்துக் கொள்ளும் தன்மை கொண்ட என்ன ஒரு இரக்கம் கெட்ட வார்த்தைகள் ! ஸ்தம்பிப்பது மூளை அல்ல இங்கே கதை தான்.பஷீர் அளவில் ஒரு குன்றி மணி அளவுக்காவது எழுத முடியுமா என யோசிக்கையில் நமக்கும் மூளை ஸ்தம்பித்துப் போகலாம்.

எதற்கு அந்த விஷப் பரீட்சை எல்லாம் அடுத்த புத்தகத்தைப் பற்றி பேசுவதே அதை விட உத்தமாமாய் இருக்க கூடும்! ;))

ஜி.முருகனின் "காண்டாமிருகம் " சிறுகதை தொகுப்பு இந்த வாரம் விகடன் வரவேற்பறையில் நூல் அறிமுகமாக பகிர்ந்து கொள்ளப் பட்டிருந்தது .

ஸ்ரீ.ஷங்கர் தொகுத்து அளித்த "ஸ்ட்ராபெர்ரி" தொகுப்பில் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட மனவியல் , உளவியல், பாலியல் சார்ந்த சிறுகதைகள் வாசிக்க கிடைத்தது.

தமிழ்நதியின் 'உடல் ' சிறுகதையை முன்னமே அவரது வலைப்பூவிலேயே வாசித்திருந்தேன் . இந்த தொகுப்பை முதன்முறை வாசிப்பவர்களுக்கு ஜீரணம் ஆகக் கூடிய சற்றே மென்மையான கதையென இதை மட்டுமே கூறலாம்.

லக்ஷ்மி சரவணக் குமாரின் "இருள்,மூத்திரம் மற்றும் கடவுளின் பட்டுக் கௌபீகத்துணி" சிறுகதையை வாசித்து முடிக்கையில் நமக்குள் நாமே சிரித்துக் கொள்வதை தவிர்க்க இயலாது. சிறுகதை ,

குமார் அம்பாயிரத்தின் "மண்யோனி" சிறுகதை கி.ரா வின் "பெண்மணம்" தொகுப்பில் இருந்த கதைகளை நினைவூட்டிச் சென்றது. வாசித்துக் கொண்டிருக்கும் போதே கதையின் சில பகடிகள் சிரிப்பு மூட்டிச் சென்றது. என்ன ஒரு அசாத்திய கற்பனை வளம் ...ஐயோடா ... வாசிக்கத் தான் கொஞ்சம் லஜ்ஜையாய் இருக்கிறது . கெவி டோஸ்.


ஜி.முருகனின் "கிழத்தி " தேர்ந்த நடை. அட்சர சுத்தமாய் கதையில் வருபவர்களின் மனநிலை சித்தரிக்கப் பட்டிருக்கிறது. ஒரு சின்ன நெருடல் " கிழத்தி " என்ற தலைப்பு பெண்ணை கிழத்தி என்றால் அதே விதமாய் நடந்து கொள்ளும் ஆணை என்னவேன்பார்கள்? அதைப் பற்றி இதுவரை எந்த எழுத்தாளரும் நினைத்துப் பார்க்கவில்லையோ? எம்.கோபால கிருஷ்ணனின் "முனி மேடு" தொகுப்பிலும் இதே போலொரு சிறுகதை "நிலைக் கண்ணாடி " சரி பெண்ணுக்கு இப்படி எல்லாம் நேரக் கூடும் ,அவளை இவிதமாகவேல்லாம் இசைக்கேடாக நினைத்துக் கொள்ளலாம் சரியே ...அதே சமயத்தில் அந்த ஆணை என்னவென்பது , பாதிப்பு பெண்ணுக்கு மட்டுமே தானா ,ஆண் என்ன நடந்தாலும் ஒரு பாதிப்பும் இன்றி கால் சராயில் ஒட்டிய மண்ணை உதறிச் செல்வது போல ஒன்றுமே நடக்கவில்லை எனும் பாவனையில் எல்லாவற்றையும் துடைத்து உதறி விட்டு போய் கொண்டே இருக்கலாமோ?குறைந்த பட்சம் கிழத்தி என்று அசிங்கமாய் பெண்ணை விளிப்பதற்கு ஒப்ப ஆணுக்கும் இதே விதமாய் ஒரு பொருத்தமான பெயரை மட்டுமேனும் வைத்து கதைகளிலேனும் விளிக்கலாம். யாராவது எழுதுங்களேன் எழுத்தாள மகா ஜனங்களே!


சு.தமிழ் செல்வியின் "சாமுண்டி " சிறுகதை கணவனை இழந்த மகனுக்கு கல்யாணம் செய்து வைத்து வாழ்வின் கடமைகளை முடித்து விட்ட முதிரிளம் பெண்களின் மனப் போராட்டத்தை பற்றி பகர்கிறது. மூட நம்பிக்கைகள் ஊடுருவ பெரும்பாலும் கூட்டத்தின் நடுவில் இருக்கையிலும் கூட உள்ளுக்குள் தனிமையாய் உணர்தலே முக்ய காரணமாகி விடுகிறது.


//வாசிக்காத ... வாசிக்காதன்னு சொன்னா கேட்டியா ? இப்ப பார் எழுத வேண்டியாத போய்டுச்சு...

//எனக்கு நானே சொல்லிக்கறேன் //

Saturday, June 4, 2011

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது(பஷீர்-நாவல்))













இன்றைய கோட்டா ;







பஷீரின் நாவல்களோ சிறுகதைகளோ எதுவாக இருந்தாலும் வாசிக்கும் முன்பு பெரும் தயக்கம் இருக்கும் எனக்கு.படைப்புகளில் இம்மியளவு கூட கதாபாத்திரங்களின் மீதான இரக்கமே இருக்காது பஷீரின் எழுத்துக்களில்.இவர்கள் இப்படித்தான் என்ற ரீதியில் நாம் பாத்திரங்களின் இயல்புகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த சிறுநாவலில் குஞ்ஞு ஃபாத்துமாவைப் படைத்து அவளுக்காக நாவலை வாசிப்பவர்களை எல்லாம் வருத்தப் பட வைத்து கடைசியில் ஒரு வழியாக அவளை நிஸார் அகமதுவிடம் சேர்த்து வைத்து விட்டார் என்று நினைத்து ஆசுவாசம் கொள்ள வகையில்லை,







// "ஒனக்கே உப்பப்பாக்கே ...பெரீய கொம்பானே ...குழியானேயாம்புள்ளே.குழியானேயாம்!" //







கடைசியில் குஞ்ஞுதாச்சும்மா தன்னைக் கேலி செய்யும் அண்டை அயல் குழந்தைகளின் பேச்சில் பெரிதும் காயப்பட்டுப் போய் ஃபாத்துமாவிடம் இப்படிக் கண்ணீருடன் புலம்புகையில் நாவலின் இடையில் அவள் மீது ஏற்பட்டுப் போன எரிச்சலும் அசூயையும் அவள் மீதான கருணையாக மாறிப் போகிறது.

பாவம் பழம் பெருமை பேசியே செத்துப் போகப் படைக்கப் பட்ட பிறவி இவளாக்கும்!




குஞ்ஞு ஃபாத்துமாவின் உம்மா குஞ்ஞுதாச்சும்மா எப்போதும் பழம் பெருமையில் உழலும் கிரகம் பிடித்த பிறவி .







அவளது அப்பாவிடம் ஒரு கொம்பானை இருந்ததாம் அதைத்தான் அவள் கதை முழுதும் சொல்லிக் கொண்டு திரிகிறாள். வாட்டனடிமை என்று கம்பீரமாய் ஊரை வலம் வந்த பிரமுகரான தன் கணவர் ஒரு கட்டத்தில் நிலை தாழ்ந்து செம்மீனடிமையாக சொத்துக்களை எல்லாம் இழந்து பெரிய வீட்டை நீங்கி ஊரை விட்டு ஒதுக்குப்புறமாய் ஓலைக் கீற்றுக் கொட்டகையில் தம்மை வாழக் கொணர்ந்த வாழ்வின் இறக்கம் அவளைப் படாத பாடு பட்த்துகிறது. பிறகு குஞ்ஞுதாச்சம்மை சதா தன் ஒரே செல்ல மகள் ஃபாத்துமாவையும் கணவரான வாட்டனடிமையையும் பெருங்குரலில் திட்டித் தீர்க்கிறாள் .







முல்லீம் பெண்கள் தமது மார்கத்தில் சொல்லித் தரப்பட்ட ஐதீகங்களை எப்படி ஒரு கேள்வியுமின்றி அட கேள்வி கேட்க வேண்டுமென்ற எண்ணம் கூட இன்றி ஏற்றுக் கொள்ள நேரிடுகிறது என்பதை பஷீரை விட வேறு யாராலும் இத்தனை எளிதாக விளக்கி விட முடியாது .பாவம் ஃபாத்துமாவுக்கு கூந்தலை சீப்பு கொண்டு வாறிப் பின்னலிடக் கூட கூட உரிமை இல்லையெனில் பார்த்துக் கொள்ளுங்கள்.







வாழ்வின் எல்லாத் தாழ்வுகளுக்கும் , எல்லாக் கஷ்டங்களுக்கும் காரணம் இபிலீஸ் எனும் பகைவன் தானே தவிர வேறெந்த காரணமும் இல்லை என நம்புமிடத்தில் குஞ்ஞு ஃபாத்துமா மீது தாங்கவொண்ணாத இரக்கம் பொங்கி வழிகிறது .அப்படி இரக்கப் பட்டு தான் நிஸார் அவளை மணந்து கொள்கிறானோ என்னவோ?!







தன்னை உறிஞ்சி ரத்தம் குடித்த அட்டைக்கும்,அட்டையை விழுங்கிய விரால் மீனுக்கும் இரக்கப் படும் எளியவள் தான் பாத்துமா,அவளது உம்மாவுக்கு மட்டுமே இருந்த "எங்க உப்பாவுக்கொரு ஆனை இருந்தது போன்ற பிரத்யேக லைசன்ஸ் எதுவும் பாத்துமாவுக்கு இல்லை போலும். அவள் தனக்குள் மறுகிக் கொள்ளும் பிறவியாக அடையாளம் காட்டப் படுகிறாள்.




எது எப்படியோ ஃ பாத்துமாவுக்கு கல்யாணம் ஆனதும் வாசகர்களுக்கு அதுவரை நீடித்த அவள் மீதான இரக்கம் சற்றே குறைந்து அது அவளது உம்மாவின் பக்கம் சாய்ந்து விடுகிறது







யானையைப் பற்றிய பெருமை சரியுமிடத்தில் குஞ்ஞுதாச்சும்மா இருந்தும் மரித்தவள் ஆகிறாள். சுத்த இஸ்லாமியர்கள் இறந்தால் மரித்து என்று தான் சொல்ல வேண்டும் என்பதும் ஃபாத்துமாவிற்க்கான குஞ்ஞு தாச்சும்மாவின் கட்டளை தான்.






செத்துப் போவது காபிர்கள் மட்டும் தானாம்.







இன்றும் கூட ஊர்ப்பக்கம் போனால் சில சங்கதிகளை காதாறக் கேட்கலாம்,சில பழம் பெருமைகளை கண்ணாறக் காணலாம் .







"இந்தா இருக்கே இந்த பங்களா எங்க தாத்தா 1953 ல கட்டினதாக்கும் ,தம் பேர்ல எழுதி வைக்கலைன்னு செத்த அப்பனுக்கு கொள்ளி போட மாட்டேன்னு சொல்லி எங்க ஊதாரி மாமா இத்தாம் பெரிய பங்களாவ எங்கம்மா கிட்ட இருந்து எழுதி வாங்கிட்டார். இதான் எங்க பழைய வீடு,நாம் பொறந்து எஸ்.எஸ்.எல்.சி படிக்கற வர இங்க தான் இருந்தோம். இது எங்க வீடு ...இதான் எங்க வீடு - கண்களில் நீர் மின்ன சொல்லும் அப்பாக்கள்,அம்மாக்கள் ,அத்தைகள் ,மாமாக்களை கண்டிருக்கிறேன். //

யாருக்குத் தான் இல்லை பழம் பெருமை?!







அதொன்றும் பஷீர் சொல்வதைப் போல அத்தானாம் பெரிய குற்றம் இல்லை தான்.

ஆனால் பின்னாட்களில் கேலிக்கு இலக்காகி பெருமைக்குரியவரை ஏளனத்தில் தள்ளி வேடிக்கை பார்க்கும் சகல திறமையும் இந்த பழம் பேச்சுக்கு உண்டு.




//எங்க வீட்ல இந்த மூலைக்கும் அந்த மூலைக்கும் வீசி வீசி ஆட அம்மாம் பெரிய தேக்கு ஊஞ்சல் இருந்தது தெரியுமா?


பாட்டி கிட்ட தான் இந்த ஊர்லையே முத முதல்ல பத்துப்பிடி காசு மாலை இருந்ததாம் தெரியுமா?




எங்க வீடு தான் இந்த ஊருக்கே முத கார வீடு தெரியுமா?
எங்கப்பா தான் இந்த ஊருக்கே முத முதல்ல பெரிய பத்து படிச்சவராம் தெரியுமா?


எங்க கல்யாணம்னாலும் எங்கம்மா கிட்ட தான் இந்த ஊரே பட்டுச் சேலை வாங்கி கட்டிகிட்டுப் போகுமாம் தெரியுமா? ...


எங்கண்ணன் தான் இந்த ஊர்லயே முத முதல்ல பிளசர் கார் வாங்கினார் தெரியுமா? ...//

எத்தனை எத்தனை பழம் பெருமைகள் !

பஷீரின் இந்த நாவல் எல்லோரும் படிக்கலாம். வாசித்து முடித்ததும் உள்ளுக்குள் பொங்கும் சிரிப்பில் சன்னமாய் ஒரு வேதனை இலவசம்.


Friday, June 3, 2011

தி.ஜா.வின் அமிர்தம் நாவல் :









போன வாரமெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தேன் ?




தி.ஜா வின் 'அமிர்தம் ' நாவல் வாசித்தேன் .அவருடைய முதல் நாவலாமே இது? வாசிப்பிற்கு குந்தகமில்லை,ஆனால் முடிவு தான் எனக்கென்னவோ மெகா சீரியலை ஞாபகப்படுத்தியது ,அந்த நாவலை அப்படித் தான் முடிக்க வேண்டும் போல! தி.ஜா வுக்குத் தெரியாததா? அமிர்தத்தை காட்டிலும் துளசி மற்றும் குசலம் இருவரும் ரசிக்க வைக்கிறார்கள் தங்களின் குண இயல்புகளால். சபேச முதலியார் நடப்புலக பிரதிநிதி .அவருக்கு அமிர்தத்தின் மீது இருக்கும் ஆசையை காட்டிலும் சமூகத்தில் தன் கௌரவத்தின் மீதான பிரேமை மிக அதிகமாய் இருக்கின்றது.





சபேச முதலியார் நல்லவர் தான்,அவருக்கு அமிர்தத்தின் தகப்பனார் வயது கூட இருந்து விட்டுப் போகட்டுமே! ஆனாலும் அவரால் அமிர்தத்தை இரண்டாம் தாரமாக்கி மனைவியாகவெல்லாம் நினைத்துப் பார்க்க இயலாது தாசி என்றால் அவளை பணத்தை கூட்டிக் கொடுத்து அரங்கேற்றம் செய்து தனக்கே தனக்கென்று வைத்துக் கொள்ளத் தான் வேண்டும்,தாலி கொடுத்து கல்யாணம் செய்து கொள்வதெல்லாம் அதிகப் படி என்ற எண்ணம் தான் முதலியாருக்கு .இறந்து போன முதல் தாரத்தின் மகன் சித்தப்பாவுடன் ரங்கூனுக்குப் போனவன் திரும்பி வரும் வரை எல்லாம் நாவல் சீராகத் தான் போகின்றது.





அப்பாவுக்கும் மகனுக்கும் ஒரே பெண் மீது காதல் உண்டானால் என்ன ஆகும் ?





அமிர்தம் தான் ஒரு கணிகை என்று அடையாளம் காணப் படுவதை வெறுக்கிறாள். அவளை கட்டாயப் படுத்தி சபேச முதலியாரின் சிநேகத்தை ஏற்படுத்தி வைத்த அவளது அம்மா குசலமும் கூட இறந்து போன பின் அவள் பாவம் என்ன செய்வாள்.முதலியாரிடத்திலும் தனது விருப்பமின்மையைச் சொல்லி அவரையும் தூர நிறுத்திய பின் தான் முதலியாரின் மகனைக் கண்டு காதல் கொண்டாள் அவள். அமிர்தம் களங்கமற்றவள் என்பது முதலியாரும் அறிந்ததே .அப்படி இருந்தும் ஒரு கணிகை தன் வீட்டு மருமகள் ஆவதா ?என்ற அடக்க முடியாத சீற்றம் ...தான் ஆசைப் பட்ட பெண்ணை தன் மகனை விரும்புவதா என்ற பொறாமை ,எல்லாம் கலந்து நேசம் கொண்ட இருவரின் காதலைப் பிரித்து தூரப் போடும் வேலையை முதலியாரின் கடிதம் செய்கிறது.






தன்னை அபாண்டமாக விமர்சித்து எழுதப் பட்ட அந்தக் கடிதம் கண்டதும் அமிர்தம் அந்த ஊரை விட்டு பொய் விடுகிறாள். முதலியாரின் மகன் அமிர்தம் இல்லாமல் தனக்கு இங்கே வேலை இல்லை என்று மீண்டும் ரங்கூன் போய் விடுகிறான்.





மீண்டும் தனித்தவர் ஆகிறார் முதலியார். நிச்சயம் அவர் அதற்காக வருத்தப்பட்டிருக்க மாட்டார் என்றே நம்ப வேண்டியதாய் இருக்கிறது. அவருக்கு தன் மருமகள் ஒரு கணிகை என்பதைக் காட்டிலும் தன் மகனுக்கு கல்யாணமே ஆகாமல் போனாலும் தேவலாம் என்ற மனநிலை தான் நாவலில் தெளிவாய் காட்டப்பட்டிருக்கிறதே.





நாவலைப் பொறுத்தவரை அன்றைய காலகட்டத்தில் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினையின் தீவிரம் குறித்த கவலை எல்லாம் காணப் படவில்லை. ஒரு சமூகப் பிரமை பிடித்த ஒரு பணக்கார நடுத்தர வயது ஆணின் மனநிலை,தான் வளர்ந்த விதம் மற்றும் தனித்தியங்க பயிற்றுவிக்கப்படாத நிலையில் வளரும் ஒரு தாசிப்பெண்ணின் மனநிலை, இவர்களுக்கிடையில் அகஸ்மாத்தாய் வந்து மாட்டிக் கொண்டு அலைக்கழியும் ஒரு இளைஞன் . குலத்தொழில் என்ற பெருமை பேசுமிடத்து குசலத்தை நினைக்கையில் பரிதாபமாய் இருக்கிறது .வேலைக்காரியானாலும் துளசியும் அவள் கணவன் வேலுவையும் மறக்க முடியாது இந்நாவலில் .



கொஞ்ச நேரமே வந்தாலும் புது வேலைக்காரி மீனி (என்ன பெயரோ சீனி...சாணி என்று!!!) ஆடி வெள்ளி படத்தின் வெள்ளிக் கிழமை ராமசாமி போல சிரிப்பு மூட்டி விட்டு குசலம் கிணற்றடியில் வழுக்கி விழக் காரணமாகி ஒரு வழியாய் அவளை கொன்று விட்டே வேலையை விட்டு நிற்கிறாள்.



அமிர்தம் என்ன முடிவெடுத்தாள் ?



அதை நாவலை வாங்கி வாசித்து விட்டு தெரிந்து கொள்ளலாம். கட்டாயம் வாசித்தே ஆக வேண்டும் என்றில்லை ,மனம் ஒரு சிக்கல் விழுந்த நூல் கண்டு தான். என்று தி.ஜா வழக்கம் போல நிரூபித்திருக்கிறார் இந்நாவலிலும்.










Saturday, May 21, 2011

அழகர்சாமியின் குதிரை (விமர்சனம்)



அழகர் சாமியின் குதிரை :





முதலில் மைனஸ்களை சொல்லி விட்டுப் பிறகு ப்ளஸ்களுக்குப் போவோம்,




கதை நடந்த காலத்தைப் பற்றிய போதிய குறிப்புகள் ஆரம்ப காட்சிகளிலேயேகுழப்பமின்றி அழுத்தமாகச் சொல்லப் படக்காணோம் ,சுப்ரமணியபுரம் படத்தைப்போல இந்தக் கதை எண்பதுகளின் இடைக்காலத்தில் நடந்தது என்பதற்கு ஒரே சாட்சிகோயில் வரி வசூலில் ஊர் மக்கள் வெகு தாராளமாகப் போடும் ஐந்து ரூபாய் ,ஒருரூபாய் நோட்டுக்கள் மற்றும் சில்லறைக் காசுகள் மட்டுமே ,இந்த சொற்பகாட்சிகளைக் வைத்து கதை நிகழ்ந்த காலகட்டத்தை நாம் தீர்மானித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது .







அழகர்சாமிக்கும் அவனுக்கு நிச்சயித்த பெண்ணுக்கும் இடையிலான நேசத்தைஇன்னும் கூட கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லி இருக்கலாம் ,சரண்யா மோகனின்கதாபாத்திரம் ஏனோ தானோவென்று கட்டமைக்கப் பட்டிருக்கிறது ,



ராமகிருஷ்ணனும் அவனது நண்பர்களும் நல்ல தேர்வுகள் ,கோடங்கியின் மகளாகவரும் தேன்மொழி குறுநாவலாகப் படிக்கையில் வேறு விதமாகப் பதிந்துபோயிருந்ததால் அந்தப் பெண்ணிற்கு பதிலாக இந்தப் பெண்ணை ரீபிளேஸ் செய்யமுடியாமல் போய் விட்டது எனக்கு. தேன்மொழி கதாபாத்திரம் படத்தில்ரொம்பவும் அப்பிராணியாக வந்து போகிறது,பாஸ்கர் அண்ணாவின் கதைப் படிஅந்தப் பெண்ணை கொஞ்சம் நகைசுவையோடு கற்பனை செய்திருந்தேன் நான். இந்தப்பெண்ணும் அழகாகவே இருக்கிறார்.
மலையாளத்து கோடங்கியாக வரும் நான் கடவுள் வில்லன் காமெடி என்ற பெயரில்கொஞ்சம் சோதிக்கிறார் .



வெண்ணிலா கபடிக் குழுவின் பரோட்டா பிரியன் இந்தப் படத்தில் மப்டி போலீஸ்சந்திரனாக வந்து குதிரைச் சாணத்தை நீரில் கலந்து தீர்த்தமென்ற பெயரில்வெள்ளந்தி கிராமத்து மக்களுக்கு தந்து கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.இந்தப் படத்தில் நகைச்சுவை வலிந்து திணிக்கப் படாமல் கதையோடு பொருந்திநகர்வது நயம் .



தேனீ ஈஸ்வரின் கேமிரா நாடகத்தனங்கள் இன்றி ஊரை ஊராகவே காட்டிஇருப்பதில் வெகு நேர்த்தி .அழகர்சாமியின் மலைக் கிராமமும் பின்னணியில்பசிய மலைகளும் கண்களுக்கு இதமோ இதம் ,"குதிக்கிற குதிக்கிற குதிரை"பாடல் காதுகளுக்கு இதம் . காத்தைக் கேளு பூவைக் கேளு பாடலும் அழகோ அழகு.



அனல் அரசின் சண்டைக் காட்சிகள் வெகு யதார்த்தம் .
படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் ஒரு கிராமத்தின் மற்றும் அதற்கேஉரித்தான இளவட்ட கோஷ்டிகளின் வழக்கமான பராக்கிரமங்களை நினைவூட்டிச்செல்கிறது. முதலில் அடி அடியென்று அடித்து வெளுப்பதும் பிறகு உடனேஇளகுவதுமான அபூர்வ பிறவிகளைக் கொண்டவை தான் எல்லாக் கிராமங்களும்.



இளையராஜா இந்தப் படத்தில் தீபாவளி கொண்டாடவில்லை ,காதுகளை அதிரடிக்காமல்பயணங்களில் ரசிக்கத் தக்க இதமான இசை. ஆஹா ஓஹோ என்றில்லைஎனினும் பாடல்கள்எனக்குப் பிடித்திருந்தன. மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் "குதிக்கிறகுதிக்கிற குதிரை " தான்.



கோடங்கியின் மனைவியாக வரும் பெண்மணியும் ,அழகர்சாமியை ஊராரிடம் இருந்துகாப்பாற்றி சோறு போடும் விதவைப் பெண்மணியும் ஒரே சாயலில்இருக்கிறார்கள்,ஒருவேளை இருவரும் சகோதரிகளோ ?



சுசீந்திரனுக்கு சில காட்சிகளுக்காக பிரத்யேகமாக ஸ்பெசல் நன்றிகளைத்தெரிவித்தே ஆக வேண்டும்.



கோயில் வரி வசூலிக்க ஊர் பெருசுகள் வீடு வீடாகப் போகையில் ஒவ்வொருவீட்டிலும் ஒவ்வொரு விதமான வரவேற்பு ,தட்டிக் கழிப்புகள் ,சிறுவர்களின்நையாண்டிகள்,


"எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? மாமனா ? மச்சானா?மானங்கெட்டவனே உனக்கெதற்கு கிஸ்தி ,வரி ? சிரிப்பு அள்ளிக் கொண்டுபோகிறது அந்தச் சிறுவன் கேட்கையில் .
காது கேளாதவள் போல நடிக்கும் கிழவியின் சாமர்த்தியம் இவைகளை எல்லாம்காட்சிப் படுத்திய விதம் அருமை.



இதே விதமாக ஊர் பிரசிடன்ட் மகன் ராமகிருஷ்ணன் குதிரைக்காரன்அழகர்சாமியிடம் குதிரையை அவிழ்த்துக் கொண்டு ராவோடு ராவாக ஊரை விட்டுஓடும் படி உதவ முன் வரும் போது ,ஊரின் கொண்டாட்ட மனநிலையை பார்த்துவிட்டு இத்தனை சந்தோசங்களும் இந்தக் குதிரை இல்லாவிட்டால் தடைபடும் ஊர்த்திருவ்ழாவால் நின்று போகும் என்றெண்ணி திருவிழா முடிந்த பிறகே தான் தன்குதிரையை கொண்டு போவதாக அந்த அப்பாவி சொல்லும் இடம் ஒரு கவிதைக்கானகளம்.



கிராமத்திலிருந்து திருப்பூர் பனியன் கம்பெனிக்குப் போய் சம்பாதிக்கும்சின்னஞ்சிறுசுகள் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை கிடைத்து லாரியில்கும்பலாய் சாயமிழந்த வண்ணத்துப் பூச்சிகளாய் வந்திறங்கும் காட்சி,புதுச்சட்டை தைக்க டெய்லரிடம் அளவு கொடுக்கும் சிறுவன் இப்படி அந்தக்காட்சி முழுதும் கவிதையாய் உணர்வு மயம்.



ஆஸ்பெஸ்டாஸ் தகர வீடுகள் அப்படியே எனது கிராமத்தை கண்முன் கொண்டுவருகின்றன. அந்தத் தகரங்கள் காற்றில் பறந்து விடாமல் இருக்க கூரை மேல்கற்கள் வைக்கப் பட்டிருந்த கற்கள், காலத்தைக் காட்டும் கடிகாரங்கள் எனச்சொல்லலாம் ,இப்போது ஒரு பத்தி என்றாலும் கான்க்ரீட் வீடுகள் தான்கிராமங்களிலும் கூட. சிமென்ட் ரோடுகள் தான் ,வெறும் மண் சாலைகள் தேடித்தான் கண்டடைய வேண்டும்.



பிரசிடன்ட்,காளமேக வாத்தியார், கண்ணு ஆசாரி, ராமகிருஷ்ணன் ,அவனதுநண்பர்கள் வரை அப்படி அப்படியே அவரவர் கிராமங்களை மீண்டுமொருமுறைஞாபகத்தில் இருத்திப் பார்க்க வைக்கும் வெள்ளந்தி முகங்கள்,பாத்திரத்தேர்வுகள் இயல்பு. மைனர் (இந்தப் பாத்திரம் கதையில் வராது ! சுவாரஸ்யம்கருதி சேர்த்திருக்கிறார்கள் போலும் ! - பரவாயில்லை மனிதர் சிரிக்கவைக்கிறார் .



இணை இயக்குனர் என்ற டைட்டிலின் கீழ் (பாஸ்கர் சக்தி )பாஸ்கர் அண்ணாபெயரைப் பார்க்க சந்தோசமாக இருந்தது. சுபஷ்ய சீக்ரம் ...அடுத்து துணிந்துஇயக்குனர் அவதாரம் எடுக்கலாம் இன்னும் நேர்த்தியான காட்சியமைப்புகள்வசனங்களோடு அவரது "ஏழு நாள் சூரியன் ஏழு நாள் சந்திரன்" குறு நாவலை மாயஉலகின் கமர்சியல் அம்சங்களையும் இயல்பு கெடாமல் கலந்து வெற்றிப்படமாக்கலாம். நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும் ,கதை வெகு அருமையான கதை.அதை உரிய வகையில் திரைப்படமாக்கினால் வெற்றி நிச்சயம்.



நல்லது நடந்தாலும் சரி,கெட்டது நடந்தாலும் சரி ஊரைப் பொறுத்த மட்டில்எல்லாம் அழகர் சாமி தான்.

மொத்தத்தில் அழகர்சாமியும் ஒரு கதாபாத்திரமாக்கப் பட்டிருக்கிறார் இந்தப்படத்தில் .எது நடந்தாலும் அது சாமியால் தான் என்று நம்பும் கிராமத்துநம்பிக்கைகள் ,எதற்கும் சாமி பார்த்துக் கொள்ளும் என சாமியின் மேல் பாரம்ஏற்றி விட்டு நிம்மதியாய் அடுத்த வேலையைப் பார்க்க நகர்ந்து விடும்கிராமத்து மனநிலைகள். என்று படம் முழுக்க கிராமத்து மக்களின்நம்பிக்கைகளையும் பிடிவாதத்தையும் மையமாகக் கொண்டு நகர்கிறது.




குடும்பத்தோடு எல்லோரும் உட்கார்ந்து பார்க்கத் தக்க நயமான நகைச்சுவைபடம் முழுக்க இழைந்தோடும் யதார்த்தமான ஒரு படம் "அழகர் சாமியின் குதிரை"காதுகளை செவிடாக்கும் இசை,குத்துப் பாடல்கள் ,ரசக்குறைவான காட்சிகள்என்றெல்லாம் இல்லாமல் எல்லோரும் ஒருமுறை பார்க்கலாம். நல்ல படம்.









Sunday, May 1, 2011

கொஞ்சம் தேநீர் கொஞ்சம் கவிதை

நேற்று காலை 8.30 க்கு பொதிகையில் "கொஞ்சம் தேநீர் கொஞ்சம் கவிதை " நிகழ்ச்சியை பார்க்க வாய்த்தது.

கவிஞர் கலாப் ப்ரியா ,கவிஞர் ரமணன் ,கவிஞர் மதுமிதா மூவரும் கவிதைகளைப் பற்றிப் பேசினார்கள் .


பொதுவில் எனக்கு கவிதை அத்தனை பரிச்சயமில்லை ,ஏதோ பள்ளி கல்லூரிகளில் கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு வாங்கிய கெத்தில் இங்கே கவிதை என்ற பெயரில் எதையோ எழுதிக் கொண்டிருப்பேனே தவிர எனக்கு கவிதை குறித்து பெரிதாகவோ சின்னதாகவோ ஒன்றுமே தெரியாது தான்.


அகநாழிகை வாசுவின் கவிதையை மதுமிதா வாசிக்கப் போகிறார் என்று குறுஞ்செய்தி பார்த்து விட்டுத் தான் நானும் தேவ் ம் 'கொஞ்சம் தேநீரைப் ' பார்க்க ஆரம்பித்தோம் . "புசிக்கத் தூண்டும் ப்ரியங்கள்" என்ற கவிதையை நினைவுகளின் தாக்கங்களைப் பற்றிய கவிதை என்ற அறிமுகத்தோடு மதுமிதா வாசித்தார்.இந்தக் கவிதை பிடித்திருந்தாலும் கூட வாசுவின் தொகுப்பில் இதை விடவும் வாசிக்கப் பிரியமான கவிதைகள் இருந்தனவே ப்ரியங்களின் நினைவுகளைப் பற்றிய கவிதை என்பதால் இந்தக் கவிதை வாசிக்கப் பட்டதோ என்று சொல்லிக் கொண்டிருந்தேன் தேவ் இடம் . நானாவது தேவலாம் அவருக்கு கவிதை என்றால் கால் வீசை (!!!) என்ன விலை கதை தான்.


இருந்தாலும் நான் கேட்டதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டுமென்ற கட்டாயம் எதுவும் இல்லாத போதிலும் கூட மனைவிக்குப் பதில் சொல்லும் கடமை தவறாது ;

"அவங்களுக்குப் பிடிச்ச கவிதையை அவங்க வாசிக்கிறாங்க என்றார். "

"ஆமாமில்ல ?! "


தமது மருதாணிக் கவிதையை ரமணனின் வேண்டுகோளுக்கு இணங்க கலாப்ரியா வாசித்துக் காட்டினார்.மருதாணி மனம் கமழ்ந்தது . பகல் மருதாணி பகலில்வைத்துக் கொண்டால் தான் சிவக்கும் , இரவு மருதாணி இரவில் வைத்துக்கொண்டால் தான் கை சிவக்கும் என்று கலாப்ரியா கவிதை வாசிக்கும் முன்புசொன்னார்.


மருதாணி கவிதையில் மணந்து மணந்து மனம் கமழ்ந்தது .ஒரு மருதாணி ஒருகுடும்பம் முழுமையும் எப்படி ஆகர்ஷித்துக் கொள்கிறது என்பது படம் போலவிரிந்தது மனதில் கவிதை வாசிக்கப் பட வாசிக்கப் பட. மிக அழகான கவிதைஇது. ரசனையோடான துன்பியல் அழகு.


மருதாணிக் கவிதைக்கு முன்பு பின்போ ரமணன் தமது பிராயத்தில் முப்பதுவருடங்கள் முன்பு தாம் எழுதியதென ஒரு கவிதையை வாசித்துக் காட்டினார்.


ரயில் பயணத்தில் ஒரு பெண் சக பயணியாக ஒரு இளம் பெண் வெறுமே இளம்பெண்என்றால் பொருந்துவதில்லை மனதுக்குகந்த அல்லது பார்த்த கணத்திலேயேமனதுக்கு இசைவான ஒரு பெண்ணை காண நேர்கிறது . அவள் யாரோ ? எந்த ஊரோ ?எங்கு போகிறாளோ ? ஆனால் பீர்க்கங்கொடியாக படர்ந்து விட்ட பிரியத்தில்வந்து உதிக்கிறது ஒரு கவிதை .இந்தக் கவிதையை ரமணன் வாசிக்கக் கேட்கையில்கேட்கையில் அத்தனை அருமையாக இருந்தது . கவிதை வரிகள் இப்போது நினைவில்இல்லை எனக்கு .


கவிதை யின் அவசியம் என்ன என்பதற்கான பதிலாக கலாப்ரியா சொன்னது;


ஒரு சாலையில் சென்று கொண்டிருக்கையில் எனக்கு முன்னே செங்கல் நிரப்பிய ஒரு மாட்டு வண்டி ஒன்று மறித்துக் கொண்டு பாதை விடாமல் போய்க் கொண்டிருந்தது ,ஒதுங்கிச் செல்லவும் முடியாமல் தாண்டிப் போகவும் முடியாமல் அதன் நிதானத்திற்கு ஈடு கொடுத்து மிக மந்தமாக அதற்குப் பின்னே நடந்து சென்றாக வேண்டிய கட்டாயத்தில் என் மனநிலை மிக எரிச்சலான சூழ்நிலையில் வண்டியிலிருந்து ஒரு செங்கல் நழுவி சாலையில் விழுந்தது ,அதைக் கண்டதும் ஞானக் கூத்தனின் செங்கல் கவிதை ஒன்று ஞாபகம் வந்தது .


"சூளைச்செங்கல்லிலிருந்து தனித்துச் சரிகிறது ஒற்றைக் கல்"

எனும் கவிதையை அப்போதைய என் வாழ்வியல் சூழ்நிலையில் அந்நேரம் பொருத்திப் பார்த்ததும் சூழலின் வெறுமை மறைந்து மனம் லேசாகி விட்டது .இப்படி கவிதை என்பது வாழ்வை ரசிக்க நமக்கு பல நேரங்களில் கற்றுத் தருவதால் கவிதைகளால் வாழ்வு ரசனையாக்கப் படுகிறது. அதனால் கவிதைகள் ரசிக்கப் படுகின்றன. கவிதைகளால் வாழ்வும் ரசனைக்குரியதாக ஆக்கப் படுகிறது என்ற பொருளில் கலாப்ரியாவின் விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.


மேலும் சில கவிதைகளை வாசித்துக் காட்டுகையில் மிக எளிதான ஆங்கிலக் கவிதை ஒன்றை கலாப் ப்ரியா பகிர்ந்து கொண்டார்.
E = Mc 2 (இந்த 2 வை square என்று வாசித்துக் கொள்ளுங்கள் .கீ போர்டில் square எப்படிப் போடுவதென தெரியவில்லை எனக்கு :( , கவிதைக்கான தலைப்பே இது தான்.

E = Mc 2


"He erased Hiroshima
By a piece of chalk !"


இரண்டே வரிகளில் மிக ஆழமான கவிதை .

அடுத்து ;


வியட்நாம் 'போர்' பற்றிய ஹிந்திக் கவிதை ஒன்று ; போரின் அலங்கோலத்தை விளக்கும் " கபாலத்தில் வண்ணத்துப் பூச்சி " என முடியும் குறுங்கவிதை ஒன்று முதல் வரி எனக்கு ஞாபகமில்லை .கலாப்ரியா வாசித்துக் காட்டுகையில் நுட்பமான கவிதை எனப் பட்டது. வியட்நாமியப் போரின் அவலத்தைப் பற்றி ஒரு மராட்டியக் கவிஞன் தனது உணர்வுகளை இவ்விதம் பகிர்ந்து கொண்டது தான் உலகம் முழுவதையும் ஒன்றிணைப்பதான கவிதை எனும் வடிவத்தின் வெற்றி என்பதாக அவர்களுடைய உரையாடல் நீண்டது .


மதுமிதா அக்கமகா தேவி உட்பட இன்னும் சிலரது கவிதைகளை வாசித்துக் கட்டினார் .


எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது ; கவிதை என்பது வெறுமே எழுதி வைத்து விட்டுப் போவதில் மட்டும் இல்லை அதற்கான பூரணத்துவம் என்பது அந்தக் கவிதை மிகச் சரியான விதத்தில் வாசிக்கப் படுவதிலும தான் இருக்கிறது என்று நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கிய கணத்தில் இருந்தே தோன்றிக் கொண்டே இருந்தது ,அதற்கு காரணம் கவிஞர் ரமணன் .


மனிதர் என்னமாய் கவிதை பாடுகிறார்!


வெகு அருமையாக இருந்தது கேட்கக் கேட்க . கடந்த வருடத்தில் ஒரு நாள் எஸ் எஸ் மியூசிக் சேனலில் உமா சக்தி கலந்து கொண்ட கவிதை நிகழ்ச்சி ஒன்றில் அவருடன் கலந்து கொண்ட ஒரு கவிஞர் எனக்கு இப்போது பெயர் மறந்து விட்டது . ஞானக் கூத்தனின் "அம்மாவின் பொய்கள் " மிக அருமையாக கவிதையை வாசித்துக் காட்டினார். அப்போதே தோன்றியது தான். கவிதையின் நிறைவு அது வாசிக்கப் படும் விதத்திலும் தான் இருக்கிறதென.


இது என் கருத்து மட்டுமே .இதில் யாருக்கும் ஏன் கவிஞர்கள் பலருக்குமே உடன்பாடில்லாமலும்இருக்கலாம். அதைப் பற்றி எனக்கென்ன?! :)


ஒவ்வொரு வாரமும் கவிஞர் ரமணன் தான் இந்த நிகழ்ச்சியில் கவிஞர்களை ஒருங்கிணைத்து "கொஞ்சம் தேநீர் கொஞ்சம் கவிதை "வழங்கிக் கொண்டிருக்கிறார் எனில் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைப் பார்க்கலாம் என்றிருக்கிறேன் நான் .

இந்த நிகழ்ச்சி திங்கள் இரவு 9,30 மற்றும் மறுஒளிபரப்பாக சனி காலை 8,30க்கு ஒளிபரப்பாகிறதாம் .



************************************* முடிந்தது **********************************

Friday, April 1, 2011

ரஸ்தாளி ( சிறுகதை )




இங்லீஷ் பரீட்சை இன்றைக்குப் பார்த்து மெயின் ஹால் சூப்பர்வைசிங்செய்து கொண்டிருந்த சந்திரா பாய் டீச்சருக்கும் ரேணுகா டீச்சருக்கும்பரீட்சை ஆரம்பித்து முக்கால் மணி நேரத்திற்குள் பெருத்த சந்தேகம் ஒன்றுவந்து யார் சொல்வது மெத்தச் சரி என்பதில் பெரிய போட்டியாகப் போய் விட்டது. மெயின் ஹால் பள்ளியின் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமாய்விரிந்து கிடக்கிறது. மொத்தம் இருபத்தி ஐந்து வரிசைகளாக பெஞ்சுகளும்டெஸ்க்க்குகளும் அதில் உட்கார்ந்து எழுதும் பிள்ளைகளுமாய் நீளக்கிடந்தது .


அதனால் தான் இந்த ஹாலுக்கு மட்டும் சூப்பர்வைசிங் செய்யஎப்போதும் .இரண்டு டீச்சர்களைப் போடுவார்கள் . பிள்ளைகள் அதன் பாட்டில் எழுதிக் கொண்டிருக்க வரும் டீச்சர்கள் அவரவர்போக்கில் எதையாவது பேசிக் கொண்டே ஹால் கவனிப்பார்கள். இப்படித் தான்சென்ற அரைப்பரீட்சைக்கும் மேனகாவுக்கு மெயின் ஹால் தான் .அதிலும்டீச்சர்கள் பேசுவதை வரிக்கு வரி காதாரக் கேட்கும் படியான இடத்தில் அவளதுபெஞ்சும் டெஸ்க்கும் . பத்தாவது கணக்குப் பாடம் எடுக்கும் அனுராதா டீச்சர் அதிகப் படியாகயாரோடும் பேசுவதில்லை ,குட்டி போட்ட பூனை மாதிரி ஹால் முழுக்க சுற்றுசுற்றி வந்து கொண்டிருப்பதைக் கூட சகித்துக் கொள்ளலாம் .

மேனகாவுக்குகணக்கு எப்போதும் கொஞ்சம் பிணக்கு தான் ,எல்லாப் பாடங்களிலும்தொண்ணூறுக்கு மேல் மார்க் வாங்கியும் கணக்கு அவளைப் பெரும் பாடுபடுத்தும் , படுத்துவது பாடம் மட்டுமல்ல கணக்கு டீச்சரும் தான் . அரைப் பரீட்சைக்கு முந்தி வைத்த மன்த்லி டெஸ்ட்டில் சயன்சில் 99 3 /4மார்க்குகள் வாங்கி இருந்தாள் மேனகா .பேப்பர் கொடுக்கும்போது முருகன்சார் மொத்தம் மூணு செக்சன்லையும் வச்சு இந்தப் பொண்ணு தான் இவ்ளோமார்க்கு வாங்கிருக்கு ,100 /100மார்க் போடலாம் ,அப்டி போடக் கூடாதுன்னுதான் கால் மார்க் குறைச்சிட்டேன்.என்று பெருமையாகச் சொல்லி எல்லோரையும்மேனகாவுக்காக கை தட்ட சொன்னார் .


ஒரு செக்சனுக்கும் இன்னொரு செக்சனுக்கும்இடையே சுவர் வைத்து மறைத்திருக்க அதென்ன இங்க்லீஷ் மீடியம் ப்ரைவேட்ஸ்கூலா ! வெறும் ஓலைத் தட்டி தான் செக்சன் பிரிக்கும் ,முருகன் சார் பேசியதும்,பிள்ளைகள் கை தட்டியதும் அந்தப் பக்கம் 10 th B க்கு கணக்குப் பாடம்எடுத்துக் கொண்டிருந்த அனுராதா டீச்சர் காதில் தெள்ளத் தெளிய விழுந்துவைக்க மேனகாவுக்கு அடுத்த வகுப்பு கணக்கு வகுப்பாகிப் போயிருக்ககூடாது! வெளியே அப்பட்டமாய் காட்டிக் கொள்ளப் படாவிட்டாலும் அனுராதா டீச்சருக்குமுருகன் சாருக்கும் இடையே யார் அடுத்த HM என்பதில் போட்டி இருந்தது.ரெண்டு பேரும் வகுப்பு இடைவேளைகளில் பேசிக் கொள்ளும் போதும் சரி,ஸ்டாப் ரூமில் பேசிக் கொள்ளும் போதும் சரி சிரிக்கச் சிரிக்கப் பேசும்பேச்சிலும் ஒருவரை ஒருவர் வாரிக் கவிழ்க்க நினைக்கும் இடக்கு மடக்குகள்நிறைய தென்படும்.


கணக்குப் பாடத்தில் 59 /100 தான் வாங்கி இருந்தாள் மேனகா . முதல் பீரியடில் எல்லோரும் கை தட்டிப் பாராட்டிய சந்தோசத்தை இந்தக்கணக்குப் பேப்பர் மார்க் தவிடு பொடியாக்கியது ,அப்படியே பேப்பரை வாங்கிமடித்து பைக்குள் வைத்து விட்டு முதல் மார்க் வாங்கிய மதன் கபில் தேவ்ஐ அனுராதா டீச்சர் பாராட்டி கை தட்டச் சொல்வதை சுணங்கிப் போன முகத்தோடுபார்த்தும் பாராமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மேனகா . அவ்வப்போது டீச்சர் இவளிருந்த பக்கம் பார்த்த போதெல்லாம் டீச்சரின்பார்வை வட்டத்தில் விழாமல் தப்பிக்க அவள் செய்த பிரயத்தனம் தோற்றுப்போனது.


கொஞ்ச நேரத்தில் டீச்சர் மேனகாவை பேப்பரோடு எழுந்து தன் மேஜை அருகேவரச் சொன்னாள் . ; "என்னம்மா மேனகாதேவி உனக்கு சயன்ஸ் பாடம்னா இனிக்குது மார்க் வாங்க,கணக்குப் பாடம்னா கசக்குதா ? என்ன மார்க் வாங்கிருக்க நீ ? எடு உன்பேப்பரை " என்று ஆணையிட்டாள் . கிட்டத் தட்ட கால்மணி நேரம் அவள் வாங்காமல் போன 49 மார்க்குகள்அனாமத்தாய் துச்சமாய் போக காரணம் அவளுக்கு கணக்கு டீச்சரை பிடிக்காததும்தான் என்பது வரை அனுராதா டீச்சர் படையலிட்டு பட்டியலிட்டுகொண்டிருக்கையில் வகுப்பு மொத்தமும் கொல்லென்று சிரித்தது .


"போன பீரியட்ல கை தட்டல் வாங்கிட்டு இந்தப் பீரியட்ல பார்டர்ல மார்க்வாங்கி பைக்குள்ள மடிச்சு வச்சுக்க வெட்கமா இல்லியா உனக்கு?!அடுத்து அரை பரீட்சை வருது ..அதுல எத்தன மார்க் வாங்கறதா உத்தேசம் மேடமுக்கு?! " "ஏன் கணக்குப் பாடம்னா வேப்பங்காயா இருக்கா ? " "கணக்குப் பாடம் பிடிக்கலையா ...கணக்கு டீச்சரையே பிடிக்கலையா ?சொல்லும்மா ...நான் வேணா ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போயிடவா? " கண்களை உருட்டி நக்கலாய் சிரித்துக் கொண்டே கேலியாக டீச்சர் கேட்கமேனகாவுக்கு மளுக்கென்று கண்ணோரம் கண்ணீர் ஏரி கரையை உடைத்துக் கொண்டது.


அவள் அழுவதைப் பார்த்ததும் டீச்சர் கொஞ்சம் சாந்தி ஆகி விட்டார் போலிருந்தது. "நீ என்ன சின்னக் குழந்தையா இதுக்கெல்லாம் அழற ...அடுத்த பரீட்சைக்குநல்லா படிச்சு கணக்குலயும் நல்ல மார்க்க வாங்கி கை தட்டல் வாங்கணும்.புரியுதா...கண்ணைத் தொட அழதா ...அழாத பிரம்பால அடிச்ச மாதிரி என்ன ஒருஅழுகை உட்காரு...உட்காரு " இதேதடா தொல்லை இந்தக் கழுதை அழுது ஊரைக் கூட்டப் போகிறதோ ! என்றுடீச்சர் சமாதானப்படுத்துவதை முந்திக் கொண்டு சாப்பாட்டு மணி அடித்துவிட்டார்கள் .இனி நீ அழுதாலும் எனக்கென்ன என்று டீச்சர் வெளியேறிப் போய்விட்டாள்.


டீச்சர் போன மாயத்தில் பத்து (பத்மினி) தான் ஓடோடி வந்து தேற்றினாள் மேனகாவை . "மேனா அழாத மேனா ...அந்தக் ஒன்ற கண்ணு டீச்சரப் போச் சொல்லுடி .அதுக்கும்சயன்ஸ் வாத்தியாருக்கும் சண்டைன்னா நாம என்ன பண்ணுவோம்,அவர் பாடத்துலமட்டும் நீ நிறைய மார்க் வாங்கிட்டு கணக்குல குறைஞ்சுட்டன்னு இப்டிதிட்டி உன்ன அழ வச்சுட்டுப் போகுது . விடு ராப்பகலா அடுத்த பரீட்சைலகணக்கு போட்டு போட்டுப் பார்த்து நல்ல மார்க் வாங்கிக்கலாம் ." டீச்சர் போன பின் பத்மினியின் தேற்றுதலைத் தாண்டியும் கணக்கில் முதல்மார்க் வாங்கிய சுப்பலக்ஷ்மியின் கோணல் நக்கல் சிரிப்பு தான் மேனாவைரொம்ப துடிக்க வைத்தது.


"இவள் ஏன் இப்டிச் சிரிக்கிறாள்? " சுப்பு சயன்ஸிலும் 95 மார்க் வாங்கி இருந்தாள் .அவளுக்கு சோசியல்சயன்ஸ் பாடம் தான் பெரும் பிணக்கு .அந்தப் பாடத்தில் மட்டும் தான் அவளைஅடித்துக் கொண்டு முந்த வழி இருந்தது. சந்திரா பாய் டீச்சர் தான்சோசியல் பாடம் எடுப்பார்கள். இன்னும் சோசியல் பேப்பர் தரவில்லை .ஒருவேளை மத்தியானத்துக்கு மேல் தரலாம். இல்லாவிட்டால் நாளைக்கு தான் . மேனாவுக்கு சோசியல் எடுத்த இந்த சந்திரா பாய் டீச்சருக்கும் ஆறாம்வகுப்பு ரேணுகா டீச்சருக்கும் தான் இன்றைக்கு எக்ஸாம் ஹாலில் வைத்துபெரும் போட்டி ஆகி விட்டது .


அடடா... அனுராதா டீச்சர் பரீட்சை ஹாலில் சூப்பர் வைசிங் செய்யும் லட்சணம்பற்றிச் சொல்ல வந்து விட்டு கதையில் எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருக்கிறோம் . சரி டீச்சருக்கு வருவோம் . அந்த அனுராதா டீச்சர் பரீட்சை ஹாலுக்கு வந்தாள் என்றால் சும்மாவாஇருப்பாள் ? ஹால் சுற்றி வருவது ஒரு பக்கம் ,இன்னொரு பக்கம் மேனா வகையாகமாட்டிக் கொள்வாள், அனுராதா டீச்சர் மேனகா பரீட்சை எழுதும் டெஸ்கில்சாய்ந்து நின்று கொண்டு கணக்குப் பரீட்சை என்றால் அவள் கணக்குப்போடுவதை உன்னிப்பாக பார்த்துக் கொண்டு இடையிடையே அதிரடியாய் ஏதாவதுகமென்ட் அடித்துக் கொண்டிருப்பாள் , தப்பாக ஃபார்முலா எழுதினால் நாலைந்து கொட்டுகள் இலவசம் ,அவள் அடிக்கும் கமெண்டுகளில் மொத்த ஹாலும் வேறுதிரும்பிப்பார்த்து சிரித்து தொலைக்கும்.


"பிள்ளையாரப்பா கணக்குப் பரீட்சை அன்னிக்கு மட்டுமிந்த அனுராதா டீச்சர்என் ஹாலுக்கு வரவே கூடாது " என்று மேனா நடுங்கிச் செத்திருக்கிறாள் பலமுறை . எல்லாம் அரைப் பரீட்சை வரை தான் .அப்புறம் ரொம்பவும் ரோசப் பட்டுக்கொண்டு இவள் ராத்திரி எல்லாம் முட்டிக் கொண்டு கணக்குப் பரீட்சைக்குபடியோ படியென்று படித்து எல்லாக் கணக்குகளையும் தலை கீழ பாடமாய் போட்டுப்பார்த்து 90 /100 மார்க்குகள் வாங்கிய பின் டீச்சரின் கெடு பிடிஇவளிடத்தில் குறைந்து விட்டது .கொஞ்சம் மதிப்போடு கூட பார்க்க ஆரம்பித்துவிட்டிருந்தாள் மேனாவை.


"பள்ளிக் கூடம் போய் வருவதென்ன அவ்வளவு லேசுப் பட்ட காரியமா ? " அனுராதா டீச்சர் யாரோடும் பேசி கவனம் திருப்பாமல் பிள்ளைகள் ஒருபேச்சுக்கு கூட காப்பி அடிக்க இடம் கொடாமல் பரீட்சை ஹாலில் ரோந்துசுத்தி வருவாள் என்றால் ஏழாம் வகுப்பு லச்சுமி காந்தம் டீச்சர் அதற்குஅப்படியே தலை கீழாய் ஹால் க்கு உள்ளே வரும் போதே மூச்சு விடாமல்சளா..புளாவென்று பேசிக் கொண்டே தான் வருவாள்.


பேச்சு யாருடன்வேண்டுமானாலும் நடக்கும் . பக்கத்து ஹால் ராஜாம்பா டீச்சர் ,அட்டன்டன்ஸ் கொண்டு வரும் ஆயா தனபாக்கியம,ஹாலுக்கு வெளியே கிரவுண்டில் நிற்கும் பி.டி மாஸ்ட்டர்....அப்படி இவர்கள் யாரும் அகப் படவில்லை என்றால் உள்ளே பரீட்சை எழுதும்மாணவிகள் . யாருடனாவது பேசிக் கொண்டே தான் இருந்தாக வேண்டும் அந்தடீச்சருக்கு. இல்லா விட்டால் உன்னைப் பிடி என்னைப் பிடி என்று ஒற்றைத்தலை வலி வந்து விடும் . பிறகு வாட்டர் பாட்டிலில் மாணவிகள் யாராவதுவெந்நீர் கொண்டு வந்திருக்கிறார்களா என்று ஒவ்வொருவராகக் கேட்டு ஆள்அனுப்புவாள் . ஒற்றைத் தலை வலிக்கு இப்படி வெந்நீர் பாட்டில் ஒத்தடம்கொடுத்தால் சுகமாக இருக்குமாம்.


கால் பரீட்சைக்கு எட்டாம் வகுப்பு C செக்சன் நான்சியையும் பத்தாம்வகுப்பு A செக்சன் மேனகாவையும் ஒரே டெஸ்க் போட்டிருந்தார்கள் .நான்சி இருந்த ஓரத்தில் தான் டீச்சர் உட்கார ஒற்றைச் சேர்போடப்பட்டிருந்தது .பெரும்பாலும் ஹால் பார்க்கும் போது உட்காரக் கூடாது.ஆனால் லட்சுமி காந்தம் டீச்சர் உட்கார்ந்து தான் ஹால் பார்ப்பதுவழக்கம். HM வரப் போவது தெரிந்தால் ரொம்ப சின்சியராக ஹால் பார்ப்பதுபோல காட்டிக் கொள்ள இத்தனை வருசத்தில் டீச்சருக்கு நன்றாகப் பழகிஇருந்தது.


நான்சி காந்தம் டீச்சர் ஹாலுக்கு வருவதற்கு முன்பிருந்தே டீச்சரைதிட்டிக்கொண்டே தான் இருந்தாள். "எருமை மாடு இது எங்க பரீட்சை எழுத விடப் போகுது ? பேசியே கொல்லுமே,கொறத்தி மாதிரி வேஷங்கட்டிட்டு டீச்சர்னு வந்திருக்கு பாரு! " அவள் பேச்சைப் பார்த்து மேனகாவுக்கு பயமாகி விட்டது ,இவளென்ன டீச்சர்என்ற மரியாதை துளி கூட வைக்காமல் இப்படி கொட்டி முழக்குகிறாள் என்று ;


நான்சிக்கு லட்சுமி காந்தம் டீச்சர் தான் குடிமையியல் பாடம் எடுக்கிறாள்.நான்சி க்கு மேனகாவை விட வயது ஒன்றிரண்டு கூடத்தான் இருக்கும்.அவள்முறையே ஆறு மற்றும் ஏழாம் வகுப்பில் இரண்டு முறை பெயில் ஆகி உட்கார்ந்துஉட்கார்ந்து தக்கி முக்கித் தான் எட்டாம் வகுப்புக்கு வந்திருந்தாள்பாவம். பொதுவாக நான்ஸியின் வகுப்புப்பிள்ளைகள் அவதானத்தின் படி டீச்சருக்குநான்சி என்றால் செந்திலைப் பார்த்த கவுண்டமணி மாதிரி ஏறுமாறாக கோபம்எகிறும் என்பதை அன்று பரீட்சை ஹாலில் பார்க்க முடிந்தது . அன்றைக்கு நான்சிக்கு செம மண்டகப் படி நடந்தது லட்சுமி காந்தம் டீச்சர் வாயில் .


தன் சேருக்குப் பக்கத்தில் நான்சி இருப்பதைப் பார்த்ததும் மெயின் சீட்கொடுக்கும் போதே ஆரம்பித்து விட்டாள் ; "பாரு இதெல்லாம் பரிட்சை எழுதலைன்னு யார் அழுதா ? மெயின் ஷீட்லையே அஞ்சுபக்கம் மிச்சம் வப்பா இவ. ஏண்டி இன்னைக்கு படிச்சிட்டு வந்து எழுதறியாஇல்ல பிட்டு ஒழிச்சு கொண்டாந்திருக்கையா? " நான்சி பயந்து பவ்யமாய் பதில் சொல்லி இருந்தால் ஒருவேளை லக்ஷ்மி காந்தம்டீச்சர் அன்றைக்கு பேசாமல் விட்டிருப்பாள் போலும். இவளைப் பிடித்த சனியன் ரெட்டை ஜடையில் சஞ்சரித்ததோ என்னவோ ;


"சும்மா இருங்க டீச்சர் ,நான்லாம் பிட்டு அடிச்சதே இல்லை.என்னை திட்றதேஉங்களுக்கு வேலையாப் போச்சு"

என்று எதிர்த்து பேசி விட்டாள் . எல்லோருக்கும் மெயின் சீட் கொடுத்து முடித்து விட்டு சேரில் உட்கார்ந்தடீச்சர் நான்சி 2 பக்கம் தாண்டி எதுவும் எழுத தெரியாமல்உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் கொதித்துப் போய் ஆரம்பித்து விட்டாள் ; "ஏண்டி டீச்சர் கிட்ட பேசற மாதிரியா பேசின நீ? எல்லாரையும் பார் மெயின்சீட் முடிச்சிட்டு அடிசனல் சீட் வாங்கிக் குமிக்குதுங்க .அவோ எல்லாம்படிக்கிற புள்ளைங்கடி. நீ என்ன ஸ்கூலுக்கு வர மாதிரியா வரவ? கண் மையும்,மூணு இஞ்சுக்கு பவுடரும் ,உடம்பு வெடிச்சுப் போறாப்ல சட்டையும் அரைப்பாவாடையும் .என்னாடி சட்டை இது மூணு வருஷம் முன்ன தச்சதாட்டம். ஆம்பளவாத்தியாருங்க முன்ன வெட்கமில்லாம எப்டி நிக்கிற இதப் போட்டுக்கிட்டு?இதுல கேம்ஸ்ல வேற சேர்ந்துகிட்டு பாதி நாலு முக்காவாசி வகுப்புக்குமட்டம் போடறவ. " டீச்சர் பெரு மழையென பொழிய ...இடையிடையே ;


"டீச்சர் அடிசனல் சீட் ; டீச்சர் எனக்கொரு பேப்பர் " என்று மற்ற மாணவிகள் எல்லோரும் தங்களது சின்சியாரிட்டியை தவறாதுகாட்டிக் கொண்டார்கள் . மேனகாவும் நெருக்கிப் பிடித்து பத்து அடிசனல்சீட் வாங்கி எழுதிக் குவித்துக் கொண்டிருந்தாள் .அன்றைக்கு வரலாறுபரீட்சை .கதை அடிக்க சொல்லியா தரவேண்டும் . இந்த மக்கு நான்சிக்கு ஒரு எழவும் தெரியவில்லை. டீச்சர் அத்தனை திட்டியும் எருமை மாடு சேற்றில் நிற்பதைப் போல தேமேவெனநின்று கொண்டிருந்தாள் . கடைசியாய் அலுத்துப் போனது டீச்சர் தான் ...


ஆனாலும் நான்சியை இன்னும்காயப் படுத்த வேண்டுபவளைப் போல எக்கி அவள் வயிற்றைப் பிடித்து கிள்ளி ; "இந்தா பாருடி ...நாளைக்கு ஒழுங்கா ஒரு தாவணிய சுத்திகிட்டு வாஸ்கூலுக்கு ...இல்லனா தாராளமா சட்டை தச்சு முழுப் பாவாடை போட்டுட்டுவரணும் ,நீ படிக்கத் தான் வரியா இல்ல ரிகார்டு டான்ஸ் ஆட வரியா இங்க"ஜாக்ரதை என்று ஓய்ந்தாள்.


நான்சி அழுது விடுவாளோ அன்று அவள் மூஞ்சியை மூஞ்சியை பார்த்துக் கொண்டுஉட்கார்ந்திருந்த மேனகா தன் எதிர்பார்ப்பில் தோற்றுப் போனாள். அவள் பாட்டுக்கும் முதல் மணி அடித்ததும் பேப்பரை குப்புரக்கவிழ்த்துவிட்டு எழுந்து போய் விட்டாள் .


"போகுது பாரு "கோயில் மாடு " மாதிரி திங்கு திங்குன்னு" டீச்சர் தான் உரக்க முணு முணுத்துக் கொண்டே நகர்ந்தாள். டீச்சருக்கு போக்குக் காட்டவேனும் நான்சி ரெண்டொரு நாட்கள் டைட்டாய்சட்டை அணிந்து கொள்வதை தவிர்த்து தாவணி உடுத்திக் கொண்டு வருவாள் எனமேனகா நினைப்பில் ஒரு கூடை மண் ,அவள் அப்படியே தான் வந்தாள் ,டீச்சரும்அப்படியே தான் கூடை கூடையாய் திட்டிக் கொட்டிக் கொண்டிருந்தாள் .


சரி அவர்கள் எக்கேடோ கெட்டு ஒழியட்டும் சந்திரா பாய் டீச்சருக்கு வருவோம் நாம் . ஹாலின் இந்த முக்கில் சந்திரா பாய் டீச்சரும் அந்த முக்கில் ரேணுகாடீச்சரும் நின்று இன்றைக்கும் அதே மெயின் பரீட்சை ஹால் தான். மேனகாவுக்கு சந்திரா பாய்டீச்சர் என்றால் கொள்ளைப் ப்ரியம் .டீச்சர் ரொம்பவெல்லாம் தொண தொணவென்று பேசிக் கொண்டிருந்து பரீட்சைஎழுதும் பிள்ளைகளை துன்புறுத்த மாட்டாள். அவளது சோசியல் பாடமே பரீட்சைஎன்றாலும் கூட அனுராதா டீச்சர் போல முந்திரிக் கொட்டையாய் முன்னால் வந்துநின்று கொண்டு தப்புக் கண்டு பிடித்து தலையில் குட்டி மாணவியை அவமானப்படுத்தி மொத்த ஹாலையும் கொல்லென்று சிரிக்க வைக்க மாட்டாள்.


மேனகாவை டீச்சருக்குப் பிடிக்கும் .டீச்சரின் அக்கா மகள்கள் யாரோஒருத்தியின் ஜாடையில் மேனா இருப்பதாக சந்திரா பாய் டீச்சரும் தையல்டீச்சர் காமாட்சியும் மாலை கோச்சிங் எடுக்கையில் ஒருநாள 9th A செக்சன்படிகளில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கையில் அவர்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள் . கூடவே மேனாவுக்கு சோசியல் சயன்ஸ் படிக்க ரொம்பப் பிடித்திருந்ததால்சந்திரா பாய் டீச்சரையும் ரொம்ப ரொம்ப பிடித்துப் போயிருந்தது .அப்படித்தான் டீச்சருக்கும் அவளுக்குமான பாசப் பிணைப்பு இறுகி இருந்தது.


டீச்சர்வகுப்பில் எல்லோரையும் ஏசுவாள் மேனாவைத் தவிர ; ஒருமுறை மாடல் எக்சாம் நடக்கையில் முன் தினம் சோசியல் ரிவிசன்வைத்துக்கொண்டிருந்தார்கள் . மேப் ஸ்கெட்ச் பேனாவால் கடலுக்குஅடர்த்தியாக நீலத்தை இவள் கொட்ட ஒவ்வொரு பெஞ்சாக மேப் நோட்டுதிருத்திக் கொண்டு வந்த டீச்சர் ஆள் யாரென்று பார்க்காமல் இவள் ஸ்கெட்ச்வைத்து தீட்டி இருந்ததைப் பார்த்து கடும் கோபத்தில் ;


"கழுதை ஏண்டி இப்படி மையக் கொட்டி தீட்டி இருக்க கடலுக்கு " ஆக்கங்கெட்ட கூகை ...கலர் பென்சில் இல்லியாடி ஒங்கிட்ட... " என்று தலையில் குட்ட கையை ஓங்கி விட்ட பிறகு தான் அது தனப்ரியத்துக்குகந்த மாணவி மேனகா என்று தெரிந்தது. டீச்சரின் ஓங்கிய வலது கை அப்படியே அந்தரத்தில் நின்று விட்டது .


"ஏய் நீயா ...என்று சிரித்து மழுப்பி விட்டு , இப்டி ஸ்கெட்ச்ல மையக் கொட்டக் கூடாது பென்சிலாட்டி தான் அடிக்கனும்...அடிச்சி முடிச்சிட்டு ஒரு துண்டு பேப்பர் கிழிச்சு கடல்பக்கம்முழுசும் ஒரே சீரா தேய்க்கணும் அப்பத்தான் கடல் கண்ல உறுத்தாது...பப்ளிக்ல மார்க் போடுவான் சரியா ?!" என்று பேசாமல் போய் சேரில் உட்கார்ந்து விட்டாள். எல்லாப்பிள்ளைகளுக்கும் டீச்சர் மேனாவைத் திட்டாததால் பொறாமையில் வயிறு எரிந்தது . அத்தனை பிரியமான டீச்சர் தான் சந்திரா பாய் டீச்சர் .மேனாவுக்கு பப்ளிக்எக்சாம் வர இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. அதற்கான மாடல் எக்சாம் எழுத தான் இப்போது இந்த மெயின் பரீட்சையை நினைத்துக்கூட அவளுக்கு அத்தனை துக்கம் எதுவுமில்லை ,போனவாரத்தில் ஒருநாள் டென்த் பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம்காசு போட்டு தங்களுக்குப் பாடம் சொல்லித் தந்த எல்லா டீச்சர்வாத்தியார்களுக்கும் சின்ன சின்னதாய் அன்பளிப்புகள் வாங்கி வைத்து ஒருஸ்வீட் ஒரு காரம் காப்பி என்று பிரிவுபச்சார பார்ட்டி வைத்தார்கள் . அப்போது பேசும் போது சந்திரா பாய் டீச்சர் சொன்னது; "இதுவரைக்கும் எட்டு செட் டென்த் பிள்ளைங்க இங்க முடிச்சிட்டுபோயிருக்காங்க ...அவங்க ஒவ்வொருத்தரையும் எம்பிள்ளைகளைப் போலவே எனக்குநல்லா ஞாபகம் இருக்கும் ,என்னடா டீச்சர் வகுப்பெடுக்கைல அப்படிஏசறா..இப்படி எசறாளே ன்னு இருந்திருக்கும் உங்களுக்கெல்லாம் பிள்ளைகளா ! எம்பிள்ளைங்க பப்ளிக்ல நல்ல மார்க்கு வாங்கி டாக்டர்,இஞ்சினியர்ன்னுவந்து நின்னா அதுல வர சந்தோசம் வேற எதுல இருக்கு! எல்லாம் உங்கநல்லதுக்கு நினைச்சு சொன்னது தான். பப்ளிக் பரீட்சைக்கு ஒரு மாசம் தான்இருக்கு ,திரும்பி பார்க்கறதுக்குள்ள ஓடிப் போயிடும் நாளு .அப்புறம்நீங்க ரெக்கை முளைச்ச பறவைங்க உங்களைப் பிடிக்க முடியாது ...எல்லாரும்பறந்து போய்டுவீங்க. இந்த டீச்சர் அன்னிக்கி அப்படிச் சொன்னாளேன்னுஞாபகம் வச்சுக்கறதே ரொம்பப் பெரிய விஷயம் தான். " லேசாக கண்கள் கலங்க டீச்சர் இப்படிச் சொல்லி முடிக்கக் கூட இல்லைமேனாவுக்கு பொங்கிப் பொங்கி அழுகை வந்தது ,கணக்கு டீச்சரின் செல்லப்பிள்ளை ஜெயலட்சுமி அனுராதா டீச்சர் பேசுகையில் விக்கி விக்கி அழுதேவிட்டாள். தமிழ் சாரை எல்லோருக்கும் பிடிக்கும் (அவர் தான் வகுப்பில் யாரையும்திட்டியதே இல்லையே ...குச்சனூர் பக்கம் ஏகப்பட்ட விவசாய பூமி அவருக்குராவெல்லாம் தோட்டம் வயல் என்று நீர் பாய்ச்சி விட்டு வருவார் என்று கேலிசெய்வார்கள் மற்ற ஆசிரியர்கள். அவர் ஒரு நாளும் வகுப்பில் தூங்காமல்இருந்ததே இல்லை .தமிழ் ரெகார்டு நோட்டில் கையெழுத்துப் போடும் போது கூடதூங்கிக்கொண்டே தான் போடுவார். ஆனால் எப்படியோ பரீட்சை வருவதற்குள்போர்சன் முடித்து விடுவார் ) இப்பேர்ப் பட்ட தமிழய்யாவை விட்டு பிரிந்துபோகப் போகிறோமே என்று ஒவ்வொரு பிள்ளைகளும் அழுது தவித்தார்கள் அன்றையதினம் . பிறகு டீச்சர்களும் வாத்தியார்களுமாய் எல்லாப் பிள்ளைகளையும் ரொம்ப நேரம்தேற்ற வேண்டியதாயிற்று . ஒரு வழியாய் பிள்ளைகள் தங்கள் டீச்சர்களோடும் வாத்தியாரகளோடும் ஹெட்மாஸ்ட்டரோடும் குரூப் போட்டோ எடுத்து முடித்த பின் பார்ட்டி இனிதேமுடிவடைந்தது. "அடடா...எங்கே ஆரம்பித்து எங்கெல்லாம் போய் விட்டோம் பாருங்கள்!?" ம்ம்...சந்திரா பாய் டீச்சரும் ரேணுகா டீச்சரும் மெயின் ஹால் உள்ளேநுழைகையில் பரஸ்பரம் புன்னகை முகத்தோடு தான் உள்ளே வந்தார்கள்,இருவருமேபொதுவில் சாப்ட் டீச்சர்கள் தான் , இருவருக்கும் முகம் சாந்தமாகத் தான்இருக்கும் எப்போதும் கடு கடு கடுவன் பூனைகள் அல்ல . முதல் ஒரு மணிநேரத்தில் எதுவும் பேசிக் கொள்ளவில்லை இருவரும் ,பிறகுசும்மாவே நிற்பது போர் அடித்திருக்கும் போல ரேணுகா டீச்சர் தான்ஆரம்பித்து வைத்தாள். " உங்க மாமியாருக்கு உடம்பு முடியாம சிரமப் பட்டாகளே டீச்சர் இப்பந்தேவலையா அவுகளுக்கு ? " " இப்பங் கொஞ்சந் தேவலை டீச்சர் ... நடமாட்டமில்லை ...ஒன்னுஞ் சாப்பிடக்கொள்ளல ...நீர்க்க கரைச்சிக் கொடுத்தா என்னவோ சிந்தியும் சிதறாமஇம்புட்டு உள்ளபோகும் " "அம்புட்டுக்கு என்ன ஆச்சு டீச்சர் அவுகளுக்கு ? கரைச்சி ஊத்துனா பசிதாங்குமா ? நீங்க இங்கிட்டு வந்திற்றீங்க ...புள்ளைங்க ஸ்கூல் போயிரும்,உங்க சார் ஆபீசுக்கு போய்டுவாரு ,வீட்ல அவுக மட்டும் தான் என்னமாச்சும்பசி அத்தில புடிச்சா என்ன செய்வாக?" "அதெல்லாம் பசிச்சா தான டீச்சர் ...படுக்க ஓரத்துலையே டப்பாவுல போட்டுரொப்பி வச்சிட்டுத்தான் வாறது இங்க. அவுகளுக்கு ரெண்டு நாளா மலச் சிக்கவேற .சும்மாவே பசி இல்லம்பாக இப்போ ஒரு காப்பி குடிக்க கூட கஷ்டப் படுதாக" நல்ல பச்ச வாழப் பழம் ஒரு சீப்பு வாங்கி கை எட்டுற தொலாவுல வச்சிட்டுவந்திருக்கேன் சாயங்காலமே போய் பார்த்தா சொல்வாக கக்கூஸ் போனாகளாஇல்லியான்னு" டெட்பான் தான் அவுகளே வச்சிக்கிடுவாக ." "ஏன் டீச்சர் பச்ச வாழப் பழம் வாங்கி வச்சிங்க ரஸ்தாளி நெல்லா ருசியாஇருக்குமே அத வாங்கி வச்சிட்டு வந்திருக்கலாமே ? நெல்லா இளக்குமேரஸ்தாளியும் ." ரேணுகா டீச்சர் இப்படிச் சொன்னதும் சந்திரா பாய் டீச்சர் சிரித்துக் கொண்டு ; "என்ன டீச்சர் இப்படிச் சொல்லிட்டீக ...என்ன இருந்தாலும் பச்சப்பழம் ருசி ரஸ்தாளி தராது ...பச்சப் பழம் ..பச்சப் பழம் தான் .நீங்க எப்டி இப்டிச்சொல்றீகன்னு தெரியல ! இதற்கு ரேணுகா டீச்சர் கொஞ்சமே கொஞ்சம் திகைத்தார் போல அதிருப்தியாய்முகத்தை வைத்துக் கொண்டு ; "இல்லைங்க டீச்சர் ரஸ்தாளி ருசியே தனி , லேசா இனிப்பும் புளிப்புமா அந்தருசி பச்சப் பழத்துல காணாது ! " பச்சப் பழம் துவர்ப்பா இல்ல இருக்கும்சமயத்துல இனிப்பு கூட காணாது " சப்புன்னு இல்ல இருக்கும் " சந்திர பாய் டீச்சர் பதிலுக்கு தன தரப்பு வாதமாய் ஏதாவது சொல்லியாகவேண்டிய கட்டாயத்தில் இருந்தால் இப்போது ; "அய்யே ...ரஸ்தாளியும் தான் சமயத்துல சவ சவன்னு ருசிய இல்லாம சப்புன்னுஇருக்கும் , சுமாரான பழத்தைக் காட்டிலும் மொந்தையா இருக்கற ரஸ்தாளிப்பழம் என்னிக்குமே இனிச்சு கண்டதில்லை நான். என்ன இருந்தாலும் பச்சைப்பழம் பச்சைப் பழம் தான் ." ரேணுகா டீச்சர் தன் பிரதிவாதித் தனத்தை நிறுவுபவளைப் போல நெற்றிசுருக்கி சந்திரா பாய் டீச்சரைப் பார்த்து ; "அய்யய்யே ...சந்திரா பாய் டீச்சர் நீங்க உங்க பக்கத்துக் கடைல சல்லிசாகிடைக்குதுன்னு மாமியார்க்கு பச்சப் பழம் வாங்கித் தந்து ருசியாஇருக்கும் ன்னு ஏமாத்தலாம் ,அதுக்கு நானும் அதை ஒத்துக் கிட முடியுமாஎன்ன ? எங்க வீட்லஎல்லாம் சின்னப் புள்ளைங்க கூட நம்பாதுங்க பச்சப் பழம் தான் ரஸ்தாளியக் காட்டிலும் ருசி ன்னு சொன்னா " திகைத்துப் போவது இப்போது சந்திரா பாய் டீச்சர் முறையானது ; என்ன இந்தRENUGA டீச்சர் சாதாரண வாழைப் பழ விவகாரத்தில் மாமியார் மருமகள் உள்அரசியலை எல்லாம் நுழைத்துப் பேச ஆரம்பித்து விட்டாளே என்று ; உட்கார்ந்து பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவிகளுக்கு விஷயம் ரொம்பவும்சுவாரஷ்யமாகிப் போனது போலும் ; பரீட்சை முடியும் நேரமாகி விட்டபடியால்டீச்சர்களின் வாய் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது பொழுதுபோக்காக இருந்திருக்கும் . அந்த நாளின் கடைசியில் எந்தப்பழம் ருசியானது என்பது தீர்மானமானதோஇல்லையோ ? சந்திரா பாய் டீச்சருக்கும் ரேணுகா டீச்சருக்கும் இடையில்இருந்த சுமூகமான ஒரு உறவு குழைந்து சீர் கேட்டுப் போனது . அடுத்து மேனாவுக்கு முழுப் பரீட்சை லீவு விட்டதும் பாட்டியோடு சேர்ந்துகேபிள் டி.வி .யில் பக்திப் படம் பார்க்கவே நேரம் சரியாகிப் போனது.தினமும மத்தியானத்தில் கந்தன் கருணை ,ஆதி பராசக்தி,முப்பெரும்தேவியர்,ஸ்ரீ வள்ளி என்று பக்தி சொட்டச் சொட்ட படங்கள் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் திருவிளையாடல் படம் பார்த்த நாளில் தான் அவளுக்குமறுபடியும் சந்திரா பாய் டீச்சருக்கும் ரேணுகா டீச்சருக்கும் இடையில்நடந்த பழப் பிரச்சனை உள்ளபடியே திருவாளர் முருகன் மற்றும்பெருவாளர்(ஞானப் பழத்தைப் பெற்ற பெற்றல் பெறுவாளர் !) விநாயகரால் நினைவூட்டப்பட்டது. அதாகப் பட்டது ... "பழம் என்றாலே ஆதியில் இருந்தே பிரச்சினை தான் போலும் " என்று பாட்டியிடம் பெரிய மனுஷி போல கொண்டாள் அவள். பாட்டியும் ஆர்.கே நாராயணின் "சுவாமியும் சிநேகிதர்களும் " கதையில்வரும் பாட்டி போல மேனா சொன்னதற்கு பள்ளி விஷயம் எல்லாம் தெரிந்தார்போலொரு பாவனையில் பெரிதாக சப்தமெழ " ம்ம் " கொட்டிக் கொண்டாள் .