Wednesday, September 16, 2009

கண்ணில் மழை...சூன்யம்...குருவியாய்ப் பிற...லயிப்பு(கவிதைகள்)


1
தங்கக் கடுக்கனும்
தவிட்டு நிற
முண்டா பனியனும்
மஞ்சள் பையும்
மட்டுறுத்தப் படாத கோவணமுமாய்
வாழ்ந்து முடிந்து விட்ட தாத்தாவுக்கு
பாடையில் வைத்துக் கட்டப் பட்டது
வெறும் வாக்கிங் ஸ்டிக் மட்டுமே !!!
பாட்டிக்கும் வருத்தமோ
என்னைப் போலவே!
சாம்பல் ஆற்றிய பொழுதில்
விரல்களில் இடறிய
பித்தளைப் பூண் பார்த்து
கண்ணில் மழை !

2

சாங்கோ பாங்கமாய்
பூரண விளக்கமாய்
சட்டி உடைப்பதாய்
சுட்டிக் காட்டி
விளக்கப் படவேயில்லையோ
எங்கேயும்... எப்போதும் ...
தாம்பத்யம் ?!
யாகாவராயினும் நா காக்க
காவாக்கால்
குடும்பநல கோர்ட்டில்
சொல்லிழுக்குப் பட்டு
சொந்த செலவில் சூனியம் தேடுக ...

3

சிட்டுக் குருவியின்
முறி சிறகேறி
பட்டுத் தலையில்
மெல்லக் குட்டி
விட்டு விடுதலை ஆவதெப்படி?
விளக்கம் கேட்டால்
விருட்டென்று பறந்தது
எம்பி எழுந்து ;
உதறி விழுந்தேன்
உதிர் மணல் போலே ...
உதற முடியுமோ ?
குருவியல்லால் ...
குருவியாய்ப் பிற!

4

நேற்றும்
இன்றும்
நாளையுமான
யோசனைகளைப்
பிய்த்துப் போட்டு விட்டு
கொஞ்சம் இளைப்பாறவே
அண்ணாந்து பார்க்கிறேன்
ஆகாய விமானத்தை ...
என்னை மறந்த நான்
லயித்தல் சுகம் .

Saturday, September 12, 2009

சோத்துக் கடையும் மீனும் ...

வனாந்திரம் ...

நீள் வனாந்தரம்
மரகதக் குன்றுகள்
மாணிக்கச் சூரியன்
துருப்பிடித்த இரும்பு போல
செப்பனிடா பழுப்பில்
கரடு முரடு தடித்தண்டில்
அடிவான மஞ்சளை
உரசித் தேய்க்கும் ஆவலுடன்
தகிக்கும் தங்கம் போல்
உரையாடும் மென்இலைகள் ...
அரவமாய் சல சலக்கும்
நிறமற்ற நீரோடை ...
வெள்ளியாய் கிள்ளிப் போட்ட
கண்ணாடி அப்பளமாய்
வானூரும் தண்ணிலா ...
கர்ஜிக்கும் சிங்கங்கள்
கண்களால் மினுக்கும் புலிகள்
நீருருஞ்சும் யானைகள்...
தாழப் பறக்கும் புள்ளினங்கள் ...
தாழை மொட்டவிழ
கம கமக்கும் வனம்.
வனம் ... நீள் வனம் ... வனாந்திரம்
அழகே...!
வனம்
அழகே ..!
கொள்ளை அழகின் கோடி அழகு !!!

Tuesday, September 8, 2009

விஷாகாவின் டயரி...( 2 )

விஷாகாவுக்கு ஸ்கூலுக்கு நேரமாகியிருந்தது ...


மாமா காலையில் எப்போதுமே எல்லோருக்கும் முன்னதாக சீக்கிரமே கிளம்பி விடுவார் ...மிச்சமிருப்பவர்களும் சென்றாயிற்று ...இனி அவள் கிளம்ப வேண்டியது தான் பாக்கி .கிச்சனுக்குள் நுழைந்து சாப்பிட என்ன இருக்கிறது என்று ஒவ்வொரு பாத்திரமாகத் திறந்து பார்த்தாள்...பெரிதாக அவளுக்கென்று பிரியாணியும் ...கோழி வறுவலுமா இருந்து விடப் போகிறது ?! சோறும் தயிரும் அங்கே எப்போதும் இருக்கும் விஷாகாவுக்கென்றே...போனால் போகிறதென்று மற்றவர்கள் சாப்பிட்டு விட்டு ...மதியம் டப்பாவில் கட்டிக் கொண்டதற்கும் போக மிஞ்சினால் எதோ கொஞ்சம் காயோ ..கூட்டோ இருக்கும்...இன்றைக்கு வாணலியில் ஓரமாக ஒட்டிக் கொண்டு கொஞ்சமே கொஞ்சம் கத்தரிக்காய் பொரியல் இருந்தது.


என்ன தான் அத்தையையும் அத்தை மகள்களையும் பற்றி தெரிந்திருந்தாலும் கூட விஷாகாவும் சின்னப் பெண் தானே! பாவம் அந்தக் கத்தரிக்காய் பொரியலைக் கண்டதும் அவளுக்கும் மனம் சிறிதே சமாதானமானது. எப்போதும் தயிருக்கு ஊறுகாயே சாஸ்வதம் என்று மனதை பழக்கி வைத்திருந்தாலும் நாக்கு நல்ல ருசிக்காக ஏங்குவதை யாரால் தடுக்க முடியும்?! அவளும் மனுசி தானே ?!


இப்படியெல்லாம் நீள நீளமாக யோசிக்கவே விஷாகாவுக்கு நேரமில்லை பாருங்கள் .மட மடவென்று குளித்தாள் ...நீல நிற யூனிபார்ம் சுரிதாரை எடுத்து மாட்டினாள்...பர பரவென்று சீவி ரெண்டு புறம் தலையை பின்னலிட்டு கருப்பு ரிப்பனால் தூக்கிக் கட்டினாள் ...நின்று நிதானமாகப் பார்த்து சிங்காரிக்கவெல்லாம் நேரமே இல்லை ...பாண்ட்ஸ் பவுடரை உள்ளங்கையில் தட்டி முகத்தில் பூசினதாய் பேர் செய்து குளியலறைக் கதவின் மறுபுறம் ஏற்கனவே ஒட்டி வைத்திருந்த ப்ழைய வட்ட வடிவ கருப்பு நிற ஸ்டிக்கர் பொட்டை எடுத்து குத்து மதிப்பாக புருவ மத்தியில் ஒட்டிக் கொண்டு ...நிமிர்ந்து மணி பார்த்தால் முட்கள் 8.25 காட்டின. 8.45 க்கு வகுப்பறையில் இருந்தே ஆக வேண்டும்.

இருபதே நிமிடங்கள் தான் இருந்தன ...பள்ளி வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரமாவது இருக்கும் ..எவ்வளவு வேகு வேகென்று நடந்தாலும் கூட எப்படியும் தாமதமாகி விடும் அபாயம் வேறு! அறை கிலோ மீட்டர் தூரத்தில் பள்ளியை வைத்துக் கொண்டு ராதா சைக்கிள் லில் தான் பள்ளிக்குப் போகிறாள் தினமும் ...இவளையும் உடன் அழைத்துச் செல்லலாம் தான்...சென்றும் இருக்கிறாள் முன்பெல்லாம். அந்த முன்பு முடிந்து போய் முழுதாய் இரண்டு வருடங்கள் ஆகின்றன .

விஷாகாவுக்கு அழுகை வரவில்லை.

கவனத்தை கலைத்துக் கொண்டு பாட்டி ஊருக்கு வந்த சமயம் வாங்கிக் கொடுத்திருந்த சாண்டக்ஸ் செருப்பில் கால்களை நுழைத்துக் கொண்டு விருட்டென்று வெளியேறி கதவை இழுத்துப் பூட்டினாள்...நல்ல வேலை தேர்வு நேரங்களில் ஷூ அணிவதில் இருந்து விலக்கு இருந்தது அவளது பள்ளியில் .சாவியை மீட்டர் பாக்ஸில் வைத்து மூடி விட்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

பத்து மணிக்கு மேல் மாமா வீட்டுக்கு வருவார்...அவருக்காகத் தான் சாவி மீட்டர் பாக்ஸில்.

முகமெல்லாம் நச நசவென்று ஈரமாகி காதோரம் வியர்வை கோடாக கழுத்தில் இறங்கி வழிய விஷி பள்ளி கேட்டுக்குள் நுழையும் போது... முதல் மணி அடித்துக் கொண்டிருந்தது ...இரண்டாம் மணி அடிப்பதற்குள் மாடியில் நான்காவதாக இருந்த தனது வகுப்பறைக்குள் தப தப வென்று ஓடிப் போய் தன்னிடத்தில் அவள் உட்காரவும் இரண்டாம் மணி அடிக்கவும் சரியாக இருந்தது.

முதல் வகுப்பு இன்று கணக்கு தான். கீதா மிஸ் மணி அடித்த உடனே கதவுக்கு வெளியே வே இத்தனை நேரம் காத்திருந்ததைப் போலத்தான் விசுக்கென்று உள்ளே வருவார். நல்ல மிஸ் ?!!??விஷி கணக்குப் போட்டு முடிக்கும் வேகத்தைப் பார்த்து அவளை அநேக நேரம் மெச்சிக் கொண்டதுண்டு .

தொடரும்...

Monday, September 7, 2009

விஷாகாவின் டயரி ...

ஹே விச்சு எங்கடி போன ?

எவ்ளோ நேரம் கத்திட்டே இருக்கேன்...வந்து இந்த டவல் எடுத்துக் குடுத்துட்டுப் போய் தொலையேன் .

பாத்ரூமில் இருந்து அம்பிகா அக்கா கத்துவது விஷாகாவின் காதில் விழுந்தும் அவள் சட்டை செய்தாளில்லை ;நிதானமாக நடந்து போய் டவல் எடுத்து கதவருகே நீட்டினாள் .

ஈரக் கைகளால் வெற்று வெளியில் துளாவிக் கொண்டிருந்த அம்பிகா "எருமை மாடே ஏன் இவ்ளோ மெத்தனம் உனக்கு? கருவிக் கொண்டு வெடுக்கென்று டவலைப் பிடுங்கிக் கொண்டு கதவைப் படீரென்று அடித்து சாத்தினாள் .

சமையல் உள்ளில் தேங்காய் துருவிக் கொண்டிருந்த பார்வதி விஷாகாவின் அத்தை
ஏண்டி விஷி ...ஒரு வேலையும் பண்ணாம நீட்டி நெளிச்சிக்கிட்டுத் திரியற காலமே உங்க மாமா இஸ்திரிக் காரன் கிட்ட துணி கொண்டு போய் போடச் சொன்னாரே ? ...போட்டியா? இல்லியா? எப்போ பார்த்தாலும் மச மசன்னு நில்லு சுவத்த வெறிச்சிக்கிட்டு .என் தலையெழுத்துடி உன்னக் கட்டிட்டு மாரடிக்கணும்னு அலுப்புடன் துருவி முடித்த தேங்காய் சிரட்டையை ச்சட்டீர் என்று குப்பைத் தொட்டியில் விசிறி அடித்தாள்.

விஷாகா அசரவில்லை. காதில் எதுவும் விழுந்தார் போலவே காட்டிக் கொண்டாள் இல்லை ;

பார்வதியின் இளைய மகள் ராதா அம்பிகாவின் தங்கை ...எதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தவள்...விஷாகாவைக் கண்ணில் கண்டதும்..

ஏய் விச்சு என் சைக்கிள் எடுத்து ஓட்டினியாடி நீ ? வீல் எல்லாம் ஒரே சேறு ...உங்க தாத்தாவா வண்டியக் கழுவித் தருவாரு? மரியாதையா இப்ப என் சைக்கிள் கழுவித் துடைச்சிட்டு அப்புறம் நீ ஸ்கூலுக்கு கிளம்பு .பத்ரகாளி மாதிரி சிடு சிடுத்து விட்டு மீண்டும் பாடம் படிப்பவளைப் போல டெஸ்க்கில் குனிந்து கொண்டாள்.

எதற்கும் வாய் திறக்காத விஷாகா பேசாமல் தனது புத்தகப் பை இருந்த அறைக்கு நடந்தாள் ...

அவளது முதுகுக்குப் பின்னே ...

சரியான அழுத்தம்டி இது ...பாரேன் இத்தனை கரிக்கறோம் ...ஏதானும் வாயத் தொறக்குறதா பார்?!

அறைக்குள் விஷாகா;

சோசியல் ஸ்டடிஸ் புத்தகத்தை அடுத்து கணக்குப் புத்தகத்துக்கும் இங்கிலீஷ் புத்தகத்துக்கும் இடையில் கருநீல நிறத்தில் மெத்து மெத்தென்ற முகப்பு அட்டைகளுடன் நீட்டிக் கொண்டிருந்த தனது டயரியை எடுத்து நடுப்பக்கம் பிரித்து சொருகி வைத்திருந்த ஒரு போட்டோவை எடுத்துக் கொஞ்ச நேரம் வெறித்து விட்டு மறுபடி மூடி பைக்குள் தள்ளினாள் .அவள் கண்ணில் நிறைந்து தழும்பியது நிச்சயம் கண்ணீர் இல்லை .தாங்கவொண்ணா கடுங்கோபம் .

மென்று விழுங்குவதைப் போல ஒரு சொம்பு நீர் மொண்டு தொண்டைக்கு குழிக்குள் விட்டு அந்த கோபத்தைக் கதறக் கதற சாகடித்தாள் ,இப்போது கண்ணில் அந்தப் பழைய கோபத்தைக் காணோம் ,முந்தைய வெறுமை எஞ்சி நின்றது.

அறையை விட்டு வெளியே வந்தவள் யாரிடமும் ஒரு வார்த்தை பேசினாள் இல்லை ..அங்கிருப்பவர்களும் அவளை பார்வையால் சதா ஆராய்ந்தார்களே தவிர ;என்ன வேண்டும் என்றும் கேட்கவில்லை..சாப்பிட்டாயா ...சாப்பிடுகிறாயா என்றும் ஒப்புக்கு கூட சொன்னார்கள் இல்லை.

அத்தை பார்வதி இடைநிலைப் பள்ளி ஆசிரியை ...அவளது பள்ளி நேரத்துக்கு சரியாக அவள் வெளிக் கிளம்பிப் போனாள் ,அவளுக்குப் பின்னே அம்பிகா பல்கலைக் கழகத்துக்கும் ,ராதா கல்லூரிக்கும் ஒவ்வொருவராய் கிளம்பி இடத்தைக் காலி செய்தனர்.

விஷாகா மட்டும் தனியானாள் அங்கே.

அவளும் தான் பள்ளிக்குப் போக வேண்டும்

பிளஸ் டூ ...மாதாந்திரத் தேர்வு நேரம் வேறு...

வீட்டில் வேலைகள் என்று அதிகப் படியாய் செய்ய நிறைய இருந்தன தான் ..ஆனால் அதில் பட்டுக் கொள்ள அவளுக்கு இப்போதெல்லாம் விருப்பமே இல்லை.
மாமா வீடென்று அவள் இங்கே தங்கிக் கொள்ள வந்து ஆறேழு மாதங்கள் கடந்து விட்டிருந்தன,

பாட்டியும் தாத்தாவும் ஊரில் விவசாயம் பார்க்கின்றனர். அங்கிருக்கும் பள்ளி இவளை ஆங்கில அறிவாளியாக்காது என்று நம்பி இங்கே அனுப்பி விட்டு அவர்கள் நிம்மதியாகி விட்டனர் அப்போதே.

அவர்கள் பாவம் வயதானவர்கள் ..

அவர்களைப் பற்றி விஷாகாவுக்கு எந்த கோப நினைவுகளும் அற்றுப் போய் நாட்கள் பல கடந்து விட்டிருந்தன. அவர்கள் மட்டும் அல்ல ..யாரைப் பற்றிய நினைவுகளும் இன்றி அவள் ஏதோ தனியானா கூட்டுக்குள் அடைபட்டுப் போனதைப் போலத் தான் சில மாதங்களாக உணர ஆரம்பித்திருந்தாள் .

விஷாகாவின் அம்மாவும் ..அப்பாவும் எங்கே ...?!

கேட்கத் தோன்றுமே ?!

நாளை அவளே சொல்லக் கூடும்.

Sunday, September 6, 2009

கேளுங்கள் இதொன்றும் ரகசியமல்ல ;

அசைவுகளற்றதொரு
சமாதானத்தின்
எருமைச் சோம்பல்
முறியும் போதில்
முளையிடும் சன்னக் கோபத்தில்
கடுகி மறையும்
முந்தைய சகிப்பு
பின்னும் ஒரு கோபப் பரவெளி
முன்னும்
பின்னும்
அசைதலைப் போலவே அலைதல்
கோபங்களால் நிரப்பப் பட்ட
எனது காபிக் கோப்பை
சிதறியதும்
பீங்கான் ஆனது ;
கேளுங்கள் இதொன்றும் ரகசியமல்ல !