Friday, December 31, 2010

சால்னாக்கடை சாமுண்டீஸ்வரி ...


என் கிளாஸ்மெட் சாமுண்டீஸ்வரியின் அப்பா தான் புரோட்டா மாஸ்டர்.அவரே தான் செல்லேரியம்மன்கோயில் பூசாரியும் கூட. புரோட்டாவும் நானே பூசாரியும் நானே கதையாகரெட்டைக் குதிரை சவாரி அவருக்கு .கோயில் பொங்கலுக்கு கிடா வெட்டுபிரசித்தம் என்பதால் ஒரு சால்னாக் கடை ஆள் பூசாரியாய் இருப்பதில்அம்மனுக்கு எந்தக் கோப தாபங்களும் இல்லாமலிருந்து வந்தது .

சாமுண்டீஸ்வரி அந்தக் கால பாப் கட் பேரழகி ,முடியை ஏன் சினிமாவில் குட்டைபாவாடை கட்டி ஆடும் விஜய லலிதா போல கட்டையாக அப்படி வெட்டிக் கொள்கிறாள்என்று நாங்கள் கேட்டால் அவள் பதில் ஏதும் சொன்னதே இல்லை.கூச்சமாய்சிரித்து வைப்பாள். எப்போதேனும் ரீசஸ் பீரியடில் தண்ணீர் குடிக்கபோகிறோம் என்ற பெயரில் நாங்கள் வடக்குத் தெருவை சுற்றி வந்தால் அங்கேஅவளது வீடு கம் புரோட்டாக் கடை பனை ஓலைக் கூரையில் செருகி வைத்திருக்கும்பழைய ராணி புத்தக அட்டையைக் காட்டுவாள் .

நூற்றுக்கு நூறு படத்தில்விஜயலலிதா டான்ஸ் போஸ் இருக்கும் அதில் ,.அந்தப் பாடத்தில் தான்விஜயலலிதாவுக்கு என்ன ஒரு அழகு கூந்தல் ! இப்படி நினைத்துக் கொண்டு தான்அந்தப் புத்தகப் படத்தைக் காட்டி அவளது அப்பா ஒவ்வொரு முறையும் தனமகளுக்கு ஊர் நாவிதரிடம் முடி வெட்டி விடுவார் போல என்று நினைத்துக்கொண்டோம் நாங்கள் .அது நிஜமும் கூட. பூசாரி விஜயலலிதாவின் மிகப் பெரியரசிகராக இருந்தார் என்பது ஊரறியும் .

அம்மாவுக்கு சாத்தூர் வெங்கடாசலபுரத்தில் சத்துணவு டீச்சர் வேலை,அப்பாவுக்கோ உத்தியோகம் மதுரைக்கு அந்தப் பக்கம் அதனால் வாரம் ஒரு முறைவந்து போவார் .அப்பா வரும் போதெல்லாம் மதியம் சாமுண்டீஸ்வரி புரோட்டாஸ்டால் சால்னா மணக்கும் எங்கள் வீட்டு வட்டில்கள் தோறும் .சால்னாவில்மருந்துக்கும் ஒரு சின்ன கோழித் துண்டோ ...கறித் துண்டோ இருக்கவேஇருக்காது,வெறும் சுடு தண்ணீரில் தேங்காயை மசால் கரைத்து அறைத்து விட்டதினுசில் இருந்தாலும் அப்படியோர் ருசி .


மத்யான வாக்கில் பெரும்பாலும் நான் தான் புரோட்டா வாங்கப் போவேன் .எண்ணெய் கசிந்த தினத் தந்தி பேப்பரில் கசங்கிய வாழை இலையை பரத்திஏழெட்டு பத்து புரோட்டாக்களை அடுக்கி நீட்டாக மடித்துச் சுற்றி மேலே சரடு கட்டி முறுக்கி எடுத்து பெரிய தேக்சா மூடி மேலே வைத்து தள்ளி விடுவார். " இந்தா எடுத்துக்கோ " என்பதாக;


சால்னா வாங்க வீட்டிலிருந்து திருக்கு செம்பு எடுத்துப் போவேன் நான்.முக்கால் சொம்பு நிறைக்க சால்னா கொதிக்கும் .
சூடான எண்ணெய் புரோட்டாவும் கருவேப்பிலை மிதக்கும் சால்னா வாடையுமாக ஒருகுதூகல மனநிலை வாய்க்கும் அப்போது .

புரோட்டா சாப்பிடும் ஆசை ஒரு பக்கம்இருந்தாலும் பெரிதும் ஈர்த்த ஒரு விஷயம் ;

புரோட்டா மாஸ்டர் புரோட்டா தட்டும் லாவகம் தான் .

"இந்த வெயிலில் நான் வடக்குத் தெரு வரை எல்லாம் போக மாட்டேன். தினமும்நானே தான் போகனுமா இன்னைக்கு தம்பி இல்லன தங்கச்சிய அனுப்புங்கம்மா "

என்றெல்லாம் போட்டி போட்டுக் கொள்ள அவசியமில்லாமல் ,அல்லது தோன்றக் கூடஇல்லாமல் நானே ஒரு பழைய வயர் கூடையும் திருக்குச் செம்பும் எடுத்துக்கொண்டு குசியாக கிளம்பி விடுவேன்.


நீள் சதுரமான பெரிய இரும்புத் தோசைக் கல் ,என்ன தான் புரோட்டாவும் அதில்போட்டாலும் கூட அதை தோசைக் கல் என்றே சொல்லிக் கொள்கிறோம்,ஏனென்றால்தோசையும் அதில் தான் ஊற்றப் படுகிறதென்பதால்! அந்தக் கல்லை பொசுங்கிச்சுடும் அளவுக்கு காய வைத்து நன்றாக காய்ந்திருக்கிறதா என்று பார்க்க தன்நெற்றி வியர்வையை புறங்கையால் வழித்து ஒரு சுண்டு சுண்டி விடுவார்புரோட்டா மாஸ்டர். கல் எறும்பு கடித்த பச்சிளம் குழந்தை போல சுரீரென்றுவீறிடும். இது நல்ல பதம் போல .


என்னென்னவோ வித்தையெல்லாம் காட்டி உருட்டி வைத்த மைதா உருண்டைகளைஇஷ்டத்துக்கும் நாளா பக்கமும் வீசி வீசி தட்டி கொட்டி சற்றேறக் குறையவட்டம் எனும் ஒரு வடிவத்தில் புரோட்டாவாக்கி அந்தக் கல்லில் சாதாரணமாகஅன்றி வீசி வீசிப் போடுவார். ஒரு பத்து பதினோரு புரோட்டாக்களை ஒரே தடவைஇப்படி வீசி முடித்ததும் அதில் ஒரு அகப்பை பாமாயிலை விட்டு திருப்பிப்போடுவார் .பாமாயில் மனம் நாசி நிறைத்து திகட்டினாலும் கூட இந்த வேடிக்கைசலித்ததில்லை எனக்கு.


முதல் சுற்று புரோட்டாக்களை எடுத்ததும் அடுத்த ஈடு புரோட்டாக்களை கல்லில்வீசும் முன்பாக படு சுத்தக்கார பெருமாளாக எரவாணத்தில் செருகி வைத்த ஒருபக்கம் மட்டுமே குறிப்பிடத் தக்க வகையில் தேய்ந்து போன கட்டை விளக்குமாற்றை எடுத்து "சரக் ...புருக்கென்று " கல்லில் இட வலமாக விட்டுபரத்தி உள்ளிருக்கும் தீய்ந்த புரோட்டாத் துணுக்குகளை பெருக்கித்தள்ளுவார்.இந்தக் காட்சி காணக் காணத் தெவிட்டாது. அப்படியோர் லாவகம்மாஸ்டரின் கைகளுக்கு ,ஒரு முறை கூட அதிக பட்ச நேரம் எடுத்ததில்லை, ஒரேநொடி தான். பிச்சு பிசிறுகள் இன்றி கல் எண்ணெய் மினுங்க சுத்தமாகி சூடுதணியாமல் புகை மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் , கல்லின் சூட்டைத்தணிக்கவே பிறவி எடுத்ததைப் போல அடுத்த ஈடு மைதா உருண்டைகள்புரோட்டாவாகத் தயாராய் தேக்சா மூடி மேல் நிற்கும்.


இதெல்லாம் ஓரிரண்டு வருடங்களில் முடிவுக்கு வந்தது.

நாங்கள் அப்பாவின் ஊருக்கே மறுபடி போக வேண்டியவர்களானோம் .

அங்கே புரோட்டாக் கடைகளைக் காணோம் ,ஆனால் நான்கைந்து மிக்சர் கடைகளும்காபிக்கடைகளும் இருந்தன. எழுபத்தி ஐந்து பைசாவுக்கு நூறு கிராம் மிக்சர்.வெறும் ஐம்பதே பைசாவுக்கு சுமாரான காபி ,முப்பது பைசாவுக்கு வடையும்போண்டாவும் கூட கிடைத்தது. சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் அதே பழைய வயர்கூடையும் திருக்கு செம்பும் இப்போது மிக்சருக்கும் காபிக்கும் என்றானது.


புரோட்டா மாஸ்டருக்குப் பதிலாக இப்போது ஜம்பலிபுத்தூர் டீ மாஸ்டர் ஒருவர்வாய்த்தார். டீ மாஸ்டர் தான் காப்பியும் ஆற்றுவார் என்றாலும் அவருக்குபெயரென்னவோ டீ மாஸ்டர் தான்.இந்த டீ மாஸ்டர் காபி ஆற்றும் அழகே அழகு.நல்ல உயரமான மனிதர் தன் முழு உயரத்துக்குமாக காபியை கண்ணாடி தம்ளர்நிறைக்க நிறைக்க நுரை பறக்க விட்டு சர்...சர் என்று ஆற்றினால் அது ஒருகண் கொள்ளாக் கட்சியாகாதோ!


ஜீரா தோசை என்றொரு வஸ்து கூட இந்த மாஸ்டரால் தான் எங்களது ஊரில் அன்றையநாட்களில் பிரபலமானது. இந்த மாஸ்டருக்கும் கடை உரிமையாளரானஜம்பலிபுத்தூர் நாயக்கருக்கும் சம்பள விசயமாக ஏதோ வாக்கு வாதம் வந்துசில பல மாதங்களில் மாஸ்டர் வாக் அவுட் ஆனார்.

பேக் டு தி புரோட்டா மாஸ்டர் ...

புரோட்டா மாஸ்டருக்கு வயசாகிப் போனதால் இப்போதெல்லாம் முழு நேரப்பூசாரியாகி விட்டார்.நோ புரோட்டா அட் ஆல் . புரோட்டாவுக்கு பாமாயிலைஅகப்பை நிறைய அள்ளி ஊற்றும் பாவனையில் கை நிறைய திருநீறை அள்ளி அள்ளிபக்த கோடிகளின் முகமெல்லாம் வீசிக் கொண்டிருக்கிறார் இப்போது.

சாமுண்டீஸ்வரி பாப் கட் தலைமுடியை இப்போது தன் மகளின் தலைக்கு இடம்மாற்றி விட்டிருந்தால் போலும் .விஜயலலிதா ஹேர் ஸ்டைல் இப்போது அடுத்ததலைமுறையின் தலைக்கு ட்ரான்ஸ்பர் ஆகியிருந்தது .

பொங்கலுக்கு கோயிலுக்குசாமி கும்பிடப் போன போது பாப் கட் முடி சிலும்பி எழ அந்தக் குட்டிவெட்கமாய் என்னைப் பார்த்து சிரித்தது அதன் அம்மாவைப் போலவே .

டீ மாஸ்டரை மறந்தே போய்விட்ட பல வருடங்களின் பின் ஒருநாள் நள்ளிரவில்தேனீ டூ சென்னை பேருந்துப் பயண தேநீர் நிறுத்தத்தில் தேமேவெனவிக்கிரவாண்டியில் ஒரு காபிக் கடையில் டீ ஆற்றிக் கொண்டிருந்தார்.

புரோட்டா மாஸ்டர் பூசாரியாகலாம் டீ மாஸ்டர் கடைசி வரை டீ மாஸ்டர் தான்போல ! என்று நினைத்துக் கொண்டே பஸ்ஸில் ஏறி என் இருக்கையில் அமர்ந்துவிட்டுப் போன தூக்கத்தை தொடர ஆரம்பித்தேன்.

மழை வரப் போவதற்கு அறிகுறியாய் ஈர காற்றில் நீர்த் துளிகள் மிதந்துவந்து கன்னம் தீண்டிப் பறந்தன ஜன்னல் வழியே...


எங்கும் மிதந்து பறக்கின்றன நீர்த் துளி மேகங்கள் . பழைய பிஸ்கட் கலர்வயர் கூடை ,திருக்கு செம்பு,புரோட்டா மாஸ்டர்,டீ மாஸ்டர்...சாமுண்டீஸ்வரி அவளது பெண் குழந்தையின் வடிவில் .