Friday, January 16, 2009

மயிலு...மயிலு...மயிலம்மா!!!


மயில் எவ்ளோ அழகா இருக்கு இல்ல?

எங்கம்மாவோட பட்டுச் சேலை போல எவ்ளோ கலர்?கழுத்து பாரு இவ்ளோ நீளமா !வழு வழுன்னு இருக்கு பாரு .

ராஜி தான் கேட்டுக்கொண்டிருந்தாள்...எத்தன எத்தன கலர் பாரேன் ?!

அந்தக் கடங்கார மல்லீஷ் ராஜியை மட்டும் மயிலைத் தொட்டுப் பார்க்க அனுமதித்தான்...என்னை அதன் கொண்டையைக் கூட தொட விடவில்லை .அவன் மீது சும்மாவே எனக்கு நல்ல நட்பு இல்லை.எப்போதடா யாரிடமாவது அவனுக்கு தர்ம அடி வாங்கித் தரலாம் என்ற நல்லதொரு எண்ணத்தில் இருந்தேன் நான்.

அவனுக்கும் எனக்கும் வகுப்பறை சண்டை வெகு பிரசித்தம் .

விமலா டீச்சருக்கு எப்போதுமே என்னைத்தான் ரொம்பப் பிடிக்கும்.(நன்றாகப் படிப்பவர்களைத் தானே டீச்சருக்கு பிடிக்கும்!!!) விமலா டீச்சர் எப்போது பாடத்தில் கேள்வி கேட்டாலும் மல்லீசுக்கு பதில் தெரியாமல் தான் போகும் .பதில் தெரியாத எல்லோருமே வரிசையில் நிற்க வேண்டும்.யாருக்கு பதில் தெரியுமோ...அதாவது யார் பதில் சொல்கிறார்களோ அவர்கள் நிற்பவர்களைக் குனிய வைத்து முதுகில் நங்கென்று குத்தலாம்.(எவ்வளவு பலமாக முடியுமோ அவ்வளவு பலமாக!)

அப்படித்தான் ஒருமுறை அல்ல பலமுறை அவன் என்னிடம் அடி வாங்கினான்.அந்தக் கடுப்பு.மயிலை சரியாகவே பார்க்க விடவில்லை.எனக்கும் மயில் பார்ப்பதில் எல்லாம் அவ்வளவு அதிக ஆர்வம் இல்லையென்றாலும் இவன் இவ்வளவு பிகு செய்கிறானே என்று தான் "இவனென்ன தடுப்பது"என்ற ஆக்ரோஷம் வேறு! அவன் மயிலை மறைக்க ...மறைக்க இவனை ஏதாவது ஒரு விசயத்தில் மாட்டி விட்டே தீருவது என்று முடிவே செய்து விட்டேன்.

என்ன செய்யலாம் இவனை? திடுமென்று தான் அப்படி முடிவு செய்தேன் .அவன் என்னவோ ஏதோ...நாய்...பூனையை விரட்டுவது போல எல்லாரையும் விரட்டிக் கொண்டு இருந்தான் .மயில் பார்க்க வந்த பையன்களிலும்... பெண்பிள்ளைகளிலும் அவனது கூட்டாளிகள் யாரோ அவர்களிடம் மட்டும் தனி கரிசனம் காட்டினான் .மற்றவர்களை சூ...சூ என்று விரட்டினான். இதெல்லாம் அராஜகம் இல்லையா? (மயில் என்ன இவன் தாத்தா வீட்டு சொத்தா என்ன? எங்கேயோ யாருடைய தோட்டத்திலோ சோளம் கொத்தித் தின்ன வந்த அப்பாவி மயில் அது! அதைப் போய் எப்படித்தான் அதற்குத் தெரியாமல் பொறி வைத்துப் பிடித்தானோ?!

எல்லோரிடமும் பீற்றிக் கொள்கிறான்,அவனே அவன் கையால் மயிலை பொறி வைத்துப் பிடித்ததாக .எனக்குத் தெரியும் நான் நம்பவே இல்லை.இது அவனது தாத்தா வேலையா வேலையாகத் தான் இருக்கும்!!! அவர் தான் தோட்டம் தோட்டமாக மயில் பிடித்துக் கொண்டு திரிவார்.மயில்கறி அப்போது எங்கள் ஊரில் பேமஸ் .

பெரும்பாலும் விவசாயக் குடும்பங்கள் என்பதால்,மயில்கள் கூட்டம் கூடமாக வந்து பயிர்களை அழித்து விட்டுப் போகும் தொல்லை பொறுக்க மாட்டாமல் தொட்ட சொந்தக்காரர்கள் யாரும் வேலையாவை ஒன்றும் சொல்வதில்.சில வீடுகளில் மயில் பிடிக்க அவருக்கு கூலி கூட தருவதுண்டு.

வேலையா மயில் பிடிக்கப் போவது எனக்கு என் பாட்டி சொல்லித் தெரியும்.மயில் முட்டை பெருசாக இருக்கும் கோழி முட்டையை விட என்பார் வேலையா.நான் பார்த்தது இல்லை.வேலையா வந்தால் என்னையும் மயில் பார்க்க விடுவார் என்று நினைத்துக் கொண்டேன் நான்.

அந்த மல்லீஸ் ஏதேதோ அளந்து கொண்டிருந்தான் எல்லோரிடமும்.மயில் தான் இனி அவனுக்கு ரொம்ப நெருங்கிய கூட்டாளியாம்.தினம் காலையில் அதற்க்கு சோறு வைத்து விட்டுப் பிறகு தான் இனிமேல் இவன் சாப்பிடுவானாம் .மயிலை அதன் காலில் ஒரு சின்னக் கயிறு கட்டி அந்தக் கயிற்றின் அடுத்த முனியை அவன் வீட்டு ஜன்னல் கம்பியில் கட்டி இருந்தான் அவன்.பாவம் மயில்!அது பாட்டுக்கு எங்கேயோ பறந்து திரிந்திருக்கும் நேற்று வரை .

முதலில் அவன் கயிற்றை அதன் கழுத்தில் தான் கட்டினானாம்.மயில் அகோரமாய்க் கத்தவே பிறகு தான் இவனாகவே புரிந்து கொண்டு காலில் கயிற்றை கட்டினானாம்.(பெரிய அறிவாளின்னு நினைப்பு இவனுக்கு ) அவன் மயில் பிடித்த கதை இப்படியாக நீண்டு கொண்டே போனது.வீட்டில் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை ,வேலையா எங்கே போனாரோ?!இப்போது வந்தாரென்றால் இவனைப் பற்றி வண்டி வண்டியாகப் புகார் சொல்லி விட்டு மயிலையும் ஆசை தீர தொட்டுப் பார்த்து விட்டு என் வீட்டுக்கு ஓடி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் நான்.

மயில் நமது தேசியப் பறவை என்று சோசியல் டீச்சர் சொன்னது ஞாபகம் வந்தது.புக்கில் பார்த்த மயிலின் தோகை ரொம்பப் பெரிசு இந்த மயிலுக்கு தோகை கொஞ்சம் சின்னதாக இருந்தது. கணக்கு சார் மகள் மேனகா அவனிடம் ;

"மல்லீஸ்...மல்லீஸ் இந்த மயிலை தோகை விரிச்சி ஆட வையேன் ...ஒரே ஒரு தடவை டா என்று கெஞ்சினாள்.அவனுக்கு குழப்பமாகி விட்டது.இந்தப் பொண்ணு சரியான லூசு ...மயில் நாம சொன்னாலாம் ஆடாது...அதுக்கா தோணினா தான் ஆடும் என்றாள் பாலாமணி அத்தையின் மகள் வேணி.

இல்ல இல்ல ...நான் சொன்ன அது ஆடும். நீங்கலாம் இருக்கீங்க இல்ல அதான் அது ஆடாது இப்ப.நீங்கலாம் போனப்புறம் தனியா ஆடும் ...எவ்ளோ அழகா ஆடும் தெரியுமா?(அதென்னவோ மயில் அவனிடம் பலமுறை தனியாக பத்மினி பரதம் ஆடுவதைப் போல ஆடிக் காட்டியது என்ற பாவனையில் அவன் மெய் மறந்து நூல் விட்டுக் கொண்டிருந்தான்.)

எல்லோரும் அதை நிஜம் போலவே கேட்டுக் கொண்டிருந்தோம்.(நானும் தான் ...மூன்றாம் வகுப்பில் இதெல்லாம் சகஜம்யா!!!)அந்த வயசுல க்ளாஸ் மேட் சொல்றதெல்லாம் உண்மைன்னு தாங்க நம்பி இருப்போம் எல்லோருமே?!)

அவன் தினமும் அவனுக்குப் பிடித்தவர்களை மட்டும் தான் மயிலைத் தொட்டுப் பார்க்க அனுமதிப்பானாம் .இதைச் சொல்லி விட்டு என் பக்கம் குசும்பாய் ஒரு பார்வை வேறு !

இருடா இரு உனக்கு வச்சிருக்கேன் ஆப்பு என்று எனக்குள் நான் சொல்லிக் கொண்டு "போடா லூசு' என்பது போல நான் ராஜியை இழுத்துக் கொண்டு வெளியில் வந்தேன். மனதில் திரும்பத் திரும்ப அவன் மயிலைப் பார்க்க விடாததே வன்மம் வளர்த்துக் கொண்டிருந்தது."இருக்கட்டும் ஒரு நாள் பார்த்துக் கொள்வோம் இவனை" என்று நினைத்தவாறு என் வீட்டுக்குப் போயிருப்பேன் நான் ."விதி வலியது" தான் போல...

அந்நேரம் பார்த்தா அவன் என்னிடம் "தோத்தாக்காலி சொல்ல வேண்டும்?! விளையாட்டில் தோற்றுப் போனவர்களைத் தான் அப்படிக் கேலி செய்வார்கள்.இவன் ஏன் இந்த நேரத்தில் என்னை இப்படிச் சொல்கிறான் ?இங்கே என்ன விளையாட்டு நடக்கிறது? நான் எதில் தோற்றேன் என்று கோபம்..கோபமாய் வந்தது எனக்கு.

அவனுக்கு அன்று என்னவோ கெட்ட நேரம் ...அவன் மட்டும் சொன்னால் கூட போகிறான் கூமுட்டை என்று விட்டு விட்டுப் போயிருப்பேன்.அவன் கூட இருந்த எல்லோரையுமே சொல் வைத்தான்...

தோத்தாக்காலி ...தோத்தாக்காலி ...தோத்தாக்காலி ...

இனியுமா சும்மா இருப்பது?

முடியவே முடியாது ...

சுற்றும் முற்றும் பார்த்ததில் பக்கத்தில் ஒரு பருமனான கல் பார்வைக்குத் தட்டுப் பட்டது .என் கை கொள்ளாது அந்தக் கல், கொஞ்சம் கனமான கல் தான்.கோபத்தில் கனத்தை எல்லாம் யோசிக்காமல் எடுத்தேன்.

விசுக்கென்று எடுத்த வேகத்தில் அதை அவனது முன் நெற்றியில் பலம் கொண்டு வீசி விட்டு திரும்பியே பார்க்காமல் ஓடியே போய் விட்டேன் என் பாட்டி வீட்டுக்கு.

என் வீட்டுக்கே போயிருக்கலாம் தான் ...ஆனால் பின்னாடியேஅவனைக் கல்லால் அடித்த பஞ்சாயத்து வருமே அதற்க்கு என் வீடு சரிப் படாது ..பாட்டி தான் இதற்க்கெல்லாம் சரியான ஆள்.கரெக்ட்டாக நியாயம் வழங்குவார்எப்போதும் என் பக்கம்!!! அதனாலெல்லாம் தாங்க நான் எப்பவுமே பாட்டி செல்லம்!?

தேவமொழி


தேவ மொழி எப்படி இருக்கும் என்றெல்லாம் இது வரை தெரியாது...அது ...தெலுங்கா...ஆங்கிலமா...சமஸ்கிருதமா...

பாலியா...கொங்கனியா...கன்னடமா...உருதுவா...லத்தீனா...சரி விடுங்கள் இன்னோரன்ன மொழிகளில் தான் தேவர்கள் பேசிக் கொள்வார்களா என்பதெல்லாம் இதுநாள் வரை தெரியாது.

சற்று முன் தான் தெரிந்தது.தேவமொழி என்பது ஒவ்வொரு அம்மாவுக்கும்

தன் மகளோ ...மகனோ சொல்லும்

"ம்ம்மா மம்மு வேணும் ...ஊட்டி விடு...பசிக்குது " இந்த மூன்று வார்த்தைகள் மட்டுமே தான் .

அண்டை வீட்டுக்காரர்கள் (NEIGHBOURS)

அண்டை நாடுனாலும் சரி அண்டை வீடுனாலும் சரி தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சின்னதாகவோ...பெரிதாகவோ தொல்லைகள் கொடுத்துக் கொண்டே இருப்பது தான் மரியாதை என்று இந்தமக்களுக்கு யார் தான் கற்றுக் கொடுத்திருப்பார்களோ?

இந்தியாவுக்கு பாகிஸ்தான் ..இலங்கை...பங்களா தேஷ் ...பர்மா...சீனா போல நம் எல்லோருக்குமே பக்கத்து வீட்டு ஜானகி மாமி ...எதிர் வீட்டு மோசஸ் அங்கிள் ...கோடி வீட்டு ஹசீனா பேகம் பின்வீட்டு வெங்கிடு சார் இப்படி அண்டை ...அசல் வீட்டுக் காரர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்!அவர்கள் இருப்பதில் நமக்கேதும் பிரச்சினை இருக்க முடியாது .

இந்தியா பாகிஸ்தான் நல்லுறவைப் போலவே அடிக்கடி ஊடுருவுதலோ அல்லது ஆக்கிரமிப்போ நிகழும்வரை நமது இருவீட்டு நல்லுறவுக்கும் எந்தக் குந்தகமும் ஏற்பட வாய்ப்பே இல்லை தான்,ஆனால்" விதி வலியது" ஆக்கிரமிப்பு என்பது மனித சமூகத்தின் நாகரீக வளர்ச்சியில் வலுவான காரணிகளில் ஒன்றாயிற்றே?! ஆகவே கண்டிப்பாக அது நிகழ்ந்தே தீரும்.இல்லாவிட்டால் நீங்கள் அடுத்த வீட்டுக் காரர்களால் "அப்பிராணி"..."லூசு"..."கேணை" என்று பட்டம் சூட்டப் படலாம்!

இந்த இடத்தில் ஊடுறுவுதல் மற்றும் ஆக்கிரமிப்பு என்றால் என்ன ? என்பதைப் பற்றி சற்று விளக்கமாகச் சொல்லியே ஆக வேண்டும் ,அதற்க்கு முன் நாம் எல்லோரும் "அண்டை வீட்டுக் காரர்களே "என்ற எண்ணத்தை விட்டொழித்து விட வேண்டும்.அந்த சுற்று வட்டாரத்தில் நமது வீடு மட்டுமே தனி வீடு(அது அப்பார்ட்மென்டாக இருந்தாலும் சரி !) என்று வாழும் நாள் முழுக்க எண்ணிக் கொள்ள வேண்டும்.அப்போது தான் நீங்கள் ஒரு சிறந்த அண்டை வீட்டுக் காரர் பட்டத்தை பெற முடியும்.

ஊடுருவுதலைப் பற்றி இப்போது பார்ப்போம்...நீங்கள் ஏற்கனவே ஒரு அபார்ட்மென்டில் வசித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.அங்கே புதிதாக ஒரு அண்டை வீட்டுக் காரர் குடியேறுகிறார்.(கவனம் இதற்குப் பெயர் ஊடுறுவுதல் இல்லை),வந்த கொஞ்ச நாட்களில் அந்த அண்டை வீட்டுக் காரர் நீங்கள் பயன்படுத்தும் பல இடங்களில் ஊடுருவுகிறார்.. உதாரணமாக துணி உலர்த்தும் இடம்...இரண்டு சக்கரமோ...நான்கு சக்கரமோ எதோ ஒன்றை பார்க் செய்யும் இடம்.வடாம் காய வைக்கும் இடம் .நீங்கள் அரட்டை அடிக்கும் இடம் .இப்படிப் பல இடங்கள்.இதை ஆக்கிரமிப்பு என்று சொல்ல முடியாது ஏனென்றால் அது கொஞ்சம் பெரிய வார்த்தை. அண்டை வீட்டுக் காரர்கள் ஊடுருவிய இடங்கள் எல்லாம் நமது தொடர் கண்காணிப்பில் சில பல வாய் சண்டைகளின் பின் உடனே மீட்கப் பட்டு விடும்.(மறுபடியும் ஊடுறுவுதல் நிகழாது என்று சொல்வதற்க்கில்லை...அது என்றென்றும் ஒரு தொடர் நிகழ்வே!!!(தொடர் பதிவு போல!)

ஆக்கிரமிப்பு என்பது என்னவென்றால் எத்தனை வாய் சண்டைகள் போட்ட பின்னும் நமது அனுமதியே இன்றி நாம் பயன்படுத்தும் இடங்களை அஆக்கிரமித்துக் கொள்வது.அவர்களது பயன்பாதடுக்கும் இடம் போதிய அளவில் தாராளமாய் இருந்த போதும் இதை செய்தால் அதுவே ஆக்கிரமிப்பு.உதாரணமாக அவர்களுக்கு கார் பார்க் செய்ய தனி இடம் இருக்கும் அங்கே காரை நிறுத்திக் கொள்வார்கள்.ஆனால் காரை வெளியில் எடுக்கும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் நாம் நமது வாகனம் நிறுத்தும் இடத்தில் தான் அவர்களது கார் கவரை(காரை மூட பயன்படுத்தும் உறை ) ஒவ்வொரு முறையும் மறக்காமல் போட்டு வைப்பார்கள்,இந்த விசயத்தில் மட்டும் ஞாபக மறதி என்பதே கிடையாது போல!

இவர்களை என்ன தான் செய்வது அதையாவது ஒழுங்காக மடித்து ஒரு இடத்தில் வைத்து விட்டுப் போகலாம் !முழு அபார்ட்மெண்டும் அவர்களுக்குத்தான் சொந்தம் என்பது போலவே ஓவொரு முறையும் அவர்களது நடவடிக்கை இருக்கும்.இவர்களை என்ன செய்யலாம்?எடுத்து நீட்டாக மடித்து ஒரு இடத்தில் ஓரமாக வைத்து விட்டுப் போகச் சொன்னால் ...காலையில் காரை எடுக்கும் அவசரத்தில் ஒவ்வொரு முறையும் கவரை மடித்து மடித்து வைத்து விட்டுப் போக முடியுமா ? என்று நம்மை முறைப்பார்கள்?! இதெல்லாம் ஆக்கிரமிப்பில் சேர்த்தி தானே?! பிறகு நம் வண்டியை நாம் எங்கே பார்க் செய்து கொள்வதாம்? வீட்டுக்குள்ளா?

வேறு வழியே இல்லை அந்தக் கார் கவரை தூக்கி காம்பவுண்டு சுவருக்கு வெளியே வீசுவதை தவிர!அதை தான் செய்து பார்க்க வேண்டும் இனி!!!