Wednesday, April 1, 2009

"மனமெனும் தோணி பற்றி ..."



"மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலையூன்றி
சினமெனும் சரக்கை ஏற்றி செறிகடல் ஓடும்போது
மனனெனும் பாறை தாக்கி மரியும்போதறியவொண்ணா
ஒற்றியூர் உடைய கோவே "

இது ஒரு செய்யுள் ...இதுல கடைசி வரியில வர்ற ஒற்றியூர் இப்போ நம்ம சென்னைக்கு பக்கம் இருக்கற திருவொற்றியூர் தானான்னு ஒரு சின்ன குழப்பம் .தெரிஞ்சவங்க வந்து பின்னூட்டத்துல சொல்லுங்க.

சரி இனி செய்யுளுக்கு பொருள் விளக்கம் பார்க்கலாம்.
சிம்பிள் தத்துவம் தான். வாழ்க்கை ஒரு கடல்னு தான் எல்லா தத்துவ ஞானிகளும் சொல்லிட்டு போயாச்சே ;அதே கான்செப்ட் தான் இங்கயும்.

மனம் என்கிற தோணியில் ஏறி அறிவு எனும் கோலை ஊன்றி கோபம் என்கிற சரக்கை ஏற்றிக் கொண்டு வாழ்க்கையாகிய செறிந்த கடலுக்குள் பயணப்படும் போது மனனெனும் (அறியாமை எனும் ) பாறை குறுக்கிட அதில் மோதி மரிக்கும் நிலை வருகையில் ஒற்றியூரில் வீற்றிருக்கும் கோவே (கோ என்ற சொல் வேந்தனையும் குறிக்கும் தெய்வத்தையும் குறிக்கும்) இங்கே தெய்வம் என்று கொள்ளலாம் .

மரிக்கும் போதாவது தெய்வமே உன்னை நினைக்கும் பெரும்பேற்றை எனக்குத் தருவாயாக என்று இப்பாடலாசிரியர் மனம் உருகி பாடுகிறார்.
செய்யுளின் தரம் எத்தனை அருமை பாருங்கள்.நான்கே வரிகளில் அழுத்தமான வாழ்க்கை தத்துவம்.பள்ளி நாட்களில் இருந்தே எனக்கு மறவாமல் மனதில் பதிந்த செய்யுள் வரிகளில் இது முதன்மையானது.

பால் நிலா ...பானையில் உருகி வழியும் நிலா ...


ஒரு சிறுகதையில் வாசித்தேன் ...நல்ல நிறை பௌர்ணமியில் ஒரு வனக் குடியிருப்பின் அருகில் ஒரு அழகான ஓடை ...ஓடை நிறைய பளிங்கு போன்ற தெளிந்த நீர் ...நீருக்குள் வட்ட வெள்ளித் தட்டாய் வெள்ளி அப்பளம் போல அழகான தண்ணிலா...;

ஒரு காட்டுவாசிப் பெண் செப்புக் குடத்தை எடுத்துக் கொண்டு அந்த ஓடைக்கு நீர் மொண்டு கொண்டு போக வருகிறாள் ;நீரில் நிலா ...நிலவின் பிம்பம் களையக் களைய நீரை குடத்தில் அள்ளியதும் ஓடை நிலா குடத்தில் டாலடிக்கிறது .அடுத்து இன்னொரு பெண் ஓடையில் நீர் எடுக்க வருகிறாள் குடத்தோடு ...இப்போது அவளது குடத்திலும் நிலா .

குனிந்து பார்த்தால் ஓடையிலும் நிலா ...இந்தப் பெண்கள் கையில் ஏந்தி நிற்கும் குடங்களிலும் நிலாக்கள் அப்போது இன்னொரு பெண் அங்கே வருகிறாள் ...குடிக்கக் கொஞ்சம் நீர் கேட்கிறாள் ...

குடத்தில் இருந்த நீரை அந்த காட்டுவாசிப் பெண் சரித்து ஊற்ற இவள் குனிந்து இருகை குவித்து நீரை கீழே வழியாமல் ஏந்தும் போது அவளது குவித்த கைகளுக்கிடையில் நிலா நெளிந்து ..நெளிந்து ஊசலாடுகிறது.

அப்படியானால் இவள் நிலவைக் குடித்தவள் ஆகிராளோ?!

இவள் குடித்து முடித்த பின்னும் வானில் நிலா ...

ஓடையிலும் நிலா...

அந்த பெண்கள் இடுப்பில் தூக்கிச் செல்லும் குடங்களிலும் நிலாக்கள் .

ஆக மொத்தம் எத்தனை நிலாக்கள் ?

எத்தனை அழகான கற்பனை பாருங்கள் ?!

தாகத்திற்கு நீரை அருந்தி முடித்த பின் வானை நிமிர்ந்து பார்க்கும் அந்தப் பெண் தன்னுள் சொல்லிக் கொள்கிறாள்...

"நிலவை மிச்சம் வைத்தவள் நான் "என்று .

இந்த நிலா கற்பனை "அம்பையின் காட்டில் ஒரு மான் தொகுப்பில் "அடவி " எனும் சிறுகதையில் "வாசிக்கக் கிடைத்தது.

சாமியாடிகளும்...சில சாமிகளும்


ஊருக்கு நடுவில்
ஒற்றை நடுகல்

வருடம் ஒருமுறை

காளிகாவதாரம் ...

ஊருக்கு தொலைவில்

பிரம்மாண்ட பேருரு

தினம் தினம்

இரவில்

வேட்டைக்கு குதிரையில் ...

ஜல்..ஜல்...ஜல்

மஞ்சள் நீரும்

பானாக்காரமும் ...

இறைபடும் இருநாள்

கொப்பும் குலையுமாய்

வேம்பிலை ...மாவிலை

ஆடிய தோரணம்

கப்பிக் கிளைத்து

கண் நிறை பச்சை

உறுமும் மேளம்

நடுங்கும் பம்பை

உடுக்கை இடுப்புடன்

ஆடும் சாமிகள் ...

சாமியாடிகள் !?

கூந்தல் பறக்கும்

கண் விழி சிவக்கும்

உருட்டி விழிக்கும்

உன்மத்த நிலையது ...

எங்கே போயின ?

காதில் விழாமல்

கண்ணில் படாமல்

கருத்தில் மறைந்து

ஜல்..ஜல்...ஜல்

எங்கும் இல்லை

சாமியாடிகள் ...!

அது ஒரு காலம் ...

இன்றது அரிதோ ?!