Friday, December 4, 2009

உச்சிக்குடுமி முட்டாசுக் கடை







விடுமுறையில் பாட்டி வீட்டுக்குப் போய் சில பல நாட்கள் சீராடுவதெல்லாம் கல்யாணம் ஆன கையோடு கனவு போலத்தான் ஆகி விட்டது ,இப்போதெல்லாம் அப்படிப் போனாலும் கூட எங்கே தங்க முடிகிறது?குழந்தைக்குப் பள்ளி,கணவருக்கு லீவு இல்லை, ஆள் இல்லாம வீட்டைப் போட்டுட்டு அத்தனை நாள் தங்க முடியுமா?இப்படிப் பல காரணங்களைக் காட்டி பாட்டி வீட்டு செல்லச் சீராடல் எல்லாம் கானல் நீரானது தான் மிச்சம் .


அதை ஏன் இங்கே புலம்புவானேன்!,சொல்ல வந்த விஷயம் வேறு ...பாட்டி வீடு என்றதும் சில விஷயங்கள் சட்டென்று நினைவை நிரப்பும் அப்படி ஒரு விஷயம் தான் உச்சிக்குடுமி முட்டாசுக் கடை ,இந்த மனிதருக்கு ஏன் இப்படிப் பெயர் வந்ததென்பது இன்னும் கூட எனக்குப் புரியாத விஷயம் தான்.பெயரா முக்கியம்? தினம் தினம் மாலையானால் போதும் அவர் கடையில் சுடச் சுட போடப் படும் கருப்பட்டி முட்டாசின் சுவை அல்லவோ !(ம்...ம்...ஹூம்)

உச்சிக்குடுமி கடையில் இன்னும் சில பலகாரங்கள் கூட செய்து விற்றுக் கொண்டிருந்தார்கள்,ஆனாலும் இந்தக் கருப்பட்டி முட்டாசுக்கு ஈடு இணை எதுவுமே இல்லை ,

அதுவும் மாலை சரியாக ஒரு ஐந்து அல்லது ஆறு மணிக்கு பெரிய நார் தட்டின் மீது பழைய (பெரும்பாலும் எண்ணெய்க் கரை படிந்த ஒரே அழுக்குத் துண்டு தான்) துண்டை விரித்து அதன் மேல் பழைய தினசரிப் பேப்பரைப் போட்டு அதற்கும் மேல் பொன்னிறமான கருப்பட்டி முட்டாசுகளை அடுக்கி அதற்கும் மேலே இன்னொரு தினசரியை வைத்து மூடி உச்சிகுடுமியின் மகள் பாண்டீஸ்வரி இடுக்கில் இடுக்கிக் கொண்டு வருவாள்,கூட ஒரு பொடியன் காசு வாங்கிப் போடா சுருக்குப் பையுடன் வருவான்.

அவர்கள் தலையை கண்டாலே போதும் தெருவில் மொய்த்துக் கொண்டு கூட்டம் கூடும்.தினம் தினம் வருவதால் எல்லோரும் நூறு கிராம்,இருநூறு கிராம் என்று வாங்கி அங்கேயே தின்றும் விடுவார்கள் ,மாலையானால் தான் கிராமப் புறங்களில் அப்போதெல்லாம் ஒவ்வொரு திண்ணையிலும் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஊர்க் கதை பேசுவது வாடிக்கை ஆயிற்றே.முட்டாசோடு ஊர்க் கதைகளை உலக விசயங்களை(!!!) மெல்வதும் கூட சுகம் தான் போலும்.

என்னவோ தெரியவில்லை சென்ற விடுமுறையில் அம்மா வீடு...மாமியார் வீடு ,சித்தி வீடு அத்தை வீடு என்று சுற்றி விட்டு பாட்டி வீட்டில் எட்டிப் பார்க்கும் போது சேர்ந்தார் போல இரண்டு நாட்கள் தங்கினால் தான் என்ன? என்று தோன்றி விட ...தங்கினோம். வழக்கம் போல உறவுகள் ...நட்புகள் ...தெரிந்தவர் தெரியாதவர் என்று திண்ணையில் ஜமா சேர்ந்ததில் மெல்ல மெல்லப் பேச்சு கருப்பட்டி முட்டாசுக்குப் போய் விட்டது.

மொறு மொறுன்னு பங்காரம் போல (பங்காரம்னா தெலுங்குல தங்கம்) என்னமா இருக்கும் உச்சிக் குடுமி கடை முட்டாசு !

இப்ப ஒருத்தன் முட்டாசு போட்டு விக்கறான் மதினி ,வாயில போட்டா என்னமோ இனிப்பாத்தான் இருக்கு,ஆனாங்காட்டி ஒரு மொறு மொறுப்பு இல்ல ஒண்ணுமில்ல,சும்மா சவ சவன்னு என்னமோ பச்சைப் புல்லைக் காய்ச்சி சீனி போட்டு மென்டாப்புல(மெல்லுதல்) இருக்கு ,அம்புட்டுக்கு ஒன்னும் நல்லா இல்லை. ஹூம்... ஓட்டு வீட்டு தனக்கா சொல்லி அங்கலாய்க்க ,

பாட்டி உச்சிக்குடுமி பெருமையை கொஞ்ச நேரம் சிலாகித்தார்.

எனக்கோ இந்த முட்டாசெல்லாம் சென்னையில் எங்கே கிடைக்கப் போகிறது ,இப்போது யாராவது விற்று வந்தால் சூடாக வாங்கி ஒரு விள்ளல் வாயில் போட்டால் தேவலாம் என்று இருந்தது அந்த மாலை நேரக் கூதல் காற்றுக்கும் கிராமங்களுக்கே உரிய ஒரு வித இதமான வாசனைக்கும் .

அதென்னவோ அன்றைக்கெல்லாம் எதிர்பார்த்தும் முட்டாசு விற்பவனைக் காணோம்.

சிவகாசியில் வேலாயுத நாடார் கடையில் சீனி..கருப்பட்டி முட்டாசு ரெண்டுமே பேமஸ் என்று ஊருக்கு கிளம்பும் போது சித்தியும் பாட்டியும் ஆளுக்கு ஒரு கிலோ வாங்கிக் கொடுத்து அனுப்பினார்கள்,அங்கே பனை ஓலைப் பெட்டியில் முட்டாசு அடுக்கித் தருவார்கள் கேட்டால். அது ஒரு பாரம்பரிய சுவை என்றால் மிக்கி இல்லை. பாலித்தீன் பைகளில் சுற்றித் தரப் படும் எந்தப் பண்டமுமே ஈர்ப்பதில்லை எனக்கு.

இதே போல வாழை இலையில் வைத்து சூடாகக் கட்டித் தரும் சாத்தூர் லாலாக் கடை ஹல்வாவையும் சொல்லாம் .பால்யத்துடன் கலந்து விட்ட இனிமையான நினைவுகள் அவை.இங்கே இனிப்பானவை முட்டசும் ...ஹல்வாவுமா இல்லை பால்ய நினைவுகளா என்பதை பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தாலும் பகுத்துப் பார்த்து விட முடியாது போலும்.

ம்...என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்...ஆமாம் வேலாயுத நாடார் கடை முட்டாசும் கூட எனக்கென்னவோ உச்சிக்குடுமி கடை கருப்பட்டி முட்டாசுக்கு ஈடாகத் தோன்றவில்லை என்பது தான்.

உச்சிக்குடுமியோடு போய் விட்டது அவரது மொறு மொறுப்பான முட்டாசுகளும் .

அவர் இறந்து விட்டார்.