Thursday, December 3, 2009

கல்கி வெறும் கவர்ச்சி

நேற்றைய ஜூனியர் விகடனில் வெளியான செய்தி ஒன்று "கல்கி பகவானும் அவரது மகன் கிருஷ்ணா ஜியும் பிரிகிறார்கள் " கிருஷ்ணா ஜி கல்கி மற்றும் அம்மா பகவானின் (!!!)அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்து தனியானதொரு அமைப்பு தொடங்கவிருக்கிறார் என்பது. மிகவும்

கசப்பான உணர்வைத் தந்த செய்தி இதுவாகத் தான் இருக்க வேண்டும் .
தந்தையின் "ஒன்னெஸ் " அமைப்பு மூலம் திரட்டிய மக்கள் நிதி பற்றாக் குறை ஆகி விட்டதா என்ன ?என்ற ஆயாசமே மிகுதியானது. விஸ்வநாத் என்பவர் கல்கியின் (விஜயகுமார்) நண்பர் இவர் இன்று நேற்றல்ல ஆரம்பம் முதலே கல்கி மீது குற்றச் சாட்டை எழுப்பியே வருகிறார்,ஆனால் நமது மீடியாக்கள் பரபரப்பிற்காக ஓரிரு நாட்கள் செய்திகளைப் பிரசுரிப்பதோடு ஓய்ந்து விடுகின்றன. காரணம் கல்கியை நம்பும் மிகுதியான வி.ஐ.பி பக்தர்களாகக் கூட இருக்கலாம். சந்திர பாபு நாயுடு ஆந்திராவில் கல்கியை ஆதரித்துக் கொண்டு இருப்பதாகவும் செய்திகள் உலவுகின்றன.

குங்குமம் மற்றும் அவள் விகடனில் கல்கி பகவானின் அற்புதங்கள் குறித்து விளம்பரம் கூட வெளியாகிறது ,யோசியாமல் நம்புவதற்கு தான் ஏராளம் பேர் இருக்கிறார்களே. அனுபவ ரீதியாக எனக்குத் தெரிந்த சில விசயங்களை இங்கே பகிர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியதால் தான் இப்பதிவை வெளியிடுகிறேன்.

மனிதர்களுக்குப் பட்டால் தான் புத்தி வரும் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் ?! ஐந்தாயிரம் ரூபாய்கள் செலவழித்து கல்கி பகவன் மற்றும் அவரது மனைவியான அம்மா பகவான் தரிசனம் செய்து வந்தவர்களில் நாங்களும் உண்டு என்பதால் அனுபவ சான்றுகளுடன் தெரிய வந்த விஷயம் .
அங்கே பணமே பிரதானம்.
வரயக்யம் என்று ஒரு பூஜை
மகா வரயக்யம்
முக்தி யக்யம்
யூத் வரயக்யம்
கலச பூஜை
அம்மா பகவான் திருக்கல்யாணம்

நானறிந்த வரையில் இப்படிப் பல பூஜைகள் நடத்துவார்கள் .இதற்க்கு தேவைப் படும் நிதி எல்லாம் அங்கே "கல்கி டிவோட்டிகள் "(கல்கி பக்தர்கள்) தலையில் சுமத்தப் படும். பூஜைக்குத் தேவையான அழைப்பிதழ்கள் அச்சிடுவது வாகனச் செலவுகள்,பூக்கள்,பழங்கள் முதற்கொண்டு இன்ன பிற எல்லா செலவுகளையும் இன்னின்னவர் என்று ஸ்பான்சர் பிடித்து சாதிக்க வேண்டும்,இந்த பூஜைகளை நடத்துவதற்கென்று "தாசா ஜிக்கள் "(கல்கி அடியார்கள்) இருப்பார்கள் ,அவர்கள் இப்படி இப்படி செய்யுங்கள் என்று ஆணை இடுவதோன் சரி பணம் சார்ந்த விஷயங்கள் எல்லாமே பக்தர்கள் தான் திரட்டித் தந்தாக வேண்டும்.

சத்சங்கம் செய்வது ...எனக்கு இன்ன குறை என்று மனம் விட்டுப் பேச விரும்பும் பக்தர்களுக்கு தனக்குத் தெரிந்த வகையில் சில தத்துவங்களைக் கூறி அவர்களது மனம் சமாதானம் அடைய வைப்பது ,திரட்டிய நிதிகளை பகவானிடம் கொண்டு சேர்ப்பது இது மட்டுமே கல்கி தாசாக்களின் வேலை.

இப்படி தமிழகம் முழுக்கவே இவர்கள் பரவி இருந்தனர் 2000 ஆம் ஆண்டு வாக்கில் ,இப்படி திரட்டிய நிதிகளை இவர்கள் எப்படிப் பயன் படுத்தினார்கள் என்பதற்கு கல்கிக்கே வெளிச்சம்.அவரது மகனின் நிர்வாகத்தில் கட்டுமான நிறுவனம் ஒன்றும் ,காஸ்மிக் எனும் ஆடியோ நிறுவனம் ஒன்றும் இருப்பது பக்தர்களுக்கு தெரியும் .

கல்கி என்ன பரம்பரை பணக்காரரா? படி நிலை வளர்ச்சி என்பது அம்பானியில் இருந்து லக்ஷ்மி மிட்டல் வரை கண் கூடாக செய்திகள் மூலம் நமக்குத் தெரிந்தவை,ஒன்னெஸ் மையம் என்ற பெயரில் சகல நவீன வசதிகளுடன் வெளி நாட்டினரை ஈர்க்கும் வகையில் ஒரு பெரிய வழிபாட்டு தியான மண்டபம் கட்டி இருக்கிறார்கள்.

கொசுறு :

அம்மா பகவான் தரிசனம் செய்ய ஏழு வருடங்களுக்கு முன்பு ஒரு குடும்பத்துக்கு ரூபாய் 5000 வாங்கினார்கள் ,நேற்று ஜூ.வி யில் 50 ,000 என்று படித்த ஞாபகம் ,அடடா...என்ன ஒரு படி நிலை வளர்ச்சி .

பிரபலங்களை எல்லாம் வளைத்துப் போட்டுக் கொண்டு இவர்கள் எல்லாம் எங்கள் பக்தர்கள் என்று பெரிய அளவில் விளம்பரம் செய்து கொள்கிறார்கள். உதாரணம்...மனீஷா கொய்ராலா,ஷில்பா ஷெட்டி,எஸ்.ஏ .சந்திர சேகர் தம்பதி,தாமு,எழுத்தாளர் இந்துமதி( இவர் நான் கல்கி பக்தை இல்லை என்று முன்பே பேட்டி கொடுத்து விட்டார்.) இப்படிப் பலர் உண்டு.

சில வருடங்களுக்கு முன் தேனிக்கு அருகில் வீரபாண்டித் திருவிழாவுக்கு வருகை தந்த நகைசுவை நடிகர் தாமு "கல்கி தர்மம் (!!!) பரப்ப என்று போடப் பட்டிருந்த ஒரு ஸ்டாலுக்கு வருகை தந்திருந்தார். அப்போது அவர் அ.தி.மு. கா வுக்கு ஓட்டுப் போடுமாறு ஸ்டாலுக்கு வந்தவர்களிடம் கேட்டுக் கொண்டாராம். அ.தி.மு.கா என்றால் இனி "அம்மா தர்ம முன்னேற்றக் கழகமாம் " அங்கிருந்த பக்தர்கள் சொல்லக் கேள்வி .

இந்த ஸ்டாலும் வீர பாண்டித் திருவிழா காலங்களில் பக்தர்களின் நிதியால் மட்டுமே போடப் படும் ,ஏறத்தாழ எல்லா ஆன்மீக இயக்கங்களும் இப்படித் தான் என்றாலும் இது கொஞ்சம் அதிகப் படி என்று தோன்றக் காரணம் நானும் சில வருடங்கள் நேரில் கண்ட பங்கு கொண்ட நிகழ்ச்சிகள் சில உண்டு என்பதால் மட்டுமே .

கல்கி பகவான் ரூரல் சர்வீஸ் என்ற பெயரில் பக்தர்களே அரிசி பருப்பு எல்லாம் சேகரம் செய்து கொண்டு பின் தங்கிய கிராமங்களுக்குச் சென்று அவர்களே சமையல் செய்து கிராமத்தோரை அன்போடு அழைத்து இலை போட்டு உணவிட்டு அவர்கள் சாப்பிட்டு முடித்த் பின் அந்த எச்சில் இலைகளையும் எடுக்க வேண்டும் அப்போது தான் பகவானின் முழு பலன் கிட்டுமாம். நிஜம் என்றே ஒத்துக் கொள்ளத் தோன்றினாலும் கல்கி அடியார்கள் ஒரு போதும் என்றேனும் ஒருநாள் மட்டும் கூட அப்படி இலை எடுத்து நான் கண்டதில்லை. இதுவல்லவோ பக்திப் பெருக்கு!!!

முக்தி யக்யம்
என்ற பெயரில் வலுக்கட்டாயமாக பணம் கட்டி சென்னைக்கு அருகில் நேமத்தில் நடக்கும் ஒரு பூஜைக்கு பக்தர்களை போகச் சொன்னதை பல முறை நான் கண்டிருக்கிறேன்,மறுக்கும் பக்தர்கள் நாளடைவில் பூஜை நடவடிக்கைகளில் இருந்து ஓரம் கட்டப் படுவார்கள்.ஆனால் அவர்கள் நடத்தும் ..நடத்தப் போகும் பூஜைகளில் பணம் செலுத்தி கலந்து கொள்ள மட்டும் மறக்காமல் அழைப்பு மீண்டும் மீண்டும் அனுப்பப் படும்.

இதை விட பக்தர்களின் வாரிசுகளை தாசாஜிக்கலாக அனுப்பச் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?! எனும் கேள்வி அடியார்களால் கேட்கப் பட்டதும் அங்கே உண்டு.அதில் மிரண்டு வெளியேறிய பல பக்தர்களை நான் அறிவேன்.

எதற்கு நீட்டி முழக்குவானேன். "கல்கி வெறும் கவர்ச்சி மட்டுமே " அவர் தெய்வம் கடவுள் விஷ்ணுவின் பத்தாது அவதாரம் என்பதெல்லாம் வெறும் கப்ஸா என் போன்றவர்களுக்கு,இன்னும் கல்கியை நம்பக் கூடியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர குறைந்த பாடில்லை .

ஆன்மீகம் வியாபாரம் தான் என்பதை யாராவது தெள்ளத் தெளிவாக அறிய விரும்பினால் கல்கி பூஜைகளில் தொடர்ந்து பங்கெடுத்துப் பாருங்கள்.பிறகே உங்களுக்கே தெரியும் எல்லாம்.