Wednesday, August 19, 2009

கருப்பு வெள்ளை தாண்டாத கனவுகள்

வர்ணங்களைக் குழைத்துக் குழைத்து
நாட்காட்டியில் தேய்த்து தேய்த்து
பரத்தி விட்ட பின்னும் கூட
அந்த நாளொன்றும்
வண்ணமயமாகி விடவில்லை ...
அன்று மட்டுமல்ல
என்றென்றும்
கருப்பு வெள்ளை தாண்டி
கனவுகளும் நுழைவதில்லை ...
பகலுக்கு ஒரு நிறம்
இருளுக்கு ஒரு நிறம்
வெயிலுக்கு ஒரு நிறம்
குளிருக்கு ஒரு நிறம்
தங்கத்துக்கு மஞ்சளும்
வெள்ளிக்கு வெள்ளையுமாய்
முலாம் பூசுவதைப் போல
பூசிப் பூசிப் பழகிய குணம்
வண்ணங்களற்ற வெற்று வெளியை
உதாசீனம் செய்வதில்
சிறிதொரு சமாதானம்
பிறிதொரு சாந்தம் ...
சமாதானக் குடுவையில்
பொங்கிச் சிந்திய வண்ணக் குழம்புகளில்
தேங்கித் தேடிய பின்
சொந்தக் கருத்தொன்று
சொடேர் என்று தலையில் குட்டிவிட்டு
சொத்தென்று விழுந்து காணாமல் போனது
வர்ணக் கலவைகளில் ...
நிறப்பிரிகைக்கு முன்னிருந்த
நிர்மல வண்ணமே நித்தியமோ ?!