Sunday, January 24, 2010

சொப்பனக்களிறு

ஆம் என்று மனம் ஒத்துக் கொள்ளும்
எதையுமே;
சரி என்று ஏற்றுக் கொள்ளாமல்
முரண்டு பிடிக்கும் லாவகம் ...
புத்திக்கு எப்போதும் வாய்த்திருக்கிறது;
பாட்டிக்கும் அத்தைக்குமான சச்சரவுகளில்
அத்தையின் கண்ணசைவில்
மௌனமாகும் மாமாவைப் போல்
சட்டை செய்யாது
தாண்டி நடக்க ஆசை தான் ;
மனம் முன்னிழுக்க
புத்தி பின்னிழுக்க
சாலை நிழற்குடையில்
ஒய்யாரமாய் சாய்ந்து நிற்கும்
நவ யுக நாகரீக யுவனில்
கண் பதிக்காமல் புறக்கணித்து விட்டதாய்
எட்டி நடக்கையில்
எப்போதும் போல் பரிகசித்தது மனம்
என் சாகசத்தைச் சொல்லிச் சொல்லி
சொப்பனக் களிறுகளை
பிணைத்துக் கட்டும் புத்திச் சங்கிலிகள்
அறுந்து அறுந்து விழுந்தாலும்
இற்றுப் போக விடாத
என்ன ஒரு சாகசம்?!