Thursday, January 7, 2010

2012 இல் உலகம் அழியப் போகிறதாமே!!!




இப்படித்தான் எண்பதாம் வருடத்திலும் ஒரு புரளி கிளம்பி அடங்கியதாம்,அன்றைக்கு ஸ்கைலாப் , இன்றைக்கு நிபுரு, இந்த நிபுரு என்ற விண் கோளம் 2012 டிசம்பரில் பூமியைத் தாக்கும் என்பது சில புனைகதை எழுத்தாளர்கள் சொல்கிறார்களாம்.

கிட்டத் தட்ட 400கோடி ஆண்டுகளாக பூமி இருந்து வரும் சூழ்நிலையில் இன்னும் கூட 300 கோடி ஆண்டுகளுக்கு பூமிக்கு எந்த வித சிக்கலும் வரப் போவதில்லை என்று வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ள நிலையில் இப்படிப் பட்ட கட்டுக் கதைகள் பொதுமக்களிடையே பரவிக் கொண்டிருப்பதை வெறும் வதந்தி என்றே நம்ப வேண்டியிருக்கிறது.

பூமிக்கு வெளியில் இருந்து பெரிய விண்கல் ஏதாவது பூமியைத் தாக்கக் கூடுமா என்பதை முன்கூட்டியே அறிவதற்காக நாஸா விண்வெளி மையம் தொடர் ஆராய்ச்சி நடத்தி வருகிறதாம் ,அப்படி எந்தத் தாக்குதலும் நேரப் போவதில்லை என்பதே அந்த ஆராய்ச்சியின் முடிவாம்.

அப்படியானால் 2012 க்குப் பிறகு மட்டுமல்ல அதற்குப் பிறகும் பூமி ஒன்றும் அழியப்போவதில்லை

கோடிக்கணக்கான கோள்கள் இருந்தாலும் கூட நாம் வாழும் பூமியில் தான் மனித இனம் வாழத் தகுந்த சூழல் நிலவுகிறது,மலைக்காடுகளை அழிப்பதனாலும் வாகனங்கள் மூலம் வெளியேறும் கார்பன் புகை அதிகமாவதாலும் பூமியின் வெப்பம் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் பனிமலைகள் உருகுகின்றன,கடல் நீர் மட்டம் உயர்கிறது .சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கின்றன.

இன்னொரு பக்கம் உலக நாடுகளுக்கு இடையே நிலவும் பனிப்போர்கள் உச்சமடைந்தால் மூன்றாம் உலகப் போர் வருவதற்கான சூழலும் நிலவுகிறது. நாட்டு அதிபர்களும் அதிகாரம் படைத்த அதிகாரிகளும் ஒரு பக்கம் கை குலுக்கிக் கொண்டு செய்தி ஊடகங்களுக்கு போஸ் கொடுத்து விட்டு மறுபக்கம் ஒருவருக்கொருவர் குழி வெட்டும் வேளையில் படு ஜரூராக இருக்கிறார்கள். இதற்குப் பெயர் தான் ராஜதந்திரமாம்!!!

ஒரு பக்கம் மக்கள் கூட்டம் கூட்டமாக கொன்று குவிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் இந்திய விருந்தினராக வரும் ஜப்பான் பிரதமர் தமக்கு அளிக்கப் படும் இந்திய விருந்தில் சிறப்பு விருந்தினராக தீபிகா படுகோனை டிக் செய்கிறார். (ரொம்பத்தான் தேவை!!!) ரேப் கேம் என்று புது புது சீரழிவு விளையாட்டுக்களை கண்டு பிடித்துத் தள்ளிக் கொண்டிருக்கும் நாடு தானே அது.தொழில் நுட்பம் வளர்ந்து உலகத்துக்கே எடுத்துக் காட்டாக விளங்கிக் கொண்டிருக்கும் ஜப்பானிலிருந்து தான் இப்படி அச்சுறுத்தும் விளையாட்டுக்களும் அறிமுகமாகின்றன.அதனால் அந்நாட்டின் அதிபரை சொல்வதற்கு என்ன இருக்கிறது?

எதையோ சொல்ல வந்து விஷயம் எங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறது பாருங்கள்! ம்...இதனாலெல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் பூமிக்கு வெளியில் இருந்து ஏதாவது வந்து பூமியைத் தாக்கி விடுமோ என்ற அச்சம் நமக்குத் தேவை இல்லை , பூமிக்கு உள்ளேயே அதன் சுற்றுச் சூழலை மனிதர்களாகியா நாம் சிதைத்துக் கொண்டிருக்கும் வேலையை நிறுத்தினாலே போதும்,பூமி அதுபாட்டுக்கு நன்றாகவே இருக்கும்.

ஆழ்துளைக் கிணறுகள் மூலம் சல்லடையாகச் சலித்தாகி விட்டது பூமியை,காடுகளை அளித்து பிளாட் போட்டு விற்பது என்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணம்.எல்லோருக்குமே படித்து வைட் காலர் வேலையில் அமரும் ஆசை ,பிறகு விவசாயமே அற்றுப் போகையில் உண்பதற்கு என்ன செய்யலாம்?கிரெடிட் கார்டுகளையும் பிளாஸ்டிக் பைகளையும் தான் தின்ன வேண்டும்,இருக்கும் சூழலில் யாரவது விஞ்ஞானிகள் ப்ளாஸ்டிக்கை ஜீரணிக்க ஏதேனும் மருந்து கண்டுபிடித்தால் தான் கவலை தீரும்.

ஓசோனில் ஓட்டை,பிளாஸ்டிக் கழிவுகளால் மண்ணின் நீர் உறுஞ்சும் தன்மைக் குறைபடுதல் அதனால் மண் சத்து இழந்து போதல்,காடுகளை அழிப்பதால் மரங்களற்ற நிலையில் மண்ணின் பிடிமானமும் இறுக்கமும் வெகுவாகக் குறைந்து நிலச் சரிவுகள் ஏற்படுதல்(சமீபத்திய ஊட்டி பேரழிவுகள்) ,செயற்கை உரங்களால் ஸ்லோ பாய்சன் போல விசத்தை விலைக்கு வாங்கி உண்ணும் மனிதர்களாகிய நாம் நமது சுற்றுச் சூழலை கொஞ்சம் கவனித்தாலே போதும் பூமி அது பாட்டுக்கு சுற்றிக் கொண்டிருக்கும்.

சும்மா பொழுது போக்காக மரம் நடலாம்.(மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் SO மரம் வளர்ந்துரும் :))))

வீட்டுத் தோட்டம் போடலாம் செயற்கை உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களை நாமே தயாரித்து (கடைகளில் விலை கொடுத்து காய்கறி வாங்கி உண்பதை விட நாமே விளைவித்து உண்டால் அதில் கிடைக்கும் ஆனந்தம் சொல்லில் விளக்கி விட முடியாது).

புகை கக்கும் வாகனங்களை விட்டு விட்டு எல்லாரும் சைக்கிள் விடலாம். :))))

மாட்டு வண்டி கூட பெஸ்ட் தான். அதனால பூமியோட சுற்றுச் சூழலுக்கு எந்த அபாயமும் இல்லை.(கண்ணு படப் போகுதையா சின்னக் கவுண்டரே...ரேஞ்சுக்கு கற்பனை விரியுமே . :)))

எது எப்படியோ எப்படியாச்சும் உள்ளிருக்கும் எதிரிகளிடமிருந்து பூமியைக் காப்பாற்றப் பார்ப்போம் .வெளியில் இருந்து தாக்க வரும் எதிரிகளை அப்புறம் பார்க்கலாம். சரி தானுங்ளே!!!