Wednesday, March 25, 2009

இட்லி




இட்லி என்று பதிவுக்கு தலைப்பு வைத்தாகி விட்டது ,இட்லி பற்றி என்ன எழுதுவது...ஒன்றுமே இல்லையா என்ன? இட்லி வேக வைத்து சமைக்கப் படும் ஒரு வகை தென்னிந்திய உணவு ,இதில் எண்ணெய் சத்து துளியும் இல்லை ,கைக்குழந்தைகள் முதல் பிறர் கை பிடித்தோ கோல் ஊன்றியோ நடக்கும் கைகோல் குழந்தைகள் வரை யார் வேண்டுமானாலும் உன்பதற்க்கேற்ற எளிய இனிய உணவு ,

இது அரிசியை மற்றும் உளுந்தை ஊற வைத்து அரைத்து ஒரு நாள் இரவு முழுவதும் அரைத்த மாவை புளிக்க வைத்து பின் அடுப்பை பற்ற வைத்து இட்லி குண்டான் எனும் ஸ்பெசல் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி கால் பாகம் தண்ணீர் ஊற்றி அடி கருக்காமல் இருக்க அரை மூடி எலுமிச்சம் பழமோ அல்லது துளியூண்டு புளி கிள்ளி எடுத்தோ பாத்திரத்தில் போட்டு தண்ணீர் கொதித்ததும் இட்லித் தட்டுக்கள் எனும் ஸ்பெசல் தட்டுக்களை தேடி எடுத்து...

(அட தேடி என்ற சொல் எதற்க்கென்றால் அது சென்ற முறை இட்லி அவித்த பின் எங்காவது மூலையில் மறந்து போய் போட்டு வைத்திருக்கக் கூடும் சில வீடுகளில் (என் வீட்டில் அப்படி செய்வது வழக்கமே இல்லை ...நிஜம் ...நம்புங்கள்!!!)சரி..சரி இட்லித் தட்டுக்களை ஒரு வழியாய் தேடி எடுத்தாயிற்று அல்லவா?! இனி பேச நேரம் இல்லை சரசரவென்று இரண்டு தட்டோ இல்லை ஒரே ஒரு பெரிய தட்டோ இட்லிப் பள்ளங்களில் அல்லது குழிகளில் அரைத்து வைத்த முக்கியமாக புளிக்க வைத்த இட்லி மாவை அங்கே ஊற்ற வேண்டும் .

ஏனோ ..தானோ என்றெல்லாம் ஊற்றி விடக் கூடாது இட்லி மாவை இட்லித் தட்டின் பள்ளங்களில் ..அதற்கென்று ஒரு ஸ்பெசல் முறை இருக்கிறதாம் என் பாட்டி சொல்லியிருக்கிறார்கள் ...........அது வந்து எப்படி என்றால் ...அதாவது ...அதாவது...அதாகப் பட்டது ...அது எப்படி என்றால்...!!!...அது வந்து ....

சரி ...சரி ....யாரும் பொறுமை இழக்க வேண்டாம் .

இதோடு இட்லி அவிப்பதை நிறுத்தி விட்டு ;

அடுத்த விஷயத்திற்குப் போய் விடலாம் ...அதுவே பதிவுக்கும் பதிவருக்கும் நலம் .

அதாகப் பட்டது இப்படியாகப் பட்ட பலவித சிரமங்களைப் பொருட்படுத்தாமல் நாம் (அம்மா ...அக்கா...அண்ணி...பாட்டி!!! இவர்களில் ஒருவர் தான் இந்த நாம் ...நாம் என்றால் நாம் இல்லை அந்த நாமில் என்ன தெளிவாகப் புரிகிறதா இல்லையா?!) தயாரிக்கும் இட்லிகளை உப்புச் சப்பில்லாத சில காம்பிநேசன்களில் சாப்பிட்டு வைக்கக் கூடவே கூடாது

(இந்நாள் வரையிலும் நாம் அப்படித் தானே செய்து கொண்டிருக்கிறோம் என்கிறீர்களா? இனி அப்படிப் பட்ட துரோகத்தை இட்லிக்கு நாம் கனவிலும் செய்யத் துணியக் கூடாது )

இட்லிக்கு எது சரி மேட்சிங் என்று ஒரு வரையறை செய்து விட முடியுமா நம்மால் ?அது உண்பவர்களைப் பொறுத்த விஷயம் ஆயிற்றே!?சரி புடவைக்கு எப்படி பொருத்தமாக மேட்சிங் பார்க்கிறோமோ அதே வகையில் இட்லிக்கு மேட்ச்சிங் பார்ப்போம் இப்போது நம்மால் இயன்றவரையிலும்,


இட்லி-சாம்பார் (இது கணவன் மனைவி உறவு போன்றதென்று வைத்துக் கொள்ளலாம் ...அருமையான மேட்சிங் )

இட்லி-மிளகாய்ப் பொடி பிளஸ் நல்லெண்ணெய்

இட்லி -தேங்காய் சட்னி

இட்லி -வெங்காயச் சட்னி

இட்லி-காரச் சட்னி

இட்லி-தக்காளிச் சட்னி

இட்லி-கொத்துமல்லி சட்னி

இட்லி -கோஷ்மல்லி

இட்லி - பாசிப் பருப்பு சட்னி

இட்லி- தயிர் பிளஸ் சர்க்கரை

இட்லி -நெய் பிளஸ் சர்க்கரை (அஸ்க்கா போட்டா நல்லாத்தான் இருக்கும் ப்ரிஸ்க்கா)

இட்லி- சிதம்பரம் கொத்சு (அபிஅப்பா தான் போடா சொன்னார் ...சித்தப்பா சொல்லைத் தட்டலாமோ!)

இட்லி - ஊறுகாய் (எங்கயாவது பஸ் நடுவழியில நின்னுட்ட ஊறுகாய் வச்சும் இட்லி சாப்பிடுவாங்களாம் எதோ கதைல படிச்சேன் )

இட்லி- மீந்து போன பருப்பு (எங்க பக்கத்து வீட்ல ஒரு அம்மா இப்படித் தான் இட்லிக் கொடுமை செய்றாங்க பல நேரம் ...இட்லி அழற சத்தம் என் காதில் விளராப்பல ஒரு பீல் )

இட்லி -மீன் குழம்பு (முள்ளும் மலரும் படத்துல ஒரு பாட்டு வருமே ...


"நித்தம் நித்தம் நெல்லுச் சோறு

நெய் மணக்கும் கத்தரிக்காய்

நேத்து வச்ச மீன் குழம்பு

என்னை இழுக்குதடி ...."நெல்லுச் சோறுக்கு மட்டும் இல்லை இட்லிக்கும் கூட இழுக்கும் தான்)


கட்டக் கடசியா என்னோட இட்லி மேட்சிங் பத்தியும் சொல்லனுமே !?(யாரும் கேட்கலைனாலும் கூடத் தான் சொல்லியே ஆகணும்)


இட்லிக்கு என்ன தான் எல்லாரும் சாம்பார் ..சட்னி...கொத்சு ...மிளகாய்ப் பொடி பிளஸ் ஜோதிகா (நல்லெண்ணெய்யாம் !!!) நான் சொல்லலை அபிஅப்பா சொன்னார் .இன்ன பிற வஸ்துக்களை எல்லாம் வளைச்சு மாட்டினாலும் கூட ;

நம்ம பேவரிட் கோழிக் குழம்பு தான் .

என்ன ஒரு ஜோரா இருக்கும் தெரியுமா ?!

என்ன நான் சொல்றது சரி தானே?!!!

வந்து சொல்லிட்டுப் போங்கப்பா உங்க இட்லி நினைவுகளை .