Wednesday, July 7, 2010

ஒன்னாப்பு வாத்தியார் சொன்ன கதை பார்ட்-2 (முடிவு)


நாகரத்தினம் எடுக்கப் புறப்படும் நால்வர் அணியைப் பற்றி கடந்த பதிவில் சொன்னேனில்லையா? அந்த வீர தீர பராக்கிரம திட்டம் என்ன ஆயிற்றென்று பதிவு செய்வது என் கடமையாச்சுதே;

நாங்கள் பொருளெல்லாம் தயார் செய்து வைத்துக் கொண்டு வீரப் பயணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தோம் (நம்புங்கள் ...இது நிஜம்)இதோ புறப்பட்டு விட்டோம்....இன்னும் ஒரு பகல்....ஒரு இரவு ....!!!அதற்குப் பிறகு ?

அதற்கு பிறகு அந்த நாளும் விடிந்தது .

அன்றைய விடியலே படு பயங்கர திகிலோடு விடிந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

எங்கிருந்து வந்தனவென்றே தெரியவில்லை ;அன்றைக்கு மட்டும் மொத்தம் ஆறேழு பாம்புகள் ஊருக்குள் அடித்திருப்பார்கள் .

கொத்து ஆசாரி வீட்டுப் பரணில் இருந்து நழுவி விரைந்த மஞ்சள் சாரைப் பாம்பு .மூக்கம்மா பாட்டி வீட்டு கொட்டாரத்தில் சூர்ய காந்திச் செடிக்கு அடியில் தண்டோடு தண்டாக சுருண்டு இங்கிருந்து போவேனா போக்கு காட்டிய பச்சைப் பாம்பு ஒன்று .

வண்ணார் வீட்டு அழுக்குத் துணி மூட்டைகளுக்கு அடியிலிருந்து சர்ரென்று சீறிப் படமெடுத்து ஆடிய கருநாகம் ஒன்று .

இன்னும் அவரவர் இஷ்டப்படி நல்ல பாம்பென்றும் ,கட்டு விரியன் என்றும் கண்ணாடி சாரைப் பாம்பென்றும் நாமம் சூடிக் கொண்ட பாம்புகள் சில ;இத்தனையையும் தேடித் தேடி அடித்துக் கொன்று விட்டு (அல்லது அப்படி சொல்லி நம்ப வைத்து விட்டு ) கடப்பாரையும் கையுமாக வந்த ஊர் இளவட்டக் கோஷ்டியினரின் வாயைப் பார்த்துக் கொண்டு லீவு நாளில் வெறும் கஞ்சி தேங்காய் துவையலோடு காலை சமையலை ஏறக்கட்டி விட்ட அம்மா,பெரியம்மா,அத்தை,சித்திகள் கூட்டம் .

அன்றைக்கு பள்ளி விடுமுறை நாளானதால் அடுத்தடுத்து பாம்பு அடிப்பதைக் கண்டு அரண்டு போன எங்களை போன்ற வாண்டுகள் கூட்டத்தின் கொட்டம் வேறு ,ஊருக்குள் அன்றைக்கு பாம்பைத் தவிர வேறு பேச்சில்லை என்றானது .

இப்படி ஒரு சூழலில் நாங்களாவது நாகரத்தின வேட்டைக்குப் போவதாவது !வீட்டுக்குத் தெரியாமல் அப்படியெல்லாம் போகத்தான் விட்டு விடுவார்களா என்ன ?! நல்ல கதை .

மூக்கம்மா பாட்டியின் கொட்டாரத்தை ஒட்டி பாம்பு வரமுடியாத அளவுக்கு பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்த எங்கள் அம்மாக்கள் பாட்டிகள் கூட்டத்தோடு நின்றிருந்தோம் நாங்கள் நால்வரும் ,அப்போது ரங்கா கேட்டாள்;

"கார்த்தி நீ பாம்ப பார்த்தியா !"

எனக்கு பாம்பு என்று சும்மா சொல்லக் கூட உடம்பெல்லாம் நடுக்கமெடுத்தது.

"இல்...ல்...லல்ல ."

அழகேசன் முந்திக் கொண்டு சொன்னான் .

"நான் பார்த்தேன்,எத்தன்தண்டி சாராப் பாம்பு தெரிமா?"

"அடேயப்பா ...ஒரு ஆள் வெயிட் இருக்கும் நம்ம பெரிய வாத்தியார் அளவுக்கு அவ்ளோ உயரமா இருந்துச்சு சாரப் பாம்பு .(ஆறடி உயரம்) அப்பிடியே வானத்துல பாஞ்சு பறந்து போச்சு தெரிமா .எங்க சூர்யாண்ணன் தான் அந்த பாம்ப அடிச்சான் தெரிமா!"

"ஆ...அவ்ளோ பெரிசா வா இருக்கும் சாரப் பாம்பு ?! " (ருக்கு தான்)

"எங்க சிவா மாமா மலைப் பாம்பையே அடிச்சிக் கொன்னவர் ,போடா நீ உங்க சூர்யாண்ணன் இத்தனூண்டு சாரப்பாம்ப கொன்னத போய் சொல்லிட்டிருக்க."

ஏய் எங்க கண்ணா மாமா கருநாகத்தையே விரல்ல சுத்தி சுழட்டி சுழட்டி அடிச்சே கொன்னுடுவார் தெரிமா ! எங்க கண்ணா மாமா தான் பலசாலி .தைர்யசாலி . (இது ரங்கா)

இந்த விளையாட்டுக்கு நான் வரலை என்று சொல்லி எஸ்கேப் ஆகியிருக்கலாம் நான் .

அதெப்படி ! அப்டிலாம் விட்ற முடியுமா என்ன? அப்புறம் என் friends என்னை மதிப்பாங்களா !

"ஏய் எங்க ரகு மாமா டெய்லி பாம்பு பாலை பிடிச்சுட்டு வந்து தான் காபி குடிப்பார்.எங்க வீட்ல காபியே பாம்பு பால்ல தான் போடுவோம் தெரிமா!? (வேறு யார் நான் தான்!!!) "

இரு ..இரு நாகரத்தின வேட்டை என்னாச்சுன்னு யாரோ கேட்கலாம் .

ஆமாம் நாகரத்தினமா அப்பிடின்னா என்ன?!

நாங்கலாம் பாம்பு பால்ல காபி போட்டுக் குடிக்கிறவங்க எங்க கிட்டப் போய் இப்படிலாம் கேள்வி கேட்டுகிட்டு !

:)))

இது நடந்து வருடங்கள் பல கடந்த பின்னும் இன்னும் சிரிப்பூட்டுவதாய் தான் இருக்கிறது பால்ய நினைவுகள் ...நிகழ்வுகள் .