Monday, March 16, 2009

அம்மா வந்தாள்...தி.ஜா வின் பெயர் சொல்ல மறுபடி...மறுபடி...(100 வது பதிவு)

ரொம்ப நாட்களாக எழுத நினைத்த விஷயம் தான் ...

ஆனால் எழுத நினைத்த ஒவ்வொரு முறையுமே "என்ன இருக்கிறது இதைப் பற்றி எழுத? என்று ஒரு நொடி தோன்றும் அடுத்த நொடியில் "எவ்வளவோ இருக்கிறதே இதில் எதையென்று விரித்து எழுத என்றும் தோன்றும்.ஒரே நேரத்தில் ஒன்றுமே விஷயம் இல்லாததைப் போலவும்...ஏராளமாய் விஷயம் இருப்பதைப் போலவும் தோன்ற வைப்பதில் தி.ஜா எப்போதுமே வல்லவர் .


கதை என்று எடுத்துக் கொண்டால் மிகச் சாதாரணமாக ஒரே பத்தியில் சொல்லி முடித்து விடலாம் .அலங்காரம் , தண்டபாணி தம்பதிகளின் மகனான அப்பு சுந்தரத்தின் வேத பாடசாலையில் பாடம் கற்றுக் கொள்ள சிறு வயதிலேயே தன் தகப்பனாரால் கொண்டு விடப் படுகிறான்.இதற்க்கு காரணமாக இருப்பவள் அவனது அம்மா அலங்காரம்.


அந்த வேத பாடசாலை பவானியம்மாளுக்குச் சொந்தம் ,பவானியம்மாளின் தம்பி மகள் இந்து பால்ய விவாகம் செய்விக்கப் பட்டு குறை நாட்களில் தன் கணவனை இழந்து விதவையாக அத்தை வீட்டுக்கே மறுபடி மீள்கிறாள்.அவளுக்கு அப்புவின் மீதே அதிகப் பிரியம் அவள் தனது வாழ்வை தான் விவரம் அறிந்த காலம் முதல் அப்புவுடனே மனதளவில் பிணைத்துக் கொண்டவளாகவே கதை நெடுகிலும் காட்டப் படுகிறாள்.


அவள் சிறு பிராயத்திலிருந்தே மனதுக்குள் அப்புவையே தன் கணவனாக வரித்துக் கொண்டவள் என்பதும்...அப்புவுக்கும் அவள் மீது அலாதியான நேசம் என்பதும் புரிந்தே இருந்தாலும் "கைம்பெண்ணுக்கு கல்யாணம் "என்ற விஷயம் அப்போது சர்ச்சைக்கு உரிய ஒன்றே. இந்துவை விரும்பினால் அம்மா என்ன நினைத்துக் கொள்வாளோ ? பவானியம்மால் என்ன நியானைத்துக் கொள்ளக் கூடுமோ ?! இப்படியாக அப்பு தனியாக தனக்குள் விவாதித்துப் பார்த்து கடைசியில் தன் அம்மாவின் பொருட்டு அவளது நன்மதிப்பைப் பெறும் ஆவலில் இந்துவை தன் மனதில் இருந்து விலக்க நினைக்கிறான்.


ஆனால் இந்துவோ அவன் விலக ...விலக...விலக்க ...விலக்க நெருங்கி ...நெருங்கி வருகிறாள். இது மனித சுபாவம் போலும்!? இதை வென்றிட்டால் உலகை வென்ற மாதிரி அல்லவா? உணர்வுகளைக் கொள்ள விருப்பமில்லாதவளாய் இந்து அப்புவை தேடி வரும் ஒவ்வொரு முறையும் அவன் மிகச் சலனமுற்றவனாய் எங்கே தன்னையும் அறியாமல் இந்துவை தொட நேருமோ என குறுகிப் போனவனாய் (மயக்கம்...மோகம்...இன்னபிற சொல்லாடல்களைக் கூட இங்கே பயன்படுத்திக் கொள்ளலாம் ...அதற்குப் பெயரே தன்னை அறியாமல் அல்லது தன்னை இழத்தல் என்பதாக இருக்கக் கூடும்!) அவள் மீது கடும் கோபம் கொண்டவனாகிறான்.


அப்புவின் கோபம் இந்து மீதான விருப்பமின்மையாக இல்லாமல் பெரும்பான்மையும் "எங்கே அவள் மீது உள்ளூர இருக்கும் நேசத்தை வெளிப்படுத்திக் கொண்டால் தான் "குற்றவாளி" போல பிறரால் பார்க்கப் படலாம் என்ற சுயநலமே பிரதானமாகத் தெரிகிறது.


ஆனால் இந்து அவனை இன்னுமொருமுறை இழக்க மனமில்லாமலோ அல்லது தன்னை அவன் மட்டமாக குறைத்து மதிப்பிட்டு விட்டானே என்ற தன்மானத் தூண்டலிலோ ஏதோ ஒரு நிமிடத்தில் இந்து அப்புவின் அம்மா அலங்காரத்தைப் பற்றி தனக்குத் தெரிந்த அந்தரங்கமான உண்மை ஒன்றை அவனிடம் போட்டு உடைத்து அப்புவை தனது விருப்பத்துக்கு பணிய வைக்க முயல்கிறாள்.


அம்மாவுக்காக என்றால் "அந்த அம்மாவே இரட்டை வாழ்வை ஒன்றென மயங்கிப் போய் நிற்கிறாள்,ஊரை ஏமாற்றி தன்னையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள் ,சிவசுவுடன் அப்புவின் அம்மாவுக்கு நீடிக்கும் பழக்கத்தை அவள் இப்போதும் விட்டாளில்லை ...ஊரறிந்த ரகஸ்யம் இது ,உனக்குத் தெரியாதா இது ? என்று அப்புவிடம் இந்து கடும் வாதம் செய்கிறாள்.


கூடவே அம்மா என்ற பிம்பத்தின் மீது அப்பு உருவாக்கி வைத்த "அப்பழுக்கில்லாத" "பரிசுத்தமான" நிர்மலமான " இன்னபிற உருவங்கள் எல்லாம் உடையும் படி அல்லது அந்த உருவங்கள் எல்லாமே அவளாலேயே உடைக்கப்படும் படி இந்து அப்புவின் அம்மா "அலங்காரத்தைப்" பழித்துக் கூறும் போது கோபத்தில் அவன் அவளை தகாத சொல்லால் திட்டுவதோடு அடிக்கவும் செய்கிறான்.
மீதிய அப்புறம் சொல்றேன் ...

சந்திரிகாவின் நியாயங்கள் ...

அவளை முதல் முதலாக எப்போது பார்த்தேன்?

பாட்டி வீட்டில் தான் என்பதெல்லாம் சரியாக ஞாபகத்தில் நிற்கிறது...எப்போது...எந்தச் சூழலில் என்பது இப்போது யோசித்தால் பிடிபடவே இல்லை .ஆனால் நிச்சயமாக ஏதோ ஒரு விடுமுறைக் காலமாகத் தான் இருக்க முடியும் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை ...!

பாட்டி உள்ளே சமையற்கட்டில் படு பிஸியாக இருந்த ஒரு காலை வேளையில் தான் சந்திரிகா படு கேசுவலாக வெளி முற்றம் தாண்டி உட்புற கூடம் தாண்டி அதை அடுத்துள்ள படுக்கை அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.சித்தியாக்கும் என்ற நினைவில் சாவதானமாக கட்டிலில் படுத்தவாறு காலாட்டிக் கொண்டு எட்ட இருந்த மோடாவில் பிளாஸ்டிக் தட்டில் கோவில்பட்டி கடலை மிட்டாய்களை கொட்டி வைத்து ... வலது கை அதை எடுத்து வாய்க்கு கொண்டு போக இடக்கையால் "அம்மா வந்தாள் " நாவலை கொஞ்சம் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தேன் .

இந்துவையும் ...அப்புவையும் பற்றி சிந்தித்துத் கொண்டே இருக்கையில் அலங்காரம் அம்மாளைப் பற்றி கதை நகரும் போது தான் என் அருகில் வந்த என் பாட்டி வெடுக்கென்று ... ;
நீ எப்படீ வந்த?
அருவமே இல்லாம வந்து நிக்கிற ? உன் மனசுல என்ன நினைப்பு என்று படு அதட்டலாகக் கேட்கவே...சடாரென்று திகைத்துப் போய் திரும்பிப் பார்த்தேன் .
சந்திரிகாவை அப்போது தான் நான் பார்த்திருக்கக் கூடும்!?

ரொம்ப பெரிய அழகி இல்லை அவள்.

ஆனாலும் வாளிப்பான பெண் ...சிவகாசியைச் சுற்றியுள்ள குக்கிராமங்களில் தடுக்கி விழுந்தால் காணக் கிடைக்கும் எண்ணற்ற பட்டாசுத் தொழிற்சாலைகள் ஒன்றில் அவளும் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாளாம் பாட்டி சொல்லக் கேள்வி ;

இதற்க்கு முந்திய விடுமுறையில் இவளை நான் இங்கு பார்த்ததில்லையே என்ற யோசனையுடன் ...

யாரு பாட்டி இது ? என்றவாறு படுத்துக் கொண்டு வாசித்ததில் கசங்கி இருந்த சுடிதாரை இழுத்து விட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டு அவளைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் என்னவோ ரொம்ப நாள் தெரிந்தவளைப் போல

"பாப்பா லீவுக்கு வந்திருகாக்கும் ?
எத்தினி நாள் லீவாம் என்று கேட்டுக் கொண்டே கட்டிலுக்குக் கீழே தரையில்சுவற்றை ஒட்டி சாய்ந்து அமர்ந்து கொண்டு என்னையே பார்த்தாள் .

பாட்டி "பாப்பா லீவுக்கு தான் வந்திருக்கு...அந்தக் கதைய விடு...எவ்ளோ நாளைக்குத் தான் இப்படியே ஏமாத்திட்டு ஓடிட்டு இருப்பா பார்ப்போமேன்னு காலைல தான் உன்ன பத்தி நானும் சரோஜாக்காவும் பேசிட்டு இருந்தோம் ;அதிசயமா இப்போ வந்து யட்சிணி மாதிரி நிக்கிற இங்க உள்ரூம்ல !?

enna விஷயம் ...வாங்கின பணத்துக்கு வட்டியவும் காணோம்...அசலையும் காணோம். நாலஞ்சு மாசமா நீயும் ஆளே தட்டுப் படலை.
என்ன தாண்டீ நினைச்சுகிட்டு இருக்கா நீ ?
உங்க முதலாளி போனஸ் கீனஸ் ஒன்னும் தராமயா இருந்திருப்பாரு இன்னிக்கு வரைக்கும் ...!
பாட்டி இவ்வளவு அதட்டலாகக் கேட்டும் அவளென்னவோ மிரண்டதாகத் தெரியவில்லை .
பாப்பா இந்த மாதிரி சுடிதார்ல அரைக் கை வச்சி தச்சிக்கிறது தான் இப்போ புது ஃபேஷனாக்கும்?! என்று என் பதிலை எதிர் பார்ப்பவளாய் காட்டிக் கொண்டு "குடிக்க கொஞ்சம் தண்ணீ குடுங்க பாட்டி ...இன்னைக்கு நல்ல தண்ணிக் கிணத்துக்குப் போக தீரலை எனக்கு ...உப்புத் தண்ணி எம்புட்டுக் குடிச்சும் தாகம் தீரலை என்று தன் முந்தானையால் தன் முகத்துக்கு விசிறிக் கொண்டு பாட்டியைப் பார்த்துச் சொன்னாள் .
இங்கயே நல்ல தண்ணீ எடுக்கக் கிணத்துக்குப் போக ஆள் தேட வேண்டி இருக்கு .இருக்கிறது ரெண்டு குடம் இதுல உன்ன மாறி வரவ...போறவ எல்லாத்துக்கும் மோந்து மோந்து கொடுத்துட்டா இந்த வயசுல நான் அம்புட்டு தூரம் பானையத் தூக்கிட்டு அலையத் தான் வேணும்.
பாட்டி தணீர் கொண்டு வருவதைப் போல எந்த அறிகுறியும் இல்லாதிருக்க ...எனக்கென்னவோ "குடிக்கத் தானே கேட்டால் ...ஒரே ஒரு சொம்பு தண்ணீர் கொடுத்தால் குறைந்து விட மாட்டோமே என்ற நோக்கில் எடுத்து வந்து கொடுத்தேன்.
பாட்டி என்னை ஒன்றும் சொல்லவில்லை .
இந்தா பாரு சந்திரி ...நீ என்கிட்டே ரெண்டாயிரம் வாங்கி ஒன்னரை வருஷம் ஆச்சு...பையனுக்கு மஞ்சக் காமாலை ...போனஸ் போட்ட உடனே கொண்டாந்து கொடுத்துறேன்னு மூவாயிரம் வாங்கி அதுவும் இப்போ ஒரு வருஷம் முடிய போகுது .இன்னைய தேதிக்கு அஞ்சாயிரம் நிக்குது .வட்டியுமில்ல ...அசலுமில்ல, உன்னப் பார்த்துக் கேட்கலாம்னா நீ என்னடான்னா ஒழிஞ்சு விளாண்டுகிட்டு இருக்க ?!ஆளே கண்ணுல பட மாட்ட ...இன்னிக்கு என்ன அதிசயமா இங்கிட்டுக் காத்தடிச்சிருக்கு?
இப்போது தான் பாட்டி பேசுவது காதில் விழுந்தவலைப் போலவும்...அவளென்னவோ முந்தி வாங்கிய கடனை எல்லாம் ஒரே நாளில் கொடுக்கப் போகிறவளைப் போலவும் முகத்தை வைத்துக் கொண்டு சந்திரிகா ...பாட்டியிடம்...பாட்டி உங்க காசை எடுத்துக் கிட்டு நான் எங்க ஓடிரப் போறேன் ?இப்போ ஒரு அவசரம்...அர்ஜெண்டா ஒரு 1000 இப்பவே கொடுத்தீங்கன்னா மூனே நாள்ல உங்க மொத்தக் கடனையும் கொடுத்துருவேன்.இருந்தாக் குடுங்களேன் .பாட்டிக்கு வந்ததே ஆத்திரம் ...;என்னது விளாடரியா நீ ?ஒழுங்க முன்னாடி வாங்கின கடனைக் கட்டி முடி .உன் ஏமாத்து வேலைக்கெல்லாம் வேற ஆளைப் பார் ...நாங்க அம்புட்டுப் பெரிய பணக்காரங்க இல்ல ...உன் முதலாளி கிட்ட போய் கேளு ...எங்க பணத்தைக் கொடுத்துட்டு எங்கள ஆள விடு தாயி ...உனக்கு கோடிப் புண்ணியம்.
சந்திரிகா இந்த பதிலைத் தான் பாட்டியிடம் எதிர் பார்த்து வந்திருப்பவள் போல மெல்ல சோம்பல் முறித்துக் கொண்டு சுவற்றில் இருந்து தன் முதுகை நிமிர்த்தி கொட்டாவி விட்டாள் அந்தக் காலை நேரத்தில் .
அதென்னவோ பாட்டிக்கு அவள் கொட்டாவி விட்டது பிடிக்கவில்லை போல ;
என்னடீ இன்னேரமே இம்புட்டு வாயப் பிளக்கற ? ராத்திரியெல்லாம் தூங்காம வெட்டி முறிச்சியா என்னா?என்றார் அதட்டலாக ;
அதற்க்கு வெகு அசுவாரஸ்யமாக அவள் சொன்ன பதிலில் பாட்டி என்னை திடுக்கிட்டுப் பார்த்து விட்டு ;
நீ உள்ள போய் கத புஸ்தகம் படி கண்ணு ...நான் இவகிட்ட பேசிட்டு வரேன்
என்றார் படக்கென்று .
அவள் சொன்ன பதில் அப்படி ;
பாட்டி மனதிற்குள்ளாக சந்திரிகாவை திட்டிக் குமிப்பது அவளது முகபாவத்தில் என்னால் உணர முடிந்தது .ரெண்டும் கெட்டான் வயசுல ஒரு சின்னப் புள்ள கிட்டக்க நிக்கும் போது இந்த மூதேவி இப்படியா உளறித் தொலைப்பா ? கிராதகி .இப்படியெல்லாம் பாட்டி மனதிற்குள் அவளைத் திட்டி இருக்கலாம். நான் அவளிடம் கேட்கவில்லை
ஏன்...எதற்கு ...எப்படி என்றெல்லாம் ?!
சந்திரிகா அப்படி என்ன பதில சொன்னாள் ?
தெரிந்து கொள்ள நாளை வரை காத்திருங்கள் ...
தொடரும் ..................................................................................