Showing posts with label பாதி நிஜம். Show all posts
Showing posts with label பாதி நிஜம். Show all posts

Sunday, April 5, 2009

மாத்திரைகளும்...மருந்தும் செய்யாத மாயாஜாலம்

பானு தினமும் என்னோடு வாக்கிங் வருவாள் மாலை 4.30 க்கு ஆரம்பிக்கும் நடை 5.30 க்கு முடியும் சாவதானமாக ஒரு 15 நிமிடங்கள் காற்றாட வாக்கிங் நடக்கும் இடத்தில் போட்டிருக்கும் கல் பெஞ்சில் உட்கார்ந்து கதை பேசி விட்டு 6 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து விளக்கேற்றி விட்டு இரவு சமையல் வேலை தொடங்குவோம்.அவளது வீடு என் வீட்டு மாடி .

இன்று வாக்கிங் வரும் போது பானு சுரத்தே இல்லாமல் நடந்து கொண்டிருந்தாள் .என்னாச்சு பானு ?என்றேன் ;அம்மா ஊர்ல இருந்து ட்ரீட்மென்ட் காக இங்க வந்திருக்காங்க ரத்னா என்றாள்.எப்போ வந்தாங்க நான் பார்க்கலையே ...உங்க வீட்ல இருந்து ஒரு சத்தத்தையும் காணோமே! கெஸ்ட் வந்தா வீடே அமர்க்களப் படுமே உன் பையன் ஓடி வந்து என்கிட்டே சொல்லி இருப்பானே இந்நேரம் "என் பாட்டி தாத்தா வந்திருக்காங்க ஆண்டி னு. இன்னிக்கென்ன ஒன்னையும் காணோம்.

ஹம்.......பானு நீள மூச்செடுத்து பின் மீண்டும் அமைதியானாள்.

பானுவின் அமைதியின் பின் என்ன இருக்குமோ என்ற யோசனையுடன் அன்றைய வாக்கிங் முடிந்தது.அவளிடம் நான் ஏனோ ...ஏன் ..எதற்கு..எப்படி என்று தூண்டித் துருவ மனமின்றி கல் பெஞ்சில் உட்கார்ந்தோம் இருவரும்.பானுவின் கண்கள் லேசாகக் கலங்குவதைப் போல தோன்றியது .சரி சொல்லும் விஷயம் என்றாள் அவளே சொல்லக் கூடும் ...ஆறுதலுக்கு கேட்கிறேன் பேர்வழியென்று அவளது மனக் கஷ்டத்தை தூண்டியது போல் ஆகி விடக் கூடாதே என்று அவளை ஆராயாமல் மேலே பறந்து கொண்டிருந்த காகங்களிலும் கீழே ரயில்வே ட்ராக்கில் தேமே என நின்று கொண்டிருந்த எருமை மாடுகளிலும் பார்வையை ஓட்டினேன் ,

ஐந்து நிமிடங்கள் கழிந்தபின் ...பானுவே சொன்னாள் .

வீட்ல வேலை எல்லாம் முடிச்சதும் கொஞ்சம் மேல என் வீடு வரை வந்துட்டுப் போயேன் ரத்னா என்று , மெல்ல புன்னகையுடன் "என்ன பிரச்சினை என்றாலும் மனசை ரொம்ப போட்டு அலட்டிக்காதே பானு .நான் நைட் சமையல் முடிஞ்சதும் மாடிக்கு வரேன் உன் வீட்டுக்கு "என்று முடித்தேன் .

ஏற்கனவே பிசைந்து வாய்த்த கோதுமை மாவு ஃபிரிஜ்ஜில் இருந்ததை எடுத்து எனக்கு மூன்று சப்பாத்திகள் என் கணவருக்கு நன்கு சப்பாத்திகள் என் மகளுக்கு இரண்டு சப்பாத்திகள் ஹாட் பாக்கில் தொட்டுக் கொள்ள பச்சைப் பட்டாணி குருமா ,கூட ஒரு சிறு கிண்ணத்தில் கெட்டித் தயிரில் துருவிய கேரட் கொஞ்சம் போட்டு கலந்த ராய்த்தா என்று எடுத்து உணவு மேஜையில் வைத்தேன் தண்ணீர் பாட்டிலும் எடுத்து வைத்த பின் ஹால் சோபாவில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த மகளிடம் அம்மா பானு ஆண்டி வீடு வரைக்கும் போயிட்டு வரேன் ...அப்பா வந்தா ரெண்டு பேரும் சாப்பிடுங்க எனக்காக வெயிட் பண்ண வேண்டாம் ..என்று தகவல் சொல்லி விட்டு மாடிப் படிகளை கடந்தேன்.

பானு வீட்டில் நிலவிய அசாத்திய அமைதி கண்டு முதல் முறையாய் எனக்கு ஒரு மாதிரியாக ஆகி விட்டது ...பானுவின் அம்மா இதற்க்கு முன்பும் சில முறைகள் இங்கே வந்திருக்கிறார்...மகள் வீட்டுக்கு விருந்தாளியாய்...!?

மங்கள கரமான பெண்மணி ...முகத்தில் அன்பு ததும்பும்...பேச்சில் கனிவு பொங்கும்...என் அம்மாவைப் போல அவர் வேலை பார்க்கும் அம்மா இல்லை ...எப்போதும் வீடு ...வீடு..வீடு தான் அவரது உலகமாம் .

குழந்தைகள் படிப்பு...கல்யாணம் என்று ஆனதும் அவர்களது பிள்ளைகள் அவர்களது வருகை ...இப்படியே தான் அவரது வாழக்கை சுழன்றது இதை அவரது பேச்சின் மூலம் நான் கிரகித்தேன் .பானுவும் சொல்லி இருக்கிறாள் அவளது அம்மாவைப் பற்றி கொஞ்சம்...

அவளது வீட்டுக்குள் நுழைந்ததும் கண்கள் அவளது அம்மாவைத் தான் தேடின ... அம்மா அப்போது சமையல் உள்ளில் இருந்தார்கள் ...கையில் ஒரு பழந்துணி கொண்டு சமையலறை ஜன்னல்களைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள். பானு ஹால் சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தாள் முகத்தில் வெளிச்சமில்லை .

நான் அவளருகில் சென்று அமர்ந்தவாறு...

எப்போ வந்தீங்கம்மா ? சத்தமே காணோம் ...நீங்க வந்தா உங்க பேரன் இந்த அபார்ட்மென்ட் முழுக்க விளம்பரம் பண்ணுவானே ! இந்த வாட்டி அருவமே இல்லையே...ஊர்ல எல்லாரும் சௌக்கியம் தானே?

பானுவின் அம்மாவுக்கு நான் பேசியது ..என் விசாரணை எல்லாமே மிகத் தெளிவாக கேட்கும் தூரம் தான்...ஆனாள் அவரென்னவோ திரும்பியும் பார்க்கவில்லை. அவர் என்னைப் பார்க்கவே இல்லை போல என்று அருகே செல்ல எழுந்த என்னை ,பானு மெல்லக் கை அசைத்து என்னை அமைதியாக உட்காரும் படி தன்னருகில் இருத்தினால்.

ஆச்சர்யமாக இருந்தது எனக்கு.

சமையல் அரை ஜன்னலைத் துடைத்துக் கொண்டிருந்த அம்மா இப்போது கேஸ்

ஸ்டவ்வை துடைத்துக் கொண்டிருந்தாள் ...,நானும் பானுவும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம் ...நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்து பாத்திரங்கள்...தட்டுக்கள்...தம்ளர்கள் ...சமையல் மேடை ....குடம்...கிரைண்டர்....மிக்சி...பிரிஜ் ...அவன் ....எல்லாம் துடைத்து முடித்து விட்டு பிறகும் அந்த அம்மா கையில் இருந்த பழந்துணியை கீழே வைத்ததாகத் தெரியவில்லை.

என்னிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை ...சரி நான் யாரோ பக்கத்து வீட்டுப் பெண் ...ஆனாள் பானு அவரது மகள் இல்லையா? அவளிடமும் ஒன்றும் பேசிய பாடில்லை .நாங்கள் இரண்டு பேர் அங்கே உட்கார்ந்து கொண்டு அவரை வேடிக்கை பார்க்கிறோம் என்ற சுவாதீனமே இல்லை அவருக்கு.அவர் பாட்டுக்கு துடைத்துக் கொண்டே இருந்தார் ஒவ்வொன்றாய் ...

துடைத்தல் எல்லாப் பொருட்களையுமே ஒன்று விடாமல் துடைத்தல் கையில் இருக்கும் பழந்துணி அழுக்கு நிறைய சேர்ந்து விட்டதென்று அவருக்குத் தோன்றினால் அதை பரபரவென்று சோப்புப் போட்டுத் துவைத்து பிழிந்து ஜன்னல் கம்பியில் உலரப் போட்டு விட்டு இன்னொரு பழந்துணி கிழித்து மறுபடி கிடைத்ததை துடைக்க ஆரம்பித்து விடுவார்.

கிட்டத் தட்ட ஒருமணி நேரம் இதே கதை தான்.நானும் பயந்து தான் போனேன் இதைப் பார்த்து ; பானுவிடம் எதுவும் ஆறுதல் சொல்ல வகையின்றி ...அம்மாவுக்கு என்ன பானு ? என்றேன்!

அவளோ அடக்க மாட்டாமல் அழுது விடுபவளைப் போல முகத்தை வைத்துக் கொண்டு "அதான் தெரியலை ரத்னா ...நேத்து நைட் வந்தாங்க ...அப்போ இருந்தே இதே கதை தான்...ரஞ்சன் பாட்டிய பார்த்ததும் எப்பவும் போல ஓடிப் போய் கட்டிக்கிட்டு கொஞ்சினான். அம்மாவுக்கு அது உணரலை போல...அவன விலக்கி விட்டுட்டு அப்போ போய் கிச்சன்ல இப்படி துடைக்க ஆரம்பிச்சவங்க தான் ...நைட் தூங்கவே இல்லை ...இதே தான்...மேலே பேச முடியாமல் அவளுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது.

எனக்கு எப்போதோ ஆனந்த விகடனில் மதன் கேள்வி பதிலில் படித்திருந்த "அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ் ஆர்டர் தான் நினைவில் நெருடியது . எங்க காட்டறீங்க ? அம்மாவை என்றேன் அண்ணா வீடு திருவான்மியூர்ல இருக்கு அங்க ஒரு டாக்டர்.

அம்மாவுக்கு வயது 65 இருக்கும் போல தெரிந்தது ...அவர்கள் டாக்டரிடம் கொண்டு பொய் அம்மாவை காண்பிப்பதில் எனக்கொன்றும் மாற்றுக் கருத்து இல்லை ...வெறும் மருந்து மாயங்களில் இந்த அம்மாள் பழையபடி மங்களம் துலங்க என்னை "வாம்மா ரத்னா " எப்படி இருக்கே ? என்று முகமெல்லாம் பளிச்சிட அழைத்து விட்டால்...எனக்கும் பரம சந்தோசம் தான் .

எனக்கென்னவோ சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட என் ஒன்று விட்ட பாட்டியின் ஞாபகம் தான் மனம் முழுக்க வியாபித்தது பானுவின் அம்மாவைப் பார்த்ததில் இருந்து .

பாட்டி பெரிய பணக்காரி ...அந்தக் காலத்தில் தங்கப் பல் கட்டிக் கொண்ட சீமாட்டி. விடுமுறையில் ஊருக்குப் போனால் வாயிலிருக்கும் தங்கப் பல் டாலடிக்க "எப்போ வந்தேடி குட்டிப் பொண்ணே?! என்று

அந்தப் பாட்டிக்கு இரண்டு பெண்கள் ...கணவர் நல்ல உழைப்பாளி தான்..ஆனாலும் கொஞ்சம் சோக்குப் பேர்வழி என்று என் பாட்டியும் தாத்தாவும் பேசுகையில் கேட்டிருக்கிறேன் .ஆனாலும் பணம் நிறைய இருந்ததால் நன்றாகத் தான் இருந்தார்கள் .

கடைசியில் ஒருநாள் இதே போல அந்தப் பாட்டியை அவளது மூத்த மகளான எனது ஒன்று விட்ட அத்தையின் வீட்டுக்கு ட்ரீட்மென்ட்க்கு கூட்டி வந்தார்கள் ஒருநாள் விடிகாலையில் ,

பாட்டி இயல்பான நடவடிக்கையில் தான் தோற்றம் தந்தாள் ...ஆனால் இருந்தார் போல் இருந்து தன்னை யாரோ செய்வினை வைத்து விட்டார்கள்...செத்துப் போன தன் மாமியார் வந்து மிரட்டுகிறாள் நேரில் ஆவியாய் ...ஒரு பூனை கிட்டே போனால் கூட "ஐயோ இது என் மாமியார் தான் என்னை அவளோடு க்கூட்டிப் போக வந்து விட்டால் ...என்று அலறுவார் ...அத்தையும் ...மாமாவும் என்னென்னவோ வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தார்கள் ...பாட்டிக்கு குணமான பாடில்லை.

உச்ச கட்டமாக தங்கப் பல் டாலடிக்க சிரித்து வரவேற்கும் பாட்டி பல்லெல்லாம் கொட்டி முடி எல்லாம் சடை பிடித்து திரி ...திரியாகத் தொங்க தன் உடைகளைத் தானே கிழித்துக் கொண்டு உளரும் நிலை வந்ததும் ஒருநாள் திடீரென்று செத்துப் போனார்கள்.

ஊருக்குள் பேசிக் கொண்டார்கள் ...அந்த பாட்டிக்கு தென்னை மர மாத்திரை கொடுத்து விட்டார்கள் வீட்டினரே என்று...கருணைக் கொலையா இது என்று மனம் அதிர்ந்தது சில விநாடிகள் .

பானுவின் அம்மாவைக் கண்டதும் எனக்கு ஏன் அந்தப் பாட்டி ஞாபகம் வந்ததோ?!

ஆனால் கண்களில் நீர் தளும்பி நீழே உதிரட்டுமா என்றது ..பானுவிடம் என்ன சொல்ல என்று புரியாமல் மாடிப் படிகளைக் கடந்து கீழே என் வீட்டுக்கு வந்தேன்.

வெறும் மாத்திரைகள்..........மருந்துகள்.....டாக்டர்கள்......வேறு....வேறு......வேறு ...டாக்டர்கள்.

வெறும் மாத்திரைகள் ...மருந்துகள் ....என்ன செய்யக் கூடுமோ ?!!!

இது ஒரு பயங்கர நோயா ? என்ற சந்தேகமே என்னை அரித்துக் கொண்டிருந்தது.

மறுநாள் என் மகளுக்கு கோடை விடுமுறை விட்டார்கள் , இரண்டு வருடங்களாய் வேலைப் பளு ...மகளின் படிப்பு ...இதர திறமைகளை வளர்த்துக் கொள்ளும் படிப்புகள் ...பாட்டுக் கிளாஸ்...டான்ஸ் கிளாஸ் ...கம்பியூட்டர் கிளாஸ் ...ஸ்கேட்டிங் கிளாஸ் எல்லாம் மூட்டை கட்டி வைத்தோம் குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கு,

என் கணவர் அவரது அலுவலக வேலைகளை எல்லாம் முடியுமட்டும் விரைவாக்கினார்...முடித்தார் .பதினைந்து முழுநாட்கள் விடுமுறை கிடைத்தது அவருக்கு.

இதோ கிளம்பி விட்டோம் எங்கள் பெற்றோரைக் காண ...இனி விடுமுறைக் காலங்கள் அவர்களுக்கே .

அம்மா...அப்பா...மாமியார்...மாமனார்...எல்லோரோடும் மனம் விட்டுப் பேசலாம்...பேசிச் சிரிக்கலாம் அவர்களை சிரிக்க வைக்கலாம்.பேரன் பேத்திகளோடு விளையாடலாம் ..விளையாட வைக்கலாம் ...எங்கே போய் விடப் போகின்றன? டான்ஸ் கிளாசும் ...கம்பியூட்டர் கிளாசும் சும்மா ஒரு மாத இடைவெளியில்?!

எங்கள் ஊருக்கு செல்லும் பஸ்ஸில் ஏறி சீட்டில் அமர்ந்து சாய்ந்து உட்கார்ந்ததும் அதுவரை இருந்த திணறல் நீங்கி நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.


வெறும் மாத்திரைகளும்...மருந்தும் செய்யாத மாயஜாலம் தான்.

Tuesday, March 17, 2009

சந்திரிகாவின் நியாயங்கள் (பார்ட்- 2 )

சந்திரிகா அப்படி என்ன சொன்னாள் ?

சுறு சுறுப்பாக இருப்பவளைப் போல வெளிப் பார்வைக்குப் பட்டாலும் பாவம் அவள் கண்களை தூக்கம் தின்று கொண்டிருப்பதைப் போல எனக்கொரு பிரமை .

அவள் சொன்ன பதில் இது தான் .

தேவராஜ் மாமா வீட்டுக் கட்டில் மாதிரி ஊருல எங்கயும் இல்லை பாட்டி ,அங்க இருந்து தான் வரேன்;படுத்தா எந்திரிக்க மனசே வரலை ,வெளிநாட்டுல இருந்து கப்பல்ல இல்ல வர வச்சு வாங்கி இருக்காராம்.

பொண்ணு காலேஜுக்குப் போயிருச்சு இல்ல ...அதான். இல்லனா இந்நேரம் கூப்புட மாட்டார்.

100 ரூவா தந்தார் ,எவ்ளோ நாளைக்கு வெறும் 100 ரூவாயே வாங்கிட்டு இருப்பேன் ,கூட ஒரு அம்பது குடுங்க மாமானா ...அவரு ,

இதுவே அதிகம்டீனுட்டார்.

என்ன இப்பிடி சொல்றீங்கனு கேட்டாக்க ...

இந்த மாதிரி கட்டில்ல படுக்க நீ தான் எனக்கு காசு தரனும்.இந்த ஊருக்குள்ள இப்பிடியாப் பட்ட கட்டில் எங்கனாச்சும் பார்த்திருக்கியாங்கறார் !!!

கண்ணன் ஸ்கூல்ல எங்கயோ சுற்றுலா போறாங்களாம் ...பணம் கொடும்மான்னு ஒரே நச்சரிப்பு ஒரு வாரமா ; அதான் போயிட்டு வந்தேன் .

இதைச் சொல்லும் பொது அவள் முகத்தில் " தான் செய்த செயலைப் பற்றியஎந்த ஒரு வித்யாசமான உணர்வையும் நான் காண முடியவில்லை .

வெறும் ஒரு ஸ்கூல் டூர் !!!

அதற்கு எதை பண்டமாற்று செய்திருந்தால் என்பதைப் பற்றி அவளுக்கேதும் இரண்டாம் பட்சக் கருத்தோ ...குழப்பமோ இல்லவே இல்லை .

சந்திரிகா தொடர்வாள் ...(இப்போ என்ன அவசரம் ? நாளைக்கு சொல்றேன் மீதிய)

Monday, March 16, 2009

சந்திரிகாவின் நியாயங்கள் ...

அவளை முதல் முதலாக எப்போது பார்த்தேன்?

பாட்டி வீட்டில் தான் என்பதெல்லாம் சரியாக ஞாபகத்தில் நிற்கிறது...எப்போது...எந்தச் சூழலில் என்பது இப்போது யோசித்தால் பிடிபடவே இல்லை .ஆனால் நிச்சயமாக ஏதோ ஒரு விடுமுறைக் காலமாகத் தான் இருக்க முடியும் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை ...!

பாட்டி உள்ளே சமையற்கட்டில் படு பிஸியாக இருந்த ஒரு காலை வேளையில் தான் சந்திரிகா படு கேசுவலாக வெளி முற்றம் தாண்டி உட்புற கூடம் தாண்டி அதை அடுத்துள்ள படுக்கை அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.சித்தியாக்கும் என்ற நினைவில் சாவதானமாக கட்டிலில் படுத்தவாறு காலாட்டிக் கொண்டு எட்ட இருந்த மோடாவில் பிளாஸ்டிக் தட்டில் கோவில்பட்டி கடலை மிட்டாய்களை கொட்டி வைத்து ... வலது கை அதை எடுத்து வாய்க்கு கொண்டு போக இடக்கையால் "அம்மா வந்தாள் " நாவலை கொஞ்சம் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தேன் .

இந்துவையும் ...அப்புவையும் பற்றி சிந்தித்துத் கொண்டே இருக்கையில் அலங்காரம் அம்மாளைப் பற்றி கதை நகரும் போது தான் என் அருகில் வந்த என் பாட்டி வெடுக்கென்று ... ;
நீ எப்படீ வந்த?
அருவமே இல்லாம வந்து நிக்கிற ? உன் மனசுல என்ன நினைப்பு என்று படு அதட்டலாகக் கேட்கவே...சடாரென்று திகைத்துப் போய் திரும்பிப் பார்த்தேன் .
சந்திரிகாவை அப்போது தான் நான் பார்த்திருக்கக் கூடும்!?

ரொம்ப பெரிய அழகி இல்லை அவள்.

ஆனாலும் வாளிப்பான பெண் ...சிவகாசியைச் சுற்றியுள்ள குக்கிராமங்களில் தடுக்கி விழுந்தால் காணக் கிடைக்கும் எண்ணற்ற பட்டாசுத் தொழிற்சாலைகள் ஒன்றில் அவளும் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாளாம் பாட்டி சொல்லக் கேள்வி ;

இதற்க்கு முந்திய விடுமுறையில் இவளை நான் இங்கு பார்த்ததில்லையே என்ற யோசனையுடன் ...

யாரு பாட்டி இது ? என்றவாறு படுத்துக் கொண்டு வாசித்ததில் கசங்கி இருந்த சுடிதாரை இழுத்து விட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டு அவளைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் என்னவோ ரொம்ப நாள் தெரிந்தவளைப் போல

"பாப்பா லீவுக்கு வந்திருகாக்கும் ?
எத்தினி நாள் லீவாம் என்று கேட்டுக் கொண்டே கட்டிலுக்குக் கீழே தரையில்சுவற்றை ஒட்டி சாய்ந்து அமர்ந்து கொண்டு என்னையே பார்த்தாள் .

பாட்டி "பாப்பா லீவுக்கு தான் வந்திருக்கு...அந்தக் கதைய விடு...எவ்ளோ நாளைக்குத் தான் இப்படியே ஏமாத்திட்டு ஓடிட்டு இருப்பா பார்ப்போமேன்னு காலைல தான் உன்ன பத்தி நானும் சரோஜாக்காவும் பேசிட்டு இருந்தோம் ;அதிசயமா இப்போ வந்து யட்சிணி மாதிரி நிக்கிற இங்க உள்ரூம்ல !?

enna விஷயம் ...வாங்கின பணத்துக்கு வட்டியவும் காணோம்...அசலையும் காணோம். நாலஞ்சு மாசமா நீயும் ஆளே தட்டுப் படலை.
என்ன தாண்டீ நினைச்சுகிட்டு இருக்கா நீ ?
உங்க முதலாளி போனஸ் கீனஸ் ஒன்னும் தராமயா இருந்திருப்பாரு இன்னிக்கு வரைக்கும் ...!
பாட்டி இவ்வளவு அதட்டலாகக் கேட்டும் அவளென்னவோ மிரண்டதாகத் தெரியவில்லை .
பாப்பா இந்த மாதிரி சுடிதார்ல அரைக் கை வச்சி தச்சிக்கிறது தான் இப்போ புது ஃபேஷனாக்கும்?! என்று என் பதிலை எதிர் பார்ப்பவளாய் காட்டிக் கொண்டு "குடிக்க கொஞ்சம் தண்ணீ குடுங்க பாட்டி ...இன்னைக்கு நல்ல தண்ணிக் கிணத்துக்குப் போக தீரலை எனக்கு ...உப்புத் தண்ணி எம்புட்டுக் குடிச்சும் தாகம் தீரலை என்று தன் முந்தானையால் தன் முகத்துக்கு விசிறிக் கொண்டு பாட்டியைப் பார்த்துச் சொன்னாள் .
இங்கயே நல்ல தண்ணீ எடுக்கக் கிணத்துக்குப் போக ஆள் தேட வேண்டி இருக்கு .இருக்கிறது ரெண்டு குடம் இதுல உன்ன மாறி வரவ...போறவ எல்லாத்துக்கும் மோந்து மோந்து கொடுத்துட்டா இந்த வயசுல நான் அம்புட்டு தூரம் பானையத் தூக்கிட்டு அலையத் தான் வேணும்.
பாட்டி தணீர் கொண்டு வருவதைப் போல எந்த அறிகுறியும் இல்லாதிருக்க ...எனக்கென்னவோ "குடிக்கத் தானே கேட்டால் ...ஒரே ஒரு சொம்பு தண்ணீர் கொடுத்தால் குறைந்து விட மாட்டோமே என்ற நோக்கில் எடுத்து வந்து கொடுத்தேன்.
பாட்டி என்னை ஒன்றும் சொல்லவில்லை .
இந்தா பாரு சந்திரி ...நீ என்கிட்டே ரெண்டாயிரம் வாங்கி ஒன்னரை வருஷம் ஆச்சு...பையனுக்கு மஞ்சக் காமாலை ...போனஸ் போட்ட உடனே கொண்டாந்து கொடுத்துறேன்னு மூவாயிரம் வாங்கி அதுவும் இப்போ ஒரு வருஷம் முடிய போகுது .இன்னைய தேதிக்கு அஞ்சாயிரம் நிக்குது .வட்டியுமில்ல ...அசலுமில்ல, உன்னப் பார்த்துக் கேட்கலாம்னா நீ என்னடான்னா ஒழிஞ்சு விளாண்டுகிட்டு இருக்க ?!ஆளே கண்ணுல பட மாட்ட ...இன்னிக்கு என்ன அதிசயமா இங்கிட்டுக் காத்தடிச்சிருக்கு?
இப்போது தான் பாட்டி பேசுவது காதில் விழுந்தவலைப் போலவும்...அவளென்னவோ முந்தி வாங்கிய கடனை எல்லாம் ஒரே நாளில் கொடுக்கப் போகிறவளைப் போலவும் முகத்தை வைத்துக் கொண்டு சந்திரிகா ...பாட்டியிடம்...பாட்டி உங்க காசை எடுத்துக் கிட்டு நான் எங்க ஓடிரப் போறேன் ?இப்போ ஒரு அவசரம்...அர்ஜெண்டா ஒரு 1000 இப்பவே கொடுத்தீங்கன்னா மூனே நாள்ல உங்க மொத்தக் கடனையும் கொடுத்துருவேன்.இருந்தாக் குடுங்களேன் .பாட்டிக்கு வந்ததே ஆத்திரம் ...;என்னது விளாடரியா நீ ?ஒழுங்க முன்னாடி வாங்கின கடனைக் கட்டி முடி .உன் ஏமாத்து வேலைக்கெல்லாம் வேற ஆளைப் பார் ...நாங்க அம்புட்டுப் பெரிய பணக்காரங்க இல்ல ...உன் முதலாளி கிட்ட போய் கேளு ...எங்க பணத்தைக் கொடுத்துட்டு எங்கள ஆள விடு தாயி ...உனக்கு கோடிப் புண்ணியம்.
சந்திரிகா இந்த பதிலைத் தான் பாட்டியிடம் எதிர் பார்த்து வந்திருப்பவள் போல மெல்ல சோம்பல் முறித்துக் கொண்டு சுவற்றில் இருந்து தன் முதுகை நிமிர்த்தி கொட்டாவி விட்டாள் அந்தக் காலை நேரத்தில் .
அதென்னவோ பாட்டிக்கு அவள் கொட்டாவி விட்டது பிடிக்கவில்லை போல ;
என்னடீ இன்னேரமே இம்புட்டு வாயப் பிளக்கற ? ராத்திரியெல்லாம் தூங்காம வெட்டி முறிச்சியா என்னா?என்றார் அதட்டலாக ;
அதற்க்கு வெகு அசுவாரஸ்யமாக அவள் சொன்ன பதிலில் பாட்டி என்னை திடுக்கிட்டுப் பார்த்து விட்டு ;
நீ உள்ள போய் கத புஸ்தகம் படி கண்ணு ...நான் இவகிட்ட பேசிட்டு வரேன்
என்றார் படக்கென்று .
அவள் சொன்ன பதில் அப்படி ;
பாட்டி மனதிற்குள்ளாக சந்திரிகாவை திட்டிக் குமிப்பது அவளது முகபாவத்தில் என்னால் உணர முடிந்தது .ரெண்டும் கெட்டான் வயசுல ஒரு சின்னப் புள்ள கிட்டக்க நிக்கும் போது இந்த மூதேவி இப்படியா உளறித் தொலைப்பா ? கிராதகி .இப்படியெல்லாம் பாட்டி மனதிற்குள் அவளைத் திட்டி இருக்கலாம். நான் அவளிடம் கேட்கவில்லை
ஏன்...எதற்கு ...எப்படி என்றெல்லாம் ?!
சந்திரிகா அப்படி என்ன பதில சொன்னாள் ?
தெரிந்து கொள்ள நாளை வரை காத்திருங்கள் ...
தொடரும் ..................................................................................