Monday, February 23, 2009

அழகான நாட்களில் இன்றொரு நாள்/


குளு குளு வென இருந்தது பாப்புவின் பள்ளிக்குள் நுழைந்ததும் ; பள்ளியில் எல்லா வகுப்பறையும் எ.சி என்று நினைத்து விட வேண்டாம்.திங்களும் அதுவுமாய் கண் பார்த்த இடமெல்லாம் வெள்ளுடை குட்டித் தேவதைகள்.
கண்ணுக்கு குளிர்ச்சியாய்...மனதிற்குள்

சிலு சிலுவென்று பனியடித்தது. ரகம் ரகமாய் பூச்சரங்களைப் போல வளைய வரும் உற்சாகம் குறையாத வண்ணத்துப் பூச்சிகள்.

"ஆப்பிள் பெண்ணே நீ தானோ ...

ஐஸ் கிரீம் கனவே நீ தானோ "

என்று பாட்டுப் பாடாத குறை தான்!

குழந்தைகள் அவர்கள் ஆண் குழந்தைகளோ...பெண் குழந்தைகளோ பாரபட்சமே இன்றி எல்லாக் குழந்தைகளும் கொள்ளை அழகு .விதம் விதமான குண்டு...குண்டு கண்களோடு ...பன் போன்ற மெத்து...மெத்தென்ற கன்னங்களோடு ,தளிர் பிஞ்சு உடலசைத்து நிற்பதுவும்...நடப்பதுவும்...பேசுவதும் கூட அத்தனை அழகு .ஓடும் போது கூட ரொம்பவும் அழகு தான் .

சிலரது குட்டித் தலைகளில் செடிகள் முளைக்க வைத்து அதில் வண்ண வண்ண பாண்டுகள் சுற்றியிருந்தனர்.செடிகளைச் வளைத்து பூக்களைச் சுற்ற இப்போதெல்லாம் அனுமதி இல்லையாம்.

எடுத்து வாயில் போட்டு மென்று விடக் கூடாது என்றோ என்னவோ?! இந்த அழகான சுட்டி ராட்சசிகள் அப்படிச் செய்யமாட்டார்கள் என்று நம்புவதற்கில்லை!!!

பளீர் வெண்மையில் காலையில் அணிவித்த வெள்ளை ஷூக்கள் எல்லாம் மதிய நேரத்தில் நல்ல சந்தன அழுக்காய் மாறி கண்ணை உறுத்தாமல் சிரித்துக் குசலம் விசாரித்தன.

கை நகம்...கால் நகங்களில் இருந்த அச்சு ...பிச்சு அழுக்குகளில் எல்லாம் கவனம் களைய விடாதீர்கள் என்று குறும்பாய் எச்சரித்துக் கொண்டு எல்லா முகங்களிலும் மல்லிகைப் பூஞ்சிரிப்பு பரவி விரவி நம்மையும் நிரவித் தழுவியது.

சிரிப்பு கூட ஒரு தொற்று வியாதி தான்.காலையில் வாரத்தில் முதல் நாளே கொஞ்சம் டல் அடித்துக் இருந்த நிலையில் இன்றைக்கு கடைசி மிட் டெர்ம் டெஸ்ட் முடிந்து சனி ஞாயிறு விடுமுறைக்குப் பின் "ஓபன் டே" என பாப்புவின் பள்ளிக்குப் போய் வந்ததில் மூளை சுறுசுறுப்பாகி என் உலகம் என் வரையில் சந்தோசமாகி விட்டது.

அதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் நம் குழந்தையின் சந்தோசங்களைக் கூட நாம் அடையாளம் காண வேண்டுமென்றால் அதை நாம் அவர்கள் பயிலும் பள்ளியில் சென்று காண்பதே நலம் .

காண்பதே நலம் .

காண்பதே நலம் .(சும்மா ஒரு எக்கோ தான் !!!)