Saturday, February 27, 2010

சிவகாசி பஸ்சும் இரட்டை இலைப்பச்சை குத்திய மனிதரும்...

பாட்டிக்கு கணையப் புற்றுநோய்...அக்காவின் மாமியாரை சம்பிரதாயமாகப் பார்த்து விட்டுப் போக ஊரிலிருந்து சித்தி வந்திருந்தார்.

அந்த அக்கா என் அம்மா.

ஒரு கிலோ ஆப்பிளும்..ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலும் பாட்டி வீட்டு செல்பில் தற்காலிகமாய் குடியேறின. அரை மணி நலம் விசாரிப்பு ,அரைமணி தன் மன விசாரம்,அரைமணி ஊர்ப் புறணிகள்,அரைமணி மதியச் சாப்பாடு பிறகு புறப்பட்டு பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு பாட்டியையும் அத்தையையும் பற்றி அம்மாவிடம் வீட்டுப் புறணி...எல்லாம் முடிந்ததும் பஸ் வந்தது.

"தேனி வரை போய் சித்திய சிவகாசி பஸ் ஏத்தி விட்டுட்டு வா "

அம்மா சொல்ல சித்தியுடன் பஸ்ஸில் ஏறி நின்று கொண்டேன்.

அந்நேரம் வி.சி புரம் ஹையர் செகண்டரி ஸ்கூல் (வெங்கடாசலபுரம்) விடும் நேரம்,பஸ்ஸில் திணித்துக் கொண்டு தான் ஏற முடியும்.எங்கள் ஊரில் மிடில் ஸ்கூல் தான்.ஸ்ரீ ரங்கபுரத்தில் அன்றைக்கு ஹை ஸ்கூல் தான்,சுற்றுப் பட்டு ஊர்ப் பிள்ளைகள் எல்லோருமே வி.சி புரத்தை தான் நம்பி இருந்தனர் மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்கு.வசதி இருப்பவர்கள் தேனி நாடார் கேர்ள்ஸ் ஸ்கூலில் அல்லது பாய்ஸ் ஸ்கூலில் சேர்ந்து படித்தனர்.

இங்கேயே இவ்வளவு கூட்டம் இனி பஸ் ஸ்டாண்டில் சிவகாசி பஸ்ஸில் உட்கார இடம் கிடைக்கிறதோ இல்லையோ! சித்தியின் அடுத்த கவலை ஆரம்பித்தது.காலை 10 மணிக்கு ஒரு பஸ் மாலை 6 .50 க்கு ஒரு பஸ் என இரண்டே பஸ்கள் தான் சிவகாசிக்கு.ஒரு கால்மணி பிந்தி விட்டால் நின்று கொண்டே தான் போக வேண்டும்.பேரையூரிலோ ...கிருஷ்ணன் கோவிலிலோ ஆட்கள் இறங்கினால் தான் உண்டு.பெரும்பாலும் ஸ்ரீவில்லிபுத்தூர் வரை யாரும் இறங்குவதே இல்லை.அவ்வளவு தூரம் நின்று கொண்டே போவதெல்லாம் கொடுமை தான்.

தேனி டூ சிவகாசி பஸ் பயணம் எனக்கு எப்போதுமே பெரும் அலுப்பு தரும் விஷயம்.

தேனியில் பஸ் ஏறினால் உசிலம்பட்டி கணவாய் தாண்டும் வரை சிலு சிலுப்பாய் காற்று கண்ணைக் கிறக்கும்.உசிலம்பட்டி கொண்டை ஊசி வளைவு தாண்டும் போது அவ்விடத்து பசுமையில் மனசு ரெக்கை கட்டிப் பறக்காதது தான் குறை...கொஞ்ச நேரம் தான்...உசிலம்பட்டி தாண்டியதும் நிறைய கணக்கிலடங்கா குட்டி குட்டி கிராமங்கள் கிராம எல்லைகள் தோறும் அய்யனார்களும் குதிரைகளும் கலர் கலர் பெயிண்ட்களில் வெயில் மின்ன ஜொலிப்பார்கள் ;ஜாதிக்கலவரங்களுக்குப் பிரசித்தி பெற்ற பூமி இது.வாலகுருநாத சுவாமிகள் ஆலயம் என்றொரு கோயில் எப்போதும் அடைக்கப் பட்டே இருக்கும் ரோட்டோரமாய்.அங்கு இருப்பது என்ன சாமியாய் இருக்கும்!? கடக்கும் ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்வேன் நான்.

இந்த கிராமங்கள் கடந்ததும் கல்லுப்பட்டியும் பேரையூரும் வரும் கந்தக பூமியின் ஆரம்பம் ,பிஞ்சு பிஞ்சாய் வெள்ளரிக்காய் விற்பனை சக்கைப் போடு போடும்.ஒரு தட்டு வெள்ளரிக்காய் நம்பி வாங்கலாம்,நல்ல தாக நிவாரணி.சின்ன சின்ன மூங்கில் தட்டுகள் தட்டு ஒன்று விலை ஐந்தோ...பத்தோ ரூபாய்கள் ,காய் முற்றாமல் வாங்கத் தெரிந்திருந்தால் ருசியாகவும் இருக்கும்.

அதென்னவோ உசிலம்பட்டி தாண்டியதும் பசுமை மறைந்து கண்கள் வறண்டு போகும்.வெக்கை வீசிக் கொண்டு இந்த ஊர்களே சுடுவதைப் போலொரு பிரமை.பேரையூரில் பஸ் கால்மணி நிற்கும்.இறங்கி போண்டா சாப்பிடலாம் (இங்கே போண்டா சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் நளனால் வஞ்சிக்கப் பட்டவர்கள்!!! :))).கட்டணக் கழிப்பறைக்குப் போகலாம்(பேசாமல் வீட்டிலேயே முடித்துக் கொண்டு வராமல் போனோமே!என்று என்னவும் நேரலாம் சிலசமயம்),ஏதோவொன்றை செய்து முடித்தோமானால் பஸ் கிளம்பி விடும்.

அங்கிருந்து அடுத்து கிருஷ்ணன் கோவில் ,இங்கே கொய்யாப் பழங்கள் நன்றாய் இருக்குமாம்.ரெண்டு நிமிச பஸ் நிறுத்தலில் கொய்யா பழத்தட்டுகள் முளைத்திருக்கும் பஸ்சின் ஜன்னல்கள் தோறும்,யாராவது பழம் வாங்கி விட்டு காசு கொடுக்கும் முன்பே பஸ் நகர்ந்து விட்டால் அந்த வியாபாரிகள் என்ன செய்வார்களோ என்று சில சமயம் மனம் பரித்தவித்ததுண்டு.அத்தனை குறுகிய நிமிடங்களே பஸ் அங்கே நிற்கும்.இங்குள்ள கிருஷ்ணன் கோவிலில் ஆடி மாதம் நடக்கும் ஆண்டாள் பிரம்மோத்சவத் திருநாட்களில் ஒரு நாள் கிருஷ்ணன் ஆண்டாளின் மடியில் தலை வைத்து சயனம் கொள்வாராம்.கண்கொள்ளாக் காட்சியென சன் டி.வியில் சென்ற வார ஆலய தரிசன நிகழ்ச்சியில் அம்மு சொன்னார்.

அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் பஸ் நிற்கும் முன்னே ஜன்னல்கள் தோறும் இப்போது பால்கோவா பாக்கெட்டுகள் முளைக்கும்,ஒரிஜினலோ இல்லை சீனிக் கரைசல்களோ பார்க்க அசல் பால்கோவா போலவே இருக்கும்.10
௦ ரூபாயிலிருந்து விலை ஆரம்பம்,அந்த ஊர் வெயிலுக்கு அதை வாங்கித் தின்னாமல் போவதே நல்லது.பிரசித்தி பெற்ற ஆண்டாள் ஜனன பூமி இவ்வூர் .ஆண்டாள் துளசிச் செடியின் கீழ் அவதரித்த பெருமை மிக்க தலம்.கோயிலுக்காக மட்டுமே இவ்வூர் எனக்கு மிகப் பிடித்தம்.ஆண்டாளும் ரங்கமன்னாரும் மரகதப் பசுமையில் துளசி மாலை சூடிக் கொண்டு தரிசனம் தருகையில் தெய்வ நம்பிக்கை இல்லாதோரும் சந்துஷ்டி அடையலாம்.தம்பதி சமேதராய் அப்படி ஒரு அழகு கொஞ்சும் ,ஆண்டாள் கை கிளி போல!

அங்கிருந்து அடுத்து திருத்தங்கல்..இங்கேயும் ஒரு பழமையான பெருமாள் கோயில் உண்டு.பிறகு சிவகாசி பஸ் ஸ்டாண்ட் தான்.


சிவகாசியில் பஸ் விட்டு இறங்கும் போது கையில் கர்சீப் இருப்பது அவசியம்.வியர்வையின் உப்புக் கசகசப்பில் உள்ளங்கை கூட நனைந்திருக்கும்.

ஏப்ரல் மே மாத விடுமுறை நாட்களில் இப்படி ஒரு பயணம் வருடம் தோறும் வாய்க்கப் பெற்றவர்கள் நாங்கள்.

அடடா...எதையோ சொல்ல வந்து விட்டு தேனி பஸ் ஸ்டாண்டில் இருந்து சிவகாசி வரை உங்களை அழைத்து வந்து விட்டேன் பாருங்கள்! ச்சே ..நான் எப்போதுமே இப்படித் தானோ!நினைப்பது ஒன்று செய்வது மற்றொன்று! சரி வாருங்கள் மறுபடி தேனி பஸ் ஸ்டாண்டுக்கே போவோம்.முன்னைப் போல அல்ல மனசின் ரீவைன்டு பட்டனை அழுத்துங்கள் போதும் தேனி பஸ் ஸ்டாண்ட் வந்து விடும்.

வந்தாச்சா...!?

ம்...சித்தியும் நானும் கோவிந்தநகரத்திலிருந்து (தேனிப்பக்கம் ஒரு சிறு கிராமம்) தேனி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விட்டோம்.

பஸ்ஸில் உட்கார இடமிருக்குமோ இல்லையோ பதட்டமாய் சிவகாசி அரசு பஸ் தேடி ஓடினோம்,அடப்பாவமே...
ஒரு சீட்டும் காலியாய் இல்லை.

டிரைவர் பக்கமிருக்கும் ஒற்றை சீட் கண்டக்டருக்கு உரியது,ஆனாலும் இடமில்லாத பயணிகளை உட்கார வைத்து விட்டு பெரும்பாலும் எஞ்சின் மேலே உட்கார்ந்து கொள்வார்கள் சிவகாசி பஸ் கண்டக்டர்கள்.அந்த ஷீட்டில் ஒரு கடா மீசைக் காரர் உட்கார்ந்திருந்தார். பார்த்த முகமாய்த் தெரிந்தது, சட்டென்று ஞாபகம் வரவில்லை எனக்கு.

"நாராயணா...நின்னுக்கிட்டே தான் போகனுமா இன்னைக்கு"என்ன வேண்டுதலையோ ! சித்தி புலம்பிக் கொண்டே பஸ்ஸில் ஏறி கம்பிகளைப் பிடித்துக் கொண்டு சோகமாய் நிற்க.அந்த கடா மீசை ஷீட்டில் துண்டைப் போட்டு வைத்து விட்டு எழுந்து எங்களருகில் வந்தார்.

"என்ன இங்க நிக்கிறிங்க? எடம் போட்டு வச்சிருக்கேன்ல போய் உட்கார்ந்துக்கோங்க.ஊர்ல இருந்து நானும் உங்க கூடத் தான் பஸ்ல வந்தேன்.சிவகாசிக்குத் தான போவிங்க பஸ்ல எடமிருக்குமோ என்னவோன்னு பறந்துகிட்டு ஓடி வந்து எடம் போட்டு வச்சா எனக்கென்னான்னு கம்பியப் பிடிச்சிக்கிட்டு நின்னா எப்பிடி!? "குரலதிரச் சிரித்துக் கொண்டு அந்த மனிதர் கேட்க.

நானும் சித்தியும் "ங்கே" :)))

யாரிவர்?

இடது கையில் பெரிதாய் இரட்டை இலைப் பச்சை குத்தி இருந்தார்.

பச்சையைப் பார்த்த மாத்திரத்தில் சித்தியும் நாணிக்கொண்டு அவரைப் பார்த்து சிரித்து வைத்தார்.

"சரி...போய் உட்கார்ந்துக்கோங்க பஸ் எடுத்துருவான் இப்ப! " அந்த மனிதர் சிரித்துக் கொண்டே கை ஆட்டி விட்டு பஸ்ஸில் இருந்து இறங்கி நகர்ந்து போனார்.

அவர் போன பின்னும் கூட சித்தியின் முகத்தில் உறைந்த சிரிப்பில் கண்ணோரமாய் வெட்கம் கூத்தாடியது .

"யாரு சித்தி இது?!"

"ம்...இவரா ...எல்லாம் உங்க சொந்தக்காரரு தான் "

"எங்க சொந்தக்காரரா? யாரு?! பார்த்த மூஞ்சியா இருக்கு ,யார்னு தான் தெரியல"

உங்கப்பாக்கு சொந்தம் ...நீ ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறதுனால தெரிஞ்சிருக்காது! உங்கப்பாக்கு அண்ணன் முறை ,இவருக்கு தான் மொதல்ல என்ன பொண்ணு கேட்டாக,ரொம்ப வயசு வித்யாசம்னு பாட்டியும் தாத்தாவும் இவருக்கு என்னை கொடுக்கலை."

ஏன் சித்தி ஒனக்கு கல்யாணமாகி இருபது வருசமிருக்குமே! இப்பக் கூட இவர எப்பிடி அடையாளம் தெரியுது ஒனக்கு!

"கைல இருக்கற ரெட்டலைப் பச்சை வச்சு தான்.அப்பவே சொல்லிக்கிட்டாங்க இல்ல மாப்ள கைல ரெட்டலை பச்சை குத்திருப்பார்னு,இவருக்கு என்னை கல்யாணம் பண்ணித் தரலன்னாலும் இந்த ரெட்டலைப் பச்சை அப்படியே மனசுல பதிஞ்சு போச்சு ..நல்ல மனுஷன் பொண்ணு தரலன்னாலும் என்னை மறக்காம பஸ்ல சீட்லாம் போட்டு வச்சிருக்கார் பார்"

எனக்கென்னவோ சிரிப்பு சிரிப்பாய் அள்ளிக் கொண்டு போனது சித்தியின் நடுத்தர வயது வெட்கப்புன்னகை கண்டு.

பாவம் சித்தி...ம்ம்...அந்த மனிதரும் பாவம் தான்...!!!