Wednesday, July 20, 2011

யூமா வாசுகியின் ரத்தஉறவும் இல்லத்தரசிகளின் கிச்சன் கேபினெட்டும் .

கிச்சன் கேபினெட் :


யூமா வாசுகியோட ரத்த உறவு புஸ்தகம் தான் விடிஞ்சு எழுந்ததும் கண்ல பட்டுச்சு ,அது ஒரு குறியீடுன்னு எலக்கிய மூளை கூக்குரலிட அதை தட்டி அடக்க முடியாம கொஞ்ச நேரம் மூளை ஸ்தம்பிக்க , so அங்க இருந்து இன்றைய சுளுக்கு வியாதிக்கு மருத்துவம் ஆரம்பிக்கலாம்ன்னு லேப் டாப்பை திறந்தேன் .நான் லேப் டாப்ல எழுத உட்காரும் போதெல்லாம் பழைய ஹாக்கின்ஸ் குக்கர் விளம்பர கணவர் மாதிரி ;

"என் மனைவி கார் ஓட்டினால் எனக்கு பயமில்லை .

என் மனைவி பார்க்கில் வாக்கிங் போனால் எனக்குப் பயமில்லை .

என் மனைவி சமைக்கத் தொடங்கினால் மட்டுமே எனக்குப் பயம் ரேஞ்சுல

என் மனைவி எழுதத் தொடங்கினால் மட்டுமே எனக்குப் பயம்ன்னு "

தேவ் கொஞ்சம் பீதியானார் தான் ;அதையெல்லாம் பார்த்தா எலக்கிய சேவை ஆற்ற முடியுமா ?

எலக்கிய சேவை என்ற இந்த வரிகளை எழுதும் போது இந்த நிமிடம் எனக்கு விதூஷ் ஞாபகம் வந்தது என்பதை கட்டாயம் இங்கே பதிவு செய்கிறேன்.

சரி இனி கிச்சனுக்குள்ள போகலாமா !

Ready

Start ...

1

2

3...

கிச்சனுக்குள்ள போக கஷ்ட்டமா இருந்தா ஹால் சோபால உட்கார்ந்து கொஞ்ச நேரம் என்ன சமைக்கலாம்னு யோசிச்சிக்கலாம் ,ஆனா அதுக்குள்ள இருட்டிடக் கூடாது ஜாக்ரதை .

//meantime வசந்த பவன்,சரவணபவன்,அஞ்சப்பர்,வேலு மிலிட்டரி பொன்னுச்சாமி ஹோட்டல் இருக்க பயமேன்னு மூளைக்குள்ள பல்ப் எரியும் ப்ளீஸ் ஆப் பண்ணிடாதிங்க //

நல்லா எரிய விட்டு பெண்ணியக் கருத்துகளை வளர்த்தெடுக்க ஒரு வாய்ப்பா இந்த நேரத்தை பயன்படுத்திக்கணும் .
//டைம் மேனேஜ்மென்ட்//

கிச்சனுக்குள்ள போகாமலே கிச்சனைப் பற்றிய யோசனைகளின் விஸ்தீரணம் ஒரு நூறு கஜம் இருக்கலாம் ,அப்ப தான் ஒரு ரெண்டு பக்கமாச்சும் "கிச்சன் கேபினெட்"கட்டுரை தேறும் . ரொம்ப முக்யமான பாயின்ட் இது நோட் பண்ணிக்கோங்க .

இனி கட்டுரைக்கு ;

அதாகப் பட்டது ;

இந்தப் பெண்களுக்கு விடிஞ்சு எழுந்தா இருக்கற மகாப்பெரிய தலைவலி மண்டையிடி இன்னைக்கு என்ன சமைக்கலாம்னு தான் ஆரம்பமாகும் ,அதாகப் பட்டது வெறுமே பழைய சோறு தான்னாலும் கூட அப்டியே திங்க முடியாது பாருங்க பிரிஜ் ன்னு ஒன்னை வாங்கி வச்சுட்டு யூஸ் பண்ணாம இருக்க முடியுமா அதுல ராத்திரியே மிச்சம் மீதி எல்லாம் வச்சு அடைச்சுட்டு கார்த்தால எடுக்கறதால ஒரே ஜில்லிப்பு ,அதை சூடு பண்ணனும் ,சூடு பண்ண ஸ்டவ் பத்த வெச்சப்புறம் அதை உடனே அணைக்க மனசு வராம ஏதோ ஒரு அப்பளமோ கத்தரிக்கா வெண்டைக்கா வத்தலோ இல்ல கருவாடோ எதையோ பொரிக்கத் தான் வேணும்,

இதே சன்டே ,சாட்டர்டே ன்னா விசேசமா அசைவம் ஏதானும் சமைச்சே ஆக வேண்டிய கட்டாய மனச்சிக்கல் வேற .சமைக்கலன்னா அது குடும்பத் தலைவிகளுக்கு எவ்ளோ பெரிய மன உளைச்சலைத் தருதுன்னு சில பல இல்லத்தரசிகளிடம் விசாரித்து கள ஆய்வில் கண்டறிந்தோம் ,

அவர்களது ஒப்புதல் வாக்குமூலம் அவர்கள் மொழியில் கீழே வாசியுங்கள் ;

//சன்டே மட்டன் சிக்கன்,ரத்தப் பொரியல் ,மூளைப் பொரியல், ரொம்ப விசேசமான நாட்கள்ன்னா குடல் குழம்பு ,தலைக்கறி, எலும்பு சூப்,நெஞ்செலும்பு ஈரல் குழம்பு இப்டி எதுனா செய்யலையான்னு எஸ்.டி.டி எம்மாத்திரம் இப்பலாம் வாரா வாரம் ஐ.எஸ்.டி கால் போட்டெல்லாம் விசாரணை பண்ணி கொல்றாங்க சொந்தக்காரங்க,விடாம செல் போன் வேற அடிச்சிட்டே இருக்கும் ,எடுக்கவே மாட்டோமே நாங்க ,எங்களுக்குத் தெரியும் எல்லாம் மெனு விசாரனையாத் தான் இருக்கும்னு ,நாங்க சமைச்சு முடிச்சதும் ,நாங்களும் எல்லாரையும் விசாரிக்க ஆரம்பிச்சிடுவோம்,எங்களால வார இறுதியில் மட்டும் பல செல்போன் கம்பெனிகளின் லாபம் விண்ணைத் தாண்டிப் போயிட்டு இருக்கு தெரியுமா ?! , //


"பெண்கள் பத்திரிக்கை உலகத்துல இந்த ஆய்வை இதுவரை யாருமே செய்யலை ,நீங்க ஏன் அப்டி ஒரு ஆர்டிகிள் கூட பண்ண முயற்சிக்க கூடாது ?! "


//எவ்வளவோ பண்ணிட்டோம் இதப் பண்ண மாட்டோமா! சரிங்க பண்ணிடலாங்க //


. //இந்த இடத்துல நம்ம குடுகுடுப்பையார் ஞாபகம் வரதை தவிர்க்கவே முடியலை,அன்னாருக்கு எல்லா நாட்களும் விசேச தினங்கள் தான்..பாவப்பட்ட ஆடு கோழிகள் பேசும் சக்தியைப் பெற்று அவரை மிருகங்களுக்கான தனி கோர்ட்டில் கூண்டில் ஏற்றி கேள்வி கேட்கா விட்டால் தினம் தினம் அவரது மெனு buzz களால் பீதிக்கு உள்ளாகும் buzz உலகம் இனியும் ஜீவித்து இருக்காது //


//Back to the Field work Report //

கேள்வி :நான்வெஜ் ல என்ன வெரைட்டி சமைப்பிங்க வீக் எண்ட்ல ?

பதில் : 1 .வெஜிடேரியன் குடும்பத் தலைவி : சரவண பவன்ல தாங்க கேட்கணும்
2 . நான்வெஜிடேரியன் குடும்பத் தலைவி : அஞ்சப்பர்ல தாங்க கேட்கணும் .

கேள்வி : வீட்ல சமைக்காம எப்டி கிச்சன் கேபினெட் நடத்தறிங்க ? உங்க பேமிலி மெம்பெர்ஸ் ஐ மீன் உங்க கணவர்கள் கேள்வி கேட்க மாட்டாங்களா ?

பதில் : அவங்களுக்கு தெரிஞ்சா தான! ;

கேள்வி :அவங்களுக்கு தெரியாம ஹோட்டல்ல வாங்கி வச்சு serveபண்ணுவீங்களா?

பதில் :

ச்சே ச்சே இல்லைங்க ...குடும்ப விவகாரங்களை பேசிட்டே சாப்டா எங்க சாப்டறோம்னே மறந்துடும், நல்லா டைம் பார்த்து தூங்கி எழுந்த உடனே காலைலேயே வழக்கு விவகாரங்களை ஆரம்பிச்சிடணும் அப்டியே எங்க போறோம் , என்ன சாப்பிடறோம்ன்னு எல்லாம் அவங்க யோசிக்க முன்னால கூட்டிட்டு போய் சாப்டுட்டு பில் பே பண்ண வச்சு மறுபடியும் வீட்டுக்கு வந்துடுவோம் .

//மந்திரிச்சு விட்ட கோழி கதை ஞாபகம் வந்தா நான் பொறுப்பில்லை//

கேள்வி : இப்படித் தான் வெகு காலமா கிச்சன் கேபினெட் நடத்தப் படுதா?

பதில் :

அதைப் பத்தி எல்லாம் சங்க இலக்கியத்துல குறிப்புகள் இருக்கலாம்,இல்லனா யுவான் சுவாங்,பாஹியான் பயணக் குறிப்புகள்ல ஏதாவது சொல்லப் பட்டிருக்கலாம் ,சரியா தெரியலைங்க ஆனா எங்களுக்கு பாட்டிகளும் அம்மாக்களும் கொஞ்சம் கொஞ்சம் சொல்லி தந்தாங்க ,மீதி எல்லாம் அனுபவப்பாடம் தாங்க . கிச்சன் கேபினெட் ஒரு சாகரம் ,அதுல இன்னும் யாரும் முத்து எடுத்தாங்கலான்னு கூகுள்ள தேடிப் பார்க்கணும் .இது சம்மந்தமா உங்களுக்கு நிறைய விடைகள் கிடைக்கலாம் .

கேள்வி : சரிங்க கிச்சன் கேபினெட்ன்னா என்னங்க?

பதில் : சின்னப் புள்ளத்தனமால்லாம் கேள்வி கேட்க கூடாது ,

இப்படித் தாங்க எதை எழுத ஆரம்பிச்சாலும் அது இப்டி வெண்டைக்காய் மாதிரி முடியுது . // நோ கமெண்ட்ஸ்//

ஒரு துறை பற்றி எழுதும் முன்பு அந்தத் துறை பற்றிய ஞானம் கொஞ்சமேனும் அறிந்து கொண்டு பிறகு இந்தக் கட்டுரையை தொடர்வதே உசிதம் என்றெண்ணியதால் ஆறுதலுக்கு ஒரே ஒரு சமையல் குறிப்போடு இந்தக் கட்டுரை முடிகிறது.

ரத்தப் பொரியல் :


தேவையான பொருட்கள் :

ரத்தம் - ஒரு ஆட்டு ரத்தம் என்று கறிக் கடைகளில் கேட்டால் கட்டியாக உறைந்த ரத்தத்தை எடுத்துத் தருவார்கள் வாங்கிக்கொள்ளவும்.
கடலைப் பருப்பு - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 6
எண்ணெய் - 3 டீ ஸ்பூன்
தேங்காய் - 1/4 மூடி துருவியது
உப்பு - தேவையான அளவு

தாளிக்க :
எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
கடுகு உளுந்தம்பருப்பு - 1 டீ ஸ்பூன்
கருவேப்பிலை - 1 ஆர்க்

செய்முறை :

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதித்ததும் ரத்தக் கட்டிகளைப் போட்டு ௧௦ நிமிடம் வேக வைக்கவும் ,நன்றாக வெந்திருக்கிறதா என இடையிடையே கூர்மையான ஃபோர்க்கால் வெந்து கொண்டிருக்கும் ரத்தக் கட்டிகளை குத்தி சரி பார்த்துக் கொள்ள வேண்டும்,இல்லையேல் மேற்புறமாக நன்றாக வந்திருப்பதாக கண்ணுக்குத் தெரிந்தாலும் உள்ளே சரியாக வேகாமல் பச்சையாக இருக்கலாம். நன்றாக வெந்த ரத்தக் கட்டிகளை நீரை வடிகட்டி விட்டு ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும் ,ஆறிய பின் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் ,நறுக்கிய ரத்தக் கட்டிகளை நீர் விட்டு அலசிப் பிழிந்து நீர்ப் பற்று இல்லாமல் சுத்தமாக வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
கேரட்,முள்ளங்கி,வாழைத்தண்டு பொரியல் செய்வதற்கு வேக வைப்பதைப் போல கடலைப் பருப்பை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் .
வாணலியை அடுப்பில் ஏற்றி 3 டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு ,உளுந்தம் பருப்பு ,கருவேப்பிலை,காய்ந்த மிளகாய் தாளித்து அதனோடு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதங்கியதும் முன்பே வேக வைத்து எடுத்த கடலைப் பருப்பை போட்டு பிரட்டிக் கொள்ளவும் இதனோடு பொடிப் பொடியாக நறுக்கிய ரத்தத்தை போட்டு நன்றாகக் கலந்து தேவையான அளவு தூள் உப்பு சேர்த்து சில நிமிடங்கள் எண்ணெயில் வதங்க விட்டு அடுப்பை அணைத்து விட்டு ஒரு கீற்று தேங்காய் துருவல் சேர்த்து நன்றாகக் கலந்து பிறகு இறக்கிப் பரிமாறலாம்.

வேக வைத்த ரத்தம் சாப்பிட மண் போல ருசி இல்லாமல் இருக்கும் ,சுவைக்காக தான் கடலைப் பருப்பு ,தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்வார்கள் .

ரத்தப் பொரியல் சாப்பிடுவதன் பயன் :

வளரும் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை ரத்தப் பொரியல் செய்து தரலாம்,ஸ்நாக்ஸ் போல விரும்பி சாப்பிடுவார்கள்,அசைவம் சாப்பிட விரும்பாத குழந்தைகள் உடல் வலுவற்று இருந்தால் இப்படி ரத்தப் பொரியலில் இருந்து ஆரம்பிக்கலாம் . ரத்தத்தில் ஆக்சிஜன் ,ஹீமோகுளோபின்,ப்ளேட் லெட்டுகள் இருப்பதால் ரத்த சோகை வராமல் தடுக்கும் . நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் .

//வேக வச்ச ரத்தத்துல ஹீமோ குளோபின் செத்துப் போயிடும்லன்னு புத்திசாலித் தனமால்லாம் கேள்வி கேட்கக் கூடாது ,ரத்தப் பொரியல் மூளை வளர்ச்சிக்கு இல்லை..இல்லை...இல்லை இந்த கட்டுரை போலவே . //
இன்றைய கோட்டா ப்லாக் , buzz சேவை முடிஞ்சது .

நன்றி .வணக்கம்

இனி நாளை தொடரும்