Sunday, February 28, 2010

பா.ராஜாராமின் கருவேல நிழல் ...


என் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் கவிதை எழுதத் தெரியாது ,தெரிந்திருந்தால் ஒரு வேலை ராஜாராமின் கவிதைகளை ஒத்த கவிதைகளை அவர்களும் எழுதி முடித்திருப்பார்கள்,அத்தனை வாஞ்சையானவை இவரது கவிதைகள்.நேசமித்திரனின் அழகான முன்னுரை இக்கவிதை தொகுப்பிற்கு உன்னத அங்கீகாரம்.

"ஏதாவது ஒன்றை இழந்தே
மற்றொன்றைப் பெற முடியும் '
என்று கற்றுணர்த்திய அப்பாவிற்கு "

இவைகளை சமர்பித்ததின் மூலம் இன்னும் சிநேகம் மிகுந்த உணர்வுகள் மேலோங்குகின்றன. காரணம் கவிதைகள் பலவற்றில் பேசப்பட்ட பொருட்கள் ஒரு தந்தையின் தார்மீக வலிகள்.

விடுமுறைகளில் சொந்த பூமிக்கு வந்து மீண்டும் அந்நிய பூமிக்கான பயணத்திற்கு நிர்பந்திக்கப் பட்ட ஒரு மனிதன் தன் வீட்டு முற்றத்து தாழ்வாரத்தில் மத்தியான சாப்பாட்டின் பின் வேப்ப மரக் காற்றுக்கு கண்ணசருகையில் உறக்கமும் இன்றி விழிப்பும் இன்றி ஒரு மயக்க நிலையில் வாழ்வின் சம்பவங்களை மீட்டிப் பார்க்கையில் சந்தோசமும் அற்ற வெறுப்பும் அற்ற ஒரு நிராதரவான பரபரப்பில் மனம் ஊசலாடும்.அந்த மனநிலையை இவரது கவிதைகள் ஒவ்வொன்றிலும் உணர முடிகிறது.

வேரோடு பிடுங்கி நடப்பட்டதான உணர்வு தான்.ஆனாலும் வேர்தூவிகளோடு ஒட்டிக் கொள்ளும் ஈர மண்ணைப் போல சொந்த ஊரின் ஞாபகங்கள் எங்கு போனாலும் அலைகளாய் தாலாட்டி மனதின் அடி ஆழத்து மண்ணை ஈரமாகவே நீடிக்க வைக்கின்றன.

தொகுப்பில் முதல் வாசிப்பிலேயே எனக்குப் பிடித்த சில கவிதைகளை இங்கு பகிர்கிறேன்.

சொல்லிட்டேன் ஆமா ...

"ஓட நடக்க
பேசிச் சிரிக்க
குழந்தைகளை
குளிப்பாட்ட
சோறூட்ட
உனக்குப் போலவே
எனக்கும் வாய்த்தது அப்பா
................................................
கீரை
வாங்கியாந்து
கிணற்றடியில் வைத்து
சிரித்துக் கொண்டே
செத்துப் போக...
உனக்கு போலவே
எனக்கும் வாய்க்கனும் அப்பா."


அப்பாவைப்பற்றியதான மகனின் நெகிழ்வு ,ஆளரவமற்ற ஊர் எல்லை மாமரத்தினடியில் வெயிலுக்கு
ஒதுங்கினால் விட்டு விட்டுக் கேட்கும் கிளிகளின் கீச்சொலிகள் போல நீங்காத நினைவுகளை எழுப்பும் கவிதை.

"ஆற்றங்கரையில் எடுத்த கல்
மினு மினுப்பற்ற வழுவழுப்பு
வீடு வரையில் சேர்க்க இயலாத
ஞாபகக் குறைவு
அங்கேயே கூட கிடந்திருக்கலாம்
ஆளோட பேரோட இருந்திருக்கும்..."

வேலைக்கென்று அயல்நாடுகளில் தஞ்சமடைந்து எனது மண்,எனது மக்கள் எனும் சுய அடையாளங்களை இழக்க நேரும் மனதின் வலி மிகுந்த தேம்பலாக இந்த வரிகளை எடுத்துக் கொள்ளலாமா?

விதித்தது எனும் தலைப்பில் :-

"எல்லா கொலுசொலிகளுக்கும்
உசும்பி விழிக்க
பாத்தியதைப் பட்ட
செவி ஒன்று
இருக்கு தானே."

ஞாபகப்பொதி எனும் தலைப்பில் :-

"குருவிக் கூடுகளையும்
கீச்சொலிகளையும்
மரம் இழைக்கிற போதெல்லாம்
உணர்கிறான்
மனசுள்ள தச்சன் ."

இந்த இரண்டு கவிதை வரிகளும் வாசிக்கையில் உள்ளுக்குள் பலத்த அர்த்தங்களை விரித்துக் கொண்டே செல்கின்றன ,ஒவ்வொருவருக்கும் ஒவொரு விதமாய் தோன்றலாம் அது வாசிப்பவரின் மனநிலை சார்ந்தது,எனக்கு மிகப் பிடித்த வரிகள் இவை.

இலையுதிர் காலம் எனும் தலைப்பில் :-

முதுகிற்குப் பின்புறம் மறைகிற
குழந்தைகளை முன்னிழுத்து
"சித்தப்பாடா " என்று
கண்ணீருடன் சிரிக்கிறார்கள் காதலிகள்

அவ்வளவையும் காரணமாக்கி
சாராயத்தில் குளிக்கிறோம்
சவுதியிலிருந்து திரும்பும் நாங்கள்."

பாவப்பட்ட காதலிகளும் அன்னியப்பட்ட காதலர்களும் இக்கவிதைக்கு நேர்மை செய்கிறார்கள்,வேறென்ன சொல்ல!"ஆட்டோகிராப் "படத்தின் மல்லிகாவை ஞாபகப்படுத்தும் காதலிகள் நிறைந்தது இவ்வுலகம்.

வலி எனும் தலைப்பில் ஒரு கவிதை :-

அம்மாவை நேற்று
வீதியில் பார்த்தேன்...
கருத்து சிறுத்து விட்டாள்
ஏன் இப்படிப் போனாள்
என்று கேட்க விருப்பம் எனக்கு

ஏன் இப்படிப் போனாள்
என்று தெரியும் எனக்கு
எனக்குத் தெரியும் என்று
அம்மாவிற்குத் தெரியும்
பிறகெதற்கு தூசிப் புயல்
.............................................

பேசாமல்
பெண் குழந்தையாய்
பிறந்திருக்கலாம் நானும்

அவளின் சொல்லை விட
அவரின் சொல்
கௌரவமாய் இருந்திருக்கும்
அம்மாவிற்கும் எனக்கும்.

மாமியார் மருமகள் போராட்டத்தில் சிக்கிச் சின்னாபின்னப் பட்டுப் போன ஒரு மகனின் காயமிக்க ஊமை நினைவுகள்.என்ன நினைத்து என்ன? மனைவிகள் அம்மாக்களை விடவும் முக்கியப் பட்டவர்களாய் போய் விடுவது வாழ்வின் கண்ணாமூச்சு ஆட்டம்.இன்றைய மனைவிகள் நாளைய அம்மாக்கள்!

"தனலச்சுமி சின்னம்மை "

நான் தான்
"அப்பா உங்களை ரொம்ப
கேட்டுக் கொண்டே இருந்தார் சித்தி" என்றேன்
"ஆகட்டும்" என்றாள்
மென் சிரிப்பின் ஊடே
சரி தானே...
தனலச்சுமி சின்னம்மைக்கு மேலா
அப்பாவை எனக்கு தெரிந்து விடப் போகிறது?


புன்னகையோடு கடந்து விட்டாலும்,புன்னகைக்கும் போதெலாம் உதடுகளில் உறைந்து விடும் மென் சிரிப்பாய் உள்ளார்ந்த உறவுகளைப் பேசும் மென்மையான கவிதை.

காரணப்பெயர் :-

அப்பாவிடம் ஒரு நிலம் இருந்தது
"பெரியனஞ்சை "என்று பெயர்
பெரியனஞ்சைக்குப் பிறகே
அம்மாவை பிடிக்கும் அப்பாவிற்கு
.........................................................
கொண்டு செல்லும் காஞ்சி ஊறுகாயின்
மண்டி நீரையும் வயலில் உமிழ்வார்
ப்ரியம் பொங்க
.............................................................
காலத்தின் தேய்மானத்தில்
பெரியனஞ்சையை தோற்றார்
அப்பா ஒரு நாள்

பிறகு அப்பா சாராயம் குடித்தார்
வெங்காய கடை வைத்தார்
திரையரங்கில் வேலை பார்த்தார்
யார் அழைத்தாலும் போய் உழைத்தார்
அவ்வளவு இடிபாடுகளுக்கிடையேயும்
இயங்கிக் கொண்டே இருக்க
ஐந்து காரணங்கள்
இருந்தது அப்பாவுக்கு

எங்கள் ஊரில் நிலங்களுக்குப் பெயர்
இருந்தது போல்
காரணங்களுக்கும்
பெயர் இருந்தது

அது...
சுமதி
புனிதா
ராஜா
தேவி
இந்திரா .

எல்லாக் கவிதைகளிலும் ஊடாக ஒரு பச்சை நெருஞ்சி முள்ளை வைத்து எழுதி இருக்கிறார் பா.ரா.

அந்த முள் தைக்க வேண்டிய இதயங்களில் தாராளமாய் தைக்கிறது.

இந்தக் கவிதைகள் இயற்கையைப் பற்றிப் பேசவில்லை ,அரசியல் கிடையாது,காதல் இருக்கிறது ஆனால் இவை காதல் கவிதைகள் அல்ல,சோகம் இழையோடுகிறது சோகக் கவிதைகள் அல்ல ,கஷ்ட நஷ்டங்களைக் கலந்து கண்ட அனுபவமிக்க பக்குவப் பட்ட ஒரு குடும்பத் தலைவனின் தகப்பனின்,மகனின்,ஒரு கணவனின்,காதலனின்...தூரத்து துயரங்கள் படர்ந்த நிராதரவான உள் மனச்சமாதானங்களே இங்கே கவிதைகள் ஆக்கப் பட்டிருப்பதால் கவிதைகளை உணர்ந்து வாசிக்க இயல்கிறது.

1988 முதல் கவிதைகள் எழுதி வருகிறாராம்,கணையாழி,சுபமங்களா,தினமணி,ஆனந்த விகடன் ,கல்கி எனப் பிரபல பத்திரிகைகள் பலவற்றிலும் இவரது கவிதைகள் வெளிவந்திருக்கின்றனவாம்.
இங்கே வலைக்குப் பின் அகநாழிகை தொகுப்பில் தான் முதல் முறையாக இவரது கவிதைகளை வாசிக்க நேர்ந்தது.மிக நல்ல கவிதைகள்.

ஆசிரியர் :பா.ராஜாராம்
நூல் : கருவேலநிழல்
வெளியீடு :அகநாழிகை
விலை : ரூ ௪0

Saturday, February 27, 2010

சிவகாசி பஸ்சும் இரட்டை இலைப்பச்சை குத்திய மனிதரும்...

பாட்டிக்கு கணையப் புற்றுநோய்...அக்காவின் மாமியாரை சம்பிரதாயமாகப் பார்த்து விட்டுப் போக ஊரிலிருந்து சித்தி வந்திருந்தார்.

அந்த அக்கா என் அம்மா.

ஒரு கிலோ ஆப்பிளும்..ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலும் பாட்டி வீட்டு செல்பில் தற்காலிகமாய் குடியேறின. அரை மணி நலம் விசாரிப்பு ,அரைமணி தன் மன விசாரம்,அரைமணி ஊர்ப் புறணிகள்,அரைமணி மதியச் சாப்பாடு பிறகு புறப்பட்டு பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு பாட்டியையும் அத்தையையும் பற்றி அம்மாவிடம் வீட்டுப் புறணி...எல்லாம் முடிந்ததும் பஸ் வந்தது.

"தேனி வரை போய் சித்திய சிவகாசி பஸ் ஏத்தி விட்டுட்டு வா "

அம்மா சொல்ல சித்தியுடன் பஸ்ஸில் ஏறி நின்று கொண்டேன்.

அந்நேரம் வி.சி புரம் ஹையர் செகண்டரி ஸ்கூல் (வெங்கடாசலபுரம்) விடும் நேரம்,பஸ்ஸில் திணித்துக் கொண்டு தான் ஏற முடியும்.எங்கள் ஊரில் மிடில் ஸ்கூல் தான்.ஸ்ரீ ரங்கபுரத்தில் அன்றைக்கு ஹை ஸ்கூல் தான்,சுற்றுப் பட்டு ஊர்ப் பிள்ளைகள் எல்லோருமே வி.சி புரத்தை தான் நம்பி இருந்தனர் மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்கு.வசதி இருப்பவர்கள் தேனி நாடார் கேர்ள்ஸ் ஸ்கூலில் அல்லது பாய்ஸ் ஸ்கூலில் சேர்ந்து படித்தனர்.

இங்கேயே இவ்வளவு கூட்டம் இனி பஸ் ஸ்டாண்டில் சிவகாசி பஸ்ஸில் உட்கார இடம் கிடைக்கிறதோ இல்லையோ! சித்தியின் அடுத்த கவலை ஆரம்பித்தது.காலை 10 மணிக்கு ஒரு பஸ் மாலை 6 .50 க்கு ஒரு பஸ் என இரண்டே பஸ்கள் தான் சிவகாசிக்கு.ஒரு கால்மணி பிந்தி விட்டால் நின்று கொண்டே தான் போக வேண்டும்.பேரையூரிலோ ...கிருஷ்ணன் கோவிலிலோ ஆட்கள் இறங்கினால் தான் உண்டு.பெரும்பாலும் ஸ்ரீவில்லிபுத்தூர் வரை யாரும் இறங்குவதே இல்லை.அவ்வளவு தூரம் நின்று கொண்டே போவதெல்லாம் கொடுமை தான்.

தேனி டூ சிவகாசி பஸ் பயணம் எனக்கு எப்போதுமே பெரும் அலுப்பு தரும் விஷயம்.

தேனியில் பஸ் ஏறினால் உசிலம்பட்டி கணவாய் தாண்டும் வரை சிலு சிலுப்பாய் காற்று கண்ணைக் கிறக்கும்.உசிலம்பட்டி கொண்டை ஊசி வளைவு தாண்டும் போது அவ்விடத்து பசுமையில் மனசு ரெக்கை கட்டிப் பறக்காதது தான் குறை...கொஞ்ச நேரம் தான்...உசிலம்பட்டி தாண்டியதும் நிறைய கணக்கிலடங்கா குட்டி குட்டி கிராமங்கள் கிராம எல்லைகள் தோறும் அய்யனார்களும் குதிரைகளும் கலர் கலர் பெயிண்ட்களில் வெயில் மின்ன ஜொலிப்பார்கள் ;ஜாதிக்கலவரங்களுக்குப் பிரசித்தி பெற்ற பூமி இது.வாலகுருநாத சுவாமிகள் ஆலயம் என்றொரு கோயில் எப்போதும் அடைக்கப் பட்டே இருக்கும் ரோட்டோரமாய்.அங்கு இருப்பது என்ன சாமியாய் இருக்கும்!? கடக்கும் ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்வேன் நான்.

இந்த கிராமங்கள் கடந்ததும் கல்லுப்பட்டியும் பேரையூரும் வரும் கந்தக பூமியின் ஆரம்பம் ,பிஞ்சு பிஞ்சாய் வெள்ளரிக்காய் விற்பனை சக்கைப் போடு போடும்.ஒரு தட்டு வெள்ளரிக்காய் நம்பி வாங்கலாம்,நல்ல தாக நிவாரணி.சின்ன சின்ன மூங்கில் தட்டுகள் தட்டு ஒன்று விலை ஐந்தோ...பத்தோ ரூபாய்கள் ,காய் முற்றாமல் வாங்கத் தெரிந்திருந்தால் ருசியாகவும் இருக்கும்.

அதென்னவோ உசிலம்பட்டி தாண்டியதும் பசுமை மறைந்து கண்கள் வறண்டு போகும்.வெக்கை வீசிக் கொண்டு இந்த ஊர்களே சுடுவதைப் போலொரு பிரமை.பேரையூரில் பஸ் கால்மணி நிற்கும்.இறங்கி போண்டா சாப்பிடலாம் (இங்கே போண்டா சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் நளனால் வஞ்சிக்கப் பட்டவர்கள்!!! :))).கட்டணக் கழிப்பறைக்குப் போகலாம்(பேசாமல் வீட்டிலேயே முடித்துக் கொண்டு வராமல் போனோமே!என்று என்னவும் நேரலாம் சிலசமயம்),ஏதோவொன்றை செய்து முடித்தோமானால் பஸ் கிளம்பி விடும்.

அங்கிருந்து அடுத்து கிருஷ்ணன் கோவில் ,இங்கே கொய்யாப் பழங்கள் நன்றாய் இருக்குமாம்.ரெண்டு நிமிச பஸ் நிறுத்தலில் கொய்யா பழத்தட்டுகள் முளைத்திருக்கும் பஸ்சின் ஜன்னல்கள் தோறும்,யாராவது பழம் வாங்கி விட்டு காசு கொடுக்கும் முன்பே பஸ் நகர்ந்து விட்டால் அந்த வியாபாரிகள் என்ன செய்வார்களோ என்று சில சமயம் மனம் பரித்தவித்ததுண்டு.அத்தனை குறுகிய நிமிடங்களே பஸ் அங்கே நிற்கும்.இங்குள்ள கிருஷ்ணன் கோவிலில் ஆடி மாதம் நடக்கும் ஆண்டாள் பிரம்மோத்சவத் திருநாட்களில் ஒரு நாள் கிருஷ்ணன் ஆண்டாளின் மடியில் தலை வைத்து சயனம் கொள்வாராம்.கண்கொள்ளாக் காட்சியென சன் டி.வியில் சென்ற வார ஆலய தரிசன நிகழ்ச்சியில் அம்மு சொன்னார்.

அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் பஸ் நிற்கும் முன்னே ஜன்னல்கள் தோறும் இப்போது பால்கோவா பாக்கெட்டுகள் முளைக்கும்,ஒரிஜினலோ இல்லை சீனிக் கரைசல்களோ பார்க்க அசல் பால்கோவா போலவே இருக்கும்.10
௦ ரூபாயிலிருந்து விலை ஆரம்பம்,அந்த ஊர் வெயிலுக்கு அதை வாங்கித் தின்னாமல் போவதே நல்லது.பிரசித்தி பெற்ற ஆண்டாள் ஜனன பூமி இவ்வூர் .ஆண்டாள் துளசிச் செடியின் கீழ் அவதரித்த பெருமை மிக்க தலம்.கோயிலுக்காக மட்டுமே இவ்வூர் எனக்கு மிகப் பிடித்தம்.ஆண்டாளும் ரங்கமன்னாரும் மரகதப் பசுமையில் துளசி மாலை சூடிக் கொண்டு தரிசனம் தருகையில் தெய்வ நம்பிக்கை இல்லாதோரும் சந்துஷ்டி அடையலாம்.தம்பதி சமேதராய் அப்படி ஒரு அழகு கொஞ்சும் ,ஆண்டாள் கை கிளி போல!

அங்கிருந்து அடுத்து திருத்தங்கல்..இங்கேயும் ஒரு பழமையான பெருமாள் கோயில் உண்டு.பிறகு சிவகாசி பஸ் ஸ்டாண்ட் தான்.


சிவகாசியில் பஸ் விட்டு இறங்கும் போது கையில் கர்சீப் இருப்பது அவசியம்.வியர்வையின் உப்புக் கசகசப்பில் உள்ளங்கை கூட நனைந்திருக்கும்.

ஏப்ரல் மே மாத விடுமுறை நாட்களில் இப்படி ஒரு பயணம் வருடம் தோறும் வாய்க்கப் பெற்றவர்கள் நாங்கள்.

அடடா...எதையோ சொல்ல வந்து விட்டு தேனி பஸ் ஸ்டாண்டில் இருந்து சிவகாசி வரை உங்களை அழைத்து வந்து விட்டேன் பாருங்கள்! ச்சே ..நான் எப்போதுமே இப்படித் தானோ!நினைப்பது ஒன்று செய்வது மற்றொன்று! சரி வாருங்கள் மறுபடி தேனி பஸ் ஸ்டாண்டுக்கே போவோம்.முன்னைப் போல அல்ல மனசின் ரீவைன்டு பட்டனை அழுத்துங்கள் போதும் தேனி பஸ் ஸ்டாண்ட் வந்து விடும்.

வந்தாச்சா...!?

ம்...சித்தியும் நானும் கோவிந்தநகரத்திலிருந்து (தேனிப்பக்கம் ஒரு சிறு கிராமம்) தேனி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விட்டோம்.

பஸ்ஸில் உட்கார இடமிருக்குமோ இல்லையோ பதட்டமாய் சிவகாசி அரசு பஸ் தேடி ஓடினோம்,அடப்பாவமே...
ஒரு சீட்டும் காலியாய் இல்லை.

டிரைவர் பக்கமிருக்கும் ஒற்றை சீட் கண்டக்டருக்கு உரியது,ஆனாலும் இடமில்லாத பயணிகளை உட்கார வைத்து விட்டு பெரும்பாலும் எஞ்சின் மேலே உட்கார்ந்து கொள்வார்கள் சிவகாசி பஸ் கண்டக்டர்கள்.அந்த ஷீட்டில் ஒரு கடா மீசைக் காரர் உட்கார்ந்திருந்தார். பார்த்த முகமாய்த் தெரிந்தது, சட்டென்று ஞாபகம் வரவில்லை எனக்கு.

"நாராயணா...நின்னுக்கிட்டே தான் போகனுமா இன்னைக்கு"என்ன வேண்டுதலையோ ! சித்தி புலம்பிக் கொண்டே பஸ்ஸில் ஏறி கம்பிகளைப் பிடித்துக் கொண்டு சோகமாய் நிற்க.அந்த கடா மீசை ஷீட்டில் துண்டைப் போட்டு வைத்து விட்டு எழுந்து எங்களருகில் வந்தார்.

"என்ன இங்க நிக்கிறிங்க? எடம் போட்டு வச்சிருக்கேன்ல போய் உட்கார்ந்துக்கோங்க.ஊர்ல இருந்து நானும் உங்க கூடத் தான் பஸ்ல வந்தேன்.சிவகாசிக்குத் தான போவிங்க பஸ்ல எடமிருக்குமோ என்னவோன்னு பறந்துகிட்டு ஓடி வந்து எடம் போட்டு வச்சா எனக்கென்னான்னு கம்பியப் பிடிச்சிக்கிட்டு நின்னா எப்பிடி!? "குரலதிரச் சிரித்துக் கொண்டு அந்த மனிதர் கேட்க.

நானும் சித்தியும் "ங்கே" :)))

யாரிவர்?

இடது கையில் பெரிதாய் இரட்டை இலைப் பச்சை குத்தி இருந்தார்.

பச்சையைப் பார்த்த மாத்திரத்தில் சித்தியும் நாணிக்கொண்டு அவரைப் பார்த்து சிரித்து வைத்தார்.

"சரி...போய் உட்கார்ந்துக்கோங்க பஸ் எடுத்துருவான் இப்ப! " அந்த மனிதர் சிரித்துக் கொண்டே கை ஆட்டி விட்டு பஸ்ஸில் இருந்து இறங்கி நகர்ந்து போனார்.

அவர் போன பின்னும் கூட சித்தியின் முகத்தில் உறைந்த சிரிப்பில் கண்ணோரமாய் வெட்கம் கூத்தாடியது .

"யாரு சித்தி இது?!"

"ம்...இவரா ...எல்லாம் உங்க சொந்தக்காரரு தான் "

"எங்க சொந்தக்காரரா? யாரு?! பார்த்த மூஞ்சியா இருக்கு ,யார்னு தான் தெரியல"

உங்கப்பாக்கு சொந்தம் ...நீ ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறதுனால தெரிஞ்சிருக்காது! உங்கப்பாக்கு அண்ணன் முறை ,இவருக்கு தான் மொதல்ல என்ன பொண்ணு கேட்டாக,ரொம்ப வயசு வித்யாசம்னு பாட்டியும் தாத்தாவும் இவருக்கு என்னை கொடுக்கலை."

ஏன் சித்தி ஒனக்கு கல்யாணமாகி இருபது வருசமிருக்குமே! இப்பக் கூட இவர எப்பிடி அடையாளம் தெரியுது ஒனக்கு!

"கைல இருக்கற ரெட்டலைப் பச்சை வச்சு தான்.அப்பவே சொல்லிக்கிட்டாங்க இல்ல மாப்ள கைல ரெட்டலை பச்சை குத்திருப்பார்னு,இவருக்கு என்னை கல்யாணம் பண்ணித் தரலன்னாலும் இந்த ரெட்டலைப் பச்சை அப்படியே மனசுல பதிஞ்சு போச்சு ..நல்ல மனுஷன் பொண்ணு தரலன்னாலும் என்னை மறக்காம பஸ்ல சீட்லாம் போட்டு வச்சிருக்கார் பார்"

எனக்கென்னவோ சிரிப்பு சிரிப்பாய் அள்ளிக் கொண்டு போனது சித்தியின் நடுத்தர வயது வெட்கப்புன்னகை கண்டு.

பாவம் சித்தி...ம்ம்...அந்த மனிதரும் பாவம் தான்...!!!

Friday, February 26, 2010

பாட்டிகளும்...அத்தைகளும் மற்றும் அந்நியப்பட்டுப் போன குழந்தைகளும்

பாகப் பிரிவினைக்குப் பின் பாட்டி வீடு மாமா வசமானது.வீட்டுக்குள் நான் சுயமாய் ஓடித் திரிந்து எனக்கே எனக்கென்று ஆண்டு கொண்டிருந்த இடங்களுள்ள அறைகளெல்லாம் அத்தைகளைப் போலவே அன்னியப் பட்டுப் போயின.

வெகு முக்கியமாய் அந்த படுக்கை அறை கதவு மூலை...அங்கமர்ந்து தான் நான் பல ஆண்டுகள் பரீட்சைக்குப் படித்தேன் ,கதவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு முன்புற டெலிபோன் ஸ்டாண்ட் தாங்கி நுனியை காலால் இடறிக் கொண்டே எத்தனை மணி நேரங்கள் படித்தாலும் அலுக்கவே அலுக்காது.அங்கு இப்போது இத்தனை காலியாய் இடத்தை விட்டு வைப்பானேன் என்று பித்தளை அண்டாவில் இண்டோர் பிளான்ட் வைத்திருக்கிறாள் அத்தை.

இன்னும் ஓரிடம் மச்சு அறை .அங்கமர்ந்து தான் செவ்வாய்க் கிழமை விரத நாட்களில் கொழுக்கட்டை சாப்பிடுவதெல்லாம் நடக்கும்.காலங்காலையில் பல்லைக் கூட தேய்த்துக் கொள்ளாமல் நானும் தங்கையும் உட்கார்ந்து உப்பில்லாத கொழுக்கட்டையும் தேங்காய் சில்லும் கடித்து ருசித்த இடம் இன்று மாமாவின் மகள் ஜெயந்தியின் டிரெஸ்ஸிங் டேபிள் வைத்த இடமாயிற்று.

திண்ணைகள் இல்லை இடித்து மேடாக்கி போர்டிகோ என்றாக்கி உள்ளிருப்பவர்கள் தெருவில் போவோருக்குத் தெரியா வண்ணம் ஆளுயர கேட் போட்டு மூடி விட்டார்கள்.பாட்டி இருக்கையில் தெரு பாட்டிகள் எல்லோருமே சாயந்திர ஜமாக் கூடும் இரு புறத்திண்ணைகள் பழங்கனவாயின.நின்று கொண்டே ஆட்டும் வகையில் இருந்த பெரிய ஒற்றைக் கல் ஆட்டுரல் இப்போது பாவம் மாமா வீட்டு வேலைக்காரப் பெண்ணுக்கு துவைக்கும் கல் மேடை ஆயிற்று.

"வேறென்ன தான் செய்வதாம் அதை வைத்துக் கொண்டு ...?!"

கிரகப்பிரவேசத்துக்கு போயிருக்கையில் அத்தை அம்மாவிடம் அலுத்துக் கொண்டாளாம்.

பூஜை அறையில் எல்லா சாமிப்படங்களும் இருந்தன.தாத்தா தீவிர வைஷ்ணவர்,திருநீறு பூசினவர்களைக் கண்டால் பேச்சின்றி கண் சிமிட்டிக் கொண்டு எள்ளலாய் சிரிப்பார்.அவரது பெரிய சைஸ் புகைப்படம் சிவபெருமானுக்கும் ஏழுமலையானுக்கும் நடுவில் மாட்டப் பட்டிருந்தது.தாத்தா இப்போதும் சிரித்துக் கொண்டு தான் இருந்தார் வரையப்பட்ட படத்தில் இருந்தவாறு!

ஓவியம் படித்துக் கொண்டிருந்த சின்ன மாமாவின் ஓவியப் புத்தகம் பார்த்து பாட்டி வீட்டு கூடத்து சுவற்றில் நான் வெறும் வண்ண சாக்பீசால் வரைந்து வைத்திருந்த விளக்கேந்திய காரிகை ஏழெட்டு வருடங்களுக்குப் பின் இப்போது காணாமல் போயிருந்தாள்.இத்தனைக்கும் பாட்டி இறந்து மூன்று மாதங்கள் கடக்கவில்லை.பாவம் விளக்கேற்றிய பெண் பாட்டியைக் காணாமல் தவிக்கக் கூடாதென எண்ணி அவள் மேல் டிஸ்டம்பர் பூசி மறைத்து விட்டார்கள் போலும்!

தலைமுறை தலைமுறையாய் திருவிழாக் காலங்களில் முறுக்கு சுட்டு அடுக்கி வைத்த ஒரு வெண்கலப் பானை கல்யாணமாகிப் போகையில் உனக்கு கொடுத்து விட வேண்டும் என்று பாட்டி அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருந்த அதே வெண்கலப் பானை இன்று இரண்டு எவர் சில்வர் அண்டாக்களாகவும் ஒரு பெரிய சில்வர் சம்புடமாகவும் அத்தையின் சமையலறை பரணில்.

ஆயிரம் மனஸ்தாபங்கள் வரினும் இணைக்கவென்று இருந்த ஒரு நூற்கண்டு அறுந்ததில் பாட்டி வீடெனும் பட்டுச் சேலையின் எல்லா நூல்களும் திசைக்கொன்றாய் முகம் திருப்பிக் கொள்ள போலிச் சிரிப்புகளாலும் மூடி வைக்கத் தெரிந்த பொறாமைகளாலும் சிக்குண்டு வலுவிழந்த நூலிணைப்புகள் ஒவ்வொன்றாய் பிடி நழுவின...

இந்த வீடு மட்டுமல்ல ...

இந்த ஊர் மட்டுமல்ல ...

இன்னும் சிலவும் ...இன்னும்...சிலவும் கூட அந்நியப்பட்டுக் கொண்டே இருக்கின்றனவாம் எங்கெங்கோ எவ்வெப்போதோ!

Thursday, February 25, 2010

தசையினை தீ சுடினும் ...

எதிலோ புதைந்து போனதை எங்கோ தேடி விட்டு
கனவிலிருந்து விழித்தெழுகையில்
தீராத் தேடல்
திகைப்பூண்டாய்
தகை கொள்ளும் நினைவுகள்
தசையினைத் தீ சுடினும்
கண்ணம்மா
நீ தெரிந்து கொள் ;
தேம்பாவணி முற்றத்தில்
கலம்பகம் கை அள்ளி
குறவஞ்சி கொஞ்சியோட
அகமும் புறமும்
பழமொழி பேச
சூளாமணியோடு சிந்தாமணி போல
அந்தாதி பாடும் அபிராமி
ஜன்னல் வழித் தெரியும்
என் அடுத்த வீட்டுப் பெண்;
எங்கோ புதைந்து போனதை எங்கெங்கோ தேடி விட்டு
விழித்தெழும் கனவுகள்.

Thursday, February 18, 2010

பனி நசுங்கும் புல் கசங்கும் ...சுதேசித்தனிமைகள் வேண்டும்...

அது ஒரு நீள் நெடும் பாதை ; தாரெல்லாம் இல்லை வெறும் செம்மண் ரஸ்தா தான்.கப்பி ரோடு என்றும் சொல்லிக் கொள்ளலாம்.மழை பெய்திருக்கவில்லை.டிசம்பர் மாதக் குளிர் உள்ளங்கால் கூசிச் சிலிர்த்தது பனி நசுங்கும் புல் கசங்கும் ஒவ்வொரு எட்டிலும்

விடியற் கருக்கலில் தூரத்து மலை விளிம்பில் மேகப்புடவைகள் மெல்லத் தழுவி மரகதப் பசும் உடல் வழுக்கும் நீலக் குந்தன் கற்களாய் சிமிட்டிக் கொண்டு கண்ணாமூச்சு ஆட.ஆளற்ற சாலையோரம் அசைவின்றி நடக்கையில் தெய்வீகத் தனிமை சுவாசமெல்லாம் நிரம்பி புகையாகிக் கசிந்து மலை நோக்கி முகடேற,வால் நீண்ட கருங்குருவி பெயர் தெரியாப் பறவையுடன் சோளக்காடு தாண்டி சொல்லொணா உவகையோடு எங்கிருந்தோ... எங்கோ பறக்க அதன் சிறகசைப்பில் உயிரசைய உடன் பறந்தது உள்ளிருக்கும் உல்லாசம்.

யாராலும் கண்காணிக்கப் படாத சுதேசித்தனிமைகள் வேண்டும் தவணை முறையில்.

உங்களுக்கும்...

எனக்கும்...

நமக்கும்...

ஏன்...

எல்லோருக்கும் தான்!

இன்றோடு விடுமுறை சில நாட்கள் இந்த தளத்துக்கு ...நாள் ...நேரம் ... நட்சத்திரம் ...பார்த்துக் கொண்டு இன்னொரு நாளில் வருகிறோம்.

நோட்:

இங்கே சுதேசித்தனிமை என்பது இடவாகு பெயர் (ஆகு பெயர்)
சுதேசி - நம் தேசம்
விதேசம்-அயல் தேசம்

சுதேசித் தனிமைன்னா சுயம் சார்ந்த தனிமைன்னு அர்த்தம் பண்ணிக்கலாம்,இந்தப் பதம் சரியா தவறான்னு மொழி வல்லுனர்கள் தான் சொல்லணும்.
:)

Tuesday, February 16, 2010

Drawings ... My Daughter


எலியை விரட்டும் யானை (ரொம்ப டயர்ட் ஆயிருச்சாம் யானை ...!) படம் கொஞ்சம் இருட்டா இருக்கு ,நல்லா உத்துப் பார்த்தா தாங்க யானையும் எலியும் கண்ல படறாங்க.என்ன பண்ண என் பொண்ணு வரைஞ்சதாச்சே ! ஆவணப்படுத்தும் முயற்சி தான்.
இதை எழுதும் போது அடிக்கடி எங்களை கலாய்க்க என் தம்பி சொல்வான் "தன்னை தானே மெச்சிக்குமாம் தவிட்டுக் கோழி " சொலவடை ஞாபகம் வந்தாலும் விட்ருவமா நாங்க?!
பாப்புவுக்காக ஒரு நல்ல டிராயிங் டீச்சர் தேடிட்டு இருக்கேன் ...பல திறமைகள் ... ;) என் பொண்ணுகிட்ட இருந்தாலும் தனித் திறமைகளை கண்டடையற முயற்சி தான். அண்ணாநகர் திருமங்கலம் ..வில்லிவாக்கம் பிரதேசங்களில் திறமையான Drawing டீச்சர்ஸ் யாராச்சும் உங்களுக்குத் தெரிஞ்சவங்க இருந்தா பரிந்துரையுங்கள் :)))

Monday, February 15, 2010

கிளிஞ்சல்கள் பறக்கின்றன...


மென் அடர் நீல ஊமத்தம் பூக்கள் நீரில் கரைந்தால் என்ன நிறம் கிடைக்குமோ அந்த நிறத்தைப் பூசிக் கொண்டு இந்த கவிதைப் புத்தகத்தின் முகப்பு வாசிக்கும் நபர்களை தன்னுள் வசீகரிக்கிறது.மொத்தம் நூறு கவிதைகளாம் முன்னுரை சொல்கிறது.

அடிவானம் குங்குமம் கரைத்த தங்கத் தாம்பாளமாய் சிவந்து கிளர்ந்தால் அதிலொரு அழகு.

அதே வானம் அந்தி மசங்கி சூரியனை முற்றாய் காணாமலடித்த பின் பரிபூர்ண கடல் நீலம் ஆங்காங்கு பளீரிடும் நீரின் பளபளப்பு சூழ மினுங்குகையில் கண் காணும் காட்சியெங்கும் நிழலுருவமாய் நீலம் ஒட்டிக் கொள்ளும்.அப்படித் தான் இங்குள்ள கவிதைகளில் சங்குப் பூக்களின் மென் நீலம் போல சிநேகமானதோர் மென் சோகம் நிரம்பி வழிகிறது.நிசப்த ஆடையில் நீலம் இழைத்து மிதந்து பறந்த கிளிஞ்சல்களில் மனதை வருடிச் சென்ற சிலவற்றை பகிர்ந்திருக்கிறேன் இங்கே.வாசித்து விட்டு சொல்லுங்கள்.

pepsi blue வுக்கும் லாவண்டர் க்கும் இடைப்பட்ட புராதன நீலம் அப்படி ஒரு pleasant looking color .மொத்தம் இருக்கும் நீல வண்ணங்களில் இது மிக அழகான நீலம்!

சரி இனி கவிதைகளுக்குப் போகலாமா...

பட்டுப் புடவை எடுக்க கடைக்குப் போகிறோம்,பட்டில் எது சோடை!!! எல்லாமே மனதிற்கு உகந்ததாகத் தான் இருக்கும்.பட்டின் மென்மையும் மேன்மையும் இங்குள்ள எல்லா கவிதைகளிலும் இறைந்து கிடந்தாலும் சட்டென வசீகரித்த பத்தே பத்துக் கவிதைகள் மட்டும் இங்கே...

ஓடிப்போனவன் (என்.வினாயகப்பெருமாள் (பக்க எண்-11)

ஓடிப் போன நண்பன்
நாலுநாள் கழித்து
வீடு திரும்பினான் .

விம்மியபடி வாசல் வந்து
கட்டிக் கொண்டால் அவனின் மனைவி
ஐந்து வயது மகனுக்கு
கால்கள் தரையில் இல்லை

கொல்லி போட வந்த
சந்தோசத்தில் அப்பா.
அப்பாடாவென்று
ஆனந்தப் பட்டார்கள் நண்பர்கள்
பாவம்
என்ன கஷ்ட்டமோ?
என்ன ஞானமோ ?
பாதியில் வந்து விட்டான் .

நிதானமாக விசாரிக்க வேண்டும்
பாதி புத்தனை .

மொத்தக் கவிதையையும் இந்தக் கடைசி வரி தான் சுமக்கிறது.பாதி புத்தன்! பொருத்தமான அடைமொழி தான் ஓடிப்போன நண்பனுக்கு.

வீடு (ஜ்யோவ்ராம் சுந்தர் (பக்க எண்-12)

நாய்கள் விளையாடிக்
கொண்டிருந்தனவாம் இவ்வீட்டில்
மாடும் கன்றும் சத்தம் போட்டுக்
கொண்டிருந்தனவாம்
புறாக்கள் பறந்து கொண்டிருந்தனவாம்
அணில்கள் லாந்திக் கொண்டிருக்குமாம்
எந்நேரமும் உறவுகளும் நட்புகளும்
பேசிச் சிரித்து
கூடி மகிழ்ந்திருந்தார்களாம் இவ்வீட்டில்
இப்போது கடன்காரர்களின்
ஏசல்கள் கூட இல்லை
எல்லாரும் எல்லாமும் கைவிட
கழிகின்றன பொழுதுகள் சலனமற்று .

எல்லோரும் எல்லாமும் கை விட்ட வீடுகளை நீங்கள் பார்க்க வாய்த்திருக்கிறதா எப்போதேனும்? நான் பார்த்திருக்கிறேன்.என் பாட்டியின் பிறந்தகம் அது.வீடு இன்னும் இருக்கிறது அதே ஊர் அதே தெரு ...அதே இடத்தில் ,ஆனால் அங்கிருந்து கூடிக் குலாவி...சுணங்கிப் பிணங்கி கணமொரு பாவனை செய்த மனிதர்களைத் தான் காணோம்! அதன் ஜீவன் அவர்கள் புழங்கிய ஓசை என்பதறியாமல் இந்தியாவெங்கும் சிதறிய அம்மக்கள் அவ்வீட்டின் உயிரை எடுத்துக் கொண்டு பறந்தனர் வெறும் கூடாகிப் போன அவ்வீடு சில பல ஆண்டுகளுக்கொரு முறை உயிர்த்தெழும்.அன்றைக்கு நீங்கள் அங்கே வந்து பாருங்கள் அந்த வீட்டின் தேஜஸை .எல்லாம் சில நாட்கள் தான் வாரம் தாண்டாது மறுபடி..மறுபடி தவணை முறையில் செத்து செத்துப் பிழைக்கும் வீடுகளில் இதுவும் ஒன்று.

கப்பல்காரி (அய்யனார் (பக்க எண் 10 )

மழை மாலைத்
தெரு நதியில்
கப்பல்கள்.

செய்பவளின்
கண்ணெதிரில்
மடியாமல்
மெல்ல
மிதந்து போய்
பின்
மூழ்கும் .

விடியலில்
புங்கை மர
தடித்த வேரில்
சிக்கிச்
செத்துக் கிடக்கும்
அதே
கப்பல்கள்

எவ்விதச்
சலனமுமில்லாது
தாண்டிப் போவாள்
அதே கப்பல்காரி.


நாடெங்கும்...ஊரெங்கும்...வீடெங்கும்...திண்ணையிலும்...கொல்லையிலும்...முற்றத்திலும் ஒரே கப்பல்காரிகள் மயம்,அய்யனாரின் கவிதை பற்றி மேலும் மேலும் சொல்ல என்ன இருக்கிறது ! "கப்பல்காரிகள்" ம்...அழகான பிரயோகம்

தொட்ட மழை விட்ட மழை (பொன்.வாசுதேவன் (பக்க எண் 16 )

போகிற வழியில்
ஏதோவொரு ஊரில்
தற்செயலாய் இறங்கியது போல்
தட்டுத் தடுமாறி யோசனையாய்ப்
பெய்து கொண்டிருந்தது மழை

ததும்பும் மழையின்
வேகத்தைக் கண்டு
வேகம் கூட்டிச் செல்லும் வாகனங்கள்

குடைஎடுக்காமல் வந்ததற்காய்
தன்னைத் தானே நொந்து
நனைந்த புடவை கசங்காத படி
வேகமாய் விரையும் பெண்கள்

மழை நீரில் கப்பலே விட்டரியாத
குடியிருப்புச் சிறுமி
வழிந்தோடும் நீரில் பார்வையால்
செலுத்திக் கொண்டிருக்கிறாள் கப்பலை

நுரைத்துக் குமிழ்ந்திருக்கும்
ஒருபாவமும் அறியாத
சாலைக் குழி நீரை
எட்டி உதைத்தோடும்
மழை நனைந்த பையன்

எல்லோரையும் கடந்தபடி
மழையில் நனைவதென்றால்
ரொம்பப் பிடிக்குமெனச்
சொல்லிச் சொல்லி
அன்பால் நனைந்து காதலித்த
யமுனாவோ
வெயிலுக்கென எடுத்து வந்த
வண்ணக் குடைக்குள்
தலை தோள் நனையாமல்
சென்று கொண்டிருக்கிறாள்
பத்திரமாக தன் வீட்டுக்கு .

//போகிற வழியில்
ஏதோவொரு ஊரில்
தற்செயலாய் இறங்கியது போல்
தட்டுத் தடுமாறி யோசனையாய்ப்
பெய்து கொண்டிருந்தது மழை //

மழைக்கும் யோசனை உண்டாக்கும்?!
இந்த கற்பனை அழகென்றாலும் இதை விட இதை ரசித்தேன்.

//மழை நீரில் கப்பலே விட்டறியாத
குடியிருப்புச் சிறுமி
வழிந்தோடும் நீரில் பார்வையால்
செலுத்திக் கொண்டிருக்கிறாள் கப்பலை//

கண்களால் கப்பல் செலுத்துதல் அருமை அகநாழிகை

நுகத்தடி பூட்டிய (வடகரை வேலன் பக்க எண்-19 )

குழந்தைகளென்றால்
கொள்ளைப் பிரியம்
செவலைக்கு
கொம்பு நடுவில் சொறிந்து கொடுக்க
சொக்கி நிற்கும் கண் சொருக

எட்ட வரும் போதே எட்டி உதைக்கத்
தயாராகவிருக்கும் மயிலை
ஏனோ பிடிக்கவில்லை
குழந்தைகளை அதற்கு
அதனால்
குழந்தைகளுக்கும் அதனை

நுகத்தடியில் பூட்டியதும்
இரண்டும் ஈருடல் ஓருயிர் தான்
இடமென்றால் இடம் வலமேன்றால் வலம்
ஒத்திசைவு தான்
ஒரு போதும் இல்லை எசலி

அழுந்திக் காய்த்தக் கழுத்துக்கள்
சொல்லக்கூடும் உள்ளுக்குள்
மரத்துப் போன ஓராயிரம்

வலியோடு தொடர்வதன்றி
வேறேதும் வழியுண்டா
இரண்டுக்கும்?

இந்தக் கவிதை சொல்ல வருவது காளைகளின் வலிகளையும் ஏக்கங்களையும் மட்டும் தானா? பாரம் சுமக்கவென்றே ஒப்புக் கொடுக்கப் பட்டவர்களின் நிரந்தர வலிகளை அல்லவோ!


நேயன் விருப்பம் (செல்வேந்திரன் பக்க எண் 21 )

கழிப்பறையில்
முழங்காலும்
குளிக்கையில் முழங்கையும்
இடிக்கிறது
இடிபட வாழ்தலின்
இன்றைய தினம்
துவங்கியாகி விட்டது.

தீ" யென
எழுதப் பட்ட வாளிக்குள்
மணல் தான் இருக்கிறது.


தினசரி வாழ்வின் எந்திரத்தன சமாளிப்புகள் மற்றும் ஊமைச் சமாதானங்களின் எள்ளலாய்ச் சாடும் முதலும் கடைசியுமான வரிகள் ரசிக்கத் தக்கவை .

திண்ணையின் கதை (அமுதா பக்க எண்- 23 )

கையில் விளக்கோடும் இடுப்பில் குடத்தோடும்
மணப்பெண்ணாக வந்த பொழுது
வரவேற்றது...

கை நிறைய வலையல்கலோடும் மடி நிறைய
சுமையோடும்
விடை பெற்ற பொழுது
வாழ்த்தி வழியனுப்பியது...
...................................................................................

வீட்டின் எல்லா விஷேசங்களுக்கும் நிமிர்ந்து நின்றது
ஆசையாகக் கட்டியவர்
சுமந்து வரப்பட்ட வேலை தான்
குறுகிப் போனது .

திண்ணைகள் வைத்த வீட்டின் சொந்தக்காரர்களுக்குப் புரியும் இந்தக் கவிதையின் ஏக்கம்.துன்பியல் அழகு

முடியாத கதை (கார்த்திகைப் பாண்டியன் பக்க எண்-31 )

ஏழு மலையும் ஏழு கடலும் தாண்டி
மாயமாய் மறைந்து கிடக்கும் பச்சைத் தீவில்
வானம் தொட்டு உயர்ந்து நிற்கும்
ஆலமரத்தின் அடியில் புதைந்து கிடக்கிறது
ராட்சசனின் உயிரைத் தாங்கி நிற்கும்
மரகத வீணை ...
ராஜகுமாரன் அதனைத் தேடி எடுத்து
உடைக்க யத்தனித்த போது ...
எங்கிருந்தோ வந்த அப்பாவின் குரல் கேட்டு
அம்மா காணாமல் போக...
அசதியில் தூங்கிப் போகிறது குழந்தை..!!
இருந்தும்?
எப்போது கதை மீண்டும் தொடங்கப் போகிறதோ
அப்போது தான் கொள்ளப் படுவோம்
என்பதை அறியாதவனாக
குழந்தையின் ஆழ்மன அடுக்குகளில்
தீராத வன்மம் கொண்டவனாக
அலைந்து கொண்டே இருக்கிறான் ராட்சஷன்..!


மொத்தப் பத்திலும் நான் மிக ரசித்த கவிதை இதுவே....

தினம் தினம் கொல்லப் படக் காத்திருக்கும் ராட்ஷசர்களுடன் கவியும் இரவுத் தூக்கங்கள் எனக்கும் ஒரு போதில் வாய்த்திருந்தது,என் மகளுக்கும் கதை சொல்லிக் கொண்டு தான் இருக்கிறேன்,அதென்னவோ பாட்டி சொன்ன கதைகளின் புராதனத் தன்மை கண்ணாமூச்சு ஆட சுரைக்குடுக்கையாய் காய்ந்து கூடாகிப் போன கதைகளைத் தான் சொல்ல முடிந்திருக்கிறது இதுவரையிலும்.பாட்டிகள் ஆகச் சிறந்த கதை சொல்லிகள்,இந்தக் கவிதையில் ராட்ஷசன் மட்டுமா ஒழிந்திருக்கிறான் என் பாட்டியும் தான்.ஆகவே இந்தக் கவிதை வசீகரிக்கிறது.

சத்தங்கள் (அமிர்தவர்ஷினி அம்மா பக்க எண்-34 )

காரைத் தரையில்
கட்டை தென்னந் துடைப்பத்தால்
வரும் சர்...ரக்,சர்..ரக்
இப்படித் தொடங்கி
பால் பொங்கும் ஓசை ...குக்கர் விசில் சத்தம்...பாத்திரங்கள் உருளும் ஓசை நடைபாதையை வீட்டுக்குள் கொண்டு வரும் பூக்காரர்,தயிர்காரர் பேச்சொலிகள் இப்படி தொடர்ந்து
"இடையிடையே சிணுங்கலும் சிரிப்புமாய்
ஓடி வந்து காலைக் கட்டிக் கொள்ளும்
செல்ல மகளின் "அம்மா"
கடைசியில் இப்படி முடிக்கையில்

காலை நேரத்தின் அவசரங்களுக்கிடையில் இனம் காணும் சின்னச் சின்ன சந்தோசங்கள் அப்படி அப்படியே ஒளிப் படமாய் கண்ணில் நகரத் தான் செய்கிறது.

சக்திவேலும் சாவிகளும் (உமாஷக்தி பக்க எண்-50 )

எங்கே ஒழித்து வைத்தாலும் சாவிகளின் வாசனை
சக்திவேலுக்குத் தெரிந்து விடும் !
அவற்றின் ரகசிய இடங்களை
அவன் மட்டுமே அவ்வளவுக்கு அறிந்திருப்பான் !
வண்டிச் சாவி,வாயில் சாவி,
பழைய இரும்புப் பெட்டியின்
மிகச் சிறிய சாவி ,பீரோ சாவி,வீட்டுச் சாவி...
என பூட்டே கூட இல்லாத பல சாவிகள்
அவனிடம் உண்டு ...

அம்மாக்களின் பேரன்பை விளக்க அழகான கவிதை உமா ,அம்மாவின் அன்பைத் திறக்க மகனுக்கு சாவி வேண்டுமா என்ன ?!

குகைகளில் முடியும் கனவுகள் (ஜோ பக்க எண்-55 )

தனியனாகவே அலைந்து திரிகிறேன்,
பாலைவனங்களில், கடற்கரைகளில் ,
குறுகலான நீண்ட குகைகளில் ,
சுரங்கப் பாதைகளில் சென்று
மூச்சுத் திணறி ,
கனவு கலைந்து விழிக்கிறேன் .
........................................................

மீண்டும் வந்தது வெள்ளி இரவு
"மதுவருந்தி நடனமாடலாம் அழகிய பெண்களுடன்"
சக ஊழியனின் அழைப்பை மறுத்து
வீட்டிற்கு விரைகிறேன்
தனியனாய் அலையும் கனவுகளை நோக்கி .


தொடக்கப் பள்ளி (ஹேமா பக்க எண்-58 )

பொன்னையா மாஸ்டர் சுளகில்
அரிசி புடைத்தபடியே
தமிழ் பாடம் சொல்லித் தந்ததை
மறக்க முடியவில்லை .

முட்டிக் கால் போட்டு மூன்றாம் வாய்ப்பாடு
பாடமாக்கினதையும் மறக்கவில்லை
..................................................................
சின்னக் காளிகோவில்
ஒரு அரச மரத்தடி புத்தர்
பிறகு ஐயனார் சிலை? பாலம் வயல் வெளி ?
ஆறு கடக்க
...................................................................
போன வருடம் போய்
என் மலையகத்து ஆரம்பப் பள்ளி பார்த்து
பாதம் தொட்டு வணங்கி வாய் விட்டழுது
பிரிய முடியாமல் பிரிந்து
இனியும் பார்ப்பேனா உன்னை என்று
கண்ணீரோடு வந்ததையும் மறக்க முடியவில்லை .


திருவினை (யாத்ரா பக்க எண் -62 )

திருவினையாகாத முயற்சிகளை நொந்து
கயிற்றைத் தேர்ந்தெடுத்தேன்
கடைசியாக
அதற்கு முன்பாக
மலங்கழித்து விடலாமென
கழிவறை போக
பீங்கானில் தேரைகளிருக்க
கழிக்காது திரும்பி
வரும் வழியில்
எறும்புகளின் ஊர்வலத்திற்கு
இடையூறின்றி கவனமாக
கடந்து வந்தேன் அறைக்குள்
கரிசனங்கள் பிறந்து விடுகிற
கடைசி தருணங்களின்
வினோதத்தில் புன்சிரித்தேன்...

தற்கொலை செய்து கொள்ளப் போகும் நிலையை இத்தனை கவித்துவமாய் எங்கேனும் சொல்லி இருக்கிறார்களா? எறும்புகளுக்கு கரிசனம் காட்டுபவன் ஏனோ கயிற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்? ரசிக்கத் தக்க வார்த்தைக் கோர்ப்புகள்.யாத்ராவின் இந்தக் கவிதை அழகு.


ஆதிரை என்றொரு அகதி (தமிழ்நதி பக்க எண்-65 )

ஐந்து வயதான ஆதிரைக்கு
கடல் புதிது
கேள்விகளாலான அவள்
அன்றைக்கு மௌனமாயிருந்தாள்
..........................................................
கழிப்பறை வரிசை
கல் அரிசி....
சேலைத் திரை மறைவில்
புரியாத அசைவுகள்...
காவல் அதட்டல்...
கேள்விகளாலான அவள்
ஊரடங்குச் சட்டமியற்றப் பட்ட
பாழடைந்த நகர் போலிருந்தாள்.

என் சின்ன மயில் குஞ்சே!
.............................................................

"அம்மம்மா !அவையள் ஏன் என்னை
அகதிப் பெண்ணு எண்டு கூப்பிட்டவை?"

வழக்கம் போல வலிக்கிறது இந்த வரிகளை வாசிக்கையில்.எழுதி எழுதி எத்தனை மாய்ந்தாலும் தீராத வேதனைகள்.தேறுதல் இல்லா துக்க வீட்டின் அழியாச் சின்னங்களாயின எண்ணிக்கையிலா சின்ன மயில் குஞ்சுகளும் ,சின்னப் புறாக்களும்.என்ன சொல்ல! துக்கம் உணரப்பட்டால் போதுமா ?! விடையறியாக் கேள்விகள்.

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள் (அன்புடன் அருணா )

ஆதிமூல கிருஷ்ணனின் "கலர்" இதில்


//சாக்லேட் கலருக்கும்
காப்பி பொடி கலருக்கும்
இடைப்பட்ட வண்ணத்தினாலான
புடவை என்னால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.// அழகான பகடி.

உயிரோடை லாவண்யாவின் "கண்ணாடிக் கோப்பைகளும் சில பிரியங்களும் " இதுவும் ரசனையான கவிதை.

இவை மட்டுமல்ல பதிவுலக பிரத்யேகக் கவிஞர்கள் பா.ராஜாராம்,நேசமித்திரன்,அனுஜன்யா,இன்னும் பலரின் மிக நல்ல கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.தொகுத்தளித்த நண்பர் மாதவராஜ் அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.

புத்தகம் கிளிஞ்சல்கள் பறக்கின்றன
தொகுப்பு ஜே.மாதவராஜ்
வெளியீடு வம்சி
விலை ரூ 50

Friday, February 12, 2010

ஜெயந்தனுக்கு (நிராயுதபாணிக்கு) அஞ்சலி...




"தீம்தரிகிட" மின்னிதழில் தான் தனது "துப்பாக்கி நாயக்கர்"சிறுகதை மூலமாக முதன் முறையாக ஜெயந்தன் எனக்குஅறிமுகம் ஆனார்.பாஸ்கர்சக்தி ஒரு நினைவுறுத்தும் பகிர்வாக இச்சிறுகதை குறித்து அங்கே எழுதி இருந்தார்.அளவில் நீண்ட சிறுகதை ஆயினும் படிக்கத் தூண்டும் வெகு ஜன வாசம் நிரம்பிய எழுத்து நடை,சற்றே விவரமான வெள்ளந்தி தனமான (!!!) ஆதங்கங்கள்,சமூகம் குறித்த தார்மீகக் கோபங்கள்,வாழைப் பழத்தில் ஊசி ஏற்றும் படியான பகடிகள்,பல்லிளிக்கும் பகட்டான முலாம் தேய்ந்த பின்னான கோர மனித அக முகங்கள்.இப்படி இவரது சிறுகதைகள் பேசாத பொருள் இல்லை எனலாம்.

எல்லாக் கதைகளுமே திட்டமிட்டு கூடுதல் ஆயத்தங்களுடன் எழுதப் பட்டவை போலன்றி இயல்பாகவே தனது நிஜத் தன்மையால் முழுமையும் நிறைவும் பெற்று விட்டதான தோற்றம் தருபவை.

வம்சி வெளியீடான ஜெயந்தனின் "நிராயுதபாணியின் ஆயுதங்கள்" தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.மொத்தம் 58 சிறுகதைகள்,அனைத்துமே சிந்தனையை தூண்டத் தக்கவை,சில மிக ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.'நம்மில் இருக்கும் நானை வெளிக்கொணரும் முயற்சிகளே 'அவரது பெரும்பான்மையான கதைகளும்.

இந்த தொகுப்பில் என்னில் அதிகம் பாதித்த சிறுகதைகள் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் ,இதுவே அந்த உன்னத எழுத்தாளனுக்கு நான் செலுத்தும் அஞ்சலியாகவும் இருக்கட்டும்.இதை தவிர வேறென்ன செய்து விட முடியும் வாசகர்களை நாம் !

ஊமை ரணங்கள்
மரம்
துக்கம்
துப்பாக்கி நாயக்கர்
வெள்ளம்

இந்த ஐந்து கதைகளும் வெகு கனமான விசயங்களை மிக லேசாகப் பேசிச்சென்று முடிவில் கதையைப் பற்றிய உள்ளுணர்தலில் நடுக்கமான ஒரு அதிர்வை ஏற்படுத்தி ஓய்கின்றன.

"மரம்" சிறுகதை வாசிக்கையில் சற்றேறக் குறைய இதே உணர்வை ஏற்படுத்திய பிறிதொரு குறுநாவல் , பாஸ்கர் சக்தியின் "ஏழுநாள் சூரியன் ஏழு நாள் சந்திரன் "ஞாபகத்தில் பளிச்சென்று நிழலாடியது. இரண்டிலுமே நிகழும் எதிர்பாரா துர்மரணங்கள் தற்செயலானவை.முடிவில் வாசிப்பவர்களை பதற வைத்து திடுக்கிடச் செய்பவை.

இதே போல "துக்கம்" சிறுகதை வாசிக்கையில் தமிழ்நதியின் "நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது" சிறுகதைத் தொகுப்பில் ஒரு கதையான "காத்திருப்பு" ஞாபகம் வந்தது.இரண்டு சிறுகதைகளுமே வாழ்ந்து சலித்த முதியவரின் மரணத்திற்குப் பின் அவருக்கு மிக நெருக்கமாகிப் போன இளைஞனின் அகக்கோபங்களைப் பற்றிப் பேசிச் செல்பவை.

வயோதிகத்தில் அவர்களின் இருப்பை புறக்கணித்து மதிக்காத சுற்றமும் வாரிசுகளும் மரணத்தின் பின் கதறி அழுவது "புளிப்பும் கரிப்புமாய் வயிற்றுக்குள் நுரைப்பதைப் போலான ஒரு அவஸ்தையான உணர்வை" அந்த இளைஞர்களிடத்தில் ஏற்படுத்துவதாக வாசிக்கையில் எங்கேயோ...எப்போதோ பெயரற்று உணரப் பட்ட ஏதோ ஒரு உணர்வின் நினைவு மேலெழுகிறது.

"ஊமை ரணங்களில்" மகளுக்கு தலை தீபாவளி சீர் செய்யப் பணம் கிடைக்காமல் திகைக்கும் ஒரு அப்பாவி அப்பாவுக்கும் விவரமான மகளுக்கும் இடையேயான உரையாடல் மெய்யான ஊமை ரணமே தான்.

கல்யாணத்துக்கு முன்பு அவள் தகப்பன் வீட்டில் இருந்து வேலைக்குப் போகையில் பெற வேண்டிய சம்பளப் பணம் அரியர்ஸ் என்ற பெயரில் கல்யாணத்துக்குப் பின் மொத்தமாக கிடைக்கவே படிக்க வைத்து வேலைக்கும் அனுப்பி அதற்கான பலனை அனுபவிக்க கொடுத்து வைக்காத ஆதங்கமும் வேறு வக்கற்ற இயலாமையும் கலந்து மகளிடமே அந்த தகப்பன் பணம் கேட்டுப் பெற தயக்கம் நிறைந்த நம்பிக்கையோடு புறப்பட்டு வருகிறான்,அங்கே மகளிடத்தில் அவனுக்கு கிடைத்த பதில் தான் ஊமை ரணமாகிப் போகிறது அவனுக்கு,நிஜத்தில் நாம் கண்ட கதை தான்,புத்தகத்தில் வாசிக்கையில் புறக்கணிக்க இயலா வருத்தம் தழும்பி அந்த தகப்பனுக்காக திகைக்கச் செய்கிறது .

"துப்பாக்கி நாயக்கர்" இன்னுமொரு அருமையான நிகழ்வு அடிப்படையில் அமைந்த கதை. ஊரே பயந்து மிரளும் ஒரு பெரிய மனிதனின் இளைய தாரத்தை அவரது அடியாட்களில் ஒருவனே கை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய விழைய ,ஒரு நிமிட சபலத்திலான அவனது அந்த செய்கை பிற்பாடு "முதலாளி" என்ன செய்வானோ எனு பயத்திலேயே தானாக மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்கிறான்.சேதி அறிந்து இவனை எவ்வாறெல்லாம் மிரட்டலாம் என்றெண்ணிய அந்தப் பெரிய மனிதனுக்கு இவனது தற்கொலை மிகப் பெரிய அதிர்ச்சியாகி விடுகிறது.இப்படிப் போகிறது கதை.இந்தக் கதைக்கான லிங்க் கீற்று தளத்தில் தீம் தரிகிடவில் கிடைக்கும் என நினைக்கிறேன்,கிடைத்தால் வாசியுங்கள் ,நல்ல எழுத்து.

"வெள்ளம்" இந்தக் கதை வாசித்த பின் தான் நான் "கிருஷ்ணி "என்றொரு கதை எழுதினேன்.சம்பவங்கள் வேறு வேறு எனினும் மூலம் ஒன்றே.கல்யாணமாகி மனைவியைப் பிரிந்து இருக்கப்பட்ட அல்லது அவ்வாறு இருக்க எதாவது ஒரு வாழ்வியல் சூழலால் நிர்பந்திக்கப் பட்ட ஒரு ஆணின் பார்வையில் பெண்கள்.சொல்லப் போனால் பெண் எனும் பிம்பம் வயது ஒரு பொருட்டின்றி விவஸ்தை கெட்ட மனதின் அலங்கோல சிந்தனைகளைப் பற்றி சொல்லும் கதை இது,

ஒரு ஆணின் அகத்துக்கும் அவனுக்கு கிட்டிய சந்தர்பங்களுக்கும் இடையிலான உரையாடல் தன்மை ஒத்த இச்சிறுகதை மிக நல்ல முயற்சி.பதற வைக்கும் விஷயம் தான் ஆனாலும் முடிவில் மழை ஓய்ந்து வானம் தெளிவதைப் போல கருமை படர்ந்த அவனது விபரீத எண்ணங்கள் ஓய்ந்து அவன் தெளிவான வானம் பார்ப்பதாய் கதை முடிகிறது.வாழ்வும் இப்படித் தான்.நமக்கு நாமே ஒரு கோல் வைத்துக் கொண்டு நம்மை நாமே எல்லா சந்தர்பங்களிலும் வழுவாதிருக்க முயற்சி செய்து கொண்டு ஆட்சி செய்து கொள்ள வேண்டியது தான். இது ஒரு தீராத ஆட்டம் தான்,ஆனாலும் கரணம் தப்பினால் மரணம் போன்ற ஆட்டம்.

இந்த ஐந்து சிறுகதைகளுமே வாசிப்பளவில் என்னை மிகப் பாதித்தவை,இவை தவிர;

உபகாரிகள் :


பெண் பார்க்கச் செல்கையில் அக்கம் பக்கம் அந்தப் பெண்ணைப் பற்றி எல்லோரிடமும் விசாரிக்கிறார்கள் ஒரு இளைஞனின் சுற்றமும் நண்பர்களும்,லயம் தப்பாமல் எல்லோருமே பெண் மிக நல்லவள்,குணவதி என்று சர்டிபிகேட் தர பையன் ஆகாயத்தில் மிதக்காத குறை ,ஆனால் அந்தப் பென்னிடமிருந்தே "நான் ஒரு பஸ் டிரைவரை காதலிக்கிறேன்,என் அப்பாவும் தம்பிகளும் அவரை சில நாட்களுக்கு முன் நான் வேலை பார்க்கும் பள்ளிக்கு முன்பாகவே எல்லோரும் வேடிக்கை பார்க்க ஆள் வைத்து அடித்து உடைத்து விரட்டி விட்டார்கள்,நான் அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் "என்று கடிதம் வரவே அந்த மாப்பிளைப் பையன் ஆகாயத்தில் இருந்து தொபுக்கடீர் என்று தரையில் விழுகிறான்!!!
பிறகெப்படி அப்படி ஒரு பெண்ணை என் தலையில் கட்ட விசாரித்த இடத்தில் எல்லாம் நல்ல பெண் ..நல்ல பெண் என்று சர்டிபிகேட் தருகிறார்களே! என்று இவர்கள் அவர்களிடமெல்லாம் மறுபடியும் விசாரிக்க,

நடந்தது நடந்து போச்சு அதுக்காக ஒரு பொண்ணோட கல்யாண விசயத்துல விளையாட முடியுமா?
அவளுக்கு நல்ல படியா கல்யாணம் ஆகட்டும் என்று எண்ணி தான் இப்படிச் சொன்னதாக சொல்கிறார்கள்
.எப்படிப் பட்ட உபகாரிகள் பாருங்கள் ?!!!இது தான் அந்தப் பெண்ணிற்கு அவர்கள் செய்யும் உபகாரமா!!!

இதே போல "பைத்தியம்" என்றொரு சிறுகதை ; இன்ஜினியரான தன மகனுக்கு நா பைசா வரதட்சினை இன்றி திருமணம் செய்து வைக்கும் ஒரு பேராசிரியரை ஊரும் அந்த ஊர் எம்.எல் ஏ வும் புகழ்ந்து வாழ்த்துகிறார்கள்,"புரட்சித் திருமணம்" என்று வாழ்த்துத் தந்தி எல்லாம் அனுப்பி கொண்டாடுகிறார்கள் அவரை.அதில் மிதப்பாய் சந்தோஷித்து திளைக்கும் அந்தப் பேராசிரியரை அவரில்லாத இடம் என்று எண்ணி அவரது சொந்த அக்காள் கணவரும் அவரது நண்பர்களும் "இப்படி ஒரு பைத்தியத்தைப் பாரேன்" என்றே ரேஞ்சில் எள்ளி நகைத்துப் பேச வானளவு மிதந்து கொண்டிருந்த அந்தப் பேராசிரியர் பூமிக்கு இறங்கி தரையில் கால் பாவி பித்துப் பிடித்தது போல அவர்களைக் கண்டு என்ன சொல்வதென புரியாமல் உரத்துச் சிரிக்கிறார்,நம் செயல்கள் மிக உயர்ந்தவையாய் இருப்பினும் அதைக் குறித்து நாம் மட்டுமே உன்னதம் கொள்கிறோம்,பிறருக்கு ஏதோ ஒரு வகையில் அது எள்ளல் மிகுந்ததாய் அமைந்து விடுகிறது,விசித்திரம் தான்.இது தானே வாழ்கை !

இதே வரிசையில்

வாசித்து நிமிர்கையில் இதழ்களில் மிக மெல்லிய புன்னகை பூசத்தக்க எள்ளல் நடையில் இன்னும் சில சிறுகதைகள் இதிலுண்டு ,அவை

4 வது பரிமாணம்

இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்

ஓர் ஆசை தலைமுறை தாண்டுகிறது

அவர்கள் வந்து கொண்டிருகிறார்கள்

கவிமூலம்

மிஸ்.காவேரி

இந்தக் கதைகளைக் கூறலாம்.

இவை மட்டுமல்ல "பிடிமானம் " எனும் சிறுகதை ஏற்றுக் கொள்ளவியலாத வகையில் அமைந்த ஒரு பெண்ணின் தாய்மையைப் பற்றி பேசுகிறது.

"மொட்டை" இதே சாயலில் இனி எந்தக் கதை வந்தாலும் ஜெயந்தனின் இந்தக் கதை ஞாபகம் வரும்.


"நிராயுதபாணியின் ஆயுதங்கள் " கதையின் தலைப்பே எத்தனை அர்த்தம் பொதிந்திருக்கிறது பார்த்தீர்களா?! இதில் விளக்கம் சொல்ல என்ன இருக்கிறது?! இந்த சிறுகதையும் வாசிக்க வேண்டிய சிறுகதையே.

"டாக்கா மஸ்லின் " ஒரு மாறுபட்ட கற்பனை,வாசிப்பவர்களின் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி நீடிக்கத் தக்க சிறுகதைகளை எழுதும் ஆசை இருக்கும் புதியவர்கள் வாசிக்க வேண்டிய படைப்புகளில் ஒன்று ஜெயந்தனின் சிறுகதைகள்.அந்த எளிமையான எழுத்தாளருக்கு எமது அஞ்சலி இந்தப் பதிவு.
புத்தகம் நிராயுதபாணியின் ஆயுதங்கள்
ஆசிரியர் ஜெயந்தன்
வெளியீடு வம்சி பதிப்பகம்
விலை ரூ 400


நோட்:

வம்சி புக்ஸ் பவா செல்லத்துரை சொன்னதாக ஒரு வாக்கியம் நெட்டில் ஜெயந்தன் அஞ்சலிப் பதிவுகள் எதிலோ ஒன்றில் வாசித்தேன் ,அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது,ஏன் ஜெயந்தன் அதிகம் கொண்டாடப்படவில்லை?!அவருக்கு தன்னை மார்கெட்டிங் செய்து கொள்ளத் தெரியவில்லையோ!!! அல்லது அவரது சிறுகதைகளில் அப்பட்டமாய் வெளித் தெரியும் இயல்புத் தன்மை போலவே "இது போதும்" என்று தன்னிறைவாய் இருந்து விட்டாரோ!எப்படியானாலும் சரி இலக்கிய வாசிப்பில் தவிர்க்க முடியாத படைப்புகள் ஜெயந்தனுடையவை.


வாசிப்பவர்கள் ஜெயந்தன் குறித்த உங்களது பகிர்வுகளை இங்கே பதிந்து செல்லுங்கள்

Wednesday, February 10, 2010

My Daughter...


என் தம்பி இந்த வருடப் பிறந்த நாளுக்காக பாப்புவுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தான்.தினம் அரைமணி நேரமாவது சைக்கிள் ஓட்டினால் தான் அவளுக்கு திருப்தி,மூன்று மணிக்கு பள்ளி விட்டு வந்ததும் 4 to 4 .30 cycling தான்.

நேற்று பாப்புவை cycling அழைத்துச் செல்லும் போது அவள் பாதையோரம் கண்ணில் பட்ட காகங்கள்...நாய் ...நாய் குட்டிகள் ...பசு மாடு ,எல்லாவற்றுடனும் பேசிக் கொண்டே வந்தாள்.பார்க்க வெகு அழகாய் இருந்தது,

காகங்கள் கூட்டமாய் குப்பையில் இருந்த ஏதோ ஒரு உணவுக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தன ,ஒரே ஒரு காகம் மட்டும் தனியே மற்ற காகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

பாப்பு இங்கிருந்து கொண்டே ...

"ஏய் செல்லக் குட்டி" நீ சாப்பிட்லையா? ஒனக்குப் பசிக்கலையா? போ...போ ..இப்பிடி...இப்பிடி பறந்து போயி அப்பிடி...அப்பிடி சாப்பிடுவியாம்." சொல்லி விட்டு என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு ,

அடுத்து ஒரு நோஞ்சான் பசுமாடு குப்பையில் பிளாஸ்டிக் பையைத் தின்ன முயன்று கொண்டிருந்தது.

"ஏய் கௌ (கௌ) ...பைய போய் திங்கற...வயித்துல சிக்கிக்கும்,ஒனக்கு வாந்தி வாந்தியா வரப் போகுது ச்சூ...ச்சூ ஓடிப் போ" என் சுடிதார் முனையை இறுக்கப் பற்றிக் கொண்டு அதை விரட்ட பார்த்து முடியாமல் போகவே ;

ச்சே..ச்சே ..பெட் கௌ "

சொல்லி விட்டு நான் அவள் சொன்னதை ஆமோதிக்கிறேனா என்றொரு பார்வை என்னை நோக்கி;

பார்க்கில் யாரோ இரண்டு நாய்க்குட்டிகளை கொண்டு வந்து பார்க் பெஞ்சில் கட்டிப் போட்டு விட்டு வாக்கிங் போயிருந்தார்கள் ,அந்நேரம் கூட்டமும் அதிகம் இல்லை.

ம்மா ...நம்மளும் ஒரு dog வளக்கலாமா?!

சூப்பரா இருக்கும்மா குட்டி டாக் "dog guards our home " pet animals ல வருதுல்ல .

ம்...டாடி வந்ததும் டாக் வாங்கிட்டு வரச்சொல்லி வளக்கலாம்டா."

எனக்கு நாய்...பூனை வளர்ப்பெல்லாம் பயங்கர அலர்ஜி,ஆனாலும் மறுத்தால் அவள் அழக்கூடாதே என்பதற்காய் சும்மா சொல்லி வைத்தேன்.

"நீ தான் நாய்னாலே கிட்டப் போக பயப்படுவியே...அப்புறம் எப்பிடி நாய் வளப்பியாம்?!

அதெல்லாம் நான் dog கிட்ட பேசிப் பேசி friend ஆயிடுவேன்"

இப்ப பார் இந்தக் காக்கா...இந்த கௌ இந்த டாக் எல்லாம் கூட நம்ம friends தான் ,டெய்லி இப்பிடி பேசிட்டே இருந்தா நம்ம எல்லாரும் best friends தான் மம்மி!!!"

எனக்கு ;
"காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்" பாரதியின் வரிகள் ஞாபகம் வந்தது,சிரித்துக்
கொண்(டேன்)டோம்.

குழந்தைகளின் அகஉலகம் எப்போதுமே இப்படித்தான் மிக மிக அழகானது மட்டுமல்ல பாரபட்சம் அற்றதும் கூட. :)))


டிஸ்கி:
படம் கூகுளில் தேடி எடுக்கப் பட்டது.

Monday, February 8, 2010

சைக்கிள்...

ஐம்பது காசு இருந்தால் போதும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டலாம் . அம்மா தர வேண்டுமே ! நேற்று தான் அப்பாவிடம் வாங்கினோம் ,அதற்கும் முந்தைய நாள் அத்தையிடம் ... இன்று யாரிடம் கேட்கலாம் ?!;

விஜயலுவின் மனம் பர பரவென்று யோசித்தவாறு சைக்கிள் கடை முன்பாகவே சுற்றிக் கொண்டிருந்தது .தினம் ஒரு ஐம்பது காசு கொடுத்தால் இவர்களென்ன குறைந்த போய்விடுவார்கள் ,நினைக்கும் போதே தன் நெஞ்சம் தன்னை சுட்டது ,காலை முதல் எத்தனை ஐம்பது காசுகள் வாங்கிச் செலவழித்தாகிவிட்டது ,இப்போது போய் கேட்டால் யார் தரப் போகிறார்கள் ?யோசிக்கும் போதே மஞ்சள் நிற பெயிண்ட் அடித்த அரை சைக்கிள் ஐ மோகனப்பிரியா எடுத்துக் கொண்டிருந்தாள் .

போன வாரம் வரை கேட்டால் ஒரு ரவுண்டு ஓட்ட தருவாள் தான் .இன்றைக்கு சைக்கிள் கடை முன்னால் விஜயலுவைப் பார்த்ததுமே கழுத்தை ஒரு வெட்டு வெட்டிக் காட்டி விட்டல்லவா குரோதத்துடன் போகிறாள் .

முந்தா நாள் சமூகவியல் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது ராமு வாத்தியார் எப்போதும் போல் கேள்வி கேட்டார் , பதில் தெரிந்தவர்கள் சொல்லி விட்டு தெரியாதவர்களின் முதுகில் குனிய வைத்து குத்துவது அந்த வகுப்பின் மரபு .அப்படித்தான் அன்று விஜயலு பதில் சொன்னதும் மோகனப்ரியாவை குனிய வைத்து கொஞ்சம் பலமாக குத்தி விட்டாள்...அதிலிருந்து அவள் இவளுக்கு சைக்கிள் மட்டுமல்ல வேறு எதுவும் தர மாட்டேனென்று விட்டாள் ...

கொய்யாப் பழம் ...
பலாக்கொட்டை ...
மாம்பழக் கீத்து ...
நாவல் பழம் ...
இலந்தைப் பழம் ....
எதுவுமே தான் !

இவளிடம் போய் சைக்கிள் கேட்டு அவமானப் படுவதா ?

நிச்சயம் அவள் சைக்கிளை சும்மா தொட்டுப் பார்க்கக் கூட விட மாட்டாள் ...கூட இருக்கும் அவள் கூட்டாளிகள் இருக்கிறார்களே பிசாசுகள் ...சரியான பேய்க்குட்டிகள்..!

சைக்கிள் வேண்டுமே ஓட்ட !

இப்போது என்ன தான் செய்வது ?

சைக்கிள் பைத்தியம் பிடித்து ஆட்டுதுடீ உன்ன ;அக்கா அடிக்கடி வீட்டில் மாட்டி விட ஆரம்பித்து விட்டாள் .

அம்மா அவளுக்கு காசா தராத சைக்கிள் கடைல தான் எந்நேரமும் கிடக்கா ...பேசாம சேவு ...சீனி முட்டாய் ...மரவள்ளிக் கிழங்கு எதாச்சும் வாங்கி குடு ...இல்லாட்டி சைக்கிள்ல அழுதுட்டு என்கிட்டே பங்கு கேட்பா ;அக்காவை அறையனும் போல இருக்கும் அந்நேரம் ;

அந்த ரோஸ் நிற நடுக்கம்பியிட்ட சைக்கிள் இருகிறதே அது தான் விஜயலுவின் செல்ல வண்டி .சைக்கிள் கடை பரமு அண்ணாச்சியிடம் எத்தனையோ தடவை அதை யாருக்கும் தராதிங்க அண்ணே என்று சொல்லி இருக்கிறாள் .அந்த நேரம் சரி...சரி என்று போக்கு காட்டி விட்டு அடுத்த நொடியே யார் வந்து கேட்டாலும் காசுக்கு பேதமின்றி எல்லா சைக்கிள்லும் வாடகைக்குத் தருவார் சைக்கிள் கடை பரமு.

அந்த ரோஸ் நிற சைக்கிள் இன்று இன்னமும் யாரிடமும் போகவில்லை ...அதை எடுத்தே ஆகவேண்டும் என்று தான் பரபரப்பாய் யோசித்துக் கொண்டு இருந்தாள் விஜயலு ,சைக்கிள் லில் அப்படி என்ன தான் கண்டாலோ ?"ஆன்ட பிடகு ஏமிசே சைக்கிள் லு "அக்கா கத்துவாள் .

பஸ் ஸ்டாண்டில் தான் சைக்கிள் கடை ,

யாராவது சொந்தக்காரர்கள் வந்து அடுத்த பஸ்ஸில் இறங்க மாட்டார்களா காசு கிடைக்குமே சைக்கிள் விட !

சித்திக்கு என்ன கேடு பக்கத்து ஊர் தானே ? வந்தால் என்ன?

அத்தை மதுரையில் இருக்கிறாள் ...ஆனாலும் அவசரத்திற்கு வரலாம் ...வந்தால் என்ன கெட்டு விடும் ?

மாமா கோயம்பத்தூரில் இருந்தால் என்னவாம் இப்போது வந்து தொலைப்பதற்கு என்ன?
எங்கே ஒழிந்து போய்விட்டார்கள் இந்த சொந்தக்காரர்கள் எல்லோரும் ஒரேநாளில் !!!
விஜயலுவுக்கு மெல்ல அழுகை வரப்பார்த்தது .சொந்தக்காரர்களை நினைத்ததெல்லாம் இல்லை .

அந்த ரோஸ் நிற கம்பி சைக்கிள் இருக்கிறதே அதை ஒரு பையன் ஸ்டாண்டை விட்டு வெளியே தள்ளிக் கொண்டு இருந்தான் .அது விஜயலுவின் செல்ல வண்டி ஆயிற்றே !!!யார் அந்தப் பையன் ?

ஊர் மந்தைப் வேப்ப மரப்பிள்ளையார் மீது எக்கச்சக்க கோபம் வந்தது ,ஆலமரம் இல்லாமல் வேப்ப மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் போதே உனக்கு இவ்வளவு குசும்பு இருந்தால் ... உனக்கு இனி தோப்புக்கரணமே போடபோவதில்லை .மனதிற்குள் கருவிக் கொண்டாள்.

போயும் போயும் அந்த கோனை வாய் கோபிக்கா ரோஸ் சைக்கிள் போய் சேரனும் ?எல்லாம் உன்னால் தான் பிள்ளையாரே !என் ரோஸ் சைக்கிள் போச்சே !!!அவன் போகிற போக்கில் இவளைப் பார்த்து நக்கலாய் சிரித்தமாதிரி இவளாக நினைத்துக் கொண்டாள் .

சேச்சே ...இனி இந்த பரமு சைக்கிள் கடைக்கே வரவே கூடாது .ஊரில் வேறு சைக்கிள் கடையா இல்லை ?

ஆமாம் வேறு இல்லையே ...ஒரே ஒரு கடை தானே ஊரில் !!!

தேவையே இல்லாமல் இதுவும் ஞாபகத்துக்கு வர இல்லாவிட்டால் போய்த்தொலையட்டும் .இனி பரமு கடை எந்த திசை என்று கூட மறந்து போகணும் பிள்ளையாரப்பா ...கண்களை இருக்க மூடி சிலுவைக்குறி இட்டுக் கொண்டு வேண்டி விட்டு வீட்டை பார்த்து ஓடினாள்,படிப்பது பாதிரிமார் பள்ளிக்கூடம் ஆச்சே!!!சிலுவை இடாவிட்டால் பிள்ளையார் கோபித்துக் கொள்ளக்கூடுமே !!!

விஜயலு மெல்ல வீட்டுக்குள் எட்டிப் பார்த்தாள் ,அம்மா புறக்கடையில் பாத்திரம் தேய்க்கும் சத்தம் கேட்டது .அக்கா ஏழாம் வகுப்பு கூட்டு வட்டி கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாள் இவளுக்கு முதுகைக் காட்டியவாறு ;

இது தான் நல்ல சமயம் யாரும் கவனிக்கவில்லை இருட்டிக் கொண்டு வேறு வந்தது ..மழைக்காலம் ஆச்சே !!!

சாயந்திரம் பெட்டிகடையில் வாங்கித் தின்ற கடலை உருண்டையும் அஞ்சு காசு அப்பளமும் என்னத்திற்கு ஆகும் ?

பசி எடுக்கத்தான் செய்தது ;"எங்க போய் ஊர் சுத்திட்டு வர ?" அம்மா முதுகில் சத்து சாத்தென்று சாத்துவாளே?!

பூனை போல கூடம் தாண்டி எல்லோரும் படுக்கும் இடத்தில் விரிப்பு எதுவும் இன்றியே அந்த ரோஸ் நிற சைக்கிள்ளை நினைத்துக் கொண்டே மெல்ல ...மெல்லத் தூங்கிப் போனாள் விஜயலு .

Friday, February 5, 2010

கடந்து போனவள்...(மீள் பதிவு)




எதிர் வெயிலுக்கு முகம் சுருக்கி தன் முன்னே நடந்து போய்க் கொண்டு இருந்த அந்தப் பெண்ணை முருகேசனுக்கு கொஞ்ச நாளாய் நன்றாகவே தெரியும் . தினமும் இந்த வழியாகத்தானே போகிறாள் ....வருகிறாள் ...; ஒரு முறையேனும் அவள் இவனைத் திரும்பி பார்த்ததில்லை ... இவனும் அப்பெண்ணை பார்க்க வேண்டும் என்று பார்த்ததில்லை ... பழக்கதோஷம் என்பார்களே அப்படித்தான் இதுவும் ,


முருகேசன் அயன் கடை வைத்திருந்த தெரு அப்பெண் குடியிருக்கும் தெருவாகி விட்டதால் அடிக்கடி பார்வையில் பட நேர்ந்தது ...அதுவே பின்னாளில் அவளைப் பற்றி அவன் யோசிக்கவும் வழிவகுத்தது . ஒருநாள் அப்பெண்ணைப் தெருவில் பார்க்கா விட்டாலும் " இன்னும் காணோமே ... என்று மனம் கேள்வி கேட்கும் நிலை வந்து விட்டது இப்போதெல்லாம் ...


பசி வந்ததும் கூடவே தங்கத்தின் ஞாபகம் வந்தது , மதியம் என்ன செய்து வைத்திருப்பாளோ ? எட்டு மணிக்கெல்லாம் " மீன் ...மீன் ...மீனோய்... வஞ்சிரம் மீனோய் ! என்று கூவி கொண்டு போன மீன்காரனின் குரல் செவியில் இன்னும் கூட தேனாய் தித்தித்தது , இன்றைக்கு மீன் செய்ய சொல்லி இருக்கலாம் ,தங்கம் எது செய்தாலும் வாய்க்கு ருஷியாகத்தான் செய்வாள் .கோழிகறி ஆகட்டும் ...ஆட்டுக்கறி ஆகட்டும் ...உண்டு முடித்தபின் ஆளை ஒரு அசத்து அசத்தி விடும் .


தங்கத்துக்கும் , முருகேசனுக்கும் கல்யாணமாகி ஐந்து வருடம் ஓடி விட்டாலும் சின்னஞ்சிறுசுகள் போலத் தான் இப்போதும் கேலியும் கிண்டலும் தூள் பறக்கும் அவர்களது சம்பாசனையில் . பிள்ளையில்லாத வெறுமை கூட இதற்கு காரணமாயிருக்குமோ என்னவோ?


பாதையில் கடந்து போகும் அந்தப் பெண்ணின் பெயர் முருகேசனுக்குத் தெரியாது . கூட ஒரு குழந்தை நடந்து போகும் ,அது அவளுடைய குழந்தை தான் . வாய் ஓயாமல் பேசிக் கொண்டே போகும் . "மம்மி நீ வர வேண்டாம் னு சொல்றேன்ல" நான் தான் இப்ப பிக் கேர்ள்ஆயிட்டேன் ல"அவள் அதிகம் பேச மாட்டாள் , "ரோட்டைப் பார்த்து நட குட்டிம்மா " இது தான் அவள் பேசி அவன் கேட்ட வார்த்தைகள் .


மாமியார் தூரத்தில் துணி மூட்டையுடன் வருவது இங்கிருந்து நிழல் அசைவாய் கண்ணில் பட்டது , பாவம் இந்த வயதிலும் கடின உழைப்பாளி , வீடு வீடாய் போய் அயனுக்குத் துணி வாங்கி வருவாள் அதை பெட்டி போட்டுத் தந்ததும் மறுபடி வீடு வீடாய் போய் கொடுத்து பணம் வாங்கி கொண்டு வருவாள் . முருகேசனுக்கு 'நல்ல சப்போர்ட் 'என்று பக்கத்தில் கறிக்கடை வைத்திருக்கும் முனியசாமி சிலாகித்துச் சொல்லிக் கொள்வார்.


மாமியார் வெயிலை உடல் முழுதும் உறிஞ்சி விட்ட ஆயசத்தில் கருத்துப் போன முகத்தைத் அழுந்தத் துடைத்து விட்டு , பானையில் இருந்து சொமபு சொம்பாய் நீர் மொண்டு குடித்து விட்டு கொஞ்சம் முகத்திலும் சுளீர் ...சுளீரென்று தண்ணீரால் அடித்துக் கொண்டு துடைக்காமல் விட்டு விட்டாள். காற்று படப் பட இதமாய் இருக்கும் போல ... "சரி முருகேசு நீ வீட்டுக்குப் போ ... மணி ஆவுது பாரு" சொல்லி விட்டு கடைக்குள் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டாள்;


நல்லவள் தான்...ஆனால் வாய் கொஞ்சம் ஜாஸ்தி ... பேச்சு அதிகாரமாய் தான் இருக்கும் , இதனால் அயனுக்கு தருகிறவர்கள் ஒன்றிரண்டு பேருடன் அவ்வப்போது சின்ன சின்னத் தகராறும் செய்து கொள்வாள் ,பிறகு மறுபடி அவளே அதை சரி செய்து விடுவாள் , பாதையில் கடந்து போகும் அந்தப் பெண்ணுடன் கூட ஒருமுறை சின்ன சண்டை போட்டிருக்கிறாள் , அன்றைக்கு முருகேசன் கடைக்கு வராத நாள் .


மச்சினன் சித்தநாதனை கடையில் நிற்க வைத்து விட்டு புதுப்பேட்டையில் இருக்கும் ஒன்று விட்ட தம்பி மனைவியின் சித்தப்பா இறந்த துஷ்டி கேட்க போயிருந்தான் . அந்தப் பெண் கடைக்கு துணி கொண்டு வந்து அவன் பார்த்ததில்லை ,மாமியார் தான் போய் வாங்கி வருவாள் , அவசரமென்றால் அவளது கணவன் வந்து பெட்டி போட்ட துணிகளை வாங்கி போவான் .


அவள் வீட்டு துணிகள் இவனுக்கு நன்றாகவே ,அத்துப்படி கணவனது உடைகள் நிச்சயம் விலை கூடுதலாய்த்தான் இருக்கும் ,அருமையான மேல்சட்டைகள் , பெரும்பாலும் அவளது துணிகள் வராது . எப்போதாவது ஒரு சுடிதார் வரும் ,இல்லாவிட்டால் பட்டுப்புடவை வரும் . குழந்தையின் பட்டுப்பாவாடை ,சட்டை ,இப்படி கொஞ்சம் வரும் .


அவள் சுடிதார் அயனுக்குப் போடததாலோ என்னவோ ! தினம் அவள் கடை தாண்டிப் போகையில் இவன் அவளது உடை பார்க்க ஆரம்பித்தான் . ஓ... இன்னைக்கு பச்சை கலர் சுடிதார் ! இன்னைக்கு வெள்ளிக்கிழமை அதான் சிவப்புக் கலர் சுடிதாரோ ..! அட இந்த ஊதா கலர் சுடிதார் அந்தப் புள்ள நிறத்துக்கு அவ்ளோ எடுப்பா இல்லையோ ...?! இதென்ன இவ்ளோ சுருக்கஞ் சுருக்கமா இருக்கு ? நல்லா தண்ணிய உதறி சுர்ருன்னு இழுத்து தேய்ச்சா அப்படியே கம்பியாட்டம் நிக்கும் இந்த வெள்ளைக் காட்டன் சுடிதார் ... சேலை கட்டவே மாட்டா போல ?ஒருமுறை எதேச்சையாய் தங்கத்திடம் கூற அவள் பார்த்த கேலிப் பார்வையில் பிறகு இவன் கருத்து கந்தசாமி போல அவளிடம் எல்லாம் சொல்வதை நிறுத்தி விட்டான் .


இன்றைக்கு காலையில் எழுந்ததிலிருந்தே மனம் ஏதோ ஒரு அவஸ்தையில் பர பரவென்று தான் இருந்தது , எப்போதாவது இப்படி நிகழ்வதுண்டு தான் , பதினெட்டு வயதில் முதல் முறை சொந்த அத்தை மகள் கனகம் வயசுக்கு வந்ததும் கூட்டாளிகளின் கேலி கிண்டலுக்கு மத்தியில் அவளுக்கு குச்சு கட்டப் போகையில் இப்படித்தான் ஆனதாய் ஞாபகம்....!!!


பிறகொரு முறை ; மதுரை அழகர் கோயிலின் தீர்த்த தொட்டியில் குளித்து விட்டு கீழே வருகையில் குரங்குக்கு பயந்து மிரண்டு ஒதுங்குவதாய் நினைத்து தடுமாறி விழப்போன பத்து வயது பெண் குழந்தை ஒன்று இவன் மீது மோதி நிற்க பதறிப் போய் தாங்கினான் . நடுங்கி ஓய்ந்த குழந்தை நடுக்கம் நின்றதும் சிறு புன்னகையுடன் "தேங்க்ஸ் அங்கிள் " என்று புறங்கையில் முத்தமிட்டு விட்டு ஓடிவிட . அப்போதும் இப்படித்தான் பர பரத்து சிலிர்த்தது மனசு .


பிறகு தங்கத்துக்கும் அவனுக்கும் கல்யாணமான அன்று இரவில் அவளுக்காக தனி அறையில் காத்திருக்கும் போது கூட மனம் இப்படி தான் .... வெட்ட வெளியில் சீறும் காற்றில் ஒற்றையாய் கொடியில் சட சடக்கும் சல்லாத் துணி போல் பட பட வென அடித்துக் கொண்டு பர பரத்து அலைந்தது . இது போல சொல்லிக்கொள்ள உதாரணங்கள் இன்னும் கூட சில உண்டு அவனுக்கு .... இன்று என்ன வரப் போகிறதோ ?!


போனவளை இன்னும் காணோமே ?! யோசனையுடன் அவள் போன திக்கை யதேச்சையாய் பார்த்தால் அவள் கணவன் தான் என்றுமில்லா அவசரகதியில் வண்டியை அலற விட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தான் . கொஞ்சம் மெதுவாய் போனால் தான் என்ன ? மனதோடு சொல்லிக் கொண்டான் . அவளைக் காணோம் , இந்த வழியாகத்தானே வருவாள் என்று மறு படி சொல்லிக்கொண்டு , மதியச்சாப்பாட்டுக்காக வீட்டுக்குப் புறப்பட்டுப் போனான் .


சாப்பிட்டு விட்டு ஒரு அரை மணி தூங்குவான் ,இன்றும் அப்படிப் படுத்தான் . காலையிலிருந்து உள்ளே எழுந்து ஆடிக் கொண்டு இருந்த மனப் பாம்பின் சீற்றம்...தங்கம் இவன் கேட்காமலே மனதறிந்து செய்து வைத்த வஞ்சிரம் மீனில் சற்றே வாலைச் சுருட்டிக் கொண்டு ஓய ஒரு மணி நேரத்துக்கும் மேலாகவே தூங்கி விட்டான் போல ....! தங்கம் டீ போட்டுக் கொண்டு எழுப்பித் தரும் போது மணி நான்கை தொட்டிருந்தது , மாமியார் புலம்பிக் கொண்டிருப்பாளே என்று வேக வேகமாய் கிளம்பி போனான் .

மெல்லத் தான் போயேன் ....ஏன் ஓடற ...? தங்கம் பேசியவாறு பின்னோடு அவனுடனே கடைக்கு வந்தாள் ...கொஞ்ச நேரம் இருந்துவ்விட்டு விளக்கு வைக்க வீட்டுக்குப் போவாள் அவள் .கடைக்குள் நுழைந்தவனுக்கு ஆச்சர்யமான இன்ப அதிர்ச்சி மேலெழும்பி குதியாளம் போடாத குறை தான் , அந்தப் பெண் இரண்டு பெரிய கட்டை பைகள் நிறைய அயனுக்குத் துணிகள் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போய்க் கொண்டிருந்தாள்.

அன்றைக்கு முருகேசன் வழக்கத்தை விட ரொம்ப சந்தோசமாய் மனைவியிடமும், மாமியாரிடமும் பேசிச் சிரித்தவாறு துணிகளைப் பெட்டி போட்டு முடித்தான் . இனிமேல் அவள் வீட்டுத் துணிகள் மறுபடியும் இங்கே தான் வரும் . அவள் வந்ததில் இவனுக்கு என்ன சந்தோசமோ ???!!! அவனுக்கே புரியவில்லை தான் ...ஆனாலும் குதூகலமாய் ராத்திரிக்கு தங்கத்துக்கு அல்வா வாங்கிக் கொண்டு போனான் வீட்டுக்கு .. என்னய்யா இது ? சனிக்கிழம தான வாங்கிட்டு வருவா ... இன்னிக்கி என்னவாம் ..என்று வெட்கச் சிரிப்போடு வாங்கி வைத்த மனைவியின் கன்னத்தைச் செல்லமாக கிள்ளி விட்டு குளிக்கப் போனான் . இரவு நன்றாகத் தூக்கம் வந்தது .

மறுநாள் வழக்கத்தை விட வேகமாய் கடை திறந்து வேலையை ஆரம்பித்தான் .அவன் கடைக்கு அடுத்து ஒரு மளிகைக் கடை, ஒரு ஜெராக்ஸ் கடை .ஒரு கல்யாணமண்டபம் ,அதற்கும் அப்பால் வக்கீல் சீதாராமன் வீட்டை அடுத்து அவள் குடியிருக்கும் வீடு தான் , அது ஒரு அபார்ட்மென்ட் , மொத்தம் இருபது வீடுகள் ,அவள் இருப்பது முதல் பிளாட்டில் தான் ,

முருகேசன் கடை திறக்கும் போது நேரம் ஏழரை மணி இருக்கும் . வழக்கமாக எட்டு மணிக்கு தான் போவான், இன்று என்னவோ ஒரு இனம் புரியா உல்லாஷம்.யதேச்சையாகத்தான் பார்த்தான் .... அவள் பிளாட்டின் முன்புறம் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது . நெடு நேரமாய் நின்று கொண்டிருக்கும் போல இவன் இப்போது தான் பார்கிறான் .யாரோ வீடு மாற்றிக் கொண்டு போகப் போகிறார்கள் போல !

அந்த பிளாட்டில் இப்படித்தான் அடிக்கடி ஒரு வீட்டில் மட்டும் இப்படி நிகழும் . ராசி இல்லாத வீடாம் அது ... என்ன ராசியோ ?! என்ன நம்பிக்கையோ ? போங்கடா நீங்களும் உங்க நம்பிக்கையும் ...! கிண்டலாய் உள்ளே நகைத்துக் கொண்ட முருகேசன் தன் வேலையைப் பார்க்கலானான் .நேரம் போய்க் கொண்டே இருந்தது . அந்தப் பெண்ணைக் காணோம் ...! குழந்தையையும் பள்ளிக்கு கூட்டிக் கொண்டு போனதாகத் தெரியவில்லை பெட்டி போடப் பட்ட துணிகளையும் வாங்கிக் கொண்டு போனதாகத் தெரியவில்லை . சரி வரும் போது வரட்டும் .... இவன் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே ;

அந்த லாரி தாண்டி முகமெல்லாம் சந்தோசம் பூத்துக் குலுங்க அவள் ....அவள் தான்.... அந்தப் பெண் வந்து கொண்டிருந்தாள் .... இவனது கடையை நோக்கி ...துணி வாங்க வருகிறாள் போல ... வரட்டும் ... வரட்டும் ... அவளது சந்தோசம் ' முருகேசனையும் தொற்றிக் கொள்ள ... அப்போது சூரியன் எப் எம் மில்

"வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ" பாடல் ;

முடிந்து

"வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே"

பாடல் மாயவரம் ராதா ,மதுரை சுப்பு , தேனாம் பேட்டை மல்லிகா ,ஒன்டிபுதூர் அம்பிகா ஆகியோருக்காக ஒலி பரப்பிக் கொண்டிருந்தார்கள்,மெல்லத் தனக்குள் பாடிக்கொண்டே அவள் கிட்டே வரக் காத்திருந்தான் ... வந்தாள் ... வந்தவள் ... அவன் மாமியாரிடம் . எவ்ளோ ஆச்சு ஆயா ? என்று கேட்டு பணம் தந்து துணி வாங்கி நகரப் போனாள்.

வக்கீல் சீதாராமன் மனைவி காம்பௌண்டில் இருந்து எட்டிப் பார்த்து சத்தமாய் கேட்டாள்...

"ஏண்டிம்மா கல்பனா .. எத்தனை மணிக்கு கிளம்பறேல் ...சாமான் சட்டேல்ல்லாம் பாத்து பாக் பண்ணிட்டேலா இல்லியோ ?"

அவள் மாமிக்கு என்ன பதில் சொன்னாலோ !!!

அவளது வீட்டைப் போலவே இப்போது இவனது மனமும் காலியாக .... ஒரு கணம் முகத்தில் சந்தோசம் வடிந்து சங்கடம் காட்டி நின்றான் ...சில நிமிட வெறுமைக்குப் பின் சின்னதாய் உள்ளே ஒரு குரல் ஓ... கல்பனாவா ...இதான் உன் பேரா ..? என்று மெல்ல சொல்லிப் பார்த்துக் கொண்டது.

இந்தக் கல்பனா இனி அவன் கடை தாண்டி .. அந்தப் பக்கம் போக மாட்டாள் .இந்தப் பக்கமும் போக மாட்டாள் ... ஏன் இடப்பக்கம் ... வலப்பக்கம் என்று எந்தப் பக்கமும் போகவே மாட்டாள் ... அவள் இனி அந்தத் தெருவில் இருந்தால் தானே எப்பக்கமும் போவதற்கு ? முருகேசனின் மன பரபரப்பு இந்த முறை இப்படி தான் ஓய வேண்டும் போல ?!

இப்படி எல்லோருடைய வாழ்விலும் நிகழ்வது உண்டு தானே !

வாழ்வின் அன்றாட சுவாரஸ்யங்களுக்கு இப்படி ஒரு கல்பனாவோ ...முருகேசனோ தப்பி விடக் கூடுமா?"எதுவும் கடந்து போகும்" சற்று அதிகப் படியான மேற்கோளாய் தோன்றினாலும் ஆற்றில் மிதந்து கடக்கும் பூக்களாய் ...இலைகளாய் நம்மைக் கடந்து கொண்டிருக்கும் சில விஷயங்கள் நம்மில் சில பாதிப்புகளை ஏற்படுத்திச் செல்வது மறுக்க இயலாத நிஜமே!

Thursday, February 4, 2010

பந்தநல்லூர் ராஜகுமாரி...

இந்த அறையில் பெரிதும் கவனம் கலைக்காத வகையில் வடக்குப் பார்த்து தென்புறச்சுவற்றில் ஒரு ஆணி அடிக்கப்பட்டிருக்கிறது.

வீட்டின் வரவேற்பறையை ஒட்டி சற்றே உட்புறமாக கொஞ்சம் நடுத்தர அளவிலிருந்த அந்த அறையில் நாற்காலி மட்டத்தில் அடிக்கப்பட்டிருந்த அந்த ஆணியைக் குறித்து விமலகீதாவுக்கு எந்த வித அபிப்ராயமும் இது வரைஇல்லை.அவள்அதை எப்போதேனும் கவனித்தாளோ இல்லையோ?!

குடி வந்த புதிதில் அந்த ஆணியில் டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியை ஒத்த ஒரு பெரிய நிலைக்கண்ணாடி மாட்டி வைத்திருந்தாள்,என்ன நினைத்தாலோ இப்போது அதை கழற்றி வேறிடத்தில் மாட்டிவிட்டாளென்று நினைக்கிறேன்.

விமலகீதா அக்கம் பக்கம் யாருடனும் தேவை இன்றி பேசாத வகை மனுஷி ...

அவள் புருஷன் சொட்டு நீர்ப்ப்பசனம் இன்ஜினியர்.அவனைப் பற்றி அப்படிச்சொன்னால் தான் இங்கிருப்பவர்களுக்கு தெரியும்,சொந்தத் தொழில் என்று சொட்டு நீர்ப்பாசனத்தை கட்டிக் கொண்டு அழுததில் ஆற அமர கட்டினவளைக் கொஞ்சும் அவகாசமெல்லாம் இல்லாதவனாகிப் போனவன் அவன்.

விமலகீதாவும் புருசனையும் அவனது அலட்சியத்தையும் கண்டு அனாவசியமாய் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை

இந்த இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சம்பந்தமில்லாதவர்களாய் விநோதமாய் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தார்கள் இங்கே.

நானும் இவர்கள் இங்கு குடியேறிய நாள் தொட்டு கவனித்துக் கொண்டே தான் வருகிறேன் விமலியும் அவள் புருசனும் ஒரு நாளேனும் அந்யோன்யமாய் சிரித்துப் பேசிக்கொள்ளமாட்டார்களா என்று! அதொன்றும் நடந்தபாடில்லை,ஒரு சின்னச் சிரிப்பு ,அதிகம் வேண்டாம் ஒரு சன்னமான கேலி,மிஞ்சி மிஞ்சி எப்போதேனும் போனால் போகிறதென்று மெலிசாய் ஒரு ஊடல் ,ரொம்ப முத்தினால் ஒரு சண்டை .

எப்போதும் என் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கிக் கொண்டே தான் இருக்கிறார்கள் இருவருமே .

ஒழியட்டும்...இலவு காத்த கிளியாய் ஆணியில் தவமிருக்கிறேன் நான் !!! இப்படித்தான் இவர்கள் விஷயம் எனக்கு பெருத்த மன உளைச்சலாகிப்போனது.இங்கிருந்து விலகிப் போகலாம் என்று பார்த்தால் அதற்கு எனக்கு விதியில்லை .

எனது எல்லைகள் வரையறுக்கப்பட்டவை ,இந்த ஆணி மட்டத்திலிருந்து பார்த்தால் எதிர்த்தாற்போல எதிர் வீட்டின் .
பெரிய ஜன்னல் தெரிகிறதா ?! நேர்கோடு போல இங்கிருந்து அந்த ஜன்னல் வரை மட்டுமே நான் போய் வர முடியும்,சில நாட்கள் ரொம்பவும் போர் அடித்தால் அந்த ஜன்னல் வரையிலும் போய் ஜன்னலில் இருந்து ஜிங்கென்று தாவிக்குதித்து அந்தப் பக்கம் ஈசி சேரில் நிசப்தமாய் ஆடிக் கொண்டிருக்கும் தாத்தாவுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பேன்.

எப்போதாவது என் கணவனின் ஞாபகம் வருகையில் மனசு கனமாகிப் போகும்.பாருங்கள்...இப்போதும் அவரைப் பற்றி சொல்லும் முன்பே என் குரல் மெலிந்து கண்கள் கரிக்க ஆரம்பித்து விடுகின்றன. அழுது கொண்டே என் கதையை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

எத்தனை ஆண்டுகள் ஓடி விட்டன.இப்போதும் அவர் முகம் என் நெஞ்சில் பதித்த அச்சாய் .

அவரை நினைக்கையில் எல்லாம் பாகாய் உருகும் நெஞ்சம் ;அனலில் கரையும் பனிமலையாய் அவர் நினைவுகள் என்னில் ஆறாய்ப் பெருகினால் நான் மெலிதான விசும்பலுடன் தேம்பி அழத் தொடங்குவேன் ,யார் காதிலும் விழப் போவதில்லைஎனினும் என் துக்கம் எனக்கு.

எந்த ஜென்மத்தில் நான் செய்த சுண்டு விரல் புண்ணியமோ அப்படி ஒரு கணவன் எனக்கு வாய்க்க...என்ன தவம் நான் செய்தேனோ!


ஹூம்...

பந்தநல்லூர் ராஜகுமாரியைத் தெரியுமா உங்களுக்கு?!

சுதந்திரத்துக்குப் பின் வல்லபாய் படேல் ஜமீன்களை எல்லாம் நிர்மூலமாக்கி இந்தியாவை ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தாரில்லையா? அப்போது அதிகாரமிழந்து போன ஒரு ஏழை ஜமீனின் ராஜகுமாரி அவள்.

பாவம் ரொம்பவும் சின்னப்பெண் ,வயது பதினைந்து தாண்ட விடமாட்டார்கள் அப்போதெல்லாம்,மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போலப் பெண்ணுக்கு தாலிக்கயிறு,பாரம் சுமக்க அவளை இப்படித் தான் பழக்க ஆரம்பிப்பார்கள்,அட அப்படி ஒரு கயிற்றுக்கும் கதியற்றுப் போனவளாய் காலிப்பெருங்காய டப்பாவான ஜாமீன் வீட்டில் இவள் பதினேழு தாண்டியும் பருவம் தந்த யவ்வனம் சுமந்து நின்றதில் ஜமீன்தாருக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வர தன் மகள் ஈடேற முடியாமலே போவாளோ என்ற பயத்தில் அரண்டு போய் மீட்சியின்றி ஒரு அடைமழை நாளில் மாண்டும் போனார்.

தனித்தவள் ஆனால் ராஜகுமாரி ;

சொந்த பந்தங்கள் ...ஒத்த அந்தஸ்துகள் கல்லில் நார் உறிப்பினும் ஒன்றும் தேறாதென்று ஒதுங்க,உற்ற உறவுகள் எதற்குச்சுமையென கை கழுவ ,அவளிருந்த ஊர் ஜமீன் மரியாதையில் எட்டி நிற்க...இன்னும் தன்னிகரிலா தனித்தவள் ஆயினள் ராஜகுமாரி .

தகிக்கும் தனிமை விஷ சர்ப்பம் போல் அவளோடு ஊர்ந்து உறுத்திய நாட்களொன்றில்

வந்தான் ஒரு ராஜகுமாரன்,

நிஜத்தில் ராஜன் அல்ல ;அவள் அகத்தின் ராஜனாய் பட்டாளத்து உடையில் பகட்டின்றி சிரித்து தண்ணீர் கேட்டுக் குடித்தவனின் கைத்தசை முறுக்கில் கண் அமிழ,கடைந்தெடுத்த தேக்காய் திரண்டு உருண்ட தோளில், தன் பலாச்சுளை கன்னம் பதித்து சொல்லாத் துயர் சொல்லிச்...சொல்லி அழும் ஆசை கொண்டாள் ராஜகுமாரி.

இந்த ஊர்க்காரன் இல்லை அவன்...எங்கு போய்க் கொண்டு இருப்பவனோ ..இடைவழியில் தாகமென்று வந்தவன்...என்ன நினைத்தானோ ?! ஏனிங்கு தங்கினானோ ?பொல்லாத அவள் விதியோ...பொருந்தித் தான் போயிற்றோ...ஜாமீன் பெருமைகளை ஒரு கண்ணீர்ச் சொட்டில் சேகரித்து வீதியோரம் சுண்டி விட்டு சொக்கிப் போய் அவனிடம் தஞ்சமெனசரணடைந்தாள் அன்றே அந்த ராஜகுமாரி .

ஊர் எது? பேர் எது ?... தெரியாது.அண்ணலும் நோக்கி அவளும் நோக்கிய பின் கை பிடித்து கூட்டிப் போனான் ஊர் ஒதுங்கிய எல்லைக் கோயிலுக்கு,பொம்மக்காவோ..திம்மக்காவோ எவளோ ஒருத்தி எல்லைத்தெய்வமென்று கல்லாய் சமைந்திருக்க ;ஜென்ம ஜென்மமாய் காத்திருக்க முடியாதவன்போல் சங்குக் கழுத்து வளைத்துக் கட்டினான் திருமாங்கல்யம் .

மங்கையின் கண்கள் மளுக்கென்று உடைப்பெடுக்க ;உள்ளம் அறிந்தவன் போல் சோகம் உணர்ந்தவன் போல்,உற்றவனாய் உரியவனாய் தோள் சாத்தி தலை வருடி ஆசை தீர அழ விட்டான் ,யாரோ...அவன் யாரோ இன்றவளின் ஆன்மச் சிறகசைத்துப் பறக்க விட்ட பட்டமாக்கினான்,மனம் லேசானது.

அன்றே புறப்பட்டு ,அங்கங்கே உண்டு உறங்கி நடந்தே அவனூருக்கு அழைத்துப் போனான்.மாங்கல்யம் மஞ்சள் மணந்ததால் அவன் கணவனெனும் நினைப்பு வரினும் மிச்ச சொச்ச நேரமெல்லாம் அவள் மனம் மெச்சும் சிநேகிதனாய் களிப்பான கதைகள் பேசி நடந்து நடந்து ஓய்ந்த ஒரு உச்சிப் பொழுதில் அவன் ஊரை அடைந்தார்கள்.

அழகான ஊர் ,இவள் ஊரைப் போல இல்லை அவ்வூர்,இங்கு அவள் ராஜகுமாரி இல்லை என்பது பெருத்த நிம்மதி தந்தாலும் அதை விட ,தோழமை பொங்கும் அன்பான கணவனின் மனைவி என்ற நினைப்பில் தித்தித்துக் கிறங்கிப் போய் எந்நேரமும் அவனை ஒட்டியே இழைந்து நின்றாள் அவள்,

எல்லாம் சில பொழுதே ;நாத்தி ஒருத்தி சேதி அறிந்து பதை பதைத்து ஓடி வரும் வரை மட்டுமே!

ஜோடிகளைக் கண்ட மாத்திரத்தில் அலையக் குலைய ஓடி வந்து மூச்சு வாங்க நின்ற நாத்தியின் கண்கள் விதிர் விதிர்த்து நிலைத்தது பசு மஞ்சள் காயாத இவள் தாலிச்சரட்டில் தான்.நிஜம் போல பொய்யாய் சிரித்து ஆலாத்தி சுற்றி நெற்றியில் பொட்டிட்டு அவள்...என் நாத்தி ;

"வலது கால் எடுத்து வைத்து வாம்மா "

என்று என்னை அழைத்தது இதோ இந்த வீட்டின் வாசலில் நின்று கொண்டு தான்.

"ஆமாம் அந்த பந்தநல்லூர் ராஜகுமாரி நானே தான்.ஏன் என்னை அப்படி உற்றுப் பார்த்து தேடுகிறீர்கள்?!"

என் கதையை நானே சொல்லி வந்தாலும் ஞாபகங்களின் பாரம் தாங்காமல் ,அடக்க மாட்டாமல் அழுகை வருகிறது எனக்கு

என் அம்மா ஜீவித்து இருந்திருந்தால் அவளுக்கு என் நாத்தியின் வயதிருக்கும்.என் கணவனின் ஜாடை தான்,அந்த வயதிலும் வெகு சௌந்தர்யமாய் இருந்தாள்,காராம்பசுவைப் போல அவள் கண்கள் கருணை பொழியக் கூடியவை என்று நம்ப வைக்கும் சாந்தம் காப்பது அவளுக்கு இயல்பாகிப் போனதோ என்னவோ !

வந்த மூன்றாம் நாளே என் கணவன் மறுபடி பட்டாளத்திற்கு அழைக்கப் பட்டார் என தந்தி வந்தது,துடித்துத் துவண்டேன் நான்,இன்னும் எதுவும் இல்லை எங்களுக்குள்!,பிள்ளைச் சிநேகிதம் போல பேசுவதும் சிரிப்பதும் காதல் மிஞ்சிப் போனால் இருவரும் கைகளை கோர்த்துக் கொள்வதும் முழுமை பெற்ற தாம்பத்யம் ஆகுமோ !?

'இம்மென்றால் 'அழுகை வந்தது எனக்கு அவரை பிரிந்து அறியாத தெரியாத மனிதர்களுடன் இந்த ஊரில் எத்தனை நாள் தனித்திருக்க நேருமோ ! பரிதவிப்பிலும் சுய பட்சாதாபத்திலும் சேதி கேட்ட நொடி முதலாய் உழன்றேன் நான்.அங்கத்திய நிலைமையும் அப்படித்தான்..ஆனாலும் ஆணாயிற்றே அழவில்லை...உருகவில்லை...தவிக்கவில்லை என்பதாக ஒரு நாடகம் நடத்த தெரிந்திருந்தது அவருக்கு.

இதே வீடு தான்,இப்போது வாஸ்து பார்த்து குளியலறையாகிப் போன அந்த அறையின் நடுவில் ஒரு மரக்கட்டில் இருந்தது அப்போது,என் கணவரோடு நான் இருந்த இரண்டு நாட்களில் அவர் கட்டிலிலும் நான் தரையில் ஜமுக்காளம் விரித்தும் ஏதேதோ கதைகள் பேசியவாறு அங்கு உறங்கி இருக்கிறோம்,

நாள் கிழமை பாராமல் கல்யாணம் தான் கழித்தாகி விட்டது ..இந்த விசயத்திலும் அவ்விதமாய் அலட்சியப் படுத்தினால் அவரது அக்காவின் கோபம் அளவிலாமல் மீறுமோ என்று அவளிஷ்டப் படி நாங்கள் நல்ல முஹூர்த்த நாளுக்காய் தள்ளி நிறுத்தப்பட்டிருந்தோம்.

அவர் பட்டாளத்திற்கு புறப்பட்ட நாளன்று மதியம் நாத்தி வீட்டு விருந்து எங்களுக்கு,சீராகச்சம்பா அரிசிச்சோறும் ஆட்டுக்கறியும்,கோழி குழம்பும் ,குளத்து மீனுமாய் அமர்க்களமாய் விருந்தளித்தாள்,அவள் மகள் மீனாட்சி எனக்கொரு ஆப்த சிநேகிதியாய் இருந்திருக்கக் கூடும்...நான் அவளுக்குப் போட்டியாய் வந்திரா விடில்!

எதைக் கண்டேன் நான் !இப்படி ஒரு மகளை தம்பிக்காய் நாத்தி வளர்த்து வைத்துக் காத்திருப்பாள் என்று நான் எதிர்பார்த்தேனா!!!அவள் கண்களில் கலக்கம் இருந்தும் என்னிடம் குரோதம் இல்லை,நடு நடுவில் தயங்கித் தயங்கிப் பேசிக் கொண்டிருந்தாள்.பாவமாய் இருந்தது எனக்கு.

"மாமனைக் குறித்து என்னென்ன ஆசைக்கற்பனைகளை சுமந்து கொண்டிருந்தாளோ இந்த அப்பாவிப் பெண்!!! "எதுவும் சொல்ல முடியாமல் மெல்லவும் முடியாமல் மௌனித்தேன் நான்.

பலமான விருந்து தான் ஆனாலும் சரியாக உண்ணாமலிருந்த எனைக் கண்டு நாத்தி வெகு பிரியமாய் உளுந்து வடைகள் நிறைந்த கிண்ணம் ஒன்றை எடுத்து வந்தாள்,எண்ணெய் வடியாத சூடான பொன்னிற வடைகள்...;

"இதையாவது கொஞ்சம் பிட்டு வாயில் போட்டுக்கொள்,என் தம்பியின் குலம்கொழிக்க வாரிசுகளை பெற்றுத் தரப்போகிறவள் இல்லையா நீ?இப்படி கிள்ளிக் கிள்ளி சாப்பிட்டால் எப்படி? கேலியுடன் சிரித்துக் கொண்டே கிண்ணத்தை என்னருகில் வைத்து விட்டு தம்பியிடம் ;

"அவள் சாப்பிடட்டும் ,நீ வா நாட்டாமைக்காரர் வீடு வரை போய் வந்து விடுவோம்,இதை விட்டால் இனி பொழுதிருக்காது அங்கே போக,திருவேங்கடம் வந்திருப்பதாகச் சொன்னார்கள்.போய் சுருக்கத் திரும்பி விடலாம்,

"திருவேங்கடமா? கடல் தாண்டிப் படிக்கப் போனானே?! என்னருமை நண்பன்.முகமெல்லாம் சிரிப்போடு குதூகலித்து என் கணவர் கண்ணசைவில் என்னிடம் விடை பெற்று தன் அக்காவோடு வெளியில் நடந்தார்.

உளுந்து வடைகள் அபார ருசி, மீனாட்சி நான் மறுக்க மறுக்க பிரியத்துடன் நிறைய வடைகளைத் தின்ன வைத்துக் கொண்டே இருந்தாள்,

"அவர் வந்து சாப்பிட மாட்டாரா?!,சும்மா இரு மீனாட்சி ,நானே முழுதாய் தின்று தீர்த்து விடுவேன் போல,சரியான தீனிப்பண்டாரம் என்று அவர் என்னை கேலி செய்யப் போகிறார்." என்று நான் தவிர்க்க நினைத்தும் அளவு மீறித்தான் உண்டு விட்டேன்.

மீதி நடந்ததெல்லாம் எனக்கு அத்தனை ஞாபகமில்லை,

என்னவர் வந்ததும், உறக்கமும் விழிப்புமாய் தலை சுற்றித் துவண்டிருந்த என்னைக் கண்டு பதறியதும்,

"என்னக்கா இது? இவளுக்கு என்ன? ஏன் இப்படி இருக்கிறாள்? "என்று பரிதவித்ததும்,அவரது அக்கா ;

"ஒன்றுமில்லையடா ... வடை ருசியாயிருக்கிறதென்று கொஞ்சம் அளவு மீறித் தின்றிருப்பாள்...எண்ணெய்ப் பலகாரங்கள் ஆச்சுதே ! வயிற்றுக் ஒத்துக் கொள்ளாமல் தலை சுற்ற வைத்து அசத்தி இருக்கும் ! நீ ஒன்றும் பயந்து போகாதே" என்று தம்பியை சமாதானம் செய்ததும் கூட அசங்கள் மசங்கலாய் தான் நிழலாடுகின்றன.

அப்புறம் என்ன ஆனதென்று நான் சொல்லத்தான் வேண்டுமா?!

தன் கை வளைவில் என்னை தாங்கிக் கொண்டு புறப்பட மனமற்றவராய் கடைசி நிமிடங்களில் என் கணவர் ;

"அக்கா குடிக்க தண்ணீர் கொண்டு வா" என்று அக்காவை சமையல் உள்ளுக்கும்,துவைத்த துண்டெடுக்க மீனாட்சியை கொல்லைக்கும் அனுப்பி விட்டு ,நானிருந்த கோலம் தாங்காது ஒரு பச்சிளம் குழந்தையை பத்திரம் போல் உடலோடு அணைத்துத் தழுவி தூக்கிக் கொள்வதைப் போல மயக்கமும் விழிப்புமான பரவச நிலையிலிருந்த என்னை தன்னோடு சேர்த்தணைத்து "மலரினும் மெலிதாக..."

மேகங்களின் ஊடே பஞ்சாய் மிதப்பதைப் போல...உடல் நீங்கி உயிர் காற்றில் கரைவதைப் போல் ;

மிக மிக மெத்தென்று உதடுகளால் ஒரு மென் ஸ்பரிசம் ,அதை முத்தமென்று சொல்வார்களாமே!வலிய ஆணின் வலிக்காத ஒரு முத்தம்.

உருகி ...உறைந்து...உருகினேன் நான்.

கனவில் நிகழ்வதாய்...

கண்மணி...!( அவர் அப்படித்தான் அழைத்துக் கொண்டிருந்தார் என்னை);

"ம்..."

"நான் போய் வரட்டுமா?!"

ம்...ம்ஹூம்;

நீ...நீ...பத்திரமாய் இருப்பாய் தானே நான் வரும் வரை!?என்னிலிருந்து பிரிய முடியாதவராய் அவர் தவிக்கும் போதே நாத்தியும் மகளும் உள்ளே வர,மனமற்று என்னை விட்டு விட்டு கடைசி கேள்விக்கு விடை பெறாமலே போய் விட்டார் .ரயிலுக்கு நேரமாகிறதே!

அந்த நாளுக்குப் பிறகு அவரைக் காணவில்லை நான்.

நாத்தி எத்தனை கெட்டிக்காரி என்று நான் உணர்ந்து கொள்ள அவள் இத்தனை மெனக்கிட்டிருக்க வேண்டுமோ?! சொன்னால் என் கதை கேட்டு நீங்களும் அழக் கூடுமோ என்னவோ?!அவள் முகம் தாய்மை நிறைந்தது,பாவி...அந்த முகத்தை வைத்துக் கொண்டு தான் அவளால் தன் நாடகத்தை வெற்றிகரமாக நடத்திக் கொள்ள முடிந்தது .

அவர் பட்டாளம் சென்ற பின்னும் தொடர்ந்து மூன்று நாட்களாகியும் என்னால் தலை தூக்கிப் பார்க்கவே முடியாமலானது,சதா மயக்கத்தில் இருந்தேன்,என்னைக் குறித்து அச்சப் படும் அளவேனும் எனக்கு புத்தி தெளிந்திருக்கவில்லை.கிராதகி சாப்பிடு..சாப்பிடு என்று உருகி உருகி உபசரித்தாளே எதைக் கலந்து உண்ண வைத்தாளோ!

புதுப் பெண்ணாயிற்றே என்று என்னைப் பார்த்துப் போக வந்த ஊர்க்காரர்கள் முன்னில்
பேசக்கூட இயலாதவளாய் நாக்கு குழறிற்று,ரெண்டடி நடக்க மாட்டாமல் நடை பிசகிற்று, கண்கள் சொருகிக் கொண்டு எங்கோ வெறித்து வெறித்து மூட "நான் நானில்லை ...அவள் கைப்பொம்மை" என்றானேன்.

என் கதை இந்தியா சுதந்திரம் பெற்ற சமீபத்திய கதை.பட்டாளத்துப் புருஷன் திரும்பி வரும் முன்னே நான் முடிந்து போனாலும் கேட்பாரில்லை அன்று.

நாத்தி எனக்குப் பேய் பிடித்திருக்கிறதாக கதை கட்டினாள்,உள்ளூர் கோடாங்கி ஒத்துப் பாட...புளிய விளாராலும்,அது கிடைக்காத போது காய்ந்த துவரை மார்களாலும் விளாசு விளாசென்று விளாசித் தள்ளினான் அவன்.சிவந்த என் உடலில் பாலம் பாலமாய் ரத்தக் கோடுகள் கண்ட போது

நான்...நான் ;

அவர் என்னை கடைசி கடைசியாய் மிக மிக மென்மையாய் முத்தமிட்டதையே நினைத்துக் கொண்டு தூக்கத்தில் உலுக்கி எழுப்பப் பட்ட குழந்தை போல விசும்பி ...விசும்பி அழுதேன் ;அழக் கூட சத்தற்றவளாக்கினார்கள் என்னை.

இரக்கமற்ற பாவிகள் !

என் உடலில் காயங்கள் முற்றிப் போன ஒரு நாளில்,உடல் செத்து உயிர் சாகாத என்னை ;நனவும் கனவுமாக அரை பிரக்ஞையுடன் தத்தளிப்பில் தவிக்க ,துள்ளத் துடிக்க குளிப்பாட்டி ஒரு பழைய மர நாற்காலியில் உட்கார வைத்து இதோ இங்கே ...இந்த ஆணியில் தான் தலை சாய்த்து நாடிக்கட்டுப் போட்டு பிணம் என்று சாற்றி வைத்தார்கள் என்னை.

இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை ,

சற்றைக்கெல்லாம் இந்த ஆணியில் தான் என் உயிர் பிரிந்தது.

அன்றிலிருந்து இங்கே தான் இருக்கிறேன்.

என் கணவர் என்ன ஆனார்?

என்னைத் தேடினாரா? ...நிச்சயம் தேடி இருப்பார்,இந்தப் பாசப்பழிகாரி எதையாவது சொல்லி பசப்பி இருப்பாள்!

நானாக அனுமானம் செய்து கொண்டவளாய் அமைதியானேன்.

என்ன செய்து விடமுடியும் நான்!

ஆவிகள் பழிவாங்குவதெல்லாம் சினிமாக்களில் சாத்தியமாகலாம்.அதென்னவோ நான் அப்படி முயலக் கூட இல்லை,என் வரையில் ஒரு நல்ல தம்பதிகள் இந்த வீட்டில் குடி இருந்து நான் வாழ விரும்பிய வாழ்க்கையை எனக்கு வாழ்ந்து காட்ட மாட்டார்களா என்ற ஏக்கம் நிரம்பிப் போனவளாய் இன்னும் காத்திருக்கிறேன் இந்த ஆணி மீது!

யாராவது வருவார்களா?

உங்களுக்குக் கல்யாணமாகி விட்டதா ?...நீங்கள் வருகிறீர்களா இந்த வீட்டுக்கு குடி இருக்க !?

முகவரி இது தான் ;

கதவு எண் 210 ,
சிவன் கோயில் தெரு ;
இளையரசனேந்தல் ;
கோவில்பட்டி தாலுகா.

Monday, February 1, 2010

கக்கூசும் ஒரு உரிமைப் போராட்டமும் (!!!)




தாத்தா குளித்து ஒரு மாதமிருக்கும் ...

இப்போதெல்லாம் குளிக்க ரொம்பவே அசௌகரியப்பட்டார் ,பல்லும் கூட விளக்குவதில்லை,வேப்பங்குச்சி தான் அவருக்கு பிரஸ்,கிட்டக் கொண்டு போனாலே
'த்தூவென்று' துப்ப ஆரம்பித்ததும் ,எதற்கிந்த அனத்தம் பிடித்த வேலையென்று அம்மாவோ சித்தியோ பல்லை விளக்கிவிட அவரிடம் போவதில்லையென சபதம் எடுத்துவிட்டார்கள் இன்று காலை பத்துமணி முதல் .


வீட்டுக்குள் கக்கூஸ் இருந்தும் தாத்தா அதில் ஒரு தடவையும் உட்காரப் போனதில்லை.எப்போதும் கண்ணன்கோயில் கம்மாக்கரை தான்.காலங்காலையிலேயே போய் விட்டு தண்ணீர் பதனமாய் இருந்தால் அங்கேயே குளிப்பையும் கூட முடித்து வந்து விடுவார் , தாத்தா வீட்டுத் திண்ணை நல்ல உயரம்,அகலம் அகலமான ஐந்தாறு படிகள் ஏறித்தான் வீட்டுக்குள் நுழைய முடியும், பித்தளைப்பூணிட்ட கம்பை ஊணிக்கொள்ள ஆரம்பித்த நாள் தொட்டு கம்மாக்கரை செல்வதிலும் சுணக்கம் தான்.

இந்த ஒரு மாதமாய் பாட்டிக்குப் பிடித்த பல்வேறு அனர்த்தங்களில் ஒன்று ;தாத்தா இந்த தெருவில் யார் வீட்டு முன் மலம் கழித்தார் ,எங்கே ஒன்னுக்கிருந்தார் என்று
யாரேனும் கொண்டு வரும் புகார்களை ;


இங்கயும் உண்டுமா கொடுமை ரேஞ்சில் கன்னத்தில் கை பதித்துக் கேட்பது;

அன்றைக்கு அப்படித்தான் செல்லத்தாயம்மாள் வீட்டுத் திண்ணையடியில் விட்டை விட்டையாய் பெரிய சைஸ் ஆட்டுப் புழுக்கைகள் போல தாத்தா இயற்கை கடன் கழித்து விட...அந்த அம்மாள் விக்கி விரைத்துப் போய் திக் பிரமை அடைந்து ;


"என்ன மாமா...இப்படிச் செய்யுறாரு !? வீட்டுக்குள்ள தான் கக்கூசு இருக்குல்ல ,அங்கன கழிக்கலாம்ல! நெடுங்கண்டம் ...நெடுங்கண்டமா மூணு ஆம்பளைப் புள்ளைங்களும் மாசா மாசம் காசு அனுப்பி வீட்டுக்குள்ள கக்கூசென்ன...பளிங்கு கல்லு பதிச்ச ஜல்ஜாரி (கொச்சைத் தெலுங்கில் பாத்ரூமைக் குறிக்கும் சொல் )என்ன?இங்கன வந்து இப்பிடிப் பண்ணி வச்சாருன்னா ... இப்ப நான் என்ன செய்யுவேன்?! "

என்று புலம்ப ஓடைப்பட்டி அத்தை அந்த நிமிஷமே கர்மமே கண்ணாயினளாய் பாட்டியிடம் வந்து போட்டுக் கொடுக்க ,

அந்தம்மாள் பாட்டியிடமே நேரடியாகப் புலம்பியிருந்தாலும் பாட்டி சரி..சரி போ என்று சொல்லியிருக்கக் கூடும் ,இப்படி இன்னொருத்தர் வந்து சொல்லும் படியாயிற்றே என்ற விசனத்தில் பாட்டியின் தன்மான உணர்வு திடுதிப்பென்று சிலிர்த்து எழுந்து விட்டது ,

ஊருக்குத் தெரிந்தும் தெரியாத இன்னொரு ரகசியம் வேறு இதில் இருந்ததில் ...பாட்டி தன் பின் கொசுவமிட்ட கோடம்பாக்கம் சேலையை நாலைந்து முறை கொசுவி கொசுவி நீவி விட்டு ஏற்கனவே சுமாராக கொப்பு வைத்து சொருகியிருந்த தலை மயிரை வெடுக்கென பிரித்து உதறி மறுபடி அள்ளிச் சொருகிக் கொண்டு மதில் மேல் நின்று பார்ப்பதைப் போல தன் வீட்டு உயரம் அகலமான படிகளில் மேல்படியில் இடுப்பில் இரண்டு கைகளையும் ஊன்றிக் கொண்டு சண்டி ராணி மாதிரி போஸ் கொடுத்து நின்றவாறு ,

"ஏய் ..செல்லத்தாயி...ஏ.......ஏய்ய்...செல்லத்தாயி " என்று கூப்பிட ;

ஏற்கனவே சில வருடங்களாய் முதுகுத் தண்டு வளைந்து கூனியே நடந்து பழகி விட்ட செல்லத்தாயம்மாள் தன் விதியை நொந்தவளாய் தன் வீட்டு குட்டைப் படிகளின் மேல் சப்போர்ட்டுக்கு நிலையைப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்க முயற்சித்தவாறு

என்ன கிருஷ்ணம்மா ..ஏன் இப்பிடிக் கத்தற? மெல்லத் தான் கூப்புடேன்...என்று சொல்லிக் கொண்டே
வந்து நின்று கொண்டாள்.

"இந்தா பாரு செல்லமாக்கா...இப்ப நீ என்ன சொன்னயாம்? ஓடப்பட்டி வந்து சொல்லிட்டுப் போறா,ஒரு பெரிய மனுஷன் இம்புட்டு இருந்துட்டாருன்னா..அள்ளிப் போட்டு போவியா?தெருவுல போறவுங்க..வாரவுங்க கிட்டல்லாம் புகார் சொல்லிக் கிட்டிருக்கியாம்?! என்னா சங்கதி?! "

அதட்டலாய் பற்களை கடித்துக் கொண்டு பாட்டி கேட்க ;

முதுகு கூனினாலும் ரோஷம் கூனாத செல்லத்தாயி பாட்டி ;

"அதென்ன அப்பிடிச் சொல்லற கிருஷ்ணம்மா?இப்ப நான் என்னா சொல்லிட்டேன்? கக்கூஸ்ல இருக்கக் கூடாதான்னு தான கேட்டேன்.இதுல என்ன இருக்கு ! வீட்டுக்குள்ள இருக்கு கக்கூசு இத நாஞ்சொன்னா குத்தமாக்கும்?!


அதற்குள் 'சபாஷ் சரியான போட்டி' என்று தெருஜனமெல்லாம் வாசலுக்கு வந்தாயிற்று.

குத்தமா இல்லையோ...நீ அப்பிடிச் சொல்லிருக்க கூடாது செல்லம்மாக்கா! நான் தாலி கட்டிட்டு வந்தவங்கறதுக்காக எனக்கு மட்டுந்தான் பாத்தியதையா என்னா? ஏன் உனக்கில்லையா அவருக்குச் செய்யுற முறம ?! (முறைமை) பாட்டி ஏகதேசமாய் தெருவென்றும் பாராமல் தேங்காய் உடைத்த கணக்கில் அந்தரங்கத்தை போட்டு உடைக்க .

தெரிந்த ரகசியமேஎன்றாலும் புள்ளி விவரமாய் தெரிந்து கொள்ளும் ஆவலில் சில பல தலைகள் இரு வீட்டு வாசல்களுக்கிடையில் மூண்டு விட்ட சண்டையை விலக்கி விடும் பாவனையில் ஒட்டி வந்து காதைத் தீட்டிக் கொண்டு நின்றன.

அதில் நீலியாவும் ஒருத்தி;

நீலியா என்றதும் யாரோ இளம்பெண் என்று நினைத்து விட்டீர்களா?

அவளுக்கு இருக்கும் எழுபது வயது ;

பாட்டி கல்யாணமாகி புதுப்பெண்ணாய் இந்த வீட்டுப்படி ஏறிய நாள் தொட்டு நீலியாவும் கூடவே இந்த வீட்டுக்கும் வயலுக்குமாய் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறாள்.நல்ல நாள் பொல்லா நாள் என்றால் சாப்பிட்டு அசந்து வரும் பின் மத்தியானத்தில் தாத்தாவின் தீப்பெட்டி ஆபிஸ் நிழல்கூரையின் கீழ் பெரிய ஆட்டுரலில் சாய்ந்தமர்ந்து எங்களுக்கெல்லாம் முனிக்கதைகளும்,சாமிக்கதைகளும் சொல்வாள்.அவளுக்கு தெரியாமல் எங்கள் வீட்டில் எந்த ரகசியமும் இல்லை .

நீலியாவைக் கண்ட மாத்திரத்தில் பாட்டியும்;

கேட்டியா நீலியா ...அது சொல்றத...இங்கயும் உண்டுமா இப்பிடி ஒரு கொடுமே! என்னான்னு கேளு ? வீட்டுக்குள்ள கக்கூசு இருக்குதாம் ,அப்ப வீட்டுக்குள்ள தான் உட்கார்ந்து எந்திரிக்கனுமாம்...ஒரு மனுஷன் தன்னுஜாறு(தன் உஷார்) இல்லாமக் கெடந்தாலும் அப்பிடிதான் இருக்கனுமாம்.அத இந்தம்மால்ல சொல்லுது ! என்னான்னு கேளு கதைய!

செல்லத்தாயம்மாள் சொன்னதை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் திணறுபவளைப் போல பாட்டி ஏற்கனவே சிவந்த மூஞ்சி இன்னும் ஜிவு ஜிவுக்க அள்ளி முடிந்த கொப்பை மறுபடி அவிழ்த்து விருட் ..விருட்டென ரெண்டு உதறு உதறி சுருட்டி கூந்தலுள் சொருகிக் கொண்டாள்,(வயதான கிராமத்துப் பொம்பிளைகள் கோபமிருப்பதாக காட்டிக் கொள்ள செய்யும் நடைமுறைகளில் இதுவும் ஒன்றோ என தோன்றத்தொடங்கியது எனக்கு).

நீலியா பாட்டி கட்சி என்ன ஆனாலும் எஜமானியம்மாளாச்சே !

"அந்தம்மாளுக்கு வேலக் கழுதைஎன்ன ? இதுக்கு போயி கூப்பாடு போட்டுக்கிட்டு இருக்காக்கும்? நீங்க நகருங்க முதலாளிம்மா ,நாம் பெருக்கித்தள்ளுறேன்."

நீலியா ரவிக்கை அணிந்து பழக்கமற்ற தனது உடம்பில் முந்தானையை இழுத்து இடுப்பில் செருகி முன்னே வர,

"ஏய் ... இந்தா ...நீ நில்லு "

'அதாரு மூணாவது ஆளு ?!'

தெரு ஜனமெல்லாம் திரும்பிப் பார்க்க ;

ஆவணத்தக்கிழவி(ஆவால் நத்தம் எனும் ஊரிலிருந்து இந்த ஊருக்கு வாக்கப் பட்டு வந்த கிழவி,பெயர் எப்படி மருவி நிற்கிறது பாருங்கள்!) கையில் ஒரு பிளாஸ்டிக் முறத்தை தூக்கிக் கொண்டு ஓடி வந்தாள்.

"எங்க ராசா ...தீப்பெட்டி ஆபிசுல ஓசில தங்கிக்க சொல்லி என்னைய விட்டிருக்காரு.அவருக்கு நான் இல்ல அள்ளிப் போடணும்! நீ தள்ளுடி நீலியாக்கிழவி,நான் அள்ளுவேன் எட்டூரு கக்கூசுன்னாலும் எங்க அய்யாவுக்கு "

சொன்னவள் சடக்கு..புடக்கென்று முறத்தில் அள்ளப் போக நீலியாவுக்கும் ரோசமிருக்காதா என்ன?

"ஏய் ...நீ என்னடி அள்ளுறது ..நான் இந்த வீட்டுல எத்தன நாளா பாடுபடுறேன் ,எனக்கில்லாத உரிமை ஒனக்கா? போ அங்கிட்டு ..எல்லாம் நாங்க பார்த்துகிடுவோம்"

இந்த திடீர் சச்சரவில் திகைத்துப் போனவர்கள் பாட்டியும் ,செல்லத்தாயம்மாளும் கூடத்தான்.

நடந்து போன விசயங்களில் மூர்ச்சையாகி விட்டதைப் போல நின்ற செல்லத் தாயம்மாள் மெல்லத் தன்னுஜார்(தன் உணர்வு) அடைந்தவளைப் போல ,ஏய் போங்க கழுதைகளா ? மானத்த வாங்கிடுவிங்க போல?!நானே அள்ளிப் போட்டுக்கறேன் என்று வீட்டுக்குள் திரும்பி தென்னந்துடைப்பத்தை தேட ஆரம்பித்தாள்.

பாட்டிக்கு மட்டும் ரோசமிருக்காதாக்கும்? நிரூபித்தாகனுமே !

எல்லாருக்குந்தெரிஞ்சி போச்சேன்னு இப்பச்சொல்லுறியாக்கும்? அந்த மனுஷன் எங்க ஊருக்கு என்னைய பொண்ணு பார்க்க வரும் போதே ஒன்ன இல்ல கூட்டிட்டு வந்தாரு,அப்பவே சுனோ(ஸ்னோ ) என்ன? பவுடரு (பௌடர்) என்ன? சும்மா சினிமா நடிக பத்துமினி (பத்மினி) மாரி மினிக்கிகிட்டு இல்ல நீ வந்த?! எனகொன்னும் தெரியாது...நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்னு இருந்தியாக்கும்?!விடுவனா நானு?!

செல்லத்தாயம்மாள் ரொம்பவே நொந்து போனாள்,கண்ணு கூட கலங்கி நிக்கட்டுமா சிந்தட்டுமா என்று கேட்பதைப் போல் அவளது பழுத்து சுருங்கிய கன்ன மேட்டில் தழும்பி நிற்க தலையைக் குனிந்து கொண்டாள்.

இருந்தாலும் இவ்வளவு பேசும் க்ருஷ்ணம்மாளிடம் எதற்கு விட்டுக் கொடுப்பானேன் ,ஏதாவது சொல்லி வைப்போமே என்ற சாக்கில் ;

"இப்ப எதுக்கு போன கத...வந்த கதயல்லாம் சொல்லிட்டிருக்க ,விடேன்.என்னால ஒனக்கென்னா தொந்திரவு?! நான் எம்பாட்டுக்கு செவனேன்னு இருக்கேன்.பெரிய பெரிய பேச்செல்லாம் சொல்லாத கிட்ணம்மா."(கிருஷ்ணம்மாவை தெலுங்கில் இப்படித்தான் அழைப்பது வழக்கம்)

பாட்டிக்கு வகையாக மாட்டிக் கொண்டாயா எனும் எக்களிப்போ என்னவோ?! செல்லத்தாயம்மாளின் கண்ணில் கலக்கம் கண்ட பின்னும் விடத்தோன்றாமல் ;

"ஊரு ஒலகத்துக்கே தெரிஞ்ச கத ...நான் வந்து டமாரமடிச்ச மாதிரி சொல்ற?! மூடிக்கிட்டு அள்ளிப் போட்டுட்டு போயிருக்கலாம்,இப்ப அத சொல்லாத இதச் சொல்லாதன்னா,எனக்கும் மான ரோசமிருக்குமில்ல?!எம்புட்டு நாளா அடக்கி அடக்கி கொமஞ்சிருப்பேன்(குமைந்திருப்பேன்) மனசுக்குள்ள ! " பாட்டி விடாமல் தன் பாட்டில் இன்னுமேதேதோ சொல்லிக் கொண்டு இரைந்து கொண்டிருந்தாள் ;

தாத்தா திடமாய் இருந்த காலத்தில் செல்லத்தாயம்மாள் வீட்டுக்கு போக வர இருந்தாராம்,அப்போதிருந்த புருஷ பயத்தில் ஏனென்று கேட்டு விட முடியாத எல்லாக் கோபமும் இன்றைக்கு இப்படி கொட்டி முழக்கிக் கொண்டு வந்தது பாட்டிக்கு ,இப்போதைக்கு நிறுத்தக் கூடுமென்று தோன்றவில்லை. அது ஆகும் சாயங்காலம் காப்பி குடிக்கும் போது வேறெதுவும் பிரச்சினை அகப்பட்டால் ஒழிய வேறு பேச்சுக்கு தாவக்கூடும் நிலையைக் காணோம் .

ஏதோ சமாதானம் சொல்ல முயல்வதைப் போல வாயைத் திறந்து திறந்து மூடிக் கொண்ட செல்லத்தாயம்மாள் இப்போதைக்கு கிட்ணம்மா ஓயாது என்று தானே ஒரு முடிவுக்கு வந்து
துவைத்துப் பல நாட்கள் ஆன தன் அழுக்கு வெள்ளைச் சேலையின் கிழிசல் முந்தியில் மூக்கையும் கண்ணையும் துடைத்துக் கொண்டு வீட்டுக்குள் .

இவ்வளவு பேச்சுக்கும் சண்டைக்கும் காரணமாகி விட்ட சரித்திரப் பிரசித்தி பெற்ற தாத்தா போட்ட பெரிய சைஸ் ஆட்டுப் புழுக்கைகள் என்ன கதி ஆயிற்றோ என்று கவனமாய் என்னைத் தவிர அப்போது யாரும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை .

பெரிய மாமாவின் புல்லட் வண்டி சத்தம் கேட்ட மாத்திரத்தில் பாட்டி முக்கா முக்கா மூணு தரம் ரேஞ்சில் அள்ளி முடிந்த கொப்பை மறுபடி சரட்டென்று பிரித்து கோபமாய் உதறி அள்ளி முடிந்து கொண்டு எதுவும் நடக்காததைப் போல வீட்டுக்குள் போய் விட்டாள்.

நீலியா ...

ஆவாணத்தக்கிழவி...

செல்லத்தாயம்மா...

கிட்னம்மா ...

யாருக்கும் என்ன பெரிய உரிமை வைத்து வாழ்கிறது என்னை விட(!!!) என்பதைப் போல பெரிய மாமா வீட்டு விக்கி நாய் தாத்தா போட்ட புழுக்கைகளை சுவாரஸ்யமாய் சுத்தம் செய்து கொண்டிருந்தது.

மறுநாள் உள்ளூர் பள்ளியில் தமிழ் டீச்சராய் இருக்கும் சித்தியும் சத்துணவு டீச்சராய் இருக்கும் அம்மாவும் ரீசஸ் பீரியடில் (அதாங்க இன்டர்வெல் :) ) சாக்பீஸ் எடுக்க வந்த மல்லிகா டீச்சர் மண் பானைத் தண்ணி குடிக்க வந்த ஆனந்தி டீச்சர் மற்றும் சில டீச்சர்கள் மற்றும் வாத்தியார்கள் எல்லோரும் சூழ்ந்திருக்க "எங்கப்பா போன கக்கூசை எடுக்க நீ நான்னு என்னா போட்டி நேத்து ?நீங்க பார்க்கலையே சார் !...நீங்க பார்க்கலையே டீச்சர் என்று முறை வைத்து சொல்லிச் சொல்லி பிரமித்துக் கொண்டிருந்தார்கள் .

ஜனங்கள் (!!!)