Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

Friday, January 13, 2012

எக்ஸ்கியூஸ் மீ ...


பேருந்தில் இன்றைக்கும் ஒரு இரண்டு வயதுக் குழந்தையைப் பார்த்தேன் அதன் அம்மாவோடு .எனக்கு இடது பக்கம் ஒரு சீட் முன்னாள் உட்கார்ந்திருந்தார்கள்,அதன் அம்மா' பூப் பூவாய் பூத்திருக்கு' படத்தின் அமலாவைப் போல நிறை அழகு ,ஒற்றைக் கல் சிவப்பு மூக்குத்தியில் அவள் வெற்றுப் பார்வையில் கூட வாத்சல்யம் ததும்பி வழிந்தது .

பாப்பாவுக்கு நாவற்பழ நிறத்து சின்ட்ரெல்லா கவுன் அதில் சந்தன நிறத்துப் ப்ரில் வொர்க் பிரி பிரியாய் ஜன்னலில் கசிந்த காற்றுக்கு அவளது சுருட்டை முடிக் கொண்டையோடு சேர்ந்து அசைந்தது அந்த நேரத்தில் ரொம்பத் தீவிரமாய் முகத்தை வைத்துக் கொண்டிருந்த அவளைப் பார்த்ததுமே எல்லோருக்கும் பிடித்துப் போகும் அப்படி ஒரு துறு துறுப்பு.

குட்டிக் குட்டிப் பிஞ்சுக் கைகளில் மெகந்தி இட்டிருந்தாள் அதை தூக்கி அதன் அம்மாவின் முகத்துக்கு நேர நீட்டி என்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள் ,அதன் அம்மா அதன் விரல்களைப் பற்றி வலிக்காது மடக்கி 1 ,2 ,3 ...சொல்லிக் கொடுப்பது என் இருக்கையில் இருந்து பார்க்க அபூர்வமான ஓவிய அழகு .

செம்பஞ்சாய் சிவந்து பவளமாய் மின்னிய பாப்பாவின் குண்டு குண்டு விரல்களையும் பக்கவாட்டில் மாம்பழம் போல பளபளத்த பளிங்குக் கன்னத்தையும் பார்க்கப்பார்க்க அதன் அம்மாவிடம் எக்ஸ்கியூஸ் மீ கேட்டு அவளைத் தூக்கி என் நிறுத்தம் வரும் வரை மடியில் வைத்துக் கொண்டால் என்ன என்று ஆசை ஆசையாய் இருந்தது .

அதற்குள் எனது நிறுத்தம் வந்து விட்டதால் ...

இறங்கி கீழே நின்று கொண்டு பேருந்து என்னைக்கடக்கும் வரை அந்தக் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு பிறகு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

நடந்து வரும் போது தோன்றியது

"குழந்தைகளை அவதானிப்பது தியானத்துக்கு சமம் "

//என் ஹரிணி பின்னாட்களில் வாசிப்பதற்கான சேமிப்பு //

Friday, July 23, 2010

சர்வ ஜாக்ரதையாய் இருக்க வேண்டியவர்கள் யார்?

எழுத நினைத்த விஷயங்கள் ஒரு வண்டி நிறைய குப்பையாய் குவிந்து கிடக்கிறது,கொதிக்கும் சாம்பாரில் அவ்வப்போது கொதிப்பில் மேலெழுந்து சாம்பாருக்குள் மறையும் கத்தரிக்காய் பத்தை போலவோ முருங்கைக் காய் துண்டு போலவோ "ஆமாம் என்னத்த பெருசா எழுதி...என்னத்த படிச்சு " இப்படி ஒரு அயர்ச்சி கலந்த அசட்டை வந்து வந்து போவதால் ஒவ்வொரு முறையும் நியூ -போஸ்ட் பக்கத்தை திறப்பதும் புறக்கணிப்பதுமான நாட்கள் தான் சமீப காலமாய்.

இப்போதும் பெரிதாய் ஒன்றும் எழுதிக் கிழிக்கப் போவதில்லை .

மனதை வெகுவாகக் பாதித்த சில நிகழ்வுகளை பதியத் தோன்றியதால் இந்தப் பதிவு ...

நிறைய கோபம், அதிர்ச்சி,பதட்டம், பயம் இன்னோரன்ன கலவையாய் மனம் .

மனுஷ்ய புத்ரனின் கவிதை வரிகளில் ஒன்று ;

"காதலில் என்ன நல்ல காதல்...கள்ளக் காதல்,காதல் காதலாய் மட்டுமே இருக்க முடியும் "என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய வரிகள் எனில்

"உறவு என்ற சொல்லுக்கு நல்ல உறவோ ...கள்ள உறவோ உரிமை என்பதான ஒரே விதமான அர்த்தமே தானே இருக்க முடியும்?!"

அப்படிப் பட்ட உறவின் மீதான நம்பிக்கையின்மை,அதனால் அடைந்த ஏமாற்றங்கள் ஒரு பெண்ணை இப்படி எல்லாம் செய்யத் தூண்டும் என்றால் இங்கே சர்வ ஜாக்ரதையாய் இருக்க வேண்டியவர்கள் யார்?!

தவறு செய்த ஆண்களா? (அப்பாக்களா !) ...பெண்களா? (அம்மாக்களா!)


அல்லது புதிதாய் மலர்ந்த பூக்களைப் போன்ற குழந்தைகளா?

சுற்றி வளைப்பானேன்!

மூன்றரை வயது பாலகனை இரக்கமே இல்லாமல் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு சடலத்தை சூட்கேசில் போட்டு மூடி நாகபட்டினத்து பஸ்ஸில் அனாமத்தாக அனாதையாகப் போட்டு விட்டுப் போனாலே ஒரு பேய் ! அவளுக்குப் பெயர் பூவரசியாம்?! பூக்கள் கோரக்கொலை செய்கின்றன !

பெற்றோர்களின் பாவம் பிள்ளைகளைப் பீடிக்கும் என்பது சரியாய் தான் போயிற்று.அந்த சிறுவனின் தந்தை இவளை ஏமாற்றிய பாவம் உலகம் அறியா பசும் மண்ணை படு கொடூரமாகப் பலி வாங்கிக் கொண்டது.துரோகம் அது எந்த சூழலிலும் தன் கோரப் பற்களை காட்ட மறப்பதில்லை,ஆண்களே ...இல்லை தகப்பன்களே தயவு செய்து உங்களது குழந்தைகளை முன்னிட்டு துரோகங்களின் பட்டியலை கொஞ்சம் குறுக்கிக் கொள்ளுங்கள்.இதையே பெண்களுக்கும் சொல்ல நினைப்பவர்கள் பெண்களே ...இல்லை அம்மாக்களே தயவு செய்து உங்களது குழந்தைகளை முன்னிட்டு துரோகங்களின் பட்டியலை கொஞ்சம் குறுக்கிக் கொள்ளுங்கள்...இப்படிச் சொல்லிக் கொள்ளலாம் ,இதற்கு உதாரணம் பாட்டு டீச்சர் அனந்தலட்சுமி,அனந்த லட்சுமி அவரது மகன் சிறுவன் சூரஜ்குமார் இரட்டைக் கொலைவழக்கு இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.யூகங்கள் காற்றில் பறந்து கொண்டிருக்கின்றன.உண்மை எங்கோ இழுத்துப் போர்த்தி கொண்டு நல்ல உறக்கத்தில்!

ஆதித்யாவின் "ஆன்ட்டி ... ப்ளீஸ் என்னை கொல்லாதிங்க ! எனும் பிஞ்சுக் குரலின் கெஞ்சலில் மனம் நெகிழவில்லை பாருங்கள் இந்தப் பிசாசு .இதை நினைத்தால் நெஞ்சு கொதிக்கிறது தானே!இன்றைய இந்தியன் எக்ஸ்பிரசில் முதல் பக்க செய்தி ,அந்த பூவரசியையும் அவளது கொடும் பாதகச் செயலையும் அடையாளம் கண்டு கொண்ட மற்ற பெண் கைதிகள் புழல் சிறையில் காலை உணவு நேரத்தின் போது அவளை தாக்க முயன்றதால் இப்போது பூவரசி தனி செல்லில் அடைக்கப் பட்டிருக்கிராளாம். நிற்க

எந்த நேரம் எப்படிச் சாவோம் என்பதறியாமல் தமக்கே தமக்கென பிரத்யேக பட்டாம்பூச்சிக் கனவுகளுடன் வளர்கிறார்கள் குழந்தைகள்,அம்மாவின் பட்டுப் புடவை மெது மெதுப்பு தாங்கள் ரசிக்கும் வண்ணத்துப் பூச்சிகளின் சாவில் கிடைப்பதென அந்தக் குழந்தைகளுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை,ஒவ்வொன்றாய் அறிந்து கொள்ளும் அவகாசத்தில் பூவரசிகளின் கொலைக் கண் பார்வையை ஆராய பாவம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கவில்லை ,தும்பியின் வாலில் நூல் கட்டி அதன் சுதந்திரத்தை முடக்கி "தட்டான்...தட்டான் கல்லெடு ,தட்டான்...தட்டான் கல்லெடு " என பொழுது போக்கும் விசித்திர சமூகத்தின் பிரதிநிதிகள் தாங்கள் என அவர்கள் அறிந்து கொள்ள அவகாசம் தரவேண்டாமா?!

இப்போதைக்கு பாலியல் கல்வியைக் காட்டிலும் மிக முக்கியமாய் சிறுவர்,சிறுமிகளுக்கு கற்பிக்கப்பட வேண்டிய பாடம் சூழ இருக்கும் மனிதர்களை படிப்பது.

இந்த அதிர்வில் இருந்து மீண்டு வரும் முன் இன்றைய விகடனில் நாமக்கல் ஆட்சியர் சகாயம் அவர்களின் பேட்டி,நவீன் என்ற சிறுவனின் தாய் பக்கத்து வீட்டு மனிதரோடு ஓடிப் போகிறாள்,அந்த சிறுவனின் தந்தை அவனது தங்கை தம்பியைப் கவனித்துக் கொண்டு சமைத்துப் போடவென இவனது படிப்பை நிறுத்தி விடுகிறார்.அம்மா ஓடிப் போன அவமானம் ,தந்தையின் அலட்சியம்,தன் கல்வி அநியாயமாய் நிறுத்தப் பட்ட நிராசை எல்லாம் சேர்ந்து பத்து வயதுப் பையன் ஆறுதல் சொல்ல ஆளின்றி கண்ணீரோடு மாவட்ட ஆட்சியரிடம் குறை தீர்க்கும் மனு கொடுக்க வருகிறான்.இதுவொன்றும் அதிர்ச்சி அல்ல...கலெக்டர் அந்தப் பையனுக்கு உதவி செய்யும் எண்ணத்தில் இருக்கையில் இடியாய் ஒரு செய்தி அடுத்த சில நாட்களில் ,அந்த சிறுவனின் தந்தை தன் மனைவி ஓடிப் போனதால் அவமானம் தாங்காமல் நவீன் உட்பட தன் மூன்று குழந்தைகளுக்கும் உணவில் மருந்தை கலந்து கொடுத்து கொன்று விட்டு தூக்கிலும் தொங்க விட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார்.

அம்மா அடுத்த வீட்டு மனிதனோடு ஓடிப் போனதற்கும் ,அப்பாவின் இயலாமைக்கும் இந்த சிறுவன் செய்த பாவம் என்ன?

சாக வேண்டும் என முடிவெடுப்பவன் தனியே செத்துத் தொலையலாம் ,வாழ நினைத்து தனக்கென நியாயமான ஆசைகளை வளர்த்துக் கொண்ட மூன்று இளம் குருத்துகளை கருக வைத்தது எப்படி நியாயம் ஆகும்?தகப்பனாகவே இருந்தாலும் !

நவீனின் ஆசை என்ன தெரியுமா?

"படித்துப் போலீஸ் ஆபிசர் ஆகவேண்டுமாம்! "
இப்படித் தான் அவன் கலெக்டரிடம் மனு கொடுக்கையில் கூறினானாம்.வாசிக்கையில் கண்கள் கலங்குகின்றன .

அதே பக்கத்தில் இன்னும் சில குழந்தைகளுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்தும் சொல்லப் பட்டிருந்தது.அபினா எனும் ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு ஊஞ்சல் என் சரியாக உச்சரிக்கத் தெரியாததால் அவளை எல்லா மாணவர்களின் முன்பாக அவளது ஆசிரியை ;

"நீ எல்லாம் ஏன் ஐந்தாம் வகுப்பில் உட்காருகிறாய்,போ மறுபடியும் ஒன்றாம் வகுப்புக்கு "

,என்று கடுமையாகத் திட்டி விடுகிறார்,இதற்கு அந்த சிறுமி மனம் நொந்து போய் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக் கொண்டு இறந்து போனாளாம்,இங்கே குறிப்பிடத் தக்க ஒரு விஷயம் ,ஆசிரியை மீது தவறு தான். அதற்கு நடவடிக்கை எடுக்க வசதி இருக்கிறது.ஆனால் அந்த சிறுமி அபினாவின் மனநிலையை எண்ணிப் பாருங்கள் வெறுமே பள்ளியில் ஆசிரியை திட்டினால் அதற்கு தன்னைக் கொளுத்திக் கொண்டு இறந்து போக வேண்டும் என அவளுக்கு எப்படித் தோன்றியது? !

குழந்தைகளை மனதளவில் எதையும் எதிர் கொள்ள திராணியற்றவர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் நமது வளர்ப்பு முறையில் அல்லவா இங்கே முதல் தவறு ஒளிந்திருக்கிறது. ஆசிரியை திட்டியதால் குழந்தை தற்கொலை செய்து கொண்டாள் என பத்திரிகைகளில் வரும் பெரும்பான்மையான செய்திகள் மிக்க மனவருத்தத்தை அளிக்கன்றன. எல்லா ஆசிரியர்களும் மோசமானவர்கள் அல்ல.

மேலும் அந்த ஆசிரியர்களுடன் மாணவர்களுக்கான பந்தம் வாழ்வின் சில காலமே.அப்போதும் தினமும் அந்த ஆசிரியர்கள் விரும்பத் தகாத வண்ணமே பேசிக் கொண்டு இருக்கப் போவதில்லை,எதோ ஒருநாள் திட்டலாம்,அதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒட்டு மொத்த வாழ்வை முடித்துக் கொள்வது முட்டாள் தனம் தவிர வேறென்ன? குழந்தைகளே ...மாணவர்களே உங்கள் பக்கம் நியாயம் இருப்பின் தயங்காமல் மரியாதை குறைவின்றி ஆசிரிய ஆசிரியர்களிடம் எதிர்வாதம் செய்யுங்கள்.உங்களை அவர்களுக்குப் புரிய வைக்க முயலுங்கள். காரணமே இன்றி யாருக்கும் யார் மீதும் வெறுப்பு வர வாய்ப்பில்லை. பள்ளிகள் கல்வி கற்பதற்கு தான் .அந்த வேலையில் குறை வைக்காமால் இருந்தால் என்ன தான் முசுட்டு ஆசிரியை என்றாலும் சம்பந்தப் பட்ட மாணவியின் மீது அவர்களுக்கு ஒரு மரியாதை இருக்கத்தான் செய்யும்.அந்தப் பலனை கெட்டியாகப் பற்றிக் கொள்ள முயலுங்கள்.

பெற்றோர்களுக்குச் சொல்ல விரும்புவது. கண்மூடித் தனமாக ஆசிரியர்களை குறை சொல்வதை நிறுத்துங்கள். நாணயத்திற்கு இருபக்கங்கள்.இன்றைக்கு வகுப்பறையில் எல்லோர் முன்னிலும் திட்டி கருத்துக் கொட்டும் ஆசிரியை நாளையே உங்களிடம் உங்கள் மகன் அல்லது மகளை ஏதாவது ஒரு திறமைக்காக வானளாவப் புகழும் நிலை வரும். அதற்கு நம் குழந்தைகள் உயிரோடு இருக்க வேண்டும் .

அதற்கு முன் வெகு முக்கியமாய் பாலியல் ரீதியாக வரக் கூடிய அச்சுறுத்தல்கள் அல்லது உளவியல் ரீதியாக நேரக் கூடும் மனமுடைதல் குறித்து நம் குழந்தைகளின் ("இம்" மெனும் முன் தற்கொலை)பூஞ்சை மனதை வலுப்படுத்த உருப்படியாய் ஏதானும் முயற்சிக்கலாம்.இந்த உலகில் எல்லாவற்றுக்கும் தீர்வு இருக்கிறது.அப்படித் தான் குழந்தைகள் நம்ப வேண்டும்,

கொலையோ,தற்கொலையோ அதற்கான தீர்வாக முடியாது.

உங்களைப் போலவே பாதிப்புக்கு உள்ளான மற்றவர்களுக்கு உங்களது முடிவுகள் பாடமாகி வளரும் சமூகம் பாழாக வேண்டாம்.

முதலில் பாடம் படிக்க வேண்டியது பெற்றோர்களே .

நம்மிலிருந்து நம் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்.

முக்கியக் குறிப்பு :

கற்றுக் கொள்வதென முடிவெடுத்த பின் கற்கும் பாடம் நல்ல பாடமாக இருக்கட்டும் ,இன்னொரு சூட்கேஸ் சடலம் நகரத்தின் பஸ் ஸ்டாண்டுகளில் ஈ மொய்க்கக் தொலைக்காட்சிகளில் காணக் கிடைக்க வேண்டாம்.

"சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம்".

Monday, February 23, 2009

அழகான நாட்களில் இன்றொரு நாள்/


குளு குளு வென இருந்தது பாப்புவின் பள்ளிக்குள் நுழைந்ததும் ; பள்ளியில் எல்லா வகுப்பறையும் எ.சி என்று நினைத்து விட வேண்டாம்.திங்களும் அதுவுமாய் கண் பார்த்த இடமெல்லாம் வெள்ளுடை குட்டித் தேவதைகள்.
கண்ணுக்கு குளிர்ச்சியாய்...மனதிற்குள்

சிலு சிலுவென்று பனியடித்தது. ரகம் ரகமாய் பூச்சரங்களைப் போல வளைய வரும் உற்சாகம் குறையாத வண்ணத்துப் பூச்சிகள்.

"ஆப்பிள் பெண்ணே நீ தானோ ...

ஐஸ் கிரீம் கனவே நீ தானோ "

என்று பாட்டுப் பாடாத குறை தான்!

குழந்தைகள் அவர்கள் ஆண் குழந்தைகளோ...பெண் குழந்தைகளோ பாரபட்சமே இன்றி எல்லாக் குழந்தைகளும் கொள்ளை அழகு .விதம் விதமான குண்டு...குண்டு கண்களோடு ...பன் போன்ற மெத்து...மெத்தென்ற கன்னங்களோடு ,தளிர் பிஞ்சு உடலசைத்து நிற்பதுவும்...நடப்பதுவும்...பேசுவதும் கூட அத்தனை அழகு .ஓடும் போது கூட ரொம்பவும் அழகு தான் .

சிலரது குட்டித் தலைகளில் செடிகள் முளைக்க வைத்து அதில் வண்ண வண்ண பாண்டுகள் சுற்றியிருந்தனர்.செடிகளைச் வளைத்து பூக்களைச் சுற்ற இப்போதெல்லாம் அனுமதி இல்லையாம்.

எடுத்து வாயில் போட்டு மென்று விடக் கூடாது என்றோ என்னவோ?! இந்த அழகான சுட்டி ராட்சசிகள் அப்படிச் செய்யமாட்டார்கள் என்று நம்புவதற்கில்லை!!!

பளீர் வெண்மையில் காலையில் அணிவித்த வெள்ளை ஷூக்கள் எல்லாம் மதிய நேரத்தில் நல்ல சந்தன அழுக்காய் மாறி கண்ணை உறுத்தாமல் சிரித்துக் குசலம் விசாரித்தன.

கை நகம்...கால் நகங்களில் இருந்த அச்சு ...பிச்சு அழுக்குகளில் எல்லாம் கவனம் களைய விடாதீர்கள் என்று குறும்பாய் எச்சரித்துக் கொண்டு எல்லா முகங்களிலும் மல்லிகைப் பூஞ்சிரிப்பு பரவி விரவி நம்மையும் நிரவித் தழுவியது.

சிரிப்பு கூட ஒரு தொற்று வியாதி தான்.காலையில் வாரத்தில் முதல் நாளே கொஞ்சம் டல் அடித்துக் இருந்த நிலையில் இன்றைக்கு கடைசி மிட் டெர்ம் டெஸ்ட் முடிந்து சனி ஞாயிறு விடுமுறைக்குப் பின் "ஓபன் டே" என பாப்புவின் பள்ளிக்குப் போய் வந்ததில் மூளை சுறுசுறுப்பாகி என் உலகம் என் வரையில் சந்தோசமாகி விட்டது.

அதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் நம் குழந்தையின் சந்தோசங்களைக் கூட நாம் அடையாளம் காண வேண்டுமென்றால் அதை நாம் அவர்கள் பயிலும் பள்ளியில் சென்று காண்பதே நலம் .

காண்பதே நலம் .

காண்பதே நலம் .(சும்மா ஒரு எக்கோ தான் !!!)

Thursday, February 19, 2009

ஒரு குழந்தை தன் அம்மாவிடம் கேட்க விரும்பும் (10) பத்துக் கேள்விகள்(!!!)

ஒரு சுட்டிக் குழந்தை தன் அம்மாவிடம் கேட்க விரும்பும் பத்துக் கேள்விகள்...
  1. டெய்லி எதுக்கு மூணு வேலையும் சாப்பாடு ஊட்டி விடறேன்...சாப்பாடு ஊட்டி விடறேன்னு என்னைத் தொல்லை பண்ற? பசிச்சா நான் சாப்பிட மாட்டேனா?
  2. ஐஸ் கிரீம் சாப்பிட்ட சளி பிடிக்கும் வேணாம்...வேணாம்னு சொல்றயே ? சளி பிடிக்காம குழந்தைக்கு ஐஸ் கிரீம் எப்படி ஊட்டலாம்னு நீ ஏன் ஒரு வாட்டி கூட யோசிக்க மாட்டேன்ற உன் குழந்தைக்காக?
  3. பூதம் வருது ...பூச்சாண்டி வருது...கோணிக்காரன் வரான்னு சொல்லி எனக்கு விவரம் தெரியுமுன்னா இருந்து பயமுறுத்தறியே இன்னைக்கு வரை ஒருநாளும் அவங்களைக் காணோமே!!!எப்போ தான் பூதமும்...பூச்சாண்டியும்...கோணிக்காரனும் வருவாங்க?
  4. ஏன் எப்போ பார்த்தாலும் சன் டி.வி ...கே.டி.வி...கலைஞர் டி.வி ..விஜய் டி.வி நு பார்த்து கேட்டுப் போற ...ஏன் என்கூட சேர்ந்து சுட்டி டி.வி பார்த்து அறிவை வளர்க்க ட்ரை பண்ணக் கூடாது?
  5. உனக்கு எவ்வளவோ சொந்தக்காரங்க ..பிரெண்ட்ஸ்னு இருக்கலாம் ...இருந்துட்டுப் போகட்டும் ...ஏன் அவங்க வரும்போதெல்லாம் "பா...பா..ப்ளாக்ஷிப் சொல்லு, "ஜானி...ஜானி எஸ் பாப்பா" சொல்லுன்னு உன் பாப்பாவான என் உயிரை எடுக்கற?
  6. உனக்குத் தூக்கம் வரும் போதெல்லாம் லீவு நாள்ல கூட என்னையும் தூங்கு...தூங்கு...தூங்கினா தான் கண்ணுக்கு நல்லதுனு என்னையும் தூங்க சொல்லி டார்ச்சர் பண்றயே இது எப்படி நியாயமாகும்?
  7. அது ஏன் நைட் தூங்கி மார்னிங் எழுந்துக்கச் சொல்லி தினம் என்னை படுத்தற? மார்னிங் தூங்கி நைட் எழுந்தா சாமி வந்து கண்ணைக் குத்துமா என்ன?
  8. எனக்கு எதெல்லாம் சாப்பிடப் பிடிக்கலையோ அதெல்லாம் உலகத்துலேயே ரொம்ப சத்துள்ள உணவுனும் ...எதெல்லாம் சாப்பிட ரொம்ப பிடிக்குமோ அதெல்லாம் சாப்பிடவே கூடாத உணவுண்ணும் அடம் பிடிக்கிறயே அது ஏன்?
  9. தண்ணில விளையாடாத....மண்ணுல விளையாடாத...காத்தடிக்குது ஓடாத தூசு விழும் கண்ல,மழைல விளையாடாத...இதெல்லாம் இல்லாத ஒரு இடம் எங்க இருக்கு ?அதை ஏன் இன்னும் கண்டுபிடிக்கலை நீ ?
  10. ஒரு பங்சனுக்கு கிளம்பினா அந்த டிரஸ் போடு...இந்த டிரஸ் போடுன்னு ட்ரில் வாங்கற ...ஒரு நாளாச்சும் எனக்குப் பிடிச்ச டிரஸ் போட்டுட்டு போக விடறியா நீ? ஏன்மா ...ஏன்...சொல்லும்மா ...ஏன்...ஏன்...ஏன் ???

Friday, December 12, 2008

அம்மாக்களே...அப்பாக்களே தற்கொலை மட்டும் வேண்டவே வேண்டாம் ப்ளீஸ்...!?

ஜெயமோகன் அவர்களின் "தோன்றாத்துணை" கட்டுரை வாசித்தேன் இன்று...தற்கொலை பற்றி அதில் வரும் சம்பாசனைகள் சிந்திக்க வைக்கின்றன,எந்த முறையில் தற்கொலை செய்து கொள்வது வழியின்றி மரிக்க உதவும் என்று அக்கட்டுரை நீள்கிறது, அதைப் படிக்க ஆர்வமுள்ளவர்கள் இந்த லிங்க்கை அழுத்துங்கள் .

தோன்றாத்துணை http://jeyamohan.in/?p=775

என் பெரிய பாட்டியார் என் அம்மாவெல்லாம் பிறக்கும் முன்பே காலமாகி விட்டார்,இயற்க்கை மரணம் அல்ல,வெகு இளம் வயதிலேயே என் தாத்தாவுடன் ஏற்பட்ட மனப் பிணக்கில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இத்தனைக்கும் அந்தக் காலத்தில் அவர்கள் காதல் மணம் புரிந்தவர்கள்,

ஒரு வயதில் விவரமறியா பிள்ளைகுழந்தை பாலுக்கு அழும் பருவம்...அடுத்த கரு வயிற்றில் தாங்கிக் கொண்டிருந்த ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் எப்படி என் பெரிய பாட்டியாரால் தூக்குப் போட்டு தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிந்தது ?! இன்றளவிலும் என்னை யோசிக்க வைக்கும் கேள்வி இது!

கணவன் மனைவி சண்டை தற்கொலை வரை போவது மிகப் பெரிய தவறு என்று என்னை நினைக்க வைத்தது பெரிய பாட்டியாரின் மரணமே!!!எத்தனையோ பிணக்குகள் இருக்கட்டுமே?அதற்க்கு ஒரே தீர்வு உயிரை போக்கிக் கொள்வது என்று ஆகி விடுமா?அது கொஞ்சம் சுயநலமில்லையா?

பார்த்துப் பார்த்து வளர்த்த நம் குழந்தைகளை பிறகு யார் பொறுப்பெடுத்து வளர்ப்பார்கள்?இயற்க்கை மரணம் என்றால் அது வேறு ...கடவுளை...விதியைத் திட்டிக் கொண்டு அடுத்து நடக்க வேண்டியதைப் பார்க்கத்தான் போகிறோம்...அப்படியே எதுவும் நின்று விடப் போவதே இல்லை.

ஆனால் தன் உயிரை தானே மாய்த்துக் கொள்ளுதல் என்பது எப்படிப் பட்ட மன நிம்மதி இன்மை தெரியுமா?ஏதோ ஒரு நிமிடக் கோபத்திலோ மன அழுத்ததிலோ அப்படி மரித்தவர்களை விட அவர்களது குழந்தைகளை எண்ணியே நாம் வருத்தப் பட வேண்டும்.என்ன பாவம் செய்தார்கள் அவர்கள்?அவர்களிடம் ஏன் இப்படி ஒரு அநியாயமான இழப்பை வலுவில் திணிக்க வேண்டும்?

"இழந்தவர்களுக்கே தெரியும் இழப்பின் வலியும் துக்கமும்".

என் அப்பா வழித் தாத்தா அப்பாவுக்கு பத்து வயதிருக்கும் போதே மரணித்து விட்டார்.இளம் வயதிலேயே கடும் ஆஸ்த்துமாவின் தாக்கத்தால் நிகழ்ந்த இயற்க்கை மரணம் தான் அது!!! ஆனாலும் அந்த மரணத்தின் வலியை என்னாலும் உணர முடிகிறது . பள்ளி செல்லும் வயதில் அப்பா இல்லாததின் கொடுமையை எவ்விதம் விளக்க முடியும்? ஏக்கமான பார்வை தருமே ஓராயிரம் விளக்கங்களை.

அப்பா இல்லாமல் தான் பட்ட அவஸ்தைகள் தன் பிள்ளைகளுக்கு வந்து விடக் கூடாதே என்ற முன்னெச்சரிக்கை உணர்வுகளை என் அப்பாவின் ஒவ்வொரு அசைவுமே எங்களுக்கு உணர்த்தியதுண்டு இப்போதும் கூட,எப்போதும் மிதமான வேகத்துடன் கூடிய வாகனப் பயணம் ...அதில் ஒன்று .இந்த உணர்வு எல்லா அப்பாக்களுக்குமே இருக்க வேண்டும் தானே?

நாங்கள் நாற்பது ...நாற்பத்து ஐந்துக்கு மேல் ஸ்பீட் போக அப்பாவுக்கு பயம் என்று விவரம் புரியாமல் கேலி செய்திருக்கிறோம் தான்...பக்கத்து வீட்டு இளைஞன் கிழக்கு கடற்கரைச் சாலையில் துள்ளத் துடிக்க அதி வேகப் பயணத்தின் ஆசையாலும் ஹெல்மெட் போடாத காரணத்தாலும் இரண்டு லாரிகளுக்கிடையில் சிக்கி சின்னா பின்னமாகி பிண வண்டியில் கொண்டு வரப் படுவதைப் பார்க்கும் வரை...!!!

இங்கு நான் சொல்ல வந்தது என் அப்பாவைப் பற்றிய பாராட்டுரை அல்ல ;ஒரு தகப்பனாருக்கு இருக்கும் பொறுப்புணர்வை.இப்படி இருக்கும் அப்பாக்களால் தற்கொலை முடிவு எடுக்க முடியுமா? வாழ்வின் மீது ஒரு பிடிப்பு மட்டும் அல்ல ...நாளை நல்ல நாளாய் விடியும் என்ற நம்பிக்கையும் வேண்டும்.எதை எதையோ காதலிக்கிறோமே? வாழ்வைக் காதலித்தால் என்ன தவறு? என்ன கெட்டுப் போகும்?

என் அப்பா வழிப் பாட்டி கணையத்தில் புற்று நோய் தாக்கி வாழ்வின் கடை நிலையில் மிக்க உடல் வேதனை கண்டு இறந்தார்.அப்போதும் நான் அவரிடத்தில் கண்டது வாழ்வின் மீது வெறுப்பை அல்ல...இன்னும் கொஞ்சம் வாழ்ந்தால் என்ன ? என்ற துடிப்பை மட்டுமே.கால்கள் எல்லாம் வீங்கி வெடித்துப் போவது போன்ற நிலை,நீடித்த தொடர்ந்த வயிற்று வலி,மூச்சுத் திணறல்,மலச்சிக்கல்,உணவுக் கட்டுப்பாடு,ஏன் கடைசி ...கடைசியாய் வெறும் நீர் உணவு மட்டும் தான் என்ற நிலையிலும் என் பாட்டியிடம் வாழ வேண்டும் என்ற ஆசை நிறையவே இருந்தது.

இத்தனைக்கும் இளம் வயதில் கணவரை இழந்து ,தன் சொந்த அண்ணனின் அடாவடித் தனத்தால் இருந்த சொத்துக்களையும் இழந்து தினந்தோறும் கஷ்ட ஜீவனம் என்ற நிலையில் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய இரும்புப் பெண்மணி அவர்...சொகுசான வாழ்க்கை வாழ்ந்த செல்வ சீமாட்டி அல்ல என் பாட்டி .

இப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்...தான்!எனக்கு இதற்க்கு மேல் தற்கொலை வேண்டாம் என்று வாதாட போதுமான வார்த்தைகள் சிக்கவில்லை.எப்படிச் சொன்னாலும் சொல்ல வந்த விஷயம் இது தான் .தற்கொலை தவறு இதை சொல்லத்தான் இவ்வளவு நீளமான பதிவு.

நிச்சயம் ஒருநாள் எல்லாம் மாறும் ...என்று நம்புங்கள் ...நிறையவே கஷ்டம் தான் ...கஷ்டப் பட்டு நம்புங்களேன் ,பொசுக்கென்று உயிரை விட்டு விட்டு உங்களை நம்பி இருப்பவர்களை அனாதைகள் ஆக்குவதை விட "கோபத்தையோ மன அழுத்தத்தையோ கொஞ்சம் ஒத்திப் போட்டால் என்ன?

அப்பாக்களே...அம்மாக்களே தற்கொலை மட்டும் வேண்டவே வேண்டாம் ப்ளீஸ் ...!!!