Showing posts with label சும்மா. Show all posts
Showing posts with label சும்மா. Show all posts

Wednesday, November 3, 2010

ஈசி சைட் டிஷ் ரெஸிபி ...(தீபாவளியை முன்னிட்டு!?)




பல நாட்கள் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள என்ன செய்யலாம் என்ற குழப்பம் தலைமுடியைப் பிய்த்துக் கொள்ள வைத்திருக்கிறதா யாருக்கேனும்? !


கவலை வேண்டாம் இதோ உங்களுக்கு சில நல்ல தீர்வுகள் ;))

வெறும் சப்பாத்தியை எண்ணெய் இல்லாமலோ எண்ணெய் விட்டோ தோசைக் கல்லில் போட்டு எடுத்துக் கொள்ளவும். அதற்கான சைடு டிஷ்கள் பின்வருமாறு;

(சப்பாத்திக்கு திட்டமாக அல்லது வயணமாக மாவு பிசைவது எப்படி என்ற கஷ்ட்டமான கேள்வியெல்லாம் கேட்பவர்கள் மேலே படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் ,அதெல்லாம் நேரத்திற்கு ,மனநிலைக்குத் தக்க மாறுபடும் கலை,ஸ்பெசல் கோச்சிங் கிளாஸ் தான் போக வேண்டும் )

தேவையான பொருட்கள்:

ஏதாவது ஒரு காய் - எந்தெந்த காய்கறிகள் என்பதை கீழே பட்டியல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
பெரிய வெங்காயம் - ஒன்று அல்லது இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு அல்லது நான்கு
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பூண்டு - உரித்தது மூன்று அல்லது நான்கு பல் (பூண்டு பிடிக்காதவர்கள் தவிர்த்து விடலாம்)

முட்டை ரெஸிபி :

செய்முறை ரொம்ப சிம்பிள் ,ஒன்றோ இரண்டோ ஆட்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு முட்டைகளை உடைத்து அதில் கொஞ்சம் மிளகு அல்லது மிளகாய்த் தூள் அல்லது பச்சை மிளகாய் பிளஸ் சால்ட் கலந்து நன்றாக அடித்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்,வாணலியில் ஒரு டி ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்த கலவையை ஊற்றி வாணலியில் ஒட்டாத பக்குவத்தில் கிளறி ஸ்டவ்வை அனைத்து விடவும்.

இந்த முட்டை வறுவலை ஏற்கனவே சுட்டு வைத்த சப்பாத்திக்கு நடுவில் கொட்டி சுருட்டி சாப்பிடலாம். ஒரு ரெசிபி முடிந்தது .(எவ்ளோ சிம்பிள் ரெஸிபி !)

முட்டை போலவே தான் காய்கறிகளுக்கும் ஒரே செய்முற தான்.

வெஜிடபிள் ரெஸிபிக்கள் :

இதே போலத் தான் வெண்டைக்காய்,கத்தரிக்காய்,முருங்கைகாய் தவிர மற்ற காய்கறிகள் கேரட்,பீட்ரூட்,முட்டைகோஸ்,சுரைக்காய்,பூசணிக்காய்,ஹைபிரிட் புடலை,குடை மிளகாய் ,சவ் சவ்,அவரைக்காய்,பீன்ஸ்,பீர்க்கை,முள்ளங்கி,வாழைத்தண்டு ,வாழைக்காய் சிலர் விரும்ப மாட்டார்கள் ,இல்லா விட்டால் அதையும் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

இப்படி எல்லாக் காய்களையும் முறையே தனித்தனியே வெங்காயம்,பச்சை மிளகாய் மட்டும் நறுக்கிக் கலந்து பச்சை வாசம் போகும் மட்டும் வதக்கி ஈசியாக சப்பாத்தி மட்டும் செய்து வைத்துக் கொண்டு அதன் நடுவில் இந்தக் காய்கறிகளைக் கொட்டி சுருட்டி டைனிங் டேபிளில் வைத்து விட்டு வெகு எளிதாக சமையலை முடித்து விடலாம்.

காலை நேர பரபரப்பில் இது ரொம்ப எளிதான ரெஸிபி தான் இல்லையா?

சப்பாத்தி செய்யத் தெரியாது ...ஆனால் ஹெல்த் கான்சியஸ் மக்கள் எனில் ப்ரெட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் ,எப்போதும் ஜாம் அல்லது ,சீஸ் ,பட்டர் போரடிக்கும், சும்மா இப்படி பொரியல் செய்வதைப் போல காய்கறிகளை வதக்கி , ப்ரெட் சூடு செய்து நடுவில் வைத்து சாப்பிடுங்கள் . சுவையாக இருக்கும்.

ஒரு நாளைக்கு ஒரு காய் என்ற கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம், எல்லாக் காய்கறிகளையும் கலந்து விடாதீர்கள்.அப்புறம் திரும்பவும் காய்கறிகள் வாங்க கடைக்கு அலையை வேண்டும். கூடவே நாட்டுக் காய்களோடு இங்கிலீஷ் காய்கள் கலந்து செய்தால் கண்றாவியாக இருக்கும் டேஸ்ட் :((

உதாரணம் :

பீட்ரூட்டையும் வாழைகாயையும் கலந்து விடாதீர்கள் . எல்லாக் காய்களுக்கும் தனித்தனியே மட்டுமே சுவை,சிறப்பு உண்டென்பதை இந்த ரெசிபி மூலம் நிரூபிக்கலாம் .

கேரட் பீட்ரூட் கூட கலந்து விட்டால் கலர் குழைந்து பயங்கர எபெக்டில் இருக்கும் பார்வைக்கு :(

கேரட்டையும் முள்ளங்கியையும் கலக்கலாம் (சிலருக்குப் பிடிப்பதில்லை)

முட்டைகோசையும்,கேரட்டையும் கூட கலக்கலாம்

பீன்ஸில் முட்டை கலக்கலாம் .

புடலங்காயில் முட்டை கலந்து வதக்கலாம் .

அவரைகாய் மற்றும் சுரைக்காயில் முட்டை கலந்தால் வாயில் வைக்க விளங்காது. :(

பூசணிக்காய் செய்யும் போது ஒரு ஸ்பூன் சர்க்கரை அல்லது ஒரு கியூப் வெல்லம் கூடவே மிளகாய்க்கு பதில் மிளகாய்த் தூள் சேர்த்துச் செய்யலாம் .

முழு கட்டுரையும் படித்து விட்டு(யாராவது ஒருத்தராச்சும் படிக்காமலா போய்ட போறாங்க ) யோசனை இல்லாமல் எல்லாக் காய்கறிகளையும் போட்டு வாயில் வைக்க சகிக்காமல் சைட் டிஷ் செய்து விட்டு ரெஸிபி எழுதியவர்களை கோபித்துக் கொள்ளுதல் மிக மிக அநியாயமான செயல் என்பதை மட்டும் கடைசியாகச் சொல்லிக் கொள்கிறேன் .

டிஸ்க்கி :

கொஞ்சம் காமெடியாக எழுதி இருந்தாலும் இது ஒரு சீரியஸ் பதிவே என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க கூடாது .


Wednesday, June 30, 2010

ஏய்...நீ என்ன அத்தனை அழகா ?!





வெயில் அடித்துக் கொண்டே மழை பெய்தால் அழகு, தங்கக் கண்ணாடி குழாய்களில் நீரடைத்து பீய்ச்சி அடிப்பதைப் போல தரை தொட்டுப் புரளும் வெயில் நேரத்து மழைநீரை முகமேந்தி தாங்கிக் கொண்டு பளிங்காய் முகத்திலிருந்து சிதறிப் பரவி தெறித்து விழும் பிரவாகத்தை இரு கை அள்ளி நீர் குவித்து மீண்டும் வான்நோக்கி சிதறடித்தால் விசிறிப் பறக்கும் வைரச் சிதறல்கலாம் ஒவ்வொரு மழைத் துளியும் மின்னிடும் ...மின்னிடும்;

ஏய் ...மழையே நீ என்ன அத்தனை அழகா?

அந்த மழையில் நனைவது ஆனந்தம்,நனைந்து கரைவது பரமானந்தம்...கரைந்து காணாமல் போவது தெய்வீகம்.

ஒற்றைச் செம்மண் சாலையில் தொலைவிலாடும் மாமாரக்கிளைகள் கண்ணுக்கு இதம்,ஆளற்ற வெளியில் சில்லென மிதந்து முகம் தொடும் காற்றில் தயங்கி தயங்கி சட...சடக்கும் சல்லாத்துணி துப்பட்டா முனைகள் சிலும்பி நெற்றி தொட்டு தோளில் புரளும் பட்டுக் கூந்தல் குறுகுறுப்பில் மனம் லேசாகி லேசாகி மேகத்தில் மென்துகிலாக கண்ணோடு மனம் காணும் காட்சியெங்கும் இதமான இனிமை.

காற்றோடு கரைந்து போவது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை காண்.

சாணமிட்டு மெழுகிய தரை கோமேதகப் பழுப்பு ,சிவந்த சிமென்ட் தரை ரத்தினக் கவர்ச்சி ,வெள்ளை மார்பிளில் பச்சைக் கரை கட்டிய தரை மரகதக் குளுமை எல்லாம் இருக்கலாம் ஆனாலும் வீட்டுக்கு வெளியே பளீரிடும் பச்சைக் கற்களை வெட்டி பதித்ததைப் போல விரிந்த பசும்புல்லில் தரை சரிந்து தலை சாய்த்து மண்ணோடு முகம் உரசினால் கத கதப்பாய் சில்லிடும் குளிர் பிஞ்சுப் பாதத்தை கன்னம் பாதிக்கும் உயிர் மணக்கும் உன்னதம் .

இன்னும் இருக்கலாம் உலகத்தின் உன்னதங்கள். சொல்வதற்கு வார்த்தைகள் கிடைத்த பின் ஒவ்வொன்றாய் பார்க்கலாம்.


மண்,மழை,காற்றோடு பேசுதல் சட்டென வாய்ப்பதில்லை.

Monday, May 17, 2010

தேவி...புவனாக்களின் டாஸ்மாக் கணவர்கள்

மீள் உறக்கங்களுக்கு
தயாராகி நிற்கும் ஓராசிரியர் பள்ளிகள்.
மத்யானச் சோற்றுக்கு மாணவப் போர்வையில்
காலை முதல் காத்திருக்கும் பசித்த கோழிக் குஞ்சுகள் ;
பருந்துப் பார்வையில் எங்கேனும் தட்டுப்படத்தான் செய்கின்றன
இன்றும் கூட ;
ஒரு ரூபாய் அரிசி பாலீஸ் போடப்பட்டு
மறுபடி மளிகைக் கடை சாக்குகளில்
ஏழைகள் வாங்க இயலா விலையில் ;
உலை கொதித்தடங்கும்
நீர்க்குமிழிகளாய்
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
உரக்கக் கத்துகிறது காலமயக்கங்களின்றி
"டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை "
மான் ஆடி...மயில் ஆடி குடும்பம் குழந்தை குட்டிகள் ஆடி
குட்டையில் வீழ்ந்த இனமான தமிழ் சமுதாயம்.
அடுத்தென்ன ...!
கேஸ் அடுப்பாமே ?!
வாங்க விற்க என்னை அணுகுங்கள்
அறிவிப்பு பலகை தொங்காத குறை;
இங்கிட்டு வாங்கி
அங்கிட்டு வித்துருவோம்ல
எல்லோரும் வியாபார காந்தங்களே அன்றேனும் .
பணம்
பத்திரிகை
சேனல்
அதிகாரம்
இவை போதும் அரசமைக்க .
மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் ஆளும்
மக்களாட்சி இது மக்களாட்சி
வாழ்க குடிமக்கள் ,
யார் எக்கேடு கெட்டால் யாருக்கென்ன?!
டாஸ்மாக் இருக்கும் வரை
தடையின்றி தாக சாந்தி,
எடுக்கலாம் எப்போதும் வாந்தி
மற்றதெல்லாம் வெறும் காராபூந்தி .

NOTE :

வீட்டு வேலைக்கென்று தேவி என்ற பெண் என் வீட்டுக்கு கடந்த ஒரு வருடமாய் வந்து போகிறாள்,வேலை சுத்தமாக இருக்கும்,கையும் படு சுத்தம்,அளவான பேச்சு.,மொத்தத்தில் நல்லவள்,இரண்டு மகன்கள் மற்றும் கணவரோடு எங்கள் தெருவில் தான் அவளும் வசிக்கிறாள்.கணவர் ஒரு மருத்துவரிடம் டிரைவர் ஆக வேலையில் இருப்பதாகக் கூறி இருக்கிறாள். விடிகாலையில் முறைவாசல் செய்வதில் தொடங்கும் அவளது வேலை நேரம் என் வீடு உட்பட இன்னும் நான்கைந்து வீடுகளில் முடிய எப்படியும் பிற்பகல் மூன்று மணி ஆகி விடும்.இந்த வேலைகளை செய்வதால் அவளுக்கு கிடைக்கும் மாத சம்பளம் நான்காயிரம் ,அவளது கணவருக்கு ஐந்தாயிரம் மாத சம்பளமாம்.ஆனால் அவர் அதை அப்படியே வீட்டுக்குத் தருவதில்லையாம்,தினமும் டாஸ்மாக் போகா விட்டால் அந்த ஆளுக்கு பைத்தியம் பிடிக்குமாம்,அப்படிக் கரைத்தது போக மிஞ்சும் சொற்ப பணம் மகன்களின் அரசுப் பள்ளி கட்டணம் கட்டக் கூட போதவில்லை என்று தேவி பலமுறை சொல்வதுண்டு,கணவரிடம் எதிர்த்து வாதாடியதில் ஒரு முறை அந்த மனிதன் இடுப்பில் எட்டி உதைக்க பாவம் இவள் மூன்று நாட்கள் லீவு எடுத்துக் கொண்டு அடுத்த நாள் அழுது வீங்கிப் போன முகத்தோடு வேலைக்கு வந்தாள்.

இவள் மட்டும் அல்ல சென்ற வருடம் என் வீட்டில் வேலை செய்து பாதியில் காணாமல் போன புவனாவுக்கும் இதே தான் பிரச்சினை,புவனாவின் கணவன் குடிக்க காசு கேட்டு அவளை அடிப்பதாக அவள் ஒருநாளும் சொன்னதில்லை கடைசியில் ஒருநாள் ஒரு வாரம் லீவெடுத்து வலது பக்க காதறுந்து மறுநாள் வேலைக்கு வரும் வரை,குடிக்க காசில்லை என்று மனைவியின் காதில் இருந்த கம்மலை அந்த ஆள் பிடுங்கிய வேகத்தில் அறுந்த காது அது.

ஒரு தேவி...ஒரு புவனாவின் கதை மட்டும் தானா இது!

இலவசங்களால் இவர்களின் துயரம் குறைந்ததாய் காணோம்.

Friday, May 14, 2010

மரம்


விரையும் பேருந்தின் ஜன்னலில் ஓடி கடக்கும்
பெயர் தெரியா பசு மரங்கள்
யார் நட்டனவோ !
அம்மாவும் இல்லை
அப்பாவும் இல்லை
ஓயாது விறு விறுக்கும் காற்றின் பேரோசையில்
துண்டால் இறுக்கிய தொண்டைக்குழிக்குள் நசுங்கித்
திணறும் குரல்வளையாய்
எங்களுக்கோர் சொந்தமென்று எவருமில்லையே !
ஆர்ப்பரித்துப் புலம்பின காண் ;
வீட்டுக்கோர் மரம் வளர்ப்போம் !

Friday, August 28, 2009

சும்மா...சும்மா...சும்மா...!

ருக்கு,
ரங்கா,
கே.உஷா,
டி.உஷா,
நிஷா,
தீபு,
விக்கி,
ஸ்ரீதர்,
வி.விஜி,
எஸ்.விஜி,
ஜெகதீஷ்,
ரெங்கராஜ்,
சந்திரன்,
ராதா,
தாமரைக்கண்ணன்,
வேல்முருகன்,
மோகனவள்ளி,
ராம்,
கங்கா,
பாலாமணி,
தியாகு,
செந்தில்,
மீனாட்சி சுந்தரி,
அங்காளீஸ்வரி,
புஷ்பா,
கலைஸ்ரீ,
சுமதி,
சத்யப் பிரியா,
விஜயப்பிரியா,
சத்யபாமா,
சுப்புலட்சுமி,
ஜெயா,
ஜெயலட்சுமி,
சுமித்ரா,
நர்மதா,
சவிதா,
பெருமாள்,
பாலமுருகன்,
கமல்,
ராஜகோபால்,
மதன்கபில்தேவ்,
கொண்டல் சாம்ராட்,
கிருஷ்ணகுமார்,
சதீஷ்,
சக்தி வேல்,
மஞ்சுளா,
போதும் பொண்ணு,
போதுமணி,
மும்தாஜ்,
பானு,
ஹேமா,
சுபா,
சங்கரி,
பரிமளா,
ஏஞ்சல்,
ஜெயச்சந்திரன்,
வேல்முருகன்,
சியாம் சுந்தர்,
ஜெகன்,
பிரபு,
சித்ரா,
சுகீதா,
பிரியா,
நித்யா...........

அவ்ளோ தான் ...

இவங்க பேர் மட்டும் தாங்க இப்போதைக்கு ஞாபகம் இருக்கு .இவங்கலாம் யார்னு கேட்கத் தோனுமே?!

ஒன்னாங்க்ளாஸ்ல இருந்து என்கூடப் படிச்ச கூட்டாளிகள் ..சிநேகிதர்கள்,நண்பர்கள்...எல்லாம் ஒரே அர்த்தம் தானே!

ஆமாங்க அவ்ளோ தான்...அவ்வளவே தான் .