Showing posts with label ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஜெயமோகன். Show all posts

Friday, December 10, 2010

ஜெயமோகனின் கன்யாகுமரி ( புத்தக விமர்சனம் )



ஒரு வேலை அதீதமாய் தன்னில் மூழ்கிப் போனவர்களுக்கு மட்டுமேனும் இந்தநாவலை வாசித்து முடித்ததும் காதோரமாய் கடலின் இரைச்சலைக் காட்டிலும்அதிகமாய் மனதின் இரைச்சல் கேட்கத் துவங்கலாம். இந்த நாவலுக்குரியவெற்றியென கூறலாம் அதை.

சதா தன்னியல்பற்று தனக்குள் பேசிக் கொண்டே இருக்கும் ஒரு மனிதன் (ரவி)கதையை நகர்த்திக் கொண்டு போகிறான். இங்கு கதை என்பதை விட அவன் தனக்குள்பேசிக் கொண்டே கடக்க முடியாமல் கனத்துச் சுமக்கும் சம்பவங்களின் கோர்வைஎன்பது பொருந்திப் போகலாம்.

விமலாவை,பிரவீனாவை,ரமணியை,ஷை லஜாவைப் புரிந்து கொள்ள முடிவதை வாசிப்பின்ஆழம் என்று சப்பைக் கட்டு கட்டினாலும் இந்தப் பெண்கள் புனிதம்,தெய்வீகம், செண்டிமெண்ட் etc ..etc கான்செப்டில் சிக்கிக் கொள்ளாமல்நழுவிச் செல்வதை எந்த ஆட்சேபமுமின்றி நீடித்த புன்னகையுடன் கடக்கமுடிகிறது.

இவர்களில் கன்யாகுமாரி யார்?

கன்யாகுமரியின் ஐதீகக் கதையை பின்புலமாக வைத்துக் கொண்டு இந்தக் கதையைஎழுதியதாக ஜெயமோகன் தன் குறிப்பில் கூறி இருந்தாலும் கூட இது ஒட்டுமொத்தமாய் பெண்களின் அக மனதை எப்படியேனும் வென்று விட எத்தனிக்கும் ஒருமனிதனின் தனிப்பட்ட துக்கமாகவே மனதில் பதிகிறது.

பெண் சதை தாண்டி யோசிக்கப் பட்டிருக்கிறாள் இங்கு.

ஆனாலும் வெற்றி கொள்ளப்படவில்லை, அவளை வெல்ல முடியாத ஆணின் இயலாமை அவனைதன்னியல்பாய் சுழலுக்குள் தள்ளி சுளித்து மறையுமிடத்தில் முடிகிறது கதை.

கன்யாகுமாரி அவள் ஒரு போதும் எந்த ஆணாலும் வெற்றி கொள்ளப்படப் போவதும்இல்லை ,அவளது தடைகள் மறுப்புகள்...ஏதுமின்றியே படைப்பின் மாயாஜாலம் ஆடும்கண்ணாமூச்சு இது.
ஒரு ஆண் வெறுமே ஆணாக மட்டுமே இருக்கும் போது பெண் குறித்த அவனதுகண்ணோட்டம் படு இழிவானதாகவும் இருக்க முடிந்திருக்கிறது,அவனே தந்தை எனும்நிலையில் பெண்ணைக் குறித்து யோசிக்கையில் அவர்களைப் பாதுகாக்கும்கடமையினால் சதா பருந்திடம் இருந்து குஞ்சுகளைக் காக்கும் தாய்க்கோழிநிலைக்கு துரத்தப் பட்டு விடுகிறான். தலை கீழ் மாற்றம் தான்,ஆனாலும் இதுசில கால இடைவெளிகளில் நிகழ்ந்து விடுகிறது என்பதே நிஜம் .இதற்கொருஉதாரணம் இந்த நாவலில் வரும் பெத்தேல்புரம் ஸ்டீபன் .

ரவியை ஒரு சாதாரண மனிதனாக மதிக்கத் தோன்றவில்லை,படு ஆபத்தான சூழ்நிலைப்பிராணியாகவே சித்தரிக்கப் பட்டிருக்கிறான். எந்நேரமும் அதென்ன மனஉளைச்சலோ?! அறிவு ஜீவியாகவும் இருக்க வேண்டும் ,அழகாகவும் இருக்கவேண்டும் மனைவி என்ற எதிர்பார்ப்பு பொதுப் புத்தி என்று தவிர்த்துவிட்டாலும் கூட கதைப் படி என்ன தான் சாதனையாள இயக்குனராக இருந்தாலும்இத்தனை துஷ்ட சிந்தனை தேவை இல்லை என்றே எண்ண முடிகிறது.அடுத்தொரு இமாலயவெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டிய நிர்பந்தம் என்று அவனது சலனங்களைசமாளிக்கத் தேவை இல்லை. இந்த நாவல் முழுக்கவுமே அவன் தன்னைப் பெரியஇவனாகத் தான் நினைத்துக் கொண்டு உலவிக் கொண்டிருக்கிறான்.

//இது கன்யாகுமரி தானா ? கன்யாகுமரி தான் ஆனால் அவனுடன் சேர்ந்துஅந்நகரையே கை விட்டு விட்டு மற்ற அத்தனை பெரும் சென்றுவிட்டிருந்தார்கள்,வெளியேறிவிட வேண்டும் என்ற வேகம் எழுந்த போது தான்பாதைகளோ வண்டிகளோ இல்லாமல் அங்கு அகப் பட்டுக் கொண்டு விட்டதை அறிந்தான்//

இப்படி அவன் அகப்பட்டுக் கொண்டு திணறுவதாகக் கதை முடிகையில்எதிர்பார்த்தது போலவே சந்தோசம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

நாவலில் ஜெய மோகனின் சில வார்த்தைப் பிரயோகங்களும் அவற்றின்பயன்பாடுகளும் மிக்க ஆழமானவை. தன் கல்லூரிக் கால தோழியும்,காதலியுமானவிமலாவின் பாதங்களைப் பற்றி ரவி நினைத்துப் பார்க்கையில் இப்படி ஒருவாக்கியம் ;

//ஆழத்து வேர் போன்ற அசாதாரமான வெண்ணிறம் //

அவளைப் பற்றியகற்பனைகளில் எல்லாம் நர்கீஸ் போல அவளை எண்ணிக் கொள்வது. அப்படியானால்ஆரம்பத்தில் இருந்தே ரவி விமலாவின் தோற்றத்தில் நர்கீஸை தான்காதலித்திருக்கிறான். என்ன ஒரு ஏமாற்றுத் தனம் ! தன்னைத் தானேஏமாற்றிக் கொள்வதின் உச்சம் இது. ஆனால் எல்லோருக்கும் அப்படித் தான்வாய்க்கிறது. இது உலகநியதி.

நாவல் சொல்ல விரும்பியது பெண்ணின் களங்கமற்ற தன்மையாக இருக்குமென்றுநினைக்கிறன். ஒரு சிறுமியாக ,சகோதரியாக ,காதலியாக,மகளாக காலத்திற்கு தகபெண்கள் கொள்ளும் வேஷங்களில் எதோ ஒரு பொழுதில் அவளது நிஷ்களங்கம்தரிசிக்கப் படுகிறது,அந்த மகா தரிசனத்தை ஆண் அவன் எந்த உறவு முறைகொண்டவனாக இருந்த போதிலும் அவனால் அந்த நிஷ்களங்கத்தின் பரிசுத்தத்தின்முன் இயல்பாய் இருக்க முடிவதில்லை, அந்தப் பெண்ணை அவன் வெற்றி கொள்ளநினைக்கிறான். ,முடியாத பட்சத்தில் அவள் மீது அதீத வெறுப்பை அடைகிறான்.மீண்டும் அன்பைத் தேக்கி குழந்தையாகி அவளிடமே சரணாகதி ஆகிறான்,இந்தசக்கரத்தின் சுழற்சியில் சிக்கிக் கொண்டு வெளி வரத் தெரியாமல்பைத்தியமாகிறான் .

இந்து புராணங்களில் இதனால் தான் சிவனை "பித்தா பிறை சூடி " என்றெல்லாம்பாடி வைத்தார்களோ என்னவோ ?!

தேவியை மணந்து கொள்ள ஸ்தாணுமாலயன் வந்து கொண்டிருக்கிறார்!யுகம் யுகமாய் நீண்டு கொண்டிருக்கும் பயணம் அது...இன்னும் முடியக்காணோம்...தேவி ஸ்தானுமாலயனை எதிர் நோக்கி ஒற்றைக் கல் மூக்குத்தி மினுங்க கடற்கரை மொட்டைப் பாறையில் அர்த்த ராத்திரிகள் தோறும் தவமிருக்கிராளாம்.

ஸ்தாணுமாலயன் சிவன்,விஷ்ணு,பிரம்மா மூன்றும் கலந்த திரி சக்தி ரூபம்.ஆக்கல்,அழித்தல்,காத்தல் மூன்றையும் உள்ளடக்கிக் கொண்ட க்ரியா சக்தி அவன்என்கிறார் ஜெயமோகன் . எத்தனை திறமைகள் இருந்தும் பாவம் இன்னும் தேவியைஆட்கொள்ளக் காணோம்.


காமம் ...யாமம் நாவலின் ஓரிடத்தில் எஸ்ரா இப்படி எழுதி இருக்கிறார்,முசாபர் அலி அத்தர் யாமம் தயாரிக்கும் கலையை தனக்கடுத்த சந்ததிக்கும்கடத்தும் நோக்கத்தில் ஒரு ஆண் குழந்தையைப் பெறுவதற்காக தன்னிலும் மிகஇளைய சுரையா என்ற பெண்ணை மூன்றாம் தாரமாக மணந்து அழைத்துவருமிடத்தில்...
அவளோடான கூடலில் சுரையா அந்த நிகழ்வை கணவனுடனான காமம் தனக்கு மூக்குசிந்தி போடுவதைப் போல தான் என்று நினைத்துக் கொள்வதாக ஒரு வரி.சுரையாவுக்கு வயிற்றுப் பாடே பிரதானமாக இருத்தலைப் போல இங்கு கன்யாகுமரியில் பிரவீனாவுக்கு தான் விருது வாங்கும் நடிகையாவதே பிரதானம்.அதற்காக ரவியைப் புறம் தள்ளி வேணு கோபாலனுடன் சென்று விடுகிறாள் அவள்.

காமம் பெண்களின் கன்னிமையை பாதிப்பதில்லை ,அவள் எதற்காகவோ நீண்டகாத்திருப்பில் தன்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறாள். இதை மிகஅந்தரங்கமான ஓரிடத்தில் அவள் பாதுகாத்து வைத்திருக்க கூடும் ,அந்தஅந்தரங்கத்தை அறிந்து கொள்ள முடியாமல் சதா தோற்றுப் போகும் நிலையில் தான்ஆண் மிக்க குழப்பத்திற்கு ஆளாகிறான். பெண்ணின் மீதான அவனின் வெறுப்பும்விருப்பும் மாறி மாறி இங்கிருந்து தொடங்கி சதா இளைப்பாறுதல் இன்றிசுழன்றடிக்க ஆரம்பிக்கிறது.

இந்த நாவலை கி.ரா வின் கன்னிமை சிறுகதையின் பாதிப்பில் எழுதியதாகஜெயமோகன் கூறி இருக்கிறார் தன் முன்னுரையில். ஒப்பிட்டுப் பார்த்துஏற்றுக் கொள்ள முடிகிறது. கி.ரா வின் நாச்சியாருக்கும் ஜெயமோகனின்விமலாவுக்கும் ...ஏன் பிரவீனாவுக்கும் பெரிதாய் ஒன்றும் வித்யாசங்கள்இல்லை மனதளவில் அவர்கள் எடுத்துக் கொள்ளும் தீர்மானங்களின் அடிப்படையில்.


இந்த நாவலில் ஆட்சேபிக்கத் தகுந்த ஒரே ஒரு இடமென்றால் அது இது தான்.


// அழகில்லாத பெண்கள் ஆண்களை குரூரமானவர்களாக ,அற்பமானவர்களாக,நீதியுணர்வே இல்லாதவர்களாக ஆக்கும் விதத்திற்கு இணையான ஒன்றைக் கூறவேண்டுமெனில் மான் குட்டியை அடித்துக் கிழித்துத் தின்னும் சிங்கத்தின்இயற்கையான குரூரத்தை தான் //

கூடவே கன்யாகுமரியின் ஐதீகம் தேவி ஸ்தானுமலயனுக்காக கடற்கரையில்காத்திருப்பதாகச் சொல்லப் பட்டிருப்பது சரி தான்,ஆனால் ஸ்தாணுமாலயன் ஏன்அவளைக் காக்க வைத்தார்? இன்னும் வராமல் போனதற்கு காரணக் கதைகள்ஏதுமில்லையா? அது சொல்லப் படவில்லை இங்கே ,அதனால் ஒரு முற்றுப் பெறாததன்மை ...ஒரு வேளை எனக்கு மட்டும் தான் அந்த ஐதீகக் கதை முழுமையாகத்தெரியாம்லிருக்கிறதோ என்னவோ! கதை தெரிந்தவர்கள் யாரேனும் ஜெயமோகன் இந்தநாவலில் சொல்லாமல் விட்டதை வந்து முடித்து வையுங்கள்


நாவல் - கன்யாகுமாரி
ஆசிரியர் - ஜெயமோகன்
பதிப்பகம் - கவிதா பப்ளிகேசன் வெளியீடு
விலை - ரூ 90


Friday, December 19, 2008

"மத்தகம்"...ஒரு யானையின் கொம்புகளின் ஊடே கிட்டிய பயண அனுபவம்

ஜெயமோகனின் "மத்தகம்" குறுநாவல் வாசித்தேன் இன்று.

நல்ல ஆழமான அழகான நடை,வாசிக்க...வாசிக்க கதை நீண்டு கொண்டே போவதைப் போல ஒரு பிரமிப்பு எனக்கு."கேசவன்" எனும் யானையை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு கதை நகர்கிறது.யானை இருந்தால் அதற்கு பாகனும் இருந்தாக வேணுமே?கேரளம் திருவட்டாரில் நடைபெறும் இந்தக் கதையில் ;கேசவனைப் பராமரிக்க ஒரு தலைமைப் பாகன் (சீதரன் நாயர்) அவருக்குத் துணையாக இரு துணைப் பாகன்கள்(அருணாச்சலம்,பரமன்) , இவர்கள் மூவருக்கும் எடுபிடியாக சுப்புக்கண்ணு.

இவர்களோடு இன்னும் சில ரசனையான கதாபாத்திரங்களைக் கொண்டு மிக அடர்த்தியாக நகர்கிறது நாவல் .இந்த குறுநாவலை வாசித்து முடித்த பின் அதன் தாக்கம் இன்னும் நீடிக்கிறது.இதே போன்றதோர் உணர்வு ;

நாஞ்சில் நாடனின் "எட்டுத் திக்கும் மத யானை" நாவலை வாசிக்கும் போதும் எழுந்தது .

பொன்னீலனின் "கரிசல் " நாவலை வாசிக்கும் போதும் இதே உணர்வு .

சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த தகழி சிவா சங்கரன் பிள்ளையின் "செம்மீன்" நாவல் முதல் முறை வாசிக்கும் போதும் இதே உணர்வு தான் மேலெழுந்தது .

சொல்லப் போனால் தி.ஜானகிராமனின் "அம்மா வந்தாள் " கூட இந்த அளவு பாதிப்பை ஏற்ப்படுத்தியிருக்கவில்லை. ஏதோ ஒரு இனம் புரியாத சோகம் ...வருத்தம்...வாழ்வின் நிதர்சனம் பற்றிய பயம் இப்படி எந்த வார்த்தை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். ஆனால் சில நாவல்களை வாசிக்கும் போது அவற்றின் செறிவைத் தாங்காமல் ,அவை சொல்ல வரும் விஷயங்களின் கணம் பொறுக்காமல் மனம் அதைப் பற்றியே சில தினங்களாவது எண்ணிக் கொண்டு இருக்க வேண்டிய சூழல் ஏற்ப்பட்டு விடுகிறது...அது மட்டும் நிஜம்.

இயல்பில் இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை.அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்து முடிக்கிறோம்.ஒருவர் வாழ்வை இன்னொருவர் வாழ முடியாது,"சிறைச்சாலையில் அச்சடித்த சோற்றைப் போல விதிக்கப் பட்ட வாழ்வையே நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்".அப்படிப் பட்ட வாழ்க்கையில் தான் எத்தனை இன்பங்கள்..துன்பங்கள்...சுவாரஷ்யங்கள்...அசுவாரஷ்யங்கள் ?!

சில பகிர்ந்து கொள்ளக் கூடியவை .பல விஷயங்கள் யாரோடும் பகிர முடியாத தன்மையுடனும் கடைசி வரை இருந்து விடுவதும் உண்டு. உதாரணம் அடுத்தவர் நமக்குச் செய்யும் துரோகங்களை...ஏமாற்றங்களை நாம் எளிதாக இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்வோம் .அதே சமயம் நாம் யாருக்காவது செய்த துரோகத்தையோ...ஏமாற்றத்தையோ யாரிடம் இதுவரை பகிந்து கொள்ள முடிந்தது?அதை நம் மனசாட்சி மட்டுமே அறியும்.

"மத்தகம்" யானைக் கதை தான்;ஆனால் யானையைப் பற்றிய கதை மட்டும் அல்ல ! யானை என்பது ஒரு அடையாளம் தமிழ்நாட்டில் விவசாயக் குடும்பத்தினர் பசு ,காளை,எருமை மாடுகளை வளர்ப்பதைப் போல கேரளத்தில் வீட்டுக்கு ஒரு யானை வளர்க்கும் பழக்கம் முன்பு உண்டு என்று எங்கோ படித்தேன்,யானை கட்டி தீனி போடுவதைக் காட்டிலும் யானை மேய்ப்பது அதை விடக் கடினம் தான் என்று இதை வாசித்தால் புரியும்.

யானைப் பாகன் பரமன் தான் இதில் கதை சொல்லி .அவன் தனக்குத் தானே பேசிக் கொள்வது போல ,தன் மனசாட்சியிடம் தன் வாழ்வைப் பற்றி பகிர்வதைப் போல கதை நெடுகிலும் அவன் பேசிக் கொண்டே போகிறான் .கதை நிகழ்வது அவிட்டம் திருநாள் உதயமார்த்தாண்ட வர்மா மகாராஜாவின் காலம் .அவரது ஆத்மார்த்தமான அன்பைப் பெற்றதே கேசவன் எனும் யானை,மகாராஜாவின் மீது கேசவன் கொண்ட அன்பும் அத்தகையதேபொதுவில் நாவல் யானைகளைப் பற்றிய நுண்ணிய விவரணைகளோடு நகர்ந்தாலும் கூட ;

அதை ஒட்டியே அன்றைக்கு இருந்த ராஜ குடும்பத்தின் அரசியல் சூழல் ...பாகன்களின் நடைமுறைக் கஷ்டங்கள்,இவற்றோடு அந்தக் காலத்தில் பெண்களின் நிலை,கூடவே கல்கி "பொன்னியின் செல்வனில்" விவரித்ததைப் போலவே வெள்ளம் வந்தால் அந்நாளைய மக்கள் அடைந்த துன்பங்கள் குறித்து இதிலும் சற்று விளக்கமாகவே செய்தி உண்டு.கேசவன் மட்டும் அல்ல அப்போது பட்டத்து யானையாக இருந்த மற்றொரு யானையைப் (நாராயணன்) பற்றியும் சுவாரஷ்யமாக விளக்கும் பகுதி ஒன்று நாவலில் உண்டு .

மொத்தத்தில் யானைகளும் மனிதர்களைப் போலவே தாம் மனதில் நினைத்ததை குறிப்பால் உணர்த்தக் கூடியவை என்று ஐயம் வந்து விடிகிறது சில இடங்களில்.கேசவனின் யானைக் கோபம் பல இடங்களில் பயத்தை ஏற்படுத்தினாலும் அவன் மீது ஒரு மரியாதையும் இழையோடவே செய்கிறது.

//"”ஒம்மாணை அண்ணா, ஒருநாள் இல்லெங்கி ஒருநாள் இந்தச் சவத்தை¨யும் வெஷம் வச்சு கொன்னுட்டு நானும் சாவேன். பாத்துக்கிட்டே இரும்…” என்றான் சுப்புக்கண். "//இந்த இடம் போதும் பாகன்கள் யானைகளைப் பராமரிப்பதில் உள்ள சிக்கல் பற்றி உணர்ந்து கொள்ள .

//நான் அதன் கண்களைப் பார்த்தேன். ஒரு சிறிய சிரிப்பு, மோதிரக் கல்லுக்குள் வெளிச்சம் தெரிவதுபோல, தெரிந்தது போல் உணர்ந்தேன்.//

சின்ன வயதில் ஊர்ப்பக்கம் பேசிக் கொள்வார்கள் "வில்லிக் கண்ணு சொளகுக் காது " என்று யானையின் காது பட சொல்லவே கூடாது அப்படி சொல்லி விட்டால் போச்சு யானை அப்படிச் சொன்னவர்களை விடவே விடாது விரட்டி...விரட்டி அடிக்கும் என்று.உள்ளூர பயம் இருந்தாலும் ...இதெல்லாம் சும்மா சுத்த ஹம்பக் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் !!!இதுநாள்வரை.இப்போது என் எண்ணம் மாறி விட்டது இந்த கதை படித்ததில் இருந்து ,

மோப்ப சக்தியும்,ஞாபக சக்தியும் யானைக்கு அதிகம் தான் போல !இல்லாவிட்டால் தன்னை ஆதரித்த தன் ஆப்த நண்பரான மஹாராஜா இறந்து விட்டதை ஊருக்கு முன்னாள் ஒரு யானையால் ஊகிக்க இயலுமா?மஹாராஜாவின் அன்பைப் பெற்று விட்டோம் என்று கேசவன் அறிந்ததால் தான் அதன் அட்டகாசம் அதிகளவில் இருந்ததோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் வண்ணம் கேசவன் தானும் தன்னை ஒரு மகாராஜாவாகப் பாவிப்பதைப் போல பல இடங்களில் அதன் செயல்பாடுகள் இதில் சித்தரிக்கப் பட்டுள்ளன.

தன்னை ஏசியதால் தலைமைப் பாகன் சீதரன் நாயரை தும்பிக்கையால் சுழற்றி வீசி காலால் மிதித்து ஒரு காலை செயல் பட விடாமல் அடித்து விட்டுப் போகும் இடமாகட்டும்...அதே சீதரன் நாயரை வழிப் பயணத்தின் போது யாரோ ஒரு வண்டிக் காவலன் இழிவாகப் பேசியதைக் கேட்டதும் அக்கணமே அவனை துதிக்கையால் பிய்த்து எறிந்து கொல்லும் போதாகட்டும் கேசவனைப் பார்த்தால் பயம் தான் வருகிறது.

கதையில் நிறைய மலையாள வாடை வீசினாலும் அதன் போக்கில் நம்மை அறியாமல் நாம் ஒன்றித்தான் போய்விட வேண்டும் .ஏதோ ஒரு நல்ல திரைப் படம் பார்த்த எபெக்ட் தான் வருகிறது,அஸ்டமங்கலம்...பற்றிய விளக்கம்...யானையை அலங்கரிக்கும் விதம்...வர்ணனைகள்...யானையைப் பற்றிய உருவ வர்ணனைகள்,எல்லாம் அருமை.

பெண்களின் நிலை தான் அந்நாளில் சகிக்க முடியவில்லை ,பெண்கள் காமத்திற்கு மட்டுமே என்ற எண்ணம் அப்போது இருந்திருக்க வேண்டும்?! நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்கள் சாமர்த்தியமானவர்களாக காட்டப் பட்டாலும்,போகத்திற்கு மட்டுமே அப்போது பெண் பயன்பட்டால் என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது .அம்பிளி எனும் பெண் "பத்துப் பொன் கொண்டு வந்தால் போதும் அவளிடம் ஒரு இரவைக் களிக்கலாம்" எனும் வரிகள் அவள் மீது பரிதாபத்தையே ஏற்படுத்துகிறது . மோகத்தில் தன்னை மறிக்கும் கேசவனின் துணைப் பாகன் பரமனிடம் அவள் சொல்வதாக வரும் வரிகள் "கட்டணுமா?....கெடக்கனுமா? " இதில் அவளின் சாமர்த்தியம் தெரிந்தாலும் ஒரு திடுக்கிடலையும் ஏற்படுத்துகிறது .

தன் உடனிருக்கும் பாகன் அருணாச்சலத்தை மிரட்டி அவனது ஆசைநாயகியை பரமன் அடைவது அவன் மீது பெருத்த கோபத்தை தருகிறது .முடிவில் எந்த நாடாக இருந்தால் என்ன? எந்த ஊராக இருந்தால் என்ன? பெண்ணை காரணமாக வைத்தே பிரச்சினைகள் எழுகின்றன .அதற்கு அவள் எப்படியாவது காரணப் படுத்தப் படுகிறாள் என்ற நிஜம் முகத்தில் அறைகிறது.காமம் கண்ணை மறைக்கையில் நட்பு...சொந்தம்...ஆசான்...அணுக்கன்...என்ற உறவுகளெல்லாம் மரியாதை இழக்கின்றன இதை அருணாச்சலத்தை தந்திரமாக கொன்று விட்டு பரமன் அந்தப் பழியை கேசவன் மீது போடும் போது உணரலாம்.

நாவல் முழுமையிலும் கேசவனே ஆட்சி செய்கிறான் கூடவே பரமனின் வரையறுக்கப் படாத...திட்டமிடப் படாத தன் போக்கில் நடத்தப் படும் துரோகங்களும் காணக் கிடைக்கின்றன .அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒவ்வொரு கட்டமும் கூடவே "இதைத் தவிர வேறு என்ன செய்வது? " என்ற உணர்வையும் ஏற்படுத்தாமல் இல்லை.

கடைசியில் மஹாராஜா இறந்ததும் கேசவன் தன்னைத் தானே ஒடுக்கிக் கொண்டு முந்தைய துணைப் பாகனும் சீதரன் நாயர் படுக்கையில் வீழ்ந்ததும்...அருணாச்சலமும் கொள்ளப் பட்ட பின் தற்ப்போதைய தலைமைப் பாகனான பரமன் முன்னிலையில் ஒரு அறியாக் குழந்தை போல பயந்து சொல் பேச்சு கேட்டு கூனி குறுகி நிற்கும் காட்சியில் நாவலை வாசிப்பவர் நெஞ்சில் துக்கமே மிஞ்சுகிறது .

"மத்தகத்தில் ஏறி அமர்கிறான் பரமன்"

கதையில் ஓரிடத்தில் மஹாராஜா சொல்வதாக ஒரு வரி வரும்.

//”இனி என் கேசவனுடெ மீதெ ஆதிகேசவனும் ஞானும் மாத்ரமே கேறுக பாடுள்ளு. வேறெ ஆரு கேறியாலும் கேறியவனுடைய தல வெட்டான் ஞான் இதா கல்பிக்குந்நு…” //

எப்பேர்ப் பட்ட ராஜகட்டளை ?!!

//இரு கைகளும் மார்புகளை மூடி வாய்பொத்தி, குனிந்து நின்று ஆசான் மிகமெல்லிய குரலில் ”அடியன். உத்தரவு” என்றார். அதன்பிறகு ஆறாட்டு’ எழுந்தருளல் இரண்டுக்கும் ஆதிகேசவனின் உற்சவத்திடம்புடன் குட்டிப்போத்திகள் மட்டும் கேசவன் மீது ஏறிக்கொள்வார்கள். நினைக்கும் போதெல்லாம் திருவனந்தபுரத்தில் இருந்து கேநசவனைப்பார்க்க வரும் இளையதம்புரான் ஏறிக்கொண்டு ஆற்றுப் படுகையில் அலைவார். வேறு யாரும் அவன்மீது ஏறியதே இல்லை//

அதற்குப் பின் அதன் மீது வேறு யாரும் ஏறும் தைரியமே இல்லாதிருந்த நிலையில் இறுதிக் கட்டத்தில் பரமன் தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல சொல்லவான்.

//மெல்ல ஒரு அடி எடுத்து வைத்தேன். அவன் தன் துதிக்கையை சுருட்டிக்கொண்டு உடலைக் குறுக்கிக் கொண்டான்.
நான் சிலகணங்கள் அசையாமல் நின்றேன். பின்பு புன்னகை புரிந்தேன். என் பிரம்பை வீசியபடி கேசவனை நெருங்கினேன். நான் நெருங்க நெருங்க அவனுடைய காதுகள் நிலைத்தன. அருகே போய் அவனுடைய கொம்புகளின் அருகே நின்றேன். பிரம்பால் அவன் காலை அடித்தபடி ”ஆனே, காலெடு ஆனே” என்றேன். கேசவன் மிக மெல்லத் தன் முன்னங்காலைத் தூக்கி மடித்துக் காட்டினான் அதை நம்ப முடியாதவன் போல அவனுடைய கண்களைப் பார்த்தேன். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து நீண்ட தடமாக இறங்கியிருந்தது. மடித்த கால்களில் கால் வைத்து எம்பி கழுத்துக் கயிற்றைப் பிடித்து மேலேறி அவனுடைய உயர்ந்த மத்தகத்தின் மீது அமர்ந்து கொண்டேன்.//
முற்றும்.

இந்த நாவல் எல்லோருக்கும் பிடிக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் புரிந்து வாசித்தால் அருமையான நாவல்.