Monday, May 17, 2010

தேவி...புவனாக்களின் டாஸ்மாக் கணவர்கள்

மீள் உறக்கங்களுக்கு
தயாராகி நிற்கும் ஓராசிரியர் பள்ளிகள்.
மத்யானச் சோற்றுக்கு மாணவப் போர்வையில்
காலை முதல் காத்திருக்கும் பசித்த கோழிக் குஞ்சுகள் ;
பருந்துப் பார்வையில் எங்கேனும் தட்டுப்படத்தான் செய்கின்றன
இன்றும் கூட ;
ஒரு ரூபாய் அரிசி பாலீஸ் போடப்பட்டு
மறுபடி மளிகைக் கடை சாக்குகளில்
ஏழைகள் வாங்க இயலா விலையில் ;
உலை கொதித்தடங்கும்
நீர்க்குமிழிகளாய்
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
உரக்கக் கத்துகிறது காலமயக்கங்களின்றி
"டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை "
மான் ஆடி...மயில் ஆடி குடும்பம் குழந்தை குட்டிகள் ஆடி
குட்டையில் வீழ்ந்த இனமான தமிழ் சமுதாயம்.
அடுத்தென்ன ...!
கேஸ் அடுப்பாமே ?!
வாங்க விற்க என்னை அணுகுங்கள்
அறிவிப்பு பலகை தொங்காத குறை;
இங்கிட்டு வாங்கி
அங்கிட்டு வித்துருவோம்ல
எல்லோரும் வியாபார காந்தங்களே அன்றேனும் .
பணம்
பத்திரிகை
சேனல்
அதிகாரம்
இவை போதும் அரசமைக்க .
மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் ஆளும்
மக்களாட்சி இது மக்களாட்சி
வாழ்க குடிமக்கள் ,
யார் எக்கேடு கெட்டால் யாருக்கென்ன?!
டாஸ்மாக் இருக்கும் வரை
தடையின்றி தாக சாந்தி,
எடுக்கலாம் எப்போதும் வாந்தி
மற்றதெல்லாம் வெறும் காராபூந்தி .

NOTE :

வீட்டு வேலைக்கென்று தேவி என்ற பெண் என் வீட்டுக்கு கடந்த ஒரு வருடமாய் வந்து போகிறாள்,வேலை சுத்தமாக இருக்கும்,கையும் படு சுத்தம்,அளவான பேச்சு.,மொத்தத்தில் நல்லவள்,இரண்டு மகன்கள் மற்றும் கணவரோடு எங்கள் தெருவில் தான் அவளும் வசிக்கிறாள்.கணவர் ஒரு மருத்துவரிடம் டிரைவர் ஆக வேலையில் இருப்பதாகக் கூறி இருக்கிறாள். விடிகாலையில் முறைவாசல் செய்வதில் தொடங்கும் அவளது வேலை நேரம் என் வீடு உட்பட இன்னும் நான்கைந்து வீடுகளில் முடிய எப்படியும் பிற்பகல் மூன்று மணி ஆகி விடும்.இந்த வேலைகளை செய்வதால் அவளுக்கு கிடைக்கும் மாத சம்பளம் நான்காயிரம் ,அவளது கணவருக்கு ஐந்தாயிரம் மாத சம்பளமாம்.ஆனால் அவர் அதை அப்படியே வீட்டுக்குத் தருவதில்லையாம்,தினமும் டாஸ்மாக் போகா விட்டால் அந்த ஆளுக்கு பைத்தியம் பிடிக்குமாம்,அப்படிக் கரைத்தது போக மிஞ்சும் சொற்ப பணம் மகன்களின் அரசுப் பள்ளி கட்டணம் கட்டக் கூட போதவில்லை என்று தேவி பலமுறை சொல்வதுண்டு,கணவரிடம் எதிர்த்து வாதாடியதில் ஒரு முறை அந்த மனிதன் இடுப்பில் எட்டி உதைக்க பாவம் இவள் மூன்று நாட்கள் லீவு எடுத்துக் கொண்டு அடுத்த நாள் அழுது வீங்கிப் போன முகத்தோடு வேலைக்கு வந்தாள்.

இவள் மட்டும் அல்ல சென்ற வருடம் என் வீட்டில் வேலை செய்து பாதியில் காணாமல் போன புவனாவுக்கும் இதே தான் பிரச்சினை,புவனாவின் கணவன் குடிக்க காசு கேட்டு அவளை அடிப்பதாக அவள் ஒருநாளும் சொன்னதில்லை கடைசியில் ஒருநாள் ஒரு வாரம் லீவெடுத்து வலது பக்க காதறுந்து மறுநாள் வேலைக்கு வரும் வரை,குடிக்க காசில்லை என்று மனைவியின் காதில் இருந்த கம்மலை அந்த ஆள் பிடுங்கிய வேகத்தில் அறுந்த காது அது.

ஒரு தேவி...ஒரு புவனாவின் கதை மட்டும் தானா இது!

இலவசங்களால் இவர்களின் துயரம் குறைந்ததாய் காணோம்.

9 comments:

நட்புடன் ஜமால் said...

கொடுமை தான் ... :(

ஆனாலும் இலவசங்கள் இல்லாட்டி திருந்தவா போறாங்க ...

நட்புடன் ஜமால் said...

கஷ்டப்பட்டு உழைப்பதையே இவங்க வீனாதான் ஆக்குறாங்க

இதுல இலவசத்தை என்ன செய்வாங்க,

அரிசிக்குன்னு வீட்டுக்கு குடுக்குற காசும் இப்போ சரியா கிடைக்காது

அதான் 1 ரூபாய்க்கு கிடைக்குதுல்ல :(

அபி அப்பா said...

:-((((

VELU.G said...

சரியாகச் சொன்னீர்கள்

கவிதை அருமை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கொடுமை ,அன்றைக்கு மட்டும் வியாபார காந்தம் சரியாச்சொன்னீங்க..

அன்புடன் அருணா said...

:(

movithan said...

இவை போதும் அரசமைக்க .//
சபாஷ்

vijayan said...

விஷகிரிமிகள் பரவிவிட்டன என்று அன்றே சொன்னார் தீர்க்கதரிசி பெரியவர் பக்தவச்சலம்.

KarthigaVasudevan said...

நன்றி ஜமால் (திருந்த மாட்டங்க தான்)

நன்றி அபிஅப்பா ...

நன்றி VELU .G

நன்றி அன்புடன் அருணா ...

நன்றி முத்துலெட்சுமி ..

நன்றி மால்குடி ...

நன்றி விஜயன் ...