Wednesday, November 10, 2010

யாருக்கு தருவீர்கள் மனநல சிகிச்சை ?!



கோவை சிறுவர்கள் இரட்டைக் கொலை சம்பந்தமாகவும் குற்றம் சாட்டப் பட்ட மோகன் ராஜ் என்கவுண்டர் தொடர்பாகவும் பல்வேறு கருத்துகள் நிலவும் இந்த வேளையில் பலரது முக்கியமான ஆச்சரியம் என்னவேனில் நாடெங்கும் பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவதும் குற்றம் வெளித் தெரியாமல் இருக்க கொலை செய்யப் படுவதும் தொடர்ந்து பத்திரிகைகள் தொலைகாட்சி ஊடகங்கள் வாயிலாக பரவலாக தினசரி நிகழ்வாக ஆகி விட்ட இன்றைய நிலையில் இந்த கொலைகளுக்கு இத்தனை முக்கியத்துவம் ஏன் என்பது பெருவாரியானவர்களின் சந்தேகமாக ஆகி விட்டிருக்கிறது. 

     

உலகில் எங்கெலாம்  குழந்தைகள்   மனிதத்தன்மையற்ற மிருகங்களால் துன்புறுத்தப் படுகிறார்களோ அங்கெலாம் உடனே மகாப் பெரிய கடவுள் பிரத்யட்சமாகி அவர்களை தண்டிப்பானே எனில் இந்தச் சந்தேகம் அவர்களுக்கு வந்திருக்காது.


கடவுள் கூட பாரபட்சம் பார்ப்பாரென்றே நினைக்க வழி இருக்கிறது பாருங்கள்


சொல்ல வந்த விஷயம் அதுவல்ல;

அந்த இரு குழந்தைகளும் கொலை செய்யப் பட்ட விதம் ,அவர்களுக்கு நன்கு அறிமுகம் ஆன பள்ளி வேன் டிரைவரால் ,உங்களுக்குத் தெரியாதா தமிழகத்தில் முக்கால்வாசிப் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தனியார் வேன்களையும் ஆட்டோக்களையும் நம்பி இருக்கின்றனர் என்பது. அப்படிப் பட்ட நிலையில் ஒரு கால்டாக்சி டிரைவரால் திட்டமிட்டு நடத்தப் பட்டதாக ஒப்புக் கொள்ளப் பட்ட இந்த கொடூரச் செயல் அதீத மிரட்சியுடன் தான் பலராலும் கவனிக்கபட்டுள்ளது என்பதில் என்ன பெரிய ஆச்சர்யம் இருக்கக் கூடும்?

அந்தக் குழந்தைகளின் பாட்டி அவர்கள் இருவரும் வேனில் ஏறும் போது உடனிருந்து கண்காணித்திருக்கிறார். மீண்டும் மோகன்ராஜ் வேலையில் இருந்து நின்று விட்டார் என்ற செய்தியும் மற்றொரு டிரைவரால் உடனே தெரிவிக்கப் பட்டிருக்கிறது. உடனுக்குடன் பள்ளியில் குழந்தைகள் இருக்கிறார்களா என்பதை அறிந்து கொண்டு உடனே சந்தேகித்து தேடத் துவங்கி இருந்தால் ஒரு வேளை அந்தக் குழந்தைகள் அட்லீஸ்ட் உயிர் சேதம் இல்லாமல் மீட்கப் பட்டிருக்கக் கூடும் என்ற பரிதவிப்பெல்லாம் இப்போது வருகிறது .


யாருடைய மெத்தனம் இந்த இரட்டைக் கொலைகளுக்கு காரணம்?

பள்ளிக்கு குழந்தைகளை வேனில் அனுப்பும் பெற்றோர்களுக்கு எல்லாம் இது மிக அதிர்ச்சிகரமான மட்டுமல்ல உள்ளுக்குள் நடுக்கத்தை ஏற்படுத்திய செய்தி அந்த வகையில் கூட இந்த செய்தி வழக்கத்தை விட அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கலாம் .

மோகன் ராஜ் மட்டுமே குற்றவாளி என்பதை அவனது என்கவுன்டருக்குப் பின் முழுவதுமாக நம்ப இயலவில்லை. இந்த கொடூரச் செயலுக்கு நிஜ காரண கர்த்தாவாக அதிகார பலமிக்க அந்தக் குழந்தைகளின் தகப்பனாரின் தொழில் முறை எதிர்கள் அல்லது வேறு எதோ ஒரு காரணத்திற்காக எதிரிகள் ஆனவர்கள் (இந்த நாட்டில் ஒருவருக்கொருவர் எதிரிகள் ஆவதற்கு காரணங்களுக்கா பஞ்சம்! ) இப்படி வேறு எவரேனுமாக இருந்து மோகன்ராஜ் போன்றோரை எய்து விட்டிருக்கக் கூடும் எனவும் சந்தேகிக்க இடமிருக்கிறது. சாட்சியங்கள் அற்ற நிலையில் இன்னும் சந்தேகங்கள் வலுப்பெறவே செய்கின்றன. போலீஸ் அவனை கொன்றது சரி தான் அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இத்தனை அவசரம் ஏன் என்னுமிடத்தில் எதையோ அல்லது யாரையோ மறைக்க இப்படி என்கவுண்டர் செய்தார்களோ என்ற பலத்த சந்தேகம் தோன்றுவது தவிர்க்க முடியாதது.

நண்பர் சென்ஷியின் buzz செய்தி

//கடந்த ஏழாம்தேதி திருக்காட்டுப்பள்ளி அருகே கீர்த்திகா எனும் பத்து வயது சிறுமி பாலியல்  உங்களுக்கு தேவையில்லாமல் போகலாம். ஆனால் எட்டாம் தேதி இந்த செய்தியை படித்தவர்கள், கோவை சம்பவத்துக்கு நிகராக இந்த செய்திக்கும் கொந்தளித்தவர்கள், அதை அக்கறையோடு பின்தொடர்ந்தவர்களின் வசவுகளை நான் முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன். இந்த பட்டியலில் வராதோர் கொஞ்சம் சிந்தியுங்கள், உங்கள் புறக்கணிப்பைப் பற்றியும் உங்கள் ஊடகங்களின் பாராமுகத்தைப் பற்றியும்.//

இது மட்டுமல்ல சென்ஷி இப்படி பட்டியலிட ஏராளமான செய்திகள் இருக்கின்றன. சொல்லப் போனால் அந்த செய்திகளை பின்தொடர்ந்தால் நாம் ஒரு நிமிடமேனும் நிம்மதியாய் இருக்க முடியாது. தினம் தினம் அத்தனை அநியாயங்கள் கண்ணில் படும் செய்திகள் அப்படி.

பெயர் ஊர் ஞாபகத்தில் இல்லை ,நான் வாசிக்க நேர்ந்த சில சில சம்பவங்களை இங்கே தருகிறேன் ,படித்துப் பாருங்கள் ;

கொடைக்கானலில் என்று நினைவு ஒரு பாதிரியார் அனாதைக் குழந்தைகளுக்கு என ஆசிரமம் நடத்தி அதற்கு அயல்நாட்டு கிறிஸ்தவ அமைப்புகளிடம் இருந்து நிதி வசூல் செய்து வந்திருக்கிறார் ,அந்தப் பாதிரியாரின் தினசரி நடவடிக்கை என்ன தெரியுமா? சொல்லித் தான் தீர வேண்டும் பருவம் அடைந்த அடையாத என்ற பாரபட்சமே இல்லாமல் பெண் குழந்தைகள் அத்தனை போரையும் தனது வரைமுறையற்ற காமத்திற்கு பலியாடுகள் ஆக்கி இருக்கிறான் . செய்தி எப்படியோ கசிந்து அந்தக் குழந்தைகள் காப்பற்றப் பட்டதாக நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது. இப்போது அந்தக் குழந்தைகள் என்ன ஆனார்கள் ? அந்தப் போலி பாதிரியார் சிறையில் தள்ளப் பட்டானா சுட்டுக் கொள்ளப் பட்டானா என்பதெல்லாம் வெறுமே பரபர செய்திகளுக்காக பத்திரிக்கை வாசிக்கும் நேயர்களுக்கு அனாவசியம் .

மற்றொன்றும் கொடைக்கானல் செய்தி தான் அங்கே ஒரு பள்ளியின் தாளாளர் பள்ளி ஹாஸ்ட்டலில் தங்க படித்து வந்த பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக காவல் துறை விசாரணைக்குட்படுத்தப் பட்டார் என்பதும் சமீபத்திய பத்திரிக்கை செய்தி தான்.



இவர்களை விடுங்கள் அரசு டாஸ்மாக்கில் அள்ளும் லாபம் எவ்வளவோ எனக்குத் தெரியாது ,ஆனால் மனதை திடப் படுத்திக் கொள்ளுங்கள் எவனோ ஒரு மொடாக் குடி நிர்மூடத் தகப்பன் தன மனைவியிடம் கொண்ட சந்தேகம் அளவற்றுப் போய் தான் பெற்ற பெண் குழந்தையையே பாலியல் வன்முறை செய்திருக்கிறானாம். இவ்விடத்தில் பெண் குழந்தை அவனுக்குப் பிறந்ததா இல்லையா என்று ஆராய்தலை காட்டிலும் அதிர்வைத் தந்த விஷயம் அந்தக் குழந்தையின் மீது தொடர்ந்து நடத்தப் பட்ட இந்த கொடூரத்தை பெற்ற தாயே பல நாட்கள் மறைத்து வந்திருக்கிறாள் என்பது தான்.

யாருக்குப் பிறந்திருந்தாலும் குழந்தைகள் குழந்தைகளாக மட்டுமே நடத்தப் பட வேண்டும் என்பதில் யாருக்கேனும் இங்கே மாற்றுக் கருத்து உண்டா?!

குழந்தைகள் என்ன தான் செய்வார்கள்?! கணவன் மனைவிக்குள் சந்தேகம் மிஞ்சிப் போனால் இப்படிப் பட்ட வக்கிரங்களை கண்ணாரப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதை விட அரசு அல்லது தனியார் அநாதை ஆசிரமங்களில் அல்லது தொண்டு நிறுவனங்களில் சேர்த்து விட்டுப் போவதற்கென்ன ?

அங்கேயும் நம்பகத் தன்மை கேள்விக்குறி என்றால் !

இந்த ஒரு செய்தி மட்டுமல்ல இதே ரீதியில் பாதிக்கப் பட்ட இன்னும் சில பெண் குழந்தைகள் மற்றும் அவர்களது அம்மாக்கள் அப்பாக்களின் புகைப்படங்களோடு ஜூ.வி யோ குமுதம் ரிப்போர்ட்டரோ எதுவோ செய்தி வெளியிட்டிருந்தது. பெயரளவில் அப்பாக்களாகி விட்டால் போதுமா ,அந்த உறவைக் கொச்சைப் படுத்தும் இவர்களை என்ன செய்வது

முன்னெப்போதோ சில ஆண்டுகளுக்கு முன் ஜூ.வி யில் ஒரு தொடர்கதை (ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப் பட்டது ) வாசித்த நினைவு வருகிறது.

சிந்தியா என்ற பெண் தான் கதையின் மூலம் அவள் காவல் துறையில் உயர் பதவி வகித்த தன் தகப்பனால் இதே ரீதியில் பலாத்காரம் செய்யப் பட்டதால் மனசிதைவுக்கு ஆளாகி முடிவில் தானும் திட்டமிட்டு காவல் துறையில் இணைந்து தன் தந்தையையும் தந்தையின் தகாத நடவடிக்கைகள் தெரிந்தும் பேச்சற்று கோழையாய் இருந்த தாயையும் கொடூரமாக கொலை செய்கிறாள். இந்தக் கதை வாசித்த அந்நாளில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது .

இன்னொரு செய்தி இரண்டரை வயதுக் குழந்தையை மில் வேலைக்கென்று ஓசூரில் பஞ்சம் பிழைக்க பீகாரில் இருந்து தமிழகம் வந்த மூடன் ஒருவன் அதைத் தூக்கிக் கொண்டு போய் அநியாயம் செய்திருக்கிறான்.குழந்தையை கொல்லவும் செய்திருக்கிறான்.

இன்னும் பல செய்திகள் இப்படி , ஆக ஊடகங்களில் குழந்தைகளுக்கு எதிரான பலதரப் பட்ட அநீதிகளை தினமும் நம்மில் பலரும் வாசித்துக் கொண்டு தான் இருக்கிறோம் ;ஒவ்வொன்றாய் பட்டியிலிட்டால் ஒட்டு மொத்தமாய் வாசிப்பவர்களுக்கு பைத்தியம் பிடிக்கும் .

சிலர் சில செய்திகளை வாசிக்காமல் தவற விட்டிருக்கலாம் .செய்தி ஒன்று தான் நாட்டில் எத்தனை சட்டங்கள் போட்டாலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறையவில்லை. பெற்றோர்கள் இன்னும் தங்களது ஜாக்கிரதை உணர்வை அதிகப் படுத்திக் கொண்டு சதா தங்களது குழந்தைகளின் மீதான கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது .

இங்கே பலரது கேள்வியும் ...சுடப்பட்டவனுக்கு பின்புலத்தில் அதிகார பலமோ ,பணபலமோ இருந்திருப்பின் இந்த என்கவுண்டர் நடந்திருக்காது என்பதாக இருப்பதால் ஒன்றை மறந்து விடக் கூடாது , நாம் அறிந்தவை அனைத்துமே ஊடகச் செய்திகள் மட்டுமே.

உண்மையில் நடந்தது என்ன என்பதைக் குறித்து முழுமையான நிஜங்கள் நமக்குத் தெரியாது.மோகன்ராஜ் தன் வாய்மொழியாக குற்றத்தை ஒத்துக் கொண்டான் என்பது நிஜம் எனில் (அந்தக் குழந்தைகளை எப்படியெல்லாம் கடத்தி எப்படியெல்லாம் சித்திரவதை செய்து எப்படி ஓடையில் மூழ்க விட்டுக் கொன்றோம் என மோகன் ராஜும் அவனது கூட்டாளியும் காவல் துறையினரிடம் விவரித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன,உண்மையில் கொலை செய்யாதவன் இப்படியெல்லாம் விவரிக்க வேண்டிய அவசியம் என்ன? !)அவனை சுட்டுக் கொன்றதில் மேலே பேசவோ விவாதிக்கவோ என்ன இருக்கிறது.

கன்னட பிரசாத் குறித்த பர பரப்பு செய்திகளின் போதென்று நினைக்கிறேன், எந்தப் பத்திரிகை என்று நினைவில்லை பழுத்த அரசியல் பெரும் புள்ளி ஒருவருக்கு பள்ளிச்சிறுமிகள் என்றால் அத்தனை விருப்பமாம்! மகாநதி திரைப்படக் கதை தான். படத்தை போல எந்த ஒரு அப்பாவும் இப்படிப் பட்ட பெரும் புள்ளிகளை கொன்று மாடியில் இருந்து வீசியதாக ஊடகச் செய்திகள் எதுவும் காணோம் .

இந்த நாட்டின் சாபக்கேடு இது. எளியவர்கள் என்ற நிலை இருக்கும் வரை வலியவர்கள் எனும் நிலையும் இருந்து கொண்டிருக்கும் தானே!

இதே கொலைகளை அதிகார பலமிக்க ஒருவன் செய்திருந்தால் அவனையும் என்கவுண்டர் செய்வார்களா என்று விவாதித்து தயவு செய்து செய்தியை திசை திருப்பாதிர்கள். யார் செய்திருந்தாலும் அவர்கள் கொல்லப் பட வேண்டியவர்கள் தான். ஆனால் எத்தனை பேர் அப்படிக் கொல்லப் பட்டார்கள் என்று பதில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள் ...பூனைக்கு மணி கட்டுவது யார்? ! 

அதிஷாவின் தளத்தில் வாசித்தது ...

//சமூக குற்றங்களுக்கு மரணதண்டனைகள் எப்போதும் தீர்வாகாது. அதற்கான வேரை கண்டறிந்து அதை களைவதே சிறந்தது. உண்மையில் மோகன்ராஜிற்கு தேவை நல்ல மனநல மருத்துவர். அவனை இந்த குற்றத்திற்கு தூண்டியது எது என்பதை கண்டறிந்து இன்னொரு முறை இப்படி ஒரு வக்கிரம் நடக்காமலிருக்க வேரிலேயே பிரச்சனைகளை தீர்க்க முனையவேண்டும். ஆனால் மக்களுடைய மனதில் ஒரு இன்ஸ்டன்ட் மகிழ்ச்சியை அளிப்பதன் மூலம் எதை மறைக்க முயல்கிறது தமிழக அரசு. இங்கே ஒவ்வொரு நாளும் இதுமாதிரியான ஆட்கடத்தல்களும் கொலைகளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதில் மாட்டிக்கொண்ட ஒருவனை கொன்றாகிவிட்டது. மற்றவர்கள்?//


இந்தக் கொலைகள் மற்றும் தொடர்ந்த என்கவுண்டர் மூலம் ஒரு விஷயம் தெளிவாகிறது.அது  மக்களின் மாறுபட்ட மனநிலைகள். மோகன்ராஜுக்கு அளிக்கப் பட்டிருக்க வேண்டியது என்கவுண்டர் அல்லது மன நல சிகிச்சை என்போருக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது ;
 
ஈழத்தை ஏன் மறந்தீர்கள் ?
 
அங்கே நிகழ்த்தப் பட்ட இன்னும் நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைகளின் பொறுப்பாளர்களுக்கு  எல்லாம் மன நல சிகிச்சை தான் தரப்பட்டாக வேண்டுமா? முடியுமா அது? ஏன் வீரப்பனைத் தேடுகிறோம் என்று பழங்குடிப் பெண்களை பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினார்களே தமிழக ,கர்னாடக காவல் துறையினர் அவர்களுக்கும்  மன நல சிகிச்சை தர முடியுமா? சதாம் உசேனை ஏன் தூக்கில் போட்டார்கள் ? அவருக்கு மன நல சிகிச்சை தந்திருக்கலாம் தானே? இன்னும் ஹிட்லர் ,இடி அமீன் இப்படி பட்டியலை நீட்டிக் கொண்டே போனால் நம் பெயரும் கூட கடைசியில் வரும் அபாயமிருக்கலாம்.யாருக்கு மனநல சிகிச்சை அளிப்பது? 
 
எந்த படம் என்று நினைவில்லை,
 
"  பதினோரு வயசுப் பொண்ணு ,கையில் ஒரு மிட்டாயை வச்சு அழுத்தி காரியத்தை முடிச்சிட்டேன் "  என்று சிரிப்பான் ஒரு சிறுமியைக் கொன்றவன் ;; கேள்வியே கேட்காமல் சுட்டுக் கொல்வார் அவனிட பேசிக் கொண்டிருக்கும் காவல் துறை அதிகாரி. இதே ட்ரீட்மென்ட் தான் இவ்விதமாக குற்றத்தில் ஈடுபடும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் என்ன சந்தேகம்? .
 
மக்களின் உணர்வு எதிர்பார்ப்பு இது தான்.
 
 
சிலர் இந்த என்கவுன்டரை மட்டுமே பெரிதாக்கி சமுதாயத்தின் மீதான தங்களது தார்மீகக் கோபங்களை வெளிக்காட்டுகின்றனர்.
 
சிலர் அதிஷா  சொன்னது போல இன்ஸ்டன்ட் மகிழ்ச்சி பரவாயில்லை என்று நிம்மதி  அடைந்து விடுகிறார்கள்.


பூனைக்கு மணி கட்டுவது யார்? விவாதங்களால் ஆகப் போவது என்ன?

இறந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

இறந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தி அடையட்டும்.



17 comments:

R.Gopi said...

இது போன்ற அவலங்கள் என்று தான் தீருமோ?

இந்த நிகழ்வுகள் போல் பல்வேறு நிகழ்வுகள் உலகின் பல பகுதிகளிலும் சூரியன் உதித்து, மறைவதை போல் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது..

தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நம் நாட்டை ஆள்பவர்கள் உணரும் நேரமிது....

ஜெய்லானி said...

இந்த தடவையாவது இந்தியா மக்கள் ஒத்துக்கொள்வார்களா..? அரபு நாடுகளின் தண்டனை சரி என்று .

ஒரு தடவை திருடியவனின் கையை வெட்டிப்பாருங்கள் அடுத்தவன் எவனும் திருடுகிறானா என்று..?

கற்போடு விளையாடிவனின் தலையை வெட்டிப்பாருங்கள்.. அடுத்தது எவனுக்காவது அந்த எண்ணம் வருமா என்று..!!

பேசிப்பேசி ஒன்னும் நடக்கப்போவது இல்லை..!!

இஸ்லாம் எப்பவும் பாதிக்கப்பட்டவனின் மனநிலையிலிருந்து தீர்ப்பு செய்கிறது. அந்த பாதிக்க பட்ட குடும்பம் மண்ணிக்காத வரை குற்றம் செய்தவன் தண்டனையை யாராலும் மாற்ற முடியாது.அது அரச குடும்பமாக இருந்தாலும் சரி.

இந்த பதிவை படிகும் போதே மனசு கணக்கிரது..தெரிந்தது இவ்வளவு....இன்னும் வெளிவராதது எவ்வளவு இருக்கோ..!! :-((

Unknown said...

இது மாதிரியான குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். தண்டனைகளின் கடுமையே குற்றங்களைக் குறைக்க வழியாகும். கடுமையான தண்டனைகள் மட்டுமன்றி நீதி பாரபட்சமின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். பணம் இருப்பவர்களுக்குத்தான் கிடைக்கும் என்றால்....

இந்த வழக்கில் போலீஸ் அவசர அவசரமாக என்கவுண்டர் செய்தது சந்தேகங்கள் பலவற்றை எழச் செய்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம் இது பற்றி வந்த பதிவுகள் பலவற்றையும் ஒரு ஓட்டமாக படித்தேன் கார்த்திகா.. என்ன சொல்வது என்றே தெரியவில்லை..

உங்கள் கட்டுரையில் இந்த பகுதி எனக்கு மிக நெருக்கமாக தோன்றுகிறது.
\\இப்படி பட்டியலிட ஏராளமான செய்திகள் இருக்கின்றன. சொல்லப் போனால் அந்த செய்திகளை பின்தொடர்ந்தால் நாம் ஒரு நிமிடமேனும் நிம்மதியாய் இருக்க முடியாது. தினம் தினம் அத்தனை அநியாயங்கள் கண்ணில் படும் செய்திகள் அப்படி.//
தில்லியில் இது போல தினம் ஒரு செய்தி வந்துகொண்டிருக்கிறது.. ஒவ்வொன்றுக்கும் நாம் பதிவுபோட்டு சோகப்படத்தான் வேண்டுமென்றால் என்ன செய்வது.. போடாவிட்டால் இந்த நாட்டில் நடக்கும் அநியாயங்களுக்கு துணைபோவதாக அர்த்தமாகிடுமா நு எனக்கு இப்ப வர வர குழப்பமாக இருக்கிறது.
என்கவுண்ட்டர்களைப்பற்றி மக்களுக்கு எப்ப்பவுமே நல்ல எண்ணமிருக்கவில்லை. இது சின்ன மனஎழுச்சி என்றே தோன்றுகிறது. சுப்ரமணிய புரத்தின் முடிவில்கரகரவென கழுத்தறுக்கும் ஹீரோவின் செயலை ஆர்பரிப்பது போலத்தான் இதுவும். இவற்றைப்பற்றிஎல்லாம் எழுதுவதைக்காட்டிலும் நல்ல மனசுக்காரங்களைப்பற்றி அதிகம் பேரு எழுதி ரோல்மாடல்களாக அவர்களைக் காட்டலாமே ..என்று சாத்ரணளாக மிகசாதரணளாக மட்டுமே எனக்கு தோன்றுகிறது. அதிகப்படியான ஆசையைத்தூண்டும் இன்றைய மீடியாக்கள் அதிகப்படியான வன்முறையையும் அதிகப்படியான பாலுணர்வையும் தூண்டுகிறது. கூடவே இப்படியான செய்திகளால் மக்களின் உணர்வுகளையும்..

எம்.ஏ.சுசீலா said...

அன்பின் கார்த்திகா,
மிகுந்த பொறுப்புணர்வோடும்,நடுநிலையான சமூக அக்கறையோடும் போலிப்பாவனைகளின்றி உண்மையின் குரலாய் ஒலித்திருக்கிறது உங்கள் கட்டுரை.

எம்.ஏ.சுசீலா said...

இந்தக் கட்டுரை பற்றி இன்னொன்றும் சொல்ல வேண்டும்.எந்தச் செய்தியுமே குறிப்பிட்ட நிகழ்வு நடந்த மாத்திரத்தில் எழுப்பும் பரபரப்பு நாளடைவில் மற்ந்து விடுகிறது அல்லது நமக்கு மரத்து விடுகிறது.
அடுத்தடுத்து ஆயிரம் செய்திகள் புதிதாகக் குவிகையில் முத்லில் நடந்ததன் தொடர் நடவடிக்கைகளைப் பற்றி எவரும் சிந்திப்பதில்லை.அதையும் நீங்கள் சான்றுகளோடு சுட்டியிருக்கிறீர்கள்.

KarthigaVasudevan said...

R.Gopi said...

//தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நம் நாட்டை ஆள்பவர்கள் உணரும் நேரமிது....//

கோபி நீங்கள் சொல்வது சரி .தினமும் நடந்து கொண்டிருக்கும் இந்தக் கொடுமைகளை முற்றிலும் அழித்து விட முடியாது.ஆனால் தண்டனைகள் கடுமையாக்கப்படுவதோடு தளர்த்தப் படும் அபாயங்களும் நேராது போகுமெனில் ஒரு வேலை இந்தக் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கலாம்.நிறைவேற்றப் படும் சட்டங்கள் யாவும் அப்படியே நடைமுறைப்படுத்தப் படுவதில் பல சிக்கல்கள் நேரலாம்,சட்டத்தில் தான் எத்தனை ஓட்டைகள்.


@ ஜெய்லானி said...

//இந்த தடவையாவது இந்தியா மக்கள் ஒத்துக்கொள்வார்களா..? அரபு நாடுகளின் தண்டனை சரி என்று .//

ஜெய்லானி நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது,ஆயினும் இங்கே ஒரு கேள்வியைக் கேட்காமல் இருக்கவியலவில்லை ,அரபு நாடுகளில் கடுமையான சட்ட திட்டங்கள் இருப்பதால் அங்கு இத்தகைய கொடுமையான வன்முறைகள் நிகழ்த்தப்படவில்லை என்கிறீர்களா?

சட்டங்கள் ,தண்டனைகள் எல்லாம் தாண்டி உலகின் எந்த நாட்டில் தான் குழந்தைகளின் பாதுகாப்பு நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது?! நாட்டு நடப்புகளையும் உலகச் செய்திகளையும் வாசிக்கும் போது குற்றங்கள் குறைந்ததாகத் தெரியவில்லையே?சதவிகித வேறுபாட்டைச் சொல்கிறீர்களா நீங்கள்?


@ நசரேயன் said...

//ம்ம்ம்//

:(


@ முகிலன் said...

முகிலன் நான் மேலே எழுதி இருப்பது உங்கள் கருத்தை ஒட்டியே என்று நினைக்கிறேன்.

KarthigaVasudevan said...

@முத்துலெட்சுமி/muthuletchumi said...

//அதிகப்படியான ஆசையைத்தூண்டும் இன்றைய மீடியாக்கள் அதிகப்படியான வன்முறையையும் அதிகப்படியான பாலுணர்வையும் தூண்டுகிறது. கூடவே இப்படியான செய்திகளால் மக்களின் உணர்வுகளையும்..//


மீடியாக்களின் வளர்ச்சி அபிரிமிதமாக இல்லாத காலத்தே கூட பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நிகழ்த்தப் பட்ட வன்முறைகள் இருக்கத்தான் செய்தன முத்துலெட்சுமி .அப்போது வெளிச்சப்படுத்தப் படவில்லை.அல்லது வாய்ப்புகள இல்லாமலிருந்தது , இப்போது வெளிச்சப் படுத்தப் படுகிறது ,கண் கூசும் அளவுக்கு.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆணானாலும் பெண்ணானாலும் சரி தமது செயல்களின் மேல் இன்னதை தான் செய்கிறோம் என்ற தன்னுணர்வு இருந்க்க வேண்டும் ,இல்லாத காலத்தில் தான் இத்தகைய மிருகச் செயல்கள் தினம் தொடர்கதையாகின்றன. இதைக் குறித்து விவாதிப்பதும், எழுதுவதும் இனிமேலும் தொடர்கதையாகக் கூடாது என்பதற்காகவே.அளவற்ற வருத்தம்...பயம் ... ஆதங்கத்தில் எழுதுகிறோமே தவிர இனி குற்றங்கள் குறைந்து விடும் என்ற உறுதியான நம்பிக்கையின் பெயரில் அல்ல.

//\\இப்படி பட்டியலிட ஏராளமான செய்திகள் இருக்கின்றன. சொல்லப் போனால் அந்த செய்திகளை பின்தொடர்ந்தால் நாம் ஒரு நிமிடமேனும் நிம்மதியாய் இருக்க முடியாது. தினம் தினம் அத்தனை அநியாயங்கள் கண்ணில் படும் செய்திகள் அப்படி.//

ஆமாம் .இயல்பு வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறதே,அதைக் கெடுத்துக் கொள்ள யாருக்கும் விருப்பமில்லை.சதா இந்தச் செய்திகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்க முடியாது தான்.

KarthigaVasudevan said...
This comment has been removed by the author.
KarthigaVasudevan said...

எம்.ஏ.சுசீலா said...

//அன்பின் கார்த்திகா,
மிகுந்த பொறுப்புணர்வோடும்,நடுநிலையான சமூக அக்கறையோடும் போலிப்பாவனைகளின்றி உண்மையின் குரலாய் ஒலித்திருக்கிறது உங்கள் கட்டுரை//

நன்றி சுசீலாம்மா...

//இந்தக் கட்டுரை பற்றி இன்னொன்றும் சொல்ல வேண்டும்.எந்தச் செய்தியுமே குறிப்பிட்ட நிகழ்வு நடந்த மாத்திரத்தில் எழுப்பும் பரபரப்பு நாளடைவில் மற்ந்து விடுகிறது அல்லது நமக்கு மரத்து விடுகிறது.
அடுத்தடுத்து ஆயிரம் செய்திகள் புதிதாகக் குவிகையில் முத்லில் நடந்ததன் தொடர் நடவடிக்கைகளைப் பற்றி எவரும் சிந்திப்பதில்லை.அதையும் நீங்கள் சான்றுகளோடு சுட்டியிருக்கிறீர்கள//

சில செய்திகளில் பத்திரிகைகள் ஃபாலோ அப் என்று கட்டம் கட்டி பெட்டிச் செய்தி வெளியிடுகிறார்கள். பெரும்பாலும் அவை குழந்தைகளுக்கெதிரான குற்றங்களாக இல்லாதிருக்கின்றன. ஓசூர் ,,கொடைக்கானல் பள்ளி செய்திகள் அதற்குப் பின் என்ன ஆயிற்றென்று தெரியவில்லை.

இந்த நேரத்தில் நாமெல்லாம் மறந்து போய் விட்டோம் பாருங்கள்,நொய்டாவில் நடந்த குரூர தொடர் கொலைக்கொடுமைகளை,எத்தனை எத்தனை குழந்தைகள் அங்கே சித்திரவதை செய்யப் பட்டு கொல்லப் பட்டனர் ? கொலையாளிகளை இந்த அரசாங்கம் அதன் தண்டனை சட்டங்கள் என்ன செய்தது? மொகிந்தர் சிங்குக்கு ஏன் இன்னும் மரண தண்டனை வழங்கப் படவில்லை இன்னும் வழக்கு நடைபெருகிறதாமே? அதே சமயம் தொடர் கொலைகளில் கூட்டாளியாக இருந்த அவனது பணியாளன் சுரேந்தர் கோலிக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. எய்தவன் இருக்க அம்பை மட்டும் உடைத்துப் போடுவது மட்டுமே இந்த சட்டத்தால் முடிகிற காரியம்,அட்லீஸ்ட் அந்த அம்பையாவது உடைக்க முடிந்ததே என்று நிம்மதி அடைந்து விடுவது மிடில்கிளாஸ் மனோபாவம்,அதை தான் சிலர் சாடிக் கொண்டிருக்கின்றனர்.அதற்கு பதில் யார் சொல்ல முடியும்?

.இப்படி நிறைய செய்திகள் இருக்கின்றன. எதை எழுதுவது,எதை விடுவது?!

யாராலும் எதையும் மாற்ற இயலவில்லை என்பதோடு மறக்கப் படுகிறது ஒவ்வொரு செய்தியும்.

Thekkikattan|தெகா said...

i liked your replies and cast my vote :)

Ahamed irshad said...

இந்த‌ என்க‌வுண்ட‌ரில் அர‌சிய‌ல் இல்லாமல் இல்லை.. ஆனாலும் அந்த‌ குற்ற‌வாளிக்கு த‌குந்த‌ த‌ண்டனையாக‌வே இதை க‌ருத‌ வேண்டிய‌ சூழ்நிலை இப்போது இருப்ப‌தை ம‌றுப்ப‌த‌ற்கில்லை..

KarthigaVasudevan said...

@ Thekkikattan|தெகா said...

//i liked your replies and cast my vote :)//

thanks for ur coment and vote Thekkikattan.
:)


@அஹமது இர்ஷாத...

பெரும்பாலானவர்களின் கருத்தும் இதுவே தான் அகமது இர்ஷாத் .


@ ers...

இணைக்க முயற்சிக்கிறேன் ers

ராஜ நடராஜன் said...

//இந்த தடவையாவது இந்தியா மக்கள் ஒத்துக்கொள்வார்களா..? அரபு நாடுகளின் தண்டனை சரி என்று .

ஒரு தடவை திருடியவனின் கையை வெட்டிப்பாருங்கள் அடுத்தவன் எவனும் திருடுகிறானா என்று..?//

ஜெய்லானி அரபுநாடுகளின் சிறைகளை நேரில் பார்த்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

இருண்டவை கண்களுக்கு தெரிவதில்லை என்பது மட்டுமே உண்மை.

குற்றங்கள் இல்லாத சமுதாயத்தை எப்போது காண்போம்?

Radhakrishnan said...

//பூனைக்கு மணி கட்டுவது யார்? விவாதங்களால் ஆகப் போவது என்ன?//

இதற்கான பதிலையும் எழுதி இருக்கலாம்.

வேதனைகள் நிறைந்த உலகு. அதை கண்டும் காணாமல் உலவு. வெட்கப்படும் மனிதாபிமானிகள்.

pudugaithendral said...

நீங்க சொல்லியிருப்பது போல இப்போது இந்த மாதிரி வன்முறைகள் நிறைய்ய்ய. இங்கே ஆந்திராவிலும் பள்ளி ஆசிரியர், தாளாளர்னு எல்லாம் வெறி பிடிச்சு அலையறாங்க. அவனுங்களுக்கும் பசங்க இருக்குன்னு நினைப்பே வராது போல. இப்ப இல்லாட்டியும் எதிர்காலத்தில் பிறக்கப்போகும் தன் குழந்தையை எப்படி காப்பாத்துவான்??!!!

எப்பவோ படிச்ச ஒரு கதை ஞாபகத்துக்கு வருது. போன்சாய் மரங்களை விற்பதையே தொழிலாக கொண்ட ஒருவருக்கு பிறந்த குழந்தை குறைப்பிரசவமாக சின்னதாக இருந்தது என்று. அன்று கேட்கவேண்டிய அரசு கடுமையான தண்டனைகள் தராமல் இருப்பதால் நின்று கேட்கவேண்டிய தெய்வமாவது கருணை புரிய என் பிரார்த்தனைகள்.

KarthigaVasudevan said...

தங்களது வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி

ராஜ நடராஜன்
T.v . ராதாகிருஷ்ணன்
& புதுகை தென்றல்