Friday, July 23, 2010

சர்வ ஜாக்ரதையாய் இருக்க வேண்டியவர்கள் யார்?

எழுத நினைத்த விஷயங்கள் ஒரு வண்டி நிறைய குப்பையாய் குவிந்து கிடக்கிறது,கொதிக்கும் சாம்பாரில் அவ்வப்போது கொதிப்பில் மேலெழுந்து சாம்பாருக்குள் மறையும் கத்தரிக்காய் பத்தை போலவோ முருங்கைக் காய் துண்டு போலவோ "ஆமாம் என்னத்த பெருசா எழுதி...என்னத்த படிச்சு " இப்படி ஒரு அயர்ச்சி கலந்த அசட்டை வந்து வந்து போவதால் ஒவ்வொரு முறையும் நியூ -போஸ்ட் பக்கத்தை திறப்பதும் புறக்கணிப்பதுமான நாட்கள் தான் சமீப காலமாய்.

இப்போதும் பெரிதாய் ஒன்றும் எழுதிக் கிழிக்கப் போவதில்லை .

மனதை வெகுவாகக் பாதித்த சில நிகழ்வுகளை பதியத் தோன்றியதால் இந்தப் பதிவு ...

நிறைய கோபம், அதிர்ச்சி,பதட்டம், பயம் இன்னோரன்ன கலவையாய் மனம் .

மனுஷ்ய புத்ரனின் கவிதை வரிகளில் ஒன்று ;

"காதலில் என்ன நல்ல காதல்...கள்ளக் காதல்,காதல் காதலாய் மட்டுமே இருக்க முடியும் "என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய வரிகள் எனில்

"உறவு என்ற சொல்லுக்கு நல்ல உறவோ ...கள்ள உறவோ உரிமை என்பதான ஒரே விதமான அர்த்தமே தானே இருக்க முடியும்?!"

அப்படிப் பட்ட உறவின் மீதான நம்பிக்கையின்மை,அதனால் அடைந்த ஏமாற்றங்கள் ஒரு பெண்ணை இப்படி எல்லாம் செய்யத் தூண்டும் என்றால் இங்கே சர்வ ஜாக்ரதையாய் இருக்க வேண்டியவர்கள் யார்?!

தவறு செய்த ஆண்களா? (அப்பாக்களா !) ...பெண்களா? (அம்மாக்களா!)


அல்லது புதிதாய் மலர்ந்த பூக்களைப் போன்ற குழந்தைகளா?

சுற்றி வளைப்பானேன்!

மூன்றரை வயது பாலகனை இரக்கமே இல்லாமல் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு சடலத்தை சூட்கேசில் போட்டு மூடி நாகபட்டினத்து பஸ்ஸில் அனாமத்தாக அனாதையாகப் போட்டு விட்டுப் போனாலே ஒரு பேய் ! அவளுக்குப் பெயர் பூவரசியாம்?! பூக்கள் கோரக்கொலை செய்கின்றன !

பெற்றோர்களின் பாவம் பிள்ளைகளைப் பீடிக்கும் என்பது சரியாய் தான் போயிற்று.அந்த சிறுவனின் தந்தை இவளை ஏமாற்றிய பாவம் உலகம் அறியா பசும் மண்ணை படு கொடூரமாகப் பலி வாங்கிக் கொண்டது.துரோகம் அது எந்த சூழலிலும் தன் கோரப் பற்களை காட்ட மறப்பதில்லை,ஆண்களே ...இல்லை தகப்பன்களே தயவு செய்து உங்களது குழந்தைகளை முன்னிட்டு துரோகங்களின் பட்டியலை கொஞ்சம் குறுக்கிக் கொள்ளுங்கள்.இதையே பெண்களுக்கும் சொல்ல நினைப்பவர்கள் பெண்களே ...இல்லை அம்மாக்களே தயவு செய்து உங்களது குழந்தைகளை முன்னிட்டு துரோகங்களின் பட்டியலை கொஞ்சம் குறுக்கிக் கொள்ளுங்கள்...இப்படிச் சொல்லிக் கொள்ளலாம் ,இதற்கு உதாரணம் பாட்டு டீச்சர் அனந்தலட்சுமி,அனந்த லட்சுமி அவரது மகன் சிறுவன் சூரஜ்குமார் இரட்டைக் கொலைவழக்கு இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.யூகங்கள் காற்றில் பறந்து கொண்டிருக்கின்றன.உண்மை எங்கோ இழுத்துப் போர்த்தி கொண்டு நல்ல உறக்கத்தில்!

ஆதித்யாவின் "ஆன்ட்டி ... ப்ளீஸ் என்னை கொல்லாதிங்க ! எனும் பிஞ்சுக் குரலின் கெஞ்சலில் மனம் நெகிழவில்லை பாருங்கள் இந்தப் பிசாசு .இதை நினைத்தால் நெஞ்சு கொதிக்கிறது தானே!இன்றைய இந்தியன் எக்ஸ்பிரசில் முதல் பக்க செய்தி ,அந்த பூவரசியையும் அவளது கொடும் பாதகச் செயலையும் அடையாளம் கண்டு கொண்ட மற்ற பெண் கைதிகள் புழல் சிறையில் காலை உணவு நேரத்தின் போது அவளை தாக்க முயன்றதால் இப்போது பூவரசி தனி செல்லில் அடைக்கப் பட்டிருக்கிராளாம். நிற்க

எந்த நேரம் எப்படிச் சாவோம் என்பதறியாமல் தமக்கே தமக்கென பிரத்யேக பட்டாம்பூச்சிக் கனவுகளுடன் வளர்கிறார்கள் குழந்தைகள்,அம்மாவின் பட்டுப் புடவை மெது மெதுப்பு தாங்கள் ரசிக்கும் வண்ணத்துப் பூச்சிகளின் சாவில் கிடைப்பதென அந்தக் குழந்தைகளுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை,ஒவ்வொன்றாய் அறிந்து கொள்ளும் அவகாசத்தில் பூவரசிகளின் கொலைக் கண் பார்வையை ஆராய பாவம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கவில்லை ,தும்பியின் வாலில் நூல் கட்டி அதன் சுதந்திரத்தை முடக்கி "தட்டான்...தட்டான் கல்லெடு ,தட்டான்...தட்டான் கல்லெடு " என பொழுது போக்கும் விசித்திர சமூகத்தின் பிரதிநிதிகள் தாங்கள் என அவர்கள் அறிந்து கொள்ள அவகாசம் தரவேண்டாமா?!

இப்போதைக்கு பாலியல் கல்வியைக் காட்டிலும் மிக முக்கியமாய் சிறுவர்,சிறுமிகளுக்கு கற்பிக்கப்பட வேண்டிய பாடம் சூழ இருக்கும் மனிதர்களை படிப்பது.

இந்த அதிர்வில் இருந்து மீண்டு வரும் முன் இன்றைய விகடனில் நாமக்கல் ஆட்சியர் சகாயம் அவர்களின் பேட்டி,நவீன் என்ற சிறுவனின் தாய் பக்கத்து வீட்டு மனிதரோடு ஓடிப் போகிறாள்,அந்த சிறுவனின் தந்தை அவனது தங்கை தம்பியைப் கவனித்துக் கொண்டு சமைத்துப் போடவென இவனது படிப்பை நிறுத்தி விடுகிறார்.அம்மா ஓடிப் போன அவமானம் ,தந்தையின் அலட்சியம்,தன் கல்வி அநியாயமாய் நிறுத்தப் பட்ட நிராசை எல்லாம் சேர்ந்து பத்து வயதுப் பையன் ஆறுதல் சொல்ல ஆளின்றி கண்ணீரோடு மாவட்ட ஆட்சியரிடம் குறை தீர்க்கும் மனு கொடுக்க வருகிறான்.இதுவொன்றும் அதிர்ச்சி அல்ல...கலெக்டர் அந்தப் பையனுக்கு உதவி செய்யும் எண்ணத்தில் இருக்கையில் இடியாய் ஒரு செய்தி அடுத்த சில நாட்களில் ,அந்த சிறுவனின் தந்தை தன் மனைவி ஓடிப் போனதால் அவமானம் தாங்காமல் நவீன் உட்பட தன் மூன்று குழந்தைகளுக்கும் உணவில் மருந்தை கலந்து கொடுத்து கொன்று விட்டு தூக்கிலும் தொங்க விட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார்.

அம்மா அடுத்த வீட்டு மனிதனோடு ஓடிப் போனதற்கும் ,அப்பாவின் இயலாமைக்கும் இந்த சிறுவன் செய்த பாவம் என்ன?

சாக வேண்டும் என முடிவெடுப்பவன் தனியே செத்துத் தொலையலாம் ,வாழ நினைத்து தனக்கென நியாயமான ஆசைகளை வளர்த்துக் கொண்ட மூன்று இளம் குருத்துகளை கருக வைத்தது எப்படி நியாயம் ஆகும்?தகப்பனாகவே இருந்தாலும் !

நவீனின் ஆசை என்ன தெரியுமா?

"படித்துப் போலீஸ் ஆபிசர் ஆகவேண்டுமாம்! "
இப்படித் தான் அவன் கலெக்டரிடம் மனு கொடுக்கையில் கூறினானாம்.வாசிக்கையில் கண்கள் கலங்குகின்றன .

அதே பக்கத்தில் இன்னும் சில குழந்தைகளுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்தும் சொல்லப் பட்டிருந்தது.அபினா எனும் ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு ஊஞ்சல் என் சரியாக உச்சரிக்கத் தெரியாததால் அவளை எல்லா மாணவர்களின் முன்பாக அவளது ஆசிரியை ;

"நீ எல்லாம் ஏன் ஐந்தாம் வகுப்பில் உட்காருகிறாய்,போ மறுபடியும் ஒன்றாம் வகுப்புக்கு "

,என்று கடுமையாகத் திட்டி விடுகிறார்,இதற்கு அந்த சிறுமி மனம் நொந்து போய் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக் கொண்டு இறந்து போனாளாம்,இங்கே குறிப்பிடத் தக்க ஒரு விஷயம் ,ஆசிரியை மீது தவறு தான். அதற்கு நடவடிக்கை எடுக்க வசதி இருக்கிறது.ஆனால் அந்த சிறுமி அபினாவின் மனநிலையை எண்ணிப் பாருங்கள் வெறுமே பள்ளியில் ஆசிரியை திட்டினால் அதற்கு தன்னைக் கொளுத்திக் கொண்டு இறந்து போக வேண்டும் என அவளுக்கு எப்படித் தோன்றியது? !

குழந்தைகளை மனதளவில் எதையும் எதிர் கொள்ள திராணியற்றவர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் நமது வளர்ப்பு முறையில் அல்லவா இங்கே முதல் தவறு ஒளிந்திருக்கிறது. ஆசிரியை திட்டியதால் குழந்தை தற்கொலை செய்து கொண்டாள் என பத்திரிகைகளில் வரும் பெரும்பான்மையான செய்திகள் மிக்க மனவருத்தத்தை அளிக்கன்றன. எல்லா ஆசிரியர்களும் மோசமானவர்கள் அல்ல.

மேலும் அந்த ஆசிரியர்களுடன் மாணவர்களுக்கான பந்தம் வாழ்வின் சில காலமே.அப்போதும் தினமும் அந்த ஆசிரியர்கள் விரும்பத் தகாத வண்ணமே பேசிக் கொண்டு இருக்கப் போவதில்லை,எதோ ஒருநாள் திட்டலாம்,அதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒட்டு மொத்த வாழ்வை முடித்துக் கொள்வது முட்டாள் தனம் தவிர வேறென்ன? குழந்தைகளே ...மாணவர்களே உங்கள் பக்கம் நியாயம் இருப்பின் தயங்காமல் மரியாதை குறைவின்றி ஆசிரிய ஆசிரியர்களிடம் எதிர்வாதம் செய்யுங்கள்.உங்களை அவர்களுக்குப் புரிய வைக்க முயலுங்கள். காரணமே இன்றி யாருக்கும் யார் மீதும் வெறுப்பு வர வாய்ப்பில்லை. பள்ளிகள் கல்வி கற்பதற்கு தான் .அந்த வேலையில் குறை வைக்காமால் இருந்தால் என்ன தான் முசுட்டு ஆசிரியை என்றாலும் சம்பந்தப் பட்ட மாணவியின் மீது அவர்களுக்கு ஒரு மரியாதை இருக்கத்தான் செய்யும்.அந்தப் பலனை கெட்டியாகப் பற்றிக் கொள்ள முயலுங்கள்.

பெற்றோர்களுக்குச் சொல்ல விரும்புவது. கண்மூடித் தனமாக ஆசிரியர்களை குறை சொல்வதை நிறுத்துங்கள். நாணயத்திற்கு இருபக்கங்கள்.இன்றைக்கு வகுப்பறையில் எல்லோர் முன்னிலும் திட்டி கருத்துக் கொட்டும் ஆசிரியை நாளையே உங்களிடம் உங்கள் மகன் அல்லது மகளை ஏதாவது ஒரு திறமைக்காக வானளாவப் புகழும் நிலை வரும். அதற்கு நம் குழந்தைகள் உயிரோடு இருக்க வேண்டும் .

அதற்கு முன் வெகு முக்கியமாய் பாலியல் ரீதியாக வரக் கூடிய அச்சுறுத்தல்கள் அல்லது உளவியல் ரீதியாக நேரக் கூடும் மனமுடைதல் குறித்து நம் குழந்தைகளின் ("இம்" மெனும் முன் தற்கொலை)பூஞ்சை மனதை வலுப்படுத்த உருப்படியாய் ஏதானும் முயற்சிக்கலாம்.இந்த உலகில் எல்லாவற்றுக்கும் தீர்வு இருக்கிறது.அப்படித் தான் குழந்தைகள் நம்ப வேண்டும்,

கொலையோ,தற்கொலையோ அதற்கான தீர்வாக முடியாது.

உங்களைப் போலவே பாதிப்புக்கு உள்ளான மற்றவர்களுக்கு உங்களது முடிவுகள் பாடமாகி வளரும் சமூகம் பாழாக வேண்டாம்.

முதலில் பாடம் படிக்க வேண்டியது பெற்றோர்களே .

நம்மிலிருந்து நம் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்.

முக்கியக் குறிப்பு :

கற்றுக் கொள்வதென முடிவெடுத்த பின் கற்கும் பாடம் நல்ல பாடமாக இருக்கட்டும் ,இன்னொரு சூட்கேஸ் சடலம் நகரத்தின் பஸ் ஸ்டாண்டுகளில் ஈ மொய்க்கக் தொலைக்காட்சிகளில் காணக் கிடைக்க வேண்டாம்.

"சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம்".

14 comments:

அகநாழிகை said...

//முதலில் பாடம் படிக்க வேண்டியது பெற்றோர்களே. நம்மிலிருந்து நம் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்.//

அருமை.

வார்த்தை said...

:(
என்னத்த சொல்றது...

Vidhoosh said...

கார்த்திகா: மிகவும் வேகமாக ஆனால் ஆணித்தரமான கருத்துக்கள். hats off.

அருமை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:( என்ன கொடுமைங்க இதெல்லாம்..

Thamiz Priyan said...

நல்ல பதிவு. சிறு வயது முதலே கற்றலில் நிறைய விஷயங்களை சேர்ப்பது அவசியமாகின்றது.

ஜெய்லானி said...

///கற்றுக் கொள்வதென முடிவெடுத்த பின் கற்கும் பாடம் நல்ல பாடமாக இருக்கட்டும்///

100 சத உண்மை

pudugaithendral said...

மனது கணமானது. விதூஷை வழிமொழிகிறேன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு கார்த்திகா, இன்று தினசரி பத்திரிகளில் இதைக் கண்டு கசந்து போனேன்.
நீங்கள் பதிவு பூரண அழுத்தத்தோடு எழுதி இருக்கிறீர்கள்.
தாக்கம் அதிகமாகிறது.
நாகரீக உலகில் நாம் எதிர்கொள்ளும் விபரீதங்கள்.

அன்புடன் அருணா said...

அருமையா சொல்லிருக்கீங்க.

அது சரி(18185106603874041862) said...

ரொம்பவும் ஆழமான பிரச்சினை குறித்த அறச்சீற்றம்...

இந்திய சமூகத்தில் குழந்தைகள் புத்தக மூட்டை சுமக்கும் கழுதைகளாகவும், பெற்றோர்/ஆசிரியர்களின் வெறுப்பை காண்பிக்க ஒரு ஊடகமாகவும் பயன்படுகிறார்கள் என்பது உண்மை...

ஆனால், கணவனை இழந்த எண்பது வயது மூதாட்டிக்கும் மாதம் முன்னூறு உதவித் தொகை தர, ஐம்பது ரூபாய் கமிஷன் வாங்கும் அசிங்கமான ஒரு கலாச்சாரத்தில் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்....

இந்தியா ஒரு நோய்பட்ட, உள்ளுக்குள் அழுகிப் போன கலாச்சாரம்...யாருக்கும் வெக்கமில்லை என்பது தான் உண்மை....

Unknown said...

உங்கள் பதிவுக்கும், அதுசரியின் கமெண்டுக்கும் ஒரு பெரிய ரிப்பீட்ட்..

நட்புடன் ஜமால் said...

இன்று என் தாய் சொன்னார்கள் எங்கள் வீட்டின் எதிர் வரிசையில் யாரோ ஒருவர் வீட்டில் இரண்டு குழந்தைகளின் தந்தை என்பவன் வேறு பெண்ணோடு ஓடி போய்விட்டானாம்

குழந்தைகள் மேல் பாசம் இல்லாதவன் செய்தது கள்ளக்காதல் அல்ல, காதலில் கள்ளம் இல்லை, இது காதலே அல்ல, காமம் என்று சொல்வது கூட அசிங்கம் தான்,

உண்மையில் முதலில் பாடம் படிக்க வேண்டியது பெற்றோர்கள் தாம்.

இந்த இடுக்கையை படித்ததில் , இயலாமையால் வரும் கோபம் அதிகமாகின்றது ...

மங்களூர் சிவா said...

//முதலில் பாடம் படிக்க வேண்டியது பெற்றோர்களே. நம்மிலிருந்து நம் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்.//

கண்டிப்பாக.

எம்.ஏ.சுசீலா said...

சமூகத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொருவருமே கவனமாகத்தன் இருந்தாக வேண்டியிருக்கிறது.
சமூக அக்கறையுடன் கூடியது உங்கள் பதிவு.
அந்த அப்பாவி மனைவி இன்னும் தன் கணவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் தொடர்பில்லை எனக் ‘கல்லானாலும் கணவனாக நம்புகிறாளே.(27.7. தேதியிட்ட தினமலர் செய்தி).இந்த அவலத்திற்கு என் செய்ய.