Wednesday, April 1, 2009

பால் நிலா ...பானையில் உருகி வழியும் நிலா ...


ஒரு சிறுகதையில் வாசித்தேன் ...நல்ல நிறை பௌர்ணமியில் ஒரு வனக் குடியிருப்பின் அருகில் ஒரு அழகான ஓடை ...ஓடை நிறைய பளிங்கு போன்ற தெளிந்த நீர் ...நீருக்குள் வட்ட வெள்ளித் தட்டாய் வெள்ளி அப்பளம் போல அழகான தண்ணிலா...;

ஒரு காட்டுவாசிப் பெண் செப்புக் குடத்தை எடுத்துக் கொண்டு அந்த ஓடைக்கு நீர் மொண்டு கொண்டு போக வருகிறாள் ;நீரில் நிலா ...நிலவின் பிம்பம் களையக் களைய நீரை குடத்தில் அள்ளியதும் ஓடை நிலா குடத்தில் டாலடிக்கிறது .அடுத்து இன்னொரு பெண் ஓடையில் நீர் எடுக்க வருகிறாள் குடத்தோடு ...இப்போது அவளது குடத்திலும் நிலா .

குனிந்து பார்த்தால் ஓடையிலும் நிலா ...இந்தப் பெண்கள் கையில் ஏந்தி நிற்கும் குடங்களிலும் நிலாக்கள் அப்போது இன்னொரு பெண் அங்கே வருகிறாள் ...குடிக்கக் கொஞ்சம் நீர் கேட்கிறாள் ...

குடத்தில் இருந்த நீரை அந்த காட்டுவாசிப் பெண் சரித்து ஊற்ற இவள் குனிந்து இருகை குவித்து நீரை கீழே வழியாமல் ஏந்தும் போது அவளது குவித்த கைகளுக்கிடையில் நிலா நெளிந்து ..நெளிந்து ஊசலாடுகிறது.

அப்படியானால் இவள் நிலவைக் குடித்தவள் ஆகிராளோ?!

இவள் குடித்து முடித்த பின்னும் வானில் நிலா ...

ஓடையிலும் நிலா...

அந்த பெண்கள் இடுப்பில் தூக்கிச் செல்லும் குடங்களிலும் நிலாக்கள் .

ஆக மொத்தம் எத்தனை நிலாக்கள் ?

எத்தனை அழகான கற்பனை பாருங்கள் ?!

தாகத்திற்கு நீரை அருந்தி முடித்த பின் வானை நிமிர்ந்து பார்க்கும் அந்தப் பெண் தன்னுள் சொல்லிக் கொள்கிறாள்...

"நிலவை மிச்சம் வைத்தவள் நான் "என்று .

இந்த நிலா கற்பனை "அம்பையின் காட்டில் ஒரு மான் தொகுப்பில் "அடவி " எனும் சிறுகதையில் "வாசிக்கக் கிடைத்தது.

13 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நிலா ஒரு துணை நட்சத்திரம். அறிவியலார் சொல்கிறார்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நிலா நிலா ஓடி வா.

ஜே,கே,ஆர் படுகிறார்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அன்று வந்ததும் அதே நிலா...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா....

ராமலக்ஷ்மி said...

ரசித்து ரசித்து நீங்கள் வர்ணித்திருக்கும் விதம் காட்சியைக் கண் முன் விரிய வைக்கிறது.

குடுகுடுப்பை said...

தங்கச்சி , தம்பி போட்ட பின்னூட்டதை காணும்.

சந்தனமுல்லை said...

அம்பையின் கதைகள்...செம செம தான்!

narsim said...

//"நிலவை மிச்சம் வைத்தவள் நான் //

ரசனையின் ரசனை

KarthigaVasudevan said...

நன்றி SUREஷ் ...(நிலா ஒரு துணைக் கோள்,கோள் வேறு நட்சத்திரம் வேறு இல்லையா? மறுபரிசீலனை செய்து விட்டு சொல்லுங்கள் நட்சத்திரமா? கோளா? )

KarthigaVasudevan said...

// ராமலக்ஷ்மி said...

ரசித்து ரசித்து நீங்கள் வர்ணித்திருக்கும் விதம் காட்சியைக் கண் முன் விரிய வைக்கிறது.
//

இரண்டு பின்னூட்டங்களுக்கும் நன்றி ராமலக்ஷ்மி மேடம் (ஏப்ரல் முதல் தேதி பதிவுக்கு அதன் முந்தைய தேதி தான் காட்டியது ...அதை மாற்ற முயன்றதால் வந்த குழப்பம்...மன்னிக்கவும்)

KarthigaVasudevan said...

// குடுகுடுப்பை said...

தங்கச்சி , தம்பி போட்ட பின்னூட்டதை காணும்.//


நல்லா தேடிப் பாருங்க ...இல்லனா மத்தவங்க பின்னூட்டத்தை படிச்சு பாருங்க...இருக்கும் எதாவது ஒரு பதிவுல ?!:)

KarthigaVasudevan said...

//சந்தனமுல்லை said...

அம்பையின் கதைகள்...செம செம தான்!
//


"வீட்டின் மூலையில் ஒரு சமையலறை " இதே டச் "அவரது எல்லா சிறுகதைகளிலும் இருக்கும்.பெண்களின் ஆழ்மனம் குறித்த நல்ல நுட்பம் மிகுந்த கவனிப்புகள் அவருடையது .சி.எஸ் .லக்ஷ்மி என்ற அம்பையின் சிறுகதைகள் எனக்கும் பிடித்தமே .நன்றி முல்லை.

KarthigaVasudevan said...

// narsim said...

//"நிலவை மிச்சம் வைத்தவள் நான் //

ரசனையின் ரசனை//


நான் எதோ என் போக்கில் சொல்லி இருக்கிறேன் அந்த வர்ணனையை ...இதை அம்பையின் எழுத்துக்களில் வாசித்தால் ரசனை வெகு அலாதியானது.

நன்றி நர்சிம்