Monday, March 16, 2009

சந்திரிகாவின் நியாயங்கள் ...

அவளை முதல் முதலாக எப்போது பார்த்தேன்?

பாட்டி வீட்டில் தான் என்பதெல்லாம் சரியாக ஞாபகத்தில் நிற்கிறது...எப்போது...எந்தச் சூழலில் என்பது இப்போது யோசித்தால் பிடிபடவே இல்லை .ஆனால் நிச்சயமாக ஏதோ ஒரு விடுமுறைக் காலமாகத் தான் இருக்க முடியும் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை ...!

பாட்டி உள்ளே சமையற்கட்டில் படு பிஸியாக இருந்த ஒரு காலை வேளையில் தான் சந்திரிகா படு கேசுவலாக வெளி முற்றம் தாண்டி உட்புற கூடம் தாண்டி அதை அடுத்துள்ள படுக்கை அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.சித்தியாக்கும் என்ற நினைவில் சாவதானமாக கட்டிலில் படுத்தவாறு காலாட்டிக் கொண்டு எட்ட இருந்த மோடாவில் பிளாஸ்டிக் தட்டில் கோவில்பட்டி கடலை மிட்டாய்களை கொட்டி வைத்து ... வலது கை அதை எடுத்து வாய்க்கு கொண்டு போக இடக்கையால் "அம்மா வந்தாள் " நாவலை கொஞ்சம் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தேன் .

இந்துவையும் ...அப்புவையும் பற்றி சிந்தித்துத் கொண்டே இருக்கையில் அலங்காரம் அம்மாளைப் பற்றி கதை நகரும் போது தான் என் அருகில் வந்த என் பாட்டி வெடுக்கென்று ... ;
நீ எப்படீ வந்த?
அருவமே இல்லாம வந்து நிக்கிற ? உன் மனசுல என்ன நினைப்பு என்று படு அதட்டலாகக் கேட்கவே...சடாரென்று திகைத்துப் போய் திரும்பிப் பார்த்தேன் .
சந்திரிகாவை அப்போது தான் நான் பார்த்திருக்கக் கூடும்!?

ரொம்ப பெரிய அழகி இல்லை அவள்.

ஆனாலும் வாளிப்பான பெண் ...சிவகாசியைச் சுற்றியுள்ள குக்கிராமங்களில் தடுக்கி விழுந்தால் காணக் கிடைக்கும் எண்ணற்ற பட்டாசுத் தொழிற்சாலைகள் ஒன்றில் அவளும் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாளாம் பாட்டி சொல்லக் கேள்வி ;

இதற்க்கு முந்திய விடுமுறையில் இவளை நான் இங்கு பார்த்ததில்லையே என்ற யோசனையுடன் ...

யாரு பாட்டி இது ? என்றவாறு படுத்துக் கொண்டு வாசித்ததில் கசங்கி இருந்த சுடிதாரை இழுத்து விட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டு அவளைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் என்னவோ ரொம்ப நாள் தெரிந்தவளைப் போல

"பாப்பா லீவுக்கு வந்திருகாக்கும் ?
எத்தினி நாள் லீவாம் என்று கேட்டுக் கொண்டே கட்டிலுக்குக் கீழே தரையில்சுவற்றை ஒட்டி சாய்ந்து அமர்ந்து கொண்டு என்னையே பார்த்தாள் .

பாட்டி "பாப்பா லீவுக்கு தான் வந்திருக்கு...அந்தக் கதைய விடு...எவ்ளோ நாளைக்குத் தான் இப்படியே ஏமாத்திட்டு ஓடிட்டு இருப்பா பார்ப்போமேன்னு காலைல தான் உன்ன பத்தி நானும் சரோஜாக்காவும் பேசிட்டு இருந்தோம் ;அதிசயமா இப்போ வந்து யட்சிணி மாதிரி நிக்கிற இங்க உள்ரூம்ல !?

enna விஷயம் ...வாங்கின பணத்துக்கு வட்டியவும் காணோம்...அசலையும் காணோம். நாலஞ்சு மாசமா நீயும் ஆளே தட்டுப் படலை.
என்ன தாண்டீ நினைச்சுகிட்டு இருக்கா நீ ?
உங்க முதலாளி போனஸ் கீனஸ் ஒன்னும் தராமயா இருந்திருப்பாரு இன்னிக்கு வரைக்கும் ...!
பாட்டி இவ்வளவு அதட்டலாகக் கேட்டும் அவளென்னவோ மிரண்டதாகத் தெரியவில்லை .
பாப்பா இந்த மாதிரி சுடிதார்ல அரைக் கை வச்சி தச்சிக்கிறது தான் இப்போ புது ஃபேஷனாக்கும்?! என்று என் பதிலை எதிர் பார்ப்பவளாய் காட்டிக் கொண்டு "குடிக்க கொஞ்சம் தண்ணீ குடுங்க பாட்டி ...இன்னைக்கு நல்ல தண்ணிக் கிணத்துக்குப் போக தீரலை எனக்கு ...உப்புத் தண்ணி எம்புட்டுக் குடிச்சும் தாகம் தீரலை என்று தன் முந்தானையால் தன் முகத்துக்கு விசிறிக் கொண்டு பாட்டியைப் பார்த்துச் சொன்னாள் .
இங்கயே நல்ல தண்ணீ எடுக்கக் கிணத்துக்குப் போக ஆள் தேட வேண்டி இருக்கு .இருக்கிறது ரெண்டு குடம் இதுல உன்ன மாறி வரவ...போறவ எல்லாத்துக்கும் மோந்து மோந்து கொடுத்துட்டா இந்த வயசுல நான் அம்புட்டு தூரம் பானையத் தூக்கிட்டு அலையத் தான் வேணும்.
பாட்டி தணீர் கொண்டு வருவதைப் போல எந்த அறிகுறியும் இல்லாதிருக்க ...எனக்கென்னவோ "குடிக்கத் தானே கேட்டால் ...ஒரே ஒரு சொம்பு தண்ணீர் கொடுத்தால் குறைந்து விட மாட்டோமே என்ற நோக்கில் எடுத்து வந்து கொடுத்தேன்.
பாட்டி என்னை ஒன்றும் சொல்லவில்லை .
இந்தா பாரு சந்திரி ...நீ என்கிட்டே ரெண்டாயிரம் வாங்கி ஒன்னரை வருஷம் ஆச்சு...பையனுக்கு மஞ்சக் காமாலை ...போனஸ் போட்ட உடனே கொண்டாந்து கொடுத்துறேன்னு மூவாயிரம் வாங்கி அதுவும் இப்போ ஒரு வருஷம் முடிய போகுது .இன்னைய தேதிக்கு அஞ்சாயிரம் நிக்குது .வட்டியுமில்ல ...அசலுமில்ல, உன்னப் பார்த்துக் கேட்கலாம்னா நீ என்னடான்னா ஒழிஞ்சு விளாண்டுகிட்டு இருக்க ?!ஆளே கண்ணுல பட மாட்ட ...இன்னிக்கு என்ன அதிசயமா இங்கிட்டுக் காத்தடிச்சிருக்கு?
இப்போது தான் பாட்டி பேசுவது காதில் விழுந்தவலைப் போலவும்...அவளென்னவோ முந்தி வாங்கிய கடனை எல்லாம் ஒரே நாளில் கொடுக்கப் போகிறவளைப் போலவும் முகத்தை வைத்துக் கொண்டு சந்திரிகா ...பாட்டியிடம்...பாட்டி உங்க காசை எடுத்துக் கிட்டு நான் எங்க ஓடிரப் போறேன் ?இப்போ ஒரு அவசரம்...அர்ஜெண்டா ஒரு 1000 இப்பவே கொடுத்தீங்கன்னா மூனே நாள்ல உங்க மொத்தக் கடனையும் கொடுத்துருவேன்.இருந்தாக் குடுங்களேன் .பாட்டிக்கு வந்ததே ஆத்திரம் ...;என்னது விளாடரியா நீ ?ஒழுங்க முன்னாடி வாங்கின கடனைக் கட்டி முடி .உன் ஏமாத்து வேலைக்கெல்லாம் வேற ஆளைப் பார் ...நாங்க அம்புட்டுப் பெரிய பணக்காரங்க இல்ல ...உன் முதலாளி கிட்ட போய் கேளு ...எங்க பணத்தைக் கொடுத்துட்டு எங்கள ஆள விடு தாயி ...உனக்கு கோடிப் புண்ணியம்.
சந்திரிகா இந்த பதிலைத் தான் பாட்டியிடம் எதிர் பார்த்து வந்திருப்பவள் போல மெல்ல சோம்பல் முறித்துக் கொண்டு சுவற்றில் இருந்து தன் முதுகை நிமிர்த்தி கொட்டாவி விட்டாள் அந்தக் காலை நேரத்தில் .
அதென்னவோ பாட்டிக்கு அவள் கொட்டாவி விட்டது பிடிக்கவில்லை போல ;
என்னடீ இன்னேரமே இம்புட்டு வாயப் பிளக்கற ? ராத்திரியெல்லாம் தூங்காம வெட்டி முறிச்சியா என்னா?என்றார் அதட்டலாக ;
அதற்க்கு வெகு அசுவாரஸ்யமாக அவள் சொன்ன பதிலில் பாட்டி என்னை திடுக்கிட்டுப் பார்த்து விட்டு ;
நீ உள்ள போய் கத புஸ்தகம் படி கண்ணு ...நான் இவகிட்ட பேசிட்டு வரேன்
என்றார் படக்கென்று .
அவள் சொன்ன பதில் அப்படி ;
பாட்டி மனதிற்குள்ளாக சந்திரிகாவை திட்டிக் குமிப்பது அவளது முகபாவத்தில் என்னால் உணர முடிந்தது .ரெண்டும் கெட்டான் வயசுல ஒரு சின்னப் புள்ள கிட்டக்க நிக்கும் போது இந்த மூதேவி இப்படியா உளறித் தொலைப்பா ? கிராதகி .இப்படியெல்லாம் பாட்டி மனதிற்குள் அவளைத் திட்டி இருக்கலாம். நான் அவளிடம் கேட்கவில்லை
ஏன்...எதற்கு ...எப்படி என்றெல்லாம் ?!
சந்திரிகா அப்படி என்ன பதில சொன்னாள் ?
தெரிந்து கொள்ள நாளை வரை காத்திருங்கள் ...
தொடரும் ..................................................................................

13 comments:

ராமலக்ஷ்மி said...

கதை அருமை. சரி காத்திருக்கிறோம் நாளை வரை.

வெற்றி said...

ஆகா.. பிரமாதம். நான் பக்கத்திலிருந்து பார்ப்பது போல இருக்கு. அவர் அப்படி என்ன சொல்லியிருப்பார் என்பது தெளிவாகவே விளங்கிவிடுகிறது.

ம்ம்.. சீக்கிரம் அடுத்த பார்ட் போடுங்க.

Poornima Saravana kumar said...

//சந்திரிகா அப்படி என்ன பதில சொன்னாள் ?
//

என்ன சொல்லியிருப்பாள்?????

சீக்கிரம் சொல்லுங்க நாளைக்கு..

நட்புடன் ஜமால் said...

அருமையா இருக்குதுங்க

சீக்கிரம் சொன்னத சொல்லிடுங்க ...

அது சரி(18185106603874041862) said...

அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங்!

வல்லிசிம்ஹன் said...

எங்கே அடுத்த பதிவு.
பணம் கடன் வாங்கிட்டு இப்படி நடக்கிற சந்திரிகாவை எங்க பார்க்கலாம்.:)

சந்தனமுல்லை said...

//ராமலக்ஷ்மி said...

கதை அருமை. சரி காத்திருக்கிறோம் நாளை வரை.
//

அதே!

www.narsim.in said...

சுவாரஸ்யமா கொண்டு போய் இப்படி சஸ்பென்ஸ்..? மாலைப்பதிப்பா போடுங்க.. நாளை வரை தாங்காது

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமையா எழுதறீங்கப்பா..

KarthigaVasudevan said...

வருகை தந்த அனைவருக்கும் மிக்க நன்றி ...தொடர்ந்து வாசியுங்கள் சந்திரிகாவை.

அபி அப்பா said...

நாளை வரை நோ வெயிடிங்! இன்னிக்கே சொல்லுங்க டவுட் அக்கா!!

அபி அப்பா said...

நல்லாஇருக்கு இந்த பாதி புனைவு:-))

KarthigaVasudevan said...

// அபி அப்பா said...

நாளை வரை நோ வெயிடிங்! இன்னிக்கே சொல்லுங்க டவுட் அக்கா!!

இந்தக் கதை மூன்றாம் பார்ட் எழுதணும் ,வெயிட்டிங்க்ல இருக்கு அபிஅப்பா.

அபி அப்பா said...

நல்லாஇருக்கு இந்த பாதி புனைவு:-))

:):):)