Showing posts with label நிழல் மீதி. Show all posts
Showing posts with label நிழல் மீதி. Show all posts

Monday, April 20, 2009

சுபாங்கனியின் ஜாமன்றி பாக்சும் ...அம்ருதாவும் ...

சுபாங்கனியின் ஜாமன்றி பாக்ஸ் தொலைந்து போனதால் தான் அம்ருதா அதை தேடிக் கண்டுபிடித்து எடுத்து வரும் பொருட்டு தன் மகளின் பள்ளிக்குச் செல்ல வேண்டியதாகி விட்டது .போன வாரம் தான் ரகுராமன் அந்த ஜாமன்றி பாக்ஸ் வாங்கிக் கொடுத்திருந்தார் சுபாங்கனிக்கு ...அதை மகளின் கையில் கொடுக்கும் போதே ஏகப் பட்ட அறிவுரைகளோடு எப்போதும் போல பல (பஞ்சப்) பாட்டுக்களுடனும் தான் கொடுத்திருந்தார்.

சுபாங்கனிக்கு சந்தோசம் பிடிபடவில்லை...தன் அப்பாவா இது? புது ஜாமன்றி பாக்ஸ் கேட்டு முக்கால் வருடம் தாண்டி வாங்கிக் கொடுப்பார் என்று அவள் தான் எதிர்பார்க்கவே இல்லையே!!!சும்மா கேட்டு வைப்போம் என்று தான் அவளும் ஒரு வார்த்தை போட்டு வைத்தால் அப்பாவின் செவியில் ...அவர் நிஜமாகவே வாங்கிக் கொடுத்ததும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போய் விட்டால் பாவம்?!

அந்த ஜாமன்றி பாக்ஸ் தான் இப்போது காணோம் ...விலை 125 ரூபாய்கள் ...

அப்பாவை நினைத்தால் அடிவயிற்றில் பயப் பந்து உருண்டது ...தொண்டை உலர்ந்து மூச்சுத் திணறி கண்களில் நீர் கரை கட்டி நின்றது எப்போதடா கரை மீறி உருளலாம் என; ரகுராமன் அத்தனைக்கு மோசம் என்று சொல்ல முடியாது தான் ...மனிதன் கஷ்டப் பட்டு முன்னேறிக் கொண்டிருப்பவன் ...(கவனிக்கவும்...முன்னேறிக் கொண்டிருப்பவன் தான் இன்னும் முன்னேறியவன் ஆகவில்லை ரகுராமன் ...

ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்குப் பார்த்தே ஆக வேண்டிய சூழல் அவனுக்கு உண்டு ...அவனது மனைவியும் ...மகளும் ஆகிப் போன காரியத்தால் அந்த சூழல் சுபாங்கனிக்கும் ... அம்ருதாவுக்கும் கூட உண்டு தானே என்பது அவனது அசைக்க முடியாத நம்பிக்கை.

தவறுதலாகவோ அல்லது கவனக் குறைவாகவோ எது நடப்பினும் அதற்க்கு காரணம் எவராக இருப்பினும் ரகுராமனின் மிக நீண்ட அறிவுரைகளை அந்த வீட்டினரின் காதுகள் கேட்டே தீர வேண்டும் ,அம்மாவோ மகளோ தவறு செய்திருப்பின் அறிவுரைகளாக ஆரம்பிக்கும் பேச்சு தவறுதல் ரகுராமானது என்று வரும்போது இடை விடாத புலம்பல்களாக மாறி விடும் .உங்களுக்கெல்லாம் அறிவுரை ஆயிரக் கணக்கில் சொல்லி விட்டு என்னைப் பார் இப்படி செய்து விட்டு வந்து நிற்கிறேன் என்று அதற்கும் புலம்பி...புலம்பி பேசிப் பேசி கொல்வான் ...

ஆக மொத்தத்தில் ரகுராமனின் புலம்பலில் இருந்து தப்பிக்கவும் ...வீட்டுச் சூழலில் 125 ரூபாய் ஜாமன்றி பாக்சை அநியாயமாய் தொலைத்து விட்டு வந்து நிற்க்கிராலே இந்த பாதகத்தி எனும் குமைச்சலிலும் அம்ருதா வேக..வேகமாய் பள்ளி காம்பவுண்டை நெருங்கினாள்.

சுபாங்கனியின் ஜாமன்றி பாக்ஸ் தொலைந்து போனதால் தான் அம்ருதா அதை தேடிக் கண்டுபிடித்து எடுத்து வரும் பொருட்டு தன் மகளின் பள்ளிக்குச் செல்ல வேண்டியதாகி விட்டது .

ஆரம்பிக்கும் பேச்சு தவறுதல் ரகுராமானது என்று வரும்போது இடை விடாத புலம்பல்களாக மாறி விடும் .உங்களுக்கெல்லாம் அறிவுரை ஆயிரக் கணக்கில் சொல்லி விட்டு என்னைப் பார் இப்படி செய்து விட்டு வந்து நிற்கிறேன் என்று அதற்கும் புலம்பி...புலம்பி பேசிப் பேசி கொல்வான் ...ஆக மொத்தத்தில் ரகுராமனின் புலம்பலில் இருந்து தப்பிக்கவும் ...வீட்டுச் சூழலில் 125 ரூபாய் ஜாமன்றி பாக்சை அநியாயமாய் தொலைத்து விட்டு வந்து நிற்க்கிராலே இந்த பாதகத்தி எனும் குமைச்சலிலும் அம்ருதா வேக..வேகமாய் பள்ளி காம்பவுண்டை நெருங்கினாள்.

வாட்ச்மேனைக் காணோம்...ஒரு ஐந்து நிமிடம் காத்திருந்து பார்த்தும் வாட்ச்மேன் வந்தபாடில்லை...பள்ளி பெரிய கேட் மூடப் பட்டு சின்ன கேட் தான் ஒருக்களித்து திறந்திருந்தது,அம்ருதா படித்த காலத்திலிருந்தே அந்தப் பள்ளியில் பெரிய கேட் திறந்திருந்தால் தான் அது பள்ளி நேரம் ,மற்றபடி பள்ளி நேரம் முடிந்த பின் மாலை மற்றும் அதிகாலை வேளைகளில் நிர்வாகிகள் அல்லது ஆசிரியர்கள்வர மட்டுமே சின்ன கேட் திறப்பு பயன்படுத்தப் படும்...

வேறு யாரும் அத்து மீறி அந்தப் பாதையில் நுழையக் கூடாது என்பது பள்ளி விதிகளில் ஒன்று . என சொல்லிக் கொண்டிருந்தேன் ?ஆம் அம்ருதாவும் இதே பள்ளியில் தான் படித்தாள் பிளஸ் டூ வரையிலும்,

சுற்றும் முற்றும் இருமுறை பார்த்து விட்டு சட்டென்று அந்த சிறு கேட் வழியே உள்ளே விறு ...விறுவென்று நுழைந்து விட்டாள்,அவள் மனம் முழுக்க ஜாமன்றி பாக்ஸ் சுபாங்கனியின் வகுப்பறையில் எங்காவது ஓரிடத்தில் கிடைத்து விட வேண்டும் என்ற வேண்டுதல் தான் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

ரகுராமனின் புலம்பல்களுக்கு இன்னும் அம்ருதாவின் அம்மா சொல்வதைப் போல் "மாப்பிள்ளையின் தொண தொணப்பிலிருந்தும் ...நச்சரிப்பிலிருந்தும் அம்ருதா தப்பிக்க வேண்டுமென்றால் அவளுக்கு ஜாமன்றி பாக்ஸ் கிடைத்தே ஆக வேண்டும் .

8 th standard "B" SECTION மாடியில் அல்லவா இருக்கிறது ?!

முறையாக வாட்ச்மேனிடம் அனுமதி வாங்கி வந்திருந்தாலும் பரவாயில்லை ...யாருக்கும் தெரியாமல் அல்லவா உள்ளே நுழைய வேண்டியதாகி விட்டது ?! அம்ருதாவுக்கு யாரேனும் தன்னை பார்த்து விட்டு தவறாகக் கருதி சத்தம் போட்டு மானத்தை வாங்கி விடக் கூடாதே என்ற பதை பதைப்பு வேறு கூடிக் கொண்டே போக அந்த பின் மாலை நேரத்து சிலு...சிலு காற்றிலும் வியர்த்துக் கொட்டியது .

பள்ளியின் கேட் தாண்டி உள்ளே வந்ததும் முதலில் கண்ணில் பட்டது தலைமை ஆசிரியரின் "பர்னாசாலை" போன்ற குடிசை தான் ..எத்தனை முறை மேப் எடுக்கவும் ..சாக் பீஸ் எடுக்கவும் ...மண்பானை நீர் எடுத்துப் போகவும் வந்திருக்கிறோம் ...

டீச்சர்களுக்கு மண் பானை நீர் சொம்பில் எடுத்துக் கொண்டு போய் கொடுக்க அம்ருதாவுக்கும் ...சுமதிக்கும் தான் எப்போதும் போட்டி ..யார் முதலில் ஓடிப் போய் தண்ணீர் கொண்டு வருகிறார்களோ அவர்களே ராஜம் டீச்சர் குடிமையியல் வகுப்பில் முதலில் பாடம் வாசிக்கத் தகுதி பெறுவார்கள் ...

இது அந்த டீச்சராகச் சொல்லவில்லை,பிள்ளைகளே அப்படி ஒரு முடிவு கட்டிக் கொண்டு தினம் ..தினம் இந்த போட்டி நடைபெறும் அப்போது....

சுமதியைக் காரைக்குடியில் கட்டிக் கொடுத்திருப்பதாக அம்மா சொன்ன ஞாபகம் மூளைக்குள் மின்னி மறைய நடையை எட்டிப் போட்டால் அம்ருதா ,

பத்தாம் வகுப்புக் கட்டிடத்திற்கு முன்னே சவுக்கு பாத்திகளுடன் உள்ளே ஒரு சின்ன பூங்கா போன்ற அமைப்பு உண்டு அந்தப் பள்ளியில் அதைக் காணோம் இப்போது ...அங்கே தான் அம்ருதா பரீட்சை சமயங்களில் உட்கார்ந்து படிப்பாள்...கடைசி பெல் அடித்த பின் மெயின் ஹால் பத்தாம் வகுப்புக் கட்டிடமே என்பதால் எழுந்து ஓடிப் போய் தன் பதிவு எண் பார்த்து அமர வசதி என்பதால் வேறு யாருக்கும் அந்த இடத்தை அம்ருதா விட்டுத் தந்ததே இல்லை ...

இந்தப் பக்கம் பத்தாம் வகுப்புக் கட்டிடம்...அந்தப் பக்கம் தலைமை ஆசிரியரின் பர்னாசாலை ...நடுவே பூங்கா ...அதில் வலது மூலையில் ஒரு பழைய வேப்ப மரம் அதன் தூரின் பிசினை நோண்டிக் கொண்டோ அல்லது பிளவு பட்ட பட்டைகளை உறித்துக் கொண்டோ ...தரையைக் குச்சியால் கிளறிக் கொண்டோ தான் அம்ருதா எப்போதும் பரீட்சைக்குப் படிப்பது வழக்கம் .

அதைத் தாண்டி உள்ளே நடந்தால் பிளே கிரவுண்டு ...அங்கே தான் மார்னிங் பிரேயர் நடக்கும் ..கொடிக் கம்பத்தைச் சுற்றிலும் ஒரு சின்ன ரோஜாத் தோட்டம் ..அதைத் தோட்டம் என்று சொல்ல முடியாது ..ஒரு சின்ன பாத்தியில் சில நூறு ரோஜாச் செடிகளை நட்டு அது அங்கே பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும் ஆண்டு முழுதுமே...

பிளஸ் டூ வில் அம்ருதா தான் ஸ்கூல் பீபில் லீடர் ...அந்த ஆண்டு அரைப் பரீட்சை முடியும் வரை அவள் தான் "தாயின் மணிக் கொடி பாரீர் ..அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் " பாடல் முடிந்ததும் கொடி ஏற்றுவாள் .அந்த கொடிக் கம்பம் இருக்கிறது ..ரோஜாப் பாத்தியைத் தான் காணோம்...அதற்க்கு பதிலாக அந்த இடத்தில் பேஸ்கட் பால் ஆடுதளம் சிமென்ட் பூசப் பட்டு நீண்டு போய் பார்வையில் பட்டது .

ஐயோ ...ஜாமன்றி பாக்ஸ் கிடைக்குமா ?

கிடைச்சிட்டா தேவலை !!!

சுபாங்கனி கூட வரவில்லை ..அப்பா வரும் நேரம்...அம்மா..மகள் ரெண்டு பேருமே வீட்டில் இல்லாததைக் கண்டால் கோபம்பொத்துக் கொண்டு வரும் ரகுராமனுக்கு ;

அம்மா காய் வாங்க கடைக்குப் போயிருக்கிறாள் என்று சொல்லி சமாளிக்க அன்னையை பள்ளிக்கு அனுப்பி விட்டு மகள் வீட்டில் இருந்தால் வீட்டுப் பாடம் செய்து கொண்டு !?

எட்டாம் வகுப்புக்கு போக மாடிப் படி ஏற வேண்டும் ...நல்ல கருங்கல் கட்டிடம் ...படிகள் நல்ல வலுவான கற்கள் ...ஒரு முறை ஏழாம் வகுப்பு முழுப் பரீட்சை முடிந்து கடைசி பெல் அடித்ததும் மாடியில் இருந்து அடித்துப் பிடித்து ஓடி வரும் போது நான்கைந்து படிகள் தாண்டும் ஸ்ரீதரன் காலை இடறியதில் அம்ருதா தலை குப்புற விழுந்து வைத்ததில் ஏற்ப்பட்ட வடு இன்னும் கூட அவளது முன் நெற்றியில் உண்டு ,

ஸ்ரீதரன் திருநெல்வேலிக்காரப் பையன் ,அம்மாவைப் பெற்ற பாட்டி தாத்தா இந்த ஊர் என்பதால் ஐந்திலிருந்து எட்டு வரை செல்லமாய் பாட்டி வீட்டில் இருந்து படித்தான் ,எட்டாம் வகுப்பு லீவில் ஊருக்குப் போனவன் தான் பிறகு டி.சி வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கே அவனை அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்,அவனது தாத்தா ..பாட்டி இருக்கும் வரை லீவுக்கு ரெண்டு வருடம் வரை வந்து கொண்டிருந்தான்,அதற்குப் பிறகு அவனைப் பார்க்கவே இல்லை,அவனால் ஏற்ப்பட்ட வடு மட்டும் அவனை ஞாபகப் படுத்திக் கொண்டு அம்ருதாவுடன் தங்கி விட்டது போலும்!?

முதல் மாடி ஏறி வந்தாயிற்று ...இந்த வராண்டாவின் கடைசி அரை தான் எட்டாம் வகுப்பு ..பி செக்சன் ...மொத்தம் ஆறு அறைகள் ...முதல் அரை ஏழாம் வகுப்பு எ செக்சன் ...

அங்கு கஸ்தூரி டீச்சர் தான் கிளாஸ் டீச்சர் ...அம்ருதாவுக்கு கஸ்தூரி டீச்சரை ரொம்பப் பிடிக்கும். டீச்சருக்கு நீளமான பின்னல் ...வெள்ளிக் கிழமைகளில் தலைக்கு ஊற்றிக் கொண்டு தளர்வாய்ப் பின்னி கூந்தலில் உச்சியில் துளி மல்லிகைப் பூ கிள்ளி வைத்துக் கொண்டு வருவார் ...

பிள்ளையார் கோயிலுக்குப் போய் வந்ததற்கு சாட்சியாய் நெற்றியில் சின்னக் கீற்றாக திருநீறு, மெலிதாக மஞ்சள் பூசிய அடையாளம் தெரியும் ,எப்போதும் டீச்சர் வட்டப் பொட்டு வைத்துக் கொண்டு அம்ருதா பார்த்ததில்லை நீட்டப் பொட்டு தான் இப்போதும் கூட!

டீச்சரின் தூரத்துச் சொந்தம் தான் ரகுராமன் என்பதால் அவள் டீச்சரை எப்போதாவது குடும்ப விஷேசங்களில் பார்ப்பது உண்டு இப்போதும்...

அதெல்லாம் போகட்டும் ...இப்போது ஜாமன்றி பாக்ஸ் ...ஐயோ...அது கிடைக்க வேண்டுமே ?!

அதற்குத் தானே பல வருடங்கள் கழித்து இப்போது இந்தப் பள்ளிக்குள் நுழைந்தோம் !!!

ஞாபகங்கள் மின்னி மின்னி மறைய எல்லாவற்றையும் உதறி விட்டு எட்டாம் வகுப்பு பி. செக்சனுக்குள் ஒரு வழியாய் அம்ருதா நுழைந்து விட்டாள்.வலது புறம் மூன்றாவது பெஞ்சில் நான்காவது இடம் தான் சுபாங்கனியின் இடம் !!!

அதே வலது புறம் இரண்டாவது பெஞ்சில் ஜன்னலோரம் முதல் இடம் அம்ருதாவின் இடமாக இருந்தது முன்னொரு நாளில் !?

அதே மர பெஞ்சுகள் ..டெஸ்க்குகள் ...வகுப்பறையின் சிமென்ட் தரை ...கரும் பலகை ...சாக் பீஸ் வைக்கும் சின்ன மரப் பெட்டி ,

"அங்கிங்கெனாத படி எங்கும் பிரகாசமாய் ஆனந்த ஜோதியாகி ..."

"ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்"

"இந்தியாவில் அதிகமாய் மழை பொழியும் இடம் சிரபுஞ்சி "

"உலகின் கூரை திபெத் ""ஏய் சண்முகப் பிரியா உன் இடத்தில பென்சில் துருவிப் போட்ரீ ஏன் டெய்லி என் இடத்துல போடற ? டீச்சர் கிட்ட சொல்லித் தாரேன் இன்னைக்கு பாரு நீ...

போய்ச் சொல்லிக்க போடீ (இது அந்த சண்முகப் பிரியா )

பாண்டிச் செல்வி எனக்கு இண்டர்வெல்ல மாங்க பத்தை வாங்கித் தா...நேத்து நான் கொய்யாப் பழம் வாங்கிக் கொடுத்தேன் இல்ல..இன்னைக்கு உன் முறைடீ ஞாபகம் இருக்கு இல்ல?!

கலவையாய் பல குரல்கள் காற்றில் பரவி செவியில் வந்து மோத...

அம்ருதா ஜாமன்றி பாக்சை மறந்து போக முடிவு செய்யாமலே தானாய் அது நினைவில் இருந்து நழுவி ஓடியது போலும்?!

அம்ருதா ஏன் மேத்ஸ்ல மார்க் கம்மி ? சயின்ஸ் ல மட்டும் 98 வாங்கியிருக்க ? என் பாடம் உனக்கு வேப்பங்காயா இருக்காக்கும்? மேத்ஸ் டீச்சர் அனுராதா தான் இது?!

விடுங்க டீச்சர் அடுத்ட பரீட்சைல பாருங்க அம்ருதா மேத்ஸ்ல 100/100 வாங்குவா பாருங்க..இது சயின்ஸ் வாத்தியார் முருகன் ...

கடைசியில் அம்ருதா எதில் 100/100 வாங்கினாள்?!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!(&) !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Wednesday, January 28, 2009

ஜெயக்கொடியும்...கணபதி வாத்தியாரும் ...பின்னே (பயப்)பிராந்தியும்!!!

ஜெயக்கொடி ...ஜெயக்கொடி ...இந்தப் பேரை கேட்டாலே ஒரு காலத்தில் உடம்பெல்லாம் உதறும் ,மனசுக்குள் ஒரு பயக் குளிர் ஊடுருவும் .இத்தனைக்கும் அவளை நான் நேரில் பார்த்ததே இல்லை ;

ஊரில் பலர் சொல்லிக் கொள்வார்கள் ;

நான் அவளை அங்கே அய்யாவு நாயக்கர் கொய்யாத் தோப்பில் பார்த்தேன்...ஆத்தங்கரை மேட்டில் அந்தி சாயும் நேரத்தில் தன்னந்தனியே ஊருக்குள் நுழைகையில் பார்த்தேன் ...வைகை ஆத்துப் பாலத்தில் பார்த்தேன் ...
என்று ஆள் ஆளுக்கு பேசிக் கொண்டார்கள் .

வெம்பக் குடி அத்தை தான் எதையும் தெள்ளத் தெளிவாய் சொல்வாள் அவள் கூட இப்போது ஜெயக்கொடியால் புலம்பித் தள்ளிக் கொண்டுதான் இருக்கிறாள்.
பின்னாடியே...
பின்னாடியே வந்துகிட்டு இருந்தா நான் உயிரைக் கையில புடிச்சிகிட்டு ஓடியாந்தேன்."இவள அடக்க யாருமில்லையா அடியே ஜக்கம்மா தாயேனு "கண்ண மூடிக்கிட்டு ஒரே ஓட்டம் அங்க ஆரம்பிச்சது எங்க மச்சு வூட்டுக்குள்ள இருக்கன்குடி மாரியம்மன் படத்துல போய் தான் கண்ண முழிச்சிப் பார்த்தேன் ?
அம்புட்டுக்கு கதி கலக்கீட்ட தாயோளி மக! ஊருக்குள்ள எங்கிட்டுப் பார்த்தாலும் இவ நடமாட்டந்தேன் ...அந்தியில..சந்தியில எங்குட்டாச்சும் ஒத்தையில போய் வர முடியுதா ? மூத்தவ வேற இன்னிக்கோ ...நாளைக்கோன்னு குச்சுக்குள்ள உட்கார தயாரா நிக்கா ...ஒத்தையில எங்கனயும் போகதடீன்னா கேட்க மாட்டேங்கா ...இவ பாட்டுக்கு மட்ட மத்தியானத்துல நல்ல தண்ணி எடுத்தாறேன்னு ஆத்தங்கரைக்கு நடையக் கட்டிர்ரா ...இவள அடக்கறதே பெரும்பாடா இருக்கு ,இதுல ஊருக்குள்ள அந்த "ஜெயக் கொடிய நான் இங்கன பார்த்தேன்...அங்கன பார்த்தேன்னு வேற புரளியக் கிளப்பி விட்ராளுகலேனு நேத்து வரைக்கும் விசனப் பட்டுகினு இருந்தேன் எல்லாரும் வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டு இருக்கறாப்பல பண்ணிட்டாளே சண்டாளி ...அவ நாசமாப் போக! "ஜெயக்கொடி" நு அவளுக்கா பேரு வச்சவன சொல்லணும் ...ஊரு பூர்ரம் அவ ஜெயத்த தான் மங்களம் பாடிக்கிட்டு திரியறோம் .

ஈசுவரா ..பெருமாளே (துன்னூரை(திருநீர்) அள்ளி அள்ளி நெற்றியிலும் ...உச்சந்தலையிலும் பூசுவதான பாவனையில் தெளித்துக் கொண்டே அவள் சொல்வதைக் கேட்க ஒரு புறம் சிரிப்பு பொத்துக் கொண்டாலும் கேட்க ...கேட்கவே அதீத பயமும் வந்தது .ஆறு மணிக்கு மேல் பாட்டியின் சேலைத் தலைப்பின் நுனியைப் பற்றிக் கொள்ளாமல் தெருவில் நடக்க அப்படி ஒரு பயம்!

ஒரே ஒரு முறை மட்டும் ஜெயக்கொடியை அவள் வீட்டு பழைய புகைப் படத்தில் பார்க்க நேர்ந்தது .பார்த்த பிறகோ "ஏண்டா பார்த்தோம் அதை என்று ஆகி விட்டதென்னவோ வாஸ்தவமே!

அப்படி ஒரு ஆள் துளைக்கும் பார்வை அவளுக்கு ...பார்ப்பவர் கண்ணை மட்டுமின்றி நெஞ்சையும் குத்தும் ஈட்டிக் கண்கள் .எல்லா பழைய போட்டோ கலைப் போலவே அவளுடையதும் லேசாக செல்லரித்துப் போயிருந்தாலும் கண்களில் உயிர் இருந்தது அந்த உயிர்ப்பு பார்ப்பவரின் உயிரை எடுப்பதைப் போல திகிலூட்டியது .சில நிமிடங்களுக்கு மேல் அதைப் பார்க்க இயலவில்லை .பார்த்தால் எங்கே நம்மை அவளது அடிமையாக்கி விடுமோ அந்தப் பார்வை என்ற பயம் வந்தது ,ஏதோ ஒரு அமானுஷ்ய தன்மை அவளுக்கு அப்போதே இருந்திருக்கிறது போல என்று நினைத்துக் கொண்டே நான் பார்வையைத் திருப்பிக் கொண்டேன் .

ஜெயக்கொடி பேர் அழகானது தான் ...அர்த்தமுள்ளதும் கூட!ஆனால் அவள் அர்த்தமின்றி போனது மட்டுமின்றி அன்று ஊரையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருந்தாள் .

எல்லோருமே ...ஊரின் பெரிய நாட்டாமை "ரங்கசாமி நாயக்கரிலிருந்து " புதிதாய் பக்கத்து ஊர் வகுப்புக் கலவரத்தை ஒடுக்க மாற்றலாகி வந்திருந்த எஸ்.ஐ ராஜாங்கம் முதற்கொண்டு டாக்டர் பெரியப்பா ஐயப்பன் வரை எல்லோருமே அவள் பெயரைச் சொன்னால் கொஞ்ச நேரம் ஏதோ இழவு செய்தி கேட்டதைப் போல அமைதியாகி பிறகே " அவளை எல்லாம் அடக்கி வச்சு ரொம்ப நாளாச்சு ..சும்மா பயந்து சாகதீங்க பெண்டுகளா " என்கிறார்கள். அவர்களுக்கும் உள்ளூர பயம் தான் போல!

சரி அப்பேர்ப்பட்ட அந்த ஜெயக்கொடி யார் என்பது உங்களுக்கும் தெரிய வேண்டும் இல்லையா?

ஜெயக்கொடி ஒரு இளம்பெண் ?!

பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதிருக்கும் அவளுக்கு சாகும்போது ?!
அப்போதிருந்த எல்லா இளம்பெண்களையும் போலத்தான் சிட்டுக்குருவியாய் பல ஆசைகளை மனதில் தேக்கி வைத்துக் கொண்டு...கேலி பேசும் முறைமைக் கார இளைஞர்களிடம் வெடுக் வெடுக்கென வெட்டி வெட்டிப் பேசிக் கொண்டு .

ஒவ்வொரு தீபாவளி ...பொங்கல் ...சித்திரத் திருவிழாவுக்கும் விலை அதிகம் போட்டு புடவை வாங்கித் தராத அம்மாவிடம் சண்டை போட்டுக் கொண்டு .தன் வயதொத்த பெண்களுடன் "தாயமும் ...பல்லாங்குழியும் ஆடிக் கொண்டு "இஷ்டமிருந்தால் கத்தரிக்காய் பிடுங்கவும் ...களை எடுக்கவும் "பெரிய நாயக்கர் தோட்டம் போய் வர கையில் காசு கண்டதும் டவுனில் பாக்கிய ராஜ் படம் பார்க்க ஆட்களைச் சேர்த்துக் கொண்டு அப்பாவிடம் அனுமதிக்காய் ஒரு வாரம் முதற்கொண்டு நச்சரித்துக் கொண்டு ...

இப்படித்தான் ...

இப்படித்தான் வாழ்ந்திருந்தாள் முன்னேப்போதே நான் பிறக்கும் முன்பு !

இப்போது அவள் இல்லை ஆனால் ...!அவள் பெயர் இருக்கிறது அழியாத பொழிவோடு இன்னமும் !

ஜெயக்கொடி ஏன் செத்துப் போனால் ?

அதுவும் தூக்கில் தொங்கி ?

ஏதேதோ ...சொல்லிக் கொள்கிறார்கள் ;

அவள் கேட்ட"சுங்கிடிபுடவையை தீபாவளிக்கு அம்மா வாங்கித் தராததால்!"

"பக்கத்து வீட்டு பால கிருஷ்ணனை அவள் காதலித்தது வீட்டுக்குத் தெரிந்து பிரச்சினை ஆனதால்"

"எப்போதோ ஒருநாள் நல்ல தண்ணி எடுக்க தோப்புக் கிணற்றுக்கு போகையில் தோப்புக் கார இசக்கிமுத்துகையைப் பிடித்து இழுத்ததால்

"இப்படிப் பல காரணங்கள் சொல்லிக் கொள்கிறார்கள் ...

இப்போதும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள் .

ஜெயக்கொடி ஏன் செத்துப் போனாள்...?

அவள் பேயாய் வந்து பிடித்துக் கொண்டு ஆட்டுவித்த யாவரும் சொன்ன காரணங்கள் தான் மேற்சொன்னன்வை அனைத்தும் .

அப்போது நம்பினேன் .

இப்போது ?!

சரி ஜெயக்கொடியை விடுங்கள் ;

கணபதி வாத்தியார் பற்றி நாளை சொல்கிறேனே !

தொடரும் ...